அழகிய திருத்தங்கள்
ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ
الْحَسَنَةِ
(நபியே!) நீங்கள் (மனிதர்களை) மதிநுட்பத்துடனும் அழகான நல்லுபதேசங்களை
கொண்டுமே உங்கள் இறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக! திருக்குர்ஆன்:- 16:125
மனிதர்கள் குறைபாடு உடையவர்கள் தான். இதற்கு விதிவிலக்காக விரல்
விட்டு எண்ணக்கூடிய மனிதர்கள் கூட உலகில் இருக்க முடியாது. பிறர் விரும்பத்தகாத செயலை
செய்யும் போது நமக்கு கோபம் வருகிறது. சிலர் பண்பு கருதி, குறிப்பிட்ட மனிதர் கருதி, சூழ்நிலைகளைக் கருதி கோபத்தை அடக்கிக் கொள்கிறார்கள்.
சிலரால் முடிவதில்லை. காச்மூச் என்று கத்துகிறார்கள். கன்னாபின்னா
என்று திட்டுகிறார்கள். அறிவிருக்கா உனக்கு? அடி முட்டாள்! என்று ஆரம்பித்து பைத்தியக்காரா! நாயே! பேயே!
முண்டம்! செருப்பால அடிப்பேன்! என்று போய் இன்னும் இங்கு எழுத முடியாத வார்த்தைகளையெல்லாம்
திட்டித் தீர்க்கிறார்கள். நாம் இவர்களை மாபெரும் தவறு செய்பவர்களின் பட்டியலில் தாராளமாக
சேர்த்துவிடலாம்.
தாங்கள் தவறே செய்தாலும் அதை எவரும் சுட்டிக்காட்டக் கூடாது
என்று எதிர்பார்க்கும் மனிதர்கள் நிறைந்த உலகம் இது. பிறரின் தவறை நாம் காணும் போது
உடனே உணர்ச்சி பிளம்பாகக் கத்தி கூச்சலிடாமல் பக்குவமாய் இனிமையுடன் குழைந்து எடுத்துச்
சொன்னால், "ஆமாம்! தப்பு எம்பேர்ல
தான்" என்று ஒப்புக்கொள்வார்கள்.
சில சமயம் வெளியே ஒப்புக் கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் உணரவாவது
செய்வார்கள்.
அன்பான முறையில்
முஆவியா பின் அல்ஹகம் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் நான்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது தொழுது கொண்டிருந்த
ஒருவர் தும்மினார். உடனே நான், (யர்ஹமுக்கல்லாஹ்)
"அல்லாஹ் உமக்கு கருணை புரிவானாக!" என்று மறுமொழி கூறினேன்.
உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான்,
"நீங்கள் ஏன் என்னை பார்க்கிறீர்கள்?"
என்று (கோபத்தோடு) கேட்டேன். மக்கள் பதில் ஏதும்
கூறாமல் தங்கள் கைகளால் தொடைமீது தட்டினார்கள். என்னை அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள்
என்று நான் அறிந்து கொண்டு அமைதியாக இருந்து விட்டேன்.
நபியவர்கள் தொழுது முடித்ததும் (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள்.
நபியவர்கள், ( إِنَّ هَذِهِ الصَّلاَةَ لاَ يَصْلُحُ فِيهَا شَىْءٌ مِنْ كَلاَمِ
النَّاسِ إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ ) "இது தொழுகை. இதில்
உலகப் பேச்சுக்கள் பேசுவது முறையாகாது. தொழுகை என்பது இறைவனை துதிப்பதும், பெருமைப் படுத்துவதும், குர்ஆன் ஓதுவதுமாகும்" என்று கூறினார்கள். ( مَا رَأَيْتُ مُعَلِّمًا قَبْلَهُ وَلاَ بَعْدَهُ أَحْسَنَ
تَعْلِيمًا مِنْهُ فَوَاللَّهِ مَا كَهَرَنِي وَلاَ ضَرَبَنِي وَلاَ شَتَمَنِي ) அவர்களுக்கு முன்னரோ
பின்னரோ அவர்களைவிட அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்)
கண்டதேயில்லை. நபியவர்கள் என்னை கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. நூல்:- முஸ்லிம்-935
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தவறை சுட்டிக் காட்டும் விதமே அலாதியானது.
இவ்வாறுதான் கரடு முரடானவர்களையெல்லாம் மென்மையானவர்களாக மாற்றினார்கள். தவறுகள் சுட்டிக் காட்டும்போது மென்மையை கையாளுவதே
சிறந்தது. இதுவே, நபியவர்களின் நற்பண்புகளில்
ஒன்றாகும்.
ஒரு மனிதனின் தவறை நாம் கோபத்தோடு திட்டிக்கொண்டே செல்லும்போது
அவன் தன் தவறை உணராமல், "நீங்கள் மட்டும் ஒழுங்கா?"
என்று நம்மை தட்டி விடலாம். மேலும், அவன் அந்த தவறை பெரிது படுத்தாமல் அதைத் தொடர்ந்து
செய்யக்கூடியவனாக ஆகிவிடலாம்.
சாலையில் ஒரு சிறு சைக்கிள் விபத்து. அடிபட்டவர்,
"பரவாயில்லை சார் நீங்க போங்க!
நான் மருத்துவமனை போய்க் கொள்கிறேன் என்று சொன்னால் மோதியவருக்கு இரக்கம் வரும்.
"இல்லையில்லை வாங்க மருத்துவமனைக்கு போகலாம்!" என்பார். மாறாக,
"யோவ் மரியாதையாக மருத்துவமனைக்கு
வந்து, எனக்கு வைத்தியம் பண்ணு"
என்று அடிபட்டவர் ஆரம்பித்தால், அதுவே கௌரவ பிரச்சனையாகி
காரியத்தை கெடுத்து விடும்.
அதிகாரத் தோரணையில் சொன்னால், அதை பின்பற்றக் கூடாது என்பது மனித சுபாவம். இவருக்கு என்ன தெரியும்?
இவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது? என்ற வக்கிரம் பெரும்பாலோரிடம் உண்டு.
அவசரப்படாமல்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள்
சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி சிலர் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள், ( دَعُوهُ وَلاَ تُزْرِمُوهُ ) "(அவர் சிறுநீர் கழிப்பதை)
இடை மறிக்காதீர்கள் அவரை விட்டு விடுங்கள்" என்று கூறினார்கள். அவர் சிறுநீர்
கழித்து முடித்ததும் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, அதை சிறுநீர் மீது ஊற்றினார்கள். நூல்:- புகாரீ-219,
முஸ்லிம்-478
பள்ளிவாசலுள் வந்து சிறுநீர் கழித்த கிராமவாசிக்கு பள்ளிவாசல்
புனிதம் தெரிந்திருக்கவில்லை. அவ்வாறு அவர்கள் தடுத்திருந்தால், சிறுநீர் இடையே தடைப்பட்டு கிராமவாசிக்கு உடல் நலம்
பாதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமல் அவர் தமது உடலிலும்
இடையிலும் சிறுநீர் கழித்திருப்பார்.
ஆகவே, அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் தடுக்கப் போன தன் தோழர்களை அமைதிப்படுத்தி, கிராமவாசி தனது தேவையை முழுமையாக நிறைவேற்றும் வரை காத்திருந்தார்கள்.
பின்னர் அவரை அழைத்து, இல்லத்தின் புனிதத்துவத்தை
அவருக்கு விளக்கினார்கள். அவரும் தனது தவறை உணர்ந்திருப்பார். இடையில் தடுத்து நிறுத்தியிருந்தால்
அந்த உணர்வு அவருக்கு ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான்.
பெரும்பாலான தவறுகளை மிக அவசரம் என்று கருதினாலொழிய உடனே சுட்டிக்காட்டாமல்
நம்முடைய மற்றும் அவர்களுடைய உணர்ச்சி வேகம் தணிந்த பிறகு சுட்டிக்காட்ட வேண்டும்.
எரிச்சலூட்டும் வகையில் தவறை சுட்டிக்காட்டுபவர்களுக்கு தோல்வி மட்டுமே மிஞ்சும். அதனால்
பகைதான் வளரும் என்பதை உணர வேண்டும்.
ஒரு மனிதனின் தவறை சுட்டிக்காட்டும்போது "உனக்கு அறிவு
இருக்கா?" என்று கேட்பதைவிட,
"ஒரு புத்திசாலி செய்கிற வேலையா
இது?" என்று திருப்பி போட்டுப்
பாருங்கள். நிறைய பலனிருக்கும். "டேய் பைத்தியக்காரா! உனக்கு படிச்சு படிச்சு
சொன்னேனடா!" என்று திட்டுவதைவிட, "உன் செயல் பைத்தியம் பைத்தியக்காரத்தனமானது!" என்று கண்டிக்கலாம்.
ஆக, செயல்தான் கண்டிக்கப்பட வேண்டுமே
தவிர, நபர் அல்ல. இந்த பாணியில்
பல நன்மைகள் இருக்கின்றன.
நம்மைப் போன்றே
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு வாலிபர் வந்து ( يَا رَسُولَ اللَّهِ ، ائْذَنْ لِي بِالزِّنَا ) "நாயகமே! விபச்சாரம் செய்ய எனக்கு அனுமதி கொடுங்கள்” என்று
கேட்டார். இதை செவியேற்ற நபித்தோழர்கள் கோபமுற்றனர். நபியவர்கள் அந்த வாலிபரை அருகில்
அழைத்து அவரிடமும் யாராவது "உன் தாயிடம் அல்லது உன் மகளிடம் அல்லது உன் சகோதரியிடம்
விபச்சாரம் செய்வதை நீ விரும்புவீரா?" என்று கேட்டார்கள்.
அதற்கவர் "நான் இதை விரும்ப மாட்டேன்" என்று கூறினார். இதைப்போல் தான் யாரும்
தம் தாயிடம் அல்லது மகளிடம் அல்லது சகோதரியிடம் விபச்சாரம் செய்யப்படுவதை விரும்பமாட்டார்கள்.
(அதாவது, நீர் எந்த பெண்ணுடன் விபச்சாரம் செய்தாலும் அப்பெண் எவருக்காவது
தாயாகவோ அல்லது மகளாகவோ அல்லது சகோதரியாகவோ இருக்கலாம்) என்று கூறிவிட்டு நபியவர்கள்
அந்த வாலிபரின் நல்வாழ்வுக்காக ( اللَّهُمَّ
اغْفِرْ ذَنْبَهُ وَطَهِّرْ قَلْبَهُ وَحَصِّنْ فَرْجَهُ ) "இறைவா! இவரின் பாவத்தை மன்னிப்பாயாக! மேலும், (பாவ எண்ணங்களை
விட்டும்) இவரின் உள்ளத்தை சுத்தப்படுத்துவாயாக! மேலும், இவரின் மர்ம உறுப்பை பாதுகாப்பாயாக" என்று பிரார்த்தித்தார்கள். அதன் பிறகு
அந்த வாலிபர் விபச்சாரத்தை முற்றிலுமாக வெறுத்தொதுக்கியவராக வாழ்ந்தார். அறிவிப்பாளர்:-
அபூ உமாமா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், தப்ரானீ
நம்மை மற்றவர்கள் எந்த முறையில் மிருதுவாகச் சொல்லித் திருத்த
வேண்டும் என்று விரும்புகிறோமோ அதே முறையில் தான் மற்றவர்களை நாம் சீர்திருத்த முயற்சிக்க
வேண்டும். மனிதர்களிடம் குறைபாடுகள் இருப்பது வெறுக்கத்தக்க அம்சமல்ல. அதை உணரக் கூட
மறுக்கிறார்களே அது தான் மாபெரும் குறையாகும்.
கண்டிப்பாக அவரவர் தத்தம் தவறுகளை உணர்ந்து திருந்துவதை நோக்கமாகக்
கொண்டிருக்கும் வேண்டுமே தவிர, அவர்களை விரக்தியடையச்
செய்வதாக அமைந்துவிடக் கூடாது. மருந்தில் தேன் கலந்து கொடுப்பது போல், கண்டிக்கும்போது அன்பைக் கலந்து சொல்ல வேண்டும்
அக்கறை காரணமாகவும், ஆர்வம் காரணமாகவும் அவை சொல்லப்படுகின்றன என்பதாக மற்றவர்களை
ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். இவர் நம் நலத்தின்மீது அக்கறை கொண்டவர் தான். நம் நன்மைக்காகத்தான்
சொல்கிறார். அவர் சொல்வதில் எந்த விதமான சுயநலமும் இல்லை. நம்முடைய தவறை அல்லது கடமையைத்தான்
அவர் உணர்த்துகிறார் என்றெல்லாம் மற்றவர்களை நாம் உளப்பூர்வமாக நம்ப வைக்க வேண்டும்.
பெரியவர்களிடம்
"(மூசா - அலை மற்றும் ஹாரூன் - அலை ஆகிய இருவருமாகிய)
நீங்கள் அவனுக்கு (ஃபிர்அவ்னுக்கு) நளிமாக உபதேசம் செய்யுங்கள். (அதன் மூலம்) அவன்
நல்லுணர்வு பெறலாம். அல்லது அச்சம் கொள்ளலாம்" என்று கூறினோம். திருக்குர்ஆன்:-
20:44
ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகிய
இருவரும் ஒரு பெரியவர் (உளூ எனும்) அங்கத்தூய்மையை தவறாக செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். இருவருக்கும் அது பொறுக்கவில்லை. பிழையை சுட்டிக்
காட்ட வேண்டும். ஆனால், அவரோ வயதில் மூத்தவர்
என்ன செய்வது? என்று இருவரும் தங்களுக்குள்
பேசிக்கொண்டு அந்த பெரியவரை நெருங்கினார்கள்.
"பெரியவரே! நாங்கள் இருவரும் உளூச் செய்கிறோம். நாங்கள்
சரியாக செய்கின்றோமா? என்று நீங்கள் பார்த்து
சொல்லுங்கள்" என்றனர். அவரும் சரி என்று சொல்லி இருவரும் உளூச் செய்வதை கூர்ந்து
கவனித்ததில் தன் பிழை அவருக்கு புரிய, "குழந்தைகளே! நீங்கள் சரியாகத்தான் செய்கிறீர்கள். நான்தான் பிழையாகச்
செய்தேன். இனிமேல் சரி செய்து கொள்கிறேன்" என்றார்.
நம்மைவிட வயதில் மூத்தவர்களிடம், அனுபவம் வாய்ந்தவர்களிடம், தகுதி நிறைந்தவர்களிடம் அவர்களின் தவறை நாம் சுட்டிக் காட்டும்
போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. சிலரோ சரியென்று ஏற்றுக்கொள்வார்கள்.
இன்னும் சிலரோ "இவன் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது" என்ற உணர்வு அல்லது
அலட்சிய மனப்பான்மையோடு நம்மிடம் நடந்து கொள்வார்கள்.
இவர்களுள் சிலர் ஒருபடி உயரே போய், "அப்படியா சேதி? உன்னை நான் கவனித்துக் கொள்கிறேன்" என்று நமக்கு எதிராக
திரும்பிக் கொள்வதோடு, எதிரிகளாகவும் மாறிவிடுவார்கள்.
ஒருவரிடம் ஒருகுறை இருப்பதாக நம் மனதில் பட்டால் தன்மையாக,
நேரமறிந்து, நிலையறிந்து அவரிடம் மட்டுமே சொல்ல வேண்டும். அப்போது உங்கள்
குறையை உணர்த்துவது உங்கள் நன்மைக்காகவே தவிர, வேறொன்றுமில்லை என்பதை தெளிவாக்கிவிட வேண்டும்.
குழந்தைகள் மற்றும் மனைவியிடம்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஹசன் (ரலி) அவர்கள் (சிறுவராயிருந்த
போது) தர்ம (ஸகாத்)ப் பொருளாக வந்த பேரீத்தம் பழங்களிலிருந்து ஒன்றை எடுத்து தம் வாயில்
வைத்தார். உடனே அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( كَخٍ كَخٍ، أَمَا
تَعْرِفُ أَنَّا لاَ نَأْكُلُ الصَّدَقَةَ ) "துப்பு! துப்பு! அதை எறிந்து விடு! நாம் தர்மப்
பொருளை உண்ணக்கூடாது என்று நீ அறியாததா?" என்று கேட்டார்கள். நூல்:- புகாரீ-3072, முஸ்லிம்-1939
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும்
ஸகாத் பொருளை உட்கொள்வது தடுக்கப்பட்டுள்ளது. நமது குழந்தைகளுக்கு மார்க்கச் சட்டம்
மற்றும் அதிலுள்ள ஹலால் - ஹராம் ஆகியவற்றை மிகுந்த கவனத்துடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
சிறு பிள்ளைகள் தானே என்று நாம் கவனக்குறைவாக இருக்கக் கூடாது.
உமர் பின் அபீ சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அருமை நாயகம்
(ஸல்) அவர்கள் மடியில் வளர்ந்தேன். ஒருமுறை எனது கை உணவுத் தட்டில் (அங்கு மிங்குமாக)
அலைந்து கொண்டிருந்தது. அப்போது நபியவர்கள், ( يَا غُلاَمُ سَمِّ
اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ وَكُلْ مِمَّا يَلِيكَ ) "குழந்தாய்! உண்ணும்போது
அல்லாஹ்வின் பெயரைச் சொல்வாயாக! உனது வலது கரத்தால் உண்ணுவாயாக! உனது கைக்கு அருகில்
இருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்ணுவாயாக!" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5376,
முஸ்லிம்-4111
பிள்ளைகள் எதிர்த்துப் பேசும் போதெல்லாம் நம் மனம் பாதிப்படைகிறது
என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதை அவர்கள் எண்ணி வருத்தப்படும் வகையில் உணர்த்த
வேண்டுமே தவிர, அவர்கள் எரிச்சலடையும்
வகையில் உணர்த்தக் கூடாது.
பிள்ளைகளிடம் பாசத்தோடு நடந்துகொள்ளும் பெற்றோர், பிள்ளைகள் ஏதேனும் தவறு செய்யும்போது அதை கண்டிக்கும்
விதமாக இனிமேல் இந்த தவறு செய்தால், "உன்னிடம் பேசமாட்டேன் போ! என்றும், இதை உனக்கு வாங்கித் தர மாட்டேன் போ!" என்றும் சொல்லும் போதும் அதில் மாற்றம்
இருக்கும்.
மாறாக, எதற்கெடுத்தாலும்
திட்டுவது அடிப்பதன் மூலம் பெறும் மாற்றம் இருக்காது. இதையே தொடர்ந்து செய்தால் பிள்ளைகள்
பெற்றோரை பிடிக்காத மனிதர்களாக, எதிரிகளாக பாவிக்க
ஆரம்பித்து விடுவார்கள் என்பதே உண்மையாகும்.
நாம் காலையில் வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பும்போது வீட்டில்
குப்பைகள் சிதறி கிடக்கின்றன. அந்நேரம் பொங்கி வந்த கோபத்தால் நம்முடைய மனைவியை கடுமையான
சொற்களால் திட்டினால், அவள் வெறுப்படைந்து
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உம்மென்று இருப்பாள். மேலும், அவளிடம் எந்த மாற்றமும் ஏற்படாமல் போகும்.
மாறாக, நாமே கையில் துடப்பத்தை
எடுத்துக்கொண்டு குப்பைகளை சுத்தம் செய்ய தொடங்கினால், அடுத்த வினாடி நம்முடைய அன்பு மனைவி ஓடோடி வருவாள். "என்னங்க
நீங்க... இங்கு கொண்டாங்க நம் கையிலிருந்த துடப்பத்தைப் பிடுங்கி தானே கூட்ட ஆரம்பித்துவிடுவாள்.
தான் குப்பைகளை கவனிக்காமல் இருந்ததற்காக வருத்தப்படுவாள்.
அப்போது நாம் இப்படி சொல்லலாம், "பரவாயில்லை; உனக்கு வீட்டில் நிறைய வேலைகள்... எல்லாம் நீ தனியாகவே செய்ய
வேண்டியிருக்கிறது... இதில் நான் உனக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டாமா? என்று சொன்னால், பிறகு அடுத்த முறை வீட்டில் நாம் நுழையும்போது பாருங்கள்! வீடு
பளிச்சென்று இருக்கும். மனைவி மக்கள் மற்றும் பிறரையும் அன்பான அணுகுமுறையால் கவர்ந்திட
முடியும் என்பதை உணர வேண்டும்.
நம்முடைய மனைவியார் மார்க்க கடமைகளை சரியாக நிறைவேற்றாமல் தவறான
செயல்களை செய்து கொண்டிருந்தால் உடனே திட்டுவதையும் அடிப்பதையும் கையாளக் கூடாது. மாறாக,
"இனிமேல் நான் பட்டினியாக வேண்டுமானாலும்
இருந்து விடுவேன் ஆனால், நீ சமைத்து வைக்கும்
உணவை சாப்பிட மாட்டேன்" என்றும், "நீ திருந்தும் வரை உன்னிடம் பேச மாட்டேன்" என்றும்,
சொல்லிவிட்டு, அவள் தவறு செய்யும் போதெல்லாம் இதை கடைபிடிக்க வேண்டும்.
சிலர் மனைவி மக்கள் தம்மை மதிக்காதபோது அவர்களை போட்டு மாட்டடி
அடிக்கிறார்கள். அடிதடிகளால் பயத்தை உண்டு பண்ணலாம். ஆனால், இதெல்லாம் கொஞ்ச காலத்திற்குத்தான்.
தமது மனைவி மக்கள் தமது விருப்பத்திற்கேற்ப நடக்க வேண்டும் என்று
விரும்புகின்றவர்கள் தேர்ந்தெடுக்கும் குறுக்குப் பாதை தான் கை நீளல். இது நாள் ஆக
ஆக எடுபடாமல் போய்விடும்.
குறைகளைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கும் பழக்கத்தை தனிமையில்
தான் செய்ய வேண்டும். பலர் முன்னிலையில் செய்யக்கூடாது. காரணம், சம்பந்தப்பட்டவர்கள் தம் குறைகளைச் சுட்டி காட்டினாலே
நாம் திருந்திவிட வேண்டும் எனச் சிறிதும் எண்ணாமல் பலர் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தி
விட்டார் என்று எண்ணத் தொடங்கி, வெறுப்பையும் வேதனையையும்
பெரிதாக்கிக் கொள்வார். எனவே, கண்டிப்பவரின் விருப்பமும்
நோக்கமும் நிறைவேறாமல் போய்விடுகிறது.
குறைகளைச் சுட்டிக்காட்டி கண்டிப்பதை பெரும்பாலானோர் தவறாகவே
புரிந்து கொண்டிருக்கின்றனர்.
நாம் குறைகளை சொல்பவர்களாக மட்டுமல்லாமல், அவற்றை அடுத்தவர்களுக்கு சொல்கின்ற நேரத்தியையும்
கற்றுக் கொள்ள வேண்டும். வார்த்தைகளில் கனிவு எனும் அரிய மருந்தை கலந்து கொடுக்க வேண்டும்.
அப்போதுதான் பலன் தரும்.
எனவே, நாம் குறைகளை விளங்கி
அதை திருத்திக் கொண்டு, பிறரின் குறைகளையும்
நேர்த்தியாகச் சுட்டிக்காட்டக் கூடிய பக்குவத்தை அல்லாஹுத்தஆலா நமக்கு வழங்குவானாக!
ஆமீன்!
(இந்தக் கட்டுரை சுமார்
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்:
நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment