Search This Blog

Thursday, 27 March 2025

உணர்வுகளை மதிப்போம்!

 உணர்வுகளை மதிப்போம்!

 

وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ

(இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (இறைவன் என) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். திருக்குர்ஆன்:- 6:108

 

பிறர் உணர்வுகளை புரிந்துகொள்வதும் மற்றும் மதிப்பதும்  ஓர் நல்ல முஸ்லிமின் முதல் அடையாளம் ஆகும். மற்றவர்களின் கஷ்டங்களையும்சந்தோஷங்களையும் உணர்ந்துஅவர்களுடன் சேர்ந்து சிரிப்பதும்அழுவதும்தான் உண்மையான மனித நேயம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்எப்படி உணர்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வது ஒரு நல்ல பண்பு.

 

பிறர் உணர்வுகளை மதிப்பதற்கான வழிகள்: பிறரது இடத்தில் நம்மை வைத்து அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். மற்றவர்களின் கஷ்டங்களையும்சந்தோஷங்களையும் உணர்ந்துஅவர்களுடன் சேர்ந்து சிரிப்பதற்கும்அழுவதற்கும் முயற்சிக்க வேண்டும். இதுமற்றவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கவும்.

 

நாம் இவ்வாறு உண்மையானவராக இருக்கும்போது மக்கள் நம்மை இயல்பாகவே மதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

 

மற்றவரின் மன உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்கள் எவ்வளவு படித்தாலும் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

 

நம்மைப் போன்றே மற்றவர்களுக்கும் சுய விருப்பு வெறுப்புகள் எல்லாவற்றிலும் இருக்கவே செய்கிறது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதை தவிர்த்து சுயநலமியாக தனது ஆசாபாசங்களையும்விருப்பு வெறுப்புகளையும் மட்டுமே கருத்தில் கொள்வது சரியல்ல.

 

மனைவியர்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அன்று பெருநாள் (ஈத்) தினமாக இருந்தது. சூடானியர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (பள்ளிவாசல் வளாகத்தில் வீர விளையாட்டுகள்) விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் (அந்த விளையாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும்அல்லது அவர்களே என்னிடம், ( تَشْتَهِينَ تَنْظُرِينَ ) “நீ (இவர்களுடைய வீர விளையாட்டுகளைப்) பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டிருக்க வேண்டும். (சரியாக எனக்கு நினைவில்லை). அதற்கு நான், ‘ஆம்’ என்று பதிலளித்தேன்.

 

உடனே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என் கன்னம் அவர்களது கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்கஎன்னைத் தமக்குப் பின்னால் நிற்கவைத்துக்கொண்டார்கள். ( دُونَكُمْ يَا بَنِي أَرْفِدَةَ ) “அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பியர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு பார்த்து) சலிப்புற்றுவிட்டபோது ( حَسْبُكِ ) ‘போதுமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க நான், “ஆம் (போதும்)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ( فَاذْهَبِي ) “அப்படியானால் நீ போகலாம்” என்று சொன்னார்கள். நூல்:- புகாரீ-950

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியின் உணர்வுக்கு மதிப்பளித்துள்ளார்கள். மனைவியெனில் படுக்கையில் பாலுணர்வைப் பகிர்வதற்குரிய ஒரு சதைப்பிண்டம்! பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட இயந்திரம்! இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றதுஇவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச் சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று நாம் எண்ணுகின்றோம். நன்மையல்லாத காரியத்தையா நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள்? என்று சற்று யோசிக்கவேண்டும்.

 

மனைவியின் உணவுஉடைஅவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும், அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிக்கவேண்டும்.

 

குழந்தைகள்

 

ஷத்தாத் பின் அல்ஹாத் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒரு நாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவிக்க வரும்போது (தம்முடைய பேரக் குழந்தைகளான) ஹசன் ஹுசைனையோ தூக்கி கொண்டு வந்தார்கள். பிறகு பேரக்குழந்தையை இறக்கி விட்டுவிட்டுத் தொழுகைக்காக தக்பீர் கூறித் தொழலானார்கள். அப்போது அவர்கள் தமது தொழுகையில் (சஜ்தா எனும்) சிரம்பணிதலை நீட்டினார்கள்.

 

(நீண்ட நேரம் ஆனதால்) எனது தலையை உயர்த்திப் பார்த்தபோது, (பேரக் குழந்தை) நபியவர்களின் முதுகில் இருக்கஅவர்கள் சஜ்தாவிலேயே இருந்தார்கள். (மீண்டும்) நான் என் சஜ்தாவுக்கே திரும்பிவிட்டேன்.

 

நபியவர்கள் தொழுகையை நிறைவு செய்தபோது மக்கள், "நாயகமே! நீங்கள் உங்கள் தொழுகையில் எங்களுடன் நீண்ட நேரம் சஜ்தா செய்தீர்கள். நாங்கள்ஏதோ ஒன்று நிகழ்ந்துவிட்டதுஅல்லது உங்களுக்கு (வஹீ எனும்) இறைசெய்தி அறிவிக்கப்படுகிறது என்ற கருதிவிட்டோம்" என்று கூறினர்.

 

அதற்கு நபியவர்கள், ( كُلُّ ذَلِكَ لَمْ يَكُنْ وَلَكِنَّ ابْنِي ارْتَحَلَنِي فَكَرِهْتُ أَنْ أُعَجِّلَهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ ) "இவற்றுள் எதுவும் நிகழவில்லைஎன் (பேரப்)பிள்ளை என் மீது சவாரி செய்தான். அவன் விருப்பம் நிறைவேறும்வரை சஜ்தாவிலிருந்து விரைந்து என நான் விரும்பவில்லை" என்று கூறினார்கள். நூல்:- நசாயீ-1129, முஸ்னது அஹ்மத்ஹாக்கிம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களின் பிள்ளைகளான அப்துல்லாஹ்உபைதுல்லாஹகஸீர் (ரலி) ஆகிய மூவரையும் அணிவகுக்கச் செய்து ( مَنْ سَبَقَ اِلَيَّ فَلَهُ كَذَا وَكَذَا ) "யார் என்னிடம் முதலில் ஓடிவருகிறாரோ அவருக்கு இன்னின்னது (பரிசாகக்) கிடைக்கும்" என்று கூறுவார்கள். சிறுவர்கள் அண்ணலாரிடம் ஓடி வந்து அவர்களது நெஞ்சிலும், முதுகிலும் விழுவார்கள். அப்போது அண்ணலார் அச்சிறுவர்களை கட்டியணைத்து முத்தமிடுவார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்-1739

 

நம்மிடம் பிள்ளைகள் விளையாடும்போது அவர்கள் உணர்வுகளை மதிக்கும் விதமாகநாம் அவர்களை விளையாட்டை ஆமோதிக்க வேண்டும். நாம் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் சரியே! முடிந்தால்நாமும் அவர்களோடு சேர்ந்து விளையாடும்போதுநம்முடன் அவர்கள் மிகவும் இணக்கமாகிவிடுவார்கள். அந்நேரத்தில் நாம் அவர்களுக்கு மார்க்க ஒழுக்கங்களை கற்றுத்தரும்போதுஅதற்கு அவர்கள் செவியேற்கக்கூடும். சில நேரங்களில் நாம் பிள்ளைகளோடு பிள்ளைகளாக மாறி விடுதல்மிகுந்த சந்தோஷத்தைத் தரும்.

 

குடும்பத்தினர்

 

மக்கா வெற்றியின்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகையையும் முஸ்லிம்களின் எழுச்சியும் கண்டு பயந்துபோன இக்ரிமா எமன் தேசத்திற்குச் சென்றுவிட்டார்.  அபூஜஹ்லின் மகனான இவர்தமது தந்தையைப் போலவே இஸ்லாத்தின்மீது கடும்பகை கொண்டிருந்தார். இவரின் மனைவி உம்மு ஹக்கீம் பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்கள் யமனுக்குச் சென்று அவரை அழைத்து வந்தார்கள். பின்பு கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் சபைக்கு அழைத்து வரப்பட்டார்.

 

தூரத்தில் இக்ரிமா வருவதை பார்த்த நபியவர்கள், ( يَأْتِيكُمْ عِكْرِمَةُ بْنُ أَبِى جَهْلٍ مُؤْمِنًا مُهَاجِرًا ، فَلَا تَسُبُّوا أَبَاهُ ، فَإِنَّ سَبَّ الْمَيِّتِ يُؤْذِي الْحَيَّ ، وَ لَا يَبْلُغُ الْمَيِّتَ “அபூஜஹ்லின் மகன் இக்ரிமா உங்களிடம் வெகு தொலைவில் இருந்து இறைநம்பிக்கையை கொண்டவராக வருகிறார். எனவே, அவருடைய தந்தையை திட்டாதீர்கள். இறந்துபோன ஒருவரை திட்டுவதால் அது உயிருடன் இருப்பவருக்கு மனவேதனையை தரும். இறந்தவருக்கு அது தெரியவும் செய்யாது" என்று கூறினார்கள். நூல்:- ஹாகிம்அல்இஸ்திஆப்அல்முன்தளிம் இப்னு ஜவ்ஸீதாரீக் திமிஷ்க் இப்னு அசாகிர்சுவரும் மின் ஹயாதிஸ் ஸஹாபா

 

ஒருவரிடம் அவர்களின் முன்னோர்களை குறைகூறிப் பேசுவது அல்லது தமது மனைவியிடம் அவளின் பெற்றோர் மற்றும் உறவினர்களை குறைப்பேசி அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.

 

பிறர் மனம் நோகும்படியான வார்த்தைகளை பேசுவதை விட்டும் தவிர்ந்திருப்பதும்கூட உணர்வுகளை மதிப்பதாகும் என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தருகிறார்கள்.

 

தலைவர்கள்

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. முஸ்லிம்களில் ஒருவரும் யூதர்களில் ஒருவரும் சச்சரவிட்டுக்கொண்டார்கள். அந்த முஸ்லிம், ‘‘அகிலத்தார் அனைவரைவிடவும் முஹம்மத் (ஸல்) அவர்களை (சிறந்தவராக்கி)த் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீதாணையாக!” என்று அவர் செய்த ஒரு சத்தியத்தின்போது கூறினார். அந்த யூதர், ‘‘அகிலத்தார் அனைவரைவிடவும் மூசா (அலை) அவர்களை (சிறந்தவராக)த் தேர்ந்தெடுத்தவன்மீது சத்தியமாக!” என்று கூறினார். (யூதரின்) இந்தச் சொல்லைக் கேட்டதும் அந்த முஸ்லிம் தமது கையை உயர்த்தி யூதரை அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததனது விவகாரத்தையும் அந்த முஸ்லிமின் விவகாரத்தையும் தெரிவித்தார்.

 

அப்போது நபியவர்கள் (அந்த முஸ்லிமை வரவழைத்து), ( لاَ تُخَيِّرُونِي عَلَى مُوسَى )  ‘‘மூசாவைவிட என்னைச் சிறப்பாக்கி (உயர்த்திப் பேசி) விடாதீர்கள். நூல்:- புகாரீ-3408, முஸ்லிம்-4732

 

உண்மையாகவே நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள்மூசா (அலை) அவர்களை பன்மடங்கு உயர்வானவர்கள். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனாலும்அந்த யூதரின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது நபியவர்களின் எண்ணம்.

 

பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் என்பது தலைமைத்துவப் பண்புகளில் ஒன்றாகும். இந்த பண்பை உடையவர்கள் காலம் கடந்தாலும் மதிப்பளிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட இந்த பண்பு இல்லாமல் இருப்பவர்கள் நிச்சயமாக சிறந்த தலைவனாக இருக்க தகுதியற்றவர்களே என்று விளங்கவேண்டும்.  ஆகவேபிறர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாமும் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

 

அவரவர் தலைவர்கள் அவரவருக்கு உயர்வு தான். நமது தலைவரை பிறர் நேசிக்கவில்லை என்பதற்காக நாம் பிறரின் தலைவர்களை ஏசிபேசிஅவர்களின் உணர்வுகளை காயப்படுத்திவிடக்கூடாது.

 

கொள்கை கோட்பாடு

 

தலைப்பில் காணும் வசனத்தில் அல்லாஹ் இணைவைப்பாளர்கள் வழிபடக்கூடிய தெய்வங்களை ஏசக்கூடாது என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கட்டளையிடுகின்றான். ஏனெனில்அதனால் ஏற்படும் நன்மைகளைவிட தீமையே அதிகம்.

 

இறைமறுப்பாளர்கள் வழிபட்டு வந்த சிலைகளை முஸ்லிம்கள் ஏசினால்பதிலுக்குப் பதிலாக இறைமறுப்பாளர்கள் அறிவின்றிவரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இது தடுக்கப்பட வேண்டிய ஒன்று.

 

அல்லாஹ் ஏசப்பட இறைநம்பிக்கையாளர்கள் காரணமாக இருக்கக்கூடாது என்பதையே இந்த வசனம் உணர்த்துகின்றது.


(நபியே!) இவர்கள் உம்மை பொய்யர் என்று சொன்னால் நீர் கூறும்: என்னுடைய வழிபாடுகள் எனக்கு. உங்களுடைய வழிபாடுகள் உங்களுக்கு. நான் செய்யும் வழிபாடுகளிலிருந்து நீங்கள் பொறுப்பு நீங்கியோர் ஆவீர். நீங்கள் செய்யும் வழிபாடுகளிலிருந்து நான் பொறுப்பு நீங்கியவன் ஆவேன். திருக்குர்ஆன்:- 10:41

 

உங்களுடைய மார்க்கம் உங்களுக்கு என்னுடைய மார்க்கம் எனக்கு. திருக்குர்ஆன்:- 109:6

 

மறுமைநாளில் நம் அனைவரும் மத நம்பிக்கை மற்றும் வணக்க வழிபாடுகள் குறித்து விசாரிக்கப்படுவோம். அங்கே நமது செயல்பாடுகளுக்கு பிரதிபலன் வழங்கப்படும்.

 

ஓர் முஸ்லிம் தமது சகோதர சமயத்தினருக்கு இஸ்லாமிய கோட்பாடுகளை எடுத்துரைக்கலாம். ஆனால்அவர்களின் மத நம்பிக்கைகளைஉணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாகஅவர்கள் கடவுள்களாக எண்ணி வழிபடுபவற்றை நைய்யாண்டி செய்தல்ஏசி பேசுதல் தவறு. இது அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக ஆகிவிடும். இதை இஸ்லாம் விரும்புவதில்லை. சிலைகளும்சிலுவைகளும் கேலி செய்தல் மற்றும் ஏசிபேசிதலுக்கு தகுதியானதாக இருந்தாலும்அவ்வாறு செய்ய இஸ்லாம் அனுமதிக்கவில்லை. சுருங்கக் கூறின்பிறரின் கடவுள் கொள்கை குறித்த உணர்வுகளை காயப்படுத்தக்கூடாது.

 

வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பிறரின் உணர்வுகளை மதித்து வாழும் நற்பண்புள்ள நல்லடியார்களாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

Wednesday, 26 March 2025

மீலாதுந் நபீ

 

மீலாதுந் நபீ

 

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ

(நபியே!) உம்மை நாம் அகிலத்தாருக்கு ஓர் அருளாகவே அனுப்பியுள்ளோம். திருக்குர்ஆன்:- 21:107

 

ரபீவுல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் இஸ்லாமியப் பெரும் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அளவற்ற நேசம்கொண்ட முஸ்லிம்கள் நபியவர்களுடைய வாழ்வியல் முறைகள், குணநலங்கள் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் மற்றும் அவர்களின் சிறப்பம்சங்கள் ஆகிவற்றை நினைவுப்படுத்தி, அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவார்கள். நபியவர்கள் மீது கொண்ட நேசத்தால் புகழ்பாக்கள் (மௌலித்) பாடுவார்கள்.

 

மேலும், நபிநேசத்தால் கந்தூரி ஏற்பாடு செய்து ஏழை எளியோருக்கும், சகோதர சமயத்தவர்களுக்கும் உணவளித்தல் போன்ற நற்செயல்கள் செய்வார்கள். மேலும், அன்றைய தினம் (பிறை-12) மகிழ்ச்சியின் வெளிப்பாடாக நபியவர்களை புகழ்ந்து கவிதை படித்துக்கொண்டு முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக ஊர்வலம் சென்று வருவார்கள். இதை பரவலாக காணலாம்.

 

ஜாபிர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறியதாவது. ( وُلِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفِيلِ يَوْمَ الِاثْنَيْنِ الثَّانِي عَشَرَ مِنْ شَهْرِ ربيع الأول ) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யானை வருடத்தில் ரபீஉல் அவ்வல் மாதத்தின் பன்னிரண்டாம் நாள் திங்கள்கிழமை பிறந்தார்கள்.  நூல்:- முஸன்னஃப் இப்னு அபீஷைபா, ஹாகிம், சீரத் இப்னு ஹிஷாம்

 

அல்லாஹ்வின் அருள்

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. (நபிகள் நாயகம் - ஸல் அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணைவைப்பாளர்களுக்கெதிராக(ச் சாபமிட்டுப்) பிரார்த்தியுங்கள்" என்று கூறப்பட்டது. அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள், "நான் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை. நான் அருளாகவே அனுப்பப்பெற்றுள்ளேன்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்- 5065

 

நபித்தோழர்களின் பாடினார்கள்

 

ஹைஸம் பின் அபீசினான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் தமது பேச்சுக்கிடையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது) உங்கள் சகோதரர் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் தவறானவற்றைக் கூறுபவர் அல்லர். (நபியவர்களைப் பாராட்டி பின்வருமாறு) அவர் பாடினார் என்றார்கள்:

 

فِينَا رَسُولُ اللَّهِ يَتْلُو كِتَابَهُ     إِذَا انْشَقَّ مَعْرُوفٌ مِنَ الْفَجْرِ سَاطِعُ

أَرَانَا الْهُدَى بَعْدَ الْعَمَى فَقُلُوبُنَا      بِهِ مُوقِنَاتٌ أَنَّ مَا قَالَ وَاقِعُ

يَبِيتُ يُجَافِي جَنْبَهُ عَنْ فِرَاشِهِ      إِذَا اسْتَثْقَلَتْ بِالْكَافِرِينَ الْمَضَاجِعُ

எங்களிடையே இறைத்தூதர் ஓதுகிறார் இறைவேதம் வைகறைப்பொழுது புலரும் நேரத்தில்

கருத்துக் குருடர்களான எங்களுக்குக் காட்டினார் நல்வழி. அவர் சொன்னது நடக்கும் நிச்சயம்! இது எங்கள் இதய நம்பிக்கை

இரவில் அன்னாரது விலா தொட்டதில்லை படுக்கையை அப்போது இணைவைப்பாளர் அழுந்திக் கிடப்பர் படுக்கையில்! நூல்:- புகாரீ-6151

 

ஸவாத் பின் காரிப் (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ் எனது உள்ளத்தில் சோதித்துள்ளான் என்று கூறியவாறு, எனது ஒட்டகத்தில் (மக்காவை நோக்கி) பயணம் செய்தேன். பிறகு மக்கா நகருக்கு வந்தேன். அங்கு கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களைச் சுற்றி நபித்தோழர்களும் இருந்தனர். நான் அவர்களிடம் நெருங்கி, நாயகமே நான் கவிப் பாடுவதைக் கேளுங்கள் என்று கூறினேன். நபியவர்கள் ("ஆம்!) பாடுங்கள்" என்றார்கள். நான் பாட ஆரம்பித்தேன்.

فَأَشْهَدُ أَنَّ اللَّهَ لَا شَيْءَ غَيْرُهُ       وَأَنَّكَ مَأْمُونٌ عَلَى كُلِّ غَالِبِ

وَأَنَّكَ أَدْنَى الْمُرْسَلِينَ وَسِيلَةً      إِلَى اللَّهِ يَا ابْنَ الْأَكْرَمِينَ الْأَطَايِبِ

فَمُرْنَا بِمَا يَأْتِيكَ يَا خَيْرَ مَنْ مَشَى    وَإِنْ كَانَ فِيمَا جَاءَ شَيْبُ الذَّوَائِب

سِوَاكَ بِمُغْنٍ عَنْ سَوَادِ بْنِ قَارِبِ   وَكُنْ لِي شَفِيعًا يَوْمَ لَا ذُو شَفَاعَةٍ

அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் (கடவுள்) இல்லையென்றும் நீங்கள் மறைவான செய்திகள் யாவற்றுக்கும் நம்பிக்கையாளர் என்றும் நான் சாட்சியம் அளிக்கிறேன்.

கண்ணியமானோரில் தூயோரின் புதல்வரே! நீர், அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமான தூதர் என்றும் (சாட்சியம் அளிக்கிறேன்.)

நடமாடுவோரில் சிறந்தோரே! உமக்கு வந்துள்ள கட்டளையை எங்களுக்கும் ஆணை பிறப்பிப்பீராக! அவை முடிகளை நரைக்கச் செய்யக் கூடியவைகளாக இருந்தாலும் சரியே!

உம்மைத் தவிர பரிந்துரையாளர் இல்லாத நாளில், எனக்கு பரிந்துரையாளராகவும் ஸவாத் பின் காரிபுக்கு ஏற்படும் இன்னலைவிட்டும் தடுக்கக்கூடியதாகவும் ஆகிவிடுவீராக!" என்று பாடினேன்.

 

அப்போது நபியவர்களும் நபித்தோழர்களும் என் கூற்றைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அம்மகிழ்ச்சி அவர்களின் முகங்களில் தென்பட்டது. பிறகு நபியவர்கள், ( أَفْلَحْتَ يَا سَوَادُ سِرْ فِي قَوْمِكَ، وَقُلْ هَذَا الشِّعْرَ فِيهِمْ ) "ஸவாத்! நீர் வெற்றி பெற்றுவிட்டீர். உன் சமூகத்தினரிடம் பயணமாகி அவர்களிடம் இந்தக் கவிதையைக் கூறுவீராக”  என்றுக் கூறினார்கள். நூல்:- முக்தஸர் இப்னு மன்ழூர் லி தாரீக் இப்னு அஸாகிர், ஹவாத்திஃபுல் ஜின்னான் இமாம் அபூபக்ர் அல்கராயித்தீ, அல்பிதாயா வந்நிஹாயா

 

அல்உத்பீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் மண்ணறைக்கு (கப்ரு) அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு கிராமப்புற அரபி வந்தார். நபியவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு, "(நபியே!) அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்தபோது, உன்னிடம் வந்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவர்களுக்காகத் தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால், மன்னிப்பை ஏற்பவனாகவும் மிகுந்த அன்புடையோனாகவும் அல்லாஹ்வை அவர்கள் காண்பார்கள்" (4:64) என்ற வசனத்தை ஓதினார்.

 

மேலும், "இப்போது நான் என் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோரி உங்கள் சமூகம் வந்துள்ளேன். நீங்கள் என் இறைவனிடம் பரிந்துரைக்க வேண்டும்" என்று கூறிவிட்டு, பின்வருமாறு கவிதையையும் பாடினார்:

يَا خيرَ مَنْ دُفنَت بِالْقَاعِ أعظُمُه     فَطَابَ منْ طِيبِهِنَّ القاعُ والأكَمُ

نَفْسي الفداءُ لقبرٍ أَنْتَ ساكنُه        فِيهِ العفافُ وَفِيهِ الجودُ والكرمُ

மண்ணில் புதைக்கப்பட்டவர்களில் சிறந்தவரே! / உங்கள் எலும்புகளின் நறுமணத்தால் மண்ணும் மலைக் குன்றும் மணம் கமழ்கின்றன.

நீங்கள் துயிலும் இந்த மண்ணறைக்கு என் உயிர் அர்ப்பணம். / தன்னடக்கம் இங்குதான் அடங்கியிருக்கிறது. தயாள குணமும் பெருந்தன்மையும் இங்குதான் உறங்குகின்றன.

 

பின்பு அந்தக் கிராமப்புற அரபி சென்றுவிட்டார். பின்னர் நான் கண் அயர்ந்து உறங்கினேன். கனவில் அண்ணல் நபி (ஸல்) அவர்களை கண்ட போது, அவர்கள் என்னிடம், ( يَا عُتْبِيُّ اِلْحَقِ اْلأَعْرَابِيَّ فَبَشِّرْهُ أَنَّ اللهَ قَدْ غَفَرَ لَهُ )  "அல்உத்பீ! அந்த கிராமவாசியிடம் சென்று அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று நற்செய்தி கூறும்" என்று சொன்னார்கள். நூல்:- அஷ்ஷாமில் இமாம் ஷைக் அபூமன்ஸூர் அஸ்ஸப்பாக், தஃப்சீர் இப்னு கசீர், மஜ்மூஉ இமாம் நவவீ

 

இந்த கவிதை வரிகள் பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு இன்றுவரை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மண்ணறை (ரவ்ளா ஷரீஃப் உடைய) ஜன்னல்களில் எழுதப்பட்டிருக்கிறது.

 

 சரியான விளக்கம்

 

ஒருதடவை மாபெரும் மேதை இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் மீலாது கொண்டாடலாமா?" எனக் கேட்டார்.

 

அதற்கு அன்னார், ( أَصْلُ عَمَلِ الْمَوْلِدِ بِدْعَةٌ لَمْ تُنْقَلْ عَنْ أَحَدٍ مِنَ السَّلَفِ الصَّالِحِ مِنَ الْقُرُونِ الثَّلَاثَةِ، وَلَكِنَّهَا مَعَ ذَلِكَ قَدِ اشْتَمَلَتْ عَلَى مَحَاسِنَ وَضِدِّهَا، فَمَنْ تَحَرَّى فِي عَمَلِهَا الْمَحَاسِنَ وَتَجَنَّبَ ضِدَّهَا كَانَ بِدْعَةً حَسَنَةً ) “மெளலிது நிகழ்ச்சிகள் ஒரு புதுமையே! முந்தைய மூன்று தலைமுறையினர் எவரிடமும் அப்படியொரு நடைமுறை இருக்கவில்லை. எனினும் அதில் உள்ளடக்கியிருக்கிற நன்மைகளை எண்ணிப்பார்க்கையில் அதிலுள்ள நன்மைகளை பேண வேண்டும் என்பதற்காக ஒருவர் மவ்லிது கொண்டாடுவார் எனில் இந்தப் புதுமை ஒரு நன்மையே! (அதனால் தாராளமாகக் கொண்டாடலாம்)” என்று கூறினார்கள் மேலும்,   

 

( وَقَدْ ظَهَرَ لِي تَخْرِيجُهَا عَلَى أَصْلٍ ثَابِتٍ وَهُوَ مَا ثَبَتَ فِي الصَّحِيحَيْنِ مِنْ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ الْمَدِينَةَ فَوَجَدَ الْيَهُودَ يَصُومُونَ يَوْمَ عَاشُورَاءَ، فَسَأَلَهُمْ فَقَالُوا: هُوَ يَوْمٌ أَغْرَقَ اللَّهُ فِيهِ فرعون وَنَجَّى مُوسَى فَنَحْنُ نَصُومُهُ شُكْرًا لِلَّهِ تَعَالَى» ، فَيُسْتَفَادُ مِنْهُ فِعْلُ الشُّكْرِ لِلَّهِ عَلَى مَا مَنَّ بِهِ فِي يَوْمٍ مُعَيَّنٍ مِنْ إِسْدَاءِ نِعْمَةٍ أَوْ دَفْعِ نِقْمَةٍ، وَيُعَادُ ذَلِكَ فِي نَظِيرِ ذَلِكَ الْيَوْمِ مِنْ كُلِّ سَنَةٍ ) இதற்கான ஒரு  உறுதியான அடிப்படை புகாரீ முஸ்லிம் ஆகிய நூல்களில் இவ்வாறு ஒரு நபிமொழி இருப்பதாக நான் உணர்கிறேன். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது ஆஷூரா நாளில் நோன்பு நோற்ற யூதர்கள் அது மூசா (அலை) அவர்கள் காப்பாற்றப்பட்ட நாள் என்றும் பிர்அவ்ன் அழிக்கப்பட்ட நாள் என்றும் கூறினார்கள்.  இது, அல்லாஹ் வழங்கிய ஒரு அருளுக்காக, அல்லது ஒரு கொடுமையிலிருந்து நிவாரணம் அளித்தற்காக ஒரு குறிப்பிட்ட நாளை மகிழ்ச்சிக்குரியதாக கருதலாம். அதை ஒவ்வொரு ஆண்டும் அதே நாளில் வெளிப்படுத்தலாம் என்பதையும் இதன் மூலம் நான் உணர்கிறேன்.

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். ( مَا هَذَا الْيَوْمُ الَّذِي تَصُومُونَهُ ) "நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், ( هذا يوم عظيم ) "இது ஒரு மகத்தான நாள்; இந்த நாளில்தான் நபி மூசாவையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூசா (அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் விதமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினர்.

 

அப்போது நபியவர்கள், ( فَنَحْنُ أَحَقُّ وَأَوْلَى بِمُوسَى مِنْكُمْ ) "உங்களைவிட நாங்களே மூசா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்" என்று கூறினார்கள். பின்னர், நபியவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையிட்டார்கள். (புகாரீ-3397, முஸ்லிம்-2083, இப்னு அபீஷைபா, பைஹகீ)

 

"நபி மூசா (அலை) அவர்களுக்கு வெற்றி கிடைத்த நாள், யூதர்களுக்கு மகத்தான நாள் என்றால், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பூமிக்கு அனுப்பப்பட்ட நாள் நமக்கு மகத்தான நாளாகும். எனவே பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த நாளை கொண்டாடலாம்" என்றார்கள்.

 

பலமுறை சுன்னத் அல்ஜமாஅத் கொள்கைக்கு முரண்பட்ட அறிஞர் இப்னு தைமிய்யா அவர்கள் “மீலாதுவிழா கூடும். அதற்கு இறைவனிடம் நற்கூலியுள்ளது” என்கின்றார். நூல்:- அல்இக்திளாஉஸ் ஸிராத்தில் முஸ்தக்கீம் ( اِقْتِضَاءُ الصِّرَاطِ الْمُسْتَقِيمِ )

 

ஏழை எளியோருக்கு உதவலாம்

 

அல்லாஹுத்தஆலா, ஓர் முஸ்லிமுக்கு குழந்தை பாக்கியத்தை வழங்கி அவரை தந்தையாக ஆக்கினான். அவர் அந்த சந்தோசத்தில் ஆண்டுதோறும் தமது குழந்தை பிறந்த தினத்தில் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கி, இறைவனுக்கு நன்றியை வெளிப்படுத்துகிறார். இதைத் தவறு என்று சொல்ல முடியாது. அதுபோல்தான், இல்லை! அதைவிட பன்மடங்கு ஓர் முஸ்லிமுக்கு ஆருயிர் பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்தத் தினம் சந்தோசத்தை தராமல் இருக்கமுடியாது. எனவே, அன்றைய தினத்தில் சந்தோசம் மற்றும் இறைவனுக்கு செலுத்தும் நன்றியின் வெளிப்பாடாக, பிறருக்கு அன்னதானம் வழங்கி, அதன் நன்மைகள் நபியவர்களுக்கு கிடைக்க பிரார்த்திப்பது (ஈஸால் ஸவாப் செய்தல்) தவறு என்று சொல்ல முடியாது. 


அதனடிப்படையில் தான், பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் பிறந்த தினமான ரபீஉல் அவ்வால் பிறை-12 அன்று, பல ஊர்களில் கந்தூரி வைபோகம் நடைபெறுகிறது


.நபிமொழித்துறை நிபுணர் இந்தியாவின் பேரறிஞர் ஷாஹ் வலியுல்லாஹ் தெஹ்லவீ (ரஹ்) அவர்கள் அவர்கள் கூறுகிறார்கள். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழை எளியோருக்கு சமைத்து உணவு வழங்குவது வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

 

ஒரு வருடம் திடீரென பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது வெறும் கடலை மட்டும் சமைத்து வழமை போல் ஏழைகளுக்கு வழங்கினேன். அன்றிரவு கனவில் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் திருக்கரத்தில் அந்தக் கடலை பாத்திரம் இருப்பதைக் கண்டேன். (அதாவது, எனது செயலை நபியவர்கள் ஆமோதிக்கிறார்கள் என்று விளங்கிக்கொண்டேன்.) நூல்:- அத்துர்ருஸ் ஸமீநு ஃபீமுபஷ்ஷராத்திந் நபிய்யில் அமீன் ( الدُرُّ الثَّمِينُ فِى مُبَشِّرَاتِ النَّبِيِّ الْاَمِينِ )

 

எனவே, நாமும் முடிந்தளவு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழை எளியோருக்கு உணவு பொட்டலங்களாக, மளிகைப் பொருள்களாக, காசு பணங்களாக வாரி வழங்கி நபியவர்கள் மீது நமக்குள்ள பற்றை வெளிப்படுத்தலாம்.

 

இதன் நன்மைகளை நமது உயிரினும் மேலான கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் நமது முன்னோர்களுக்கும் (ஈஸாப் ஸவாப் எனும்) அன்பளிப்புச் செய்யலாம்.

 

நோன்பு நோற்பது

 

அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது.  பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம், திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு "அன்றுதான் நான் பிறந்தேன்; அதில்தான் எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்- 2153

 

அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் திங்கட்கிழமை நோன்பு குறித்து கேட்டதற்கு, "அந்நாளில் தான் நான் பிறந்தேன். அன்று தான் எனக்கு முதன்முதலில் குர்ஆன் அருளப்பெற்றது" என்று கூறி அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்நாளில் தான் நோன்பு நோற்பதாக சுட்டிக்காட்டினார்கள்.

 

நபியவர்கள், நமக்கு தலைவராக கிடைத்தது பெரும் பாக்கியம். அல்லாஹுத்தஆலா நம்மீது கொண்ட கருணை. எனவே, நபியவர்களின் பிறந்த தினத்தின்போது (சிறந்த இறைவழிபாடான) நோன்பு நோற்று இறைவனுக்கு நன்றியையும், நபிநேசத்தையும் வெளிப்படுத்தலாம். அல்லது முடிந்தளவு (ஷுக்ரு நஃபில் எனும்) நன்றியைத் தெரிவிக்கும் சில ரக்அத்துகள் தொழுகலாம்.

 

எதிரியாக இருந்தாலும்

 

உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்தபோது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம், “(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன?” என்று அவர் கேட்டார்.

 

அபூலஹப், ( لَمْ أَلْقَ بَعْدَكُمْ غَيْرَ أَنِّي سُقِيتُ فِي هَذِهِ بِعَتَاقَتِي ثُوَيْبَةَ ) ‘‘உங்களைவிட்டுப் பிரிந்தபின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது” என்று கூறினார். புகாரீ-5101

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அபூலஹப் மரணித்த ஒரு வருடத்திற்கு பிறகு அவரை நான் கனவு கண்டபோது அவர் மிக மிக மோசமான ஓர் நிலையில் காட்சியளித்தார். பின்னர் அவர் என்னிடம் கூறினார்: நான் உங்களை விட்டும் பிரிந்த பிறகு ஒரு சுகபோகங்களையும் அடையவில்லை. ஆனாலும் எல்லா திங்கள்கிழமைகளிலும் எனக்கு தண்டனை லேசாக்கப்படுகிறது.

 

இமாம் ஸுஹைலி (ரஹ்) அவர்கள் அதற்கான காரணத்தை  கூறுகிறார்கள். கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் திங்கள்கிழமை தான் பிறந்தார்கள். இந்தச் செய்தியை அபூலஹபுடைய அடிமைப் பெண்ணாக இருந்து வந்த ஸுவைபா என்பவர்தான் அவரிடம் சென்று கூறினார். இதை கேட்டவுடனேயே மகிழ்ச்சியில் அபூலஹப் அப்பெண்மணியிடம் நான் உன்னை விடுதலை செய்துவிட்டேன் என்று கூறினார். எனவே அதன் காரணமாக தான் அவருக்கு ஒவ்வொரு திங்கள்கிழமைகளிலும் தண்டனை இலேசாக்கப்படுகிறது.  நூல்:- ஃபத்ஹுல் பாரி 

 

இமாம் இப்னு நாஸிருத்தீன் அத்திமஷ்கி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நிரந்தரமான நரகவாசி என்று இறைவனால் விதிக்கப்பட்டு அவனது இரு கரங்களும் நாசமடையட்டும் என குர்ஆன் விமர்சிக்கப்பட்ட இறைமறுப்பாளன் அபூலஹப்.

 

அப்படிப்பட்ட இறைமறுப்பாளனுக்குகூட கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த நேரத்தில் சந்தோஷமடைந்த ஒரே காரணத்தால் எல்லா திங்கள்கிழமைகளிலும் (இறைவனின் கருணை அறவே இறங்காத நகரத்திலும்) தண்டனை இலேசாக்கப்படுகிறது என்றால் முஸ்லிமாக வாழ்ந்து கண்மணி நாயகம் (ஸல்) அவர்களை கொண்டு ஆனந்தம் அடையக்கூடிய ஒரு இறைநம்பிக்கையாளனுக்கு எவ்வளவு பெரிய பிரதிபலன் கிடைக்கக்கூடும்.  நூல்:- அல்ஹாவீ லில் ஃபதாவா - 1/230

 

ஆரம்ப காலத்தில் மீலாது விழா என்ற பெயரில் நிகழ்ச்சிகள் இல்லை என்பதால் இப்போது கூடாது எனில், பள்ளிவாசல்களில் மினாராக்கள்கூட வைக்கக்கூடாது. ஏனெனில், நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின்  காலத்திலோ நபித்தோழர்களின் காலத்திலோ மினாராக்கள் இருந்ததில்லை. பின்னர் அப்பாசிய கலீபாக்களின் காலத்தில் இஸ்லாமிய கட்டிடக் கலையின் பெருமிதமான அடையாளமாகத்தான் மினாராக்கள் வந்தன. அதை ஒட்டு மொத்த இஸ்லாமிய உலகும் ஏற்றுக்கொண்டதே! இன்று மக்காவிலும் மதீனாவிலும்கூட ஓங்கி உயர்ந்த மினாராக்கள் இருக்கின்றனவே! இதைக் கூடாது என்று சொல்லமுடியுமா?

 

இதுபோன்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மற்றும் நபித்தோழர்களின் காலத்தில் இல்லாத பல விஷயங்கள் நம்முடைய புழக்கத்தில் இருக்கிறது. அது பிழையும் அல்ல.

 

நமது உயிரினும் மேலான கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள்மீது அதிகப் பிரியமுள்ள  நல்லடியார்களாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழ செய்வானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

Tuesday, 11 March 2025

நபியவர்களின் கழிவுகளும் புனிதமே!

நபியவர்களின் கழிவுகளும் புனிதமே!

 

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ آيَةَ مُلْكِهِ أَنْ يَأْتِيَكُمُ التَّابُوتُ فِيهِ سَكِينَةٌ مِنْ رَبِّكُمْ وَبَقِيَّةٌ مِمَّا تَرَكَ آلُ مُوسَى وَآلُ هَارُونَ تَحْمِلُهُ الْمَلَائِكَةُ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ


அவர்களின் நபி அவர்களிடம் கூறினார்: அவரது ஆட்சிக்கு அடையாளமாக (அந்தப்) பேழை (மீண்டும்) உங்களிடம் வரும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து (உங்களுக்கு) மன அமைதி இருக்கும். இன்னும் மூசாவின் குடும்பத்தாரும் ஹாரூனின் குடும்பத்தாரும் விட்டுச் சென்றவற்றில் எஞ்சிய பொருள்களும் அதில் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கைக் கொண்டவர்களாயிருப்பின், அதில் உங்களுக்குச் சான்று உள்ளது. திருக்குர்ஆன்:- 2:248

 

இஸ்லாமியப் பெரும் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களை கண்ணியப்படுத்தியும், அவர்களின் இறப்புக்குப் பிறகு அவர்களின் நினைவுச் சின்னங்களை கண்ணியப்படுத்தியும் வாழ்ந்தவர்களே உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் ஆவர்.


ஒரு மனிதனின் உடலில் இரத்தம், நகம், தலைமுடி போன்றவை இருக்கும் வரை அது சுத்தமானது. எப்போது அவன் உடலைவிட்டு அது வெளியேறிவிடுகிறதோ அது அப்போதே அசுத்தமாகிவிடுகிறது. ஆனால், இந்த நிலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பொருந்தாது‌. நபியவர்களின் உடலில் இருக்கும்போதும் சுத்தமானது. நபியவர்கள் உடலைவிட்டு வெளியேறிய பிறகும் அது சுத்தமானதாகவும் புனிதமானதாகவுமே இருக்கிறது.


இறைத்தூதர்கள் மற்றும் இறைநேசர்கள் பயன்படுத்திய பொருள்களின் மூலம் (பரக்கத் எனும்) அருள்வளம் பெறலாம் என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் நிலைப்பாடு.

 

நினைவுச் சின்னங்கள்

 

தலைப்பில் காணும் திருவசனத்தில் குறிப்பிடப்படுகின்ற அந்தப் பேழையில் என்னென்ன பொருள்கள் இருந்தன என்பது குறித்து திருமறை விரிவுரையாளர்கள் பலரும் கூறியதாவது. நபி மூசா (அலை) அவர்கள் பயன்படுத்திய செருப்புகள், கைத்தடி ஆடைகள், தௌராத் வேதத்தின் ஒரு பகுதி,  ஹாரூன் (அலை) அவர்களின் தலைப்பாகை, மேலங்கி ஆகும். நூல்:- தஃப்சீர் இப்னு அப்பாஸ், தஃப்சீர் மத்தாரிகுத் தன்ஸீல், தஃப்சீர் பைளாவி

 

"மூசா (அலை) அவர்களின் குடும்பத்தாரும் ஹாரூன் (அலை) அவர்களின் குடும்பத்தாரும் விட்டுச் சென்றவற்றில் எஞ்சிய பொருள்கள் அதில் இருக்கும் என்று அவருடைய இறைத்தூதர் கூறினார்" என்று அல்லாஹ் தெரிவித்துள்ளான்.

 

(தாபூத்து சகீனா எனும்) இந்த மன அமைதிப் பேழை இஸ்ரவேலர்களின் மிக முக்கியமான பரம்பரைச் சொத்தாக கருதப்பட்டு வந்தது. அதில் தவ்ராத்தின் அசல் பிரதியும், நபிமார்கள் பயன்படுத்திய பொருள்களும் பாதுகாக்கப்பட்டு வந்தன. இதை ஒரு வெகுமதியாக அவர்கள் கருதி வந்தனர். இஸ்ரவேலர்களின் கரத்திலிருந்து இந்த பெட்டி எதிரிகளால் பறிக்கப்பட்டுவிட்டது. அதையே வானவர்கள் மூலம் இறைவன் தாலூத் மன்னர் வசம் ஒப்படைத்தான். ஆகவே, அவர் இறைவனால் நியமிக்கப்பட்டவர்தாம் என்பதற்கு இது வலுவான சான்றாக அமைந்தது. பின்னர் இது நபி சுலைமான் (அலை) அவர்களது காலம்வரை இருந்து வந்தது. )சுலைமான்   -  அலை அவர்கள் பைத்துல் மக்திஸ் பள்ளிவாசலைப் புதுப்பித்தபோது அதன் அஸ்திவாரத்தில் இந்தப் பேழையை வைத்து மூடிவிட்டார்கள் என்பது யூதர்களின் யூகமாகும்.( நூல்:- தஃப்சீர் மாஜிதீ

 

பிரபல திருக்குர்ஆன் விரிவுரையாளர் பேரறிஞர் சுத்தீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள். அரசர் தாலூத்தின் வீட்டில் இருந்த அந்த பேழையைப் பார்த்த மக்கள் அதிசயித்து "ஷம்ஊன்" அவர்களை இறைத்தூதர் என ஏற்றுக்கொண்டு, அரசர் தாலுத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கத் தொடங்கினர். தஃப்சீர் இப்னு கஸீர்

 

கண்ணியப்படுத்துகிறார்கள்

 

யார் அவர் மீது நம்பிக்கை கொண்டு, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவிபுரிந்து, அவருடன் அருளப்பெற்ற (குர்ஆன் எனும்) ஒளியைப் பின்பற்றுவார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவர். திருக்குர்ஆன்:- 7:157

 

ஹுதைபியா உடன்படிக்கை நடைபெற்றபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தைக்காக (அப்போது இறைமறுப்பாளராயிருந்த) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ வந்தார். வந்தவர் நபியவர்களின் தோழர்களை தம் கண்களால் கூர்ந்து பார்க்கத் தொடங்கினார். பிறகு அவர் தம் தோழர்களிடம் சென்று, (  أَىْ قَوْمِ، وَاللَّهِ لَقَدْ وَفَدْتُ عَلَى الْمُلُوكِ، وَوَفَدْتُ عَلَى قَيْصَرَ وَكِسْرَى وَالنَّجَاشِيِّ وَاللَّهِ إِنْ رَأَيْتُ مَلِكًا قَطُّ، يُعَظِّمُهُ أَصْحَابُهُ مَا يُعَظِّمُ أَصْحَابُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم مُحَمَّدًا ) "என் சமுதாயத்தாரே! நான் பல அரசர்களிடம் தூதுக் குழுவில் ஒருவனாகச் சென்றுள்ளேன். (கிழக்கு ரோமானிய மன்னர்) சீசரிடமும், (பாரசீக மன்னர்) கிஸ்ராவிடமும், (அபிசீனிய மன்னர்) நஜாஷியிடமும் தூதுக் குழுவில் சென்றுள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் தோழர்கள் முஹம்மதுக்கு அளிக்கின்ற கண்ணியத்தைப் போன்று எந்த அரசருக்கும் அவருடைய தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததே இல்லை.

 

மேலும், ( وَاللَّهِ إِنْ تَنَخَّمَ نُخَامَةً إِلاَّ وَقَعَتْ فِي كَفِّ رَجُلٍ مِنْهُمْ، فَدَلَكَ بِهَا وَجْهَهُ وَجِلْدَهُ، وَإِذَا أَمَرَهُمُ ابْتَدَرُوا أَمْرَهُ وَإِذَا تَوَضَّأَ كَادُوا يَقْتَتِلُونَ عَلَى وَضُوئِهِ، وَإِذَا تَكَلَّمَ خَفَضُوا أَصْوَاتَهُمْ عِنْدَهُ، وَمَا يُحِدُّونَ إِلَيْهِ النَّظَرَ تَعْظِيمًا لَهُ، وَإِنَّهُ قَدْ عَرَضَ عَلَيْكُمْ خُطَّةَ رُشْدٍ، فَاقْبَلُوهَا ) அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால், அது அவருடைய தோழர்களில் ஒருவரது கையில்தான் விழும். அதை அவர் தமது முகத்திலும் மேனியிலும் தேய்த்துக்கொள்கிறார். அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டால் அவரது கட்டளையை நிறைவேற்ற அவர்கள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக்கொண்டு முன்வருகிறார்கள். அவர் அங்கத்தூய்மை செய்தால் அவர் மிச்சம்வைக்கும் தண்ணீரைப் பெறுவதற்காக, ஒருவரோடொருவர் சண்டையிடும் அளவுக்குச் சென்றுவிடுகிறார்கள். அவர் பேசினால், அவரிடம் அவர்கள் தம் குரல்களைத் தாழ்த்திக்கொள்கிறார்கள். அவரைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அவரைக் கூர்ந்து (நேருக்கு நேர்) பார்ப்பதில்லை. மேலும், அவர் உங்கள்முன் நல்லதொரு திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார். ஆகவே, அதை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார். நூல்:- புகாரீ-2731,2732

 

வியர்வை

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக (அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் பொருட்டு) தோல் விரிப்பு ஒன்றை விரிப்பார்கள். அந்த விரிப்பில் நபியவர்கள் மதிய ஓய்வெடுப்பார்கள். நபியவர்கள் உறங்கிவிட்டால் அவர்களின் (உடலிலிருந்து வழிகின்ற) வியர்வைத் துளிகளையும் (ஏற்கெனவே தம்மிடமுள்ள) நபியவர்களின் தலை முடியையும் எடுத்து ஒரு கண்ணாடிக் குடுவையில் சேகரிப்பார்கள். பிறகு அதை வாசனைப் பொருளில் வைப்பார்கள். (இதையெல்லாம்) நபியவர்கள் உறங்கும்போதே (செய்து முடிப்பார்கள்).

 

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுமாமா பின் அப்தில்லாஹ் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

 

(என் பாட்டனார்) அனஸ் (ரலி) அவர்களுக்கு மரண வேளை நெருங்கியபோது தமது கஃபன் (சவக்கோடி) துணியில் பூசப்படும் நறுமணத்தில் இந்த நறுமணத்தையும் சேர்த்துக்கொள்ளுமாறு என்னிடம் இறுதிவிருப்பம் தெரிவித்தார்கள். அவ்வாறே அவர்களின் கஃபனில் பூசப்பட்ட நறுமணத்துடன் இதுவும் சேர்க்கப்பட்டது. நூல்:- புகாரீ-6281

 

சிறுநீர்

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் செவிலித்தாய்மார்களின் ஒருவரான உம்மு அய்மன் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒருநாள் இரவு தஹஜ்ஜுத் தொழுவதற்காக எழுந்தவர்கள் வீட்டிலிருந்த ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழித்திருக்கிறார்கள். அது எனக்கு தெரியாது. நான் எழுந்தபோது எனக்குத் தாகமாக இருந்தது. அப்போது அந்தப் பாத்திரத்திலிருந்த நீரை பருகிவிட்டேன். (காலையில்) சுப்ஹுக்கு எழுந்த நபியவர்கள், ( يَا أُمَّ أَيْمَنَ قُومِي إِلَى تِلْكَ الْفَخَّارَةِ فَاهْرِيقِي مَا فِيهَا ) "உம்மு அய்மன் அவர்களே! இந்த பாத்திரத்தில் இருப்பதை வெளியே கொட்டிவிடுவீராக!" என்றார்கள்.

 

அப்போது நான், ( قَدْ وَاللَّهِ شَرِبْتُ مَا فِيهَا ) "(நாயகமே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை பருகிவிட்டேனே!" என்றேன். இதை செவியற்ற நபியவர்கள் தமது முத்துப்பற்கள் வெளியே தெரியுமாறு புன்முறுவல் பூத்தார்கள். பிறகு, ( إِمَّا أَنَّكِ لَا يَفْجَعُ بَطْنُكِ بَعْدَهُ أَبَدًا ) "நிச்சயமாக! இனிமேல் உன்னுடைய வயிற்றுக்கு எந்த நோயும் நேரிடாது என்று கூறினார்கள். நூல்:- ஹாகிம், அல்முஃஜமுல் கபீர் இமாம் தப்ரானீ, உஸுதுல் ஙாபா, சீரத் நபவிய்யா இமாம் இப்னு கஸீர்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிரவில் ஒரு கோப்பையில் சிறுநீர் கழித்துவிட்டு, அந்தக் கோப்பையை தனது படுக்கைக்கு அடியில் வைத்தார்கள்‌. பிறகு அதைத் தேடினார்கள். அது கிடைக்கவில்லை. எனவே, அந்தக் கோப்பை எங்கே? என்று கேட்டார்கள். அப்போது  எத்தியோப்பியாவில் இருந்து வந்த உம்மு சலமா (ரலி) அவர்களின் பணிப்பெண் "பர்ரத்" என்பவர் அதைப் பருகிவிட்டார்" என்று பதிலளித்தனர். நபியவர்கள், ( لَقَدِ احْتَظَرْتِ مِنَ النَّارِ بِحِظَارٍ ) "(பர்ரத் - ரலி அவர்களை நோக்கி!) உம்மை முழுமையாகவே நரகத்தை விட்டும் பாதுகாத்துக்கொண்டாய்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- (நபியவர்களின் அடிமை) உமைமா பின்த் ரகீகா (ரலி) அவர்கள் நூல்:- மஜ்மஉஸ் ஸவாயித், அல்கஸாயிஸுல் குப்ரா இமாம் சுயூத்தீ

 

இரத்தம்

 

ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களிடம் வந்தார். அப்போது நபியவர்களுக்கு இரத்தம் குத்தி எடுக்கப்பட்டது. நபியவர்கள், ( يَا عَبدَ اللَّهِ اذهَب بِهَذَا الدَّمِ فَأَهرِقهُ حَتَّى لا يَرَاهُ أَحَدٌ  ) "அப்துல்லாஹ்! இந்த இரத்தத்தை எடுத்துக்கொண்டு போய் யாரும் பார்க்காதவாறு கீழே ஊற்றிவிடு!" என்று கூறினார்கள்.

 

நபிவர்களை விட்டுப் பிரிந்ததும், அவர் அந்த இரத்தத்தைக் குடித்துவிட்டார். நபியவர்கள், ( يَا عَبدَ اللَّهِ مَا صَنَعتَ ؟ ) "அப்துல்லாஹ் (அதை) நீ என்ன செய்தாய்?" என்று கேட்டார்கள். அவர், ( جَعَلتُهُ فِي أَخفَى مَكَانٍ ظَنَنتُ أَنَّهُ يَخفَى عَلَى النَّاسِ ) "மறைவான ஓர் இடத்தில் வைத்துவிட்டேன். நிச்சயமாக அது மக்களைவிட்டும் மறைவானதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்" என்று கூறினார்.

 

நபியவர்கள் (அவர் சொல்லும் விதத்தை கேட்டுவிட்டு), ( لَعَلَّكَ شَرِبتَهُ ) "ஒருவேளை நீ அதை குடித்திருப்பாயோ!" என்றார்கள். அவர், "ஆம்" என்றார். நபியவர்கள், ( وَلِمَ شَرِبتَ الدَّمَ ؟! وَيلٌ لِلنَّاسِ مِنكَ وَوَيلٌ لَكَ مِنَ النَّاسِ ) "ஏன் (அந்த) இரத்தத்தைக் குடித்தாய்? உன் மூலம் மக்களுக்கும் மக்களின் மூலம் உனக்கும் நாசம் உண்டாகட்டும்...!" என்று  (இவ்வாறு செல்லமான திட்டும் விதத்தில்)" கூறினார்கள் . நூல்:- முஸ்னது பஸ்ஸார், ஹாகிம், சுனனுல் குப்ரா இமாம் பைஹகீ, தாரீக் திமிஷ்க் இமாம் இப்னு அசாகிர், சியரு அஃலாமுந் நுபலா இமாம் அத்தஹபீ

 

மற்றொரு அறிவிப்பில், அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி! ( لَا تُمْسِكَ النَّارَ ) "நரகம் உன்னை தீண்டாது" என்று கூறினார்கள். நூல்:- அல்ஜவாமிஉ வல்மஜல்லாது வநஹ்வுஹா ( الْجَوَامِعُ وَالْمَجَلَّاتُ وَنَحْوُهَا )

 

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களிடம் நீங்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் இரத்தத்தை குடித்துவிட்டீர்கள். அதன் சுவை எப்படி இருந்தது?"  என்று கேட்டனர். அதற்கு அன்னார், "அது தேனின் சுவையுடையதாகவும், கஸ்தூரியின் நறுமணமுடையதாகவும் இருந்தது" என்று பதிலளித்தார்கள். நூல்:- அஷ்ஷிஃபா - காழீ இயாழ்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் உண்ணும் உணவின் காரணமாக, வெளியாகும் கழிவுப் பொருள்களில், மற்றவர்களைப் போல் சற்றும் துர்வாடை இருக்காது. மாறாக, அதில் நறுமணம் கமழும்.

 

ஒரு மனிதனின் சிறுநீர், இரத்தம் அசுத்தமானதாக இருந்தாலும் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் சிறுநீர், இரத்தம் ஆகிய கழிவுகள் அசுத்தமல்ல. அது இந்தச் சமுதாயத்தினருக்கு நோய் நிவாரணியாகவும், நரக விடுதலை பெற காரணமாகவும் அமைகிறது எனும்போது இவை அருமை நாயகம் (ஸல்) அவர்களின் தனித்துவத்திற்கு சான்றாகும்.

 

தலைமுடிகள்

 

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("விடைபெறும்" ஹஜ்ஜில்) நாவிதரிடம் தமது தலையின் வலப்பக்கத்தையும் பின்னர் இடப்பக்கத்தையும் காட்டி, "எடு" என்றார்கள். பிறகு அந்த முடியை மக்களிடையே விநியோகிக்க (உத்தரவிடலா)னார்கள். நூல்:- முஸ்லிம்-2510

 

உஸ்மான் பின் அப்தில்லாஹ் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களுடைய துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் என்னை என் குடும்பத்தார் ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். (உம்மு சலமா ஒரு சிமிழைக் கொண்டு வந்தார்கள்.) அது வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபியவர்களின் முடிகளில் ஒரு முடி இருந்தது.

 

(பொதுவாக யாரேனும்) ஒருவருக்கு கண்ணேறு அல்லது நோய் ஏற்பட்டுவிட்டால், அவர் தமது நீர் பாத்திரத்தை உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அனுப்பிவைப்பார். (அவர்கள் தம்மிடமிருந்த நபியவர்களின் முடியைத் தண்ணீருக்குள் முக்கி அனுப்புவார்கள். அதை நோயாளி குடிப்பார்.) நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன். நூல்:- புகாரீ-5896

 

மிகவும் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த யர்மூக் போர்க்களத்தில் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைப்பாகை கீழே விழுந்துவிட்டது. உடனே காலித் (ரலி) அவர்கள் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தமது வாகனத்திலிருந்து கீழே இறங்கி குதித்து, அந்த தலைப்பாகை தேடிக் கண்டுபிடித்து தலையில் அணிந்துகொண்டார்கள்.

 

இதை பார்த்த பலரும் போர் முடிந்த பிறகு, "மிகவும் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போரின் இடையில் கீழே விழுந்த தலைப்பாகைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து தேடினீர்களே ஏன்? நீங்கள் கொல்லப்பட்டிருந்தால் என்ன ஆவது?" என்று கேட்டார்கள்.

 

அதற்கு காலித் (ரலி) அவர்கள், ( اعْتَمَرَ رَسُوْلُ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- فَحَلَقَ رَأْسَهُ فَابْتَدَرَ النَّاسُ شَعْرَهُ فَسَبَقْتُهُم إِلَى نَاصِيَتِهِ فَجَعَلْتُهَا فِي هَذِهِ القَلَنْسوَةِ فَلَمْ أَشْهَدْ قِتَالاً وَهِيَ مَعِي إلَّا رُزِقْتُ النَّصْرَ ) "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்ரா செய்துவிட்டு தங்களின் தலைமுடிகளைக் களைந்தபோது அவர்களின் கண்ணியமான முடி எல்லோருக்கும் பங்கு வைக்கப்பட்டது. அதில் எனக்கும் ஒரு முடி கிடைத்தது. நான் அதை என்னுடைய இந்த தலைப்பாகையில் வைத்துக்கொண்டேன். எனவே, இந்த தலைப்பாகையை அணிந்து நான் போர்க்களத்தில் போரிடும்போது அதன் (பரக்கத்தின்) மூலம் நான் உதவி செய்யப்படுவேனே தவிர, கொல்லப்பட மாட்டேன்" என்று பதிலளித்தாகள். நூல்:- சியரு அஃலாமுந் நுபலா இமாம் அத்தஹபீ

 

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் தம்மிடமிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முடிகளை மிகுந்த மரியாதையுடனும், பயபக்தியுடனும் கையாளுவார்கள். ( وَكَانَ إذَا مَرِضَ وَضَعَ شَعْرَةً فِى الْمَاءِ ثُمَّ يَشْرَبُهُ فَيَبْرَأُ ) அன்னாருக்கு ஏதேனும் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அந்த முடிகளிலிருந்து ஒரு முடியை எடுத்து தண்ணீரில் போடுவார்கள். பிறகு அந்தத் தண்ணீரைப் பருகி, குணமாகிவிடுவார்கள். இதுவே அன்னாரின் வழமையாகும். நூல்:- மனாகிப் இமாம் அஹ்மத்

 

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமுடி மூன்று இருந்தன. அன்னார் மரணமடையும் நேரத்தில், ( إِذَا مَاتَ أَنْ يَجْعَلَ عَلَى كُلِّ عَيْنٍ شَعْرَةً

وَأَنْ يَضَعُوا شَعْرَةً عَلَى لِسَانِهِ ) "(நான்) மரணமடைந்துவிட்டால்  என்னிடமுள்ள இந்த மூன்று முடிகளில் இரண்டை என் இரண்டு கண்களிலும், ஒன்றை எனது நாவிலும் வைத்துவிடுங்கள்" என்று இறுதி விருப்பம் தெரிவித்திருந்தார்கள். ( فَلَمَّا مَاتَ فَعَلُوا ذَلِكَ ) அன்னார் இறந்த பிறகு அவ்வாறே செய்யப்பட்டது. நூல்:- அஃலாமுந் நுபலா இமாம் அத்தஹபீ

 

எச்சில் உணவு

 

அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் உணவு கொண்டு வரப்பட்டால் அதை உண்டுவிட்டு அதில் எஞ்சியதை எனக்கு கொடுத்து அனுப்புவார்கள். (அதை நாங்கள் விரும்பி உண்போம்.) நூல்:- முஸ்லிம்-4173

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் சரியாக பேச்சு வராத ஒரு பெண் வந்தார். அப்போது நபியவர்கள் சுடப்பட்ட இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண், "எனக்கும் சிறிதளவு உண்ணுவதற்கு தரக் கூடாதா?" என்று கேட்டார். உடனே நபியவர்கள் தமக்கு முன்னால் இருந்த உணவிலிருந்து எடுத்துக் கொடுத்தார்கள்.

 

அதற்கு அந்தப் பெண், "(நாயகமே!)  தங்களின் வாயில் உள்ள உணவைத் தவிர வேறெதுவும் எனக்கு வேண்டாம்" என்று கூறிவிட்டார். உடனே நபியவர்கள் தங்கள் வாயில் உள்ள உணவை வெளியாக்கி, அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்கள். அந்தப் பெண் அதை தன்னுடைய வாயில் போட்டு சாப்பிட்டு முடித்தார். அப்போதிலிருந்து அவளுடைய நாவின் தடுமாற்றம் நீங்கிவிட்டது. நூல்:- தப்ரானீ

 

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதைத் தூக்கிக்கொண்டு நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது நபியவர்கள் அக்குழந்தைக்கு இப்ராஹீம் என்று பெயரிட்டுப் பேரீச்சம்பழத்தை மென்று அதன் வாயில் ஊட்டினார்கள். அதனை வாழ்த்தி, அதற்காக இறைவனிடம் இறைஞ்சினார்கள். பின்பு அதனை என்னிடம் தந்துவிட்டார்கள். நூல்:- புகாரீ-5467

 

நபியவர்கள் மென்று தந்த எச்சில் உணவை நோய் நிவாராணியாகவும், அருள்வளம் பெற்றதாகவும் எண்ணினார்கள் 

 

நாம் கொண்ட அன்பின் காரணமாக தமது தாய், மனைவி, குழந்தைகள் மென்று தந்த உணவுகளைச் சாப்பிடுகிறோம். இது அன்பின் வெளிப்பாடு. இதுவே, நபியின்மீது காதல் கொண்ட நபித்தோழர்களின் நிலைபாடு.

 

முஆவியா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஆடை, சில முடிகள், நகங்கள் ஆகியவற்றை பாதுகாத்து வந்தார்கள். முஆவியா (ரலி) அவர்கள் தங்கள் இறுதி நேரத்தில், "நபியவர்களின் ஆடையையே எனக்கு (கஃபன் எனும்) சவக்கோடியாக அணிவியுங்கள். மேலும், நபியவர்களின் முடி மற்றும் நகங்களை என்னுடைய கண்களிலும், கன்னத்திலும், நெற்றியிலும் வையுங்கள். (இதன் மூலம்) அருளாளனான அல்லாஹ்வுக்கும் எனக்கும் மத்தியில் நேசத்தை ஏற்படுத்துங்கள்" என்று இறுதி விருப்பம் தெரிவித்தார்கள். ​நூல்:- இக்மால்

 

அணிந்த ஆடை

 

நற்செய்தி கூறுபவர் (யஅகூப்பிடம்) வந்து, அதை (யூசுஃபின் மேலங்கியை) அவரது முகத்தில் போட்டார். உடனே அவர் பார்வையுள்ளவராக மாறினார். திருக்குர்ஆன்:- 12:96

 

இறைத்தூதர் யஅகூப் (அலை) அவர்கள் தமது அருமை மகனார் யூசுஃப் (அலை) அவர்களின் பிரிவை நினைத்து கண் பார்வையை இழந்தபோது,  யூசுஃப் (அலை) அவர்களின் அருள்வளம் நிறைந்த கண்ணியமான சட்டையை யஅகூப் (அலை) அவர்கள் முகத்தில் போட்டபோது கண்பார்வை மீண்டும் வந்தது என்கிறது திருக்குர்ஆன்.

 

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையாக இருந்த அப்துல்லாஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. இதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நீளங்கியாகும். இது, ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவர்கள் இறக்கும்வரை இருந்துவந்தது. அவர்கள் இறந்த பின்னர் அதை நான் எடுத்துவைத்துக்கொண்டேன். இதை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அணிந்துவந்தார்கள். பின்னர் நாங்கள் (அருள்வளம் கருதி) இதைத் தண்ணீரில் கழுவி, அதைக்கொண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துவருகிறோம்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-4201

 

சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருபெண் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு போர்வையைக் கொண்டு வந்து,  “(நாயகமே!) நான் எனது கையாலேயே இதை நெய்திருக்கிறேன். இதை உங்களுக்கு அணிவிக்கவே நான் கொண்டுவந்தேன்” என்றார். அப்போது அந்த ஆடை நபியவர்களுக்கு தேவையாயிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டார்கள்.

 

பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்துகொண்டு எங்களிடம் வந்தபோது ஒருவர், ( اكْسُنِيهَا، مَا أَحْسَنَهَا ) “இது எவ்வளவு அழகாக இருக்கிறது! எனக்கு இதை நீங்கள் அணியக் கொடுத்துவிடுங்கள்” என்று கேட்டார். (பிறகு, நபியவர்கள் அதை அவருக்குக் கொடுத்துவிட்டார்கள்.) உடனே அங்கிருந்தோர், “நீர் செய்வது முறையன்று; நபியவர்களுக்கு அது தேவைப்பட்டதால்தான் அதை அணிந்திருக்கிறார்கள். நபியவர்கள், கேட்பவர்களுக்குக் கொடுக்காமலிருக்கமாட்டார்கள் என்று தெரிந்துகொண்டே நீர் அதை அவர்களிடம் கேட்டுவிட்டீரே” எனக் கூறினார்கள்.

 

அதற்கு அவர், ( إِنِّي وَاللَّهِ مَا سَأَلْتُهُ لأَلْبَسَهَا إِنَّمَا سَأَلْتُهُ لِتَكُونَ كَفَنِي )  அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை (சாதாரணமாக) அணிந்துகொள்வதற்காகக் கேட்கவில்லை; அது எனக்குப் பிரேத ஆடை (கஃபன்) ஆகிவிட வேண்டும் என்றே கேட்டேன்” என்றார். பின்பு அது அவருக்கு கஃபனாகவே ஆகிவிட்டது. நூல்:- புகாரீ-1277

 

அருமை நாயகம் (ஸல்) அவர்களின் புனித மேனியில் பட்ட ஆடை தமக்கு (கஃபன் எனும்) சவக்கோடியாக அணியப்பட வேண்டும் என்று விரும்பினார். அவரது நோக்கம் நிறைவேறியது.

 

போர்வை

 

ஒருமுறை கவிஞர் கஅப் பின் ஸுஹைர் (ரலி) அவர்கள் அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களை கவிதையால் புகழ்ந்து பாடினார். அப்போது நபியவர்கள் எழுந்து தம்மீது இருந்த போர்வையை எடுத்து அவருக்கு போர்த்தி அகமகிழ்ந்தார்கள். பிற்காலத்தில் கஅப் (ரலி) அவர்கள் முக்கியமான விசேஷங்களிலெல்லாம் நபியவர்கள் போர்த்திய  அந்தப் போர்வையோடுதான் இவரை பார்க்க முடியும். சபையோர் முன்னிலையில் அப்போர்வையைத் தம்மீது போர்த்திவாறு கம்பீரமாக வருவார். பலரும் அந்தப் போர்வை நம்மிடம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுவார்கள்.

 

நபியவர்கள் சார்ந்த எந்தப் பொருள் யாரிடத்தில் இருந்தாலும் அதன் அருள்வளம் (பரக்கத்) கருதி எவ்வளவு பணம் கொடுத்தாவது அதை வாங்கி விடுவது முஆவியா (ரலி) அவர்களின் பழக்கமாக இருந்து வந்தது.

 

ஒருமுறை முஆவியா (ரலி) அவர்கள் கஅப் (ரலி) அவர்களிடமிருந்த அந்தப் போர்வையை விலைக்கு கேட்டார்கள். ஆனால், அவர் கொடுக்க மறுத்துவிட்டார்.

 

கஅப் (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின் அந்தப் போர்வை அவரது வாரிசுகளிடம் இருந்து வந்தது. அப்போது முஆவியா (ரலி) அவர்கள் அவர்களிடம் அந்தப் போர்வையை விலைக்கு தருமாறு கேட்டபோது, அவர்கள் சம்மதித்தனர. எனவே, முஆவியா (ரலி) அவர்கள் 20 ஆயிரம் வெள்ளிக்காசுகள்  கொடுத்து  அதை வாங்கி கொண்டார்கள்.

 

முஆவியா (ரலி) அவர்களுக்கு பின் அவர்கள் வழிவந்த கலீஃபாக்கள் அனைவரும் அதை பெருநாள் அன்று தொழுகைக்கு வரும்போது போர்த்திக் கொள்வார்கள். பனூ உமைய்யா,  உஸ்மானியா என்று வரிசையாக வந்த கலீபாக்கள் அத்தனைபேரும் அந்தப் போர்வையைப் போர்த்தி வந்தார்கள்.

 

கண்காட்சி

 

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களின் திருமுடியை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, "எவரேனும் எனது முடிகளிலிருந்து ஒரு முடிக்கேனும் அவமரியாதை செய்வாரேயானால், அவருக்கு சொர்க்கம் தடை செய்யப்பட்டதாக (ஹராமாக) ஆகிவிடும்" என்று கூறினார்கள். நூல்:- இப்னு அசாகிர், ஜாமிஉஸ் ஸஙீர் இமாம் சுயூத்தீ

 

ஜனாதிபதி உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களிடம் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் இரு காலுறைகள், ஒரு கைத்தடி, ஒரு வாளுறை ஆகியவை இருந்தன. அவற்றை அவர்கள் மிகக் கண்ணியத்தோடு பாதுகாத்து அவற்றை தினமும் பார்வையிடவும் செய்வார்கள். சிறப்பு விருந்தினர்கள் யாராவது வருகை தரும்போது "அல்லாஹ் யார் மூலம் உங்களை கண்ணியப்படுத்தினானோ அவரின் அனந்தரப் பொருள்கள் இவை" என்று கூறுவார்கள். நூல்:- ரூஹுல் ஈமான்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முடிகள், ஆடைகள், காலணிகள், போர்வாள் போன்ற அருள்வளம் பெற்ற பொருள்கள் உலகில் பல இடங்களில் உள்ளன. அவற்றை ஆண்டுக்கு ஓரிருமுறை மக்களின் பார்வைக்கு காட்சிப் பொருள்களாக வைக்கப்படுகிறது. அதை கண்குளிர காணுவதே பெரும் பாக்கியம். அதற்கு உரிய மரியாதை தராமல் இருப்பதே சொர்க்கம் தடை செய்யப்படுவதற்கு காரணமாகிவிடக்கூடும். என்கிறது மேற்காணும் நபிமொழி.

 

உண்மையாகவே இது நபியவர்களுக்கு உரியவை தானா? இவை இத்தனை ஆண்டுகளாக இருப்பது சாத்தியமா? என்றெல்லாம் சந்தேகிப்பதும் சரியல்ல.

 

நமது உயிரிலும் மேலான கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய பொருள்களைக் கண்டு, அதன் பரக்கத்தைப் பெறும் நற்பேற்றை இறைவன் நமக்கு வழங்குவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

 


சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...