நபியவர்களின் கழிவுகளும் புனிதமே!
وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ آيَةَ
مُلْكِهِ أَنْ يَأْتِيَكُمُ التَّابُوتُ فِيهِ سَكِينَةٌ مِنْ رَبِّكُمْ
وَبَقِيَّةٌ مِمَّا تَرَكَ آلُ مُوسَى وَآلُ هَارُونَ تَحْمِلُهُ الْمَلَائِكَةُ
إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
அவர்களின் நபி அவர்களிடம் கூறினார்: அவரது ஆட்சிக்கு அடையாளமாக (அந்தப்) பேழை
(மீண்டும்) உங்களிடம் வரும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து (உங்களுக்கு) மன அமைதி இருக்கும்.
இன்னும் மூசாவின் குடும்பத்தாரும் ஹாரூனின் குடும்பத்தாரும் விட்டுச் சென்றவற்றில்
எஞ்சிய பொருள்களும் அதில் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கைக்
கொண்டவர்களாயிருப்பின், அதில் உங்களுக்குச்
சான்று உள்ளது. திருக்குர்ஆன்:- 2:248
இஸ்லாமியப் பெரும் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களை
கண்ணியப்படுத்தியும், அவர்களின் இறப்புக்குப் பிறகு அவர்களின் நினைவுச்
சின்னங்களை கண்ணியப்படுத்தியும் வாழ்ந்தவர்களே உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் ஆவர்.
ஒரு மனிதனின் உடலில் இரத்தம், நகம், தலைமுடி போன்றவை இருக்கும் வரை அது சுத்தமானது. எப்போது அவன் உடலைவிட்டு அது வெளியேறிவிடுகிறதோ அது அப்போதே அசுத்தமாகிவிடுகிறது. ஆனால், இந்த நிலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பொருந்தாது. நபியவர்களின் உடலில் இருக்கும்போதும் சுத்தமானது. நபியவர்கள் உடலைவிட்டு வெளியேறிய பிறகும் அது சுத்தமானதாகவும் புனிதமானதாகவுமே இருக்கிறது.
இறைத்தூதர்கள் மற்றும் இறைநேசர்கள் பயன்படுத்திய பொருள்களின் மூலம் (பரக்கத் எனும்) அருள்வளம் பெறலாம் என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் நிலைப்பாடு.
நினைவுச் சின்னங்கள்
தலைப்பில் காணும் திருவசனத்தில் குறிப்பிடப்படுகின்ற அந்தப் பேழையில் என்னென்ன
பொருள்கள் இருந்தன என்பது குறித்து திருமறை விரிவுரையாளர்கள் பலரும் கூறியதாவது.
நபி மூசா (அலை) அவர்கள் பயன்படுத்திய செருப்புகள், கைத்தடி ஆடைகள், தௌராத் வேதத்தின் ஒரு
பகுதி, ஹாரூன் (அலை) அவர்களின் தலைப்பாகை, மேலங்கி ஆகும். நூல்:- தஃப்சீர் இப்னு அப்பாஸ், தஃப்சீர் மத்தாரிகுத் தன்ஸீல், தஃப்சீர் பைளாவி
"மூசா (அலை) அவர்களின் குடும்பத்தாரும் ஹாரூன் (அலை) அவர்களின் குடும்பத்தாரும்
விட்டுச் சென்றவற்றில் எஞ்சிய பொருள்கள் அதில் இருக்கும் என்று அவருடைய இறைத்தூதர்
கூறினார்" என்று அல்லாஹ் தெரிவித்துள்ளான்.
(தாபூத்து சகீனா எனும்) இந்த மன அமைதிப் பேழை இஸ்ரவேலர்களின் மிக முக்கியமான பரம்பரைச்
சொத்தாக கருதப்பட்டு வந்தது. அதில் தவ்ராத்தின் அசல் பிரதியும், நபிமார்கள் பயன்படுத்திய பொருள்களும் பாதுகாக்கப்பட்டு வந்தன.
இதை ஒரு வெகுமதியாக அவர்கள் கருதி வந்தனர். இஸ்ரவேலர்களின் கரத்திலிருந்து இந்த பெட்டி
எதிரிகளால் பறிக்கப்பட்டுவிட்டது. அதையே வானவர்கள் மூலம் இறைவன் தாலூத் மன்னர் வசம்
ஒப்படைத்தான். ஆகவே, அவர் இறைவனால் நியமிக்கப்பட்டவர்தாம் என்பதற்கு
இது வலுவான சான்றாக அமைந்தது. பின்னர் இது நபி சுலைமான் (அலை) அவர்களது காலம்வரை இருந்து
வந்தது. )சுலைமான் - அலை அவர்கள் பைத்துல் மக்திஸ் பள்ளிவாசலைப் புதுப்பித்தபோது
அதன் அஸ்திவாரத்தில் இந்தப் பேழையை வைத்து மூடிவிட்டார்கள் என்பது யூதர்களின் யூகமாகும்.( நூல்:- தஃப்சீர் மாஜிதீ
பிரபல திருக்குர்ஆன் விரிவுரையாளர் பேரறிஞர் சுத்தீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
அரசர் தாலூத்தின் வீட்டில் இருந்த அந்த பேழையைப் பார்த்த மக்கள் அதிசயித்து "ஷம்ஊன்"
அவர்களை இறைத்தூதர் என ஏற்றுக்கொண்டு, அரசர் தாலுத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கத் தொடங்கினர்.
தஃப்சீர் இப்னு கஸீர்
கண்ணியப்படுத்துகிறார்கள்
யார் அவர் மீது நம்பிக்கை கொண்டு, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவிபுரிந்து, அவருடன் அருளப்பெற்ற (குர்ஆன் எனும்) ஒளியைப் பின்பற்றுவார்களோ
அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவர். திருக்குர்ஆன்:- 7:157
ஹுதைபியா உடன்படிக்கை நடைபெற்றபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தைக்காக
(அப்போது இறைமறுப்பாளராயிருந்த) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ வந்தார். வந்தவர் நபியவர்களின்
தோழர்களை தம் கண்களால் கூர்ந்து பார்க்கத் தொடங்கினார். பிறகு அவர் தம் தோழர்களிடம்
சென்று, ( أَىْ قَوْمِ، وَاللَّهِ لَقَدْ وَفَدْتُ عَلَى الْمُلُوكِ،
وَوَفَدْتُ عَلَى قَيْصَرَ وَكِسْرَى وَالنَّجَاشِيِّ وَاللَّهِ إِنْ رَأَيْتُ مَلِكًا
قَطُّ، يُعَظِّمُهُ أَصْحَابُهُ مَا يُعَظِّمُ أَصْحَابُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم
مُحَمَّدًا )
"என் சமுதாயத்தாரே! நான் பல அரசர்களிடம் தூதுக் குழுவில்
ஒருவனாகச் சென்றுள்ளேன். (கிழக்கு ரோமானிய மன்னர்) சீசரிடமும், (பாரசீக மன்னர்) கிஸ்ராவிடமும், (அபிசீனிய மன்னர்) நஜாஷியிடமும் தூதுக் குழுவில்
சென்றுள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் தோழர்கள் முஹம்மதுக்கு அளிக்கின்ற
கண்ணியத்தைப் போன்று எந்த அரசருக்கும் அவருடைய தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததே
இல்லை.
மேலும், ( وَاللَّهِ إِنْ تَنَخَّمَ نُخَامَةً إِلاَّ وَقَعَتْ
فِي كَفِّ رَجُلٍ مِنْهُمْ، فَدَلَكَ بِهَا وَجْهَهُ وَجِلْدَهُ، وَإِذَا أَمَرَهُمُ
ابْتَدَرُوا أَمْرَهُ وَإِذَا تَوَضَّأَ كَادُوا يَقْتَتِلُونَ عَلَى وَضُوئِهِ، وَإِذَا
تَكَلَّمَ خَفَضُوا أَصْوَاتَهُمْ عِنْدَهُ، وَمَا يُحِدُّونَ إِلَيْهِ النَّظَرَ تَعْظِيمًا
لَهُ، وَإِنَّهُ قَدْ عَرَضَ عَلَيْكُمْ خُطَّةَ رُشْدٍ، فَاقْبَلُوهَا ) அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால்,
அது அவருடைய தோழர்களில் ஒருவரது கையில்தான் விழும்.
அதை அவர் தமது முகத்திலும் மேனியிலும் தேய்த்துக்கொள்கிறார். அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டால்
அவரது கட்டளையை நிறைவேற்ற அவர்கள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக்கொண்டு முன்வருகிறார்கள்.
அவர் அங்கத்தூய்மை செய்தால் அவர் மிச்சம்வைக்கும் தண்ணீரைப் பெறுவதற்காக, ஒருவரோடொருவர் சண்டையிடும் அளவுக்குச் சென்றுவிடுகிறார்கள்.
அவர் பேசினால், அவரிடம் அவர்கள் தம்
குரல்களைத் தாழ்த்திக்கொள்கிறார்கள். அவரைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அவரைக் கூர்ந்து
(நேருக்கு நேர்) பார்ப்பதில்லை. மேலும், அவர் உங்கள்முன் நல்லதொரு திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார். ஆகவே, அதை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார். நூல்:-
புகாரீ-2731,2732
வியர்வை
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களுக்காக (அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் பொருட்டு) தோல் விரிப்பு ஒன்றை
விரிப்பார்கள். அந்த விரிப்பில் நபியவர்கள் மதிய ஓய்வெடுப்பார்கள். நபியவர்கள் உறங்கிவிட்டால்
அவர்களின் (உடலிலிருந்து வழிகின்ற) வியர்வைத் துளிகளையும் (ஏற்கெனவே தம்மிடமுள்ள) நபியவர்களின்
தலை முடியையும் எடுத்து ஒரு கண்ணாடிக் குடுவையில் சேகரிப்பார்கள். பிறகு அதை வாசனைப்
பொருளில் வைப்பார்கள். (இதையெல்லாம்) நபியவர்கள் உறங்கும்போதே (செய்து முடிப்பார்கள்).
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுமாமா பின் அப்தில்லாஹ் பின் அனஸ் (ரஹ்) அவர்கள்
கூறுகிறார்கள்:
(என் பாட்டனார்) அனஸ் (ரலி) அவர்களுக்கு மரண வேளை நெருங்கியபோது தமது கஃபன் (சவக்கோடி)
துணியில் பூசப்படும் நறுமணத்தில் இந்த நறுமணத்தையும் சேர்த்துக்கொள்ளுமாறு என்னிடம்
இறுதிவிருப்பம் தெரிவித்தார்கள். அவ்வாறே அவர்களின் கஃபனில் பூசப்பட்ட நறுமணத்துடன்
இதுவும் சேர்க்கப்பட்டது. நூல்:- புகாரீ-6281
சிறுநீர்
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் செவிலித்தாய்மார்களின் ஒருவரான உம்மு அய்மன்
(ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒருநாள் இரவு தஹஜ்ஜுத்
தொழுவதற்காக எழுந்தவர்கள் வீட்டிலிருந்த ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழித்திருக்கிறார்கள்.
அது எனக்கு தெரியாது. நான் எழுந்தபோது எனக்குத் தாகமாக இருந்தது. அப்போது அந்தப் பாத்திரத்திலிருந்த
நீரை பருகிவிட்டேன். (காலையில்) சுப்ஹுக்கு எழுந்த நபியவர்கள், ( يَا أُمَّ أَيْمَنَ قُومِي إِلَى تِلْكَ الْفَخَّارَةِ
فَاهْرِيقِي مَا فِيهَا ) "உம்மு அய்மன் அவர்களே! இந்த பாத்திரத்தில் இருப்பதை வெளியே கொட்டிவிடுவீராக!"
என்றார்கள்.
அப்போது நான், ( قَدْ وَاللَّهِ شَرِبْتُ مَا فِيهَا ) "(நாயகமே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை பருகிவிட்டேனே!"
என்றேன். இதை செவியற்ற நபியவர்கள் தமது முத்துப்பற்கள் வெளியே தெரியுமாறு புன்முறுவல்
பூத்தார்கள். பிறகு, ( إِمَّا أَنَّكِ لَا يَفْجَعُ بَطْنُكِ بَعْدَهُ أَبَدًا
) "நிச்சயமாக! இனிமேல் உன்னுடைய வயிற்றுக்கு எந்த நோயும்
நேரிடாது என்று கூறினார்கள். நூல்:- ஹாகிம், அல்முஃஜமுல் கபீர் இமாம் தப்ரானீ, உஸுதுல் ஙாபா, சீரத் நபவிய்யா இமாம் இப்னு கஸீர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிரவில் ஒரு கோப்பையில் சிறுநீர் கழித்துவிட்டு, அந்தக் கோப்பையை தனது படுக்கைக்கு அடியில் வைத்தார்கள். பிறகு
அதைத் தேடினார்கள். அது கிடைக்கவில்லை. எனவே, அந்தக் கோப்பை எங்கே? என்று கேட்டார்கள். அப்போது எத்தியோப்பியாவில் இருந்து வந்த உம்மு சலமா (ரலி)
அவர்களின் பணிப்பெண் "பர்ரத்" என்பவர் அதைப் பருகிவிட்டார்" என்று பதிலளித்தனர்.
நபியவர்கள், ( لَقَدِ احْتَظَرْتِ مِنَ النَّارِ بِحِظَارٍ ) "(பர்ரத் - ரலி அவர்களை நோக்கி!) உம்மை முழுமையாகவே
நரகத்தை விட்டும் பாதுகாத்துக்கொண்டாய்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- (நபியவர்களின்
அடிமை) உமைமா பின்த் ரகீகா (ரலி) அவர்கள் நூல்:- மஜ்மஉஸ் ஸவாயித், அல்கஸாயிஸுல் குப்ரா இமாம் சுயூத்தீ
இரத்தம்
ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களிடம்
வந்தார். அப்போது நபியவர்களுக்கு இரத்தம் குத்தி எடுக்கப்பட்டது. நபியவர்கள்,
( يَا عَبدَ
اللَّهِ اذهَب بِهَذَا الدَّمِ فَأَهرِقهُ حَتَّى لا يَرَاهُ أَحَدٌ ) "அப்துல்லாஹ்! இந்த இரத்தத்தை எடுத்துக்கொண்டு போய் யாரும் பார்க்காதவாறு
கீழே ஊற்றிவிடு!" என்று கூறினார்கள்.
நபிவர்களை விட்டுப் பிரிந்ததும், அவர் அந்த இரத்தத்தைக் குடித்துவிட்டார். நபியவர்கள், ( يَا عَبدَ اللَّهِ مَا صَنَعتَ ؟
) "அப்துல்லாஹ் (அதை) நீ என்ன செய்தாய்?" என்று கேட்டார்கள். அவர், ( جَعَلتُهُ فِي أَخفَى مَكَانٍ ظَنَنتُ أَنَّهُ يَخفَى
عَلَى النَّاسِ )
"மறைவான ஓர் இடத்தில் வைத்துவிட்டேன். நிச்சயமாக
அது மக்களைவிட்டும் மறைவானதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்" என்று கூறினார்.
நபியவர்கள் (அவர் சொல்லும் விதத்தை கேட்டுவிட்டு), ( لَعَلَّكَ شَرِبتَهُ ) "ஒருவேளை நீ அதை குடித்திருப்பாயோ!" என்றார்கள்.
அவர், "ஆம்" என்றார். நபியவர்கள், ( وَلِمَ شَرِبتَ الدَّمَ ؟! وَيلٌ لِلنَّاسِ مِنكَ وَوَيلٌ لَكَ
مِنَ النَّاسِ ) "ஏன் (அந்த) இரத்தத்தைக் குடித்தாய்? உன் மூலம் மக்களுக்கும் மக்களின் மூலம் உனக்கும்
நாசம் உண்டாகட்டும்...!" என்று (இவ்வாறு
செல்லமான திட்டும் விதத்தில்)" கூறினார்கள் . நூல்:- முஸ்னது பஸ்ஸார்,
ஹாகிம், சுனனுல் குப்ரா இமாம் பைஹகீ, தாரீக் திமிஷ்க் இமாம் இப்னு அசாகிர், சியரு அஃலாமுந் நுபலா இமாம் அத்தஹபீ
மற்றொரு அறிவிப்பில், அண்ணல் நபி (ஸல்) அவர்கள்,
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி!
( لَا تُمْسِكَ
النَّارَ ) "நரகம் உன்னை
தீண்டாது" என்று கூறினார்கள். நூல்:- அல்ஜவாமிஉ வல்மஜல்லாது வநஹ்வுஹா ( الْجَوَامِعُ وَالْمَجَلَّاتُ وَنَحْوُهَا )
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களிடம் நீங்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களின்
இரத்தத்தை குடித்துவிட்டீர்கள். அதன் சுவை எப்படி இருந்தது?" என்று கேட்டனர். அதற்கு
அன்னார், "அது தேனின் சுவையுடையதாகவும்,
கஸ்தூரியின் நறுமணமுடையதாகவும் இருந்தது" என்று
பதிலளித்தார்கள். நூல்:- அஷ்ஷிஃபா - காழீ இயாழ்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் உண்ணும் உணவின் காரணமாக, வெளியாகும் கழிவுப் பொருள்களில், மற்றவர்களைப் போல் சற்றும் துர்வாடை இருக்காது. மாறாக, அதில் நறுமணம் கமழும்.
ஒரு மனிதனின் சிறுநீர், இரத்தம் அசுத்தமானதாக இருந்தாலும் அருமை நாயகம்
(ஸல்) அவர்களின் சிறுநீர், இரத்தம் ஆகிய கழிவுகள் அசுத்தமல்ல. அது இந்தச் சமுதாயத்தினருக்கு
நோய் நிவாரணியாகவும், நரக விடுதலை பெற காரணமாகவும் அமைகிறது எனும்போது
இவை அருமை நாயகம் (ஸல்) அவர்களின் தனித்துவத்திற்கு சான்றாகும்.
தலைமுடிகள்
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
("விடைபெறும்" ஹஜ்ஜில்) நாவிதரிடம் தமது தலையின் வலப்பக்கத்தையும் பின்னர்
இடப்பக்கத்தையும் காட்டி, "எடு" என்றார்கள்.
பிறகு அந்த முடியை மக்களிடையே விநியோகிக்க (உத்தரவிடலா)னார்கள். நூல்:- முஸ்லிம்-2510
உஸ்மான் பின் அப்தில்லாஹ் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார்
(ஸல்) அவர்களுடைய துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் என்னை என் குடும்பத்தார்
ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். (உம்மு சலமா ஒரு சிமிழைக்
கொண்டு வந்தார்கள்.) அது வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபியவர்களின் முடிகளில்
ஒரு முடி இருந்தது.
(பொதுவாக யாரேனும்) ஒருவருக்கு கண்ணேறு அல்லது நோய் ஏற்பட்டுவிட்டால், அவர் தமது நீர் பாத்திரத்தை உம்மு சலமா (ரலி) அவர்களிடம்
அனுப்பிவைப்பார். (அவர்கள் தம்மிடமிருந்த நபியவர்களின் முடியைத் தண்ணீருக்குள் முக்கி
அனுப்புவார்கள். அதை நோயாளி குடிப்பார்.) நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன்.
(அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன். நூல்:- புகாரீ-5896
மிகவும் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த யர்மூக் போர்க்களத்தில் காலித் பின் வலீத்
(ரலி) அவர்களின் தலைப்பாகை கீழே விழுந்துவிட்டது. உடனே காலித் (ரலி) அவர்கள் போர் நடைபெற்றுக்
கொண்டிருக்கும்போதே தமது வாகனத்திலிருந்து கீழே இறங்கி குதித்து, அந்த தலைப்பாகை தேடிக்
கண்டுபிடித்து தலையில் அணிந்துகொண்டார்கள்.
இதை பார்த்த பலரும் போர் முடிந்த பிறகு, "மிகவும் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போரின் இடையில் கீழே
விழுந்த தலைப்பாகைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து தேடினீர்களே ஏன்? நீங்கள் கொல்லப்பட்டிருந்தால்
என்ன ஆவது?" என்று கேட்டார்கள்.
அதற்கு காலித் (ரலி) அவர்கள், ( اعْتَمَرَ رَسُوْلُ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ- فَحَلَقَ رَأْسَهُ فَابْتَدَرَ النَّاسُ شَعْرَهُ فَسَبَقْتُهُم إِلَى نَاصِيَتِهِ
فَجَعَلْتُهَا فِي هَذِهِ القَلَنْسوَةِ فَلَمْ أَشْهَدْ قِتَالاً وَهِيَ مَعِي إلَّا
رُزِقْتُ النَّصْرَ )
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்ரா செய்துவிட்டு தங்களின் தலைமுடிகளைக் களைந்தபோது
அவர்களின் கண்ணியமான முடி எல்லோருக்கும் பங்கு வைக்கப்பட்டது. அதில் எனக்கும் ஒரு முடி
கிடைத்தது. நான் அதை என்னுடைய இந்த தலைப்பாகையில் வைத்துக்கொண்டேன். எனவே, இந்த தலைப்பாகையை அணிந்து நான் போர்க்களத்தில் போரிடும்போது
அதன் (பரக்கத்தின்) மூலம் நான் உதவி செய்யப்படுவேனே தவிர, கொல்லப்பட மாட்டேன்" என்று பதிலளித்தாகள். நூல்:- சியரு
அஃலாமுந் நுபலா இமாம் அத்தஹபீ
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் தம்மிடமிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின்
முடிகளை மிகுந்த மரியாதையுடனும், பயபக்தியுடனும் கையாளுவார்கள்.
( وَكَانَ
إذَا مَرِضَ وَضَعَ شَعْرَةً فِى الْمَاءِ ثُمَّ يَشْرَبُهُ فَيَبْرَأُ ) அன்னாருக்கு ஏதேனும் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது
அந்த முடிகளிலிருந்து ஒரு முடியை எடுத்து தண்ணீரில் போடுவார்கள். பிறகு அந்தத் தண்ணீரைப்
பருகி, குணமாகிவிடுவார்கள். இதுவே அன்னாரின் வழமையாகும்.
நூல்:- மனாகிப் இமாம் அஹ்மத்
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமுடி மூன்று
இருந்தன. அன்னார் மரணமடையும் நேரத்தில், ( إِذَا مَاتَ أَنْ يَجْعَلَ عَلَى كُلِّ عَيْنٍ شَعْرَةً
وَأَنْ يَضَعُوا شَعْرَةً عَلَى لِسَانِهِ ) "(நான்) மரணமடைந்துவிட்டால் என்னிடமுள்ள இந்த மூன்று முடிகளில் இரண்டை என் இரண்டு
கண்களிலும், ஒன்றை எனது நாவிலும் வைத்துவிடுங்கள்" என்று
இறுதி விருப்பம் தெரிவித்திருந்தார்கள். ( فَلَمَّا مَاتَ فَعَلُوا ذَلِكَ ) அன்னார் இறந்த பிறகு அவ்வாறே செய்யப்பட்டது. நூல்:- அஃலாமுந் நுபலா
இமாம் அத்தஹபீ
எச்சில் உணவு
அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு
ஏதேனும் உணவு கொண்டு வரப்பட்டால் அதை உண்டுவிட்டு அதில் எஞ்சியதை எனக்கு கொடுத்து அனுப்புவார்கள்.
(அதை நாங்கள் விரும்பி உண்போம்.) நூல்:- முஸ்லிம்-4173
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் சரியாக பேச்சு வராத ஒரு பெண் வந்தார். அப்போது
நபியவர்கள் சுடப்பட்ட இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்,
"எனக்கும் சிறிதளவு உண்ணுவதற்கு தரக் கூடாதா?"
என்று கேட்டார். உடனே நபியவர்கள் தமக்கு முன்னால்
இருந்த உணவிலிருந்து எடுத்துக் கொடுத்தார்கள்.
அதற்கு அந்தப் பெண், "(நாயகமே!) தங்களின் வாயில் உள்ள உணவைத் தவிர வேறெதுவும் எனக்கு
வேண்டாம்" என்று கூறிவிட்டார். உடனே நபியவர்கள் தங்கள் வாயில் உள்ள உணவை வெளியாக்கி,
அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்கள். அந்தப் பெண் அதை தன்னுடைய வாயில் போட்டு சாப்பிட்டு முடித்தார். அப்போதிலிருந்து அவளுடைய நாவின் தடுமாற்றம்
நீங்கிவிட்டது. நூல்:- தப்ரானீ
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதைத்
தூக்கிக்கொண்டு நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது நபியவர்கள் அக்குழந்தைக்கு
இப்ராஹீம் என்று பெயரிட்டுப் பேரீச்சம்பழத்தை மென்று அதன் வாயில் ஊட்டினார்கள். அதனை
வாழ்த்தி, அதற்காக இறைவனிடம் இறைஞ்சினார்கள்.
பின்பு அதனை என்னிடம் தந்துவிட்டார்கள். நூல்:- புகாரீ-5467
நபியவர்கள் மென்று தந்த எச்சில் உணவை நோய் நிவாராணியாகவும், அருள்வளம் பெற்றதாகவும் எண்ணினார்கள்
நாம் கொண்ட அன்பின் காரணமாக தமது தாய், மனைவி, குழந்தைகள் மென்று தந்த உணவுகளைச் சாப்பிடுகிறோம்.
இது அன்பின் வெளிப்பாடு. இதுவே, நபியின்மீது காதல் கொண்ட நபித்தோழர்களின் நிலைபாடு.
முஆவியா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஆடை, சில முடிகள், நகங்கள் ஆகியவற்றை பாதுகாத்து வந்தார்கள். முஆவியா
(ரலி) அவர்கள் தங்கள் இறுதி நேரத்தில், "நபியவர்களின் ஆடையையே
எனக்கு (கஃபன் எனும்) சவக்கோடியாக அணிவியுங்கள். மேலும், நபியவர்களின் முடி மற்றும் நகங்களை என்னுடைய கண்களிலும், கன்னத்திலும், நெற்றியிலும் வையுங்கள். (இதன் மூலம்) அருளாளனான
அல்லாஹ்வுக்கும் எனக்கும் மத்தியில் நேசத்தை ஏற்படுத்துங்கள்" என்று இறுதி விருப்பம்
தெரிவித்தார்கள். நூல்:- இக்மால்
அணிந்த ஆடை
நற்செய்தி கூறுபவர் (யஅகூப்பிடம்) வந்து, அதை (யூசுஃபின் மேலங்கியை) அவரது முகத்தில் போட்டார்.
உடனே அவர் பார்வையுள்ளவராக மாறினார். திருக்குர்ஆன்:- 12:96
இறைத்தூதர் யஅகூப் (அலை) அவர்கள் தமது அருமை மகனார் யூசுஃப் (அலை) அவர்களின் பிரிவை
நினைத்து கண் பார்வையை இழந்தபோது, யூசுஃப் (அலை) அவர்களின்
அருள்வளம் நிறைந்த கண்ணியமான சட்டையை யஅகூப் (அலை) அவர்கள் முகத்தில் போட்டபோது கண்பார்வை
மீண்டும் வந்தது என்கிறது திருக்குர்ஆன்.
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையாக இருந்த அப்துல்லாஹ் பின்
கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. இதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நீளங்கியாகும்.
இது, ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவர்கள் இறக்கும்வரை இருந்துவந்தது.
அவர்கள் இறந்த பின்னர் அதை நான் எடுத்துவைத்துக்கொண்டேன். இதை அருமை நாயகம் (ஸல்) அவர்கள்
அணிந்துவந்தார்கள். பின்னர் நாங்கள் (அருள்வளம் கருதி) இதைத் தண்ணீரில் கழுவி, அதைக்கொண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துவருகிறோம்" என்று கூறினார்கள்.
நூல்:- முஸ்லிம்-4201
சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருபெண் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு போர்வையைக்
கொண்டு வந்து, “(நாயகமே!) நான் எனது கையாலேயே இதை நெய்திருக்கிறேன். இதை உங்களுக்கு
அணிவிக்கவே நான் கொண்டுவந்தேன்” என்றார். அப்போது அந்த ஆடை நபியவர்களுக்கு தேவையாயிருந்ததால்
நபி (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டார்கள்.
பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்துகொண்டு எங்களிடம் வந்தபோது ஒருவர்,
( اكْسُنِيهَا،
مَا أَحْسَنَهَا ) “இது எவ்வளவு அழகாக இருக்கிறது!
எனக்கு இதை நீங்கள் அணியக் கொடுத்துவிடுங்கள்” என்று கேட்டார். (பிறகு, நபியவர்கள் அதை அவருக்குக் கொடுத்துவிட்டார்கள்.)
உடனே அங்கிருந்தோர், “நீர் செய்வது முறையன்று;
நபியவர்களுக்கு அது தேவைப்பட்டதால்தான் அதை அணிந்திருக்கிறார்கள்.
நபியவர்கள், கேட்பவர்களுக்குக் கொடுக்காமலிருக்கமாட்டார்கள்
என்று தெரிந்துகொண்டே நீர் அதை அவர்களிடம் கேட்டுவிட்டீரே” எனக் கூறினார்கள்.
அதற்கு அவர், ( إِنِّي وَاللَّهِ مَا سَأَلْتُهُ لأَلْبَسَهَا إِنَّمَا سَأَلْتُهُ لِتَكُونَ
كَفَنِي ) “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை (சாதாரணமாக) அணிந்துகொள்வதற்காகக்
கேட்கவில்லை; அது எனக்குப் பிரேத
ஆடை (கஃபன்) ஆகிவிட வேண்டும் என்றே கேட்டேன்” என்றார். பின்பு அது அவருக்கு கஃபனாகவே
ஆகிவிட்டது. நூல்:- புகாரீ-1277
அருமை நாயகம் (ஸல்) அவர்களின் புனித மேனியில் பட்ட ஆடை தமக்கு (கஃபன் எனும்) சவக்கோடியாக
அணியப்பட வேண்டும் என்று விரும்பினார். அவரது நோக்கம் நிறைவேறியது.
போர்வை
ஒருமுறை கவிஞர் கஅப் பின் ஸுஹைர் (ரலி) அவர்கள் அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களை
கவிதையால் புகழ்ந்து பாடினார். அப்போது நபியவர்கள் எழுந்து தம்மீது இருந்த
போர்வையை எடுத்து அவருக்கு போர்த்தி அகமகிழ்ந்தார்கள். பிற்காலத்தில் கஅப் (ரலி)
அவர்கள் முக்கியமான விசேஷங்களிலெல்லாம் நபியவர்கள் போர்த்திய அந்தப் போர்வையோடுதான் இவரை பார்க்க முடியும்.
சபையோர் முன்னிலையில் அப்போர்வையைத் தம்மீது போர்த்திவாறு கம்பீரமாக வருவார்.
பலரும் அந்தப் போர்வை நம்மிடம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுவார்கள்.
நபியவர்கள் சார்ந்த எந்தப் பொருள் யாரிடத்தில் இருந்தாலும் அதன் அருள்வளம்
(பரக்கத்) கருதி எவ்வளவு பணம் கொடுத்தாவது அதை வாங்கி விடுவது முஆவியா (ரலி)
அவர்களின் பழக்கமாக இருந்து வந்தது.
ஒருமுறை முஆவியா (ரலி) அவர்கள் கஅப் (ரலி) அவர்களிடமிருந்த அந்தப் போர்வையை
விலைக்கு கேட்டார்கள். ஆனால், அவர் கொடுக்க
மறுத்துவிட்டார்.
கஅப் (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின் அந்தப் போர்வை அவரது வாரிசுகளிடம்
இருந்து வந்தது. அப்போது முஆவியா (ரலி) அவர்கள் அவர்களிடம் அந்தப் போர்வையை
விலைக்கு தருமாறு கேட்டபோது, அவர்கள்
சம்மதித்தனர. எனவே, முஆவியா (ரலி)
அவர்கள் 20 ஆயிரம் வெள்ளிக்காசுகள் கொடுத்து
அதை வாங்கி கொண்டார்கள்.
முஆவியா (ரலி) அவர்களுக்கு பின் அவர்கள் வழிவந்த கலீஃபாக்கள் அனைவரும் அதை
பெருநாள் அன்று தொழுகைக்கு வரும்போது போர்த்திக் கொள்வார்கள். பனூ உமைய்யா, உஸ்மானியா என்று
வரிசையாக வந்த கலீபாக்கள் அத்தனைபேரும் அந்தப் போர்வையைப் போர்த்தி வந்தார்கள்.
கண்காட்சி
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களின்
திருமுடியை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, "எவரேனும் எனது முடிகளிலிருந்து ஒரு முடிக்கேனும் அவமரியாதை செய்வாரேயானால்,
அவருக்கு சொர்க்கம் தடை செய்யப்பட்டதாக (ஹராமாக)
ஆகிவிடும்" என்று கூறினார்கள். நூல்:- இப்னு அசாகிர், ஜாமிஉஸ் ஸஙீர் இமாம் சுயூத்தீ
ஜனாதிபதி உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களிடம் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின்
இரு காலுறைகள், ஒரு கைத்தடி, ஒரு வாளுறை ஆகியவை இருந்தன. அவற்றை அவர்கள் மிகக்
கண்ணியத்தோடு பாதுகாத்து அவற்றை தினமும் பார்வையிடவும் செய்வார்கள். சிறப்பு விருந்தினர்கள்
யாராவது வருகை தரும்போது "அல்லாஹ் யார் மூலம் உங்களை கண்ணியப்படுத்தினானோ அவரின்
அனந்தரப் பொருள்கள் இவை" என்று கூறுவார்கள். நூல்:- ரூஹுல் ஈமான்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முடிகள், ஆடைகள், காலணிகள், போர்வாள் போன்ற அருள்வளம் பெற்ற பொருள்கள் உலகில்
பல இடங்களில் உள்ளன. அவற்றை ஆண்டுக்கு ஓரிருமுறை மக்களின் பார்வைக்கு காட்சிப் பொருள்களாக
வைக்கப்படுகிறது. அதை கண்குளிர காணுவதே பெரும் பாக்கியம். அதற்கு உரிய மரியாதை தராமல்
இருப்பதே சொர்க்கம் தடை செய்யப்படுவதற்கு காரணமாகிவிடக்கூடும். என்கிறது மேற்காணும்
நபிமொழி.
உண்மையாகவே இது நபியவர்களுக்கு உரியவை தானா? இவை இத்தனை ஆண்டுகளாக இருப்பது சாத்தியமா? என்றெல்லாம் சந்தேகிப்பதும் சரியல்ல.
நமது உயிரிலும் மேலான கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய பொருள்களைக்
கண்டு, அதன் பரக்கத்தைப் பெறும் நற்பேற்றை இறைவன் நமக்கு வழங்குவானாக!
ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951