Search This Blog

Friday, 22 December 2023

குண்டக்க… மண்டக்க…

குண்டக்க மண்டக்க

 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ

 

இறைநம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கு தரும். திருக்குர்ஆன்:- 5:101

 

இறைவனின் படைப்பினங்களில் மனிதன் மட்டும்தான் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவன். எனவே, அந்த சிந்தனையை கொண்டு மனிதன் நன்மை தீமைகளை பிரித்தெரிய கேள்வி எழுப்புகிறான். மேலும், கேட்பதன் மூலமாகவே தெளிவு பெறுகிறான். எனவே, கேள்வி கேட்பது நல்ல விஷயம் தான். அதற்காக, குண்டக்க மண்டக்க கேள்வி மேல் கேள்வி எழுப்பிக் கொண்டே இருப்பது சிறந்ததல்ல.

 

விதண்டாவாதம் செய்வதற்காகவே சிலர் கேள்வி கேட்பார்கள். கிண்டலுக்காக சிலர் கேள்வி கேட்பார்கள். இன்னும் சிலரோ ஒன்றுமே தெரியாத மாதிரி கேள்வி கேட்பார்கள். இவ்வாறு கேள்வி கேட்பவர்கள் பல ரகம்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلاَفِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ ) உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (தேவையற்ற அதிகமாகக்) கேள்வி கேட்டதும், அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-7288, முஸ்லிம்

 

முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْغَلُوطَاتِ ( ‏ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில்) தவறான கேள்விகள் கேட்பதை தடைச் செய்தார்கள். நூல்:- அபூதாவூத்-3171, முஸ்னது அஹ்மத், தப்ரானீ

 

சிரமமாகிவிடும்

 

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. "மக்களில் அங்கு சென்று வர சக்தியுள்ளோர் அல்லாஹ்விற்காக அவ்வில்லத்தை ஹஜ் செய்வது கடமையாகும்" (திருக்குர்ஆன்:- 3:97) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது, மக்கள் ஒவ்வொரு ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்)? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டார்கள். அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். மக்கள் (மீண்டும்), (ஒவ்வொரு ஆண்டிலுமா ஹஜ் செய்ய வேண்டும்) அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டபோது, நபியவர்கள், இல்லை என்று கூறிவிட்டு, ( وَلَوْ قُلْتُ نَعَمْ لَوَجَبَتْ ) "நான் ஆம் என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வொரு ஆண்டிலும்) கடமையாகிவிடும்" என்று கூறினார்கள். அப்போதுதான் தலைப்பில் காணும் திருவசனம் அருளப்பெற்றது. நூல்:- திர்மிதீ-742, இப்னுமாஜா-2875, தாரகுத்னீ, ஹாக்கிம், முஸ்னது அஹ்மத்

 

குறும்புத்தனமான கேள்விகள்   

 

ஒருமுறை நபிமொழித்துறை நிபுணராகவும், நபிமொழிகளின் அறிவிப்பாளராகவும், சட்ட மேதையாகவும், மூத்த தாபியீன்களில் ஒருவராகவும் வாழ்ந்த இமாம் ஷஅபீ (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, ( هَلْ يَجُوزُ لِلْمُحْرِمِ أَنْ يَحُكَّ بَدَنَهُ؟ ) "இஹ்ராம் ஆடை அணிந்த பிறகு சொறியலாமா?" என்று கேட்டார். ஷஅபீ (ரஹ்) அவர்கள் ( نعم ) “ஆம்! (சொறியலாம்)” என்று பதிலளித்தார்கள். பிறகு வந்தவர், ( مِقْدَارَ كَمْ؟ ) "எது வரைக்கும் சொறியலாம்?" என்றார். ஷஅபீ (ரஹ்) அவர்கள், ( حَتَّى يَبْدُوَ الْعَظْمُ ) "எலும்பு தெரியும்வரை சொறியலாம்" என்று பதிலளித்தார்கள். நூல்:- அத்தத்கிரத்துல் ஹம்தூனிய்யா இமாம் இப்னு ஹம்தூன் ( التَّذْكِرَةُ الْحَمْدُونِيَّةُ ابْنُ حَمْدُونَ )

 

ஒருவர் ஷஅபீ (ரஹ்) அவர்களிடம், ( فَمَا تَقُولُ فِي الذُّبَانِ؟ ) "ஈக்களை (உண்ணுவதைப்) பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அன்னார், ( إِنْ اشْتَهَيَتَهُ فَكُلْهُ ) "உனக்கு ஆசையாக இருந்தால் அதை சாப்பிடு" என்று பதிலளித்தார்கள். நூல்:- உயூனுல் அஹ்பார் - இமாம் இப்னு குதைபா

 

ஷஅபீ (ரஹ்) அவர்களிடம் "ஷைத்தானின் இறைச்சியை (உண்ணுவதைப்) பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அன்னார், ( نَحْنُ نَرْضَى مِنْهُ بِالْكَفَافِ ) "எங்களிடம் உள்ள வாழ்வாதாரத்தை கொண்டு நாங்கள் திருப்தி கொள்கிறோம். (அது எங்களுக்கு தேவையில்லை.)" என்று பதிலளித்தார்கள். நூல்:- உயூனுல் அஹ்பார் - இமாம் இப்னு குதைபா

 

ஷஅபீ (ரஹ்) அவர்களும் அன்னாரின் மனைவியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த ஒருவர், ( أَيُّكُمْ الشَّعْبِيُّ؟ ) "உங்களில் ஷஅபீ யார்?" என்று கேட்டார். உடனே ஷஅபீ (ரஹ்) அவர்கள், ( فَأَشَارَ إِلَى زَوْجَتِهِ وَقَالَ: هَذَا ) இதோ இவர் என்று, தமது மனைவியின் பக்கம் கைக்காட்டினார்கள். நூல்:- நூல்:- உயூனுல் அஹ்பார் இமாம் இப்னு குதைபா

 

ஷஅபீ (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, “(ஷைத்தான்களின் தலைவன்) இப்லீஸின் மனைவி பெயர் என்ன?” என்று கேட்டார். ஷஅபீ (ரஹ்) அவர்கள், ( ذَاكَ نِكَاحُ مَا شَهِدْنَاهُ ) "நாம் தான் அந்த திருமணத்தில் கலந்துக்கொள்ளவில்லையே! (எனவே, அவளின் பெயர் தெரியாது.) என்று பதிலளித்தார்கள். நூல்:- உயூனுல் அஹ்பார் இமாம் இப்னு குதைபா

 

ஷஅபீ (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து "நான் ஒரு பெண்ணை மணமுடித்தேன். ஆனால், அவள் நொண்டியாக இருக்கிறாள். எனவே, அவளை நான் தலாக் சொல்லிவிடலாமா? என்று கேட்டார். ஷஅபீ (ரஹ்) அவர்கள், "நீ அவளை வைத்து ஓட்டப்பந்தயம் நடத்துவதாக இருந்தால், அவளுக்கு தலாக் சொல்லிவிடு. அப்படி இல்லையெனில் நீ அவளோடே வாழு!" என்று பதிலளித்தார்கள்.

 

பேரறிஞர் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, ( اذَا نَزَعْتَ ثِيَابِي وَدَخَلْتُ النَّهْرَ لِأَغْتَسِلَ، فَإِلَى الْقِبْلَةِ أَفْضَلُ أَتَوَجَّهُ أَمْ إِلَى غَيْرِهَا؟ ) "நான் எனது ஆடைகளைக் களைந்துவிட்டு ஆற்றில் இறங்கி குளிக்கும்போது, நான் கிப்லா திசையை முன்நோக்குவதா? அல்லது வேறு திசையை முன்நோக்குவதா?  எது சிறந்தது?"  என்று கேட்டார். அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள், ( الْأَفْضَلُ أَنْ يَكُونَ وَجْهُكَ إِلَى ثِيَابِكَ الَّتِي تَنْزِعُهَا لِئَلَّا تَسْرِقَ ) "(கழட்டிய உனது ஆடைகள்) திருடப்படாமல் இருப்பதற்கு, நீ கழற்றுகிற ஆடைகளுக்கு நேராக உன் முகம் இருப்பது நல்லது" என்றார்கள். நூல்:- அத்தத்கிரத்துல் ஹம்தூனிய்யா இமாம் இப்னு ஹம்தூன் ( التَّذْكِرَةُ الْحَمْدُونِيَّةُ ابْنُ حَمْدُونَ )

 

இமாம் அம்ர் பின் கைஸ் (ரஹ்) அவர்களிடம் ஒருவர், "ஸுஜூத் செய்யும்போது ஆடையிலோ நெற்றியிலோ ஒட்டிக்கொண்டிருக்கும் பொடிக்கற்களை என்ன செய்வது?” என்று கேட்டார்.

இமாம்: கையில் எடுத்து வெளியே வீசிவிடு!

அவர்: மீண்டும் பள்ளிவாசலுக்குள் செல்லும்வரை அவை அழுதுகொண்டே இருக்கும் என்று சொல்கிறார்களே?.

இமாம்: தொண்டை கிழியும் வரை அவை அங்கேயே கிடந்து அழட்டும்!.

அவர்: கற்களுக்கு தொண்டை உண்டா?

இமாம்: தொண்டை இல்லாமல் அழுகை எப்படி வரும்?

 

நகைச்சுவை உணர்வுள்ள நமது இமாம்கள், குறும்புத்தனமான கேள்விகளுக்கு குறும்புத்தனமாகவே பதிலளித்துள்ளார்கள்.

 

பழச்சாறு தானே!

 

ஒருமுறை பசராவின் நீதிபதி இயாஸ் பின் முஆவியா (ரஹ்) அவர்களிடம் ஒரு ஊர் தலைவர் வந்து, "மது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?" என்று கேட்டார். இயாஸ் (ரஹ்) அவர்கள் மது ஹராம் என்றார். அதற்கு ஊர் தலைவர், “பழத்தைப் பிழிந்து அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதை அடுப்பில் வைத்து சூடேற்றுகிறோம். அதெப்படி ஹராம் என்கிறீர்கள்? (பழத்தையும் தண்ணீரையும் தனித் தனியாக சாப்பிட்டால் கூடும் என்கிறீர்கள்.  இவை இரண்டையும் சூடேற்றிக் குடித்தால் ஹராம் என்கிறீர்கள்)” என்று விதண்டாவாதமாக கேள்வி கேட்டார்.

 

இயாஸ் (ரஹ்) அவர்கள், ( لَوْ أَخَذْتَ كَفًّاً مِنْ مَاءٍ فَضَرَبْتُكَ بِهِ، كَانَ يُوجِعُك ) “ஒரு கையளவு தண்ணீர் எடுத்து அந்த தண்ணீரால் உங்களை அடித்தால் வலிக்குமா?” என்றார். அதற்கு அவர், “வலிக்காது” என்றார். மீண்டும் இயாஸ் (ரஹ்) அவர்கள், (  لَوْ أَخَذْتَ كَفًّاً مِنْ تُرَابٍ فَضَرَبْتُكَ بِهِ، أَكَانَ يُوجِعُكَ ) “உங்கள் மீது ஒரு பிடி மண்ணை தூக்கி வீசினால் வலிக்குமா?” என்று கேட்டார். அதற்கும் அவர், “வலிக்காது” என்றார். மீண்டும் இயாஸ் (ரஹ்) அவர்கள், ( فَأَخَذْتَ كَفَّ تِبْنَ فَضَرَبْتُكَ بِهِ، أَكَانَ يُوجِعُكَ ) “உங்கள் மீது ஒருபிடி வைக்கோலை தூக்கி வீசினால் வலிக்குமா?” என்று கேட்டார். அதற்கும் அவர், “வலிக்காது” என்றார். இயாஸ் (ரஹ்) அவர்கள் ( فَأَخَذْتُ التُّرَابَ، ثُمَّ طَرَحْتْ عَلَيْهِ التِّبْنَ، وَصَبَبْتُ عَلَيْهِ الْمَاءَ، ثُمَّ كَمَزْتُهُ كَمَزًاً، وَجَعَلْتُهُ فِي الشَّمْسِ، ثُمَّ ضَرَبْتُكَ بِهِ، أَكَانَ يُوجِعُكَ ) "கொஞ்சம் மண் மற்றும் சிறிதளவு வைக்கோல் எடுத்து தண்ணீர் விட்டு கலந்து முறையாக குலைத்து கெட்டியாக்கி வெயிலில் நன்றாகக் காயவைத்து (செங்கலாக்கி) அதை எடுத்து உங்கள் மீது வீசினால் வலிக்குமா?" என்று கேட்டார். அதற்கு அவர், ( نَعَمْ، وَيَقْتُلُنِي ) “ஆமாம்! நான் செத்தேப்போவேன்” என்றார்.

 

இயாஸ் (ரஹ்) அவர்கள், ( فَكَذَاكَ هَذَا؛ حِينَ جَمَعْتْ أَخْلَاطَهُ وَخَمْرَ حَرُمَ ) “இவைகள் ஒன்றாகக் கலக்கப்பட்டுவிட்டாலே இதுபோன்று தான். (இவைகளின் கலவையான) மது ஹராம் ஆகும்" என்று கூறினார் நூல்:- தாரீக் திமிஷ்க் இமாம் அசாகிர், அக்பாருல் குளாத்-1/349 (நீதிபதிகளின் செய்திகள்)

 

அதாவது, பழமும் தண்ணீரும் தனித்தனியாக இருக்கின்றபோது அதன் சட்டம் வேறு. அது இரண்டையும் ஒன்று சேர்த்து சூடாக்கி மதுவாக தயாரிக்கப்படுகின்றபோது அதன் சட்டம் வேறாகிவிடுகிறது" என்று கூறினார்.

 

நாத்தீக சிந்தனை

 

ஒருநாள் ஒரு மார்க்க அறிஞர் மற்றும் தோழர்களில் சிலரும் மருத்துவனையில் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்த ஒருவரை சந்திக்கச் சென்றனர். அவர் வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் இதைப் பார்த்த மார்க்க அறிஞர், "நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம்" எனக் கூறி, மனமுருக அவருக்காக பிரார்த்தித்தார். அங்கிருந்த நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து இறைவனிடம் பிரார்த்திக்க தொடங்கினார்கள்.

 

பிறகு அந்த மார்க்க அறிஞர் நோயாளியை நோக்கி! "இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டியிருக்கிறார்கள். இறைவனின் அருளால், உங்களுக்கு உடல்நிலை சரியாகிவிடும்" எனக் கூறினார்.

 

அப்போது அருகில் இருந்த ஒரு நாத்திகன் மார்க்க அறிஞர் சொன்னதைக் கேட்டதும் அவன் சிரிக்கத் தொடங்கினான். உடனே, அவன், "வெறும் வார்த்தைகள் போய் அவரைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?" எனக் கேட்டான்.

 

அதற்கு அந்த மார்க்க அறிஞர், "இந்தக் கூட்டத்திலேயே மிகப்பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்" எனச் சொன்னார். இதைக் கேட்டதும் அவன் வெகுண்டுடெழுந்து, "நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையென்றால் உங்களை அடித்துவிடுவேன்" என்றபடி அடிக்கப் பாய்ந்தான்.

 

பதற்றமே இல்லாத அந்த மார்க்க அறிஞர், "முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள்தானே, அவை உங்களை இப்படி மாற்றிவிட்டதே, எப்படி? இந்தச் சொற்கள் உங்களைத் தூண்ட முடியுமென்றால், நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியாதா?" என்றார். இதைக் கேட்ட அவன் வெட்கித் தலை குனிந்தான்.

 

நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவேதான் இஸ்லாம் 'நல்லதையே நினை! நல்லதையே பேசு! என்கிறது.  

 

பள்ளிவாசல் இமாமுக்கு சோதனை

 

ஒரு ஆலிமிடம் ஒரு பெண் வந்து, "ஹள்ரத் ஷைத்தானுக்கு சாப்பாடு கொடுப்பதாக நேர்ச்சை செய்துள்ளேன். நீங்கள் தான் ஷைத்தானை காட்டவேண்டும்" என்றாள். அதற்கு அவர், "என்னடா, எனக்கு வந்த சோதனை?" என்று எண்ணியவராக யோசித்துக்கொண்டேயிருந்தபோது திடீரென அவர், "பெண்ணே! நீ பாங்கு சொல்லும் நேரத்தில் பள்ளிவாசலுக்கு சென்று அங்கு பாங்கு சொல்லி முடித்தவுடன் பள்ளிவாசலைவிட்டும் எவன் வெளியேறுகிறோனோ அவனை பிடித்துக்கொண்டு போய் சாப்பாடு கொடு! அவன் ஷைத்தான்" என்று கூறினார்.

 

அவள் பாங்கு சொல்லும் நேரத்தில் பள்ளிவாசலுக்கு சென்று காத்திருந்தாள். அப்போது ஒருவர் பாங்கு சொல்லி முடித்தவுடன் பள்ளிவாசலைவிட்டும் வேகமாக வெளியேறினார். உடனே அவள் அவரை நோக்கி, "உங்களைத்தான் சாப்பிடுவதற்கு அழைத்து செல்ல காத்திருக்கிறேன்" என்றாள். நம்மை விருந்துக்கு அழைத்து செல்ல ஒரு பெண் காத்திருக்கிறாளே என்று அவருக்கோ மிகவும் பெருமிதம். பிறகு அவர் அதற்குரிய காரணத்தை அவளிடம் கேட்டார். அவள் நடந்தவற்றை விவரித்தாள். அவர் அதை செவியுற்றபோது வந்ததே கோபம். அப்பப்பா...

 

ஒரு அறிஞர் சொர்க்கத்தைப் பற்றி விரிவாக சொற்பொழிவு ஆற்றினார். அப்போது ஒருவர் அந்த அறிஞரிடம் வந்து, "ஹள்ரத்! சொர்க்கத்தில் ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கும் என்றீர்கள். அங்கே பீடி, சிக்ரெட் வேண்டும் என்று ஆசைப்பட்டால் கிடைக்குமா? என்று நக்கலாக வினவினார். அறிஞர், “விரும்பினால் அங்கே பீடி, சிக்ரெட்டும் கிடைக்கும். ஆனால், அதைப் பற்றவைக்க நரகம் தான் போகவேண்டும் சரியா?” என்று கூறி, கேட்ட கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்தார்.

 

சிந்திக்காதீர்கள்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( تَفَكَّرُوا في خَلْقِ اللَّهِ، ولا تَفَكَّرُوا في اللَّهِ فَتَهْلَكُوا ) அல்லாஹ்வின் படைப்பைப் பற்றி சிந்தியுங்கள். ஆனால், அல்லாஹ்வைப் பற்றி  சிந்திக்காதீர்கள். (அவ்வாறு நீங்கள் சிந்தித்தால்) அழிந்துப்போவீர்கள். அறிவிப்பாளர்:- அபூதர் (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்  அந்நஜ்ம் வசனம்-42

 

ஜஅஃபர் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நாங்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் சபையில் அமர்ந்திருந்தபோது, ஒருவன் வந்து இமாமவர்களிடம், ( يَا أَبَا عَبْدِ اللَّهِ "الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى"  كَيْفَ اسْتَوَى؟،  ) "அபூ அப்துல்லாஹ் அவர்களே! அல்லாஹ் (அரியணை எனும்) அர்ஷின் மேல் உயர்ந்திருக்கிறான். (20:5 என்கிறது குர்ஆன். அப்படியென்றால் அல்லாஹ்) எவ்விதமாக உயர்ந்திருக்கிறான்?" என்று கேள்வி கேட்டான்.

 

அதற்கு இமாமவர்கள்( الِاسْتِوَاءُ مَعْلُومٌ، وَالْكَيْفَ مَجْهُولٌ، وَالْإِيمَانُ بِهِ وَاجِبٌ، وَالسُّؤَالُ عَنْهُ بِدْعَةٌ ) "அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்திருக்கிறான் என்பது அறியப்பட்ட விஷயம். எப்படி உயர்ந்திருக்கிறான் என்பது அறியப்படாத விஷயம். அதை (அப்படியே) நம்பிக்கை கொள்வது கட்டாயமாகும். அது பற்றி கேள்வி கேட்பது (நூதனம் எனும்) பித்அத் ஆகும்" என்றார்கள். மேலும் இமாமவர்கள், ( وَاَظُنُّكَ صَاحِبُ بِدْعَةٍ ) "உன்னை ஒரு பித்அத்வாதியாக கருதுகிறேன்" என்று கூறி, பின்னர் அவனை அந்த அவையில் இருந்து வெளியேற்ற கட்டளையிட்டார்கள். அவ்வாறே அங்கிருந்து அவன் வெளியேற்றப்பட்டான். நூல்:- ஹில்யத்துல் அவ்லியா - 6/325 இமாம் அபூநயீம், அல்அஸ்மாஉ வஸ்ஸிஃபாத் இமாம் பைஹகீ, மஅல் அஇம்மா அஷ்ஷைக் சல்மான் அல்அவ்தா

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் அழகிய பெயர்களையும் பண்புகளையும் குறித்து எவ்வாறு கற்றுத் தந்தார்களோ, அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும். மாறாக, நாமாக அதற்கு ஒரு விளக்கம் கூறக் கூடாது.

 

அல்லாஹ்வின் படைப்புக்களைப் பற்றி சிந்திக்கலாம்; கேள்வி கேட்கலாம். மாறாக, அல்லாஹ்வின் வல்லமை பற்றி சிந்திக்கவும் கூடாது; கேள்வி கேட்கவும் கூடாது. அவ்வாறான, சிந்தனையும் கேள்வியும் நமது இறைநம்பிக்கையை ஆட்டம் காண வைத்துவிடும்.

 

யார்? எதைப் பற்றி கேட்பது?

 

அப்துர் ரஹ்மான் பின் அபீநுஅம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர், "(இஹ்ராம் கட்டியவர்) கொசுக்களைக் கொன்றுவிட்டால் பரிகாரம் என்ன?" என்று கேட்டார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ( مِمَّنْ أَنْتَ )  "நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?" என்று கேட்டார்கள். அவர், "நான் இராக்வாசி" என்று பதிலளித்தார்.

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (தம்மருகில் இருந்தவரிடம்), ( انْظُرُوا إِلَى هَذَا، يَسْأَلُنِي عَنْ دَمِ الْبَعُوضِ وَقَدْ قَتَلُوا ابْنَ النَّبِيِّ صلى الله عليه وسلم )  “இவரைப் பாருங்கள். கொசுக்களைக் கொன்றால் பரிகாரம் என்ன? என்று இவர் என்னிடம் கேட்கிறார். ஆனால், (இராக்வாசிகளான) இவர்களோ அண்ணல் நபி (ஸல்) அவர்களுடைய புதல்வி (ஃபாத்திமா - ரலி அவர்களுடைய) புதல்வரைக் கொன்று விட்டார்கள். (ஆனால்) நபியவர்கள், ( هُمَا رَيْحَانَتَاىَ مِنَ الدُّنْيَا )  "(ஹசன், ஹுசைன் ஆகிய) அவர்கள் இருவரும் உலகில் இரு துளசி மலர்கள் ஆவர்" என்று (பாராட்டிக்) கூறக் கேட்டேன் என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5994

 

ஹஜ் அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியுள்ள ஒருவர் கொசுவைக் கொல்வது தகுமா? அல்லது தகாதா? என்று இராக்கியர் ஒருவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் வினவினார். ஆனால், இதை இராக்கியர் (கூஃபாவாசிகள்) தான் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் பேரர் ஹுசைன் (ரலி) அவர்களைக் கொலை செய்தனர். நபியவர்களின் அளப்பரிய பாசத்தைப் பெற்ற ஹுசைன் (ரலி) அவர்களைக் கொலை செய்கையில் அந்தக் கடுமையான குற்றத்தைப் பற்றி யோசிக்காத இவர்கள், சின்னச் சின்னப் பிரச்சனைகள் குறித்து துருவி ஆராய்கின்றார்கள் என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வியப்புத் தெரிவித்தார்கள்.

 

அதாவது சிலர், பெரிய தவறுகளைக்கூட எந்த உறுத்தலுமின்றி செய்து விடுகின்றனர். அதைப்பற்றி கண்டு கொள்வதில்லை. ஆனால், அவர்களே ஏதேனும் சின்னஞ்சிறு தவறு செய்துவிட்டால் அது எந்தளவு மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று கேள்வி கேட்கின்றனர். அவர்கள் தங்களை நல்லவர்கள் போல் காட்டிக்கொள்ள எண்ணுகிறார்கள்.

 

ஒருமுறை ஃபாரசீக அறிஞர் முல்லா நஸ்ருதீன் அவர்களிடம் ஒருவர் வந்து, “ஹளரத் நான் புதிதாக திருமணமானவன். நோன்பு வைத்திருக்கும்போது காலை நேரத்தில் வேலைக்கு செல்லும்போது மனைவியை முத்தமிட்டால் குற்றமா?” என்று கேட்டார்.

 

முல்லா அவர்கள், “இல்லை” என்றார்.

அவர், "மதியம் வீடு திரும்பியதும் முத்தமிட்டால்?” என்றார்.

முல்லா அவர்கள், “அதுவும் பிரச்சனை இல்லை!” என்றார்.

அவர், திரும்ப வேலைக்குச் செல்லும்போது?” என்றார்.

 

உடனே முல்லா அவர்கள் கோபம் கொண்டவராக “அவளென்ன ஹஜருல் அஸ்வதா? ஒவ்வொரு சுற்றின்போது முத்தமிட?" என்று கூறியவாறு, அவனை அடிப்பதற்கு ஒரு தடியை எடுத்துக்கொண்டு துரத்தினார்.

 

எது முதலில்

 

பேரறிஞர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களிடம் ஒருவர் கூட்டுத் தொழுகையின்போது முதல் வரிசையில் வலப்பக்கமாக நின்று தொழுவது சிறந்ததா? அல்லது இடப்பக்கமாக நின்று தொழுவது சிறந்ததா?" என்று வினவினார்.

 

அன்னார், "நீ உண்ணும் உணவு (ஹலால் எனும்) அனுமதிக்கப்பட்ட வழியின் மூலம் கிடைத்ததா? அல்லது (ஹராம் எனும்) தடைச்செய்யப்பட்ட வழியின் மூலம் கிடைத்ததா? என்பதில் கவனம் செலுத்துவீராக! அவ்வாறெனில் வரிசையில் எங்கு நின்று தொழுதாலும் பிரச்சனை இல்லை. சில சமயங்களில் எங்கு தொழ வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பாய். ஆனால், அந்த வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு காரணமாக அமையும் உணவு குறித்து கவனம் செலுத்தி இருக்கமாட்டாய்" என்று விளக்கமளித்தார்கள்.

 

தொழுகை போன்ற வணக்கத்தில் ஈடுபடும் ஒருவர் அதன் நிபந்தனைகளை அடிபிசகாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. நல்ல விஷயம் தான். ஆனால், அந்த வணக்கம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில் உண்ணும் உணவு அனுமதிக்கப்பட்ட முறையில் வந்திருக்க வேண்டுமல்லவா? இதில் தானே முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இந்நிகழ்வின் கருத்து.

 

தவறான முறையில் சம்பாதித்ததை உண்டுவிட்டு, முதல் வரிசையில் நின்று தொழுவதால் என்ன பயன் ஏற்படப்போகிறது? என்பதை சற்று யோசிக்கவேண்டும்.

 

தண்டனை

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் காலத்தில் ஸபீக் ( صبيغ ) என்ற ஒருவர் இருந்தார். அவர் தேவையில்லாத விஷயங்கள் குறித்து கேள்வி கேட்டு வந்தார். (முத்தஷாபிஹாத் எனும்) கருத்து சிக்கலான வசனங்கள் குறித்து எல்லோரிடமும் கேட்டு மக்களுக்கு மத்தியில் குழப்பமூட்டி வந்தார். இது உமர் (ரலி) அவர்களுக்குத் தெரிந்தது. அவரை அழைத்து வரச் சொன்னார்கள். உலராத ஈரமான பேரிச்சம் மட்டைகளை தயார் செய்து வைத்திருந்தார்கள்.

 

அவர் வந்ததும், "நீ யார்? எனக் கேட்டார்கள். அதற்கு அவர், "நான் அல்லாஹ்வின் அடிமை" என்று கூறினார். உமர் (ரலி) அவர்கள், "உமராகிய நானும் அல்லாஹ்வின் அடிமை ஆவேன்" என்று கூறிவிட்டு, பிறகு பேரிச்சம் மட்டையால் அவரது தலையில் அடித்தார்கள். அதனால் காயமாகி இரத்தம் அவரது முகத்தில் வழிந்தோடியது. அப்போது அவர், "ஜனாதிபதி அவர்களே! போதும்! என் சிந்தனையில் இருந்த தவறான அனைத்தும் வெளியேறிவிட்டது" என்று கூறினார். (மற்றொரு அறிவிப்பில் அவர், "இப்போது நான் திருந்திவிட்டேன்; என்னை விட்டு விடுங்கள்" என்று கூறினார்.) நூல்:- தாரிமீ-146

 

"அடி உதவுவதைப் போல், அண்ணன் தம்பி கூட உதவமாட்டான்" என்பது கிராமத்து சொல்வழக்கு

 

காயப்படுத்தும் கேள்விகள்

 

இமாம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். உன்னுடைய சகோதரரை நீ சந்தித்தால் அவரிடம் நீ எங்கிருந்து வருகிறாய்?  எங்கே செல்லப்போகிறாய்? என்று கேட்க வேண்டாம். நூல்:- முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-26640

 

பிறரின் கஷ்டங்களை வெளியாக்கும், ஒழுக்கமற்ற கேள்விகள் சில உள்ளன. இவ்வாறான கேள்விகளை நம்முடைய வாழ்வில் ஒருபோதும் எவரிடமும் கேட்காமல் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

 

1) வேலையை தேடிக்கொண்டிருப்பவரிடம், எப்போது வேலைக்கு செல்லப்போகிறீர்கள்? என்று வினவுவது.

2) திருமண வரனை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்ணிடம், திருமண பேச்சு ஏதும் நடக்கிறதா? என்று வினவுவது.

3) குழந்தையற்றவர்களிடம், எப்போது நல்ல செய்தி சொல்லப்போகிறீர்கள்? என்று வினவுவது.

4) வசதியின்றி வாடகை வீட்டில் வசிப்பவர்களிடம், சொந்த வீடு எப்பொழுது வாங்கப்போகிறீர்கள் என்று வினவுவது.

5) வண்டி வாங்க வசதியில்லாதவரிடம், எப்பொழுது வண்டி வாங்கப்போகிறீர்கள் என்று வினவுவது.

 

இதுபோன்று பிறரிடம் கேள்வி கேட்பதை முற்றிலும் தவிர்த்துகொள்ள வேண்டும்.

 

நம்முடைய பொறுப்பற்ற இவ்வாறான கேள்விகள் பிறருக்கு கடும் மன உளைச்சலையும், மன சங்கடத்தையும் ஏற்படுத்திவிடும். நிச்சயமாக இவ்வாறான கேள்விகள் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிடுகிறது.

 

எவர்களுக்கு தங்களின் பிரச்சனைகளும், கஷ்டங்களும் தீர்ந்துவிடுகின்றதோ அவர்கள் பிறரின் வாழ்க்கையை அலசி ஆராய்கிறார்கள். இது முற்றிலும் பொருத்தமற்ற செயலாகும். ஏனெனில், இது அல்லாஹ்வின் நாட்டமாகும். இவைகளை அல்லாஹ்விடம் விட்டு விட வேண்டும்.

 

பிறரின் உணர்வுகளை காயப்படுத்துவதற்கு பதிலாக அவர்களுக்காக அமைதியான முறையில் பிரார்த்திக்கலாம்.

 

நம்முடைய மறைமுகமான அல்லது ஜாடை மாடையான இவ்வாறான கேள்விகள் பிறரின் உள்ளத்தை காயப்படுத்தி, அவர்களின் உள்ளத்திலிருந்து வெளியாகும் ஆஹ்! என்ற வார்த்தையின் மூலம் அல்லாஹ்வின் அதிருப்தி நம்மீது ஏற்பட்டுவிட்டால் நாம் என்ன செய்யமுடியும்? சற்று யோசிக்க வேண்டும்.

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் தமது மாணவர் இக்ரிமா (ரஹ்)  அவர்கள் தம்மிடமிருந்து போதிய அறிவை ஞானங்களை கற்றுக்கொண்டார் என்று அறிந்த பிறகு அவரிடம், "நீ சென்று மக்களுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்குவாயாக! ஆனால், மக்கள் பயனுள்ளதைப்பற்றி கேட்டால் அதற்குரிய பதிலைக் கூறு. பயனற்றதைக் கேட்டால் பதில் சொல்லிக்கொண்டிருக்காதே" என்று உபதேசித்துள்ளார்கள்.

 

எனவே நாம், யாரிடமும் எப்போதும் தேவையற்ற கேள்விகள் கேட்பதைவிட்டும் தவிர்ந்து வாழ, அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 


1 comment:

  1. புதுமையான டாப்பிக் மாஷாஅல்லாஹ்

    ReplyDelete

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...