கருமிகள் கவனத்திற்கு!
فَمِنْكُمْ مَنْ يَبْخَلُ وَمَنْ يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَنْ
نَفْسِهِ وَاللَّهُ الْغَنِيُّ وَأَنْتُمُ الْفُقَرَاءُ
கருமித்தனம் செய்பவரும்
உங்களில் இருக்கின்றார். அவ்வாறு எவரேனும் கருமித்தனம் செய்தால், அவர் தனக்குக் கேடாகவே கருமித்தனம் செய்கின்றார்.
அல்லாஹ்வோ தேவையற்றவன். நீங்கள் தேவைப்பட்டவர்களாகவே இருக்கின்றீர்கள். திருக்குர்ஆன்:-
47:38
அல்லாஹ், மனிதனுக்கு பொருளைத் தருவது மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளை வெளிக்காட்டாது மறைத்துக்கொள்வதும், தமது தேவைக்குகூட செலவழிக்காமல் சேமித்துவைப்பதும் தான் கருமித்தனமாகும்.
கருமிகள் தாம் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்திலிருந்து எடுத்தால் குறைந்துவிடும் என்றே எண்ணுகிறார்கள். "இறைக்கின்ற ஊற்றே சுரக்கும்" என்ற முதுமொழியை மறந்து விடுகின்றனர்.
கருமிகளுக்கு அல்லாஹ்வின் மீது போதிய நல்லெண்ணம் இருப்பதில்லை. அதனால் தான் அவர்கள் பொருளை இறுக்கிப்பிடித்து கருமித்தனம் செய்கின்றனர். அவர்களுக்கு அல்லாஹ்வின் மீது போதிய நல்லெண்ணம் இருக்குமாயின் அல்லாஹ் மென்மேலும் தரக்கூடியவன் என்ற நம்பி செலவழிப்பார்கள்.
மனிதன் எந்த நேரத்திலும்
எந்த நிலையிலும் மரணிக்கக்கூடியவன் ஆவான் இந்த எண்ணம் கருமிகளுக்கு இருப்பின், அவர்கள்
தம் செல்வத்தை எண்ணியெண்ணி பெட்டிக்குள் பெட்டியாய் வைத்து பூட்டி வைப்பார்களா?
தான் சம்பாதிக்கும் பணத்தில்
இருந்து தானும் உண்ணாமல் பிறருக்கும் உண்ணக் கொடுக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய அறிவீனம்.
ஹலாலான வழியில் இவர்கள் செலவழிக்க முன்வராததால் இவர்களின் செல்வத்தை ஹராமான வழியில்
செலவாகுமாறு அல்லாஹ் விட்டு விடுகிறான்.
தேடி வரும் விருந்தாளிகளுக்கோ
உறவினர்களுக்கோ செலவளிக்காதவன் கருமி. ஈட்டிய செல்வத்தை சொந்தக் குடும்பத்திற்காகக்கூட
செலவளிக்காதவன் படுகஞ்சன். இறைக்கொடையான கல்வியை அறிவை மற்றவர்களுக்கு பகிர்ந்து வழங்காதவன்
அறிவை மூடி மறைத்த குற்றவாளி. சமூகத்தில் தனக்கு கிடைத்துள்ள செல்வாக்கையும் புகழையும்
சிறப்பிடத்தையும் மற்றவர்களுக்கு உதவி புரிய பயன்படுத்தாதவன் கேவல புத்திகொண்டவன்.
மற்றவர்களுக்காக கரமேந்தி இறைவனிடம் வேண்டாதவன் இழிபிறவி. இவர்கள் அனைவரையும் விட பெரிய
கஞ்சன் யாரெனில் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பெயரை வாசிக்கும்போது அல்லது கேட்கும்போது
அண்ணலார் மீது சலவாத்துச் சொல்லாதவன்.
இவ்வாறு கருமிகளும்
பலவகை உண்டு. அவர்களுக்கு வெவ்வேறு பெயர்களும் உண்டு.
அழிவுக்குக்
காரணம்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( وَاتَّقُوا الشُّحَّ
فَإِنَّ الشُّحَّ أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ حَمَلَهُمْ عَلَى أَنْ سَفَكُوا دِمَاءَهُمْ
وَاسْتَحَلُّوا مَحَارِمَهُمْ ) கருமித்தனத்திலிருந்து
தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில்,
கருமித்தனமானது உங்களுக்கு
முன்னிருந்தவர்களை அழித்தது. இரத்தங்களைச் சிந்துவதற்கும் இறைவனால் அவர்களுக்குத் தடை
செய்யப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவையாக ஆக்கிக் கொள்வதற்கும் தூண்டுகோலாக இருந்தது.
அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5034
அருமை நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். ( خَصْلَتَانِ لاَ تَجْتَمِعَانِ فِي مُؤْمِنٍ الْبُخْلُ وَسُوءُ الْخُلُقِ ) கருமித்தனமும் கெட்ட குணமும் ஓர் இறைநம்பிக்கையாளரிடம் குடிகொள்ளக்கூடாத இரு பண்புகளாகும். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1885
கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ
يَدْخُلُ الْجَنَّةَ خِبٌّ وَلاَ مَنَّانٌ وَلاَ بَخِيلٌ ) மோசடிக்காரரும், செய்த
உபகாரத்தை சொல்லிக் காட்டுபவரும், கருமியும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். அறிவிப்பாளர்:-
அபூபக்கர் (ரலி) அவர்கள் நூல் திர்மிதீ-1886
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( شَرُّ مَا فِي رَجُلٍ شُحٌّ هَالِعٌ وَجُبْنٌ خَالِعٌ ) கடும் கஞ்சத்தனமும், பயங்கர கோழைத்தனமும் ஒரு மனிதனிடம் இருக்கின்ற தீமைகளிலெல்லாம் மிகத் தீயது. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-2150
பேராசான் பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا
مِنْ يَوْمٍ يُصْبِحُ الْعِبَادُ فِيهِ إِلاَّ مَلَكَانِ يَنْزِلاَنِ فَيَقُولُ أَحَدُهُمَا
اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا . وَيَقُولُ الآخَرُ اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا
تَلَفًا ) ஒவ்வொரு நாளும் அடியார்கள் காலை நேரத்தை அடையும்போது
இரு வானவர்கள் (வானத்திலிருந்து) இறங்குகின்றனர். அவர்களில் ஒருவர், "இறைவா! (நல்வழியில்) செலவு செய்பவருக்குப் பிரதிபலனை
அளிப்பாயாக!" என்று கூறுவார். மற்றொருவர், "இறைவா! (கஞ்சத்தனத்தால் கடமையானவற்றில்கூடச்) செலவு
செய்ய மறுப்பவருக்கு இழப்பைக் கொடுப்பாயாக!" என்று கூறுவார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா
(ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1442, முஸ்லிம்-1836, இப்னு ஹிப்பான்
கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَالْبَخِيلُ
بَعِيدٌ مِنَ اللَّهِ بَعِيدٌ مِنَ الْجَنَّةِ بَعِيدٌ مِنَ النَّاسِ قَرِيبٌ مِنَ
النَّارِ. وَلَجَاهِلٌ سَخِيٌّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ عَابِدٍ بَخِيلٍ ) கருமித்தனம்
உள்ளவர் அல்லாஹ்வுக்கும் தூரமானவர்;
சொர்க்கத்திற்கும் தூரமானவர்; மக்களுக்கும் தூரமானவர்; நரகத்திற்கு நெருக்கமானவர் ஆவார். கொடையுள்ளம் கொண்ட
அறிவிலி, கருமித்தனம் கொண்ட அறிஞரைவிட அல்லாஹ்வுக்கு மிகவும்
விருப்பமானவன் ஆவான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1884
இறைத்தூதர் யஹ்யா
(அலை) அவர்கள் ஒருமுறை ஷைத்தானிடம்,
"உனக்கு அனைவரையும்விட அதிக
விருப்பமுள்ள மனிதன் யார்? மேலும், அனைவரையும்விட அதிக
வெறுப்பான மனிதன் யார்?" என்று வினவினார்கள். அதற்கு ஷைத்தான், "எனக்கு அனைவரையும்விட அதிக விருப்பமுள்ள மனிதன், இறைநம்பிக்கையுள்ள கருமிதான். மேலும் அனைவரையும்விட அதிக வெறுப்பான மனிதன், பாவியான கொடையாளிதான்" என்று பதிலளித்துவிட்டு, அதற்குரிய காரணம் என்னவெனில்,
"கருமி தனது கருமித்தனத்தின்
காரணமாக என்னை கவலையற்றவனாக ஆக்கி வைத்துள்ளான். அதாவது, அவனுடைய கருமித்தனமே அவனை நரகத்திற்கு இழுத்துச் செல்ல போதுமானது. ஆனால், பாவியான கொடையாளியை அவனுடைய கொடையின் காரணமாக அல்லாஹ் அவனை மன்னித்து விடுவானோ
என்ற கவலை எனக்கு சதாகாலமும் இருக்கிறது" என்று கூறினான். நூல்:- இஹ்யா
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கஞ்சனின் நிலையோடு ஒப்பிடுகையில் தாராள மனதுடன் செலவு செய்கின்ற தர்மசீலரின் நிலையானது, மார்பிலிருந்து கழுத்தெலும்பு வரை (இரும்பாலான) இரு நீளங்கிகள் அல்லது இரும்பாலான இரு கவச ஆடைகள் அணிந்துள்ள இரு மனிதரின் நிலையைப் போன்றதாகும்.
(தர்மத்திற்காக) செலவு செய்கின்றவர் செலவு செய்ய எண்ணும்போது அவரது கவசம் விரிவடைந்து அல்லது (நீண்டு) சென்று விரல் நுனியை மறைத்து (அதற்கப்பால்) அவரது பாதச் சுவடுகளைகூட (த்தொட்டு) அழித்துவிடுகிறது. (ஆனால்) கஞ்சன் செலவு செய்ய எண்ணும்போது அவனது கவசம் அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை (இறுக)ப் பிடித்துவிடுகிறது. இறுதியில் அவரது குரல்வலையை அல்லது அவனது பிடரியைப் பிடித்துவிடுகிறது. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1443, முஸ்லிம்-1854, நசாயீ-2500
தாராள மனம் படைத்தவரின்
மன விரிவையும் கஞ்சனின் மன இறுக்கத்தையும் இங்கே இந்த நபிமொழியை விவரிக்கிறது. வள்ளல்
குணம் உள்ளவர் தானம் வழங்க வழங்க அவரது மனம் விரிவாகிக் கொண்டே போகும். அவருடைய பாவச்
சுவடுகள் அழிந்துபோகின்றவரை தாராளமாக அவர் செலவழித்துக் கொண்டே இருப்பார். ஆனால்,
கஞ்சனின் மனம் தர்மம் செய்ய
இடமளிக்காது. மன இறுக்கம் அதிகமாகி, செலவு செய்ய கையே வராது. தனக்கே செலவு செய்ய முன்வராமல் கழுத்தோடு கைகளை கட்டிக்கொள்வான்.
பின்னர், அவன் தாராளமாக நடந்து
கொள்ள நினைத்தாலும் அது முடியாமல் போய்விடும்.
இவ்வாறு எவர்கள் (அல்லாஹ்வின் அருளால்) கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அத்தகையவர்கள் தாம் வெற்றிபெற்றவர்கள். திருக்குர்ஆன்:- 59:9
மேற்காணும்
வசனத்தில் இடம்பெற்றுள்ள "ஷுஹ்ஹு" எனும் அரபிச் சொல்லுக்கு எல்லாம் எனக்கே
வேண்டும். வேறு எவருக்கும் எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்று பொருள்.
"ஷுஹ்ஹு" என்றால் "பேராசையுடன் கூடிய கருமித்தனம்" என்கிறார்கள் அறிஞர்கள். நூல்:- ஃபிக்ஹுல் அவ்லவிய்யாத்
இந்த செல்வம் தன்னை
விட்டுப் போய்விடக்கூடாது என்று இறுக்கிப் பிடித்துக் கொள்ளும் (புக்ல்) கஞ்சத்தனத்தைவிட
மோசமானது. ஏனெனில் இவன் (கஞ்சன்) செல்வத்தை மட்டுமே இறுக்கிப் பிடிப்பான்.
சுயநலக்காரன் அப்படியல்ல.
செல்வம் மட்டுமல்ல வேறுவித பலன்கள் எதுவும் எவனுக்கும் கிடைத்துவிடக்கூடாது என்று நினைப்பான்.
இவன் எப்போதுமே ஒருவித பதற்றத்துடன் இருப்பான். நம்மிடமுள்ள எதையாவது யாருக்காவது தரவேண்டிய
நிலை ஏற்பட்டு விடுமோ, அப்படி ஏற்பட்டால் நாம் நமக்கென
வைத்திருந்ததை இழந்துவிடுவோமோ என்ற பதைப்பதைப்பில் வாழ்வான்.
அபில் ஹிய்யாஜில் அஸதி (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் கஅபா ஆலயத்தை (தவாஃப்) வலம் வந்துகொண்டிருந்தேன். அப்போது, ( اللَّهُمَّ قِنِي شُحَّ نَفْسِي ) "அல்லாஹ்வே! என்னுடைய மனதின் கருமித்தனத்தில் இருந்து காப்பாற்றுவாயாக! என்று ஒரு மனிதர் பிரார்த்தனை செய்வதைப் பார்த்தேன். அதைவிட அதிகமாக அவர் எதுவும் கூறவில்லை. அதைப்பற்றி நான் அவரிடம் கேட்டேன். அவர், ( إِنِّي إِذَا وُقِيتُ شُحَّ نَفْسِي لَمْ أَسْرِقْ وَلَمْ أَزْنِ وَلَمْ أَفْعَلْ ) "என் மனதின் கருமித்தனத்திலிருந்து நான் காப்பாற்றப்பட்டால், நான் திருடாமலும் விபச்சாரம் போன்ற தீமைகளைச் செய்யாமலும் வேறு எந்தத் தவறுகளையும் செய்யாமலும் இருப்பேன்" என்றார். பிறகு (அவர் யாரென உற்று) பார்த்தபோது அந்த மனிதர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள்தாம். நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர் அல்ஹஷ்ர் வசனம்-9
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( بَريء مِنَ الشُّحِّ
مَن أَدَّى الزَّكَاةَ، وقَرَى الضَّيْفَ، وَأَعْطَى فِي النَّائِبَةِ ) யார் (ஸக்காத் எனும்) கடமையான தர்மத்தை நிறைவேற்றினாரோ,
விருந்தினருக்கு விருந்து
அளித்தாரோ, துன்பத்திற்குள்ளானோருக்கு
பணம் கொடுத்து உதவினாரோ அப்படிப்பட்டவர் கருமித்தனத்திலிருந்து விலகியவர் ஆவார். அறிவிப்பாளர்:-
அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர் அல்ஹஷ்ர் வசனம்-9
தங்களுடைய உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து யார் விலகியிருக்கிறாரோ அப்படிப்பட்டவர்கள்தான் வெற்றிபெறக்கூடியவர்கள் ஆவார். திருக்குர்ஆன்:- 64:16
செருப்பு தேய்ந்துவிடாதா?
மௌலானா ரூமி (ரஹ்) அவர்களின் மகளார் தன் தந்தையிடம் மிகுந்த கவலையுடன் தன் கணவர் கஞ்சனாக இருப்பதாகச் சொன்னாள்.
அது கேட்ட மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் தன் மகளுக்கு சிறுகதை ஒன்றை கூறினார்கள். ஓர் கஞ்சன் தன் அறையில் விளக்கேற்றி வைத்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் தொழுகைக்கான அழைப்பு கேட்டு பள்ளிவாசலுக்குச் சென்றான். செல்லும் வழியில் விளக்கை அணைக்காமல் வந்துவிட்ட நினைவு வர, பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டிய அவன் வீட்டை நோக்கி நடந்தான். வீட்டின் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு அவன் மனைவி வந்தாள்.
கஞ்சன் மனைவியிடம், "கதவை திறக்க வேண்டாம். தாழ்ப்பாள் தேய்ந்துவிடும். அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கை அணைத்து விடு! அதற்காகத்தான் இப்போது திரும்பி வந்தேன்" என்றான். மனைவி கிண்டலாக, "அப்படியானால் பள்ளிவாசலுக்கு போகாமல் இங்கு திரும்பி வந்துள்ளீர்களே! செருப்பு தேய்ந்து விடாதா?" என்று கேட்டாள். கஞ்சன் தொண்டையை கனைத்துக் கொண்டு, பெருமையுடன் கூறினான். அதைப் பற்றிக் கவலைப்படாதே! செருப்பு என் கக்கத்தில் பத்திரமாக உள்ளது.
மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் இக்கதையை கூறி முடித்ததும் அவரின் மகளார் தன் கவலையெல்லாம் மறந்து, வாய்விட்டுச் சிரித்தார்.
எவர்கள், அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில்
கஞ்சத்தனம் செய்கின்றார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிட வேண்டாம். அது
அவர்களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள்
கழுத்தில் இரும்பு வளையமாக மாட்டப்படும். திருக்குர்ஆன்:- 3:180
மேற்காணும் வசனத்திற்கு
திருக்குர்ஆன் விரிவுரையாளர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறும் விளக்கமாவது: ஒரு கஞ்சன்
(கடமையான வழியில் செலவிடாமல்) செல்வத்தைச் சேமித்து வைப்பது, தனக்குப் பயனளிக்கும் என்று கருதிவிட வேண்டாம். மாறாக, மார்க்க ரீதியாக அவனுக்கு அது தீங்கிழைக்கக் கூடியதாகும். சிலவேளைகளில் அவனது இம்மைக்கும்கூட
அது தீங்களிக்கலாம்.
தீய ஆலோசனை
எவர்கள் (தாங்கள்)
கஞ்சர்களாக இருப்பதோடு கஞ்சர்களாக ஆகுமாறு மற்றவர்களுக்கு ஆலோசனைத் தருகிறார்கள். மேலும்
தமது அருளால் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ளவற்றையும் (பிறருக்குக் கொடுக்காமல்)
மறைத்து கொள்கின்றார்களோ, அத்தகைய நன்றி கெட்டவர்களுக்காக
இழிவுபடுத்தும் பயங்கர வேதனையை நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். திருக்குர்ஆன்:-
4:37
மேற்காணும் வசனத்திற்கு
திருக்குர்ஆன் விரிவுரையாளர் இப்னுகஸீர் (ரஹ்) அவர்கள் கூறும் விளக்கமாவது: கஞ்சன்
அல்லாஹ்வின் அருட்கொடையை மறைக்கிறான். அது அவனிடம் வெளிப்படுவதில்லை. அவனது உணவு, உடை, வழங்கல், செலவிடல் ஆகிய எந்த
நடவடிக்கையிலும் அந்த அருட்கொடை தென்படாது.
கருமிகள் தாங்களும்
செலவளிப்பதில்லை. செலவளிப்போரைக் கண்டால் விரும்புவதும் இல்லை. ஏன் இப்படி செலவளித்து
தீர்கிறீர்கள்? சேமிப்பு பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.
எதிர்காலத்திற்காக சேர்த்து வையுங்கள் என்றெல்லாம் இனிய அறிவுரைகளை வழங்குவார்கள்.
ஒரு கஞ்சன் மற்றவர்களுக்கும்
கஞ்சத்தனத்தை போதிக்கிறான். மற்றவர்களின் தயாள குணத்தால் அவனது கஞ்சத்தனம் வெளிச்சத்திற்கு
வருவதே காரணம். தனது குறையை மறைப்பதற்காக, தான் எப்படி மற்றவர்களின்
உரிமைகளை செலுத்தாமல் போக்குக்காட்டி மறைத்து சுருட்டி வைக்கிறோமோ, அதைப் போன்று மற்றவர்களும்
நடந்துகொள்ள வேண்டும் என அவன் ஆசைப்படுகிறான். மற்றவர்களுக்கு மூக்கு இருந்தால் தானே
தனக்கு மூக்கு நசுங்கி இருப்பதை அவமானமாக பார்ப்பார்கள். இவ்வாறுதான் அவனுடைய கஞ்சத்தனம்
மறைக்க முயற்சிக்கிறான்.
குடும்பத்தலைவன்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: என் இறைவனின் அருள் பொக்கிஷங்கள்
அனைத்திற்கும் நீங்களே சொந்தக்காரர்களாக இருந்தால் அது செலவாகிவிடுமோ! எனப் பயந்து
(எவருக்கும் எதுவுமே கொடுக்காது) நீங்கள் தடுத்துக் கொள்வீர்கள். மனிதன் பெரும் கஞ்சனாக
இருக்கிறான். திருக்குர்ஆன்:-
17:100
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நாயகமே! (என் கணவர்) அபூசுப்யான் கருமியான மனிதர். எனக்கும், என் குழந்தைக்கும் செலவுக்கு போதிய பணத்தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்கு தெரியாமல் (திருட்டுத்தனமாக) எடுத்துக் கொண்டதைத்தவிர (போதுமான தொகையை அவர் தர மாட்டார்) என்று கூறினார். அதற்கு அண்ணலார் ( خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالْمَعْرُوفِ ) "உனக்கும், உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்!" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5364
குடும்பச் செலவுக்கு போதுமான தொகை வைத்திருந்தும் அதை தர மறுக்கும் கருமியான தன் கணவனிடமிருந்து அவனுக்கே தெரியாமல் வீட்டு செலவுக்கு போதுமான தொகையை மனைவி எடுத்துக் கொண்டால் அது திருட்டு குற்றமாகாது. அதற்காக அவளை தண்டிக்கவும் கூடாது என்பதே இஸ்லாமிய நிலைப்பாடு.
அலீ (ரலி) அவர்கள்
கூறினார்கள். ( وَبُخْلُهُ يُبَغِّضُهُ إِلَى
أَوْلَادِه ) ஒருவருடைய கஞ்சத்தனம் அவரது பிள்ளைகளே அவரை வெறுக்கும்படி
செய்கின்றது. நூல்:- தஸ்னீப் குரருல் ஹிகம், பக்கம்-378
நம்முடைய செல்வத்தை
பிறருக்கு கொடுத்துதவாமல் இருக்கும் தருணத்தில் நமது மிக நெருங்கிய உறவுகள்கூட நம்மை
விட்டு தூரமாகுகின்றனர்.
ஒரு குடும்பத்தலைவர்
தமது மனைவி மக்களுக்கும் அவர்களது தேவைகளுக்கேற்ப செலவு செய்வது இஸ்லாம் கூறும் கடமையாகும்.
அதில் கஞ்சத்தனம் செய்யும்போது அவர்களும் நம்மை வெறுக்கக்கூடும்.
ஒரு மூதாட்டியின் கணவன் படுகஞ்சன். தன் சொத்துக்களை தன்னுடன் புதைக்க வேண்டுமென்று சாசனம் எழுதிவிட்டு இறந்தான். அவனுடைய சொத்து முழுவதையும் தன் கணக்கில் வரவு வைத்துக்கொண்டு, அவன் பெயரில் காசோலை எழுதி அவனுடன் புதைத்தாள் அப்பெண்.
அரபு இலக்கணத்தின்
தந்தை
ஒருமுறை தாபிஈன்களில் ஒருவரான அரபு இலக்கணத்தின் தந்தையாக திகழ்ந்த அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் சந்தையில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது ஒருவர் அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்களுக்கு அருகில் வந்து அமர்ந்து (எப்படியாவது எதையாவது பேசி சாப்பிட்டுவிட வேண்டும் என்று முடிவெடுத்து அபுல் அஸ்வத் - ரஹ் அவர்களுக்கு) சலாம் கூறினார்.
இவரைக் கண்ட அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் இவருக்கு நிச்சயமாக உணவு கொடுக்கக்கூடாது என்று முடிவெடுத்து விட்டார்கள். வந்தவர் முதலில் சாப்பாடு எதுவும் கேட்காமல் சகஜமாக பேச ஆரம்பித்தார். அதாவது, ( إِنِّي مَرَرْتُ بِأَهْلِكَ ) “நான் வரும் வழியில் உங்கள் குடும்பத்தினரைக் கண்டேன்” என்றார்.
அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள், தமது முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு ( كَذَلِكَ كَانَ طَرِيقُكَ ) "ஆமாம்! நீ வரும் வழியில் தான் என் வீடு இருக்கிறது. (அதனால் பார்த்திருப்பாய்)" என்றார்கள்.
வந்தவர், ( وَامْرَاتُكَ حَبْلِي ) "உங்கள் மனைவி கர்ப்பமாக இருந்தார் அல்லவா?" என்றார். அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள், ஆம் என்றார்கள்.
(மனிதர்கள் ஒருவருக்கொருவர் கொஞ்ச நேரம் பேசிக்கொண்ட பிறகு வாங்க சாப்பிடலாம் என்று ஒருவர் மற்றவரை அழைப்பது யதார்த்தம். வந்தவர், இந்த யதார்த்தத்தை அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்களிடம் இருந்து எதிர்பார்த்தார்.)
வந்தவர், ( فَقَدْ وَلَدْتُ ) "உங்கள் மனைவிக்கு குழந்தை பிறந்துவிட்டது போலும்” என்றார். அதற்கு அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள், ( لَابُدَّ لَهَا انْ تَلِدُ ) "ஆம்! ஒரு பெண் கர்ப்பமுற்றால் அவள் பிள்ளை பெற்றெடுப்பாள். அது அனைவரும் அறிந்த விஷயம் தானே!" என்றார்கள்.
வந்தவர், ( وَلَدَتْ غُلَامَيْنِ ) "உங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருக்கிறது அதுவும் ஆண் குழந்தைகளாக பிறந்திருக்கிறது போலும்" என்றார். அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள், ( كَذَلِكَ كَانَتْ أُمُّهَا ) "ஆம்! என் மனைவியின் அம்மாவும் இரட்டை இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். (அதனால் இவளும் இரட்டை குழந்தையை பெற்றெடுத்திருக்கிறாள்)" என்று கூறினார்கள்.
வந்தவர், ( مَاتَ احْدُهُمَا ) “பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்துவிட்டது போலும்" என்றார். அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள், ( مَا كَانَتْ تُقَوِّي عَلَيَّ ارْضَاعَ الِاثْنَيْنِ ) "ஆம்! இரண்டு குழந்தை இருந்தால் என் மனைவி பால் கொடுப்பதற்கு சிரமப்படுவாள். அதனால் ஒன்றே ஒன்று போதும்" என்றார்கள்.
வந்தவர், ( ثُمَّ مَاتَ الْآخَرُ ) "கொஞ்ச நேரத்திற்கு பிறகு அந்த ஒரு குழந்தையும் இறந்துவிட்டது போலும்" என்றார். அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள், ( مَا كَانَ لِيُقَوِّيَ عَلَيَّ الْبَقَاءَ بَعْدَ مَوْتِ أَخِيهِ ) "ஆமாம்! அவனது சகோதரனின் மரணத்திற்குப் பிறகு அவனும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை தான்" என்றார்கள்.
வந்தவர், ( وَمَاتَتْ الْأُمُّ ) "(அதுமட்டுமல்லாமல்!) உங்கள் மனைவியும் இறந்துவிட்டார் போலும்" என்றார். அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள், ( مَاتَتْ حُزْنًاً عَلَيَّ وَلَدَيْهَا ) "ஆம்! தமது குழந்தைகள் இறந்த கவலையில் அவளும் இறந்துவிட்டாள் போல் தெரிகிறது" என்றார்கள்.
வந்தவர், ( مَا أَطْيَبُ طَعَامَكَ ) “(இனிமேல் இவரிடம் பேசி காரியத்தை சாதிக்க முடியாது என்று விளங்கிக்கொண்டார். எனவே, நேரடியாகவே கேட்டு விடுவது என்று முடிவெடுத்து,) உங்கள் உணவு சுவையாக இருக்குமோ?” என்று கேட்டார்.
அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள், ( لِذَلِكَ أَكَلْتُهُ وَحْدِي ) “ஆம்! அதனால் நான் உணவை தனியாக சாப்பிடுகிறேன்" என்றார்கள். வந்தவர் அதன் பிறகு அங்கிருந்து சென்றுவிட்டார். நூல்:- புஹலா இமாம் ஜாஹிள் ( جاحظ ) (கஞ்சர்கள்)
இலக்கிய வல்லுநர் ஜாஹிள் ( جاحظ ) அவர்கள், புஹலா (கஞ்சர்கள்) என்று ஒரு நூல் எழுதியுள்ளார்கள். உலக அளவில் கஞ்சத்தனத்தில் பிரபலமானவர்களின் வரலாற்றுச் செய்திகள் இதில் உண்டு. இந்த நூலில் அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்களுக்கும் தனி இடமுண்டு.
அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். கஞ்சனின் பொருள்கள் ஏழு வகைகளில் ஏதேனும் வகையில் செலவாகும்.
1) அவன் இறந்த பின்னர் அல்லாஹ்வுக்கு மாற்றமான வழியில் அவனின் செல்வத்தை செலவழிப்பார்களே, அவன் வாரிசாவார்கள்.
2) கொடுங்கோல் மன்னன் அவன் மீது சாட்டப்பட்டு அவனை இழிவுபடுத்தி அவனுடைய செல்வத்தை பறித்துக் கொள்வான்.
3) அவனுக்கு ஏதாவது ஒன்றில் பெரும் ஈடுபாடு உண்டாகி அதற்காக பொருளை பாழாக்குவான். (திரைப்படம், பாட்டுக் கச்சேரி, மது போன்றவை)
4) பாழடைந்த இடத்தில் கட்டிடம் கட்டி செல்வத்தை வீணடிப்பான்.
5) வெள்ளம், தீ, கொள்ளை ஆகிய உலக சோதனைகளுக்கு ஆளாகி அவனின் செல்வம் கரையும்.
6) தீராத நோய் உண்டாகி அதற்காகச் செலவழித்தே அவனுடைய பணத்தைப் பாழாக்குவான்.
7) பொருள்கள் அனைத்தும் எங்கேனும் ஓரிடத்தில் புதைத்து வைத்துப் பின்னர் மறந்துபோவான். (இறுதியில்) அது கிடைக்காமல் போகும். நூல்:- முநப்பிஹாத்
ஒரு ஊரில் இரண்டு கருமிகள் இருந்தனர். அவ்விருவரில் யார் மகா கருமி? என்று போட்டி நிலவியது. எனவே, இதுப்பற்றி பேச ஒரு கருமி மற்றொரு கருமியை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். இருவரும் பேச ஆரம்பிக்கும் முன் விளக்கை அணைத்து விடுகிறான் அந்த வீட்டுக்காரக் கருமி. வீட்டுக்கு வந்த கருமி "ஏன் விளக்கை அணைத்தாய்?" என்று கேட்க, “பேசிக் கொண்டுத்தானே இருக்கப்போகிறோம் எதற்கு அனாவசியமாக மண்ணெண்ணெய் செலவு?” என்று வீட்டுக்காரக் கருமி விளக்கம் கூறினான். பேசி முடித்ததும் வீட்டுக்காரக் கருமி விளக்கை ஏற்ற முயன்றான். வீட்டுக்கு வந்த கருமி, "பொறுங்க... பொறுங்க... வேட்டியை கட்டிக்கொள்கிறேன். இருட்டாகத் தானே இருக்கிறது. வேட்டியை ஏன் அழுக்காக்கிக்கொள்ள வேண்டும் என்றெண்ணி அதை அவிழ்த்து வைத்துவிட்டேன்" என்றான்.
கருமித்தனம் என்பது மிகப்பெரிய தீய குணமாகும். கருமிகளால் தன்னக்கோ தனது மார்க்கத்திற்கோ எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. எனவே, கருமிகளைக் கடிந்து கொள்கிறது இஸ்லாம். நம்மை, அல்லாஹுத்தஆலா கருமித்தனத்தைவிட்டும் பாதுகாப்பானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
Al hamthu lillah arumaiyana thagaval bara kallah
ReplyDelete