Search This Blog

Saturday, 25 February 2023

எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!

 

எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏

 

எல்லாப் புகழும் அனைத்துலகங்களையும் படைத்து பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கே உரியது. திருக்குர்ஆன்:- 1:1

 

மனிதன் அனுபவிக்கும் அனைத்து இன்பங்களும் அல்லாஹுத்தஆலா வழங்கிய அருள்வளங்கள் தான். மனிதன் அதற்காக அல்லாஹ்விற்கு தமது வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்தினாலும் போதாது.

 

நாம் அடிக்கடி கூறும் வார்த்தைகளில் ஒன்றே “அல்ஹம்துலில்லாஹ்” என்பது. தொழுகையில், தொழுகையின் பின்னர், சாப்பிட்ட பின்னர், என பல சந்தர்ப்பங்களில் இவ்வார்த்தையை நாம் கூறுகின்றோம்.

 

ஆனாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இச்சிறிய வார்த்தையின் ஆழமான அர்த்தத்தைப் பற்றி நாம் சிந்திப்பது மிகக்குறைவு. அதன் அர்த்தத்தைப் புரிந்து, உளப்பூர்வமாக அதனை மொழிபவர்களும் மிகக்குறைவு.

 

சிறு விளக்கம்

 

“அல்ஹம்து” என்பதை நாம் தமிழில் “புகழ்” என மொழிபெயர்க்கின்றோம். இது சரியான நேரடி மொழிபெயப்பல்ல. மாறாக, ஓர் மேலோட்டமான  மொழிபெயர்ப்பு மட்டுமே. அரபு மொழியில் “ஹம்த்” என்ற வார்த்தை, ஒருவர் சுயவிருப்புடன் செய்யும் நற்செயலுக்காக அவரை கண்ணியப்படுத்தி, நாவினால் புகழ்வதைக் குறிக்கும்.

 

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் “ஹம்த்” என்பதற்கு, ‘புகழுக்குரிய ஒருவரை நேசிப்பதுடனும், மகத்துவப்படுத்துவதுடனும் அவரது நல்லறங்கள் பற்றிக் கூறுவதாகும்என்கின்றார்கள்.

 

எனவே, “அல்ஹம்த்” என்பது நாவால் அல்லாஹ்வைப் புகழ்வதை மாத்திரம் குறிக்காது. மாறாக, அவனை நேசித்தல், மகத்துவப்படுத்தல், அவனது அருள்கள், ஆற்றல்களைப் பற்றிப் பேசுதல் என்பனவும் கட்டாயமாக உள்ளடங்கும். எனவேதான், “அல்ஹம்த்” என்ற சொல் பயன்படுத்தப்படத் தகுதியானவன் “அல்லாஹ்” மாத்திரமே என அறிஞர்கள் கூறுவர்.

 

ஒருவர் இன்னொருவரைப் புகழ, பிராதனமாக இரண்டு காரணிகள் இருக்கலாம். 1) அவரது தன்னிகரற்ற ஆற்றல். 2) புகழ்பவருக்கு அவர் செய்த அருள்கள்.

 

உண்மையில் இவ்விரண்டு அம்சங்களும் முழுமையாக அல்லாஹ்விற்கு மாத்திரமே உள்ளன.

 

படைப்புக்களிடம் உள்ள ஆற்றல்கள், அல்லது அவர்கள் மக்களுக்கு செய்யும் நலவுகள் அனைத்தும் அல்லாஹ்வின உத்தரவின் பிரகாரமே நிகழ்கின்றன.

 

ஒரு மனிதன் அல்லாஹ்வின் வல்லமைகள், அல்லாஹ் தனக்கு செய்துள்ள பேருபகாரங்கள் பற்றி சிந்திக்கும் போதெல்லாம் அவனை அறியாமலேயே அல்ஹம்துலில்லாஹ்என்ற வார்த்தை வந்துவிடும்.

 

இதேவேளை, இச்சொல்லை மொழிபவரிடம் பல நல்ல பண்புகள் இருப்பதைக் காட்டுகின்றது, அவற்றில் சில:

 

1. العدل (நீதம்) ஒரு மனிதன் தனக்கு ஒரு சந்தோசமான நிகழ்வு ஏற்படும் போது, அல்லது அவனது முயற்சி வெற்றியளிக்கும்போது அல்லாஹ்வைப் புகழ்கின்றான் என்றால், அந்த சந்தோசத்திற்கான உண்மையாக காரணம், தன் உழைப்பல்ல. அல்லாஹ்வின் அருளே என்கிறான். புகழுக்குத் தகுதியாவனுக்கு மட்டும் அதைக் கூறுவதன் மூலம் அதில் நீதமாக நடந்துகொள்கின்றான்.

 

2. التواضع (பணிவு) எவ்வளவுப் பெரிய வெற்றியின்போதும் அதன் பெருமையை தன்னுடன் இணைத்துப் பெருமையடிக்காமல், அல்லாஹ்வே காரணமானவன் என அவனைப் புகழ்வது பணிவுத்தன்மையின் ஓர் அடையாளமாகும்.

 

3. الشكر (நன்றி செலுத்தல்) ஒரு மனிதன் தனது வாழ்க்கையின் அனைத்து சந்தோசமான நிகழ்வுகளின்போதும் அல்லாஹ்வைப் புகழ்வது அவற்றிற்குக் காரணமாக இருந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதாகும்.

 

இவை, இச்சொல் பொதிந்துள்ள ஆழமான அர்த்தம் பற்றிய ஒரு சிறு விளக்கமே. இச்சொல் உள்ளடக்கத்தை ஒருபோதும் மனிதனால் பூரணமாக விளக்கிட முடியாது.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الطَّاعِمُ الشَّاكِرُ لَهُ مِثْلُ أَجْرِ الصَّائِمِ الصَّابِرِ ) உண்டுவிட்டு (இறைவனுக்கு) நன்றி செலுத்துபவருக்குப் பொறுமையுடன் நோன்பு நோற்றவருக்குக் கிடைக்கும் நற்கூலியைப் போன்றது உண்டு. அறிவிப்பாளர்:- சினான் பின் சன்னா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1755, திர்மிதீ-2410,முஸ்னத் அஹமத்-18242, தாரிமீ-1938

 

இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதம்

 

ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டு அவரது உடலில் உயிர் ஊதப்பட்டவுடன் ஆதம் (அலை) அவர்களுக்கு தும்மல் ஏற்பட்டது. உடனே வானவர்கள், ( قُلِ الْحَمْدُ لِلَّهِ ) "அல்ஹம்துலில்லாஹ்" என்று சொல்லுங்கள்" என்றனர். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹுத்தஆலா ( رَحِمَكَ رَبُّكَ ) "(ஆதமே!) உமது இறைவன் உமக்கு அருள்புரிவானாக! என்று கூறினான். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா


இதன் அடிப்படையில் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் "ஒருவர் தமக்கு தும்மல் ஏற்படும்போது "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினால் அதை செவியுறுபவர் "யர்ஹமகல்லாஹ்" (அல்லாஹ் உமக்கு அருள்புரிவானாக!) என்று கூறட்டும்" என்று கூறினார்கள்.


திருக்குர்ஆன் என்பது மனிதர்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய அருள் அல்லது பாக்கியம் எனலாம். அல்லாஹ் தமது அருள் வேதத்தைத் துவங்கும்போதே "அல்ஹம்துலில்லாஹ்" என்ற சொல்லில் இருந்து தான் துவங்குகிறான். எனவே, நாம் அந்தச் சொல்லின் கனத்தை  உணரவேண்டும்.


ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களின் ஒட்டகம் திருடப்பட்டுவிட்டது. அப்போது அண்ணலார், ( لَئِنْ رَدَّها اللَّهُ عَلَيَّ لَأشْكُرَنَّ رَبِّي ) "அல்லாஹ் எனக்கு ஒட்டகத்தை திரும்ப தந்தால் நான் அவனுக்கு நன்றி செலுத்துவேன்" என்றார்கள். ஒரு அரபு கோத்திரத்தார் தான் அந்த ஒட்டகத்தை  திருடி சென்றிருந்தனர். அவர்களில் ஒரு முஸ்லிமான பெண் இருந்தாள். இந்த விஷயத்தை அறிந்த அப்பெண், இரவில் அக்கூட்டத்தார் தூங்கிய நேரத்தில் அந்த ஒட்டகத்தில் ஏறி இரவோடு இரவாக பயணித்து காலையில் அதை அண்ணலாரிடம் கொண்டுவந்து சேர்த்தாள்.

 

அதைக்கண்ட அண்ணலார் சந்தோஷத்தால், "அல்ஹம்துலில்லாஹ்" (எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே) என்று மட்டும் கூறினார்கள். வேறு எதுவும் சொல்லவில்லை. இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அண்ணலார் ஒரு தொழுகையையோ அல்லது நோன்பையோ நிறைவேற்றுவார்கள் என்று நபித்தோழர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அண்ணலார் அவ்வாறு செய்யவில்லை. அண்ணலார் தாங்கள் சொன்னதை மறந்து இருப்பார்களோ என்று எண்ணிய நபித்தோழர்கள் அண்ணலாரிடம், "நாயகமே! ஒட்டகத்தை இறைவன் திரும்ப தந்தால் நன்றி செலுத்துவேன் என்று நீங்கள் ஏற்கனவே கூறினீர்களே!" என்றனர். அப்போது அண்ணலார், ( ألَمْ أقُلِ الحَمْدُ لِلَّهِ ) "நான் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறவில்லையா?" என்று கேட்டார்கள். (அதுவும் நன்றி செலுத்தும் விதம்தானே! என்றார்கள்.) நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَمَنْ قَالَ: اَلْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِينَ مِنْ قِبَلِ نَفْسِهِ كُتِبَتْ لَهُ ثَلاَثُونَ حَسَنَةً وُحُطَّتْ عَنْهُ ثَلاَثُونَ سَيِّئَةً ) ஒருவர் மனப்பூர்வமாக "அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" என்று கூறினால அவருக்கு முப்பது நன்மைகள் எழுதப்படுகின்றன. முப்பது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அறிவிப்பாளர்:-  அபூஹுராரா (ரலி)  அவர்கள் நூல்:- அமலுல் யவ்ம் வல்லைலா-84 இமாம் நசாயீ

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إذا قُلْتَ: الحَمْدُ لِلَّهِ رَبِّ العالَمِينَ. فَقَدْ شَكَرْتَ اللَّهَ فَزادَكَ )  நீர் 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' என்று கூறினால், நிச்சயமாக நீ அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்துவிட்டாய். மேலும் (அதன் மூலம்) உனக்கு அல்லாஹ் அவனது அருட்கொடைகளை அதிகமாக தருவான். அறிவிப்பாளர்:- ஹகம் பின் உமைர் (ரலி) அவர்கள் நூல்:- தைலமீ,  தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

நமது தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்குரிய வழிமுறைகளை மிகச் சுருக்கமாகக் கற்றுத் தந்துள்ளார்கள்.

 

அல்லாஹ் புரிந்த பேருபகாரங்களுக்கு  நன்றி கூறவேண்டும். அதற்கு இஸ்லாம் இலகுவான முறையைக் கற்றுத்தருகிறது. அதாவது "அல்ஹம்துலில்லாஹ்" என்று மனதார கூறினாலும் போதுமானது.

 

அதற்காக, இரவும் பகலுமாக தொழுதுதான் ஆக வேண்டும், நோன்பு நோற்றுத்தான் ஆக வேண்டும்,  பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை தர்மம் செய்து தான் ஆக வேண்டும் என்பதல்ல. வெறுமனே “அல்ஹம்துலில்லாஹ்” என்று கூறி அல்லாஹ்வை புகழ்ந்தாலும் போதுமானதே. இஸ்லாம் எந்த விதத்திலும் மனிதர்களை சிரமப்படுத்துவதில்லை.

 

சிறந்த திக்ர்

 

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என (நபியே) நீர் கூறுவீராக. திருக்குர்ஆன்:- 17:111

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَوَّلُ مَنْ يُدْعَى إِلَى الْجَنَّةِ الْحَمَّادُونَ الَّذِينَ يَحْمَدُونَ اللَّهَ عَلَى السَّرَّاءِ وَالضَّرَّاءِ ) இன்பத்திலும் துன்பத்திலும் (என அனைத்து நிலைகளிலும்) அல்லாஹ்வை புகந்தவர்கள் தான் சொர்க்கத்திற்கு முதலில் அழைக்கப்படுவார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னு மர்தவைஹீ, ஹாகிம், ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அத்தவ்பா வசனம்-112


நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَالْحَمْدُ لِلَّهِ تَمْلأُ الْمِيزَانَ ) “அல்ஹம்துலில்லாஹ்” (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்(று இறைவனை துதிப்)பது (நன்மை மற்றும் தீமைகள் நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்.  அறிவிப்பாளர்:- அபூ மாலிக் அல் அஷ்அரி (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-381

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( أَمَا يَسْتَطِيعُ أَحَدُكُمْ أَنْ يَعْمَلَ كُلَّ يَوْمٍ مِثْلَ أُحُدٍ عَمَلاً؟ ) "உங்களில் எவரேனும் தினமும் உஹுது மலையளவு நற்செயல் செய்ய இயலுமா?'' என்று கேட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், "நாயகமே! உஹுது மலையளவுக்கு எவரால் நற்செயல் செய்ய முடியும்?'' என கேட்டார்கள். அண்ணலார், ( كُلُّكُمْ يَسْتَطِيعُهُ ) "உங்களில் எல்லோராலும் செய்ய முடியும்'' என்று  கூறினார்கள். நபித்தோழர்கள்,  "நாயகமே! அது என்ன நற்செயல்?' என வினவினார்கள். 

 

அண்ணலார், ( وَالْحَمْدُ لِلّهِ أَعْظَمُ مِنْ أُحُدٍ ) "அல்ஹம்துலில்லாஹ் (சொல்வதின் நன்மை) உஹுது மலையைவிடப் பெரியது" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்

 

உம்முஹானீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு நாள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்னை கடந்துசென்றபோது நான், “நாயகமே! நான் வயது முதிர்ந்து பலவீனமானவளாகிவிட்டேன். நான் உட்கார்ந்த நிலையிலேயே செய்யும்படியான ஏதேனும் ஒரு நற்செயலை எனக்குச் கற்றுத்தாருங்கள்'' என்று கேட்டேன்.

 

அப்போது நபியவர்கள் ( وَاحْمَدِي اللهَ مِائَةَ تَحْمِيدَةٍ فَإِنَّهَا تَعْدِلُ مِائَةَ فَرَسٍ مُسْرَجَةٍ مُلْجَمَةٍ تَحْمِلِينَ عَلَيْهَا فِي سَبِيلِ اللهَ ) “அல்ஹம்துலில்லாஹ்' என நூறு முறை கூறுங்கள், கடிவாளமிட்ட சேனையுடன் நூறு குதிரைகளை அல்லாஹுத்தஆலாவின் பாதையில் சவாரி செய்யக் கொடுத்ததற்குச் சமமான நன்மைகள் கிடைக்கும்” என்றார்கள். நூல்:- இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத், தப்ரானீ, ஹாகிம், மஜ்மஉஸ்ஸவாயித், முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-504

 

காரியங்களைத் துவங்கும்போது...

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( كُلُّ كَلاَمٍ لاَ يُبْدَأُ فِيهِ بِـالْحَمْدُ لِلَّهِ فَهُوَ أَجْذَمُ ) "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறப்படாமல் துவங்கப்பட்ட ஒவ்வொரு காரியமும் வீணானவையாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4200, முஸ்னது அஹ்மத்  

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( كُلُّ أَمْرٍ ذِي بَالٍ لاَ يُبْدَأُ فِيهِ بِالْحَمْدِ أَقْطَعُ ) இறைவாழ்த்து (அல்ஹம்துலில்லாஹ்) சொல்லி தொடங்கப்படாத ஒவ்வொரு (முக்கிய) விஷயமும் அறவே (பரக்கத் எனும்) அருள்வளம்  அற்றதாகும். அறிவிப்பாளர்:-  அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1884

 

முக்கியமான ஒப்பந்தம் அல்லது சொற்பொழிவுகளாக இருந்தாலும் "அல்ஹம்துலில்லாஹ்" என இறை வாழ்த்து சொல்லி துவங்கவேண்டும் அவ்வாறு இறைவாழ்த்து சொல்லப்படாமல் துவங்கப்படும் காரியத்தில் அருள்வளம் நீங்கிவிடுகிறது என்று இந்நபிமொழி உணர்த்துகிறது.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَسَمُّوا إِذَا أَنْتُمْ شَرِبْتُمْ وَاحْمَدُوا إِذَا أَنْتُمْ رَفَعْتُمْ ) நீங்கள் (பானங்கள்) பருகும்போது "பிஸ்மில்லாஹ்" என்று கூறுங்கள். பருகி முடித்ததும் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறுங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1807

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருமுறை உணவு உண்ட பின்னர் அதற்காக (அல்ஹம்துலில்லாஹ் என்று) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்ற அல்லது ஒருமுறை பானம் அருந்திய பிறகு அதற்காக (அல்ஹம்துலில்லாஹ் என்று) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்ற அடியான் குறித்து அல்லாஹ் சந்தோஷம் கொள்கிறான். நூல்:- முஸ்லிம்-5282

 

தும்மலின்போது

 

ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்கள் மண்ணால் படைக்கப்பட்டு, உயிர் ஊதப்பட்டவுடன் ஆதம் (அலை) அவர்களுக்கு தும்மில் ஏற்பட்டது. உடனே அவர்கள் "அல்ஹம்துலில்லாஹ்" என்று தான் கூறினார்கள் என்கிறது அவர்களது வரலாறு. அதாவது, மனிதன் கூறிய முதல் சொல் "அல்ஹம்துலில்லாஹ்" தான் என்பது குறிப்பிடத்தக்கது.


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ، فَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ، فَحَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ سَمِعَهُ أَنْ يُشَمِّتَهُ ) அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். ஆகவே, ஒருவர் தூம்மியவுடன் "அல்ஹம்துலில்லாஹ்" (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு (யர்ஹமுக்கல்லாஹ் -  அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும் என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும்.  அறிவிப்பாளர்:-  அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6223

 

தும்மலினால் கழிவுகள் வெளியேறி, மயிர்க்கண் திறந்து, உடல் இலேசாகிறது. புத்துணர்ச்சியும் உற்சாகமும் தோன்றுகிறது. மனிதனின் புத்தியக்கத்திற்கு வழிகோலுவதாலும் தும்மல் விரும்பத்தக்கதாகும். இதனாலேயே தும்மியவர்  இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு "அல்ஹம்துலில்லாஹ்" என அல்லாஹ்வைப் புகழ்கிறார். அல்லாஹ்வைப் புகழ்ந்ததற்குப் பிரதிபலனாக அதைக் கேட்டவர் "யர்ஹமுகல்லாஹ்" (அல்லாஹ் உங்களுக்குக் கருணை செய்வானாக) என பிரார்த்திக்கிறார்.

 

மூளை நரம்புகளில் சில சமயம் காற்று தங்கிவிடுகிறது. அதை வெளியேற்றுவதற்காக ஒரு அழுத்தம் தும்மலின் மூலம் கொடுக்கப்படுகிறது. மூளை நரம்புகளில் அடைபட்டிருக்கும் காற்று மூக்கின் மூலம் வெளியேற்றப்படுகிறது. மூளை நரம்புகளில் இந்த காற்று தங்கிவிட்டால் பக்கவாத நோய் ஏற்படும் ஆபத்து உண்டாகிறது. எனவே தான் தும்முபவன் "அல்ஹம்துலில்லாஹ்" என்று சொல்லி அல்லாஹ்வின் உபகாரத்திற்கு நன்றி செலுத்துகிறான்.

 

சிலர் குப்பை கூளங்களுக்கு மத்தியிலும், தூசி புழுதி நிறைந்த இடங்களிலும் நாள் முழுவதும் வேலை செய்வதால் புழுதிகள், கிருமிகள் மூக்குக்கு உள்ளே நுழைந்து கொள்கின்றன. அவைகளை வெளியேற்றுவதற்காகத்தான் அல்லாஹ் தும்மலை மனிதனுக்கு கொடுத்துள்ளான். அதன் மூலம் பல்வேறு ஆபத்தான நோய்களை விட்டும் மனிதன் பாதுகாக்கப்படுகிறான்.

 

எனவேதான், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தும்மலை விரும்பி வரவேற்றுள்ளார்கள்.

 

ஒருவர் தும்மியவுடன் “அல்ஹம்துலில்லாஹ்” என்று சொல்ல வேண்டுமென இஸ்லாம் இயம்புவதன் நோக்கம் என்னவெனில், நாம் தும்மும்போது தும்மலின் வேகம் 100 கி.மீ. ஆக இருக்கும். இதன் நேரம் மிகக் குறுகியதாக இருந்தாலும், நாம் தும்மும்போது இதயம் உட்பட நமது அனைத்து அவையங்களும் இயங்காமல் நின்று விடுகின்றன. இதனால் சிலவேளை நாம் இறக்கவும் நேரிடலாம். தும்மி முடிந்ததும் நமது உயிரை அப்படியே வைத்ததற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே நாம் அல்ஹம்துலில்லாஹ்என்று கூறுகிறோம்.

 

மறுமொழி கூறினார்

 

ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபையில் ஒரு யூதர் அமர்ந்திருந்தார். அப்போது அண்ணலார் தும்மிவிட்டு, (அல்ஹம்துலில்லாஹ்) “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே” என்றார்கள். அதைச் செவியுற்ற அந்த யூதர், (யர்கமுகுமுல்லாஹ்) "உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக" என்று மறுமொழி கூறினார். இதனால் சந்தோசமுற்ற அண்ணலார், (யஹ்தீகுமுல்லாஹ்) "உமக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக" என்று பிரார்த்தித்தார்கள். அதன் பிறகு அந்த யூதர்  இஸ்லாத்தில் இணைந்துவிட்டார். நூல்:- பைஹகீ

 

பிரார்த்தனையின்போது...

 

ஒரு மனிதர் தொழுகையில் அல்லாஹ்வை கண்ணியப்படுத்தாமலும் (புகழாமலும்) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மீது சலவாத்து  ஓதாமலும் பிரார்த்திப்பதை அண்ணலார் செவியுற்றார்கள். அப்போது அண்ணலார் (அஜில ஹாதா) "இவர் அவசரப்பட்டுவிட்டார்" என்று கூறினார்கள். பின்னர் அண்ணலார் அவரை அழைத்து "உங்களில் ஒருவர் தொழுதால் முதலில் அவர் அல்லாஹ்வை கண்ணியப்படுத்தும் விதத்தில் (‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறி) புகழட்டும். பின்னர் அருமை நாயகம் (ஸல்) மீது சலவாத்து ஓதட்டும். பின்னர் தான் நாடியதை பிரார்த்திக்கட்டும்" என்று கூறினார்கள்.  அறிவிப்பாளர்:- ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள்  நூல் :-அபூதாவூத்-1481, திர்மிதீ-3389, இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا أَنْعَمَ اللَّهُ عَلَى عَبْدٍ نِعْمَةً فَقَالَ الْحَمْدُ لِلَّهِ ‏.‏ إِلاَّ كَانَ الَّذِي أَعْطَاهُ أَفْضَلَ مِمَّا أَخَذَ ‏ ) அல்லாஹ் (தன்) அடியாருக்கு அருள்வளம் ஏதேனும் அருளும் போது அவர் "அல்ஹம்துலில்லாஹ்" (எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறினால், அந்த அடியார் மொழிந்த (இறைபுகழ் சொல்லான)து அவர் பெற்றுக்கொண்ட (அருள்வளத்)தைவிட சிறந்ததாகிவிடும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-3795

 

தேவை வரும்போது தான் நம்மையெல்லாம் உங்களுக்குத் தெரியும் என்று சொல்லக்கூடாது. மக்களின் தேவையை நிறைவேற்ற நமக்கு வசதிவாய்ப்பை வழங்கிய “அல்ஹம்துலில்லாஹ்” (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொல்லவேண்டும்.

 

ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் "அல்ஹம்துலில்லாஹ்" என்ற முத்திரை பதித்த மோதிரத்தை அணிந்திருந்தார்கள்.

 

நெடும் புகழ் நீதியரசர் ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

( إِنِّي لَأُصَابُ بِالْمُصِيبَةِ، فَأَحْمَدُ اللَّهَ عَلَيْهَا أَرْبَعَ مَرَّاتٍ؛ أَحْمَدُ إِذْ لَمْ يَكُنْ أَعْظَمَ مِنْهَا، وَأَحْمَدُ إِذْ رَزَقَنِي الصَّبْرُ عَلَيْهَا، وَأَحْمَدُ إِذْ وَفَّقَنِي لِلِاسْتِرْجَاعِ لِمَا أَرْجُو مِنْ الثَّوَابِ، وَأَحْمَدَ إِذْ لَمْ يَجْعَلْهَا فِي دِينِي )

எனக்கு பொருள் இழப்பு, உயிர் இழப்பு, உடல் நலக்குறைவு போன்ற ஏதேனும் சோதனை ஏற்பட்டால், நான் அதற்காக நான்கு முறை "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறி அல்லாஹ்வை புகழ்வேன்.

 

இதைவிட பெரிய சோதனை எனக்கு தரப்படவில்லை என்றெண்ணி முதலில் “அல்ஹம்துலில்லாஹ்” என்று சொல்வேன். (நமக்கு ஒரு சோதனை ஏற்படும்போது அதைவிட பெரிய சோதனை ஏற்படவில்லையே என்று ஆறுதல் அடைந்துகொள்ள வேண்டும்.) ஏற்படும் சோதனையை தாங்கிக் கொள்ளும் அளவிற்கு பொறுமை வழங்கப்பட்டதற்காக. இரண்டாவது முறை “அல்ஹம்துலில்லாஹ்” என்று சொல்வேன். சோதனைகள் ஏற்படும்போது “இன்னாலில்லாஹி” என்று சொல்கிறேன் அவ்வாறு சொல்வதால் எனக்கு நன்மைகள் பதிவு செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பு எனக்கு தரப்பட்டிருப்பதற்காக. மூன்றாவது முறை "அல்ஹம்துலில்லாஹ்" என்று சொல்வேன். எனக்கு ஏற்பட்ட  பொருள் இழப்பு, உயிர் இழப்பு, உடல் நலக்குறைவு போன்ற சோதனைகள் உலகம் சார்ந்தவை தான். இறைநம்பிக்கையை இழப்பது போன்ற மறுமை சம்பந்தப்பட்ட விஷயத்தில் எனக்கு சோதனைகள் வரவில்லையே என்றெண்ணி நான்காவது முறை "அல்ஹம்துலில்லாஹ்" என்று சொல்வேன். அறிவிப்பாளர்:- ஷஅபீ (ரஹ்) அவர்கள் நூல்:- சியரு அஃலாமுந் நுபலா 4/105

 

"அல்ஹம்துலில்லாஹ்" என்ற திக்ரை நாம் சொல்வதின் மூலம் நம்முடைய இன்னல்கள் நீங்கும். அருள்வளம் பெருகும். நன்மையின் தட்டு கனமாகும். எனவே, நாம் அனுதினமும் "அல்ஹம்துலில்லாஹ்" என்ற திக்ரை அதிகமதிகமாக ஓதி, இறைவனின் நெருக்கத்தையும் நேசத்தையும் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

Saturday, 18 February 2023

பெண்ணுக்கு மரியாதை

 

பெண்ணுக்கு மரியாதை

 

وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ

 

அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நற்செய்தி கூறப்பட்டால், அவனுடைய முகம் (துக்கத்தால்) கறுத்து கோபத்தை விழுங்குகிறான். திருக்குர்ஆன்:- 16:58

 

ஒரு பெண் தாயாக, சகோதரியாக, மனைவியாகமகளாக பல்வேறு பரிணாமம் அடைகிறாள். அவள் எந்த பருவத்தில் இருந்தாலும் அவளைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆணுக்குரியது. அதன்மூலம் அவன் இறையன்பைப் பெறுவான் என்கிறது இஸ்லாம்.

 

அம்மா, உன்னை சொர்க்கத்தில் கொண்டு சேர்ப்பார்.

சகோதரி, உனக்கு சொர்க்கம் கிடைக்க காரணமாவாள்.

மனைவி, உன் மார்க்கத்தின் பாதியைப் பரிபூரணப்படுத்துவாள்.

மகள், நரகத்திற்கு தடையாவாள்.    

எந்த வயதிலும் பெண் மகத்தானவளே என்கிறது இஸ்லாம்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اِسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا ) பெண்களுக்கு நன்மையே நாடுங்கள். (அவர்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளும்படி கூறும்) எனது அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்  நூல்:- புகாரீ3331, முஸ்லிம்-2914

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( حُبِّبَ إِلَىَّ مِنَ الدُّنْيَا النِّسَاءُ وَالطِّيبُ ) உலகப் பொருள்களில் எனக்கு பெண்களும் நறுமணமும் பிடித்தமானவையாக ஆக்கப்பட்டுள்ளன. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- நசாயீ, முஸ்னது அஹ்மத் தஃப்சீர் இப்னு கஸீர் ஆலு இம்ரான் வசனம்-39

 

தாய்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اَلجَنَّةُ تحْتَ أَقدَامِ الأمَّهَاتِ ) தாய்மார்களின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- அல்காமில் இமாம் இப்னு அதிய்யி, ளஈஃபுல் ஜாமிஉ-2666, ஹாகிம்

 

அபுத் துஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் 'ஜியிர்ரானா' எனும் இடத்தில் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுப்பதை நான் கண்டேன். அந்நாளில் நான் சிறுவனாக இருந்தேன். ஒட்டகத்தின் எலும்புகளைச் சுமந்து செல்வேன். அப்போது ஒரு பெண்மணி நபியவர்களை நோக்கி நெருங்கி வந்தார். அந்த பெண்மணி அமர்வதற்காக நபியவர்கள் தமது சால்வையை விரித்தார்கள். அந்த பெண்மணி அதன் மீது அமர்ந்தார். அப்போது நான், "(அங்கிருந்தோரிடம்) இவர் யார்?" என்று வினவினேன். அதற்கு மக்கள், "இந்தப் பெண்மணி நபியவர்களுக்கு பாலூட்டிய (செவிலித்)தாய் ஆவார்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-4478

 

நபித்தோழி ஜாஹுமா (ரலி) அவர்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் அறப்போரில் கலந்து கொள்ள ஆலோசனை கேட்டார். அவரிடம் நபியவர்கள், "உமக்கு தாயார் உண்டா?" என்று கேட்க, அவர் "ஆம்" என்றார். உடனே நபியவர்கள், "தாயாருக்கு சேவை செய்வதை உமது கடமையாக ஆக்கிக் கொள்! தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது" என்றார்கள்.

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! நான் பெரும் பாவம் ஒன்றைச் செய்துவிட்டேன். எனக்கு பாவமீட்சி உண்டா?" என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ( هَلْ لَكَ مِنْ أُمٍّ ) "உமக்குத் தாய் இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்றார். நபியவர்கள், ( هَلْ لَكَ مِنْ خَالَةٍ ) "உமக்குச் சிற்றன்னை (தாயின் சகோதரி) இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" (இருக்கிறார்) என்றார். நபியவர்கள், ( فَبِرَّهَا ) "அவ்வாறாயின் அவருக்கு நீர் நன்மை செய்வீராக!" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-1827, முஸ்னது அஹ்மத்

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, "நான் ஒரு பெண்ணை மணமுடிக்க விரும்பினேன். அவள் மறுத்துவிட்டாள். மற்றொருவர் விரும்பியபோது அவள் சம்மதித்துவிட்டாள். இதனால் ரோசம் கொண்ட நான் அவளை கொலைசெய்து விட்டேன். எனக்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? என்று கேட்டார்.

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், ( أُمُّكَ حَيَّةٌ‏؟ ) "உமக்கு தாய் இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அவர், "இல்லை" என்றார். அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அவரிடம், ( تُبْ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ، وَتَقَرَّبْ إِلَيْهِ مَا اسْتَطَعْتَ‏ )  அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு செய்து, முடிந்தளவு அல்லாஹ்வின் நெருக்கத்தை தேடிக்கொள்!" என்றார்கள். இந்த நிகழ்வை அறிவிகின்ற அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான்  அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "உமது தாய் உயிருடன் இருக்கிறாரா? என்று ஏன் வினவினீர்கள்? என்று கேட்டேன். அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், ( إِنِّي لاَ أَعْلَمُ عَمَلاً أَقْرَبَ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ مِنْ بِرِّ الْوَالِدَةِ‏ ) "அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக ஆவதற்கு தாய்க்கு உபகாரம் செய்வதைவிட சிறந்த  எந்த நற்செயலையும் நான் அறியமாட்டேன்" என்று கூறினார்கள். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-4

 

தாயைக் கௌரவிப்பதும் சொர்க்கத்தில் நுழைவதற்கான காரணங்களில் ஒன்றாகும். தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளதுஎன்பது தாய்க்கு சேவை செய்வதே தூய்மையான சேவையாகும். இந்த சேவையை செய்வதில் சுயநலமோ, அகங்காரமோ இருக்கக்கூடாது. தாய் இறைமறுப்பாளராக இருந்தாலும் சரியே! இதுவே, எல்லாம் வல்ல இறைவனின் கூற்று.

 

மனிதன் செய்துவிட்ட சில பாவங்களுக்கு பரிகாரம் தாய்க்கு அல்லது தாய் இறந்துவிட்டால் தாயின் சகோதரிகளுக்கு பணிவிடை செய்வதில் இருக்கிறது என்று இந்த இரு நபிமொழிகளும் இயம்புகிறது. தாயின் சகோதரி தாயின் அந்தஸ்தில் உள்ளவள் என்கிறது இஸ்லாம்.

 

சகோதரி

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَتْ لَهُ أُخْتَانِ ، فَأَحْسَنَ صُحْبَتَهُمَا مَا صَحِبَتَاهُ ، دَخَلَ بِهِمَا الْجَنَّةَ ) ஒருவருக்கு சகோதரிகள் இருவர் இருந்து, அவ்விருவரும் அவருடன் இருக்கும் காலமெல்லாம் அவர்களுடன் அவர் நல்ல முறையில் உறவாடினால், அவ்விருவர் மூலம் அவர் சொர்க்கத்தில் நுழைவார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்-2000

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَ لَهُ ثَلاثُ أَخَوَاتٍ أَوْ أُخْتَانِ فَأَحْسَنَ صُحْبَتَهُنَّ وَاتَّقَى اللَّهَ فِيهِنَّ فَلَهُ الْجَنَّةُ ) ஒருவருக்கு மூன்று சகோதரிகளோ அல்லது இரண்டு சகோதரிகளோ இருந்து அவர் உரிய முறையில் அவர்களின் உறவை(யும் கடமையையும் பேணி)க் காத்து, அவர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொண்டால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும். அறிவிப்பாளர்:-  அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:-  திர்மிதீ-1839, அல்அதபுல் முஃப்ரத்-79

 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் (கன்னிப் பெண்ணை தவிர்த்து) ஒரு விதவைப் பெண்ணை தான் மணமுடித்தேன். அதற்கு காரணம் என்னவென்றால் என் தந்தை (உஹது போரில்) இறந்து விட்டார். (அவர் இறக்கும் போது) ஏழு பெண் பிள்ளைகளை விட்டுச் சென்றுள்ளார். வயதில் அந்த பெண் பிள்ளைகளைப் போன்ற ஒரு (இளம் வயது) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்து செல்வதை நான் விரும்பவில்லை. ஆகவே நான் அவர்களைப் பாராட்டி சீராட்டி வளர்க்கும் (அனுபவமுள்ள) ஒரு பெண்ணை மணந்து கொண்டேன் என்றார்.

 

இதைச் செவியுற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( بَارَكَ اللَّهُ لَكَ أَوْ خَيْرًا‏ ) "அல்லாஹ் உனக்கு அருள்வளம் புரிவானாக! அல்லது நன்மையைப் பொழிவானாக!" என்று கூறினார்கள்.      நூல்:- புகாரீ-5367, முஸ்லிம்-2908

 

இளம் வயதினர் கன்னிப்பெண்களை மணமுடிப்பதைத்தான் விரும்புவார்கள். ஆனால், இங்கே வாலிப முறுக்கோடு இருந்த ஜாபிர் (ரலி) அவர்கள் தமது சகோதரிகளை நல்ல முறையில் பக்குவமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக குடும்ப வாழ்க்கையில் பக்குவப்பட்ட ஒரு விதவைப் பெண்ணை திருமணம் முடித்திருக்கிறார். ஜாபிர் (ரலி) அவர்கள் தமது சகோதரிகளுக்காக இல்லறத்தில் கிடைக்கும் சில இன்பங்களை தியாகம் செய்துள்ளார். இவரின் தியாகத்தை எண்ணி இவரின் நல்வாழ்வுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

 

நமது பகுதியில் தம்முடைய சகோதரிகளுக்கு மணமுடித்து வைப்பதற்காக அரும்பாடுபட்டு பொருளீட்டி அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்த பிறகு தான் தமக்கு திருமணம் என்றெண்ணும் சகோதரர்கள் ஏராளம்.

 

இன்னும் சில சகோதரர்கள், தமது சகோதரிகளுக்கு மணமுடித்து வைத்த பிறகும்கூட தமது மச்சான்மார்கள் பொருளாதாரத்தில் சிறந்தோங்க, அவருக்கு உடலாலும் பொருளாலும் உதவி செய்கிறார்கள். மேலும் தமது சகோதரிகளின் பிள்ளைகளை தமது பிள்ளைகள் என்றெண்ணி அவர்களை வளர்ப்பதிலும் அரும்பாடு படுகிறார்கள்.

 

மனைவி

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اِذَا تَزَوَّجَ العَبدُ فَقَد اِستَکمَلَ نِصفُ الدِّینِ فَلیَتَّقِ اللّٰهَ فِی النِّصفِ البَاقِی ) ஒரு மனிதன் திருமணம் செய்து கொண்டால் அவனுடைய மார்க்கம் பாதி பரிபூரணமாகிவிட்டது. மீதியுள்ள பாதியில் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள்  நூல்:- பைஹகீ, அல்தன்வீர் ஷரஹ் ஜாமிஉஸ் ஸஙீர், தக்ரீஜுல் கஷ்ஷாஃப், மிஷ்காத் பக்கம்-268

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (  وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ خُلُقًا) உங்களில் தம் துணைவியரிடம் நற்பண்புகளுடன் நடந்துகொள்பவரே உங்களில் சிறந்தவர் ஆவார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1082, இப்னுமாஜா-1968, முஸ்னது அஹ்மத்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الدُّنْيَا مَتَاعٌ وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ‏ ) இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் நூல் முஸ்லிம்-2911, நசாயீ-3180, இப்னுமாஜா-1845, முஸ்னது அஹ்மத்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( حُبِّبَ إلَيَّ مِن دُنْيَاكُمُ النِّسَاءُ وَالطِّيبُ ) உங்கள் உலகப் பொருள்களில் எனக்கு பெண்களும் நறுமணமும் பிடித்தமானவையாக ஆக்கப்பட்டுள்ளன. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:-  நசாயீ, முஸ்னது அஹ்மத் தஃப்சீர் இப்னு கஸீர் ஆலு இம்ரான் வசனம்-39

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( بِخَيْرِ مَا يَكْنِزُ الْمَرْءُ الْمَرْأَةُ الصَّالِحَةُ ) ஒரு மனிதர் சேகரிக்கும் செல்வங்களிலேயே மிகச்சிறந்தது, நல்ல மனைவி ஆவாள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1417

 

ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது. தங்கம் வெள்ளி (ஆகியவற்றைச் சேமித்து வைத்துக்கொண்டு ஸக்காத் செலுத்தாமல் இருப்பதைப்) பற்றி (9:34ஆம்) இறைவசனம் இறங்கியபோது நபித்தோழர்கள், "பிறகு எந்த பொருளைத்தான் நாம் தேடி வைத்துக் கொள்வது?" என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "நான் இதை(ப் பற்றி தெரிந்து) உங்களுக்கு அறிவிக்கிறேன்" (என்று கூறிவிட்டு) நபியவர்களிடம் சென்றார்கள். நான் அவர்களுக்கு பின்னாலே சென்றேன். உமர் (ரலி) அவர்கள், ( أَىَّ الْمَالِ نَتَّخِذُ ) "நாயகமே! நாங்கள் எந்தப் பொருளைத் தேடி வைத்துக் கொள்ள (முயல) வேண்டும்?" என்று வினவினார்கள்.

 

அதற்கு அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( لِيَتَّخِذْ أَحَدُكُمْ قَلْبًا شَاكِرًا وَلِسَانًا ذَاكِرًا وَزَوْجَةً مُؤْمِنَةً تُعِينُ أَحَدَكُمْ عَلَى أَمْرِ الآخِرَةِ ) "உங்களுள் ஒருவர் நன்றி செலுத்தும் உள்ளத்தையும், (அல்லாஹ்வைப் போற்றித்) துதிக்கும் நாவையும், உங்களுக்கு மறுமை தொடர்பான விஷயங்களில் ஒத்துழைக்கும் இறைநம்பிக்கையுள்ள (நல்ல) மனைவியையும் தேடிக்கொள்ள (முயல) வேண்டும்" என்று பதிலளித்தார்கள். நூல்:- இப்னுமாஜா 1846, முஸ்னது அஹ்மத்

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் தன் மனைவியின் கெட்ட குணம் பற்றி முறையிட வந்தார். வீட்டை அடைந்தவுடன் உமர் (ரலி) அவர்கள் வெளியே வருவதை எதிர்பார்த்து வாசலில் காத்திருந்தார். அப்போது வீட்டுக்குள் உமர் (ரலி) அவர்களின் மனைவி உமர் (ரலி) அவர்களைத் திட்டுவதையும் அதைக் கேட்டும் உமர் (ரலி) அவர்கள் பதில் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்ததையும் கண்டு உமர் (ரலி) அவர்களின் நிலையே இவ்வாறென்றால் என்னுடைய நிலை எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணிக்கொண்டே வீட்டுக்குத் திரும்பினார்.

 

அப்போது உமர் (ரலி) அவர்கள் அவரைப் பார்த்துவிட்டு, அவரை அழைத்து ( مَا حَاجَتُك يَا أَخِي ؟ ) “சகோதரரே! (எதற்காக வந்தீர்கள்) உமது தேவை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ( يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ جِئتُ أَشْكُو إلَيْك خُلُقَ زَوْجَتِي وَاسْتِطَالَتَهَا عَلَيَّ فَسَمِعْتُ زَوْجَتَكَ كَذَلِكَ فَرَجَعْت ) "ஜனாதிபதி அவர்களே! உங்களிடம் என் மனைவியின் கெட்டகுணம் பற்றி முறையிட வந்தேன். ஆனால், (இங்கு வந்து உங்கள் நிலையைக் காணும்போது) உங்கள் மனைவியும் இவ்வாறுதான் இருக்கிறார் என்று செவியுற்ற பிறகு (இதற்கு என் மனைவி எவ்வளவோ பரவாயில்லை என்று எண்ணிக்கொண்டு) வீட்டுக்குத் திரும்புகிறேன்" என்று கூறினார். அப்போது உமர் (ரலி) அவர்கள் அவரிடம், ( إنَّمَا تَحَمَّلْتُهَا لِحُقُوقٍ لَهَا عَلَيَّ : إنَّهَا طَبَّاخَةٌ لِطَعَامِي خَبَّازَةٌ لِخُبْزِي غَسَّالَةٌ لِثِيَابِي رَضَّاعَةٌ لِوَلَدِي ، وَلَيْسَ ذَلِكَ بِوَاجِبٍ عَلَيْهَا ، وَيَسْكُنُ قَلْبِي بِهَا عَنْ الْحَرَامِ ، فَأَنَا أَتَحَمَّلُهَا لِذَلِكَ ) “(சகோதரரே! நான் சொல்வதை நன்றாக கேளுங்கள்.) மனைவியின் மீது எனக்குள்ள கடமைகள் என்ற அடிப்படையில் நான், அவள் பேசுவதை சில நேரம் சகித்துக் கொள்கிறேன். என் மனைவி எனக்காக உணவு சமைக்கும் சமையல்காரி ஆவாள். எனது ஆடையைத் துவைக்கும் சலவைக்காரி ஆவாள். என் குழந்தைக்கு பாலூட்டுபவள் ஆவாள். இதுவெல்லாம் அவள் மீது கடமை இல்லை‌; எனினும் அவள் செய்கிறாள். (இத்தனைக்கும் மேலாக) அவளால் தான் என்னுடைய உள்ளம் மற்ற பெண்களின் மீது (தவறான முறையில்) அலைபாயாமல் அமைதி பெறுகிறது. (அதாவது, எனது உடல் தேவையை அவள் மூலமாக தான் பூர்த்தி செய்துகொள்கிறேன்.) இத்தனை விஷயங்களுக்காக நான் அவள் பேசுவதை சிலநேரம் சகித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்கள்.

 

அதற்கு அந்த மனிதர், ( يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ وَكَذَلِكَ زَوْجَتِي ؟ ) "ஜனாதிபதி அவர்களே! என் மனைவியும் அவ்வாறு தான் (எனக்காக மற்ற பணிவிடைகள் அனைத்தும் செய்கிறாள். எனினும் அதிகம் வாயாடுகிறாள்) என்ன செய்வது? கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ( فَتَحَمَّلْهَا يَا أَخِي فَإِنَّمَا هِيَ مُدَّةٌ يَسِيرَةٌ ) "சகோதரரே! நீர் சற்று பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். இதுவெல்லாம் உலகத்துடைய கொஞ்ச கால வாழ்க்கை தான்" என்று அறிவுரை கூறினார்கள். நூல்:- ஹாஷியா ஷரஹுல் மின்ஹாஜ் 3/441 இமாம் சுலைமான் பின் முஹம்மத், தன்பீஹுல் ஙாஃபிலீன் பக்கம்-517 இமாம் அபூலைஸ் ஸமர்கந்தீ, அஸ்ஸவாஜிர் 2/80 இமாம் இப்னு ஹஜர் அல்ஹைதமீ

 

கணவனை எதிர்த்துப் பேசுகிறாள் என்பதற்காக அவள் “தரமற்றவள்” என்று சொல்லிவிட முடியாது. எந்தக் குறையும் இல்லாத மனைவி யாருக்கும் கிடைப்பதில்லை. இது தான் குடும்ப வாழ்க்கையின் யதார்த்தம்.

 

ஒரு பெண், தனது கணவனுக்காக தன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அவனுடைய சொந்தங்களை தன்னுடையதாக்கிக் கொள்கிறாள். ஊர், முகவரி, வீடு முதற்கொண்டு அனைத்தையும் மாற்றிக்கொள்ள முன் வருகிறாள். தான் கண்ட கனவுகள் அனைத்தையும் கொண்டவனுக்காக மறக்கிறாள்.

 

"மனைவியின் அருமை மறைவில்" என்றான் ஒரு கவிஞன்.

 

கணவனை இழந்த மனைவியை விடவும், மனைவியை இழந்த கணவன் தான் அதிகம் நொடிந்து போகிறான். காரணம், கணவனை இழந்த மனைவி அவளது கணவனை மட்டுமே இழக்கிறாள். ஆனால், மனைவியை இழந்த கணவன் தனக்கு ஆடையாய் இருந்த மனைவியை, தோளுக்குத் தோளாய் இருந்த  தோழியை, நோய்படும்போது தானும் நோகும் தாயை இழக்கிறான். ஒரு மனைவி எத்தனை பரிணாமம் அடைகிறாள்?

 

வீட்டின் வேலைக்காரியாக, சலவைக்காரியாக, சமையல்காரியாக, கணக்குப்பிள்ளையாக பல வேலைகளை எதிர்பார்ப்பின்றி செய்கிறாள். அவள் இருக்கும் வரை இத்தனை வேலைகள் யார் செய்தார் என்று குடும்பத்தில் யாருக்கும் உணர்ச்சி வருவதேயில்லை.

 

“பொன்னின் அருமை அதை தொலைத்த பின் தான் தெரியும். பெண்ணின் அருமை அவள் மறைந்த பின் தான் தெரியும்” என்பது கிராமத்து சொல்வழக்கு

 

கணவனை இழந்த மனைவிகளுக்கு பிள்ளைகள் மூலம் நிவாரணமும் மனவலிமையும் கிடைத்துவிடுகிறது. ஆனால், மனைவியை இழந்த கணவர்களுக்கு அனைத்தும் இருந்தும் அனாதை ஆனதைப்போன்ற ஒருவித தவிப்பு ஏற்படுகிறது. இதுவே பலரின் அனுபவம்.

 

தனது சுக-துக்கம், இன்ப-துன்பம், தோல்வி-வெற்றி என அனைத்திலும் கூடவே இருந்து தன்னை சகித்து வாழ்ந்த தனது மனைவி இறக்கும்போது ஒவ்வொரு ஆடவனும் இறந்தே தான் விடுகிறான்.

 

மகள்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ وُلِدَتْ لَهُ ابْنَةٌ، فَلَمْ يَئِدْهَا، وَلَمْ يُهِنْهَا، وَلَمْ يُؤْثِرْ وَلَدَهُ عَلَيْهَا ـ يَعْنِي الذَّكَرَ ـ أَدْخَلَهُ اللهُ بِهَا الْجَنَّةَ ) ஒருவருக்குப் பெண் குழந்தை பிறந்து, அதை அவர் உயிருடன் புதைக்காமல், இழிவாகக் கருதாமல், அதைவிட தன் (ஆண்) குழந்தைக்கு முன்னுரிமை அளிக்காமல் நடந்து கொண்டால், அந்தக் குழந்தையின் காரணமாக அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச்செய்வான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4480, முஸ்னது அஹமத்-1856

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. என்னிடம் ஒரு பெண்மணி வந்தார் தம்முடைய இரு பெண் குழந்தைகளுடன் வந்து ஏதேனும் தரும்படி யாசித்தாள். அப்போது என்னிடம் ஒரே ஒரு பேரீச்சம்பழத்தைத் தவிர வேறு எதுவுமில்லை. ஆகவே, நான் அதை அவருக்குக் கொடுத்தேன். உடனே அதனை அவர் இரண்டாகப் பிட்டு குழந்தைகள் இருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார். பிறகு அப்பெண்மணி எழுந்து சென்றுவிட்டார். பின்னர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் இதைப் பற்றி நான் சொன்னேன்.

 

அதற்கு நபியவர்கள், ( مَنْ يَلِي مِنْ هَذِهِ الْبَنَاتِ شَيْئًا فَأَحْسَنَ إِلَيْهِنَّ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ ) "யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்" என்றார்கள். நூல்:-  புகாரீ-5995

 

அபூபக்ர் வர்ராக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நோயுற்ற பெண் பிள்ளையொன்று எனக்கிருந்தது. அவளுக்குப் பத்து வயது. நோயினால் அவள் வேதனைப்படுவதைக் கண்டு, அவள் இறந்து விடவேண்டுமென்று ஆசைப்பட்டேன். அவ்வாறே அவளும் இறந்து விட்டாள்.

 

பின்னர் அவளைக் கனவில் கண்டேன். மறுமைநாள் வந்துவிட்டது போலிருந்தது. ஒவ்வொரு பிள்ளைகள் அவர்களின் பெற்றோரை அழைத்துக்கொண்டு சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள்.

 

நான் என் மகளிடம், ( خُذِي بِيَدِي ادْخُلِينِي الْجَنَّةَ ) "(மகளே!) என் கையைப் பிடித்து சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்!" என்கிறேன். அவள், ( لَا انْتَ كُنْتَ تَتَمَنِّي مَوْتِي ) "மாட்டேன். ஏனெனில், நான் இறந்து விடவேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டீர்கள்!" என்று பதில் சொன்னாள்.   நூல்:- தாரீக் பக்தாத் 6/212

 

அறிஞர் அஹ்மத் ஹள்ரமி (ரஹ்) அவர்களுக்கு ஆறு பெண்பிள்ளைகள் இருந்தனர்கள். அன்னாரின் மனைவி மீண்டும் கர்ப்பமுற்றார். அதன் பிறகு அன்னார், "இறைவா! எனக்கு ஒரு ஆண் பிள்ளையை தருவாயாக" என்று அடிக்கடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். அன்னார் ஒரு நாள் கனவு காண்கிறார்கள். அந்தக் கனவில், அன்னாரை நரகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறது. (நரகங்கள் ஏழு) ஒவ்வொரு நரகத்தின் வாசலிலும் அன்னாருடைய ஒவ்வொரு பெண் பிள்ளைகள் நின்று கொண்டு, "எங்கள் தந்தையை நரகத்திற்கு அழைத்துச் செல்ல விடமாட்டோம்" என்று தடுக்கிறார்கள்.

 

இறுதியாக, அன்னாரை ஏழாவது நரகத்திற்கு அழைத்துச் சென்றபோது அங்கே தடுப்பதற்கு ஆள் இல்லை. அன்னார் பயந்தவராக திடீரென விழித்து விட்டார்கள். அதன் பிறகு, அன்னார், "இறைவா இறைவா! நான் உன்னிடம் தவறாக பிரார்த்தனை செய்து விட்டேன். எனக்கு ஏழாவதும் பெண் பிள்ளையை தந்து விடுவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.

 

பெண் குழந்தை என்பது பெற்றோருக்குரிய நற்செய்தி என்கிறது தலைப்பில் காணும் திருவசனம்.

 

இமாம் முஹம்மத் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( الْبَنُونَ نِعَمٌ وَالْبَنَاتُ حَسَنَاتٌ وَاللَّهُ عَزَّ وَجَلَّ يُحَاسِبُ عَلَى النِّعَمِ وَيُجَازِي عَلَى الْحَسَنَاتِ ) ஆண் குழந்தைகள் அருட்கொடைகள். பெண் குழந்தைகள் நற்காரியங்கள். அல்லாஹ் அருட்கொடைகளுக்காக விசாரணை செய்வான். நற்காரியங்களுக்காக நற்கூலி வழங்குவான். நூல்:- பஹ்ஜத்துல் மஜாலில் பக்கம்-162, இமாம் இப்னு அப்துல் பர்ரு, அல்ஆதாபுல் ஷரிய்யா இமாம் இப்னு முஃப்லிஹ் 1/154


குழந்தை என்பது மனிதனுக்கு இறைவன் வழங்கும் மிகப்பெரும் கொடை. குழந்தைகள்மீது பாசம் காட்டி, சீரோடும் சிறப்போடும் வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்து வைத்து, அவர்களின் நல்வாழ்வுக்கு வழி வகுக்கும்போது, பெற்றோருக்கு இறைவன் சிறந்த நற்பலனை வழங்குவான்.

 

அதிலும் பெண் குழந்தையாக இருந்த இருந்துவிட்டால், அவளைப் பராமரித்து வளர்த்து ஆளாக்குவதில் உள்ள சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு, பாசம் குறையாமல் திருமணம் வரை பொறுப்போடு நடந்து கொள்ளும் பெற்றோருக்கு மேலான பரிசை இறைவன் வழங்குவான். இதையே இந்த நபிமொழி தெரிவிக்கின்றது.

 

இரு மகள்கள், அல்லது இரு சகோதரிகள் ஒருவருக்கு இருந்து, அவர்கள் பருவம் அடைந்த பிறகும் அவர்கள்மீது பாசம் காட்டி நேசத்தோடு நடந்து கொண்டால், அந்தப் பெற்றோருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குவான்.

 

ஆண் மகனிடமிருந்து எதிர்காலத்தில் கிடைக்கும் உதவிகளை மனதில் கொண்டுகூடப் பெற்றோர் அவர்கள் மீது அதிக நெருக்கத்தைக் காட்டலாம். ஆனால், பெண்களான மகள்களிடமிருந்தோ சகோதரிகளிடமிருந்தோ இருந்து இத்தகைய அரவணைப்புகளைப் பெற்றோர் எதிர்பார்ப்பது அரிது. அப்படியிருந்தும், பிரதிபலன் எதிர்பார்க்காமல் அவர்கள் மீது உண்மையான அன்பும் அக்கறையும் காட்டுவது நிச்சயமாக தியாகமன்றி வேறில்லை. இதனால்தான் பெற்றோருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்கிறது இந்த நபிமொழி.

 

ஒரு ஆண்மகன், உன்னை பெற்றவள், உன்னோடு பிறந்தவள், உனக்காக பிறந்தவள், உன்னால் பிறந்தவள் என இந்த நான்கு பெண்களை கண்ணியப்படுத்துவது அவசியம்.


எனவே, நாம் இஸ்லாம் கூறும் விதத்தில் பெண்களை மதித்து, அல்லாஹுத்தஆலா அன்பைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...