Search This Blog

Sunday, 18 September 2022

நபிகளாரின் நகல்கள்

 

நபிகளாரின் நகல்கள்

 

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ


(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான்.  உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.     திருக்குர்ஆன்:- 3:31

 

உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் பாசம் என்ற உணர்வை அல்லாஹ் படைத்துள்ளான். மனிதனுக்கு கொடுக்கப்பட்ட பாசம், பிரியம் என்ற உணர்வை இறைவன் இறைத்தூதர்கள், நல்லோர்கள் ஆகியோர் மீது செலுத்துவதே வெற்றிக்குரிய வழியாகும்.

 

தலைவரோ, தொண்டரோ, படித்தவரோ, பாமரரோ, படை வீரரோ, தளபதியோ, ஆசிரியரோ, மாணவரோ, செல்வந்தரோ, ஏழையோ, ஆட்சியாளரோ, ஆளப்படுவோரோ, ஞானியோ யாராக இருந்தாலும் அனைவருக்கும் சரியான முறையான வழிநடக்க உதவும் ஓர் அழகிய முன்மாதிரி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தான் அமைந்திருக்கிறது.

 

எனவேதான், இறைவனை நேசிப்பவராக இருக்கும் அனைவரும் என்னை பின்பற்றுங்கள் என்று எடுத்துரைக்குமாறு இறைவன் தன் தூதருக்கு அறிவித்திருக்கின்றான்.

 

நிழல்கள்

 

நீங்கள் இறைநம்பிக்கை கொண்டவாறே அவர்களும் இறைநம்பிக்கை கொண்டால், நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்து விடுவார்கள். திருக்குர்ஆன்:- 2:137

 

அல்லாஹுத்தஆலா, நபித்தோழர்களின் இறைநம்பிக்கையை அங்கீகரித்துள்ளான். அவர்களைப் போல் இறைநம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே நேர்வழி அடைந்தவர்கள் என்று உறுதி செய்கின்றான். நபித்தோழர்களின் இறைநம்பிக்கையை அளவுகோலாகக் கொண்டு மற்றவர்களின் இறைநம்பிக்கைக்கு அங்கீகாரம் தருகின்றான்.

 

இங்கு இறைநம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கைகளை மட்டும் குறிப்பிடாது. அவற்றுடன் வழிபாடுகள், அழகிய செயல்கள் ஆகியவற்றும் அடங்கும். இதன் மூலம் நபித்தோழர்களைப் போல் மார்க்கத்தை புரிந்து செயல்படுத்தியவர்கள் மட்டுமே உண்மையில் நேர்வழி அடைந்தவர்கள் என்று அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

 

தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நபித்தோழர்கள் எவ்விதம் பார்த்தார்களோ நேசித்தார்களோ அதைப்போன்று நாமும் வாழ்க்கையில் கடைபிடித்தால் தான் நமது இறைநம்பிக்கையும் பரிபூரணம் அடைந்து வெற்றி பெற முடியும்.

 

ஒவ்வொரு மனிதனும் மற்றொரு மனிதனுக்கு அடிபடிய வேண்டும் என்றால் சற்று தயங்குவான். ஆனால், நமக்கு பிரியமானவர்கள் ஒரு வார்த்தை சொன்னாலோ அல்லது கண்சாடை செய்தாலோ அதை செய்து முடிப்பதில் தன் உயிரையும் பணயம் வைப்பான். இதுபோல் தான் நபித்தோழர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களை எப்படி எல்லாம் பார்த்தார்களோ அப்படியே தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். அவர்களை நிழலாகத் தொடர்ந்தார்கள்.

 

கல்லுக்கு மரியாதையல்ல!

 

ஆபீஸ் பின் ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாவது. உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத் என்ற கல்லை முத்தமிட்டு விட்டு, ( إِنِّي أَعْلَمُ أَنَّكَ حَجَرٌ لاَ تَضُرُّ وَلاَ تَنْفَعُ، وَلَوْلاَ أَنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُقَبِّلُكَ مَا قَبَّلْتُكَ‏ ) நான் உன்னை முத்தமிடுகிறேன். நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். அருமை நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். நூல்:-  புகாரீ-1597, முஸ்லிம்-2438, திர்மிதீ-788

 

ஹஜ்ருல் அஸ்வத் எனும் கல்லை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தொட்டு முத்தமிட்டார்கள். அதை பின்பற்றிய இன்று ஹஜ் யாத்ரீகர்களும் அதைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அக்கல்லை முஸ்லிம்கள் வழிபடுகிறார்கள் என எவரும் கருதி விடக்கூடாது. விவரம் தெரியாதவர்கள் அவ்வாறு என்ன கூடும் என்பதாலேயே உமர் (ரலி) அவர்கள் இந்த விளக்கத்தை அறிவித்தார்கள்.

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் குர்பானிக்கான பிராணிகளை (மதீனாவுக்கும் மக்காவுக்கும் இடையிலுள்ள) "குதைத்" எனும் ஊரிலிருந்து விலைக்கு வாங்கி வந்தார்கள். அதனால் அவ்விதமே தாமும் செய்து வந்ததாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நூல்:-  அபூதாவூத், திர்மிதீ-831

 

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குர்பானி பிராணிகளை அறுத்த அதே இடத்திலேயே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது குர்பானி பிராணிகளை அறுத்து வந்தார்கள். நூல்:- புகாரீ-5551

 

ஸைத் பின் அஸ்லம் (ரலி) அவர்கள் கூறியதாவது. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தன் ஆடையை பொத்தான்களால் பூட்டப்படாத நிலையில் தொழுதிட கண்டேன். நான் அவரிடம் அதற்குரிய காரணம் விளங்கியபோது,  ( رَاَيتُ رسول الله صلى الله عليه وسلم يَفعَلُهُ ) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்நிலையில் (தொழுதிட) கண்டேன் என்று பதிலளித்தார்கள். நூல்:- ஸஹீஹ் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-43

 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் நாங்கள் பயணம் செய்தோம். அவர்கள் ஓர் இடத்தை விரைந்து கடந்தார்கள். இவ்வாறு ஏன் செய்தீர்கள்? என்று வினவப்பட்டது. ( رَاَيتُ رسول الله صلى الله عليه وسلم فَعَلَ هَذَا فَفَعَلتُ ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை கண்டேன். அதனால் நானும் செய்தேன் என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், ஸஹீஹ் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-44

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எந்த காரியத்தை எந்த இடத்தில் செய்தார்களோ அதை எந்த காரண காரியத்தையும் ஆராயாமல் அப்படியே பின்பற்றும் எண்ணம் கொண்டவர் தான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள். இவரைப் போன்று தான் பல நபித்தோழர்கள் இருந்தனர்.

 

யூனுஸ் இப்னு மய்ஸரா (ரஹ்) கூறினார்கள். நான் நபித்தோழர் அபூஸயீத் (ரலி) அவர்களுடன் குர்பானி ஆடு வாங்கச் சென்றேன். அப்போது அபூஸயீத் (ரலி) அவர்கள் இலேசாக கறுப்பு நிறம் கலந்த, நடுத்தரமான அளவு கொண்ட ஒரு ஆட்டை சுட்டிக்காட்டி இதை எனக்கு வாங்குங்கள். காரணம், இது நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கொடுத்த குர்பானி ஆட்டைப் போன்று உள்ளது என்றார்கள். நூல்:- இப்னுமாஜா

 

ஒருதலை காதல் பெரிதன்று

 

"நீ நேசிப்பது பெரிதன்று. உன்னை பிறர் நேசிப்பது பெரிது" என்று தத்துவ ஞானிகள் கூறுவர். உலக மக்களில் பெரும்பாலோர் இறைவனின் நேசிப்பதாகவும், காதலிப்பதாகவும் கூறுவர். இந்த ஒருதலைக் காதலால் மட்டும் இறைக்காதலை பெற்றிட முடியாது. மாறாக, இறைவன் எவரை நேசிப்பதாக கூறுகிறானோ அவர்கள் மட்டும்தான் இறைக்காதலை பெற்று, வெற்றி அடைய முடியும்.

 

இறைவன் நம்மை நேசித்து, நமது பாவங்களை மன்னிக்க வேண்டுமெனில் இறைத்தூதர் அகில உலக தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை பின்பற்றித்தான் ஆக வேண்டும்; வேறு வழியில்லை என்பதைத்தான் தலைப்பில் காணும் திருவசனம் தெளிவுபடுத்துகிறது.

 

இதனை நபித்தோழர்கள் முழுமையாக விளங்கிக் கொண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் மற்றும் அனுமதித்தது ஆகிய அனைத்தையும் ஒன்று விடாமல் பின்பற்றினார்கள். அதனால் அந்த நபித்தோழர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டதாக கூறி அவர்களுக்கு புகழ் மாலை சூட்டினான்.

 

முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும் நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகின்றான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர்.  திருக்குர்ஆன்:- 9:100

 

உணவில் விருப்பு வெறுப்பு

 

அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் உணவு கொண்டு வரப்பட்டால் அதை உண்டு விட்டு அதில் எஞ்சியதை எனக்கு கொடுத்து அனுப்புவார்கள். ஒரு நாள் கொஞ்சமும் உண்ணாமலேயே கொடுத்து அனுப்பினார்கள். ஏனெனில், அதில் வெள்ளை பூண்டு இருந்தது.

 

எனவே இது குறித்து நான், "அது (வெள்ளைப் பூண்டு) தடை செய்யப்பட்டதா?" என்று வினவினேன். அதற்கு நபியவர்கள், ( لاَ وَلَكِنِّي أَكْرَهُهُ مِنْ أَجْلِ رِيحِهِ ) "இல்லை; அதிலிருந்து வரும் வாடையின் காரணமாக அதை நான் உண்ண விரும்பவில்லை" என்று கூறினார்கள். நான், "அவ்வாறாயின் தாங்கள் விரும்பாததை நானும் விரும்ப மாட்டேன்" என்று கூறினேன். நூல்:- முஸ்லிம்-4173

 

வெள்ளைப் பூண்டில் நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. வெள்ளை பூண்டு வெப்பமூட்டும் ஒரு பொருள். சளியை போக்க வல்லது. பக்கவாத நோய்க்கு சிறந்த மருந்து. குரல்வலையை தூய்மையாக்கும். இருமல், பல் வலி, நெஞ்சுவலி ஆகியவற்றுக்கு நல்லது. உண்பது தவறாகாது.

 

வெள்ளைப் பூண்டை சாப்பிட்டு அதனால் வரும் வாய்வாடையால் இறை அறிவிப்பு (வஹி) கொண்டு வருவதின் மூலம் அடிக்கடி சந்திக்கும் வானவருக்கு தொந்தரவு ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இதை தவிர்த்து வந்தார்கள். வேறு நோக்கமல்ல.

 

அபூ அய்யூப் (ரலி) அவர்களை வானவர்கள் சந்திக்க போவதில்லை. ஆனாலும், மருத்துவ பலன் உள்ள வெள்ளைப் பூண்டை தவிர்த்தற்காக எந்த காரணத்தையும் சொல்லாமல் நபியவர்கள் தவிர்த்துக் கொண்டதால் தானும் தவிர்த்துக் கொண்டதாக கூறியுள்ளார்கள்.

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. தையல்காரர் ஒருவர் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தார். நபியவர்களுடன் நானும் சென்றேன். அப்போது சுரைக்காய் உள்ள குழம்பு ஒன்று கொண்டு வரப்பட்டது.  நபியவர்கள் தட்டைச் சுற்றிலும் சுரைக்காயை துலாவுவதை கண்டேன். அன்றிலிருந்து நானும் சுரக்காயை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். நூல்:- புகாரீ-2092, முஸ்லிம்-4147

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களை நான் அதிகமாக நேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வாய் வார்த்தைகளால் மட்டும் புகழ்ந்து கொண்டிருந்தால் போதாது. நபியவர்களின் வழிமுறை நமது வாழ்க்கை முறையாக வேண்டும்.

 

கோதுமை ரொட்டி, பேரிச்சம்பழம், சுரைக்காய், வெள்ளரிக்காய், தேன் போன்ற உணவுப்பொருள்களை உண்ணும்போது இவைகளை எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் சாப்பிட்டுள்ளார்கள். அதனால் நானும் சாப்பிடுகிறேன் என்ற (நிய்யத்) எண்ணத்தோடு சாப்பிட்டால் அதற்கும் ஒரு சுன்னத்தை பின்பற்றிய நற்கூலி வழங்கப்படலாம்.

 

உண்ணும் உணவில் கூட தனக்கு பிடித்தமானது என்ற சுய விருப்பம் இல்லாமல் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் விருப்பம் தான், தன் விருப்பம் என்று வாழ்ந்த நபித்தோழர்களை புகழாமல் இருக்க முடியவில்லை.

 

வேறு திசையை நோக்கி

 

இப்னு சீரின் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அனஸ் (ரலி) அவர்கள் சிரியாவிலிருந்து திரும்பியபோது அவர்களை நாங்கள் எதிர்கொண்டோம். "அய்னுத் தம்ர்" எனும் இடத்தில் அவர்களை நாங்கள் சந்தித்தோம். அப்போது அவர்கள் கழுதையின் மீது அமர்ந்தவாறு நஃபில் தொழுவதை நாங்கள் நான் கண்டேன். அவர்களுடைய முகம் கிப்லா அல்லாத திசையை நோக்கி அமர்ந்திருந்தது.

 

நான் அவர்களிடம் கிப்லா அல்லாத வேறு திசையை நோக்கி தொழுதது குறித்து வினவினேன். அதற்கு அவர்கள், ( لَوْلاَ أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَعَلَهُ لَمْ أَفْعَلْهُ ) "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்தில் இவ்வாறு செய்வதை நான் பார்த்திராவிட்டால் நானும் இவ்வாறு செய்திருக்க மாட்டேன்" என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-1100, முஸ்லிம்-1259

 

வாகனத்தில் பயணிக்கும் போது (ஃபர்ளு) கட்டாயத் தொழுகையை வாகனத்தில் தொழக்கூடாது. (நஃபில்) கூடுதல்  தொழுகையாக இருப்பின் வாகனம் எத்திசையில் செல்கிறதோ அத்திசையை செய்ய முன்நோக்கி தொழலாம். ஆகவே, வாகனத்தில் தொழும் போது கிப்லா திசையை முன்னோக்க வேண்டும் என்ற கட்டாயம் நஃபிலுக்கு கிடையாது என்ற சட்டம் இந்த இதுபோன்ற நபிமொழிகளில் இருந்து எடுக்கப்பட்டதாகும். அருமை நாயகம் (ஸல்) அவர்கள் சொல்வதுதான் சட்டம் அதையே எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்பதை நபித்தோழர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

 

எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்துகொண்டிருப்பார்கள். திருக்குர்ஆன்:- 33:21

 

திருத்தும் முறை

 

ஹிலால் பின் யஸாஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் சாலிம் பின் உபைத் (ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் தும்மிய பின் அவர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றார். அப்போது சாலிம் (ரலி) அவர்கள் அவருக்கு, ( وَعَلَيْكَ وَعَلَى أُمِّكَ ) "உன் மீதும், உன் தாயின் மீதும் சாந்தி உண்டாகட்டும்" என்று பதிலளித்தார்கள்.

 

மேலும் சாலிம் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதை உமக்கு பதிலாக தந்தேன். ஒருமுறை நாங்கள் நபியவர்களுடன் அமர்ந்திருந்தபோது அச்சபையில் ஒருவர் தும்மிய பின் அவர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றார். அதை செவியற்ற நபியவர்கள், ( وَعَلَيْكَ وَعَلَى أُمِّكَ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَحْمَدِ اللَّهَ ) "உன் மீதும், உன் தாயின் மீதும் என்று கூறிவிட்டு, உங்களில் ஒருவர் தும்மினால் அவர் 'அல்ஹம்துலில்லாஹ்' என அல்லாஹ்வை புகழட்டும்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-5031

 

ஒருவர் அறியாமையினால் ஒன்றை தவறாக சொல்லும்போது அது தவறு என்று உடனே சொல்லிவிடாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த விதத்தில் தவறான ஒன்றை திருத்திக் கொடுத்தார்களோ அதே முறையை பின்பற்றி தவறை சுட்டிக்காட்டி உள்ளார் இந்த நபித்தோழர்.

 

அல்லாஹ்வின் இறுதித் தூதர் அகில உலகத் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றைத்தான் (சுன்னத்) நபிவழி என்று சொல்கிறோம். நேரான வழியில் செல்ல விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமும் நபிவழியை பின்பற்றுவது கடமையாகும். திருக்குர்ஆனை முழுமையாக அறிந்து கொள்ள நபியவர்களின் வாழ்க்கை முறையை தெரிந்து இருப்பது அவசியமாகும்.

 

நீங்கள் நேரான வழியை அடைய அவரையே (இறைத்தூதரையே) பின்பற்றுங்கள். திருக்குர்ஆன்:- 7:58

 

யஸீத் பின் அபி உபைத் (ரலி) அவர்கள் கூறியதாவது. சல்மா பின் அக்வஃ (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்திற்கு பக்கத்தில் இருந்த தூண் அருகே தொழுவதை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் நான், "அபூ முஸ்லிம்! தாங்கள் தூணுக்கு அருகே தொழுவதையே தேர்ந்தெடுத்துக் கொள்வதை நான் காண்கிறேன். (என்ன காரணம் என்று கேட்டேன்?)

 

அதற்கு சலமா (ரலி) அவர்கள், ( فَإِنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَهَا‏ ) "அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இந்த தூணுக்கு அருகே தொழுவதையே தேர்ந்தெடுத்துக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் தொழ இந்த இடத்தை தேர்ந்தெடுத்துள்ளேன்" என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-502, முஸ்லிம்-881

 

நபித்தோழர்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் உறங்கியதும் விழித்ததும் எப்படி? உண்டதும் பருகியதும் எப்படி? முஸாபஹா (கைலாகு) செய்தது எப்படி? சலாம் (முகமன்) கூறியது எப்படி? தொழுகை, நோன்பு போன்ற பிற வணக்கங்களை எவ்வாறு நிறைவேற்றினார்கள்? வீட்டின் நாட்டின் பொறுப்புக்களை எவ்விதம் நிர்வாகித்தார்கள்? என்று திறந்த புத்தகத்தைப் போன்று இருந்த நபியவர்களின் வாழ்க்கை முறையை முழுமையாக கவனித்து வந்தார்கள்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்களை பின்பற்றுவதிலும், கீழ்ப்படுவதிலும் சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்த நபித்தோழர்கள் நபியவர்கள் மீது அதிக அன்பு வைத்து, சிறந்த வாழ்க்கையின் நெறிமுறைகளை நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

 

அங்க அசைவு

 

அபூ உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் சல்மான் (ரலி) அவர்களுடன் ஒரு மரத்தின் கீழ் இருந்தேன். அப்போது அவர்கள் மரத்தின் காய்ந்த கிளை ஒன்றை பிடித்து உலுக்கினார்கள். அதிலிருந்து காய்ந்த இலைகள் உதிர்ந்தன. என்னை நோக்கி, "அபூ உஸ்மானே! நான் ஏன் இப்படி செய்தேன் என்று நீர் என்னிடம் கேட்கவில்லையே?" என்றார்கள்.

 

ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என்று நான் கேட்டதற்கு, அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நான் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுடன் மரத்தடியில் நின்று இருந்து கொண்டிருந்தேன். அப்போது நபியவர்கள் இவ்வாறே மரத்தின் காய்ந்த கிளை ஒன்றைப் பிடித்து உலுக்கினார்கள். அதிலிருந்து காய்ந்த இலைகள் உதிர்ந்தன. அப்போது, "சல்மானே! நான் ஏன் இப்படி செய்தேன் என்று நீர் கேட்கவில்லையே?" என்றார்கள்.

 

ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று நான் கேட்டதற்கு, "ஒரு முஸ்லிம் நன்றாக அங்கத்தூய்மை செய்து ஐவேளை தொழுகையை நிறைவேற்றினால் இந்த இலைகள் உதிர்வது போன்று அவருடைய பாவங்கள் உதிர்ந்து விடும்" என்று நபியவர்கள் கூறினார்கள். நூல்:- நசாயீ, முஸ்னது அஹ்மத், தப்ரானீ

 

அலீ பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அலீ (ரலி) அவர்கள் சவாரி செய்வதற்காக ஒரு வாகனம் கொண்டுவரப்பட்டது. அவர்கள் அவ்வாகனத்தில் ஏறுவதற்காக அதன் வளையத்தில் கால் வைத்ததும் "பிஸ்மில்லாஹ்" என்று கூறினார்கள். பிறகு அந்த வாகனத்தின் முதுகில் அமர்ந்ததும் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினார்கள். பிறகு திருக்குர்ஆன் (43:13) வசனத்தை ஓதினார்கள்.

 

பிறகு, "அல்லாஹு அக்பர்" என்று மூன்று முறை கூறினார்கள். பிறகு ( سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ ) என்று கூறிவிட்டு சிரித்தார்கள். அப்போது அவர்களிடம் ஏன் சிரித்தீர்கள் என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ( رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَعَلَ كَمَا فَعَلْتُ ) “(வாகனத்தில் ஏறும்போது) இப்போது நான் செய்ததைப் போன்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்துள்ளேன்" என்று பதிலளித்தார்கள். நூல்:- அபூதாவூத்-2602

 

நபித்தோழர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு அங்க அசைவையும் (Body Language) மிகத் துல்லியமாக கவனித்து அதன்படியே செயல்பட்டிருக்கிறார்கள்.

 

ஒரு மனிதனுக்கு மற்றொருவரின் மீது அன்பு ஏற்பட்டு விட்டால் அவருடைய ஒவ்வொரு அசைவும் இவருக்கு இன்பமாகவே இருக்கும். மேலும், தனது அன்பிற்குரியவர் செய்வதை போலவே தானும் செய்ய வேண்டும் என்று மனம் விரும்பும். அன்பின் இன்பத்தை சுவைத்தவர்களே இதன் உண்மையை உணர முடியும்.

 

நபித்தோழர்கள் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் சொல் மற்றும் செயலை பிறருக்கு அறிவிக்கும் போதுகூட நபியவர்கள் எதை செய்தார்களோ அதையும் செய்து காட்டி நபியவர்களிடமிருந்து நேரடியாக பார்ப்பவைகளை போன்ற அல்லது கேட்பவைகளைப் போன்ற ஒரு வித உணர்வை ஏற்படுத்துவார்கள்.

 

நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களை பின்பற்றி வாழ்வதே நபியவர்கள் மீது நாம் கொள்ளும் உண்மையான அன்பின் அடையாளமாகும்.

 

எந்த நேசம் நபியவர்களின் வழிமுறைகளைப்படி (சுன்னத்) வாழ கற்பிக்கவில்லையோ அது வெறும் பொய்யும் நயவஞ்சக செயலுமாகும்.

 

எந்த நேசம் நபியவர்களின் வழிமுறையின் அருகில் கூட அழைத்து செல்லவில்லையோ அதை ஏமாற்றுதலும், முகஸ்துதியுமாகும். 

 

எனவே, நாம் வாழ்க்கையில் வெற்றி பெற, நம் வழி நபிவழி என்று சபதமெடுத்து அதற்காக முயற்சிக்க வேண்டும். அல்லாஹ் அதற்கு அருள்பாலிப்பானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951  

 

Monday, 12 September 2022

தேவையற்ற கொண்டாட்டங்கள்

 

தேவையற்ற கொண்டாட்டங்கள்

 

وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً

 

(இறைநம்பிக்கையாளர்களே!) அவர்கள் நிராகரிப்பாளர்களாகிவிட்டபடியே நீங்களும் நிராகரிப்பவராகி அவர்களுக்கு சமமாகிவிடுவதை அவர்கள் விரும்புகிறார்கள். திருக்குர்ஆன்:- 4:89

 

உலகிலுள்ள அனைத்து இனத்தவர்களிடமும் நல்லொழுக்க மாண்புகள், பண்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் தங்களது அடையாளங்களை இழந்து மாற்றார் கலாச்சாரங்களைப் பின்பற்றி வருவது அதிகமாகிவிட்டது. புத்தாண்டு, பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டங்கள் போன்றவை இன்று முஸ்லிம்களிடம் பெருமளவு காணப்படுகிறது.

 

வருடப்பிறப்பு என்றாலே வீண் விரயம் மற்றும் தீய செயல்கள் மட்டுமே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி இரவு 12 மணிக்கு மேல் இடியோசை போன்ற வெடியோசையுடன் துவங்கும் புத்தாண்டு பல வீண் விரயங்களுக்கு வழிவகுக்கிறது. மது பார்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 அன்றிரவு நடைபெறும் மது விற்பனை கடந்த வருடங்களின் டிசம்பர் 31 அன்றிரவு நடைபெற்ற மது விற்பனையைவிட அதிகமாகவே நடைபெறுகிறது. அன்றைய ஒரு இரவில் மட்டும் பல கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகிறது.

 

ஸ்டார் ஹோட்டல்களில் இரவு முழுவதும் ஆட்டம் பாட்டம் காம களியாட்டம், வீதி வீதியாக மோட்டார் வாகனங்களில் "Happy New year" என்று பெரும் கூச்சலிட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் பறக்கும் இளைஞர்களால் விபத்துகளும், உயிர்பலிகளும் அதிகம் ஏற்படுகின்றன.

 

எது திருநாள்?

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா நகர் வந்த புதிதில் நபித்தோழர்கள் (குறிப்பிட்ட) இரண்டு நாள்களை (பண்டிகை போல்) கொண்டாடி மகிழ்ந்தார்கள். நபியவர்கள், ( مَا هَذَانِ الْيَوْمَانِ ) "இந்த இரு நாள்கள் என்ன?" என்று வினவியபோது, "அறியாமைக் காலத்திலிருந்து இந்த இரு நாள்களை கொண்டாடி மகிழ்ந்தவர்களாக இருந்தோம்" என நபித்தோழர்கள் பதிலளித்தனர். நபியவர்கள், ( إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ ) “இவ்விரு நாளுகளுக்குப் பகரமாக இவற்றைவிட சிறந்த ஈதுல்அள்ஹா (தியாகத் திருநாள்) ஈதுல் ஃபித்ர் (ஈகை திருநாள்) என்ற இரு நாட்களை அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான்” (ஆகையால், அறியமைக்காலத்தில் கொண்டாடிய அவ்விரு நாள்களையும் விட்டு விடுங்கள்) என்று கூறினார்கள்.   அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-959

 

இஸ்லாம் வகுத்துத் தந்த திருநாள்கள் என்பது வருடத்தை இரண்டாகும். ஒன்று ஈதுல் ஃபித்ர் (ஈகை திருநாள்) மற்றொன்று ஈதுல் அல்ஹா (தியாகத் திருநாள்).

 

நம் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இஸ்லாமிய மூத்த குடிமக்களாகிய நபித்தோழர்களும் வருடத்தில் இந்த இரண்டு நாள்களைத் தவிர வேறு எந்த நாள்களையும் பெரும் விமர்சையாகவோ, புத்தாண்டாகவோ கொண்டாடியதில்லை. ஜனவரி முதல் தேதி (ஆங்கில வருட பிறப்பு) தை முதல் தேதி (தமிழ் வருடப்பிறப்பு) ஆகிய எந்த நாள்களையும் வருடப் பிறப்பாக கொண்டாட மார்க்கம் அனுமதிக்கவில்லை. முஹர்ரம் மாதம் முதல் நாளைகூட புத்தாண்டாக கொண்டாடுவது சரியல்ல.

 

கூத்து, கும்மாளம், மது, மாது, வான வேடிக்கை, வீண்விரயம் போன்ற தீய காரியங்கள் நிறைந்திருப்பது தான் திருநாள் பண்டிகை என்று மனிதர்களில் பெரும்பாலோர் எண்ணுகிறார்கள் பண்டிகை என்றால் நற்காரியங்கள் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். மேலும், இறைவன் தேர்ந்தெடுத்து தரும் நாள்கள் மட்டுமே பண்டிகையை நாள்களாகும். மனிதர்கள் அவர்களாக தன்னை இஷ்டத்திற்கு பண்டிகை நாள்களை தேர்ந்தெடுத்துக் கொண்டதால் தான் அந்த நாள்களில் பாவக்காரியங்கள் நிறைந்திருக்கிறது.

 

முஸ்லிம்களின் பண்டிகைகளில் இரண்டு நற்செயல்கள் நிறைந்திருக்கும் ஒன்று தானும் உண்டு, உடுத்தி அதன் மூலம் மகிழ்ச்சி அடைவது. மேலும், பிறருக்கும் உண்ண, உடுத்த கொடுத்து அதன் மூலம் அவர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்வது. (ஈகைத் திருநாள் ஃபித்ரா பொருள், தியாகத் திருநாள் குர்பானி இறைச்சியை பிறருக்கு வழங்குதல்)

 

மற்றொன்று பெருநாள் தொழுகை எனும் இறைக் கட்டளையை நிறைவேற்றி நம்மை படைத்த இறைவனை மகிழ்ச்சியடைய செய்வது. முஸ்லிம்களின் பண்டிகளில் பாவ செயல்களையும், வீண் விரயங்களையும் பார்க்கவே முடியாது. பாவச் செயல்களும் வீண் விரையமும் நிகழ்ந்து விட்டால் அது உண்மையான பண்டிகை அல்ல என்கிறது இஸ்லாம்.

 

இஸ்லாமிய வருடப்பிறப்பு

 

தமிழ் மற்றும் ஆங்கில வருடப்பிறப்பு அதன் மாதங்களின் பெயர்களையும் தெரிந்து வைத்திருக்கும் முஸ்லிம்களில் பலருக்கு, இஸ்லாமிய வருடப் பிறப்பு ஏற்பட்டதற்கான காரண வரலாறு என்ன? இஸ்லாமிய வருடப் பிறப்பு எப்போது? அதன் மாதங்களின் பெயர்கள் என்ன? என்று தெரியாது. இது வருத்தப்பட வேண்டிய விஷயமாகும்.

 

ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒருவர் தனக்கு இந்த மனிதர் வாங்கிய கடனை ஷஅபான் மாதத்திற்குள் திருப்பித் தருவதாக கூறியிருந்தார். இன்னும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார்.

 

அதுவரை அரபியர்களின் வழக்கத்தில் இருந்து வந்த மாதம் தான் கணக்கிடப்பட்டு வந்தது. இஸ்லாமிய ஆண்டு உருவாக்கப்படவில்லை.

 

எனவே, இந்த வழக்கில் கூறப்பட்டிருக்கும் ஷஅபான் மாதம் எந்த வருடத்தின் ஷஅபான் மாதம்? கடந்த வருடமா? நிகழும் வருடமா? என்ற வினா எழுந்தது. முடிவில் இஸ்லாமிய ஆண்டை அடையாளப்படுத்துவதின் அவசியம் உணரப்பட்டது. பிறகு ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களிடம் ஆலோசித்தார்கள்.

 

அப்போது சிலர் பாரசீகர்கள் ஆண்டையும் வேறு சிலர் ரோமானியர்கள் ஆண்டையும் கணக்கிடலாம் என்று கூறியபோது, இது மாற்றார்களின் அடையாளங்கள் என்று கூறி, மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

 

மேலும் சிலர், அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த வருடத்தில் இருந்து கணக்கிடலாம். ஏனெனில், அன்று பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன என்று கூறினர். பிறப்பை அடையாளமாக வைத்து கணக்கிடுவது கிறிஸ்தவர்களின் பழக்கம் என்பதால் அதுவும் நிராகரிக்கப்பட்டது.

 

மேலும் சிலர், நபியவர்களுக்கு நபித்துவம் கிடைத்த வருடத்தை கணக்கிடலாம். ஏனென்றால், அன்றிலிருந்து தான் அகிலத்தின் வழிகாட்டி திருக்குர்ஆன் இறங்கியது என்றனர். ஆனால், அன்றைய தினத்தில் நாமெல்லாம் வழிகேட்டில் இருந்தோம் என்று கூறி, அதுவும் நிராகரிக்கப்பட்டது.

 

மேலும் சிலர், நபியவர்கள் மரணித்த வருடத்திலிருந்து கணக்கிடலாம். "அர்ரஃபீகுல் அஃலா" எனும் உன்னத நேசனான அல்லாஹ்விடம் நபியவர்கள் சேர்ந்த தினமாகும் என்றனர். ஆனால், அன்றைய தினத்தைவிட நமக்கு மிக துக்கமான தினம் வேறு எதுவாக இருக்க முடியும்? என்று கூறி, அந்தக் கருத்தும் நிராகரிக்கப்பட்டது.

 

அலீ (ரலி) அவர்கள் உட்பட வேறு சிலர் நபியவர்களின் மக்காவிலிருந்து மதீனாவுக்கு (மார்க்கத்தை முழுமையாக பின்பற்ற) இடம் பெயர்ந்த (ஹிஜ்ரத்) வருடத்தில் இருந்து இஸ்லாமிய ஆண்டை கணக்கிடலாம் என்று கூறியபோது, ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ஆமோதித்தார்கள்‌ நபியவர்கள் ஹிஜ்ரத் செய்த ஆண்டு இஸ்லாமிய முதல் ஆண்டாக கணக்கிடப்பட்டது.

 

அறியாமைக்கால மக்களிடம் மாதங்கள் எண்ணிக்கை 12 ஆகவும், முஹர்ரம் மாதம் தான் வருடத்தின் முதல் மாதமாகவும் இருந்து வந்துள்ளது.

 

இஸ்லாமிய ஆண்டை எந்த மாதத்தில் இருந்து துவங்குவது என்பதிலும் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றது. சிலர் முதல் மாதமாக ரமளானை தேர்வு செய்யலாம். ஏனெனில், அது திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம் என்றும், சிலர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறந்த ரபிஉல் அவ்வல் மாதத்தை முதல் மாதமாக தேர்வு செய்யலாம் என்றும், இன்னும் சிலர் இப்போது வழமையில் இருப்பதைப் போன்று முஹர்ரம் மாதத்தையே முதல் மாதமாக வைத்துக் கொள்வோம். ஏனெனில், அதிலே தான் மக்கள் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றி வீடு திரும்புகிறார்கள் என்பது போன்ற கருத்துக்கள் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் முன்னிலையில் வைக்கப்பட்டது. உமர் (ரலி) அவர்கள் அன்றைய நடைமுறையில் இருந்த முஹர்ரம் மாதத்தையே வருடத்தின் முதல் மாதமாக தேர்வு செய்தார்கள். ஹிஜ்ரி ஆண்டு துவங்கப்பட்டபோது, ஹிஜ்ரி 17 ஆக இருந்தது.

 

(அருமை நாயகம் - ஸல் அவர்கள் ஸஃபர் மாதத்தின் கடைசியில் மக்காவில் இருந்து ஹிஜ்ரத்தை துவங்கி, ரபீஉல் அவ்வல் மாதத்தின் ஆரம்பத்தில் மதீனா நகரம் வந்தடைந்தார்கள்)

 

எனவே, இஸ்லாமிய வளர்ச்சியின் வித்தாக அமைந்த ஹிஜ்ரத்தை மறுமைநாள் வரையிலும் ஒவ்வொரு முஸ்லிமும் நினைவு கூறிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய ஆண்டின் துவக்கத்தை ஹிஜ்ரத்தை அடிப்படையாக வைத்து ஏற்படுத்தினார்கள்.

 

மேலும், ஒவ்வொரு ஹிஜ்ரி புது வருடம் துவங்கும் போதும் முஸ்லிம்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் இஸ்லாமிய முறைப்படி வாழ்வதற்கு ஹிஜ்ரத் செய்ததால் அடைந்த துன்ப துயரங்களை நினைவுகூர்ந்து,  இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றி வாழ வேண்டும் என்ற உணர்வை புதுப்பித்துக் கொள்ளவேண்டும்.

 

ஹிஜ்ரி ஆண்டு தற்போது 1444 ஆகும். அதன் மாதங்களின் எண்ணிக்கை 12 ஆகும். அவை: முஹர்ரம், ஸஃபர், ரபிஉல் அவ்வல், ரபிஉல் ஆகிர், ஜமாத்துல் அவ்வல், ஜமாத்துல் ஆகிர், ரஜப், ஷஅபான், ரமளான், ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்.

 

பேசாத மொழி செத்துப்போகும் என்பது போல், ஹிஜ்ரி ஆண்டை நம்முடைய மொழி வழக்கில் சரிவர பயன்படுத்தாவிடில் விரைவிலேயே அது வழக்கொழிந்து போய்விடும். நம் பாரம்பரிய பெருமையை நாம் தான் நிலைநாட்ட வேண்டும்.

 

மதம் உள்ளே புகுந்தது

 

பழங்கால கணக்கீட்டில் கி.மு. கி.பி. என்று எதுவும் இல்லை. கி.பி. 525 ல் தான் "டயோசியஸ் எக்ஸிகுஸ்" (கி.பி. 470 - 544) என்பவர் முதன் முதலாக கிறிஸ்தவ மதத்தை உள்ளே புகுத்தி, கிறிஸ்துவுக்கு முன் பின் என பிரிவினை உண்டாக்கினார்.

 

ஆங்கில வருடத்தின் மாதங்களும் கிழமைகளும் ரோமானியர்களின் ஆட்சியாளர்கள் மற்றும் கடவுள்களாக கருதப்படுபவர்களின் பெயர்களைக் கொண்டே சூட்டப்பட்டுள்ளது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி இவை ஒவ்வொன்றும் கடவுள்களின் பெயர்கள்.

 

ஜனவரி என்பது ரோமானியர்களின் வானங்களைப் பாதுகாக்கும் கடவுளாக கருதப்படுபவரின் பெயர். பிப்ரவரி என்றால் அவர்கள் மொழியில் சுத்தம் என்று பொருள். அந்த மாதத்தில் ரோமானியர்கள் வீட்டையும் சாமான்களையும் சுத்தப்படுத்தி, சுத்தத் திருநாளாக கொண்டாடுவார்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் கடவுளாக கருதப்படுபவரின் பெயர் மார்ச் ஆகும். குளிர்காலத்தில் இருட்டுக்குப்பின் சூரிய வெளிச்சத்திற்காக வானத்தைத் திறக்கும் கடவுளாக கருதப்படுபவரின் பெயர் ஏப்ரல் ஆகும். பூமியை சுமக்கும் கடவுளாக கருதப்படுபவரின் பெயர் மே ஆகும். மனைவியின் பெயர் ஜூன் ஆகும்.

 

ஜூலியஸ் சீசர் தான் மாதங்களின், நாள்களின் எண்ணிக்கை நிர்ணயித்தார். அதனால் தான் ரோமானியர்கள் அவர் நினைவாக ஏழாவது மாதத்திற்கு ஜூலியஸ் என்று பெயரிட்டனர் இதை நாம் இப்போது ஜூலை என்று அழைக்கிறோம். ரோமானிய சக்கரவர்த்தி அகஸ்டஸ் நினைவாக எட்டாவது மாதத்தில் அகஸ்டஸ் தற்போது ஆகஸ்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. மற்ற மாதங்களின் பெயர்கள் அதிகார வர்க்கத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளன.

 

தவறான பழக்கங்கள்

 

காலண்டர்கள் விலை கொடுத்து வாங்கும் காலம் போய் இப்போதெல்லாம் இலவசமாகவே கிடைக்கின்றது. வியாபாரிகள் தங்களது தொழில் ஸ்தாபனங்களை காலண்டர்கள் மூலம் விளம்பரப்படுத்துகிறார்கள். இணைவைப்பதிலும், பாவக் காரியத்திலும் விழுந்துவிடாமல் முழுகவனத்தோடு இருக்கவேண்டிய இஸ்லாமிய வியாபாரிகள் அனைத்து சமயத்தவர்களையும் கவர வேண்டும் என்பதற்காக காலண்டர்கள் மூலம் இணைவைத்தல் மற்றும் பாவக்காரியத்தை சர்வ சாதாரணமாக செய்து வருகிறார்கள்.

 

தங்கள் கடைகளுக்கு வரும் முஸ்லிம் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தில் மக்கா, மதீனா, பைத்துல் முகத்தஸ், பிரபலமான தர்காக்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட காலண்டர்களை வழங்குவார்கள். மார்க்க ஞானம் இல்லாத சிலர் அதை வாங்கிச் சென்று வீட்டில் மாட்டி வைத்து, அதன் அருகில் ஊதுபத்தி சாம்பிராணி புகை காட்டி, பூ மாலைகள் போடுவதன் மூலம் வீட்டில் இறையருள் இறங்கும் என்று நம்புகிறார்கள்.

 

இந்து மற்றும் கிறிஸ்தவ சமயத்தவர்களை கவர்வதற்காக அவர்களின் திருத்தலங்களை, கோவில்களை அவர்கள்  வணங்கி வரும் தெய்வங்களை வண்ண வண்ண நிறங்களில் அச்சிட்டு கொடுப்பதன் மூலம் இணைவைப்பதை ஊக்குவிக்கிறார்கள்.

 

மேலும் இஸ்லாமிய வியாபாரிகளில் சிலர், ஆர்வக்கோளாறால் தங்களது காலண்டர்களில் திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள், இறைவனின் திருநாமங்களையும் அச்சிட்டு கொடுக்கிறார்கள். இதை வாங்கிச் செல்லும் பலர் அந்த நாள் அந்த வருடம் முடிந்ததும், அந்த காலண்டர்களை குப்பைத் தொட்டிகளிலும், சாக்கடைகளிலும் கால்களில் மிதிபடும் அளவுக்கு தெருக்களிலும் வீசிவிடுகின்றனர். திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளை கண்ணியப்படுத்த வேண்டியவர்களே அதை இழிவுபடுத்தியவர்களாக ஆகிவிடுகின்றனர்.

 

மூடநம்பிக்கைகளின் ஆரம்ப வழிகாட்டியே வாஸ்து, ராசிபலன், நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல் தான். இவைகள் அச்சிடப்பட்ட காலண்டர்களை பிறருக்கு வழங்குல், ஒரு இறைநம்பிக்கையாளருக்கு அழகல்ல. இதுபோன்ற மூடநம்பிக்கைகளை அன்பளிப்பாக கொடுப்பது எவ்வகையில் நியாயமாகும்?  நமது கடை மற்றும் அலுவலகம் சார்பில் கொடுக்கும் காலண்டரில் இவற்றை தவிர்க்க வேண்டும். இந்த மூடநம்பிக்கைகள் அடங்கிய காலண்டர்கள் பல பள்ளிவாசல்களிலேயே தொங்குகிறது. இதை பள்ளிவாசல் நிர்வாகம் கவனிக்கவேண்டும்.


புத்தாண்டு வந்து விட்டால் நாள்காட்டி என்னும் காலண்டர் தான் நினைவுக்கு வருகிறது. காலண்டர் என்ற பெயரில் வீட்டின் பரக்கத்துக்களை வெளியில் விரட்டிக் கொண்டிருக்கிறோம். ( لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ ) "உருவப் படங்கள் உள்ள இல்லங்களுக்குள் வானவர்கள் நுழைவதில்லை" என்கிறது ஒரு நபிமொழி. (நூல்:- அபூதாவூத்-196, நசாயீ-261) 


வானவர்கள் வருகையின்றி நம் வீடுகளுக்கு வெளிச்சங்கள் நிச்சயம் வரப்போவதில்லை.

 

நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள், குழந்தைகள் ஆகியோரின் உருவம் மற்றும் வனவிலங்குகளில் உருவம் பொறித்த காலண்டர்கள் என பட்டியல் நீட்டிக் கொண்டே போகலாம். உருவங்கள் பொறித்த காலண்டர்களை தவிர்த்து மரம், செடி, கொடி போன்ற இயற்கைக் காட்சிகள் பொறித்த காலண்டர்களை பயன்படுத்தலாம்.

 

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று எண்ணுவதும், புத்தாண்டு, பிறந்தநாள் போன்ற நாள்களில் ஏதாவது துன்பம் நிகழ்ந்துவிட்டால் அந்த வருடம் முழுவதும் துன்பம் நிகழும் என்று எண்ணுவதும் நம்முடைய இறைநம்பிக்கையை ஆட்டம் காண வைத்துவிடும்.

 

புத்தாண்டின் ஆரம்ப தினத்தில் நன்மை நிகழ்ந்தால் அந்த வருடம் முழுவதும் நன்மை நிகழும்; துன்பம் நிகழ்ந்தால் அந்த வருடம் முழுவதும் துன்பம் நிகழும் என்று எண்ணும் முட்டாள்கள், புத்தாண்டின் ஆரம்ப தினத்தில் மதுவிலும் மங்கையிலும் தள்ளாடித் திரிந்தால் அந்த வருடம் முழுவதும் இவ்வாறு தள்ளாடித் தெரிய வேண்டுமே என்றெண்ணி, அன்றைய தினத்தில் மது, மங்கையை தவிப்பார்களா?


நம் நேசத்திற்குரிய ஒருவர் இறந்துவிட்டால் ஆண்டுதோறும் அவருடைய இறந்த தினத்தன்று துக்கம் அனுஷ்டிப்பதும், அன்றைய தினம் கருப்பு நிற ஆடையை அணிந்து கொள்வதும், அவரின் உருவப் படத்தை மக்களின் பார்வைக்காக பொது இடங்களில் ஒட்டி வைப்பதும், செய்தித்தாள்கள் மூலம் அதனை விளம்பரப்படுத்துவதும், இன்ன பிற காரியங்களில் ஈடுபடும் பாவச் செயலாகும்.

 

பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்ற பெரிய மனிதராக இருந்தாலும் அவருக்காக துக்கம் அனுஷ்டிப்பது மூன்று நாள்களுக்கு மட்டுமே ஆகும். ஆனால், கணவன் இறந்துவிட்டால் மனைவி மட்டும் நான்கு மாதம் பத்து நாள்கள் மட்டும் துக்கம் அனுஷ்டிப்பாள் என்கிறது இஸ்லாம்.

 

சுருங்கக் கூறின், இறந்தநாள் என்று ஆண்டுதோறும் துக்க அனுஷ்டிப்பதோ புத்தாண்டு, பிறந்த நாள், திருமண நாள் என்று ஆண்டுதோறும் கொண்டாடுவதோ இஸ்லாமியப் பார்வையில் தவறாகும்.

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَهْلُ الْكِتَابِ فَقُولُوا وَعَلَيْكُمْ ‏ ) வேதக்காரர்கள் (பிற சமயத்தவர்கள்) உங்களுக்கு முகமன் (சலாம்) கூறினால் "வ அலைக்கும்"  (உங்களுக்கும் அதுவே ஆகட்டும்) என்று பதில் கூறுங்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6258, முஸ்லிம்-4369

 

பிற சமயத்தவர்கள் கூறும் வாழ்த்துச் சொற்களை முஸ்லிம்கள் பயன்படுத்துவதை இஸ்லாம் விரும்புவதில்லை ஆகையால் அவர்கள் நமக்கு "good morning, good evening, good night" என்று கூறினாலும் அல்லது சலாம் கூறினாலும் அல்லது "Happy New year" என்று கூறினாலும் அவர்களுக்கு (வ அலைக்கும்) "உங்களுக்கும் அதுவே ஆகட்டும்" என்ற பொருள் தரக்கூடிய "same to you" என்ற சொற்றொடரை மறுமொழியாக நாம் கூறலாம்.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ) ‏ ) பிற சமுதாயத்திற்கு ஒப்பான செயலை மேற்கொள்பவர் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவராகவே கணிக்கப்படுவார். அறிவிப்பாளர்:- இப்னு உமர் (ரலி) அவர்கள் அபூதாவூத்-3512

 

அறியாமைக் கால செயலையும், பிற சமயத்தவர்களின் வழிமுறையும் விட்டொழித்து விட்டு நபிவழியே என் வழி என்ற நீ வாழ்வாரோ அவரே சிறந்த முஸ்லிம் ஆவார். நாம் சிறந்த முஸ்லிமாக வாழ அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...