கண்டிக்கும் போது...
عَبَسَ وَتَوَلَّى أَنْ جَاءَهُ الْأَعْمَى وَمَا يُدْرِيكَ
لَعَلَّهُ يَزَّكَّى أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَى
(நமது நபி) கடுகடுத்தார். புறக்கணித்தார். (எதற்காக?) தன்னிடம் ஒரு பார்வையற்றவர் வந்ததற்காக. (நபியே! உங்களிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? அல்லது (உங்களுடைய) நல்லுபதேசம் அவருக்கு பயனளிக்கலாம். (என்பதை நீங்கள் அறிவீர்களா? அவ்வாறிருக்க அவரை நீங்கள் ஏன் கடுகடுத்துப் புறக்கணத்தீர்கள்?) திருக்குர்ஆன்:- 80:1,2,3,4
மற்றவர்களை நம் வழிக்கு கொண்டு வருவதற்கு அல்லது முறையான வழியில் நெறிப்படுத்துவதற்கு கண்டிப்பது அவசியமாகிறது.
கண்டிப்பது என்பது சிறந்த ஆயுதம் தான். ஆனால் அதை பலர் அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். அடிக்கடி பயன்படுத்தும் எதற்குமே வீரியம் இருக்காது என்பதை சொல்ல வேண்டியதில்லை.
பார்வையற்றவர்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (கண் பார்வையற்ற) அப்துல்லாஹ் பின் உம்மு மக்தூம் (ரலி) அவர்கள் வந்து (நாயகமே! எனக்கு மார்க்கம் பற்றிய) நேர்வழியை அறிவியுங்கள் என்று கூறினார். அப்போது அண்ணலாருடன் இணைவைப்போரில் கண்ணியமிக்கவராக இருந்த ஒருவர் (உபைய்யி பின் கலப்) வீற்றிருந்தார். அண்ணலார் இப்னு உம்மு மக்தூம் (ரலி) அவர்களைப் புறக்கணித்துவிட்டு இவரை நோக்கி (இஸ்லாமை எடுத்துரைத்து)க் கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்தத் தோழர், நாயகமே! என்று அடிக்கடி கேட்டு வந்தார். அண்ணலார், இல்லை (இல்லை) என்று மறுமொழி பகர்ந்து வந்தார்கள். (அப்போது தான் அல்லாஹ் தலைப்பில் கண்ட வசனங்கள் மற்றும் சில வசனங்கள் அடங்கிய) அபச (80வது) அத்தியாயம் முழுவதையும் அருளினான். நூல்:- திர்மிதீ-3331, முஅத்தா மாலிக், முஸ்னது அபூயஃலா, முஸ்தத்ரக் ஹாகிம்
இஸ்லாமுக்கு பெரிய விரோதியாக இருந்த உபைய்யி பின் கலபிடம் மனம் மாற்றம் ஏற்பட்டால் அது சத்திய மார்க்கத்திற்கு பெரிய முன்னேற்றமாய் அமையும். மக்கா நகர் முழுவதும் அதன் தாக்கம் எதிரொலிக்கும். அதன் பிறகு முஸ்லிமானவர்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுவது குறையும். பெரிய எதிர்ப்புகளெல்லாம் அடங்கிப்போகும். அதனால் தான் அவரை இஸ்லாத்தின்பால் ஈர்ப்பதற்கான முயற்சியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
அச்சமயத்தில் தான் பார்வையற்ற இப்னு உம்மு மக்தூம் (ரலி) அவர்கள் வந்தார். அவர் இடையில் குறுக்கீடுவதை அண்ணலார் விரும்பவில்லை என்பதை அவர்களின் முகம் காட்டியது. பார்வை இல்லாததால் இப்னு உம்மு மக்தூமுக்கு அது தெரியவில்லை. ஆனால் தம்முடைய வார்த்தைக்கு உரிய கவனம் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்தார். நமது பார்வைக்கு இது சாதாரணமான ஒன்று தான். ஆனால் அல்லாஹ் அதை அப்படி பார்க்கவில்லை.
உலகத்துக்கு நேர்வழி காட்ட அனுப்பப்பட்ட தன்னுடைய தூதரினால் பார்வையற்ற தன்னுடைய மற்றொரு அடியார் புறக்கணிக்கப்படுவதை அல்லாஹ் விரும்பவில்லை. அங்கே யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்பதில் ஒரு திருத்தம் தேவைப்பட்டது. அதுவும் அண்ணலார் திருவாய் மூலமாகவே! அப்போதே அல்லாஹ் வஹி எனும் இறைச்செய்தி அறிவித்தான்.
இங்கு திருக்குர்ஆன் செல்லமாக கண்டித்தது இறைத்தூதரின் அணுகுமுறையைத் தானே தவிர, இறைத்தூதரை அல்ல. ஆக, செயல் தான் கண்டிக்கப்பட வேண்டுமே தவிர, நபர் அல்ல. இந்த பாணியில் பல நன்மைகள் இருக்கின்றன.
ஆயிஷா (ரலி)அவர்கள் கூறியதாவது. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இவ்வாறு இவ்வாறுள்ள உங்கள் மனைவி சஃபிய்யா (ரலி) உங்களுக்கு போதும் என்று (சஃபிய்யா குள்ளமானவர் என்ற கருத்தில்) கூறினேன்.
உடனே அண்ணலார், ( لَقَدْ قُلْتِ كَلِمَةً لَوْ مُزِجَتْ بِمَاءِ الْبَحْرِ لَمَزَجَتْهُ ) "(ஆயிஷா!) நீ (சொல்லக்கூடாத பாரதூரமான) ஒரு சொல்லை சொல்லிவிட்டாய். இந்த சொல்லை கடலில் கலக்கிவிடப்படுமாயின் மெய்யாகவே அது கடலில் கலந்து (அதன் வாடையையும், சுவையையும் மாற்றி அழுக்கடையச் செய்து) விடும்." என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-4875, திர்மிதீ-2426
குள்ளமாக இருப்பதை குறையாக எண்ணி அதை குத்தலாக பேசிய வார்த்தையை செவியுற்ற நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் உடனே அந்த பாவப் பேச்சின் எதிர்வினையை விவரித்து கண்டித்தார்கள். தண்டனைக்குரிய குற்றத்தின் மீது அச்ச உணர்வை ஏற்படுத்துவது தான் கண்டிப்பதின் நோக்கமாகும்.
ஒரு சிறிய சர்ச்சையின்போது பார்ப்பதற்கு எடுப்பான நிறத்துடைய மனிதரான அபூதர் (ரலி) அவர்கள் கறுப்பு நிற நீக்ரோவான பிலால் (ரலி) அவர்களைப் பார்த்து "கறுப்பியின் மகனே!" என்று தடித்த வார்த்தையைக் கூறிவிட்டார். இதனை செவியுற்ற கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் சற்று கடினமாகவே ( إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ ) "அபூதரே! நீர் அறியாமைக் காலத்துக் கலாச்சாரம் உள்ள மனிதராகவே இருக்கின்றீர்" என்று கூறி கண்டித்தார்கள். நூல்:- புகாரீ-30, அபூதாவூத்-5157
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கண்டிப்புக்கு ஆளான அபூதர் (ரலி) அவர்கள் உடனே தனது கன்னத்தை நிலத்தில் வைத்து நான் பேசிய தீய வார்த்தைக்கு பகரமாக பிலாலே! உமது காலால் எனது கன்னத்தை மிதிக்கும் வரை நான் எழுந்திருக்க மாட்டேன் என்று கூறினார்.
நிறம், இனம், வேறுபாடின்றி சகோதரத்துவம் வளர்ந்து வருகிற அந்த தருணத்தில் பிரிவினைக்கு வழிவகுக்கும் அந்த தடித்த வார்த்தையை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செவியுற்றதும் அந்த வார்த்தைக்குரியவரை உடனே கண்டித்தார்கள்.
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு" என்பது கிராமத்துச் சொல் வழக்கு. அதுபோல் அறிவுபூர்ணமடைந்த நல்லவர்கள் ஏதேனும் ஒரு தவறு செய்ய நேர்ந்து, அதற்காக அவர்கள் கண்டிக்கப்பட்டால், அதனை திருத்திக் கொள்வார்கள். தனது தவறுக்கு நியாயம் கற்பிக்கவோ, கண்டித்தவரை குறைச் சொல்லவோ மாட்டார்கள்.
உணர வைக்க வேண்டும்
தபூக் போரில் கலந்து கொள்ளாமல் ஊரிலேயே தங்கிவிட்ட கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களின் செயலை கண்டிக்கும் விதமாக அருமை நாயகம் (ஸல்) அவர்கள் சில நாட்கள் வரை அவரிடம் பேசுவதை தவிர்த்துக் கொண்டார்கள். நூல்:- புகாரீ-4418, முஸ்லிம்-5346
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் உயர்ந்த கட்டிடம் கட்டிய ஒருவரிடம் பேசவில்லை. காரணம் உலக மோகத்தின் விளைவு தான், உயர்ந்த கட்டிடங்கள் கட்டுவது. அதனை கண்டிக்கும் விதமாக தான் அதை கட்டியவரிடம் அண்ணலார் பேசவில்லை. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்
நாம் கண்டிப்பதற்கு காரணத்தை சற்றே விரிவாகவும், பக்குவமாகவும் எடுத்து சொல்ல வேண்டும். மேலும் நாம் கண்டிக்கும்போது சொல்லுகிற செய்திகளையும், கண்ணோட்டங்களையும் வைத்து "நாம் செய்தது கொஞ்சம் சரியில்லை" என்று அவர்களை உணர வைக்க வேண்டுமே தவிர, அவர்கள் மனதில் தானாகத் தோன்ற வேண்டிய இந்த வாக்கியத்தை நாம் அப்படியே எடுத்துச் சொல்லக் கூடாது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களுடைய மனைவிமார்கள் அண்ணலாரிடம் செலவுத் தொகை கூடுதலாக வேண்டும் என பிடிவாதம் பிடித்தனர். அப்போது அண்ணலார் ஒரு மாதம் காலம் வரை அவர்களுடன் பேசாமல் இருந்து தங்களின் கண்டிப்பை வெளிப்படுத்தினார்கள். இது தொடர்பாகவே 33:28,29 ஆகிய வசனங்கள் அருளப்பட்டது. அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2946, ஃபத்ஹுல் பாரீ, இர்ஷாதுஸ் ஸாரீ
நமது குடும்பத்தினர் மற்றும் நம்மீது நல்லெண்ணம் கொண்டுள்ள நண்பர்களிடம் ஏதேனும் தவறான செயல்களை பார்த்தால் அவர்களின் அச்செயல்களை கண்டிக்கும் விதமாக அவர்களிடம் தற்காலிகமாக பேசுவதை தவிர்க்கலாம். அப்போது அவர்கள் நமது பிரியத்திற்குரியவர் நம்மிடம் பேசுவதை ஏன் தவிர்த்துக் கொள்கிறார்? என்று சிந்தித்து அவர்களாகவே தங்களை சீர்திருத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. நம்மீது நன்மதிப்பு கொண்டவர்களை மட்டுமே இவ்விதமாக கண்டிப்பது பலன் தரும். மற்றவர்களிடம் இவ்விதமாக கண்டிப்பது பலன் தராது.
அளவுக்கதிகமாக கண்டிப்பதும், அறவே கண்டிக்காமல் இருப்பதும் புத்திசாலித்தனமான செயலில்லை. கண்டிப்பில் ஒரு தெளிவு இருக்கவேண்டும். அதாவது எதற்கெடுத்தாலும் எகிறிக் குதிப்பது என்றில்லாமல் இன்னின்ன விஷயங்களில் தான் கண்டிப்பாக இருப்பதாக நிறுவ வேண்டும்.
எவ்வளவு கண்டிப்பாக இருந்தாலும் இன்னின்ன விஷயங்களில் ரொம்பக் கரெக்டான பேர்வழி என்று தெளிவுப்படுத்திவிட வேண்டும். இவர் எதற்கு பாய்வார் எதற்கு பாயமாட்டார் என்கிற சந்தேகம் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு வரும்படியாக நமது நடைமுறை இருக்கக்கூடாது.
குழந்தைகள் என்றால் பழக்க வழக்கங்களில், வியாபாரம் என்றால் பண விஷயத்தில், அலுவலகம் என்றால் பதவியைத் தவறாக பயன்படுத்தும் விஷயத்தில், பள்ளி கல்லூரி நிர்வாகி என்றால் ஒழுக்க விஷயத்தில் இந்த விஷயத்தில் இந்த மனிதர் கண்டிப்பானவர் என்று பெயரெடுக்க வேண்டும்.
எச்சரிப்பது
அப்துல்லாஹ் பின் அல்முஙஃப்ஃபல் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் சிறு கற்களை எறிந்து (விளையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். நான் அவரிடம் சிறு கற்களை எறியாதே! ஏனெனில் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்துள்ளார்கள். மேலும் அண்ணலார், ( إِنَّهُ لاَ يُصَادُ بِهِ صَيْدٌ وَلاَ يُنْكَى بِهِ عَدُوٌّ، وَلَكِنَّهَا قَدْ تَكْسِرُ السِّنَّ وَتَفْقَأُ الْعَيْنَ ) "அவ்வாறு சிறு கற்களை எறிவதால் பிராணியும் வேட்டையாடப்படுவதோ, எந்த எதிரியும் வீழ்த்தப்படுவதோ கிடையாது. மாறாக அது பல்லை உடைக்கலாம். கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவு தான் அதனால் முடியும்)" என்று சொன்னார்கள் என்று கூறினேன்.
அதன் பிறகு அதே மனிதர் சிறு கற்களை எறிந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான், ( أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنِ الْخَذْفِ. أَوْ كَرِهَ الْخَذْفَ، وَأَنْتَ تَخْذِفُ لاَ أُكَلِّمُكَ كَذَا وَكَذَا ) “அண்ணலார், சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்" என்று நான் உனக்கு சொல்கிறேன். ஆனால் நீயோ (அதை அலட்சியம் செய்து விட்டு) சிறு கற்களை எறிகிறாயே! நான் உன்னிடம் ஒருபோதும் பேச மாட்டேன்” என்று கூறிவிட்டேன். நூல்:- புகாரீ-5479, முஸ்லிம்-3952
தன் கண்டிப்பெல்லாம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையிலல்ல என்பதையும், சம்பந்தப்பட்டவர்களின் நன்மைக்காகவும், சம்பந்தப்பட்டவர்கள் சார்ந்துள்ள அமைப்பு, நிறுவனம், குடும்பம், ஆகியவற்றின் நன்மைக்காகவே என்பதையும் தெளிவுப்படுத்திவிட வேண்டும்.
சில தவறுகளுக்கு பலமுறை கண்டித்து எச்சரிக்கை தரப்பட்ட பிறகே தண்டிக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.
செல்லம் - பயம்
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
மனைவியர்கள் அண்ணலாரிடம் செலவுத் தொகை கூடுதலாக வேண்டும் என்று விவாதம் புரிந்தனர்.
இதனால் அண்ணலார் மனவேதனையில் இருந்தார்கள். இதையறிந்த நான் அண்ணலாருக்கு மனைவியாக இருந்த
என் மகள் ஹஃப்சா (ரலி) அவர்களிடம் சென்று, ( يَا
حَفْصَةُ أَقَدْ بَلَغَ مِنْ شَأْنِكِ أَنْ تُؤْذِي رَسُولَ اللَّهِ صلى الله عليه
وسلم وَاللَّهِ لَقَدْ عَلِمْتِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يُحِبُّكِ
. وَلَوْلاَ أَنَا لَطَلَّقَكِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ) “ஹஃப்சாவே! அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களை மனவேதனைப்படுத்தும் அளவுக்கு உனது தகுதி உயர்ந்துவிட்டதா?
அல்லாஹ்வின் மீதாணையாக! (நீ
இவ்வாறு செய்தால்) அண்ணலார் உன்னை நேசிக்க மாட்டார்கள் என்பதை நீ அறிந்தே உள்ளாய்.
நான் மட்டும் இல்லையென்றால் (அதாவது என்மீது அண்ணலாருக்கு பிரியம் இல்லாமல் இருந்திருந்தால்)
உன்னை அண்ணலார் மணவிலக்குச் செய்திருப்பார்கள்.
மேலும், ( يَا بُنَيَّةُ لاَ يَغُرَّنَّكِ هَذِهِ الَّتِي قَدْ أَعْجَبَهَا حُسْنُهَا وَحُبُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِيَّاهَا ) என் அருமை மகளே! உன்னைவிட அழகாக இருக்கின்ற அண்ணலாரால் அதிகம் விரும்பப்படுகின்ற உன்னுடைய சக்களத்தி (ஆயிஷாவை) பார்த்து நீயும் (அண்ணலாரிடம் விவாதம் புரிய) துணிந்து விடாதே!” என்று கண்டித்தேன். நூல்:- புகாரீ-4913, முஸ்லிம்-2947,2948
"இவளை செல்லம் கொடுத்தே குட்டிச் சுவராக்கிவிட்டீர்" என்று சிலர் சொல்வதுண்டு. "அவனை எதுக்கெடுத்தாலும் கண்டிச்சுக் கண்டிச்சே வீணாக்கி விட்டீர்" என்கிற குற்றச்சாட்டு மறுபுறம் எழுவதும் உண்டு.
உப்பும் காரமும் சரிவரக் கலக்கப்படாத குழம்பு குப்பைத் தொட்டிக்கு போய்விடுகிற மாதிரி தான் இதுவும்.
நமது பிள்ளைகள், பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு நம்மீது பிரியம் இருக்க வேண்டும். மரியாதையும் முடிந்தால் சற்று நியாயம் கலந்த பயமும் இருக்க வேண்டும். இந்த விகிதாச்சாரம் சரிவர அமையாவிட்டால் கண்டிப்பது வீண் தான்.
ஒரேயடியான பயம் நம்மை மற்றவர்களிடமிருந்து பிரித்து விடும். ஒரேயடியான (செல்லம்) உரிமை நம் தலை மீது ஏறி மேய்ந்துவிட காரணமாகிவிடும். இரண்டும் நல்லதல்ல.
எதற்கெடுத்தாலும் கண்டித்துக் கண்டித்தே வளர்த்தால் நாம் என்ன செய்தாலும் அடியும், திட்டும் தான் மிஞ்சும் என்று புரிந்து கொள்ளுபவர்கள், எந்த ஆற்றலையும் வெளிபடுத்த இயலாதவர்களாகி வீணாய்ப் போய்விடுவார்கள்.
அதிக செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட பிள்ளைகள்
உருப்பட்டதாக வரலாறு ஏதும் இல்லை.
எல்லை மீறாமல்...
கலீஃபா மஅமூன் ரஷீத் (ரஹ்)அவர்களின் சபைக்கு ஒருவர் வந்தார். வந்தவர் கலீஃபாவைப் பார்த்து, "நீ அநியாயக்காரன், பாவி இறைவனை அஞ்சிக்கொள்!" என்று சகட்டுமேனிக்கு கடினமான வார்த்தைகளைக் கூறி கண்டித்தார்.
அனைத்தையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த கலீஃபா அவர்கள் "அருமை சகோதரரே! உம்மைவிட சிறந்த ஒருவரை என்னைவிட மோசமான ஒருவருக்கு அறிவுரை வழங்க இறைவன் அனுப்பி வைத்தான். நபி மூசா (அலை) அவர்களை கொடியோன் ஃபிர்அவ்னிடம் அனுப்பி வைத்ததையே சொல்கிறேன். அப்போதுகூட இறைவன் மென்மையாக பேசுங்கள் (20:44) என்று தான் கூறினான். ஆனால் நீர் அளவுக்குமீறி பேசுகின்றீர். அவ்வாறு பேசுவதற்கு நீர் நபி மூசா (அலை) அவர்களைவிட சிறந்தவருமல்ல. நான் ஃபிர்அவ்னைவிட மோசமானவனுமல்ல" என்று கூறினார்.
கண்டிப்புகள் அவரவர் தத்தம் தவறுகளை உணர்ந்து திருந்துவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, அவர்களை விரக்தியடையச் செய்வதாக அமைந்துவிடக்கூடாது. உணர்ச்சி பிழம்பாகிக் கத்திக் கூச்சலிட்டுக் காரிய நோக்கம் நிறைவேற இயலாதபடி செய்துவிடக்கூடாது.
உடனே போய் அவனை என்னச் சேதின்னு கேக்குறேன். கேக்குற கேள்வியில் அவன் நாக்கைப் பிடுங்கிக்கிட்டுச் சாகணும்யா? என்று நரம்பு புடைக்க சிலர் புறப்படுவதுண்டு இது முறையல்ல.
தவறுகளைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கும் வழக்கத்தை தனியே தான் செய்ய வேண்டும். பலர் முன்னிலையில் செய்யக்கூடாது. காரணம் சம்பந்தப்பட்டவர் தம் தவறுகளை சுட்டிக்காட்டினார். நாம் திருந்த வேண்டும் எனச் சிறிதும் எண்ணாமல், பலர் முன்னிலையில் என்னை அவமானப்படுத்திவிட்டார் என்று எண்ணத் தொடங்கி வெறுப்பையும், வேதனையையும் பெரிதாக்கிக் கொள்வார். எனவே கண்டிப்பவரின் விருப்பமும், நோக்கமும் முற்றிலும் நிறைவேறாமல் போய்விடும். தவறுகளைச் சுட்டிக்காட்டி கண்டிப்பதை பெரும்பாலோர் தவறாகவே புரிந்து கொண்டிடுக்கிறார்கள்.
நம் மனதோடு...
ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் வந்து "இன்ன மனிதர் எனக்கு அநீதமிழைத்துவிட்டார். தாங்கள் அதனை விசாரித்து நீதி வழங்க வேண்டும்" என்று கூறினார். இதனை செவியுற்ற ஜனாதிபதி அவர்கள் "நான் அந்த வேலைக்கென்று காத்திருக்கும் நேரத்தில் வந்து சொல்லாமல் நான் வேறு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது வந்து சொல்கிறாயா?" என்று கூறி அவரை சாட்டையால் ஒரு அடி கொடுத்து விரட்டி அனுப்பினார்கள். அவரும் சென்று விட்டார்.
சிறிது நேரத்திற்கு பிறகு, ஜனாதிபதி அவர்கள் அவரை அழைத்துவரச் செய்து அவரிடம் "நான் உன்னை அடித்ததுப் போன்றே நீயும் என்னை அடித்துவிடு!" என்று கூறினார்கள். ஆனால் அவர் அதனை மன்னித்து விட்டார்.
அன்றைய தினம் ஜனாதிபதி அவர்கள் தமது வீட்டுக்கு வந்த பிறகு தம்மைத்தாமே நோக்கி உமரே! நீ ஒரு அற்பனாக இருந்தாய். அல்லாஹ் உன்னை உயர்வாக்கினான். நீ வழிகேட்டில் இருந்தாய். அல்லாஹ் உனக்கு நேர்வழி காட்டினான். நீ மிகத் தாழ்ந்தவனாக இருந்தாய். அல்லாஹ் உனக்கு கண்ணியமளித்து மக்களை ஆளும் ஆட்சியாளனாக ஆக்கினான். இந்நிலையில் உன்னிடம் ஒரு மனிதன் வந்து எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி பெற்றுத் தாரும்" என்று விண்ணப்பித்ததற்கு அவரை நீ அடித்திருக்கிறாய்? என்று நீண்ட நேரம் வரை இவ்வாறு சொல்லிச் சொல்லி தன்னைத்தானே கண்டித்துக் கொண்டார்கள்.
நம் மனதோடு நாம் உரையாடுவது மிக இயற்கையான விஷயம் தான். இதற்கு விதிவிலக்காக எவருமே இருக்க முடியாது. அப்படி உரையாடும்போது நன்மையான காரியமாக இருந்தால் நம்மை நாம் உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். தீய காரியமாக இருந்தால் சற்றுக் கடுமையாக கண்டித்துக் கொள்ள வேண்டும்.
காலையில் 5:30 மணிக்கு எழுந்து ஃபஜ்ரு தொழ வேண்டும். ஆனால் குளிரால் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்குவது அலாதி சுகம். அதனால் நாளைக்கு தொழலாம் பார்க்கலாம் என்கிறது ஒரு நினைப்பு. சரி சரி நல்லாத் தூங்கு என்று ஜால்ட்ராவும் தட்டுகிறது அல்லவா? இப்படி தட்டிக் கொடுக்கக்கூடாது. ஊம்!! மரியாதையாக எழு! எழுந்துவிடு! ஃபஜ்ரு தொழுகையை தவறவிடாதே! இப்படி தூங்கிக்கொண்டே இருந்தால் இறைநெருக்கத்தைப் பெறமுடியுமா? ம்ம்... முடியாது! என்கிற கண்டிப்பு தொனியுடன் செயல்பட வேண்டும்.
மார்க்க வரைமுறையை மீறலாம் என்றும், ஒழுக்கமற்ற செயலை செய்யலாம் என்றும் நம் மனம் நினைக்கும்போது, ஏய் நீ இறைவனின் கோபத்தை பெற விரும்புகிறாயா? உனது இந்த செயல் வெளியே தெரிந்துவிட்டால், உன்னை மக்கள் மதிப்பார்களா? உமக்கு நரகத்தைப் பற்றி அச்சமில்லையா? என்ற பாணியில் நமக்கு நாமே எச்சரித்து கண்டிப்பு தொனியுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு சிறு சிறு மனப்போராட்டங்களில் நாம் வெற்றி பெற்று ஆக்கபூர்வமான சக்தியை வளர்ந்துக் கொண்டு நற்பண்பாளர்களாக மிளிர்ந்தால் இரு உலகிலும் வெற்றி பெறலாம். மேலும் தவறுகளை கண்டிக்கும் போது இடம், பொருள் பார்த்து, தவறிழைத்தவர் உணரும் விதத்தில் பக்குவமாக கண்டிக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு அல்லாஹ் நமக்கு போதிய ஆற்றலை தந்தருள்புரிவானாக! ஆமீன்!
மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை, செல்- 9840535951
No comments:
Post a Comment