Search This Blog

Monday, 25 July 2022

கண்டிக்கும் போது...

 

கண்டிக்கும் போது...

 

عَبَسَ وَتَوَلَّى أَنْ جَاءَهُ الْأَعْمَى وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّى أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَى

  

(நமது நபி) கடுகடுத்தார். புறக்கணித்தார். (எதற்காக?) தன்னிடம் ஒரு பார்வையற்றவர் வந்ததற்காக. (நபியே! உங்களிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? அல்லது (உங்களுடைய) நல்லுபதேசம் அவருக்கு பயனளிக்கலாம். (என்பதை நீங்கள் அறிவீர்களா? அவ்வாறிருக்க அவரை நீங்கள் ஏன் கடுகடுத்துப் புறக்கணத்தீர்கள்?)        திருக்குர்ஆன்:- 80:1,2,3,4

 

மற்றவர்களை நம் வழிக்கு கொண்டு வருவதற்கு அல்லது முறையான வழியில் நெறிப்படுத்துவதற்கு கண்டிப்பது அவசியமாகிறது.

 

கண்டிப்பது என்பது சிறந்த ஆயுதம் தான். ஆனால் அதை பலர் அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். அடிக்கடி பயன்படுத்தும் எதற்குமே வீரியம் இருக்காது என்பதை சொல்ல வேண்டியதில்லை.

 

பார்வையற்றவர்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (கண் பார்வையற்ற) அப்துல்லாஹ் பின் உம்மு மக்தூம் (ரலி) அவர்கள் வந்து (நாயகமே! எனக்கு மார்க்கம் பற்றிய) நேர்வழியை அறிவியுங்கள் என்று கூறினார். அப்போது அண்ணலாருடன் இணைவைப்போரில் கண்ணியமிக்கவராக இருந்த ஒருவர் (உபைய்யி பின் கலப்) வீற்றிருந்தார். அண்ணலார் இப்னு உம்மு மக்தூம் (ரலி) அவர்களைப் புறக்கணித்துவிட்டு இவரை நோக்கி (இஸ்லாமை எடுத்துரைத்து)க் கொண்டிருந்தார்கள்.

 

அப்போது அந்தத் தோழர், நாயகமே! என்று அடிக்கடி கேட்டு வந்தார். அண்ணலார், இல்லை (இல்லை) என்று மறுமொழி பகர்ந்து வந்தார்கள். (அப்போது தான் அல்லாஹ் தலைப்பில் கண்ட வசனங்கள் மற்றும் சில வசனங்கள் அடங்கிய) அபச (80வது) அத்தியாயம் முழுவதையும் அருளினான்.    நூல்:- திர்மிதீ-3331, முஅத்தா மாலிக், முஸ்னது அபூயஃலா, முஸ்தத்ரக் ஹாகிம்

 

இஸ்லாமுக்கு பெரிய விரோதியாக இருந்த உபைய்யி பின் கலபிடம் மனம் மாற்றம் ஏற்பட்டால் அது சத்திய மார்க்கத்திற்கு பெரிய முன்னேற்றமாய் அமையும். மக்கா நகர் முழுவதும் அதன் தாக்கம் எதிரொலிக்கும். அதன் பிறகு முஸ்லிமானவர்கள் கொடுமைக்குள்ளாக்கப்படுவது குறையும். பெரிய எதிர்ப்புகளெல்லாம் அடங்கிப்போகும். அதனால் தான் அவரை இஸ்லாத்தின்பால் ஈர்ப்பதற்கான முயற்சியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

 

அச்சமயத்தில் தான் பார்வையற்ற இப்னு உம்மு மக்தூம் (ரலி) அவர்கள் வந்தார். அவர் இடையில் குறுக்கீடுவதை அண்ணலார் விரும்பவில்லை என்பதை அவர்களின் முகம் காட்டியது. பார்வை இல்லாததால் இப்னு உம்மு மக்தூமுக்கு அது தெரியவில்லை. ஆனால் தம்முடைய வார்த்தைக்கு உரிய கவனம் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்தார். நமது பார்வைக்கு இது சாதாரணமான ஒன்று தான். ஆனால் அல்லாஹ் அதை அப்படி பார்க்கவில்லை.

 

உலகத்துக்கு நேர்வழி காட்ட அனுப்பப்பட்ட தன்னுடைய தூதரினால் பார்வையற்ற தன்னுடைய மற்றொரு அடியார் புறக்கணிக்கப்படுவதை அல்லாஹ் விரும்பவில்லை. அங்கே யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்பதில் ஒரு திருத்தம் தேவைப்பட்டது. அதுவும் அண்ணலார் திருவாய் மூலமாகவே! அப்போதே அல்லாஹ் வஹி எனும் இறைச்செய்தி அறிவித்தான்.

 

இங்கு திருக்குர்ஆன் செல்லமாக கண்டித்தது இறைத்தூதரின் அணுகுமுறையைத் தானே தவிர, இறைத்தூதரை அல்ல. ஆக, செயல் தான் கண்டிக்கப்பட வேண்டுமே தவிர, நபர் அல்ல. இந்த பாணியில் பல நன்மைகள் இருக்கின்றன.

 

 குத்தலான பேச்சு

 

ஆயிஷா (ரலி)அவர்கள் கூறியதாவது. நான் நபிகள் நாயகம் (ஸல்)  அவர்களிடம் இவ்வாறு இவ்வாறுள்ள உங்கள் மனைவி சஃபிய்யா (ரலி) உங்களுக்கு போதும் என்று (சஃபிய்யா குள்ளமானவர் என்ற கருத்தில்) கூறினேன்.

 

உடனே அண்ணலார், ( لَقَدْ قُلْتِ كَلِمَةً لَوْ مُزِجَتْ بِمَاءِ الْبَحْرِ لَمَزَجَتْهُ ) "(ஆயிஷா!) நீ (சொல்லக்கூடாத பாரதூரமான) ஒரு சொல்லை சொல்லிவிட்டாய். இந்த சொல்லை கடலில் கலக்கிவிடப்படுமாயின் மெய்யாகவே அது கடலில் கலந்து (அதன் வாடையையும், சுவையையும் மாற்றி அழுக்கடையச் செய்து) விடும்." என்று கூறினார்கள்.   நூல்:- அபூதாவூத்-4875, திர்மிதீ-2426

 

குள்ளமாக இருப்பதை குறையாக எண்ணி அதை குத்தலாக பேசிய வார்த்தையை செவியுற்ற நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் உடனே அந்த பாவப் பேச்சின் எதிர்வினையை விவரித்து கண்டித்தார்கள். தண்டனைக்குரிய குற்றத்தின் மீது அச்ச உணர்வை ஏற்படுத்துவது தான் கண்டிப்பதின் நோக்கமாகும்.

 

ஒரு சிறிய சர்ச்சையின்போது பார்ப்பதற்கு எடுப்பான நிறத்துடைய மனிதரான அபூதர் (ரலி) அவர்கள் கறுப்பு நிற நீக்ரோவான பிலால் (ரலி) அவர்களைப் பார்த்து "கறுப்பியின் மகனே!" என்று தடித்த வார்த்தையைக் கூறிவிட்டார். இதனை செவியுற்ற கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் சற்று  கடினமாகவே ( إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ ) "அபூதரே! நீர் அறியாமைக் காலத்துக் கலாச்சாரம் உள்ள மனிதராகவே இருக்கின்றீர்" என்று கூறி கண்டித்தார்கள்.    நூல்:- புகாரீ-30, அபூதாவூத்-5157

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கண்டிப்புக்கு ஆளான அபூதர் (ரலி) அவர்கள் உடனே தனது கன்னத்தை நிலத்தில் வைத்து நான் பேசிய தீய வார்த்தைக்கு பகரமாக பிலாலே! உமது காலால் எனது கன்னத்தை மிதிக்கும் வரை நான் எழுந்திருக்க மாட்டேன் என்று கூறினார்.

 

நிறம், இனம், வேறுபாடின்றி சகோதரத்துவம் வளர்ந்து வருகிற அந்த தருணத்தில் பிரிவினைக்கு வழிவகுக்கும் அந்த தடித்த வார்த்தையை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செவியுற்றதும் அந்த வார்த்தைக்குரியவரை உடனே கண்டித்தார்கள்.

 

"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு" என்பது கிராமத்துச் சொல் வழக்கு. அதுபோல் அறிவுபூர்ணமடைந்த நல்லவர்கள் ஏதேனும் ஒரு தவறு செய்ய நேர்ந்து, அதற்காக அவர்கள் கண்டிக்கப்பட்டால், அதனை திருத்திக் கொள்வார்கள். தனது தவறுக்கு நியாயம் கற்பிக்கவோ, கண்டித்தவரை குறைச் சொல்லவோ மாட்டார்கள்.

 

உணர வைக்க வேண்டும்

 

தபூக் போரில் கலந்து கொள்ளாமல் ஊரிலேயே தங்கிவிட்ட கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களின் செயலை கண்டிக்கும் விதமாக அருமை நாயகம் (ஸல்) அவர்கள் சில நாட்கள் வரை அவரிடம் பேசுவதை தவிர்த்துக் கொண்டார்கள்.     நூல்:- புகாரீ-4418, முஸ்லிம்-5346

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் உயர்ந்த கட்டிடம் கட்டிய ஒருவரிடம் பேசவில்லை. காரணம் உலக மோகத்தின் விளைவு தான், உயர்ந்த கட்டிடங்கள் கட்டுவது. அதனை கண்டிக்கும் விதமாக தான் அதை கட்டியவரிடம் அண்ணலார் பேசவில்லை. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்

 

நாம் கண்டிப்பதற்கு காரணத்தை சற்றே விரிவாகவும், பக்குவமாகவும் எடுத்து சொல்ல வேண்டும். மேலும் நாம் கண்டிக்கும்போது சொல்லுகிற செய்திகளையும், கண்ணோட்டங்களையும் வைத்து "நாம் செய்தது கொஞ்சம் சரியில்லை" என்று அவர்களை உணர வைக்க வேண்டுமே தவிர, அவர்கள் மனதில் தானாகத் தோன்ற வேண்டிய இந்த வாக்கியத்தை நாம் அப்படியே எடுத்துச் சொல்லக் கூடாது.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களுடைய மனைவிமார்கள் அண்ணலாரிடம் செலவுத் தொகை கூடுதலாக வேண்டும் என பிடிவாதம் பிடித்தனர். அப்போது அண்ணலார் ஒரு மாதம் காலம் வரை அவர்களுடன் பேசாமல் இருந்து தங்களின் கண்டிப்பை வெளிப்படுத்தினார்கள். இது தொடர்பாகவே  33:28,29 ஆகிய வசனங்கள் அருளப்பட்டது.  அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்  நூல்:- முஸ்லிம்-2946, ஃபத்ஹுல் பாரீ, இர்ஷாதுஸ் ஸாரீ

 

நமது குடும்பத்தினர் மற்றும் நம்மீது நல்லெண்ணம் கொண்டுள்ள நண்பர்களிடம் ஏதேனும் தவறான செயல்களை பார்த்தால் அவர்களின் அச்செயல்களை கண்டிக்கும் விதமாக அவர்களிடம் தற்காலிகமாக பேசுவதை தவிர்க்கலாம். அப்போது அவர்கள் நமது பிரியத்திற்குரியவர் நம்மிடம் பேசுவதை ஏன் தவிர்த்துக் கொள்கிறார்? என்று சிந்தித்து அவர்களாகவே தங்களை சீர்திருத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. நம்மீது நன்மதிப்பு கொண்டவர்களை மட்டுமே இவ்விதமாக கண்டிப்பது பலன் தரும். மற்றவர்களிடம் இவ்விதமாக கண்டிப்பது பலன் தராது.

 

அளவுக்கதிகமாக கண்டிப்பதும், அறவே கண்டிக்காமல் இருப்பதும் புத்திசாலித்தனமான செயலில்லை. கண்டிப்பில் ஒரு தெளிவு இருக்கவேண்டும். அதாவது எதற்கெடுத்தாலும் எகிறிக் குதிப்பது என்றில்லாமல் இன்னின்ன விஷயங்களில் தான் கண்டிப்பாக இருப்பதாக நிறுவ வேண்டும்.

 

எவ்வளவு கண்டிப்பாக இருந்தாலும் இன்னின்ன விஷயங்களில் ரொம்பக் கரெக்டான பேர்வழி என்று தெளிவுப்படுத்திவிட வேண்டும். இவர் எதற்கு பாய்வார் எதற்கு பாயமாட்டார் என்கிற சந்தேகம் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு வரும்படியாக நமது நடைமுறை இருக்கக்கூடாது.

 

குழந்தைகள் என்றால் பழக்க வழக்கங்களில், வியாபாரம் என்றால் பண விஷயத்தில், அலுவலகம் என்றால் பதவியைத் தவறாக பயன்படுத்தும் விஷயத்தில், பள்ளி கல்லூரி நிர்வாகி என்றால் ஒழுக்க விஷயத்தில் இந்த விஷயத்தில் இந்த மனிதர் கண்டிப்பானவர் என்று பெயரெடுக்க வேண்டும்.

 

எச்சரிப்பது

 

அப்துல்லாஹ் பின் அல்முஙஃப்ஃபல் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் சிறு கற்களை எறிந்து (விளையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். நான் அவரிடம் சிறு கற்களை எறியாதே! ஏனெனில் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்துள்ளார்கள். மேலும் அண்ணலார், ( إِنَّهُ لاَ يُصَادُ بِهِ صَيْدٌ وَلاَ يُنْكَى بِهِ عَدُوٌّ، وَلَكِنَّهَا قَدْ تَكْسِرُ السِّنَّ وَتَفْقَأُ الْعَيْنَ ) "அவ்வாறு சிறு கற்களை எறிவதால் பிராணியும் வேட்டையாடப்படுவதோ, எந்த எதிரியும் வீழ்த்தப்படுவதோ கிடையாது. மாறாக அது பல்லை உடைக்கலாம். கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவு தான் அதனால் முடியும்)" என்று சொன்னார்கள் என்று கூறினேன்.

 

அதன் பிறகு அதே மனிதர் சிறு கற்களை எறிந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான், ( أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنِ الْخَذْفِ‏.‏ أَوْ كَرِهَ الْخَذْفَ، وَأَنْتَ تَخْذِفُ لاَ أُكَلِّمُكَ كَذَا وَكَذَا‏ ) “அண்ணலார், சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்" என்று நான் உனக்கு சொல்கிறேன். ஆனால் நீயோ (அதை அலட்சியம் செய்து விட்டு) சிறு கற்களை எறிகிறாயே! நான் உன்னிடம் ஒருபோதும் பேச மாட்டேன்” என்று கூறிவிட்டேன்.     நூல்:- புகாரீ-5479, முஸ்லிம்-3952

 

தன் கண்டிப்பெல்லாம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையிலல்ல என்பதையும், சம்பந்தப்பட்டவர்களின் நன்மைக்காகவும், சம்பந்தப்பட்டவர்கள் சார்ந்துள்ள அமைப்பு, நிறுவனம், குடும்பம், ஆகியவற்றின் நன்மைக்காகவே என்பதையும் தெளிவுப்படுத்திவிட வேண்டும்.

 

சில தவறுகளுக்கு பலமுறை கண்டித்து எச்சரிக்கை தரப்பட்ட பிறகே தண்டிக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.

 

செல்லம் - பயம்

 

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர்கள் அண்ணலாரிடம் செலவுத் தொகை கூடுதலாக வேண்டும் என்று விவாதம் புரிந்தனர். இதனால் அண்ணலார் மனவேதனையில் இருந்தார்கள். இதையறிந்த நான் அண்ணலாருக்கு மனைவியாக இருந்த என் மகள் ஹஃப்சா (ரலி) அவர்களிடம் சென்று, ( يَا حَفْصَةُ أَقَدْ بَلَغَ مِنْ شَأْنِكِ أَنْ تُؤْذِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَاللَّهِ لَقَدْ عَلِمْتِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يُحِبُّكِ ‏.‏ وَلَوْلاَ أَنَا لَطَلَّقَكِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ) ‏  “ஹஃப்சாவே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மனவேதனைப்படுத்தும் அளவுக்கு உனது தகுதி உயர்ந்துவிட்டதா? அல்லாஹ்வின் மீதாணையாக! (நீ இவ்வாறு செய்தால்) அண்ணலார் உன்னை நேசிக்க மாட்டார்கள் என்பதை நீ அறிந்தே உள்ளாய். நான் மட்டும் இல்லையென்றால் (அதாவது என்மீது அண்ணலாருக்கு பிரியம் இல்லாமல் இருந்திருந்தால்) உன்னை அண்ணலார் மணவிலக்குச் செய்திருப்பார்கள்.

 

மேலும், ( يَا بُنَيَّةُ لاَ يَغُرَّنَّكِ هَذِهِ الَّتِي قَدْ أَعْجَبَهَا حُسْنُهَا وَحُبُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِيَّاهَا ) என் அருமை மகளே! உன்னைவிட அழகாக இருக்கின்ற அண்ணலாரால் அதிகம் விரும்பப்படுகின்ற உன்னுடைய சக்களத்தி (ஆயிஷாவை) பார்த்து நீயும் (அண்ணலாரிடம் விவாதம் புரிய) துணிந்து விடாதே!” என்று கண்டித்தேன்.  நூல்:- புகாரீ-4913, முஸ்லிம்-2947,2948

 

"இவளை செல்லம் கொடுத்தே குட்டிச் சுவராக்கிவிட்டீர்" என்று சிலர் சொல்வதுண்டு. "அவனை எதுக்கெடுத்தாலும் கண்டிச்சுக் கண்டிச்சே வீணாக்கி விட்டீர்" என்கிற குற்றச்சாட்டு மறுபுறம் எழுவதும் உண்டு.

 

உப்பும் காரமும் சரிவரக் கலக்கப்படாத குழம்பு குப்பைத் தொட்டிக்கு போய்விடுகிற மாதிரி தான் இதுவும்.

 

நமது பிள்ளைகள், பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு நம்மீது பிரியம் இருக்க வேண்டும். மரியாதையும் முடிந்தால் சற்று நியாயம் கலந்த பயமும் இருக்க வேண்டும். இந்த விகிதாச்சாரம் சரிவர அமையாவிட்டால் கண்டிப்பது வீண் தான்.

 

ஒரேயடியான பயம் நம்மை மற்றவர்களிடமிருந்து பிரித்து விடும். ஒரேயடியான (செல்லம்) உரிமை நம் தலை மீது ஏறி மேய்ந்துவிட காரணமாகிவிடும். இரண்டும் நல்லதல்ல.

 

எதற்கெடுத்தாலும் கண்டித்துக் கண்டித்தே வளர்த்தால் நாம் என்ன செய்தாலும் அடியும், திட்டும் தான் மிஞ்சும் என்று புரிந்து கொள்ளுபவர்கள், எந்த ஆற்றலையும் வெளிபடுத்த இயலாதவர்களாகி வீணாய்ப் போய்விடுவார்கள்.

 

அதிக செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட பிள்ளைகள் உருப்பட்டதாக வரலாறு ஏதும் இல்லை.

 

எல்லை மீறாமல்...

 

கலீஃபா மஅமூன் ரஷீத் (ரஹ்)அவர்களின் சபைக்கு ஒருவர் வந்தார். வந்தவர் கலீஃபாவைப் பார்த்து, "நீ அநியாயக்காரன், பாவி இறைவனை அஞ்சிக்கொள்!" என்று சகட்டுமேனிக்கு கடினமான வார்த்தைகளைக் கூறி கண்டித்தார்.

 

அனைத்தையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த கலீஃபா அவர்கள் "அருமை சகோதரரே! உம்மைவிட சிறந்த ஒருவரை என்னைவிட மோசமான ஒருவருக்கு அறிவுரை வழங்க இறைவன் அனுப்பி வைத்தான். நபி மூசா (அலை) அவர்களை கொடியோன் ஃபிர்அவ்னிடம் அனுப்பி வைத்ததையே சொல்கிறேன். அப்போதுகூட இறைவன் மென்மையாக பேசுங்கள் (20:44) என்று தான் கூறினான். ஆனால் நீர் அளவுக்குமீறி பேசுகின்றீர். அவ்வாறு பேசுவதற்கு நீர் நபி மூசா (அலை) அவர்களைவிட சிறந்தவருமல்ல. நான் ஃபிர்அவ்னைவிட மோசமானவனுமல்ல" என்று கூறினார்.

 

கண்டிப்புகள் அவரவர் தத்தம் தவறுகளை உணர்ந்து திருந்துவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, அவர்களை விரக்தியடையச் செய்வதாக அமைந்துவிடக்கூடாது. உணர்ச்சி பிழம்பாகிக் கத்திக் கூச்சலிட்டுக் காரிய நோக்கம் நிறைவேற இயலாதபடி செய்துவிடக்கூடாது.

 

உடனே போய் அவனை என்னச் சேதின்னு கேக்குறேன். கேக்குற கேள்வியில் அவன் நாக்கைப் பிடுங்கிக்கிட்டுச் சாகணும்யா? என்று நரம்பு புடைக்க சிலர் புறப்படுவதுண்டு இது முறையல்ல.

 

தவறுகளைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கும் வழக்கத்தை தனியே தான் செய்ய வேண்டும். பலர் முன்னிலையில் செய்யக்கூடாது. காரணம் சம்பந்தப்பட்டவர் தம் தவறுகளை சுட்டிக்காட்டினார். நாம் திருந்த வேண்டும் எனச் சிறிதும் எண்ணாமல், பலர் முன்னிலையில் என்னை அவமானப்படுத்திவிட்டார் என்று எண்ணத் தொடங்கி வெறுப்பையும், வேதனையையும் பெரிதாக்கிக் கொள்வார். எனவே கண்டிப்பவரின் விருப்பமும், நோக்கமும் முற்றிலும் நிறைவேறாமல் போய்விடும். தவறுகளைச் சுட்டிக்காட்டி கண்டிப்பதை பெரும்பாலோர் தவறாகவே புரிந்து கொண்டிடுக்கிறார்கள்.

 

நம் மனதோடு...

 

ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் வந்து "இன்ன மனிதர் எனக்கு அநீதமிழைத்துவிட்டார். தாங்கள் அதனை விசாரித்து நீதி வழங்க வேண்டும்" என்று கூறினார். இதனை செவியுற்ற ஜனாதிபதி அவர்கள் "நான் அந்த வேலைக்கென்று காத்திருக்கும் நேரத்தில் வந்து சொல்லாமல் நான் வேறு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது வந்து சொல்கிறாயா?" என்று கூறி அவரை சாட்டையால் ஒரு அடி கொடுத்து விரட்டி அனுப்பினார்கள். அவரும் சென்று விட்டார்.

 

சிறிது நேரத்திற்கு பிறகு, ஜனாதிபதி அவர்கள் அவரை அழைத்துவரச் செய்து  அவரிடம் "நான் உன்னை அடித்ததுப் போன்றே நீயும் என்னை அடித்துவிடு!" என்று கூறினார்கள். ஆனால் அவர் அதனை மன்னித்து விட்டார்.

 

அன்றைய தினம் ஜனாதிபதி அவர்கள் தமது வீட்டுக்கு வந்த பிறகு தம்மைத்தாமே நோக்கி உமரே! நீ ஒரு அற்பனாக இருந்தாய். அல்லாஹ் உன்னை உயர்வாக்கினான். நீ வழிகேட்டில் இருந்தாய். அல்லாஹ் உனக்கு நேர்வழி காட்டினான். நீ மிகத் தாழ்ந்தவனாக இருந்தாய். அல்லாஹ் உனக்கு கண்ணியமளித்து மக்களை ஆளும் ஆட்சியாளனாக ஆக்கினான். இந்நிலையில் உன்னிடம் ஒரு மனிதன் வந்து எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி பெற்றுத் தாரும்" என்று விண்ணப்பித்ததற்கு அவரை நீ அடித்திருக்கிறாய்? என்று நீண்ட நேரம் வரை இவ்வாறு சொல்லிச் சொல்லி தன்னைத்தானே கண்டித்துக் கொண்டார்கள்.

 

நம் மனதோடு நாம் உரையாடுவது மிக இயற்கையான விஷயம் தான். இதற்கு விதிவிலக்காக எவருமே இருக்க முடியாது. அப்படி உரையாடும்போது நன்மையான காரியமாக இருந்தால் நம்மை நாம் உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். தீய காரியமாக இருந்தால் சற்றுக் கடுமையாக கண்டித்துக் கொள்ள வேண்டும்.

 

காலையில் 5:30 மணிக்கு எழுந்து ஃபஜ்ரு தொழ வேண்டும். ஆனால் குளிரால் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்குவது அலாதி சுகம். அதனால் நாளைக்கு தொழலாம் பார்க்கலாம் என்கிறது ஒரு நினைப்பு. சரி சரி நல்லாத் தூங்கு என்று ஜால்ட்ராவும் தட்டுகிறது அல்லவா? இப்படி தட்டிக் கொடுக்கக்கூடாது. ஊம்!! மரியாதையாக எழு! எழுந்துவிடு! ஃபஜ்ரு தொழுகையை தவறவிடாதே! இப்படி தூங்கிக்கொண்டே இருந்தால் இறைநெருக்கத்தைப் பெறமுடியுமா? ம்ம்... முடியாது! என்கிற கண்டிப்பு தொனியுடன் செயல்பட வேண்டும்.

 

மார்க்க வரைமுறையை மீறலாம் என்றும், ஒழுக்கமற்ற செயலை செய்யலாம் என்றும் நம் மனம் நினைக்கும்போது, ஏய் நீ இறைவனின் கோபத்தை பெற விரும்புகிறாயா? உனது இந்த செயல் வெளியே தெரிந்துவிட்டால், உன்னை மக்கள் மதிப்பார்களா? உமக்கு நரகத்தைப் பற்றி அச்சமில்லையா? என்ற பாணியில் நமக்கு நாமே எச்சரித்து கண்டிப்பு தொனியுடன் செயல்பட வேண்டும்.

 

இவ்வாறு சிறு சிறு மனப்போராட்டங்களில் நாம் வெற்றி பெற்று ஆக்கபூர்வமான சக்தியை வளர்ந்துக் கொண்டு நற்பண்பாளர்களாக மிளிர்ந்தால் இரு உலகிலும் வெற்றி பெறலாம். மேலும் தவறுகளை கண்டிக்கும் போது இடம், பொருள் பார்த்து, தவறிழைத்தவர் உணரும் விதத்தில் பக்குவமாக கண்டிக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு அல்லாஹ் நமக்கு போதிய ஆற்றலை தந்தருள்புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை,  சென்னை, செல்- 9840535951

 

Saturday, 23 July 2022

நினைத்தேன் வந்தது

 

நினைத்தேன் வந்தது

 

قال الله : وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا

قال رسول الله صلي الله عليه وسلم : فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً

 

ஒருவர் வாழ்க்கையில் உயர்ந்த சிறப்பிடங்களை அடைவதென்பது அவருடைய எண்ணங்களையும், தீர்மானங்களையும் பொருத்து ஆகும். எனவே இஸ்லாம் ஒருவரின் நல்லெண்ணத்தை ஊக்குவித்து வரவேற்று அதற்கும் நற்கூலி உண்டு என அறிவிக்கிறது.

 

وَمَنْ يَخْرُجْ مِنْ بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا

 

எவரேனும் தம் இல்லத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் (எனும் நாட்டைவிட்டு புலம் பெயர்ந்து) செல்லும் வழியில் இறந்து விட்டால் அவருடைய வெகுமதி நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகிறது. ஏனென்றால் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும், நிகரற்ற கிருபையுடையோனுமாக இருக்கின்றான்.      திருக்குர்ஆன்:- 4:100

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً ) ஒருவர் ஒரு நன்மையை செய்ய வேண்டும் என (மனதில்) எண்ணி விட்டாலே, அதை செயல்படுத்தா விட்டாலும் அவருக்காக தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான்.   அறிவிப்பாளர்:- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்   நூல்:- புகாரீ-6491

 

தொழுகைக்காக 

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் நல்ல முறையில் உளூ செய்து தொழுகையை நாடியவராக பள்ளிவாசலுக்கு செல்வாரோ அவருக்கு தொழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் வரை அவருக்குத் தொழுகையின் நன்மை கிடைத்துக் கொண்டேயிருக்கும்.     நூல்:- முவத்தா மாலிக்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( فَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلاَةٍ مَا كَانَتِ الصَّلاَةُ هِيَ تَحْبِسُهُ ) ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்தபின் (கூட்டுத்) தொழுகைக்காக காத்திருக்கும் காலமெல்லாம் அவர் தொழுகையில் இருப்பதாகக் கருதப்படுவார். அதுவரை அதன் நன்மை அவருக்கு கிடைத்துக் கொண்டேயிருக்கும்.  அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்  நூல்:-புகாரீ-477, அபூதாவூத்-472

 

பாங்கு சப்தம் கேட்டதும் நாம் உளூவுடன் பள்ளிக்குள் நுழைந்து உபரியான தொழுகைகளை தொழுதுவிட்டு பர்ளு எனும் கட்டாயத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்றெண்ணி உளூ முறிந்து விடாமலும், எவ்வித பேச்சுமின்றி அதற்காக காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு நன்மையை ஈட்டித் தரும் பொன்னான நிமிடங்களாகும்.

 

1:30 மணிக்கு நடைபெறவிருக்கும் லுஹர் தொழுகையின் ஜமாஅத்திற்காக 1:00 மணிக்கே ஒருவர் உளூ செய்துவிட்டு தொழுகையை எதிர்பார்த்து பள்ளியில் அமர்ந்திருக்கிறார் என்றால் அவர் தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் நேரம் முழுவதற்கும் தொழுகைக்கான நன்மை கிடைத்துக் கொண்டேயிருக்கும்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ وُضُوءَهُ ثُمَّ رَاحَ فَوَجَدَ النَّاسَ قَدْ صَلَّوْا أَعْطَاهُ اللَّهُ جَلَّ وَعَزَّ مِثْلَ أَجْرِ مَنْ صَلاَّهَا وَحَضَرَهَا ) ஒருவர் சிறந்த முறையில் உளூ செய்து விட்டு (ஜமாஅத்துடன் தொழுவதற்காக) பள்ளிவாசலுக்கு செல்கிறார். இவர் அங்கு சென்றபோது ஜமாஅத் தொழுகை முடிந்து விட்டதை அறிந்து பின்னர், இவர் தனியாக தொழுதால் ஜமாஅத்துடன் தொழுத நன்மையையே அல்லாஹ் இவருக்கு வழங்குகிறான்.    அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-477, நசாயீ-846,  ஹாகிம்

 

ஜமாஅத் தொழுகை கிடைக்காவிட்டாலும் வெறும் முயற்சி செய்வதற்கு அதே அளவு நன்மை வழங்குவது அல்லாஹ்வின் பேரருளும், பெருங்கொடையுமாகும். மேலும் ஜமாஅத் தொழுகை முடிந்திருக்கும் என்ற சந்தேகம் வந்தாலும் பள்ளிவாசலுக்கு செல்லாமல் இருந்து விடக்கூடாது. ஏனெனில் பள்ளிவாசலுக்கு சென்று தொழ வேண்டும் என்று எண்ணும்போதே ஜமாஅத் தொழுகையின் நன்மை கிடைக்கிறது.

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( مَنْ أَتَى فِرَاشَهُ وَهُوَ يَنْوِي أَنْ يَقُومَ يُصَلِّي مِنَ اللَّيْلِ فَغَلَبَتْهُ عَيْنَاهُ حَتَّى أَصْبَحَ كُتِبَ لَهُ مَا نَوَى وَكَانَ نَوْمُهُ صَدَقَةً عَلَيْهِ مِنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ ) ஒருவர் இரவில் (தஹஜ்ஜத்) தொழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இரவு படுக்கின்றார். ஆனால் தூக்க மிகுதியால் (பஜ்ரு தொழக்கூடிய) அதிகாலையில் தான் விழித்தெழுகிறார் எனில், அவருக்கு அவர் எண்ணத்தின்படி இரவுத் தொழுகையின் நன்மை எழுதப்படும். அவருடைய தூக்கமோ அவரின் இறைவனிடமிருந்து அவருக்கு வழங்கப்பட்ட தர்மமாகும்.      அறிவிப்பாளர்:- அபூதர்தா (ரலி) அவர்கள்  நூல்:- நசாயீ-1765, இப்னுமாஜா-1334

 

அதாவது இரவு தஹஜ்ஜத் தொழ வேண்டும் என்கிற அவருடைய எண்ணத்திற்காகவே நன்மை கிடைத்து விடும். அவர் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். ஆனால் அவருடைய அந்த தூய எண்ணத்தின் காரணமாக தூங்கிக் கொண்டிருந்த நிலையிலும், விழித்து தொழுதவராக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார். அவருக்கு கிடைத்த அந்த நிம்மதியான உறக்கமும் தயாளத் தன்மையுள்ள அல்லாஹ்விடமிருந்து அவருக்கு வழங்கப்பட்ட தர்மமாக ஆகிவிட்டது.

 

நன்மைகளின் மாதம்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தின் தலைப்பிறை பார்த்தவுடன் ( اَللَّهمَّ بَارِكْ لَنا فِي رَجَبَ وَشَعبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ ) “யா அல்லாஹ்! ரஜப் மற்றும் ஷஅபான் மாதங்களில் எங்களுக்கு அருள் பொழிவாயாக! மேலும் நாங்கள் ரமளானை அடைந்து (அதில் பல நற்செயல்கள் செய்யும் பாக்கியத்தைப் பெற்றுக்) கொள்ள செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.  நூல்:- முஸ்னது அஹ்மத், தப்ரானி

 

ரமளான் மாதத்தில் நற்செயல்கள் செய்வதற்கு நாம் இரண்டு மாதங்களுக்கு முன்பே உடலாலும், மனதாலும் தயாராக வேண்டும் என்பதே அண்ணல் நபி (ஸல்) அவர்களது விருப்பமாகும். அவ்வாறே ஒருவர் மனத்தூய்மையுடன் ரமளான் மாதத்தை எதிர்பார்த்தவராக தயார் நிலையில் இருக்கும் போது, ரமளான் மாதத்தை அடைவதற்கு முன்போ அல்லது ரமளானை அடைந்த பின்போ மரணமோ, பெருநோயோ, அவசியமான வெளியூர் பயணமோ நேர்ந்து அதனால் அவரது எண்ணத்தின்படி ரமளானில் எந்த நற்செயல்களிலும் அவரால் ஈடுபட முடியாவிட்டாலும், அவருக்கு அதற்குண்டான நற்கூலி அல்லாஹ் தர போதுமானவன்.

 

பொருளாதார வளம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( عَبْدٍ رَزَقَهُ اللَّهُ مَالاً وَعِلْمًا فَهُوَ يَتَّقِي فِيهِ رَبَّهُ وَيَصِلُ فِيهِ رَحِمَهُ وَيَعْلَمُ لِلَّهِ فِيهِ حَقًّا وَعَبْدٍ رَزَقَهُ اللَّهُ عِلْمًا وَلَمْ يَرْزُقْهُ مَالاً فَهُوَ صَادِقُ النِّيَّةِ يَقُولُ لَوْ أَنَّ لِي مَالاً لَعَمِلْتُ بِعَمَلِ فُلاَنٍ فَهُوَ بِنِيَّتِهِ فَأَجْرُهُمَا سَوَاءٌ ) 

அல்லாஹ் ஒரு மனிதருக்கு செல்வத்தையும், அறிவு ஞானத்தையும் வழங்கினான். அவர் அவ்விரண்டையும் முறைப்படி செலவழிக்கிறார். அதன் மூலம் அவர் தம் இரத்த உறவுகளை அனுசரித்தார். அதில் அல்லாஹ்வுக்கு உரிமை இருப்பதை உணர்ந் (து செயல்பட்டு வந்)தார். மற்றொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கினான் செல்வத்தை வழங்கவில்லை. இவர் "அவரைப் போன்று எனக்கும் செல்வம் இருந்தால் நானும் அவரைப் போன்று முறைப்படி (நல்ல வழியில்) செலவழிப்பேன்" என்று எண்ணுகிறார். (அதனால்) அவ்விருவரும் நன்மையைப் பெறுவதில் சமமானவர்கள் ஆவர்.    அறிவிப்பாளர்:- அபூகபஷா அல்அன்மாரிய்யீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2247,  இப்னுமாஜா,  முஸ்னது அஹ்மத்,  

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அபூ ளம்ளம் (ரலி) அவர்கள் ஒவ்வொரு நாள் விடியும் போதும் அவர் யா அல்லாஹ்! உன் பாதையில் அர்ப்பணிப்பதற்கு என்னிடம் பொருளாதார வளம் இல்லை. என் உடல் ஊனத்தால் என்னால் அதனை ஈட்டவும் முடியவில்லை. ஆகவே என்னை யாராவது குறைவாக எண்ணி ஏசி பேசியிருந்தால் அதை உனக்காக நான் பொறுத்துக் கொள்கிறேன். அந்த பொறுமைக்கு நீ ஏதாவது எனக்கு கூலி வழங்கலாம் என நினைத்திருந்தால் அந்த நற்க்கூலியை நான் உன்னுடைய பாதையில் அர்ப்பணிக்கிறேன்" என்று பிரார்த்திக்கும் வழக்கமுடையவராக இருந்தார். அதனால் அல்லாஹ் அவருக்கு தர்மம் வழங்கிய நன்மைகள் கொடுப்பதை தன்மீது கடமையாக்கிக் கொண்டான்.   நூல்:- உஸ்துல் ஙாபா

 

எகிப்தைச் சேர்ந்த அறிஞர் முஹம்மது அல்கஸ்ஸாலி அவர்கள் தமது நூலில் கீழ்காணும் நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். முன்னொரு காலத்தில் ஒருவர் ஒரு மணல் மேட்டுக்கருகில் நடந்து சென்றார். அவர் இந்த மணல் மேடு முழுவதும் உணவு குவியலாக மாறினால் நான் அதை பசியால் வாடும் ஏழைகளுக்கு வாரி வழங்குவேன் என்று தன் மனதில் உளப்பூர்வமாக எண்ணினார்.

 

அப்போதிருந்த இறைத்தூதருக்கு அல்லாஹுதஆலா "தர்மம் செய்ய வேண்டும் என்ற அவருடைய உயர்வான அந்த நல்லெண்ணத்தை நான் அங்கீகரித்துக் கொண்டேன். உண்மையாகவே அந்த மணல் மேடு உணவுக் குவியலாக மாறி அதை அவர் தர்மம் செய்திருந்தால் என்ன நன்மைகள் பெறுவாரோ அதை நான் அவருக்கு வழங்கி விட்டேன் என்ற சுபச்செய்தியை அம்மனிதரிடம் தெரிவித்து விடுங்கள்" என்று வஹி எனும் இறைச்செய்தி அனுப்பினான்.

 

இறைவழியில் செலவழிப்பதற்கு பொருளாதாரம் இல்லையே என்று சலித்துக் கொள்வதைவிட  அதற்காக மனத்தூய்மையுடன் நல்லெண்ணம் கொள்வது நன்மைகளைப் பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை. நல்லெண்ணத்துடன் நற்செயல்களில் ஈடுபடவும் முயற்சிக்க வேண்டும்.

 

பயணத்தை துவங்கியதும்...

 

தாம் கொடுமைப்படுத்தப்படும் இடத்திலிருந்து ஹிஜ்ரத் (புலம் பெயருதல்) செய்யுமாறு ஆர்வமூட்டியும், வயோதிகத்தாலும், நோயின் காரணமாகவும் ஹிஜ்ரத் செய்ய இயலாதவர்கள் மன்னிக்கப்படுவார்கள் என்ற திருவசனம் அருளப்பட்டபோது மக்காவில் பனூ லைத் கோத்திரத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த ஜுன்துப் பின் லமுரா (ரலி) அவர்கள் தம் பிள்ளைகளிடம் நான் முதியவனாக இருப்பினும் இயலாதவனல்ல. என்னை வாகனத்தில் ஏற்றி விடுங்கள். இனிமேல் நான் மக்காவில் இருக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.

 

அவரின் வயோதிகத்தின் காரணமாக அவருடைய பிள்ளைகள் அவரை ஒரு கட்டிலில் வைத்து அருமை நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் மதீனாவுக்கு தூக்கி சென்றனர். ஆனால் மக்காவிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தன்யீம் என்ற இடத்தில் அவருடைய உயிர் பிரிந்தது. இதை அறிந்த மக்கா இணவைப்பாளர்கள் ஜுன்துபின் நோக்கம் நிறைவேறவில்லை என்று கூறி மகிழ்ந்தனர். முஸ்லிம்களோ ( لَوْ بَلَغَ إِلَيْنَا لَتَمَّ أَجْرُهُ ) அவர் மதீனா வந்தடைந்ததும் உயிர் பிரிந்திருக்குமானால் ஹிஜ்ரத் செய்த முழு பாக்கியத்தையும் அடைந்திருப்பாரே என்று வருந்தினர். அப்போது தான் தலைப்பில் காணும் (4:100) திருவசனம் அருளப்பட்டது.  நூல்:- தஃப்சீர் குர்துபீ

 

ஹிஜ்ரத் செய்தே ஆக வேண்டும் என்றெண்ணி வீட்டை விட்டு வெளியேறிவிட்டாலே, அவர் ஹிஜ்ரத் செய்த முழு நன்மையை கொஞ்சமும் குறைவின்றி பெற்று விட்டார் என்று அல்லாஹ் ஆறுதல் மொழி கூறினான்.

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( مَنْ خَرَجَ حَاجًّا ، فَمَاتَ ، كُتِبَ لَهُ أَجْرُ الْحَاجِّ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ، وَمَنْ خَرَجَ مُعْتَمِرًا ، فَمَاتَ ، كُتِبَ لَهُ أَجْرُ الْمُعْتَمِرِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ، وَمَنْ خَرَجَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ ، فَمَاتَ ، كُتِبَ لَهُ أَجْرُ الْغَازِي إِلَى يَوْمِ الْقِيَامَةِ )  யார் ஹஜ் செய்வதற்கு புறப்பட்டு வழியில் இறந்து விடுவாரேயானால் மறுமை நாள் வரை ஹஜ் செய்தவரின் நன்மை அவருக்கு எழுதப்படும். மேலும் யார் உம்ரா செய்வதற்கு புறப்பட்டு வழியில் இறந்து விடுவாரேயானால் மறுமை நாள் வரை உம்ரா செய்தவரின் நன்மை அவருக்கு எழுதப்படும். யார் அறப்போர் செய்வதற்கு புறப்பட்டு வழியில் இறந்து விடுவாரேயானால் மறுமை நாள் வரை அறப்போர் செய்தவரின் நன்மை அவருக்கு எழுதப்படும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூயஃலா, தப்ரானீ, பைஹகீ, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-361

 

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஹஜ்ஜோ, உம்ராவோ, அறப்போரோ ஒருமுறையோ அல்லது சில முறையோ தான் செய்ய முடியும். ஆனால் இந்த இறைவணக்கங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆவலோடு அதற்காக புறப்பட்டு, செல்லும் வழியில் இறந்து விட்டால் அவரது ஆவலுக்கும், அந்த நல்லெண்ணத்துக்கும் பரிசாக அல்லாஹுதஆலா மறுமை நாள் வரை அவர் உயிருடன் இருந்து அந்த இறைவணக்கங்கள் செய்தது போன்ற முழுமையான நற்க்கூலியை வெகுமதியாக அவருக்கு தந்து விடுகிறான்.

 

அறப்போருக்கான பயணமோ, ஹஜ் மற்றும் உம்ராவுக்கானப் பயணமோ, மார்க்க அறிவை தேடும் பயணமோ ஆக எதுவானாலும், மனத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்காக செய்யும் எந்த பயணமாக இருந்தாலும், அதன் இலக்கை அடையாவிட்டாலும் பயணத்தை துவங்கிய உடனே அதன் முழு நன்மைகளும் அவருக்கு கிடைத்துவிடும் என்கிறனர் மார்க்க அறிஞர்கள்.

 

அறப்போர்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( مَنْ سَأَلَ اللَّهَ الشَّهَادَةَ بِصِدْقٍ بَلَّغَهُ اللَّهُ مَنَازِلَ الشُّهَدَاءِ وَإِنْ مَاتَ عَلَى فِرَاشِهِ )  யார் உண்மையான மனதுடன் இறைவனிடம் வீர மரணத்தை வேண்டுகிறாரோ அவரை உயிர்த் தியாகிகளின் தகுதிகளுக்கு அல்லாஹ் உயர்த்துவான். அவர் தம் படுக்கையில் மரணமடைந்தாலும் சரியே!  அறிவிப்பாளர்:- சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3870,  திர்மிதீ-1577, இப்னுமாஜா-2797

 

அடியான் தன்னுடைய இறைவனின் மார்க்கத்திற்காக தன்னுடைய உயிரையே அர்ப்பணிப்பதற்கு ஆயத்தமாகிவிடுகிறான் எனில், அவன் இறைவனின் விசுவாசமான உளத்தூய்மையுள்ள அடியானாகத்தான் கருதப்படுவான். உயிரை அர்ப்பணிப்பதற்கான வாய்ப்பும், தருணமும் அவருக்குக் கிடைக்காமல் போனாலும் சரியே!

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் ஒரு அறப்போரில் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அண்ணலார்,      ( إِنَّ أَقْوَامًا بِالْمَدِينَةِ خَلْفَنَا، مَا سَلَكْنَا شِعْبًا وَلاَ وَادِيًا إِلاَّ وَهُمْ مَعَنَا فِيهِ، حَبَسَهُمُ الْعُذْرُ ) "மதீனாவில் (நம் தோழர்கள்) சிலர் இருக்கின்றனர். நீங்கள் ஒரு பாதையில் நடக்கும் போதும், ஒரு பள்ளதாக்கைக் கடக்கும்போதும் உங்களுடனேயே அவர்களும் இருக்கிறனர். நோய் தான் அவர்களை (போருக்கு வர விடாமல்) தடுத்து விட்டது." என்று கூறினார்கள்.     நூல்:-புகாரீ-2839,  முஸ்லிம்-3872

 

அதாவது இறைவழியில் போருக்கு புறப்படுவதால் கிடைக்கின்ற நன்மை வீட்டில் இருந்தவர்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஏனெனில் மிக நியாயமான, ஏற்றுக்கொள்ளத்தக்க காரணங்களை முன்னிட்டே அவர்கள் வீட்டிலே தங்க நேர்ந்தது. உயிருக்கு பயந்தோ, இழப்புகளுக்கு அஞ்சியோ அவர்கள் வீட்டில் முடங்கி இருக்கவில்லை. அவ்வாறு நடந்து கொள்வதற்கு அவர்கள் கோழைகளும் கிடையாது.

 

இறைவனிடம் சேவையாற்றுகின்றவர்களின் பட்டியலில் தான் அவர்கள் பெயரும் இருக்கும். ஏனெனில் அவர்கள் உடலுழைப்பு செய்ய இயலாமல் போனாலும் மனதளவில் அனைத்து விதமான சேவைகளுக்கும், தியாகங்களுக்கும் அவர்கள் ஆயத்தமாக இருந்தனர் என்பது நபிமொழி விரிவுரையாளர்களின் கருத்தாகும்.

 

பத்ருப் போரில் கலந்து கொள்ள உஸ்மான் (ரலி) அவர்கள் வந்த போது அவரது மனைவி ருகைய்யா (ரலி) அவர்கள் நோயுற்றிருந்ததால் அவரருகிலிருந்து வேண்டியதை சிகிச்சை செய்யுமாறு அண்ணல் நபி (ஸல்) அவர்களால் அவர் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டார். மேலும் அபூ உமாமா பின் சஃலபா (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ள வந்த போது அவரது தாயார் நோயுற்றிருந்ததால் அவரருகிலிருந்து வேண்டியதை சிகிச்சை செய்யுமாறு அண்ணல் நபி (ஸல்) அவர்களால் அவரும் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டார்.

 

இந்த இருவரும் பத்ருப் போரில் கலந்துக் கொள்ளாவிட்டாலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் போரில் கிடைத்த ஙனிமத் பொருட்களில் பங்கு கொடுத்தார்கள். காரணம் அவ்விருவரின் மனமும் போரில் கலந்துக் கொள்ளத்தான் நாடியது. ஆனால் அவர்களது நிர்ப்பந்த நிலை அவர்களை தடுத்துவிட்டது. பத்ருப் போரில் கலந்துக் கொண்டவர்களின் பெயர் பட்டியலில் இவர்கள் பெயர்களும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

 

ஆகவே இறைவனிடம் இவ்விரு நபித்தோழர்களும் இறைப்பாதையில் பத்ரு என்ற அறப்போர் புரிந்ததற்குரிய கண்ணியத்தையும், நற்கூலியையும் பெறுவார்கள்.

 

தூய்மையான எண்ணங்கள்

 

ஒவ்வொருவரும் தத்தமது எண்ணங்களின் (வழிமுறைப்)படி செயலாற்றுகின்றனர்.       திருக்குர்ஆன்:- 17:84 

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் ஓர் அடியான் அல்லாஹ்வின் சமூகத்திற்கு கொண்டு வரப்படுவான். அவனிடமுள்ள நன்மைகள் அனைத்தையும் அவனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பங்கு வைத்து கொடுக்கப்பட்டுவிடும். இறுதியில் அம்மனிதன் மட்டும் தனியாக நின்று கொண்டிருப்பான்.

 

அப்போது அல்லாஹ் அவனை அழைத்து "ஓ அடியானே! உன்னுடைய பொக்கிஷம் ஒன்று என்னிடம் உள்ளது. அதை என் படைப்பினங்களில் பரிசுத்தமான வானவர்கள் உட்பட எவரும் அறிய மாட்டார்கள்" என்று கூறுவான். அப்போது அந்த அடியான் அல்லாஹ்வே! அது என்ன என்று வினவுவான். அதற்கு அல்லாஹ் "ஓ அடியானே உன்னுடைய தூய்மையான எண்ணங்கள் தான்! நீ ஒவ்வொரு முறை எண்ணும்போதும்  அதற்கு நான் எழுபது மடங்கு நன்மைகளை எழுதினேன் என்று பதிலளிப்பான்.           நூல்:- தன்பீஹுல் ஙாஃபிலீன் 2/377

 

நமது வாழ்க்கையை தீர்மானிப்பது நமது செயல்களைவிட நமது எண்ணங்கள் தான் என்பதை விளங்க வேண்டும். ஆகவே எண்ணங்கள் தான் ஒரு மனிதனின் உலக,  ஆன்மீக வாழ்வின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கின்றன.

 

எண்ணங்கள் பற்றி கவனமாக இருங்கள். அவைதான் வார்த்தைகளாக மாறுகின்றன. வார்த்தைகளில் கவனமாக இருங்கள். அவைதான் செயல்களாக மாறுகின்றன. செயல்களில் கவனமாக இருங்கள். அவைதான் பழக்கங்களாக மாறுகின்றன. பழக்கங்களில் கவனமாக இருங்கள். அவைதான் ஒழுக்கங்களாக மாறுகின்றன. ஒழுக்கங்களில் கவனமாக இருங்கள். அவைதான் உங்கள் வாழ்க்கையை உருவாக்குகின்றன என்றான் ஓர் அறிஞன்.

 

ஆரோக்கியமான  காலங்கள்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( إِذَا مَرِضَ الْعَبْدُ أَوْ سَافَرَ، كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ مُقِيمًا صَحِيحًا ) ஓர் அடியான் ஆரோக்கியமாக இருந்தபோதும், ஊரிலிருக்கும்போதும் செய்து வரும் நற்செயல்களுக்குக் கிடைப்பதைப் போன்ற (அதே) நன்மை அவர் நோயுற்றுவிடும் போதும் அல்லது பயணத்தில் இருக்கும் போதும் அவருக்கு எழுதப்படும்.    அறிவிப்பாளர்:- அபூபுர்தா (ரஹ்) அவர்கள்       நூல்:- புகாரீ-2996, அபூதாவூத்-2687

 

இந்த நபிமொழியை அபூபுர்தா (ரஹ்) அவர்கள் தம்முடன் பயணத்தில் நோன்பு நோற்றுக் கொண்டு வந்த யஸீத் பின் அபீகப்சா (ரஹ்) அவர்களிடம் கூறினார்கள்.

 

ஓர் அடியான் இளமையில் ஆரோக்கியத்துடன் வாழும் போது நிறைய வணக்கங்கள் புரிகின்றான். இதுபோல் உள்ளூரில் இருக்கும் போதும் நிறைய வணக்கங்கள் புரிகின்றான். அவனது முதுமையில் அல்லது ஏதேனும் நோயுற்ற போது இறைவணக்கத்தில் குறைவு ஏற்படுகிறது. அல்லது வெளியூர் பயணத்தினாலும் இறைவணக்கத்தில் குறைவு ஏற்படுகிறது. இதற்காக வருந்துகிறான். ஆனால் இதற்காக வருத்தப்பட தேவையில்லை என்கிறது இந்த நபிமொழி.

 

ஆரோக்கியத்துடனும்,  உள்ளூரில் இருக்கும் போதும் செய்த வணக்கத்தின் நன்மையைப் போன்று நோய் அல்லது வெளியூர் பயணம் என்ற தங்கடத்தின் போது வணக்கம் குறைவாக இருந்த போதிலும், அதற்குண்டான நன்மை குறைவின்றி நிறைவாக கிடைக்கும்.

 

எனவே, முதுமை வரும் முன் இளமையிலும் , நோய் வருவதற்கு முன் ஆரோக்கியமான  காலங்களிலும் அதிகமாக வணக்கம் புரிந்திட வேண்டும். இதனால் முதுமையிலும், நோயாளியாக இருக்கும்போதும் பயனடையலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

அல்லாஹ்வின் பக்கம் திரும்புவது

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்வேலர்களில் ஒரு மனிதர் இருந்தார். அவர் 99 மனிதர்களை கொன்றுவிட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி தனக்கு பாவமன்னிப்பு கிடைக்குமா? என்று) விசாரித்தபடி, நான் 99 மனிதர்களை கொன்றுவிட்டேன் "பாவமன்னிப்பு கிடைக்குமா? என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்த பாதிரியார் "கிடைக்காது" என்று கூற அவரையும் அம்மனிதர் கொன்று விட்டார்.

 

பிறகு (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். பிறகு ஓர் அறிஞரை அணுகி நான் 100 மனிதர்களைக் கொன்று விட்டேன் எனக்கு பாவமன்னிப்பு கிடைக்குமா?  என்று வினவினார். அப்போது அந்த அறிஞர் ( انْطَلِقْ إِلَى أَرْضِ كَذَا وَكَذَا فَإِنَّ بِهَا أُنَاسًا يَعْبُدُونَ اللَّهَ فَاعْبُدِ اللَّهَ مَعَهُمْ ) “நீ (நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ! அங்கு சிலர் இருப்பார்கள். அவர்கள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் நீயும் சேர்ந்து இறைவனை வழிபடு!” என்று பதிலளித்தார்.

 

அவ்வாறே அந்த மனிதர் (நல்லோர் வாழும்) அந்த ஊரை நோக்கி சென்று கொண்டிருந்த போது பாதி வழியில் இறந்து விட்டார். அப்போது இறையருளைப் பொழியும் வானவர்களும், இறைதண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரது உயிரை யார் அழைத்து செல்வது என்று) சச்சரவிட்டுக் கொண்டனர்.

 

அப்போது ஒரு வானவர் நடுவராக வந்து ( قِيسُوا مَا بَيْنَ الأَرْضَيْنِ فَإِلَى أَيَّتِهِمَا كَانَ أَدْنَى فَهُوَ لَهُ )  "இவ்விரு ஊர்களுக்குமிடையிலுள்ள தூரத்தைக் கணக்கிடுங்கள். அவற்றில் எந்த ஊருக்கு மிக அருகில் அவரது உடல் இருக்கிறதோ அந்த ஊருக்குரியவராகவே அவர் இருப்பார்." என்று கூறினார். அவ்வாறே கணக்கெடுத்த போது (அவர் வசித்து வந்த ஊரைவிட) அவர் (பாவமன்னிப்புக்காக) நாடி வந்த ஊரே அவருக்கு சமீபமாக இருப்பதைக் கண்டனர். ஆகவே அவருக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. அவரின் உயிரை இறையருள் பொழியும் வானவர் கைப்பற்றிக் கொண்டார்.               அறிவிப்பாளர்:- அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்   நூல்:- புகாரீ-3470,  முஸ்லிம்-5339

 

பெரும்பாவமாக இருந்தாலும் சரியே! பாவமன்னிப்பு பெறுவதற்குரிய பரிகாரத்தில் இறங்கி அதனை முழுமையாக செய்து முடிக்காவிட்டாலும் பாவமன்னிப்பு பெற்று விடவேண்டும் என்ற அந்த உயர்ந்த நல்லெண்ணத்திற்காகவே அந்த மனிதரின் முழு பாவத்தையும் அல்லாஹ் மன்னித்தான்.

 

எத்தனை காலம் தான் பாவத்தை செய்து கொண்டேயிருப்பது, நாமும் பாவமன்னிப்பு கோரி திருந்த வேண்டும் என்ற ஒரு மனிதனின் எண்ணமே அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதற்கான அவனது முதல் முயற்சியாகும்.

 

நம்முடைய நல்லெண்ணங்களுக்குக்கூட தயாளக் குணமுள்ள பேரருளாளன் அல்லாஹுதஆலா நற்க்கூலி கொடுக்க தயாராக இருந்தும் அதனைப் பெற நாம் முயற்சிக்காவிட்டால் அதனால் யாருக்கு நஷ்டம் என்று சிந்தித்தோமா?

 

நற்செயல் புரிய நினைத்தாலே நன்மையின் ஒரு பகுதி நம்மிடம் வந்து விடும். நம்மால் முடிந்த வரை நற்செயல் புரியவும், நல்லெண்ணம் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும் அதற்கு அல்லாஹுதஆலா அருள்பாலிப்பானாக! ஆமீன்!

 

மௌலவி, மு. முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை,  சென்னை. செல்- 9840535951

 

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...