Search This Blog

Saturday, 25 December 2021

தெளிவானப் பார்வை

 

தெளிவானப் பார்வை

 

قَالَ يَا بُنَيَّ لَا تَقْصُصْ رُؤْيَاكَ عَلَى إِخْوَتِكَ فَيَكِيدُوا لَكَ كَيْدًا

 

(நபி யஅகூப் - அலை யூசுஃபை நோக்கி) "என் அருமை குழந்தையே! நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே! (அவ்வாறு கூறினால்,) அவர்கள் உனக்கு யாதேனும்  தீங்கிழைக்கச் சதி செய்வார்கள்”  என்று கூறினார்  திருக்குர்ஆன்:- 12:5

 

பெற்றோர் பிள்ளைகளுக்கு மத்தியில், கணவன் மனைவிக்கு மத்தியில், முதலாளி தொழிலாளிக்கு மத்தியில், ஆசிரியர் மாணவருக்கு மத்தியில், இரு நண்பர்களுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கு மத்தியில் சரியான புரிதல் இருந்தால் அங்கு எந்த பிரச்சினையும் எழ வாய்ப்பில்லை. ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாத போதுதான் பிரச்சனை முளைக்கிறது. நாம் பிறரைப் புரிந்து கொண்டு செயல்படுவதில் தான் நம்முடைய புத்திசாலித்தனம் இருக்கிறது.

 

பிள்ளைகளைப்பற்றி

 

தந்தை யஅகூப் (அலை) அவர்கள் தம் பிள்ளைகள் அனைவரையும் பற்றி தெளிவாக புரிந்து வைத்திருந்தார்கள். அதனால்தான் அவரால் யூசுப் நபியை எச்சரிக்க முடிந்தது. இதையே தலைப்பில் காணும் திருவசனம் கூறுகிறது.

 

தாம் பெற்றெடுத்த பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணமுடையவர்களாக இருப்பார்கள். எனவே, பெற்றோர் தமது  பிள்ளைகளின் குணங்களை நன்கு அறிந்தவர்களாகவும், அவர்ளைப் பற்றி ஓர் நேர்கொண்ட பார்வையுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

 

மனைவியைப்பற்றி

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. என்னிடம் அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( إِنِّي لأَعْلَمُ إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً، وَإِذَا كُنْتِ عَلَىَّ غَضْبَى ) "எப்போது நீ என்மீது திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்" என்று சொன்னார்கள்.

 

அதற்கு நான், ( مِنْ أَيْنَ تَعْرِفُ ذَلِكَ ) "எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அண்ணலார், ( أَمَّا إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً فَإِنَّكِ تَقُولِينَ لاَ وَرَبِّ مُحَمَّدٍ، وَإِذَا كُنْتِ غَضْبَى قُلْتِ لاَ وَرَبِّ إِبْرَاهِيمَ ) "என் மீது நீ திருப்தியுடன் இருக்கும் போது (நீ பேசினால்) 'இல்லை; முஹம்மதின் அதிபதி மீது சத்தியமாக!' என்று கூறுவாய். என் மீது கோபமாக இருந்தால், 'இல்லை இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அதிபதி மீது சத்தியமாக! என்று கூறுவாய்" என்று சொன்னார்கள். நான், ( قُلْتُ أَجَلْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ، مَا أَهْجُرُ إِلاَّ اسْمَكَ ) "அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்), நாயகமே! நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்கள் மீதன்று) என்று கூறினேன்.    நூல்:- புகாரீ-5228, முஸ்லிம்-4826

 

கணவனைப்பற்றி

 

அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் என்னிடம் வந்து, "அப்துல்லாஹ்வின் அன்னையே! நான் ஓர் ஏழை. நான் தங்கள் வீட்டு நிழலில் வியாபாரம் செய்ய விரும்புகிறேன்" என்று கூறி (அனுமதி கோரி)னார். நான் "உங்களுக்கு அனுமதி அளித்தால் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் அதை மறுப்பார். எனவே, (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் (வீட்டில்) இருக்கும்போது நீங்கள் வந்து (இது போன்று) அனுமதி கேளுங்கள்" என்று கூறினேன்.


அவ்வாறே அம்மனிதர் வந்து, "அப்துல்லாஹ்வின் அன்னையே! நான் ஓர் ஏழை. நான் தங்கள் வீட்டு நிழலில் வியாபாரம் செய்ய விரும்புகிறேன்" என்று கேட்டார். உடனே நான் (அவருக்கு மறுப்புத் தெரிவிப்பது போல்) மதீனாவில் உமக்கு என் வீட்டைத் தவிர வேறிடம் கிடைக்கவில்லையா?" என்று கேட்டேன்.


அப்போது (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் என்னிடம், "உனக்கு என்ன ஆயிற்று? ஓர் ஏழை வியாபாரி (நமது வீட்டு நிழலில்) வியாபாரம் செய்வதை நீ ஏன் தடுக்கிறாய்?" என்று கேட்டார். பிறகு அவர் வியாபாரம் செய்து (நல்ல) வருமானத்தைத் தேடிக் கொண்டார். நூல்:- முஸ்லிம்-4398


இந்நிகழ்ச்சி நகைச்சுவையாகவும் சற்று வியப்பாகவும் இருந்தாலும் கணவனின் குணம் அறிந்து செயல்படும் மனைவி தான் புத்திசாலி ஆவாள் என்பதற்கு அழகிய எடுத்துக்காட்டாகும்.  

 

சில குடும்பங்களில் மாமியார் மருமகள் பிரச்சனை இருக்கும். மருமகள் கொடுப்பது என்று முடிவு செய்து விட்டால், மாமியார் மறுத்துவிடுவார். மாமியார் கொடுப்பது என்று முடிவு செய்து விட்டால் மருமகள் மறுத்து விடுவாள். இப்படி இருக்க, சில புத்திசாலியான மருமகள்கள் ஏதாவது ஒன்றை அடுத்தவருக்கு கொடுப்பது என்று முடிவு செய்துவிட்டால் மாமியார் முன்னிலையில், "இங்கு எல்லாம் ஒன்றும் இல்லை போ..."என்று சொல்வாள். அதைப் பார்த்த மாமியார், "நீ ஏன் விரட்டுகிறாய்? இருப்பா! நான் தரேன்" என்று கூறி கொடுப்பார்.

 

இதைப்போலத்தான் ஜுபைர் (ரலி) அவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை தெரிந்து அவர்களின் நடவடிக்கையை அறிந்து அதன்படி வாழத் தெரிந்த மனைவியாக கணவனை நன்கு புரிந்துகொண்ட மனைவியாக அஸ்மா (ரலி) அவர்கள் இருந்தார்கள்.

 

தோழர்களைப்பற்றி

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன் தோழர்களுடன் உம்ரா செய்யும் நோக்கத்தில் இஹ்ராம் ஆடை அணிந்து மதீனாவிலிருந்து மக்காவுக்கு வந்து கொண்டிருந்தார்கள். இடையில் ஹுதைபிய்யா எனுமிடத்தில் அவர்கள் தடுக்கப்பட்டனர். எனவே அப்போது அண்ணலார் மக்கா குறைஷிகளுடன் சமாதானம் பேசுவதற்காக உஸ்மான் (ரலி) அவர்களை மக்காவுக்கு அனுப்பிவைத்தார்கள். அங்கு சென்ற உஸ்மான் (ரலி) அவர்கள் குறைஷிகளுடன் பேச வேண்டியதை பேசிவிட்டு புறப்பட தயாரானார்.

 

அப்போது குறைஷிகள், "நீங்கள் கஅபாவை தவாஃப் கொள்ளலாம்" என்றனர். (சுமார் ஆறு வருடங்களுக்குப் பின்னர் இஹ்ராம் ஆடை அணிந்திருந்த நிலையில் மக்கா வந்திருந்த) உஸ்மான் (ரலி) அவர்கள், ( اِنَّا لَا نَصنَعُ شَيءًا حَتَّي يَصنَعَ صَاحِبُنَا ) "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கஅபாவை தவாஃப் செய்யும் வரை நான் தவாஃப் செய்யப்போவதில்லை" என்று கூறி மறுத்துவிட்டார். (இவ்வாறு இஹ்ராம் அணிந்து இருந்தும் புனித கஅபாவை தவாஃப் செய்யாமலேயே திரும்பிவிட்டார். இதற்கான காரணம் அண்ணலார் அவரை அனுப்பியது சமாதானம் பேசுவதற்காகவே அன்றி தவாஃப் செய்வதற்கு அல்ல என்பதாகும்.)

 

இந்நேரத்தில் ஹுதைபிய்யாவில் இருந்த மக்கள் உஸ்மான் (ரலி) அவர்கள் நற்பாக்கியசாலிதான். நாமெல்லாம் இங்கிருக்க, அவருக்கு கஅபாவை தவாஃப் செய்யும் வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று கூறினர். அப்போது அண்ணலார், ( لَو مَکَثَ کَذَا وَکَذَا سَنَةً مَا طَافَ حَتَّی اَطُوفَ )  "அவர் (உஸ்மான்) அங்கு இன்னின்ன காரணத்திற்காக வருட முழுக்க தங்கினாலும், நான் தவாஃப் செய்யும் வரை அவர் தவாஃப் செய்ய மாட்டார் " என்று உறுதியாகக் கூறினார்கள். நூல்:- கன்ஸுல் உம்மால், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-477

 

ஒருமுறை ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களின் வீட்டில் இரவில் நீண்ட நேரம் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதை நபித்தோழர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அதற்கு நபியவர்கள், "அப்படியா? அவர் திருக்குர்ஆனின் அல்பகரா அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருப்பார்" என்றார்கள்.

 

சற்று நேரத்தில் அவர் வந்தார். அவரிடம் நபியவர்கள், "ஸாபித்! உம்முடைய வீட்டில் இரவு நீண்ட நேரம் விளக்கெரிந்த காரணமென்ன?" என்று வினவினார்கள். அதற்கவர், “நான் இரவில் அல்பகரா அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தேன்" என்று பதிலளித்தார் .

 

நபித்தோழர்கள் குறித்து நபியவர்களின் கணிப்பு எவ்வளவு சரியாக அமைந்து இருந்தது என்பதற்கு இதுபோன்று ஏராளமான சான்றுகள் உள்ளன.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தனது தோழர்களை மிகச் சரியாக புரிந்து வைத்திருந்தார்கள் என்பதற்கு இந்நிகழ்வுகள் ஓர் எடுத்துக்காட்டாகும்.

 

மாணவர்களைப்பற்றி

 

இறைநேசர் ஜுனைதுல் பக்தாதீ (ரஹ்) அவர்கள் தமது மாணவர்களில் ஒருவர்மீது மிகவும் பிரியமாக இருந்தார்கள். இதனால் மற்ற மாணவர்கள் அவர் மீது பொறாமையும், ஆசிரியரிடம் வருத்தம் கொண்டனர்.

 

எனவே, ஜுனைத் (ரஹ்) அவர்கள் ஒருமுறை தமது அனைத்து மாணவர்களையும் தம்முன் அழைத்து, ஆளுக்கொரு பறவையைக் கொடுத்து, "இதை நீங்கள் எவரும் பார்க்காத இடத்திற்கு எடுத்துச் சென்று அறுத்துக் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள்.

 

அன்னாரின் அன்புக்கும் மற்றவர் பொறாமைக்கும் ஆளான அந்த மாணவரைத் தவிர மற்றவர்களெல்லாம் தங்களின் பறவைகளை அறுத்துக் கொண்டு வந்தனர். அந்த ஒருவர் மட்டும், தான் பெற்றுக்கொண்டு போன பறவையை அறுக்காமல் எடுத்து வந்தார்.

 

ஜுனைத் (ரஹ்) அவர்கள், "நீ மட்டும் பறவையை அறுக்கவில்லை ஏன்?" என்று அவரிடம் வினவியபோது, அதற்கு அவர், "எவரும் பார்க்காத இடம் ஒன்றை நானும் தேடிப்பார்த்தேன். ஆனால் முடியவில்லை. ஏனெனில், எல்லா இடங்களையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்தேன். அதனால் பறவையை அறுக்காமல் கொண்டு வந்துவிட்டேன்" என்று பதிலளித்தார். இதை செவியுற்றதும் அவரை தவறாக எண்ணிய மற்ற மாணவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர்.

 

அப்போது தான் அந்த மாணவர்களுக்கு, தமது ஆசிரியர் தம்மைவிட அந்த ஒருவர் மீது மட்டும் அதிக பிரியமாக இருந்ததற்கான காரணம் விளங்கியது.

 

ஆம்! ஜுனைத் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்ட இந்த மாணவரிடம் இருந்த நற்குணங்களையும், இறையச்சத்தையும் விளங்கிவைத்திருந்தார்கள். அதனால் தான் அவர் மீது மிகவும் பிரியமாக இருந்தார்கள்.


ஒரு ஆசிரியர் தமது மாணவர்களின் நிலைபாடுகளை சரியாக புரிந்துகொள்வதின் மூலமே அவர்களை மேன்படுத்தமுடியும். 


அதாவது, ஒரு தகுதிமிக்க ஆசிரியர் தன் அன்பு மாணவர்களை அவரவர்களின் குணங்களுக்கேற்ப, அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை எப்படி மேம்படுத்த வேண்டும்? என்பதை தமது தெளிவானப் முதல் பார்வையிலேயே உணர்ந்து, தன் பக்குவப் பாசறையில் பயிற்றுவித்து, மாணவனின் பிற்கால வாழ்வினில் ஜொலிக்க வைப்பார்.


அண்டை நாட்டினரைப்பற்றி

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் (கிழக்கு) ரோமானியருக்கு (இஸ்லாமிய அழைப்புக்) கடிதம் எழுத விரும்பியபோது, "அவர்கள் முத்திரையிடப்பட்ட கடிதத்தைத் தவிர வேறெதையும் படிக்க மாட்டார்கள்" என்று கூறப்பட்டது. ஆகவே, (கடிதங்களில் முத்திரையிட) நபியவர்கள் வெள்ளியிலான மோதிரம் ஒன்றை தயாரித்துக் கொண்டார்கள். அதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" (அல்லாஹ்வின் தூதர் முஹம்மது) என்று நபியவர்கள் (இலச்சினை) பொறித்திருந்தார்கள். நூல்:- புகாரீ-3938

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டு இறுதியில் அல்லது ஏழாம் ஆண்டு துவக்கத்தில் அண்டை நாட்டிலுள்ள பல அரசர்களுக்கு அழைப்பு கடிதம் எழுதி, இஸ்லாத்தின் பக்கம் அவர்களை அழைத்தார்கள். நபியவர்கள் கடிதம் கொண்டு செல்லும் தூதராக செல்வோர் பன்முகத் தகுதிகள் கொண்ட மிகுந்த திறமைசாலியாக இருக்க வேண்டும். இறையச்சம், கம்பீரம், பேச்சாற்றல், மொழிவளம், முகப்பொலிவு, தோற்ற அழகு, துணிச்சல் முதலானவை வேண்டும் என்றெண்ணினார்கள். எனவே, தமது தோழர்களில் இந்த தகுதியுள்ளவர்களையே  தேர்ந்தெடுத்து அவர்களை தூதர்களாக அரசர்களிடம் அனுப்பினார்கள்.

 

வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அவ்வப்போது ( دحية الكلب ) திஹ்யத்துல் கலபீ (ரலி) அவர்கள் தோற்றத்தில் வருவார்கள். இவர் மிகவும் அழகான தோற்றமுடைய ஆணழகன் ஆவார்.

 

நபியவர்கள், ரோம் நாட்டின் பேரரசராக இருந்த ஹிர்கல் (ஹெராக்ளியஸ்) என்பவருக்கான கடிதத்தை திஹ்யத்துல் கல்பீ (ரலி) அவர்களிடம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.

 

நபியவர்கள், இவரை தேர்ந்தெடுத்ததற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் முதலாவது, சபையோர் இவரைப் பார்த்ததும் உள்ளதால் கவரப்பட வேண்டும். இரண்டாவது, சபையோர் அல்லது பயணம் செல்லும் வழியில் யாரேனும் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான சட்டங்களைக் கேட்டால் அதற்குரிய முறையில் விடையளிக்க வேண்டும். அந்த அளவிற்கு மார்க்கச் சட்டங்களை தெரிந்தவராக இருக்க வேண்டும். ஆக, இவர் மார்க்க அறிவின் கருவூலமாக இருந்தார். மூன்றாவது, யாராவது துருவித்துருவி கேள்வி கேட்டால் அவ்வாறு கேட்பவருக்கு அறிவுபூர்வமாக விடையளிக்கும் ஆற்றல் இவரிடம் உண்டு. நான்காவது, ரோமர்கள் பேசுகின்ற சுர்யானி மொழி இவருக்குத் தெரியும். ஆக, இத்தகைய பல்வேறு காரணங்களால் தான் நபியவர்கள் இவரை தேர்ந்தெடுத்தார்கள் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அண்டை நாட்டிலுள்ள அரசர்களுக்கு இஸ்லாமிய அழைப்புக் கடிதங்களை எவ்வாறு கொடுத்தனுப்பினால் அதற்கு மதிப்பளிப்பார்கள் என்பதையும், இப்பணிக்கு தமது தோழர்களில் யாரை அனுப்பினால் அது சரிப்படும் என்பதையும் தெளிவானப் பார்வையோடு இருந்தார்கள்.

 

ஆட்சியாளர்களுக்கு, அண்டை நாட்டினர்களைப்பற்றி தெளிவானப் பார்வை வேண்டும். இதன் மூலம் தான் மற்றவர்களுடன் நட்புறவு பேணமுடியும். அண்டை நாடுகளுக்கு மத்தியில் நட்புறவை பேணுவதன் மூலமாக பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். அச்சமின்றி நிம்மதியாக இருக்கலாம். முன்னெச்சரிக்கையுடனும் இருந்துக்கொள்ளலாம். தேவை ஏற்படின் அவ்வபோது உதவிகள் பெறலாம். இவ்வகையான நட்புறவு பலவிதத்தில் நன்மை பயக்கும்.

 

தீயவர்களைப்பற்றி

 

சஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி) கூறியதாவது. நாங்கள் ஒரு பயணத்தில் அருமை நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஒரு மனிதர் அண்ணலாரை நோக்கி வந்தார். அண்ணலார், "இந்த குடும்பத்தைச் சேர்ந்த இவர் மிகக் கெட்ட மனிதர்,  இன்னவர் மிகக் கெட்ட மனிதர்" என்று கூறினார்கள். அவர் வந்ததும் தன் அருகில் உட்கார வைத்துப் அண்ணலார் பேசினார்கள். அவர் எழுந்து சென்றதும் நபித்தோழர்கள், நாயகமே! அவரை தாங்கள் பார்த்த போது, இவர் கெட்ட மனிதர் என்று கூறிவிட்டு பின்பு தங்களுக்கு நெருக்கமாக உட்காரவைத்து பேசினீர்களே ஏன்? என்று வினவினர்.

 

அண்ணலார், ( اِنَّهُ مُنَافِقٌ اُدَارِيهِ عَن نِّفَاقِهِ فَاَخشَي اَن يُفسِدَ عَلَيَّ غَيرَهُ )  "அவர் ஒரு நயவஞ்சகர் ஆவார். அவரின் நயவஞ்சகத்தை பயந்தும் அவர் அல்லாதவர்களை எனக்கு விரோதமாக தூண்டிவிடக்கூடாது என்று பயந்தும் அவரிடம் நளினமாக பேசினேன்" என்று கூறினார்கள். நூல்:- அல்ஹில்யா,  ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்- 2 பக்கம்-564

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஒருமுறை (பல நபித்தோழர்களை கொலை செய்த) ஹஜ்ஜாஜ் பின் யூசுப் நான் மறுக்கக்கூடிய ஒரு விஷயத்தை (குத்பாவில்) ஜும்ஆ உரையில் பேசினார். உடனே நான் அப்பேச்சிலிருந்து அவரை தடுக்க நினைத்தேன்;

 

எனினும், அருமை நாயகம் (ஸல்) அவர்கள், (   لاَ يَنْبَغِي لِلْمُؤْمِنِ أَنْ يُذِلَّ نَفْسَهُ ‏ )   "தன்னைத்தானே இழிவில் போட்டுக் கொள்வது ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு தகுதியல்ல" என்று  கூறினார்கள். அப்போது நான், (  وَكَيْفَ يُذِلُّ نَفْسَهُ ‏ )  "நாயகமே! ஓர் இறைநம்பிக்கையாளன் தன்னைத்தானே எப்படி இழிவு படுத்திக்கொள்வான்?" என்று கேட்டேன். அதற்கு அண்ணலார்,  (يَتَعَرَّضُ مِنَ الْبَلاَءِ لِمَا لاَ يُطِيقُ ‏ )  "தன்னால் தாங்கிக் கொள்ள முடியாத சோதனைகளில் தன்னை சிக்க வைத்துக்கொள்வது" என்று பதில் கூறியது என் நினைவுக்கு வந்தது" என்றார்கள். நூல்:- பஸ்ஸார்,  தப்ரானீ, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம் - 2 பக்கம் – 871, திர்மிதீ-2180

 

கப்பலில் ஒருவர் வைரம் வைத்திருந்தார். அதைத் திருடன் பார்த்து விட்டான். எப்படியாவது அதைத் திருட வேண்டும் என்று முடிவெடுத்தான். இதையறிந்த அந்த வைரம் வைத்திருப்பவர் அந்த வைரத்தை பாதுகாக்க, அந்த திருடனுடைய பையிலேயே வைத்துவிட்டார். அந்தத் திருடன் நாள்தோறும் இரவு நேரத்தில் விழித்து எல்லோருடைய பைகளிலும் தேடிப் பார்த்தான். அவனுக்கு அது கிடைக்கவில்லை ஏனென்றால், அவன் தன் பையைத் தேடிப் பார்க்கவில்லை.

 

கப்பலில் இருந்து இறங்கும் நாள் வந்தது. அப்போது அந்தத் திருடன் அந்த வைரம் வைத்திருந்தவரிடம், "உன் வைரத்தை எங்கே வைத்தாய்?" என்று கேட்டான். அதற்கு அவர், "நான் முதல் நாளிலேயே உன்னைப் பற்றி தெரிந்து கொண்டேன். எனவே அதை உன் பைக்குள்ளேயே போட்டு பாதுகாப்பாக வைத்து விட்டேன். இப்போது அதை நான் எடுத்துக்கொண்டு விட்டேன்" என்று கூறினார்.

 

நாம் தீயவர்களைப்பற்றி முறையாக விளங்கிக்கொண்டு அவர்கள் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக நடந்துகொண்டால், அவர்களின் தீங்கிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

 

பிறரைப்பற்றி தெளிவானப் பார்வைகொண்ட புத்திசாலிகளாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

1 comment:

  1. மிகவும் பயனுள்ள பதிவு

    ReplyDelete

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...