அர்த்தமுள்ள ஆசை
இது விஷயத்தில் (சொர்க்க விஷயத்தில்) ஆசை கொள்வோர், ஆசை கொள்ளட்டும். திருக்குர்ஆன்:- 83:26
பெரியவர்கள் முதல் சிறுபிள்ளைகள் வரை அனைவரும் பல விஷயங்களுக்கு ஆசைப்படுகிறார்கள். நல்லவற்றைப் பெற ஆசைப்படலாம்; தவறில்லை. ஒவ்வொருவரும் அவரவர் தரத்திற்கேற்ப ஆசைப்படுகிறார்கள். ஒருவரின் தரத்தை அறிய, அவர் எதைப் பெற ஆசைப்படுகிறார் என்பதை வைத்தே கணித்துவிடலாம்.
ஆசைகள் தான் ஒரு மனிதனை வடிவமைக்கின்றன. ஆசைகள் தான் ஒரு மனிதனின் தேவைகளை நிர்ணயிக்கின்றன.
ஆர்வமூட்டுதல்
உங்களிடம் இருக்கின்றதே அதுவெல்லாம் தீர்ந்துபோய்விடும். அல்லாஹ்விடம் இருப்பதுதான் எஞ்சியிருக்கும். திருக்குர்ஆன்:- 16:96
உலகமும் அதிலுள்ள அனைத்துப் பொருட்களும் அழியத்தான் போகின்றது. எனவே, இதற்கு பெரிதாக ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் மட்டும்தான் அழிவே இல்லாத சொத்துக்கள் ஏராளம் உண்டு. ஆசைகொள்வதாக இருந்தால் அதை அடைய அதிகமதிகம் ஆசைப்படுங்கள் என்கிறது திருக்குர்ஆன். இதுவே அர்த்தமுள்ள ஆசையாகும்.
அருமை நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். ( وَفِي كُلٍّ خَيْرٌ, اِحْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ, وَاسْتَعِنْ بِاَللَّهِ, وَلَا تَعْجَزْ ) உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. தளர்ந்துவிடாதே. நூல்:- முஸ்லிம்-5178 இப்னுமாஜா-76, முஸ்னது அஹ்மத்-8436
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا دَعَا أَحَدُكُمْ فَلاَ يَقُلِ اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ وَلَكِنْ لِيَعْزِمِ الْمَسْأَلَةَ وَلْيُعَظِّمِ الرَّغْبَةَ فَإِنَّ اللَّهَ لاَ يَتَعَاظَمُهُ شَيءٌ أَعْطَاهُ ) நீங்கள் பிரார்த்தித்தால், "இறைவா! நீ நினைத்தால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக!" என்று கேட்க வேண்டாம். மாறாக, (இறைவனிடம்) வற்புறுத்திக் கேளுங்கள். பெரிதாக ஆசைப்படுங்கள். ஏனெனில், அவன் கொடுக்கின்ற எதுவும் அவனுக்குப் பெரிதன்று. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம் 5201, அல்அதபுல் முஃப்ரத்-607
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إذَا تَمَنَّى أَحَدُكُمْ، فَلْيَسْتَكْثِرْ، فَإِنَّمَا يَسْأَلُ رَبَّهُ ) உங்களில் ஒருவர் ஆசைப்படுவதாக இருந்தாலும் அதிகம் ஆசைப்படட்டும். ஏனென்றால், அவர் தன் இறைவனிடம் கேட்கிறார். (இறைவன் நினைத்தால் எதையும் தருவான். இறைவனுக்கு எதுவும் தூரமானதல்ல). நூல்:- ஸஹீஹுல் ஜாமிஉ-591
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَالْفِرْدَوْسُ أَعْلَى الْجَنَّةِ فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَسَلُوهُ الْفِرْدَوْسَ ) சொர்க்கங்களில் மிகவும் உயர்ந்தது "அல்ஃபிர்தவ்ஸ்" என்ற சொர்க்கமாகும். எனவே, நீங்கள் அல்லாஹ்விடம் வேண்டினால் “அல்ஃபிர்தவ்ஸ்” என்ற சொர்க்கத்தையே வேண்டுங்கள். அறிவிப்பாளர்:- முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2453
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا تَمَنِّى أَحَدُكُمْ فَلْيَنْظُرْ مَا يَتَمَنَّى فَإِنَّهُ لاَ يَدْرِى مَا يُكْتَبُ لَهُ مِنْ أُمْنِيَّتِهِ ) உங்களில் ஒருவர் ஆசைப்பட்டால் அவர் எதை ஆசைப்படுகிறார் என்பதை சிந்தனை செய்து கொள்ளட்டும், ஏனெனில் அவரின் ஆசைக்கும் கூலி எழுதப்படும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், இப்னு அபீதுன்யா, பைளுல் கதீர் ஷரஹ் ஜாமிஉஸ் ஸஹீர்
எகிப்தைச் சேர்ந்த
அறிஞர் முஹம்மத் அல்கஸ்ஸாலீ அவர்கள் தாம் நூல் ஒன்றில் கீழ்காணும் நிகழ்வை பதிவிட்டுள்ளார்.
அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். முன்னொரு காலத்தில் ஒருவர் ஒரு மணல் மேட்டுக்கருகில் நடந்து சென்றார்.
அவர் இந்த மணல் மேடு முழுவதும் உணவு குவியலாக மாறினால், நான் அதை பசியால் வாடும் ஏழைகளுக்கு வாரி வழங்குவேன்
என்று தன் மனதில் உளப்பூர்வமாக எண்ணினார். அப்போதிருந்த இறைத்தூதருக்கு அல்லாஹுதஆலா
"தர்மம் செய்ய வேண்டும் என்ற அவருடைய உயர்வான அந்த நல்லெண்ணத்தை நான் அங்கீகரித்துக்கொண்டேன்.
உண்மையாகவே அந்த மணல் மேடு உணவுக் குவியலாக மாறி அதை அவர் தர்மம் செய்திருந்தால் என்ன
நன்மைகள் பெறுவாரோ அதை நான் அவருக்கு வழங்கிவிட்டேன் என்ற சுபச்செய்தியை அம்மனிதரிடம்
தெரிவித்து விடுங்கள்" என்று (வஹி எனும்) இறைச்செய்தி அனுப்பினான்.
கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் எங்களிடம், "சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். நாங்கள், "அல்லாஹ் மிகப் பெரியவன்" என்று (தக்பீர்) முழங்கினோம். பிறகு, "சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்டார்கள். அப்போதும் நாங்கள் அவ்வாறே கூறினோம். பிறகு, ( إِنِّي لأَرْجُو أَنْ تَكُونُوا شَطْرَ أَهْلِ الْجَنَّةِ ) "சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-376, திர்மிதீ-2470
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوَدَدتُ أَنَّهَا فِي قَلْبِ كُلِّ إِنْسَانٍ مِنْ أُمَّتِي ) (தபாரக்கல்லதி அல் முல்க் என்ற 67-வது அத்தியாயம்) இந்த அத்தியாயம் என் சமுதாயத்தின் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் இருக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அப்து பின் ஹுமைத், தஃப்சீர் இப்னு கஸீர் அல்முல்க்
வானவர்
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் (மிஃராஜ் எனும்) விண்வெளிப்பயணம் சென்றபோது சித்ரதுல் முன்தஹா எனும் இடத்தில்
வைத்து வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம், “உங்களுக்கு ஏதேனும் ஆசை இருக்கிறதா?” என வினவினார்கள். ஜிப்ரயீல் (அலை) அவர்கள்,
“ஆம்! மறுமை நாளில் உங்கள்
சமுதாயத்தினர் “ஸிராத்துல் முஸ்தகீம்” என்ற பாலத்தைக் கடக்கும்போது அதிலிருந்து தவறி
விழுபவர்களை என்னுடைய இறக்கைகளால் தாங்கிப்பிடித்துக் கொண்டு வந்து சொர்க்கத்தில் சேர்க்க
வேண்டும்” என்றார்கள். அதைச்
செவியுற்ற நபியவர்கள் கண்ணீர் வடித்தார்கள்.
ஷைத்தான்
மதுவாலும் சூதாட்டத்தாலும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே இவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா? (மாட்டீர்களா?) திருக்குர்ஆன்:- 5:91
"பின்னர் அவர்களுக்கு முன்னாலிருந்தும் அவர்களுக்கு பின்னாலிருந்தும் அவர்களுக்கு வலப் புறங்களிலிருந்தும் அவர்களுக்கு இடப் புறங்களிலிருந்தும் (அவர்களைக் கெடுக்க) அவர்களிடம் நான் வருவேன். (எனவே,) அவர்களில் பெரும் பெரும்பாலோரை நன்றி செலுத்துபவராக நீ காணமாட்டாய்" (என்றும் இப்லீஸ் கூறினான்).
(அதற்கு இறைவன்) "நீ நிந்திக்கப்பட்டவனாகவும் விரட்டப்பட்டவனாகவும் இதில் இருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக (உன்னையும்) எவர்கள் உன்னைப் பின்பற்றினார்களோ அவர்களையும் (ஆக) உங்கள் அனைவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்" என்று கூறினான். திருக்குர்ஆன்:- 7:17,18
ஷைத்தான் உலக மக்கள் பெரும்பாலோனரை இறைவழிபாட்டில் இருந்து தடுத்து, பாவக்காரியங்களை செய்ய வைத்து அவர்களை வழிகெடுத்து, நரகத்தில் தள்ளிவிட ஆசைப்படுகிறான். அதற்காக முயற்சியும் செய்து வருகிறான் என்று திருக்குர்ஆன் இயம்புகிறது.
நபித்தோழர்கள்
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது. அப்துல்லாஹ் துல் பிஜாதைன் (ரலி) அவர்கள் மரணித்துவிட்டார்கள். அவரை அடக்கம் செய்யும் பணியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் ஈடுபட்டிருந்தார்கள். நபியவர்கள் குழிக்குள் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் ஜனாஸாவை மேலிருந்து குழிக்குள் இறக்கினார்கள். நபியவர்கள் அந்த ஜனாஸாவை வாங்கி குழிக்குள் வைத்த பிறகு, ( اللَّهمّ إنِّي أَمْسَيْتُ رَاضِيًا عَنْهُ، فَارْضَ عَنْهُ ) “இறைவா! இவரை நான் பொருந்திக்கொண்டேன். நீயும் இவரைப் பொருந்திக்கொள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அந்நிகழ்வைக் கண்ட அந்நேரம் நான், ( يَا لَيْتَنِي كُنْتُ صَاحِبَ الْحُفْرَةِ ) “இந்த மண்ணறைவாசியாக நான் இருந்திருக்கக்கூடாதா?” என்று ஆசைப்பட்டேன். நூல்:- சீரத் இப்னு ஹிஷாம்
நாம் இறந்தபிறகு, இறையச்சமுள்ள நல்லடியார்கள் நமது பூத உடலுக்கு குளிப்பாட்ட வேண்டுமே, ஜனாஸா தொழுவிக்க வேண்டுமே, நல்லடக்கம் செய்ய வேண்டுமே, நமது ஜனாஸா தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்ள வேண்டுமே என்று ஆசைப்படுவதும் அதற்காக பல நல்லறங்கள் புரிந்து இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பதும் வரவேற்கத்தக்க அழகிய செயலாகும்.
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். நான் (விண்ணுலக பயணத்திற்கு) இரவில் அழைத்துச் செல்லப்பட்டபோது,
என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம்
பேர் எவ்வித விசாரணையுமின்றி சொர்க்கம் செல்வர் என்று என்னிடம் கூறப்பட்டது.
அண்ணலார், "(எந்த விசாரணையுமின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் தங்களுக்குள் (அறியாமைக்கால முறைப்படி) ஓதிப்பார்க்குமாறு பிறரிடம் கோரமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்கமாட்டார்கள்; தம் இறைவனையே முழுமையாகச் சார்ந்திருப்பார்கள்" என்று கூறினார்கள். அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, ( اُدْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ ) "அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று (தன் ஆசையைக்) கூறினார். அதற்கு அண்ணலார், ( أَنْتَ مِنْهُمْ ) "அவர்களின் நீரும் ஒருவர்தான்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5752, முஸ்லிம்-374, திர்மிதீ-2370
ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ
(ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருநாள்) நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களுடன் இரவு தங்கியிருந்தேன்.
அண்ணலார் (இரவுத் தொழுகைக்காக எழுந்தபோது) இயற்கைக் கடனை நிறைவேற்றி(ய பின் துப்புரவு
செய்து) கொள்வதற்கும் அங்கத்தூய்மை (உளூ) செய்து கொள்வதற்கும் தண்ணீர் கொண்டுசென்றேன்.
அப்போது அண்ணலார், ( سَلْ ) "(ஏதேனும் ஆசை இருந்தால்) என்னிடம் கோருவீராக!" என்று என்னிடம் கூறினார்கள்.
உடனே நான், ( أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ ) “சொர்க்கத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்று கோருகிறேன்" என்றேன். அண்ணலார், ( أَوَغَيْرَ ذَلِكَ ) "வேறு ஏதேனும் (கோருவீராக!)" என்றார்கள். நான், ( هُوَ ذَاكَ ) "(இல்லை) அதுதான்" என்றேன். அதற்கு அண்ணலார், ( فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ ) “அப்படியானால் உமது கோரிக்கை நிறைவேற அதிகமாகக் சஜ்தா செய்து எனக்கு உதவுவீராக!" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-843
சொர்க்கத்தைப் பெற
ஆசைப்படும் அதே வேளையில் அதற்குரிய தகுதியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தரமானவற்றைப்
பெற ஆசைப்படலாம். ஆனால், அதற்காக முயற்சிக்கவும்
வேண்டும்.
சாமானியர்
இமாம் அஹ்மத் பின்
ஹன்பல் (ரஹ்) அவர்கள் ஒரு ஊருக்குச் சென்றார்கள். அந்த மக்களுக்கு அவர்களை யாரென்று
தெரியாது. மேலும் அவர்கள் மிக களைப்பாக இருந்ததால் சற்று நேரம் பள்ளிவாசலில் உறங்க
முடிவு செய்தார்கள். இதைப் பார்த்த பள்ளிவாசலின் காவலர், இங்கெல்லாம் தங்க அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார். இமாமவர்கள் (மிகுந்த
களைப்புடன் இருந்ததால்) இந்த நடைபாதையில் (கொஞ்ச நேரம்) உறங்கக்கொள்கிறேன் என்று கூறியவாறு
உறங்க ஆயத்தமானார்கள். (இமாமவர்களின் மதிப்பு மரியாதையை அறியாத) அந்த காவலர் இமாமவர்களின்
காலைப் பிடித்திழுத்து கொண்டு போய் பள்ளிவாசலுக்கு வெளியே விட்டு விட்டார்.
இமாமவர்கள் ஒரு கண்ணியமான
முதியவராக இருந்தார்கள். அவர்களுடைய முகத்தில் இறையச்சம் மற்றும் நல்லொழுக்கத்தின்
அறிகுறிகள் இருக்கும். இமாமவர்களின் நிலையைக் கண்ட ஒரு ரொட்டி வியாபாரி, “தாங்கள் எனது வீட்டில் ஓய்வெடுக்கலாம் வாருங்கள் என்று அழைத்தார். எனவே, இமாமவர்கள் அவருடன் சென்றார்கள்.
அங்கு சென்று ஓய்வெடுத்துக்கொண்டிருந்த
இமாமவர்கள், ரொட்டி வியாபாரி மாவைப் பிசைந்து, ரொட்டி சுடும் தமது வேலையைச் செய்து கொண்டிருந்தபோது, பாவமன்னிப்பு கேட்டுகொண்டே இருப்பதையும், கவனித்தார்கள். பாவமன்னிப்பு
கேட்பதால் பெரும் நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்திருந்த இமாமவர்கள், உங்களிடம் ஒரு கேள்விக் கேட்கலாமா? என்றுகூறி, அனுமதி கேட்ட பிறகு ( هَلْ وَجَدْتَ لِاسْتَغْفَارِكَ
هَذَا ثَمَرَةً ) "பாவமன்னிப்பு கோரிக்கொண்டே இருக்கும் நீங்கள் இதன்
பலனை அனுபவித்துள்ளீர்களா?"
என்று கேட்டார்கள். அவர், ( نَعَمْ. أَنَا وَاَللَّهِ كُلَّمَا دَعَوْتُ اللَّهَ دَعْوَةً اسْتَجَابَهَا
لِي مَا عَدَا دَعْوَةً وَاحِدَةً ) "ஆமாம்! அல்லாஹ்வின்
மீதாணையாக! (இதன் பலனை நிறையவே அனுபவித்துள்ளேன்.) (இதுவரை) நான் பிரார்த்தித்த அனைத்து
பிரார்த்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. (ஆனால்,) ஒரேயொரு பிரார்த்தனை மட்டும் (இதுவரை) ஏற்றுக்கொள்ளப்படவில்லை" என்று கூறினார்.
இமாமவர்கள், ( وَمَا
هِيَ هَذِهِ الدَّعْوَةُ الَّتِي لَمْ تَسْتَجِبْ؟ ) "அது என்ன ஏற்றுக்கொள்ளப்படாத
பிரார்த்தனை?" என்று வினவினார்கள். அவர், ( دَعَوْتُ
اللَّهَ أَنْ يُرِيَنِي الْإِمَامُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ ) "(மாமேதை) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களை
காணவேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்து வருகிறேன். (இந்த பிரார்த்தனை மட்டும்
தான் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கிறது)" என்று கூறினார். இமாமவர்கள், ( أَنَا
الْإِمَامُ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَاللَّهِ إِنِّي جَرَرْتُ إِلَيْكَ جَرًّاً؟ ) "நான் தான் (நீங்கள்
காண ஆசைக்கொண்ட) இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (சொல்கிறேன்.
இதற்காக தான்,) உங்களின் பக்கம் இழுத்துக் கொண்டு வரப்பட்டேனா?” என்றார்கள். (அதை கேட்டதும் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.) நூல்:- மனாகிப்
இமாம் அஹ்மத் இமாம் இப்னு ஜவ்ஸீ,
சியரு அஃலாமுந் நுபலா, தாரீக் பக்தாத், அல்பிதாயா வந்நிஹாயா
அழகிய ஆசைக்கு இறைவனிடம் மதிப்புண்டு என்றும், தொடர் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு என்றும் இந்நிகழ்வு உணர்த்துகிறது.
மரண நேரத்தில்
(நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்களில் எவனுக்கும் மரணம் வந்தாலோ (அவன் தன் இறைவனை நோக்கி), "என் இறைவனே! என்னை உலகத்திற்கு திரும்ப அனுப்பிவிடு. நான் விட்டு வந்த அ(ந்த உலகத்)தில் (இனி) நல்ல காரியங்களையே நான் செய்து கொண்டிருப்பேன்" என்று கூறுவான். எனினும் அது ஆகக்கூடிய காரியமன்று. திருக்குர்ஆன்:- 23:99, 100
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே, நாம் உங்களுக்கு வழங்கிய செல்வத்திலிருந்து (தர்ம காரியங்களுக்காக) செலவு செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவன் மரணிக்கும் சமயத்தில்) என் இறைவனே, இன்னும் சில காலம் வரையில் (மரணத்தை) எனக்கு நீ பிற்படுத்தக்கூடாதா? (அவ்வாறு பிற்படுத்தினால்) நான் தானமும் செய்வேன்; (நன்மைகளைச் செய்து) நல்லோர்களிலும் ஆகிவிடுவேன்" என்று கூறுவான். திருக்குர்ஆன்:- 63:10
இறைமறுப்பாளனும், ஸக்காத் போன்ற இறைவழிபாட்டில் குறை வைத்தவனும், மனம்போன போக்கில் வாழ்ந்தவனும் மரண நேரத்தில் (மேற்கண்ட திருவசனத்தின்படி) தன்னுடைய ஆசையை கூறுவான். ஆனால், அந்த ஆசை நிறைவேற்றப்படாது என திருக்குர்ஆன் மிக தெளிவாகக் கூறிவிட்டது.
மறுமை நாளில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَوَدُّ أَهلُ العَافِيَةِ يَومَ القِيَامَةِ حِينَ يُعطَى أَهلُ البَلَاءِ الثَّوَابَ لَو أَنَّ جُلُودَهُم كَانَت قُرِّضَت فِي الدُّنْيَا بِالمَقَارِيضِ ) (இவ்வுலகில் சத்திய) சோதனைகளுக்கு உள்ளானவர்களுக்கு மறுமை நாளில் நன்மைகள் வழங்கப்படும்போது, (உலகில் சோதனைகளை சந்திக்காமல்) சுகமாக வாழ்ந்தோர் (இப்படி) ஆசைப்படுவார்கள்: (உலகில்) நம்முடைய தோல்கள் கத்தரிகளால் துண்டிக்கப்பட்டிருந்தால்கூட நன்றாக இருந்திருக்குமே! (நமக்கும் இதைப் போன்ற வெகுமதிகள் கிடைத்திருக்குமே! என்று ஆசைப்படுவார்கள்.) அறிவிப்பாளர்:- ஜாபிர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2326
சொர்க்கவாசிகள்
அல்லாஹ், முற்காலத்தில் ஒரு ஊருக்கு ஸாதிக், ஸதூக், ஸலூம் ஆகிய மூன்று இறைத்தூதர்களை அனுப்பிவைத்தான். ஆனால், அந்த மக்கள் இறைத்தூதர்களை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்தனர். அப்போது தான் வயதால் முதியவராகவும் நோயாளியாகவும் இருந்த ஹபீபுந் நஜ்ஜார் என்பவர் மக்கள் முன்னிலையில் வந்து, "இந்த இறைத்தூதர்கள் நல்ல விஷயத்தைத் தானே சொல்கிறார்கள். நீங்கள் இந்த இறைத்தூதர்களை ஏற்றுக்கொள்ளலாம் அல்லவா?" என்றார். அந்த முதியவர் பேசிய பேச்சைக் கேட்டு சினமுற்ற அவ்வூர் மக்கள், அவரை முதியவர் என்றும் பார்க்காமல் நோயாளி என்றும் பொருட்படுத்தாமல் அநியாயத்தின் உச்சமாக அவரை காலால் மிதித்து கொன்றனர். வயிற்றில் மிதித்தால் அவருடைய குடல் வெளியே வந்து விட்டன.
அவர் உயிர்த்தியாகியாக இறந்த பின்னர் இறைவனிடம் அவருடைய உயிர் சென்றுவிட்டது. தமக்காக உயிர்துறந்த அவரைப்பார்த்து அல்லாஹ், "நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துகொள்ளுங்கள்" என்று அல்லாஹ் கூறினான்.
சொர்க்கத்தில் நுழைந்த அவர், "எனக்கு வழங்கப்பட்ட இந்த உயர்மதிப்பும், கண்ணியமும் என் ஊர் மக்களுக்குத் தெரிய வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்" என்றார்.
யாசீன் அத்தியாயத்தின் 20 முதல் 27 வது வசனங்கள் வரை இந்த வரலாற்று நிகழ்வை பற்றித்தான் பேசுகிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சொர்க்கத்தில் ஓர் அல்லாஹ்வின் நம்பிக்கையாளர் தமக்கு குழந்தை வேண்டுமென்று ஆசைப்பட்டால், ஒரே நிமிடத்தில் அவ(ரது துணைவியா)ருக்குக் கர்ப்பம் தரித்து, பிரசவமும் ஏற்பட்டு அவர் விரும்புவதைப் போன்று குழந்தைக்கு (முழு) வயதும் வந்துவிடும். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2486, இப்னுமாஜா-4338, முஸ்னது அஹ்மத், தாரிமீ
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். அருமை நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். ( إِنَّكَ لَتَنْظُرُ إِلَى الطَّيْرِ فِي الْجَنَّةِ فَتَشْتَهِيهِ فَيَخِرُّ بَيْنَ يَدَيْكَ مَشْوِيًّا ) நிச்சயமாக நீர் சொர்க்க தோட்டத்தின் பறவையைக் காண்பீர். அதனை உண்பதற்கு ஆசைப்படுவீர் (எனில்) பொறிக்கப்பட்ட நிலையில் உமது முன்னிலையில் வந்து அது விழும். நூல்:- தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர் அல்வாகிஆ வசனம்-21
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உயிர்த்தியாகிகள் சொர்க்கம் சென்ற பிறகு இறைவன் அவர்களிடம், "உங்களுக்கு ஏதேனும் ஆசை உண்டா?" என்று கேட்பான். அதற்கு அவர்கள், "நாங்கள் தான் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்து கொண்டிருக்கிறோமே! இதற்கு மேல் நாங்கள் ஆசைப்படுவதற்கு வேறு என்ன உள்ளது?" என்று பதிலளிப்பார்கள்.
இவ்வாறு மூன்று முறை (மீண்டும் மீண்டும்) அவர்களிடம் அல்லாஹ் கேட்டுக்கொண்டே இருப்பான். ஏதாவது கேட்காமல் விடப்பட மாட்டோம் என்பதை புரிந்துகொள்ளும் அவர்கள், ( يَا رَبِّ نُرِيدُ أَنْ تَرُدَّ أَرْوَاحَنَا فِي أَجْسَادِنَا حَتَّى نُقْتَلَ فِي سَبِيلِكَ مَرَّةً أُخْرَى ) "எங்கள் இறைவா! எங்கள் உயிர்களை மறுபடியும் எங்கள் உடல்களில் நீ செலுத்தவேண்டும்; மற்றொரு முறை உனது வழியில் போராடி நாங்கள் கொல்லப்பட வேண்டும் என விரும்புகின்றோம்" என்று கூறுவார்கள். (எனினும் இதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.) இதைத் தவிர அவர்களுக்கு (வேறு) எந்த தேவையும் இல்லை என இறைவன் கண்டுகொள்ளும் போது அவர்கள் விடப்படுவார்கள். நூல்:- முஸ்லிம்-3834, திர்மிதீ-2927, இப்னுமாஜா-2801, தாரமீ
ஒரு அறிஞர் சொர்க்கத்தைப் பற்றி விரிவாக சொற்பொழிவாற்றினார். அப்போது ஒருவர் அந்த அறிஞரிடம் வந்து, "ஹள்ரத்! சொர்க்கத்தில் ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கும் என்றீர்கள். அங்கே பீடி, சிக்ரெட் வேண்டும் என்று ஆசைப்பட்டால் கிடைக்குமா? என்று நக்கலாக வினவினார். அறிஞர், “விரும்பினால் அங்கே பீடி, சிக்ரெட்டும் கிடைக்கும். ஆனால், அதைப் பற்றவைக்க நரகம் தான் போகவேண்டும் சரியா?” என்று கூறி, கேட்ட கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்தார்.
தியாகம் செய்ய
அம்ர் பின் அல்ஜமூஹ் (ரலி) அவர்கள் கடும் கால் ஊனமுற்றவராக இருந்தார்கள். அவருக்கு நான்கு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் போர்க்களங்களில் கலந்து கொள்வார்கள். உஹுத் போர் நாள் வந்தபோது, புதல்வர்கள் தம் தந்தையிடம் "அல்லாஹ், (ஊனமுற்ற) உங்களுக்கு (போரில்) விதிவிலக்கு அளித்துள்ளான்" என்று கூறி, அவரைப் (போருக்குச் செல்லாமல்) தடுப்பதற்கு நாடினர்.
உடனே அம்ர் பின் ஜமூஹ் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து, ( إِنَّ بَنِيَّ يُرِيدُونَ أَنْ يَحْبِسُونِي عَنْ هَذَا الْوَجْهِ وَالْخُرُوجِ مَعَكَ فِيهِ، فَوَاللَّهِ إِنِّي لَأَرْجُوَ أَنَّ أَطَأَ بِعَرْجَتِي هَذِهِ فِي الْجَنَّةِ ) "என் புதல்வர்கள் உங்களுடன் போருக்குப் புறப்படுவதற்கு இந்த (ஊனம்) காரணத்தால் என்னைத் தடுப்பதற்கு விரும்புகின்றனர். அல்லாஹ் மீதாணையாக! இந்த ஊனமுற்ற காலுடனே சொர்க்கத்தை மிதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்று கூறினார்.
பிறகு நபியவர்கள், ( أَمَّا أَنْتَ فَقَدَ عَذَرَكَ اللَّهُ، فَلَا جِهَادَ عَلَيْكَ ) "அல்லாஹ் உங்களுக்கு விதிவிலக்கு அளித்துள்ளான். எனவே, உங்கள் மீது அறப்போர் கடமையில்லை என்பதை தெரிந்து கொள்க!" என்று கூறினார்கள். (பிறகு) அவரின் புதல்வர்களிடம், ( مَا عَلَيْكُمْ أَنْ لَا تَمْنَعُوهُ لَعَلَّ اللَّهَ أَنْ يَرْزُقَهُ الشَّهَادَةَ ) "நீங்கள் அவரை போரில் கலந்து கொள்ளாமல் தடுப்பது உங்களுக்கு அவசியமில்லை. அல்லாஹ் அவருக்கு உயிர்த்தியாகத்தை வழங்கக்கூடும்" என்று கூறினார்கள். பிறகு அம்ர் பின் ஜமூஹ் (ரலி) அவர்கள் நபியவர்களுடன் புறப்பட்டு உஹுது போரில் (போரிட்டு) கொல்லப்பட்டார். நூல்:- சீரத் இப்னு ஹிஷாம், அல்பிதாயா வந்நிஹாயா
இஸ்லாமிய மார்க்கத்திற்காக நம்மால் முடிந்தவற்றை தியாகம் செய்ய ஆசைப்பட வேண்டும். அந்த ஆசைக்கேற்ப நற்கூலி உண்டு.
நாம் நற்காரியங்கள் மீது ஆசையும், ஆர்வமும் கொண்டு அதை செயல்படுத்த அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்:
9840535951
மாஷா அல்லாஹ் அருமையான கட்டுரை ஹழ்ரத்
ReplyDeleteஅல்லாஹ் பொருந்திக் கொள்ளும் ஈருலகிலும் பயனளிக்கும் நல்ல ஆசைகளை நம் எண்ணங்களில் வெளிப்படுத்தி அவைகளை அடையவும் வல்லோன் அல்லாஹ் நல்லருள் புரிவானாக 🤲
அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் பயனுள்ள கல்வி ஞானங்களையும் வழங்கி பேரருள் புரிவானாக 🤲