Search This Blog

Sunday, 2 May 2021

அச்சமும்... ஆதரவும்...

 

ச்சமும்...  தரவும்...

يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا


தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும், பயந்தும் (அவனைப்) பிரார்த்தனை செய்வார்கள்.  திருக்குர்ஆன்:- 32:16


இஸ்லாம், அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பற்றி எடுத்துரைக்கும் போது அவனது கோபத்தையும் தண்டனையையும் சேர்த்தே எடுத்துரைக்கிறது. திருக்குர்ஆன் சொர்க்கத்தைப் பற்றி விவரிக்கும் போதெல்லாம் நரகத்தை பற்றியும் எச்சரிக்காமல் இருப்பதில்லை. எனவே, ஒரு இறைநம்பிக்கையாளருக்கு அல்லாஹ்வைப் பற்றிய அச்சமும் ஆதரவும் வேண்டும்.


ஒரு  நற்செயலை செய்தால் அதற்குரிய நற்கூலியைப் பற்றியும் விளங்க வேண்டும். ஒரு பாவச்செயலை செய்தால் அதற்குரிய தண்டனைகளை பற்றியும் விளங்கிக் கொள்ள வேண்டும்.


நரகத்தை பயந்து சொர்க்கத்தை ஆசைப்படாமல் இருப்பதும் தவறு. சொர்க்கத்தை ஆசை வைத்துவிட்டு நரகத்தை பயப்படாமல் இருப்பதும் தவறு. அச்சம் ஆசை, இரண்டும் வேண்டும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைநம்பிக்கை என்பது அச்சத்திற்கும் ஆதரவிற்கும் மத்தியில் இருக்கிறது.


இறைவன் அனுப்பிய செய்தி


அண்ணல் நபி (ஸல்) அவர்கள், நபி ஈசா (அலை) மற்றும் நபி யஹ்யா (அலை) ஆகியோரின்  தகுதியைப்பற்றி குறிப்பிடும்போது இவ்வாறு கூறினார்கள்.


ஒருமுறை நபி ஈஸா (அலை) அவர்களும் நபி யஹ்யா (அலை) அவர்களும் சந்தித்துக் கொண்டனர். அப்போது யஹ்யா (அலை) அவர்கள் ஈஸா (அலை) அவர்களை நோக்கி! "நீங்கள் எப்போதும் புன்முறுவலுடன் இருப்பதையே காணுகிறேன். நீங்கள்  அல்லாஹ்வின் கோபத்தைப் பற்றி அச்சம் தீர்ந்து விட்டீர்களா?" என்று வினவினார்கள். அதற்கு ஈஸா (அலை) அவர்கள், யஹ்யா (அலை) அவர்களை நோக்கி! "நீங்கள் எப்போதும் அழுது கொண்டிருப்பதையே காணுகிறேன். நீங்கள் அல்லாஹ்வின் பேரருள் மீது நம்பிக்கை இழந்து விட்டீர்களா?" என்று வினவினார்கள். பிறகு ஈஸா (அலை) அவர்கள், "உங்களுடைய கண்ணீரோ அல்லது என்னுடைய புன்முறுவலோ  இறைவிதியை மாற்றி அமைக்கப் போவதில்லை" என்று கூறினார்கள்.


அப்போது இறைவன், அவ்விருவருக்கும் அனுப்பிய செய்தியாவது: யஹ்யா (அலை) அவர்களை நோக்கி!  "நீர் வெளியில் எப்போதும் ஈஸாவை போன்று இருப்பீராக! மக்களுக்கு மத்தியில் அதிகம் அழாதீர்! அப்படி அழுவீராயின் மக்கள் உள்ளம் உடைந்துபோய் விடுவார்கள். ஆதரவு இழந்தவர்களைப் போன்று ஆகிவிடுவார்கள்." என்று கூறினான். அதன்பின் ஈசா (அலை) அவர்களை நோக்கி! "நீர் மறைவில் எப்போதும் யஹ்யாவைப் போன்று இருப்பீராக!" என்று அறிவுறுத்தினான்.


நாம் இறைவனுக்கு அஞ்சியும் அவனின் தயாளக் குணத்தின் மீது நம்பிக்கை வைத்தும் இருக்க வேண்டும் என இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.


அல்லாஹ்விடமுள்ள...


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                                                   ( لَوْ يَعْلَمُ الْمُؤْمِنُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الْعُقُوبَةِ مَا طَمِعَ بِجَنَّتِهِ أَحَدٌ وَلَوْ يَعْلَمُ الْكَافِرُ مَا عِنْدَ اللَّهِ مِنَ الرَّحْمَةِ مَا قَنِطَ مِنْ جَنَّتِهِ أَحَدٌ ) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ்விடமுள்ள தண்டனையைப் பற்றி நன்கறிவாரானால், (அதிலிருந்து தப்பித்தால் போதும் என்று கருதுவாரே தவிர,) அவனது சொர்க்கத்தின் மீது (இறைநம்பிக்கையாளர்களில்) யாரும் ஆசை கொள்ளமாட்டார்கள். இறைமறுப்பாளர் அல்லாஹ்விடம் உள்ள கருணையைப் பற்றி நன்கறிவாரானால், அவனது சொர்க்கத்தைப் பற்றி (இறைமறுப்பாளர்களில்) யாருமே நிராசை கொள்ளமாட்டார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5316


இறைவன் தனக்கு மாறு  செய்பவர்களுக்காக எந்தளவுக்கு கடுமையான வேதனைகளை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறான் என்பதையும் அந்த தண்டனையின் சீற்றத்தையும்  ஒரு முஸ்லிம் முறையாக  விளங்கிக் கொண்டாலே போதும். சொர்க்கச் சிட்டுகளாய் வலம் வருவோம் என அவன் தனது மனதுக்குள் தேக்கி வைத்திருந்த ஆசைகளும் கனவுகளும் முற்றாக கரைந்து போகும்.


இறைவனின்  கருணைக்கும், கிருபைக்கும் சற்றும் தகுதி இல்லாதவனாக இருக்கின்ற ஓர் இறைமறுப்பாளன் இறைவனின் கருணை கிருபை ஆகியவற்றைப் பற்றிச் சரியாக அறிந்து கொள்வானேயானால் அவன் இறைவனின் கருணை, கிருபை நமக்கும் கிடைக்காமல் போகாது என்றெண்ணி அதனை எதிர்பார்க்க தொடங்கி விடுவான்.


ஒரு முஸ்லிமின் மனதில் எந்நேரமும் இறைவனை பற்றிய பயம் இருக்க வேண்டும். அதே சமயம் அவன் எந்த சூழ்நிலையிலும் இறைவனின் கருணை குறித்து விரக்தியடைந்து விடக்கூடாது. எல்லா நிலைகளிலும் அச்சத்தையும் ஆதரவையும் ஒருசேர கொண்டிருக்கின்ற இந்த வழிமுறைதான், ஒரு முஸ்லிம் மேற்கொள்ள வேண்டிய சரியான பொருத்தமான வழிமுறையாகும். வாழ்வை சீராக வைத்திருப்பதற்கும் செயல்களை நெறிப்படுத்திக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு அச்சம் ஆதரவு ஆகிய இரண்டுமே தேவைப்படுகிறது.


இறைவனைப் பற்றிய அச்சம் இறைவனுக்கு மாறு செய்வதிலிருந்து தடுக்கின்ற அரணாக நிற்கும். இறைவனின் கருணை பற்றிய ஆதரவோ நல்லறங்களில் அதிகமதிகமாக ஈடுபடத் தூண்டிவிடும்.


அச்சமும் ஆதரவும் தவறான அடிப்படைகளைக்  கொண்டவையாகவோ, மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவையாகவோ இருக்கக்கூடாது. அவை நபிவழியின் அடிப்படையில் அமைந்ததாகவே இருக்க வேண்டும்.


மரணத் தருவாயில்


(நம்முடைய அருளை) விரும்பியும் (நம்முடைய தண்டனையைப்) பயந்தும் நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் நம்மிடம் மிக்க உள்ளச்சமுடையவர்களாகவும் இருந்தார்கள்.      திருக்குர்ஆன்:- 21:90


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்தருவாயில் இருந்த இளைஞர் ஒருவரிடம் சென்றார்கள்.              ( كَيْفَ تَجِدُكَ ) "எப்படி இருக்கிறாய்?" என்று அவரிடம் கேட்டார்கள். அந்த இளைஞர், "நாயகமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் அருளை  எதிர்பார்க்கிறேன். என் பாவங்களை எண்ணி அஞ்சவும் செய்கிறேன்" என்றார்.


அப்போது அண்ணலார், ( لاَ يَجْتَمِعَانِ فِي قَلْبِ عَبْدٍ فِي مِثْلِ هَذَا الْمَوْطِنِ إِلاَّ أَعْطَاهُ اللَّهُ مَا يَرْجُو وَآمَنَهُ مِمَّا يَخَافُ ) (இறைவனின் அருளை எதிர் பார்த்தல், அவனது தண்டனையை அஞ்சுதல் ஆகிய) இவ்விரண்டும் இது போன்ற சந்தர்ப்பத்தில்  ஓர் அடியானின் உள்ளத்தில் ஒருசேர அமையுமானால், அவர் எதிர்பார்ப்பதை அவருக்கு அல்லாஹ் வழங்குவான். அவர் அஞ்சுவதிலிருந்து அவருக்குப் பாதுகாப்பும் அளிப்பான்" என்று கூறினார்கள்.  நூல்:- திர்மிதீ-905, தஃப்ஸீர் இப்னு கஸீர்  ஆலு இம்ரான்  வசனம்-102,


ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يُبْعَثُ كُلُّ عَبْدٍ عَلَى مَا مَاتَ عَلَيْهِ ) ஒவ்வொரு அடியாரும் தாம் இறக்கும்போதிருந்த (மன)நிலையிலேயே எழுப்பப்படுவார். நூல்:- முஸ்லிம்-5518


இமாம் அந்நவவீ (ரஹ்) கூறுகிறார்கள். ஒரு அடியான் தான் சுகமான நிலையில் இருக்கும்போதே அல்லாஹ்வை அஞ்சுபவனாக ஆதரவு வைத்தவனாக இருக்க வேண்டும். அவனது அச்சமும், ஆதரவும் வைத்தலும் சமமாக இருக்க வேண்டும். (அவனது இறுதி நேரத்தில்) நோயாளியான நிலையில் ஆதரவு வைத்தலை அதிகமாக்க வேண்டும். மார்க்கச் சட்டம் இதையே தெளிவுபடுத்துகின்றன நூல்:- ரியாளுஸ்ஸாலிஹீன் பாடம்-53


ஓர் இறைநம்பிக்கையாளர் ஆரோக்கியமாக இருக்கும்போது, தம்மை அல்லாஹ் தண்டித்துவிடலாம் என்ற அச்சமும், மன்னித்து விடலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளவராக இருக்க வேண்டும். ஆனால் அதில் அச்சம் சற்று கூடுதலாக இருக்க வேண்டும். அப்போதுதான், எதிர்வரும் நாட்களில் பாவங்களை கைவிட்டு நன்மைகளைச் செய்ய அது தூண்டுகோலாக அமையும். ஆனால், மரணம் நெருங்கி விட்டால், அப்போது எதிர்பார்ப்பு மட்டுமே எஞ்சியிருக்கும். இனிமேல் பாவங்களைக் கைவிட வாய்ப்பில்லை. நன்மைகளைத் தேடிக்கொள்ள முடியாது. ஆகவே, அச்சமயத்தில் அல்லாஹ் தம்மை அல்லாஹ் மன்னிப்பான் என்ற நல்லெண்ணம் ஒன்று மட்டுமே மேலோங்கி இருக்க வேண்டும். நூல்:- அல்மின்ஹாஜ்


பல திருவசனங்கள்


(நபியே) எனது அடியார்களுக்கு அறிவிப்பீராக! நிச்சயமாக நான் தான் மகா மன்னிப்பாளன், மகாக் கருணையாளன். இன்னும் நிச்சயமாக எனது தண்டனை அதுதான் கடுமையான வலிமிக்க தண்டனையாகும். திருக்குர்ஆன் 15:- 49,50


நிச்சயமாக நல்லோர் 'நயீம்' சொர்க்கத்தில் இருப்பார்கள். குற்றவாளிகள் நரகத்தில் இருப்பார்கள். திருக்குர்ஆன்:- 82:13,14


உம்முடைய இறைவன் தண்டிப்பதில் தீவிரமானவன் ஆவான். அவன் மிகவும் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். திருக்குர்ஆன்:- 7:167


நிச்சயமாக உங்கள் இறைவன் மனிதர்களின் குற்றங்களை மன்னிப்பவனாக இருந்தபோதிலும், நிச்சயமாக உங்கள் இறைவன் வேதனை செய்வதிலும் மிகக் கடுமையான வனாகவும் இருக்கின்றான். திருக்குர்ஆன்:- 13:6


இன்னும் இதுபோன்ற பல திருவசனங்கள் அல்லாஹ்விடம் அருளை எதிர்பார்க்கவும் வேண்டும்; அவன் தண்டனையைப் பற்றி அஞ்சவும் வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன.


சயீது பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் அறிப்பதாவது. (13:6) இந்த வசனம்  அருளப்பெற்றபோது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْلَا عَفْو اللَّه وَتَجَاوُزه مَا هَنَأَ أَحَدً الْعَيْشَ وَلَوْلَا وَعِيدُهُ وَعِقَابُهُ، لَاتَّكَلَ كُلُّ أَحَدٍ ) அல்லாஹ்வின் பெருந்தன்மையும் மன்னிப்பும் இல்லையென்றால் யாருக்கும் வாழ்க்கை சோபித்திருக்காது. எச்சரிக்கையும் தண்டனையும் இல்லையென்றால் அனைவரும் (அல்லாஹ்வின் அருளில்) நம்பிக்கை வைத்து அலட்சியமாக இருந்துவிடுவர்.  நூல்:-  தஃப்ஸீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்ஸீர் இப்னு கஸீர்


சான்றோர்கள்  


அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் எந்த இடங்களில் மகிழ்ச்சியான விஷயங்களை கூறுகிறானோ அதற்கு அருகிலேயே அச்சமூட்டும் விஷயங்களையும் கூறுவதை நீங்கள் பார்க்கவில்லையா? இறைநம்பிக்கையாளர் அச்சமும் ஆதரவும் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் (அச்சமற்றவராகி) தகுதியற்ற ஒன்றை அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கக்கூடாது. மேலும், (நிராசை அடைந்து அல்லாஹ்வின் பாதையில் பாடுபடுவதையும், செலவு செய்வதையும் நிறுத்தி) தன்னைத்தானே அழிவில் போட்டுக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு கூறியுள்ளான்.  அறிவிப்பாளர்:-  ஹஸன் (ரலி) அவர்கள் நூல்:- கன்ஸுல் உம்மால், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2, பக்கம்-828


ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள், ( لَو نَادَی مُنَادٍ مِن السَّمَاءِ یَا اَیُّهَا النّٰاسُ اِنَّکُم دَاخِلُونَ الجَنَّةَ کُلُّکُم اَجمَعُونَ اِلَّا رَجُلًا وَّاحِدًا لَّخِفتُ اَن اَکُونَ اَنَا هُوَ وَلَو نَادَی مُنَادٍ  یَا اَیُّهَا النّٰاسُ اِنَّکُم دَاخِلُونَ النَّارَ اِلَّا رَجُلًا وَّاحِدًا لَّرَجَوتُ اَن اَکُونَ اَنَا هُوَ ) "வானத்திலிருந்து ஒரு அழைப்பாளர் மக்களே! நீங்கள் அனைவரும் சொர்க்கம் செல்வீர்கள். ஆனால் ஒருவரை தவிர என்று கூறினால், அது நானாக இருக்குமோ என்று பயப்படுகிறேன். அவ்வாறே வானத்திலிருந்து ஒரு அழைப்பாளர் மக்களே! நீங்கள் அனைவரும் நரகம் செல்வீர்கள். ஒரு மனிதரைத் தவிர என்று கூறினால், அது நானாக இருக்கலாம் என்று ஆதரவு வைக்கிறேன்" என கூறுபவர்களாக இருந்தார்கள். நூல்:- அல்ஹில்யா, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2, பக்கம்-141


இறைவன் வழங்கும் தண்டனை பற்றிய அச்சம் மட்டுமே மனதில் குடி கொண்டுவிட்டால், இறையருள் மீது நம்பிக்கை இழந்து நிராசை அடைய வேண்டிய நிலை தோன்றும். இது சரியல்ல. இறையருள் மீது கொண்டுள்ள நம்பிக்கை மட்டுமே உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டால், என்ன பாவம் செய்தாலும் இறைவன் மன்னித்துவிடுவான் என்றெண்ணி,  பாவங்கள் புரிவதில் ஒருவித அசட்டுத் துணிச்சல் ஏற்பட்டுவிடும் இதுவும் சரியல்ல.


ஆகவே, அச்சமும் இருக்க வேண்டும்; நம்பிக்கையும் இருக்க வேண்டும். இது எல்லா நேரங்களிலும் ஓர் இறைநம்பிக்கையாளரிடம் இருக்க வேண்டிய பண்பாகும் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். சிலர், மனிதன் ஆரோக்கியமாக இருக்கும்போது இறைவனின் தண்டனை குறித்து அச்சம் கொள்ள வேண்டும் என்றும், நோய்வாய்ப்படும் போது இறைவனின் அருள்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் விளக்கமளித்துள்ளனர். நூல்:- ஃபத்ஹுல் பாரீ


அலீ (ரலி) அவர்கள் தம் மகனை நோக்கி, "மகனே! நீ அல்லாஹ்வை எவ்வாறு அஞ்ச வேண்டுமென்றால், நீ உலக மக்கள் அனைவரின் நன்மைகளை சேர்த்து எடுத்துச் சென்றாலும், அவை அனைத்தையும் அவன் நிராகரித்து விடக்கூடும்; என அஞ்ச வேண்டும். அதேசமயம், நீ உலக மக்கள் அனைவரின் பாவங்களையும் சுமந்து சென்றாலும், அவை அனைத்தையும் அவன் மன்னித்து விடக்கூடும் என ஆதரவு வைக்க வேண்டும்" என்று உபதேசம் செய்தார்கள். நூல்:- இஹ்யா


இதுவரை புரிந்த பாவங்களுக்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரிட வேண்டும். இதைப்போன்றே, வணக்க வழிபாடுகளும் நற்செயல்களும் புரிவோர் அவற்றை இறைவன் ஏற்காமல் நிராகரித்து விடக்கூடும் என அஞ்ச வேண்டும். அப்போதுதான் தாங்களே பெரிய வழிபாட்டாளர்கள் என்ற தற்பெருமை அவர்களுக்கு ஏற்படாமல் தவிர்க்க முடியும். அதே நேரத்தில், இறை அருள் மீது நம்பிக்கை வைத்து, அவன் தங்களுடைய வழிபாடுகளை ஏற்பான் என எதிர்பார்க்கவும் வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து நல்லறங்கள் புரிய உற்சாகம் பிறக்கும்.


சம அளவு


11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த (ஹிஜ்ரீ 581-656) "அல்லாமா முன்திரீ"  என்று கல்விமான்களாலும், நபிமொழித் துறை வல்லுனர்களாலும் மரியாதையுடன் சொல்லக்கூடிய "அல்லாமா அல்ஹாபிள் ஸக்கிய்யுத்தீன் அப்துல் அளீம் பின் அப்தில் கவிய்யி அல்முன்திரீ (ரஹ்) அவர்கள், “ஆர்வமுட்டுதல்-அச்சமுட்டுதல்” எனும் தலைப்பில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நபிமொழிகளை ஒன்று திரட்டி நூலாக ஒரு கோர்வை செய்து அந்நூலுக்கு "அத்தர்ஙீபு வத்தர்ஹீபு" என்று பெயரிட்டு இந்த சமுதாயத்திற்கு சமர்ப்பித்துள்ளார்கள்.  இந்நூல் உலக பிரசித்தி பெற்றது. ஒரு மனிதன் நல்லொழுக்கமுள்ளவனாக வாழ அவனுக்கு ஆர்வமும், அச்சமும் சம அளவு வேண்டும் என்று இமாம் முன்திரீ (ரஹ்) அவர்கள் உணர்த்துகிறார்கள்.



அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் அன்பையும் கருணையையும் படைத்தபோது அதை நூறு வகைகளாக அமைத்தான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது வகைகளைத் தன்னிடமே வைத்துக் கொண்டான். (மீதியுள்ள) ஒரு வகையை மட்டுமே தன் படைப்புக்கள் அனைத்துக்கும் வழங்கினான். ஆகவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவநம்பிக்கை கொள்ள மாட்டான். (இதைப்போன்றே,) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்கமாட்டார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6469


ஒருவன் தம் மனதை கட்டுப்படுத்தி இஸ்லாமிய வாழ்க்கையை முறைப்படி வாழ தவறி விட்டு, தம்முடைய சிந்தனை, உடல் உழைப்பு, ஆற்றல், முயற்சி ஆகிய அனைத்தையும் தம்முடைய மனோ இச்சைகளை நிறைவேற்றிக் கொள்வதில் செலவிடுகின்றான். ஆனால், இறைவன் எப்படியும் தம்மை கரை சேர்த்து விடுவான் என்று பெரிய பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டிருக்கிறான் எனில் அவனை விட முட்டாள் வேறு யாருமில்லை.


எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும் அதற்காக மனம் வருந்தி, இறையஞ்சி முறைப்படி இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடாமல், நானோ பெரும் பாவி, அல்லாஹ் என்னை எப்படி மன்னித்து சொர்க்கத்தைத் தருவான்? எனக்காவது சொர்க்கமாவது? அது நடக்காது, என்று அல்லாஹ்வின் தயாளக்குணத்தின் மீது நம்பிக்கையற்று விரக்தியடைவதும் முட்டாள் தனமானதே என்று இஸ்லாம் இயம்புகிறது.


இறைவன் பாவிகளைத் தண்டிக்கும் ஆற்றல் மிக்கவன் அதே நேரத்தில் பாவிகளை மன்னித்து அருள்புரியும் அறிவு மிக்கவன். ஆகவே, பாவிகள் தங்களுக்கு இறைவன் வழங்கும் தண்டனை குறித்து அச்சம் கொண்டு இனிவரும் நாட்களில் பாவங்களைக் கைவிட வேண்டும். அதே நேரத்தில் இறைவனின் அருள் மீது நம்பிக்கை கொண்டு அவன் தங்களை மன்னிப்பான் என எதிர்பார்த்து விட வேண்டும்.


நாம் அல்லாஹ்வைப் பற்றிய அச்சமும் ஆதரவும் சம அளவில் மேற்கொண்டு சிறப்பாக வாழ அல்லாஹ் அருள்பாலிப்பானாக! ஆமீன்!


மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ  இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951 

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...