Search This Blog

Sunday, 2 May 2021

தொழுகை அழைப்பாளர்

 

தொழுகை அழைப்பாளர்

 

وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ


எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்) நற்செயல்களைச் செய்து "நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டவர்களில் ஒருவன்" என்றும் கூறுகின்றாரோ, அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர் யார்?      திருக்குர்ஆன்:- 41: 33


இஸ்லாத்தில் தொழுகை என்பது மிக உயரிய வணக்கமாகும். எனவே, அந்த தொழுகைக்கு அழைக்கும் அழைப்பாளர் அல்லாஹுத்தஆலாவிடம் மிக உயரிய அந்தஸ்த்தைப்பெற்றவர் என்கிறது இஸ்லாம்.


தொழுகை அழைப்பாளர் பாமரர்கள் பார்வையில் சாதாரணமானவராக தெரிந்தாலும், அவர் இறைவனின் பார்வையில்  தகுதியால் மிகவும்  உயர்ந்தவர் ஆவார்.


அழகியப் பணி


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( مَنْ أَذَّنَ مُحْتَسِبًا سَبْعَ سِنِينَ كَتَبَ اللَّهُ لَهُ بَرَاءَةً مِنَ النَّارِ ) யார் நன்மையை நாடி ஏழு ஆண்டுகள் பாங்கு சொல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரக விடுதலையைப் பதிவுசெய்கிறான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-190, இப்னுமாஜா-719


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( مَنْ أَذَّنَ ثِنْتَيْ عَشْرَةَ سَنَةً وَجَبَتْ لَهُ الْجَنَّةُ وَكُتِبَ لَهُ بِتَأْذِينِهِ فِي كُلِّ يَوْمٍ سِتُّونَ حَسَنَةً وَلِكُلِّ إِقَامَةٍ ثَلاَثُونَ حَسَنَةً ) யார் நன்மையை நாடி பனிரெண்டு ஆண்டுகள் பாங்கு சொல்கிறாரோ அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. அவர் பாங்கொலித்த காரணத்தால் ஒவ்வொரு நாளும் அறுபது நன்மைகளும் ஒவ்வொரு இகாமத்திற்கு முப்பது நன்மைகளும் அவருக்கு எழுதப்படுகின்றன. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-720, தப்ரானீ, அல்பஸ்ஸார்


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் இருபது ஆண்டுகள் தொடர்ந்து தொழுகைக்கு பாங்கொலிப்பவராக இருப்பின் அல்லாஹ் அவரை நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடன் சொர்க்கத்தில் இருக்கச் செய்வான்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகை நடத்துபவர் (இமாம் தொழுகையாளர்களுக்கு) பொறுப்பாளர் ஆவார். தொழுகை அழைப்பாளர் (முஅத்தின்) நம்பப்படுபவர் ஆவார் என்று கூறிவிட்டு, ( اَللَّهُمَّ أَرْشِدِ الأَئِمَّةَ وَاغْفِرْ لِلْمُؤَذِّنِينَ ) “இறைவா! இமாம்களுக்கு நீ நேர்வழி காட்டுவாயாக! தொழுகை அழைப்பாளர்களின் பாவங்களை மன்னிப்பாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள்.  அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-191, அபூதாவூது-434


தொழுகை நடத்தும் இமாம் மக்களின் தொழுகைக்குப் பொறுப்பாளர் ஆவார். அவரது தொழுகை, விதிகளுக்கேற்ப அமைந்தால்தான் பின்பற்றித் தொழும் மக்களின் தொழுகையும் விதிப்படி அமையும். தொழுகைக்காக பாங்கொலிப்பவர் (முஅத்தின்) தொழுகை, நோன்பு நேரங்களை அறிவிப்பவராகிறார். அவரது அறிவிப்பைக் கேட்டு மக்கள் தொழுகை, நோன்பு நேரத்தை அறிந்து அவற்றை நிறைவேற்றுவார்கள். எனவே, அவர் மக்களால் நம்பப்படுகிறார்.  நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ


உயர்ந்த அந்தஸ்து


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْمُؤَذِّنُونَ أَطْوَلُ النَّاسِ أَعْنَاقًا يَوْمَ الْقِيَامَةِ ) முஅத்தின்கள் (எனும் தொழுகை அழைப்பாளர்கள்) மறுமை நாளில் மக்களிலேயே கழுத்து நீளமானவர்களாக இருப்பார்கள். அறிவிப்பாளர்:- முஆவியா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-631, இப்னுமாஜா-717


இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் விவரிக்கிறார்கள். பாங்கு சொல்பவருக்கு மறுமைநாளில் அதிகமான நன்மைகள் கிடைக்கும். அவர் தன்னுடைய அதிகமான நன்மைகளைப் பெற்ற ஆர்வத்தில் கழுத்தை உயர்த்தி உயர்த்திப் பார்ப்பார். அதனால் அவரது கழுத்து உயரமாக தெரியும். மற்றொரு விளக்கம். மறுமையின் விசாரணை மன்றத்தில் பாங்கு சொல்லுபவர் எல்லோரையும்விடத் தனித்தன்மை மிக்கவராகக் காட்சி தருவார் என்பதாகும்.


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமைநாளில் (விசாரணை நடைபெற்று முடியும்வரை) மூன்று பேர்கள் கஸ்தூரி குவியல்மீது (மகிழ்ச்சியுடன்) இருப்பார்கள். அவர்களைக் கண்டு முற்காலத்தவரும் பிற்காலத்தவரும் ஏக்கம் கொள்வார்கள். அவர்களில் ஒருவர், ஒவ்வொரு பகலிலும் இரவிலும் ஐவேளைத் தொழுகைக்காக (மக்களுக்கு)த் தொழுகை அறிவிப்பு செய்தவராவார் (முஅத்தின்). அறிவிப்பாளர்:-  அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்கள் நூல்:- திர்மிதீ-2489


நற்சான்று வழங்கப்படுவர்


அப்துல்லாஹ் பின் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அபூ சஈது (ரலி) அவர்கள் என்னிடம், நீங்கள் ஆடுகளையும் (அவற்றை மேய்திட) பாலைவனத்தையும் விரும்புவதை நான் பார்க்கிறேன். நீங்கள் உங்கள் ஆடுகளுடன் அல்லது உங்கள் பாலைவனத்தில் இருக்கும்போது, தொழுகைக்காக பாங்கு சொன்னால் உங்கள் குரலை உயர்த்தி அழைப்பீராக!


ஏனெனில், தொழுகை அழைப்பாளரின் குரலை வழி நெடுகிலும் செவியுறுகின்ற ஜின்னோ மனிதனோ வேறு எதுவோ இவர்கள் எல்லோரும் அவருக்காக மறுமைநாளில் சாட்சியம் அளிப்பார்கள்" என்று கூறிவிட்டு, "இதை நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-609, நஸாயீ-640, இப்னுமாஜா-715


பாலைவனத்தில், பொட்டல் வெளியில் யாரும் இல்லையே என பாங்கோசையை குறைத்துவிடாமல் உயர்ந்த ஓசையில் பாங்கொலிக்கவேண்டும். அந்த ஓசை கேட்கும் தொலைவிலுள்ள அனைத்து பொருள்களும் அவருக்காக மறுமையில் சாட்சியம் கூறும் என்றால், இது பாங்கொலிப்பாளருக்குக் கிடைக்கும் கூடுதலான சிறப்பை எடுத்துரைக்கிறது.


மன்னிக்கப்படுகிறார்


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   ( الْمُؤَذِّنُ يُغْفَرُ لَهُ بِمَدِّ صَوْتِهِ وَيَشْهَدُ لَهُ كُلُّ رَطْبٍ وَيَابِسٍ ) தொழுகை அழைப்பாளருக்கு அவரது குரல் எட்டும் அளவுக்கு (பாவங்கள்) மன்னிக்கப்படுகின்றன. மேலும், அவருக்காக (அவரது குரல் கேட்கும் பகுதியிலுள்ள) பசுமையான, காய்ந்த அனைத்தும் சாட்சியம் பகர்கின்றன. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூது-432, நஸாயீ-641, முஸ்னது அஹ்மது


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَيَسْتَغْفِرُ لَهُ كُلُّ رَطْبٍ وَيَابِسٍ ) காய்ந்த - ஈரமான எல்லாப் பொருள்களும் பாங்கொலிப்பாளருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றன. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-716, முஸ்னது அஹ்மது, தப்ரானீ, மஜ்மஉஸ் ஸவாயித், அல்பஸ்ஸார்


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   ( وَالْمُؤَذِّنُ يُغْفَرُ لَهُ بِمَدِّ صَوْتِهِ وَلَهُ مِثْلُ أَجْرِ مَنْ صَلَّى مَعَهُ ) தொழுகை அழைப்பாளரின் குரல் நீண்டு ஒலிக்கும் அளவு, அவர் மன்னிக்கப்படுகிறார். மேலும், அவருடன் சேர்ந்து தொழுதவரின் கூலியில் போன்றதும் அவருக்கு கிடைக்கும். அறிவிப்பாளர்:- பராஉ பின்ஆஸிப் (ரலி) அவர்கள்  நூல்:- நஸாயீ-642, முஸ்னது அஹ்மது


ஒரு பாங்கிலிருந்து மறு பாங்குவரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் ஏற்பட்ட பாங்கொலிப்பாளருடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என்று சில அறிஞர்கள் விளக்கமளித்துள்ளனர். நூல்:- பத்லுல் மஜ்ஹூத்


பாங்கு சப்தம் எட்டும் தூரம் வரை பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதன் பொருள்: 1) மன்னிப்பு நிறைவாக ஏற்படும் 2) பாங்கு சொல்பவரின் பாவங்கள் திடப்பொருளாகக் கணிக்கப்பட்டு பாங்கு சொல்பவரின் பாங்கு சப்தம் செல்லும் தூரம்வரை பூமி மீது நிரப்பப்படுமளவுக்குப் பாவங்கள் இருந்தாலும் மன்னிக்கப்படும். 3) பாங்கு சப்தம் கேட்கும் தூரம் வரையுள்ள இடங்களில் பாங்கு சொல்பவர் பாவம் செய்திருந்தால் அவை மன்னிக்கப்படும். பாங்கு சொல்பவரின் சப்தம் செல்லும் தூரம் வரை உள்ள பூமிப்பரப்பில் இருக்கும் ஜின்கள், மனிதர்கள், தாவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் மறுமைநாளில் இவர் பாங்கு சொல்லும் நல்ல பணியைச் செய்தார் என்று சாட்சி சொல்லும்.    நூல்:- அஸ்ஸம்ஹுல் மஹ்மூத்


குரல்வளம்


அபூமஹ்தூரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் சிலருடன் பயணம் புறப்பட்டேன். நாங்கள் ஒரு வழியில் சென்று கொண்டிருந்தோம். (ஹுனைன் போரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த அண்ணல் நபி-ஸல் அவர்களைச் சந்தித்தோம். அங்கு) அண்ணலார் முன்னிலையில் அவர்கள் நியமித்திருந்த பாங்கொலிப்பாளர் தொழுகைக்காக பாங்கொலித்தார்.


நாங்கள் அந்த பாங்கொலிப்பாளரின் பாங்கோசையைக் கேட்டோம். (அப்போது நாங்கள் முஸ்லிம்களாக இல்லாத காரணத்தால்) அந்த பாங்கை அலட்சியப்படுத்தியதோடு உரத்த குரலில் ஏளனம் செய்து அவர் சொல்வதைப் போன்றே நாங்களும் சொன்னோம். அதை அண்ணலார் கேட்டு விட்டார்கள்.


எனவே, எங்களிடம் சிலரை அனுப்பினார்கள். (அவர்கள் எங்களை பிடித்துச் சென்று) அண்ணலாரின் முன்னிலையில் உட்கார வைத்தார்கள். அப்போது அண்ணலார், ( أَيُّكُمُ الَّذِي سَمِعْتُ صَوْتَهُ قَدِ ارْتَفَعَ )  "உங்கள் சப்தத்தை உயர்த்தியவாறு ஏளனம் செய்தவர் யார்?" என்று வினவினார்கள். அ(ங்கு என்னோடு இருந்த)வர்கள் அனைவரும் என்னை சுட்டிக்காட்டிவிட்டார்கள். எனவே, அண்ணலார்  மற்ற அனைவரையும் விட்டு விட்டு என்னை (மட்டும் செல்லமாக விடாமல் அங்கேயே) தடுத்து வைத்துக் கொண்டார்கள். அண்ணலார் என்னிடம், "எழுந்து பாங்கு சொல்!" என்றார்கள். எனவே, நான் எழுந்தேன். (அந்நேரத்தில்) அண்ணலாரை விடவும் அவர்கள் சொல்லச் சொல்லி பணித்ததைவிடவும் வேறெதுவும் வெறுப்பானவையாக எனக்கு இருக்கவில்லை.


அண்ணலார் முன்னிலையில் எழுந்து நின்றேன். அண்ணலார் எனக்கு பாங்கின் முறையைக் கற்றுக்கொடுத்தார்கள். நான் பாங்கு சொல்லி முடித்ததும் (எனது குரல்வளம் சிறப்பாக இருந்தது. எனவே,) அண்ணலார் என்னை அழைத்து ஒரு பையைக் கொடுத்தார்கள். அதில் சிறிதளவு வெள்ளிக்காசு இருந்தது. பின்னர் அவர்கள் என்னுடைய முன்னந்தலைமீது தம் கையை வைத்து பின்னர் அதை அப்படியே என் முகத்திலிருந்து நெஞ்சு மற்றும் தொப்புள் வரை தடவிவிட்டு, பிறகு ( بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ ) "உமக்கு அல்லாஹ் மறைமுகப் பேரருளை வழங்கட்டும்! உன்மீது தனது அருள்வளத்தை பொழியட்டும்!" என்றும் பிரார்த்தித்தார்கள். 


அப்போது நான், "நாயகமே! மக்காவில் பாங்கு சொல்ல என்னைப் பணிப்பீர்களா?" என்று வினவினேன். அதற்கு அண்ணலார், (  نَعَمْ قَدْ أَمَرْتُكَ )  "ஆம், உன்னை பணித்துவிட்டேன்" என்றார்கள். அப்போதே அண்ணலார் மீது எனக்கு இருந்த வெறுப்புணர்வு யாவும் நீங்கி, அவை அனைத்தும் அண்ணலார் மீதுள்ள அன்பாக மாறிவிட்டது. அதன்படியே நான் மக்கா சென்று அங்கு தொழுகைக்கு பாங்கொலிக்கும் பணியில் சேர்ந்து பாங்கொலித்தேன். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் முஹைரீஸ் (ரஹ்) அவர்கள்     நூல்:- இப்னு மாஜா-700


குறைஷியரில் ஒருவரான  அபூமஹ்தூரா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு ஹுனைன் போருக்குப் பின்னர் இஸ்லாத்தில் இணைந்தார். இவர் குரல்வளம் மிக்கவர். எனவே, மக்காவில் பாங்கொலிக்கும் பணி இவருக்கு கொடுக்கப்பட்டது. மக்காவில் இவருடைய வழித்தோன்றல்களே பாங்கொலிக்கும் பணியை வாழையடி வாழையாக மேற்கொண்டு வந்தனர். இவர் ஹிஜ்ரீ 59 ஆம் ஆண்டு மக்காவில் மறைந்தார். நூல்:- அல்மின்ஹாஜ்


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மதீனாவில் பிலால் (ரலி) அவர்களும் இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களும் தொழுகைக்கு பாங்கொலிப்பவர்களாக (முஅத்தின்களாக) இருந்தனர். மக்காவில் அபூமஹ்தூரா (ரலி) அவர்களும் 'குபா'வில் சஅத் அல்கரள் (ரலி) அவர்களும் பாங்கொலிப்பவர்களாக இருந்துள்ளார்கள். நூல்:- அல்மின்ஹாஜ்


ஷைத்தான் விரட்டப்படுகிறான்


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் ஷைத்தான் பாங்கை கேட்காமலிருப்பதற்காக வாயு வெளியேற்றிய வண்ணம் (வெகு தூரத்திற்கு) பின்வாங்கி ஓடுகிறான். பாங்கு முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வருகிறான். பின்னர் 'இகாமத்' சொல்லப்பட்டால், பின்வாங்கி ஓடுகிறான். 'இகாமத்' சொல்லி முடிக்கப்பட்டதும் (திரும்பவும் பள்ளிவாசலுக்கு) வந்து (தொழுது கொண்டிருக்கும்) மனிதனின் உள்ளத்தில் ஊசலாட்டத்தைப் போடுகிறான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-608, முஸ்லிம்-636, அபூதாவூது-433, நஸாயீ-664, முஸ்னது அஹ்மது


பாங்கு எந்தளவுக்கு உரத்த குரலில் சொல்லப்படுகிறதோ அந்த அளவுக்கு ஷைத்தான் தூர விரட்டுகிறான். அதனால் அவனுக்கு சிரமம் உண்டாகிறது. எனவே, உரத்த குரலில் பாங்கொலித்து  ஷைத்தானுக்கு சிரமத்தை ஏற்படுத்த வேண்டும்.


ஷைத்தான் பாங்கொலியைக் கேட்கக்கூடாது என்பதற்காகத் தலைதெறிக்க ஓடுகிறான். அதுவும் காற்றை விட்டுக்கொண்டே ஓடுகிறான். பாங்கோசை அவனை சவுக்கால் அடிப்பது போன்று இருக்கும்.


பாங்கோசையும் மிஞ்சும் அளவுக்குக் காற்றை விட்டுக்கொண்டே ஓடுவதற்குக் காரணம், பாங்கோசையைக் கேட்கும் அனைத்து படைப்புகளும் மறுமைநாளில் சாட்சியம் சொல்லும். அந்த இடத்தில் ஷைத்தான் இருந்தால் அவனும் சாட்சி சொல்ல வேண்டிவரும். ஆகவே, பாங்கின் வார்த்தைகளை தன் காதில் கேட்டு விடக்கூடாது என்பதற்காக காற்றை சப்தமாக வெளியேற்றிக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறான் என்று அல்லாமா அய்னீ (ரஹ்) அவர்கள் விவரிக்கிறார்கள். நூல்:- அஸ்ஸம்ஹுல் மஹ்மூத்


பாங்கு சொல்பவர்கள் தனது பாங்கொலியால் ஷைத்தானை விரண்டோட செய்கிறார்கள். எனவே, பாங்கு சொல்லும் பணி  சிறந்த பணி என்பதற்கு இது ஒன்றே போதுமான சான்றாகும் .


விளங்கிக்கொள்ள வேண்டும்


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ ثُمَّ لَمْ يَجِدُوا إِلاَّ أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا ) தொழுகைக்கு பாங்கு சொல்லும் பணியில் உள்ள நன்மைகளை மக்கள் அறிந்து இருந்தால் அவற்றை அடைவதற்கு சீட்டுக் குலுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் சீட்டுக் குலுக்கியே தீருவார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-615, முஸ்லிம்-746, நஸாயீ-537, முஸ்னது அஹ்மது, முவத்தா மாலிக்


ஒருமுறை சல்மா பின் ஸிரார் (ரலி) அவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம்  வந்து, "நாயகமே!  சொர்க்கத்தில் நுழைவிக்கக்கூடிய ஒரு நற்செயலை எனக்குக் கற்றுத் தாருங்கள்" என்று கேட்டார். அப்போது அண்ணலார், "நீர் தொழுகைக்காக பாங்கொலிக்கும் பணியை மேற்கோள்" என்றார்கள். அதற்கவர் நான் அந்தப் பணியை செய்ய இயாலாவிட்டால்... என்றார். அண்ணலார்,  "தொழுகை நடத்தும் இமாமாக பணிபுரி" என்றார்கள். அதற்கவர் நான் அந்தப் பணியை செய்ய இயாலாவிட்டால்... என்றார். அண்ணலார், "தொழுகையில் முதல் வரிசையில் இமாமுக்கு நேராக நின்று கொள்" என்று கூறினார்கள். நூல்:- தப்ரானீ


இவ்வளவு சிறப்பு பெற்ற தொழுகைக்கு பாங்கொலிபவர்கள் பரம ஏழைகளாக இருப்பதுடன்,  சமுதாயத்தின் வசதி படைத்த பெருமக்களால் சிலசமயங்களில் துச்சமாகவும் கருதப்படுகின்றனர். இது இந்த ஏழை முஅத்தின்களுக்கு நாம் செய்யும் தீங்கல்ல. இது நமக்கு நாமே இழைத்துக் கொள்ளும் தீங்காகும்.


மேன்மக்களின் கூற்று


அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( اَللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤَذِّنِينَ" ثَلَاثًا )  "யா அல்லாஹ்! தொழுகை அழைப்பாளர்களை மன்னிப்பாயாக! என்று மூன்று தடவை பிரார்த்தனை செய்ததை நான் செவியுற்றேன்"


அன்னார் தொடர்ந்து கூறுகிறார்கள். அப்போது நான், "நாயகமே! இவ்வாறு பிரார்த்தனை செய்ததன் (மூலம்) தொழுகை அழைப்பின் (சிறப்பின்) பேரில் வாள்களைக் கொண்டு ஒருவரையொருவர் நாங்கள் தாக்கிக் கொள்ளும் நிலையில் அல்லவா எங்களை விட்டிருக்கிறீர்கள் என்றேன்" அதற்கு அண்ணலார்,  ( كَلَّا يَا عُمَرُ، إِنَّهُ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَتْرُكُونَ الْأَذَانَ عَلَى ضُعَفَائِهِمْ وَتِلْكَ لُحُومٌ حَرَّمَهَا اللَّهُ عَلَى النَّارِ، لُحُومُ الْمُؤَذِّنِينَ ) "உமரே! அவ்வாறல்ல. நிச்சயமாக அதிவிரைவில் மக்களிடம் ஒரு காலம் வரும். அப்போது அவர்கள் தொழுகை அழைப்புக்கான பொறுப்பை தம்மில் உள்ள பலவீனர்களிடம் விட்டு விடுவார்கள். அந்தச் சதைகள் தான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் நரகத்தின் மீது ஹராம் என தடை செய்திருக்கின்ற சதைகள். தொழுகை அழைப்பாளர்களின் சதைகள்" என்று கூறினார்கள். நூல்:- இப்னு அபீஹாத்தம், தஃப்ஸீர் இப்னு கஸீர்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உலகத்தில் பாங்கு சொல்லும் பணியில் இருந்தவர்கள் மரணித்தவுடன் அவர்களின் உயிர்களை உயிர்த்தியாகிகளின் உயிர்கள் வைக்கப்படும் அந்த இடத்திற்கு கொண்டு செல்லப்படும்.


உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.  ( لَوْ كُنْتُ مُؤَذِّنًا لَكَمُلَ أَمْرِي، وَمَا بَالَيْتُ أَلَّا أَنْتَصِبَ لِقِيَامِ اللَّيْلِ وَلَا لِصِيَامِ النَّهَارِ ) நான் (முஅத்தின் எனும்) தொழுகை அழைப்பாளராக இருந்திருந்தால் என்னுடைய அனைத்து காரியங்களும் நிறைவு பெற்றதாக ஆகியிருக்கும். நான் இரவில் நின்று வழிபடவில்லையே, பகலில் நோன்பு நோற்கவில்லையே என்பதையெல்லாம் நான் பொருட்படுத்தியிருக்க மாட்டேன்.


ஆயிஷா (ரலி) அவர்கள்  கூறினார்கள். (தலைப்பில் காணும்) அந்த வசனத்தில் குறிப்பிடப்படும் அந்த மனிதர் தொழுகை அழைப்பாளர் தான்.ஹைஅலஸ் ஸலாத் - அதாவது தொழுகைக்கு வாருங்கள் என்று அவர் கூறினால், நிச்சயமாக அல்லாஹ்வின் பக்கம் அழைத்தவராகி ஆகிவிட்டார்.


அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) இக்ரிமா (ரலி) ஆகியோர் இந்த வசனம் தொழுகையின் அழைப்பாளர்கள் விஷயத்தில் இறக்கியருளப்பட்டது என்றும் கூறியுள்ளார்கள்.


உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் (கலீஃபா) ஜனாதிபதியாக ஆகாமல் இருந்திருந்தால், தொழுகை அழைப்பாளராக (முஅத்தினாக) ஆகியிருப்பேன்.


அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) கூறினார்கள்.  ( لَوْ كُنْتُ مُؤَذِّنًا مَا بَالَيْتُ أَن لَا أَحُجّ وَلَا أَعتَمِر وَلَا أُجَاهِد ) நான் தொழுகை அழைப்பாளராக இருந்திருந்தால் (உபரியான) ஹஜ், உம்ரா, (ஜிஹாத்) புனிதப் போர் ஆகியவை பற்றிக்கூட அதிக அக்கறை கொள்ள மாட்டேன்.


அலீ (ரலி) அவர்கள் தமது இறுதி நேரத்தில் தம்முடைய மக்களான ஹஸன் (ரலி) ஹுசைன் (ரலி) ஆகிய இருவரையும் அழைத்து, "நீங்கள் இருவரும் பாங்கு சொல்லும் தொழுகை அழைப்பாளர்களாக பணிபுரிந்தால் மிகச் சிறப்பாக இருக்கும்" என்று (வசிய்யத்) கூறினார்கள்.


சஅது பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.   ( سِهَامُ الْمُؤَذِّنِينَ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ كَسِهَامِ الْمُجَاهِدِينَ ) தொழுகைக்கு பாங்கொலிப்பவர்கள், மறுமைநாளில் அறப்போரில் கலந்துக்கொண்டவர்களின் அந்தஸ்தைப் பெறுவார்கள்.


சரியான கருத்து என்னவெனில் (தலைப்பில் காணும்) இந்த வசனம் தொழுகை அழைப்பாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் பொருந்தும். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்


இலகுவானதல்ல


நமது நாட்டில் பாங்கு சொல்லும் பணி என்பது இலகுவானதல்ல. கடுங்குளிர் தொடர்மழை சுட்டெரிக்கும் வெயில் இது எதையும் பொருட்படுத்தாமல் தன் கடமையை செய்ய வேண்டும்.


விடியற்காலை 5:30 மணிக்கு ஃபஜ்ரு தொழுகை என்றால் இவர்கள் 4:30 மணிக்கு விழித்து, இருட்டு, பயம், திருடர்களின் வழிப்பறி, இயற்கை சீற்றம் இதையெல்லாம் பொருட்படுத்தாது விடியற்காலையே பள்ளிவாசலுக்கு வந்துவிடுகிறார்கள். 


பள்ளியைத் திறந்து விளக்குகளை எரியவிட்டு, தண்ணீரை நிரப்பி, நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்கள்.  நம்மால் ஒரு நாளாவது விடியற்காலை 4:45 மணிக்கு எழுந்து வரமுடியுமா வந்ததுண்டா?... (ரமளானைத் தவிர்த்து...?) ஆனால் அவர்களோ ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதமல்ல. வருடக்கணக்கில் இதை சரியாக செய்கிறார்கள்.


பள்ளியை சுத்தம் செய்வது (சில பள்ளியில் கழிப்பறையையும் சுத்தம் செய்ய வேண்டும்), சந்தா வசூலிப்பது, சமையல் சாமான் சட்டி பாத்திரங்களை கேட்டு வருவோருக்கு எடுத்துக் கொடுத்து பின்னர் அதை சரிபார்த்து வைப்பது, அதற்கான இரசீதை கொடுத்து பணம் வாங்குவது இது போன்றவையும் அவர்கள் பணியாக இருக்கிறது.


ஏதேனும் பள்ளியில் நிகழ்ச்சி நடந்தால் அது முடியும் வரை காத்திருந்து, பள்ளியைப் பூட்டிவிட்டு இறுதியாக வீட்டுக்கு செல்வது. யாராவது மரணித்துவிட்டால் இரவு எத்தனை மணி ஆனாலும் பள்ளியைத் திறந்து கட்டில், மையத்து பாய் போன்றவை எடுத்துக் கொடுக்க வேண்டும் இதுவும் அவர்கள் பணியாக இருக்கிறது.


இவ்வளவு சிரமமான வேலையை செய்யும் தொழுகை அழைப்பாளர்களை  இந்த சமூகம் எப்படி மதிக்கிறது? எப்படி நடத்துகிறது? கொஞ்சம் யோசிக்க வேண்டும். சிலர் தொழுகை அழைப்பாளர் என்றாலே எடுபிடி ஆளையைப் போன்று இளக்காரமாக நினைக்கிறார்கள்; நடத்துகிறார்கள்.


சில பள்ளியின் நிர்வாகிகள் தன் வீட்டு வேலைக்கும் அவர்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவர்களை யோவ்... இங்கே வா... போ... என்று மரியாதை இல்லாமல் அழைக்கிறார்கள். அவர்கள் இவற்றை அனைத்தையும் சகித்துக் கொண்டு பணியாற்றுகிறார்கள்.


பெரும்பாலான பள்ளிவாசலில் அவர்களுக்கு அப்படி என்ன பிரமாதமான சம்பளம் கொடுக்கப்படுகிறது? ஒரு கூலித் தொழிலாளியின் சம்பளம்கூட அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மையாகும். ரமளான் மாதத்தில் மட்டுமே சில ஆயிரங்கள் கிடைக்கலாம். மற்ற நாள்களில் அவர்களின் நிலை சொல்லிக்கொள்ளும்படி இருப்பதில்லை. இந்நிலை மோதினாருக்கு மட்டுமல்ல. மோதினார் இல்லாத பள்ளிகளில் இமாம்களின் நிலையும் இவ்வாறுதான்.


இச்சமூகத்தில் பள்ளிவாசல் பணியாளர்களின் இந்நிலை மாற வேண்டும். நாம், பள்ளிவாசல் பணியாளர்களை கண்ணியப்படுத்தினால், அல்லாஹ் நம்மை கண்ணியப்படுத்துவான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


மறுமை நாளில் தொழுகை அழைப்பாளர்கள் பெற இருக்கின்ற அந்தஸ்து அறியாமல் நாம் அவர்களை அலட்சியமாக நடத்துகிறோம். இது தவறு என்று உணர்ந்து நம்மை திருத்திக்கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் நாட்டப்படி அவர்கள் மிக உன்னத நிலையை அடைவார்கள் என்பது நிச்சயம். எனவே, அவர்களை நாம் கண்ணியப்படுத்தி இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...