Search This Blog

Monday, 31 May 2021

தினந்தோறும்…

 

தினந்தோறும்

اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا 

நிச்சயமாகத் தொழுகையோ குறிப்பிட்ட நேரத்தில் (தவறாமல்) இறைநம்பிக்கையாளர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகவே இருக்கின்றது.                                          திருக்குர்ஆன்:-4:103

இறைவனைத் தொழ வேண்டும் என்பதை இஸ்லாம் தன்னை பின்பற்றுவோருக்குக் கட்டாயக் கடமையென ஆக்கியுள்ளது. அடிப்படை கடமைகளுள் ஒன்றாக இது ஆக்கப்பட்டுள்ளது. மனிதனை மாபெரும் சக்தியாளனான அல்லாஹுதஆலாவோடு இணைக்கின்ற பாலமாக திகழ்கின்றது தொழுகை.

முஸ்லிமான  ஒவ்வொருவரும் தொழுகையை மனம் விரும்பி நேரம் தவறாமல் நிறைவேற்றுகின்றபோது அவனது வாழ்க்கைத் தூய்மையடைகின்றது. மனம் பலமடைகின்றது. உடல் ஆரோக்கியமடைகின்றது.

பருவமெய்திய ஆண், பெண் அனைவரும் மீதும் அவர்களின் இறப்பு காலம் வரை தொழுகை கட்டாயக் கடமை. ஆனால் நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற கடமைகள் சிலர் மீது விதிவிலக்கு உண்டு. மனித வாழ்வில் தொழுகைக்கு விடுமுறை கிடையாது. தன் நிலை அறியாத புத்தி பேதலித்தவர்களுக்கு மட்டும் தான் தொழுகை விதிவிலக்காகும்.

மகத்துவம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (லா தீன லிமன் லா சலாத லஹு) "எவர் தொழுகையைப் பேணவில்லையோ அவருக்கு சன்மார்க்கத்தில் இடம் கிடையாது.                           அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு- 100

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகை மார்க்கத்தின் தூண் ஆகும்.                      அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள்                                       நூல்:- ஹில்யத்துல் அவ்லியா, ஜாமிஉஸ் ஸஙீர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகை சொர்க்கத்தின் திறவுகோல்      அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்                   நூல்:- முஸ்னது அஹ்மத்

அப்துல்லாஹ் பின் குர்து (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "மறுமை நாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் கேள்வி கணக்குக் கேட்கப்படுவதில் முதலாவது விஷயம் அவனது தொழுகையைப் பற்றித்தான்! அவனிடம் தொழுகை சீராக இருந்தால் அவனது மற்ற நற்செயல்கள் அனைத்தும் சீராக இருக்கும். அந்த தொழுகை சீர்குலைந்து இருந்தால், அவனது மற்ற நற்செயல்கள் அனைத்தும் சீர்குலைந்து இருக்கும்" என்று கூறினார்கள்.  நூல்:- தப்ரானீ, முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு- 98

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகைக்காக நடந்து செல்லும் ஒவ்வொரு கால் எட்டுக்கும் தர்மத்தின் நன்மை உண்டு.                அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்            நூல்:- முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-83

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. பனூ சலிமா குலத்தார் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்குத் தொலைவில் இருந்த) தம் குடியிருப்புகளை இடம் மாற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். மதீனா (நகரின் இதரப் பகுதிகள்) காலியாவதை அண்ணலார் வெறுத்தார்கள். எனவே (பனூ சலிமா குலத்தாரே! "அலா தஹ்த்தசிபூன ஆஸாரக்கும்") உங்கள் கால் எட்டுகளின் அளவுக்கு நீங்கள் நன்மையை எதிர்பார்க்க மாட்டீர்களா?" என்று வினவினார்கள்.                           நூல்:- புகாரீ-656

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தனது ஆளுநர்களுக்கு கடிதம் எழுதும்போதெல்லாம் "தொழுகை என்பது மிக முக்கியமானதாகும். அதை பாதுகாத்தவர் தனது மார்க்கத்தை பாதுகாத்தவராவார். அதை வீணடித்தவர் மற்ற அனைத்தையும் வீணடித்தவராவார்" என்ற வாசகத்தை எழுதிய பிறகு தான் மற்ற விஷயங்களை எழுதுவார்கள்.

 வறுமையை ஒழிக்க

(நபியே) தொழுது வருமாறு நீங்கள் உங்கள் குடும்பத்தினரை ஏவுங்கள். நீங்களும் அதன் மீது உறுதியாக இருங்கள். (இதற்காக) நாம் உங்களிடம் யாதொன்றையும் கேட்கவில்லை. உங்களுக்கு வேண்டிய எல்லா வாழ்வாதாரத்தையும் நாமே கொடுக்கிறோம்.                                      திருக்குர்ஆன்:- 20:132

அதிக மக்கள் தொகையே வறுமைக்கு காரணம் என்று கூறி நமது நாட்டில் வறுமையை ஒழிக்க "நாம் இருவர் நமக்கு இருவர். பிறகு நாம் இருவர் நமக்கு ஒருவர். பிறகு நாமே குழந்தை நமக்கு ஏன் குழந்தை?" என்று விளம்பரப்படுத்தி குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்துகிறார்கள். இதனால் வறுமை ஒழிந்ததா? என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

இறைவன் வறுமையை ஒழிக்க ஒரு திட்டத்தை கூறியுள்ளான். குடும்பத்தினர் அனைவரும் முறையாக நேரம் தவறாமல் தொழுகையைப் பேணி வந்தால் போதும் வறுமையே வராது.

கண்ணியமானவர்கள்

அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கைபரிலிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது அண்ணலாருடன் இரண்டு அடிமைகள் இருந்தனர். அலீ (ரலி) அவர்கள் எங்களுக்கு பணிவிடை செய்வதற்காக ஒரு அடிமையைக் கொடுங்கள் என்று கேட்டார். இவ்விருவரில் நீர் விரும்பியவரை எடுத்துக் கொள்! என்று அண்ணலார் கூறினார்கள்.

தாங்களே தேர்ந்தெடுத்துத் தாருங்கள் என்று அலீ (ரலி) அவர்கள் கூற அண்ணலார் அவ்விருவரில் ஒருவரின் பக்கம் சைகை செய்து இவரை எடுத்துக் கொள்! ஆனால் இவரை அடிக்காதீர். ஏனெனில் கைபரிலிந்து திரும்பி வரும் போது இவர் தொழக் கண்டேன். (இன்னீ கது நஹைத்து அன் ளர்பி அஹ்லிஸ் ஸலாத்தி) "தொழுகையாளிகளை அடிப்பது எனக்குத் தடுக்கப்பட்டுள்ளது" என்று அண்ணலார் கூறினார்கள்.                 நூல்:- முஸ்னது அஹ்மது, தப்ரானீ, மஜ்மஉஸ் ஸவாயித்

பேணுதலுள்ள தொழுகையாளிகளாக இருக்கும் தனது பணியாட்களின் சிறு சிறு தவறுகளை மன்னித்து விட வேண்டும். அவர்களைத் திட்டுவது, குத்திப் பேசுவது, அடிப்பது நல்ல முதலாளிக்கு அழகல்ல. காரணம் தொழுகையாளிகள் அல்லாஹ்வின் பார்வையில் கண்ணியமானவர்கள்.

பேணுதலுள்ள தொழுகையாளியை நல்லவர் கெட்டவர் அனைவரும் மதிப்பார்கள். தீய வார்த்தை பேசுவோர்கூட இவரைக் கண்டால் அமைதியாகி விடுவர். தீய செயல் செய்வோர்கூட இவரைக் கண்டால் வெட்கமுற்று ஒதுங்கிப் போவர்.

ஜமாஅத் தொழுகை

மேலும் அவர்கள் தங்கள் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேணிப் பாதுகாப்பவர்கள். திருக்குர்ஆன்:- 23:9

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளாத வீட்டாரை அவர்களுடைய வீடுகளுடன் சேர்த்து எரித்துவிட வேண்டும்  என நான் எண்ணியதுண்டு.                            அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்           நூல்:-புகாரீ- 644, முஸ்லிம்- 1154

சமுதாயத்தின் மீது அதிக கவலை கொண்ட கருணை நாதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிலரை இவ்வாறு வீடுகளுடன் சேர்த்து தீ வைத்து கொன்றிட எண்ணினார்கள் என்றால் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளாமல் இருப்பது எவ்வளவு பெரிய பாவச் செயல் என்று விளங்குகிறது.

அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான் பலநூறு தடவை குர்ஆனை ஓதி முடித்த பிறகும் அதன் நன்மைகள் எனக்கு தர மறுக்கப்பட்டுவிட்டாலும் நான் வருத்தப்பட மாட்டேன். ஆனால் ஜமாஅத் தொழுகையில் முதல் தக்பீரை இமாமுடன் சேர்ந்து பெற்றுக்கொள்ளாவிடில் மிகவும் வருந்துவேன்" என்று கூறினார்கள்.

குர்ஆனின் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் இருக்கிறது என்பது நபிமொழி. அவ்வாறாயின் முழு குர்ஆனையும் ஓதி முடித்தால் எத்தனை லட்சம் நன்மைகள் கிடைக்கும் என்பதை நாம் யூகிக்க முடியும். ஒருமுறை குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்தால் இவ்வளவு நன்மைகள் என்றால் பலநூறு முறை குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்க வேண்டும்? இவ்வளவு நன்மைகளையும் இழப்பது ஒரு பொருட்டாக அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு தோன்றவில்லை. இதைவிட ஜமாஅத் தொழுகையில் முதல் தக்பீரை இழப்பதே பேரிழப்பாக அன்னாருக்கு தோன்றுகிறது. நபித்தோழர்கள் தொழுகைக்கு தந்த முக்கியத்துவம் இது தான்!

ஒருநாள் உமர் (ரலி) அவர்கள் தங்கள் தோட்டத்திற்கு சென்றார்கள். திரும்பி வந்து பார்க்கும்போது அசர் தொழுகையின் ஜமாஅத் முடிந்து மக்கள் கலைந்து சென்றுக்கொண்டிருந்தனர். இதைக்கண்ட உமர் (ரலி) அவர்கள் "இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்" எனக்கு அசர் தொழுகை ஜமாஅத் தவறிவிட்டதே! அந்த தோட்டத்தினால் தானே எனக்கு இந்நிலை ஏற்பட்டது. அத்தோட்டத்தை ஏழைகளுக்கு தர்மம் செய்து விட்டேன் என்பதற்கு மக்களே! நீங்கள் சாட்சியாக இருங்கள்" என்று கூறினார்கள்.                 நூல்:- அல்கபாஇர் இமாம் தஹபீ

ஒரு ஊரில் பள்ளிவாசல் இருப்பது அந்த ஊரில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்பதன் அடையாளம். அந்த பள்ளியும் முஸ்லிம்கள் தொழுவதற்காகத்தான். நோன்பு, ஸகாத் போன்ற மற்ற கடமையான வணக்கங்கள் புரிய பள்ளிவாசல் தேவையில்லை. ஒரு தலைமையின் கீழ் மக்கள் ஒன்றுபடுவது என்ற ஒற்றுமையை ஜமாஅத் தொழுகை தான் கற்றுத் தருகிறது.

சலுகைகள் இருந்தாலும்...

அவர் தன் இறைவனின் திருப்பெயரை நினைவுகூறி கொண்டும் தொழுது கொண்டுமிருப்பார். திருக்குர்ஆன்:- 87:15

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மரண நோயால் பீடிக்கப்பட்டிருந்தபோது (உடல் பலஹீனத்தால் கால்கள் ஊன்ற முடியாமல்) தம் இரு கால்களும் பூமியில் இழுபட (அப்பாஸ்-ரலி, அலீ-ரலி ஆகிய) இரு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி தொழுகைக்கு புறப்பட்டார்கள். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-665

நபித்தோழிகளுக்கு மாதவிடாய் காலம் வந்தால், அது நின்று சுத்தமாகும் கட்டத்தில் இரவு நடுநிசியிலெல்லாம் கண் விழித்து, தாம் சுத்தமாகி விட்டோமா என்பதை கவனிப்பார்களாம். சுத்தமாகியிருந்தால் இஷா தொழுகையை களா (நேரம் தவறித் தொழுதல்) ஆகாமல் இரவே தொழுது விடலாம் என்ற ஆவலில்!

மார்க்கத்தில் இவ்வளவு சிரமம் எடுக்க வேண்டியதில்லை என்றாலும் அவர்கள் தொழுகை 'களா' ஆவதை பொறுத்து கொள்ள இயலவில்லை.

பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மட்டுமல்ல மற்ற காலத்திலும் இரத்தப்போக்கு தொடர்ந்து வந்தது. இந்நிலையில் தொழுவது கூடுமா? என்ற கவலை அப்பெண்ணை வாட்டியது. (தொழ வேண்டிய நேரங்களில் தொழாமல் இருப்பது எப்படி? என்ற கவலை அவர்களை வாட்டியது.) அப்பெண் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து சட்டம் கேட்டபோது அண்ணலார் மாதவிடாய் அல்லாத இரத்தத்தைக் கழுவிவிட்டு தொழுது கொள் ! என்று தீர்ப்பளித்தார்கள். (அப்போது தான் அப்பெண்ணுக்கு மனம் அமைதியானது.)                   நூல்:- புகாரீ-228, முஸ்லிம்-553

தாபியீன்களில் ஒருவரும், சட்ட மேதையும், நபிமொழி அறிவிப்பாளருமாகிய ரபீஉ பின் ஹைதம் (ரஹ்) அவர்கள் பக்கவாத நோயினால் உடலின் ஒரு பக்கம் இயங்க முடியாமல் கஷ்டப்பட்டார்கள். அப்படியிருந்தும் இருவரின் உதவியினால் ஜமாஅத் தொழுகைக்கு சென்று வருவார்கள். நோயாளி வீட்டில் தொழுதுக் கொள்ளலாம் தானே! என்று வினவப்பட்டதற்கு, ஆம் ! வீட்டில் தொழலாம் தான்! ஆனால் தொழுகைக்கு விரைந்து வாருங்கள்! என்று சப்தம் கேட்ட பிறகு நான் வீட்டில் தொழுவது முறையாகுமா? என்று கூறினார்கள்.       நூல்:- அல்கபாஇர் இமாம் தஹபீ

தடுக்கக் கூடாது

அவர்கள் தங்கள் தொழுகையைத் தவறாது தொழுது வருவார்கள்.                  திருக்குர்ஆன்:- 70:23

அகழ் போரின் போது அசர் தொழுகை 'களா' ஆகும் அளவுக்கு போர் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (மலஅல்லாஹு அலைஹிம் புயூத்தஹும் வக்குபூரஹும் நாரன் கமா ஷஙலூனா அனிஸ் ஸலாத்தில் வுஸ்த்தா ஹத்தா ஙாபத்திஷ் ஷம்ஸு) "எதிரிகளின் வீடுகளையும், மண்ணறைகளையும் அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக! ஏனெனில் அவர்கள் சூரியன் மறையும் வரை நடுத்தொழுகை (யான அசர் தொழுகை)யிலிருந்து நமது கவனத்தை திசை திருப்பி விட்டார்கள்" என்று சபித்தார்கள்.                                                                           அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள்  நூல்:- புகாரீ-4111,அபூதாவூத்-346

அருள்மொழி கூறும் அண்ணலாரின் திருநாவு தொழவிடாமல் தடுத்தவர்களுக்கு எதிராக அமில வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

தனது பணியாளர்களையும், அலுவலகங்களில் தனக்கு கீழ் வேலை செய்பவர்களையும் தொழுகை நேரம் வந்த பிறகும்கூட பிறகு தொழுது கொள்! சேர்த்து தொழுது கொள்! முதலில் வேலையை செய்! பிறகு தான் எல்லாம்! என்று கூறி தொழக்கூடியவர்களையும் தொழ விடாமல் தடுக்கக்கூடிய முதலாளிகள், உயர் பதவிகளில் இருப்பவர்கள் அனைவரும் அண்ணலாரின் இந்த சாப வார்த்தைக்கு உரியவர்களேயாகும்.

தொழக்கூடிய பணியாளர்களுக்கு தொழுவதற்கு வசதி செய்து தரக்கூடிய முதலாளிகள் வாழ்க்கையில் அருள்வளம் காண்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கற்ப்பித்தல் அவசியம்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகையை விட்ட மனிதன் அவன் மீது அல்லாஹ் கடுங்கோபம் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வை சந்திப்பான்.                                  அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- பஸ்ஸார், தப்ரானீ, மஜ்மஉஸ் ஸவாயித்

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்கள் குழந்தைகளை ஏழு வயதில் தொழும்படி கூறுங்கள். அவர்கள் பத்து வயதில் தொழாவிட்டால் அடியுங்கள்.                                                                       அறிவிப்பாளர்:- அம்ரு பின் ஷுஐப் (ரலி) அவர்கள்   நூல்:- அபூதாவூத்- 495

இணைவைப்புக்கு அடுத்த மிகப்பெரிய பாவம் தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் பிற்படுத்துவதாகும் என்பது இமாம் இப்னு ஹிஸ்ம் (ரஹ்) அவர்களின் தீர்ப்பாகும்.            நூல்:- அல்கபாஇர் இமாம் தஹபீ

குழந்தைகளின் ஏழு வயதிற்கு முன்பாகவே அவர்களுக்கு தொழுகையின் சிறப்புகளையும், தொழுகைக்குரிய பாடங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும். இவைகளைக் கற்றுக்கொடுத்தப் பிறகும் பத்து வயதில் அந்த குழந்தைகள்  தொழாவிட்டால் அவர்களை அடிப்பதின் மூலம் தண்டித்து அறிவுத்தலாம். குறிப்பிட்ட வயதுக்கு பிறகும் தொழாமல் இருப்பது கடுந்தண்டனைக்குரியக் குற்றமாகும்.

குடும்ப தலைவர் தனது மனைவி மக்களை தொழாத குற்றத்திற்காக அடிக்கலாம் தவறில்லை என்கிறது இஸ்லாம்.

கால தாமதம் வேண்டாம்

குற்றவாளிகளை நோக்கி உங்களை நரகத்தில் புகுத்தியது எது? என்று கேட்பார்கள். அதற்கவர்கள் நாங்கள் தொழவில்லை என்பார்கள்.                                   திருக்குர்ஆன்:- 74:42,43

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தொழுகையை அலட்சியப்படுத்தியவன் மறுமை நாளில் பிர்அவ்ன், ஹாமான், காரூன், உபைய்யி பின் கலப் ஆகிய தீயோருடன் (நரகில்) இருப்பான்.     அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள்              நூல்:- முஸ்னது அஹ்மது, தப்ரானீ, இப்னு ஹிப்பான்

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இந்நால்வர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுக் கூறியதன் காரணம் என்னவெனில் பொருளீட்டல், அதிகாரம் செலுத்துதல், அரசு ஊழியம் செய்தல், வியாபாரம் செய்தல், ஆகியவைகளினால் யாராவது தொழுகையை விட்டிருந்தால் ஆட்சி அதிகாரத்தில் காலத்தைக் கழிப்பவன் பிர்அவ்னுடனும், அரசு ஊழியத்தில் காலத்தைக் கழிப்பவன் ஹாமானுடனும், பொருளீட்டுவதில் காலத்தைக் கழிப்பவன் காரூனுடனும், வியாபாரத்தில் காலத்தைக் கழிப்பவன் உபைய்யி பின் கலப்புடனும் இருப்பர் எனச் சுட்டிக்காட்டுவதற்கேயாகும் என்கின்றனர் அறிஞர்கள்.              நூல்:-அல்கபாஇர் இமாம் தஹபீ

அல்லாமா இக்பால் அவர்களின் கவிதை வரிகள்:-                  "படுக்கையிலிருந்து எழுந்து பள்ளிக்குச்  செல்ல முடியாத நீ....                   கப்ரிலிருந்து எழுந்து சுவனத்துக்குச்செல்ல ஆசைப்படுகின்றாயே?!"

தொழுகையை முறையாகப் பேணாத முஸ்லிம்கள் தான் தொழாமல் இருப்பதற்கு பல காரணங்களைக் கூறுகின்றனர். இப்பொழுது என்ன வயதாகிவிட்டது? முடிகள் நரைக்கட்டும் பிறகு தொழலாம் என்று எண்ணுவோரும் உண்டு. தொழ வேண்டும் என்று ஆசையாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய தொழ முடியாத அளவுக்கு பிசியாக இருக்கிறேன். இந்த வயதில் தான் சம்பாதிக்க முடியும். காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வது தானே புத்திசாலித்தனம் என்று வியாக்கியானம் பேசுவோரும் உண்டு.

பாவத்தைப் போக்கத்தானே பள்ளிக்கு சென்று தொழனும்! நானென்ன பாவமா செய்கிறேன்! பள்ளிக்கு சென்று தொழ! அப்படியே தொழுதாகணும் என்றாலும் நான் மனதுக்குள்ளேயே தொழுது கொள்வேன் என்பது சிலரின் வேதாந்தம்.

நான் தொழுவதற்கு அல்லாஹ்வின் நாட்டம் இன்னும் வரவில்லை. அவனது நாட்டம் வரட்டும் பிறகு தொழுவோம். என்று கிண்டல் அடிப்போரும் உண்டு.

மரணம் என்பது குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், வயோதிகப் பருவம் என அனைத்து நிலைகளிலும் வருகிறது என்பது நாம் அறிந்ததே! மரணத்திற்கு பருவங்களும், காலங்களும் கிடையாது. அது எப்போது யாருக்கும் வேண்டுமானாலும் வரலாம். மரணத்தின் வருகையை மிக துல்லியமாக யாரும் கணிக்க முடியாது.

மனிதன் தயாரிக்கும் பொருட்களுக்கு கலாவதி தேதி (Expire Date) கணிக்க முடியும் உண்டு. ஆனால் மனித உயிர்களுக்கு அதை கணிக்க முடியுமா? பிறகு ஏன்? தொழுகை விஷயத்தில் மெத்தனப் போக்கு?

வேலைப்பளுவால் தொழ நேரமில்லை என்றால் தொழுகை என்பதும் ஒரு முக்கியமான வேலை தான் என்பதை உணர வேண்டாமா? வேலை வெட்டி இல்லாதவர்கள் தான் தொழ வேண்டுமா?

நான் என்ன பாவமா செய்துள்ளேன் தொழுவதற்கு என்றால்? தொழுகையை முறையாகப் பேணி வந்த இறைத்தூதர்கள், நபித்தோழர்கள், நல்லோர்கள் எல்லோரும் பாவிகளா என்ன? தொழுகையைப் பேணாமல் இருப்பதே பெரும் பாவம் என்பதை உணர வேண்டாமா?

அல்லாஹ்வின் நாட்டம் என்பது விலை கொடுத்து வாங்கிக் கொள்ளும் கடைசரக்கா? என்ன? அல்லது புதையலா என்ன? திடீரென கிடைப்பதற்கு? யோசிக்க வேண்டாமா? அப்படியல்ல! தொழுகையை முறையாகப் பேணி இறையன்பைப் பெற வேண்டும் என்று நாம் நாடினால் தான் அல்லாஹ்வும் நாடி அதற்கு உதவி புரிவான் என்று விளங்க வேண்டுமே?

மனிதர்கள் (தங்கள் தீய நடத்தையைவிட்டு) தங்களை மாற்றிக் கொள்ளாத வரையில் நிச்சயமாக அல்லாஹ்வும் (அவர்களை) மாற்றி விடுவதில்லை.                                         திருக்குர்ஆன்:- 13:11

ஆரோக்கியம்

அமெரிக்காவில் உள்ள பின்ஹாம்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் முஹம்மது கஸாவென் கூறுகிறார். தொழுகை முறையின் ஒவ்வொரு அசைவுகளும் யோகா மற்றும் உடற்பயிற்சி முறைகளையே வெளிப்படுத்துகின்றன. இந்த முறையை தினமும் பின்பற்றும் போது முதுகு வலி குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

மேலும் தரையில் தலை வைத்து வணங்கும் முறை லோவர் பேக் பெயின், மூட்டு மற்றும் தசைப் பகுதிகளில் உள்ள வலிகள் குணமடைவதற்கு உதவுகின்றன. அதேப்போன்று உடலமைப்பு முறையிலும் நல்ல ஒரு மாற்றம் ஏற்படுகின்றன என்கிறது ஒரு ஆய்வு.

Dr.அர்னால்டு எஹ்ட், Dr. சூ, மற்றும் மாக்குலிஸ் ஆகியோர் தொழுகை முறைகள் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை பரிசுத்தமாக்கி புத்துணர்வு அடையச் செய்கின்றன என தெரிவிக்கின்றனர்.

Dr. காரிகார் மைக்கேல் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் சரியாவதற்கு தொழுகை முறைகள் சிறந்த நவீன உடற்பயிற்சியாக இருக்கின்றன என்கிறார்.

தொழுகையில் நெற்றி, இருகைகள், இரண்டு மூட்டு கால்கள், இரண்டு கால்கள், ஆகிய ஏழு உறுப்புகள் பூமியில் படுமாறு சஜ்தா செய்ய வேண்டும் (மண்டியிட்டு வணங்க வேண்டும்) என்பது மார்க்கச் சட்டம்.

தொழுகையின்போது தரை மீது தொடர்பு கொள்ளும் ஏழு உறுப்புகள் காந்த ஈர்ப்பு சக்தி பெறுகிறது. பூமி காந்த கதிர்களை நமது உடலில் உள்ள சிகப்பணுக்களுக்கு செலுத்துகிறது. இதன் பயனாக இரத்தத்தின் கழிவுகள், யூரிக் அமிலம் ஆகியவை வெளியேற்றப்படுகின்றன. சுவாச உறுப்புகள் நன்றாக வேலை செய்கின்றன. காற்றிலுள்ள மின்சக்தி அயான்கள் (நேர்மின் அயான்கள், எதிர்மின் அயான்கள்) உடலுக்கு வேண்டிய மின்சக்தியை நுரையீரலுக்கு வழங்குகின்றன. அவைகள் நுரையீரல் திசுவின் நரம்புகள் மீது ஊடுருவிச் சென்று மத்திய நரம்பு மண்டலத்தையும், மூளையையும் சுறுசுறுப்படைய செய்து நல்ல நிலையில் செயல்படத் தூண்டுகின்றன.  உடல் பலகீனத்தைப் போக்கும் மின்சக்தி பெற தொழுகை சிறந்த பயிற்சியாக திகழ்கிறது.

எனவே எல்லா வகையிலும் நலவைத் தருகின்ற தொழுகையை நேரம் தவறாமல் முறையாக பேணி தொழக்கூடிய நற்பாக்கியத்தை நமக்கு இறைவன் தந்தருள்புரிவானாக! ஆமீன்!

மௌலவி, மு. முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை,  சென்னை.

 

பிரியமானவள்

 

பிரியமானவள்

وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌوَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ


ஆயினும் ஆண்களுக்கு பெண்களைவிட ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவனும், நுண்ணறிவு உடையவனுமாக இருக்கிறான்.           திருக்குர்ஆன்:- 2:228


பெண் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளைத் தேடும்போதே பெற்றோர், உடன்பிறந்தவர்கள், நெருங்கிய உறவினர்கள், மற்றும் திருமணத்தால் முந்திவிட்ட அவளது தோழிகள் போன்றோர் அவளுக்கு மார்க்க அறிவுரைகளையும் மற்றும் குடும்ப வாழ்க்கையில் தன்னுடைய அனுபவப் பாடங்களில் நல்லவற்றையும் எடுத்துரைக்க வேண்டும்.


பக்குவம் வேண்டும்


ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் (கன்னிப் பெண்ணை தவிர்த்து) ஒரு விதவைப் பெண்ணை தான் மணமுடித்தேன். அதற்கு காரணம் என்னவென்றால் என் தந்தை (உஹது போரில்) இறந்து விட்டார். (அவர் இறக்கும் போது) ஏழு பெண் பிள்ளைகளை விட்டுச் சென்றுள்ளார். வயதில் அந்த பெண் பிள்ளைகளைப் போன்ற ஒரு (இளம் வயது) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்து செல்வதை நான் விரும்பவில்லை. ஆகவே நான் அவர்களைப் பாராட்டி சீராட்டி வளர்க்கும் (அனுபவமுள்ள) ஒரு பெண்ணை மணந்து கொண்டேன் என்றார்.


இதை செவியுற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பாரக்கல்லாஹு லக்க அவ் கைரன்) "அல்லாஹ் உனக்கு அருள்வளம் புரிவானாக! அல்லது நன்மையைப் பொழிவானாக!" என்று கூறினார்கள்.      நூல்:- புகாரீ-5367, முஸ்லிம்-2908


ஜாபிர் (ரலி) அவர்கள் தம் சகோதரிகளை சீராட்டி வளர்க்கின்ற பக்குவமுள்ள ஒரு விதவைப் பெண்ணை மணமுடித்து கொண்டார்கள். அதை வரவேற்று ஜாபிர் (ரலி) அவர்களின் நல்வாழ்வுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். கணவரின் சகோதரிகளை வளர்த்து ஆளாக்குவதில் மனைவி கணவனுக்கு ஒத்துழைப்பது ஓர் நற்செயல் என்பது தெளிவாகிறது.


மேலும் ஒரு பெண் ஒருவனுக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டு செல்லும் போது அங்கு ஏற்கனவே கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த பிள்ளைகள் இருந்தால், அவர்களை வளர்ப்பதிலும் கணவருக்கு ஒத்துழைப்பது ஓர் நற்செயலாகும். அப்பிள்ளைகளிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் விரோதமாக நடந்து கொள்ளக் கூடாது.  அது தன் மீது கணவருக்கு வெறுப்பு ஏற்பட காரணமாகி விடும்.


பெரியவர்கள்


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல்பரக்கத்து மஅ அகாபிரிக்கும்) உங்களுடைய பெரியவர்களிடம் (பரக்கத்) அருள்வளம்  உள்ளது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்           நூல்:- ஹாகிம்


எவருடைய வயது அதிகமாக இருந்து, அதன் காரணமாக நன்மைகளும் அதிகமாக இருக்குமோ அதில் நலவும் அருள்வளமும் இருக்கிறது என்பது நபிமொழியின் கருத்து.


"அம்மிக்கு குழவி முக்கியம். வீட்டுக்கு கிழவி முக்கியம்" என்பது கிராமத்து சொல் வழக்கு.


ஒரு பெண்ணுக்கு வீட்டு பெரியவர்களான மாமனார், மாமியார் சேர்ந்து வாழ்வதில் பாதுகாப்பும், அருள்வளமும் கிடைக்கப் பெறலாம். மேலும் கணவரின் பெற்றோருக்கு செய்யும் பணிவிடையின் மூலம் கணவரின் முழு அன்பையும் பெறலாம். கணவருக்கு அவரது பெற்றோரின் பொருத்தத்தில் சொர்க்கம் இருக்கிறது. மனைவிக்கு அவளது கணவரின் பொருத்தத்தில் சொர்க்கம் இருக்கிறது. இதில் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கிறது. இதை இல்லதரசிகள் உணர வேண்டும்.


கணவரின் பெற்றோருடன் வாழும் பெரும்பாலான பெண்கள் தனது மாமனார், மாமியாருக்கு பணிவிடை செய்வது குறைவு. பணிவிடை செய்யும் பெண்கள் அதை திருப்தியாக செய்வது மிகக் குறைவு. சில புதுமணப் பெண்கள் திருமணம் முடிந்த கையோடு குடும்பத்தில் அது இது குறை என்று கூறி தன் மாப்பிள்ளையை தனி குடித்தனத்திற்கு அழைத்து செல்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.


ஏதோ தன் மாப்பிள்ளை வானத்திலிருந்து நேரடியாக குதித்து, தன்னை மணமுடித்து கொண்டதைப் போல் எண்ணலாமா? தனக்கு மட்டும் உரிமைக் கொண்டாடக்கூடிய பொருளா இவன்? மாமனார், மாமியார் பெற்று வளர்த்து ஆளாக்காமலா இவன் வாலிபனானான்? என்றெல்லாம் புதுப்பெண் புரிந்து கொள்ள வேண்டுமே!


மருமகளாக வருபவள் புகுந்த வீட்டிலுள்ள மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோருடன் நற்பண்புகளுடன் நடந்து கொள்ள வேண்டும். தனிக்குடித்தனம் வா! என்று கணவரிடம் வம்பு செய்யக் கூடாது. அதனால் கணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவளை வெறுக்கக்கூடும்.


தனிகுடித்தனம் எனும் பெயரில் கணவனை அவன் பெற்றோரிடமிருந்து பிரிப்பது இரக்கமற்ற செயல் என்பதை பெண் விளங்க வேண்டும். புதிதாக திருமணமான ஒரு பெண் தன் கணவனைவிட அவனது பெற்றோரை பெரிதும் கவர்ந்து இழுத்துக் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் உரிமையை உணர்ந்த பெண்கள் நற்பெயருடன் காலத்தை ஓட்டுகிறார்கள். அதை நினைத்து கணவன் வெளியில் விரும்பாதது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளூர மிகவும் விரும்புவான்.


பணிவிடை புரிதல்


ஒருமுறை அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து "நாயகமே! இதோ (உங்கள் அன்பு மனைவி) கதீஜா (ரலி) அவர்கள் தம்முடன் ஒரு பாத்திரத்தில் உணவு எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும், என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் உயர்தரமான முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்  நூல்:- புகாரீ-3820, முஸ்லிம்


இந்த நிகழ்வு அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் இருக்கும் போது நடந்ததாகும் என இப்னு ஹஜர் அஸ்கலானீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.


ஐம்பது வயதை கடந்துவிட்ட ஒரு பெண்ணான கதீஜா (ரலி) அவர்கள் மிக உயர்ந்த மலையிலுள்ள ஒரு குகைக்கு தலையில் உணவு பாத்திரத்தை சுமந்தவாறு கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து சென்று அதனால் ஏற்படும் சிரமங்களை சகித்துக் கொண்டு தனது அன்பு கணவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு உணவு கொடுக்க சென்றுள்ளார்கள். காரணம் தனது அன்பு கணவருக்காக பல சிரமங்களை சகித்துக்கொண்டு பணிவிடை செய்வதை பாக்கியமாக கருதினார்கள் என்பதில் சந்தேகமில்லை.


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு பெண் தன் கணவனின் உரிமையை அறிந்து கொண்டால், அவன் தன் பகல் உணவையோ, இரவு உணவையோ சாப்பிட்டு முடிக்கின்ற வரை (அவள்) சாப்பிட அமரமாட்டாள்.   அறிவிப்பாளர்:- முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள்  நூல்:- தப்ரானீ, பஸ்ஸார்


ஒரு பெண் தன் கணவருக்கு பணிவிடை செய்வதை பாக்கியமாக கருதி செயல்பட்டால் அவளுக்கு இல்லற வாழ்க்கை இன்பமாகவும், மறுமை வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமையலாம். மேலும் அல்லாஹ்வின் அன்பும், அருளும் கிடைக்கலாம்.


ஒரு பெண் தன் கணவனின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதை  தன்னால் இயன்ற அளவுக்கு அவனுக்கு பணிவிடை செய்வதில் ஆர்வம் காட்டுவதின் மூலம் நிரூபிக்க வேண்டும்


உதவி ஒத்தாசை


பத்ரு போரில் கைதானவர்களில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மருமகன் (அதாவது அண்ணலாரின் மூத்த மகள் ஸைனப் - ரலி அவர்களின் கணவர்) அபுல் ஆஸ் அவர்களும் ஒருவராவார். அவர் விடுதலை பெறுவதற்காக மக்காவில் இருந்து அவரது மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் தனது தாய் கதீஜா (ரலி) அவர்கள் தனக்கு அன்பளிப்பு அளித்த தங்க கழுத்து மாலையை ஈட்டுத் தொகையாக கொடுத்து அனுப்பினார்கள்.    நூல்:- அர்ரஹீகுல் மக்தூம்


ஸைனப் (ரலி) அவர்கள் தனது கணவருக்கு பொருளாதார பிரச்சனை என்று செய்தி அறிந்ததும் தன் தாயின் நினைவாக தன்னிடம் இருந்த உயர்ந்த பொருளான அந்த தங்க கழுத்து மாலையை கொடுத்து அனுப்பி கணவரின் நெருக்கடியை நீக்கினார்கள்.


கணவனுக்கு ஏதேனும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது மனைவி அவளிடம் இருக்கும் காசு பணங்களையும், நகைகளையும் கொடுத்து கணவனுக்கு உதவி ஒத்தாசை செய்ய வேண்டும். இதற்காக அவள் தனது பெற்றோரிடம், உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களிடம் உதவி கேட்கலாம் தவறில்லை.


கதீஜா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணமுடிக்கும்போது பெரும் செல்வ சீமாட்டியாக இருந்தார்கள். அம்மையார் பொருளாதாரத்தில் உயர்ந்திருந்த போதிலும், தனது கணவரிடம் கர்வமாக நடந்து கொண்டதில்லை. தனது அன்பு கணவருக்காக பொருளாதாரம் அனைத்தையும் தியாகம் செய்தார்கள். அம்மையார் இறுதி நாட்களில் உணவுக்கும்கூட சிரமப்பட்டார்கள். அப்போது கூட அம்மையாருக்கு தனது அன்பு கணவர் மீது கடுகு அளவுகூட வெறுப்பு ஏற்பட்டதில்லை. அவர்கள் தனது அன்பு கணவருக்கு எல்லா விதத்திலும் உதவி செய்து அன்பிற்கும், கண்ணியத்திற்கும் மிக பெரும் சான்றாக விளங்கினார்கள். இதனால் தான் அண்ணலார் தம் வாழ்நாள் முழுவதும் அம்மையாரை நினைவு கூர்ந்து கொண்டே இருந்தார்கள்.


கணவன் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும்போது, மனைவி எனக்கு என்ன வந்தது? என்றும், அல்லது என் வீட்டார் எனக்கு சீதனமாக கொடுத்த நகைகளை கொடுத்து உதவ முடியாது என்றும் கணவன் மீது அக்கறையின்றி இருப்பது இல்லற வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தும். கணவனுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்த பின்னர் அதை சொல்லிக் காட்டுவதும், அல்லது கணவனை மதிக்காமல் ஏளனம் செய்வதும் தவறாகும்.


நச்சரிக்கக் கூடாது


ஒருமுறை அலீ (ரலி) அவர்கள் தனது அன்பு மனைவி பாத்திமா (ரலி) அவர்களிடம் "உனக்கு ஏதேனும் சாப்பிட விருப்பம் உள்ளதா? வேண்டுமெனில் சொல்! நான் வாங்கித் தருகிறேன்" என்றார்கள்.


அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள் நமது திருமணத்தில் உங்களிடம் என்னை அனுப்பும்போது எனது தந்தை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் "மகளே! உனது கணவரிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டு தொல்லை கொடுக்காதே. உனது ஆசை அபிலாசைகளை அல்லாஹ்விடமே கேட்டு வாங்கிக் கொள்!" என்று உபதேசம் செய்துள்ளார்கள். அதனால் எனக்கு வேண்டியதை அல்லாஹ்விடமே கேட்டு வாங்கிக் கொள்கிறேன். எனக்காக தாங்கள் சிரமப்பட வேண்டாம் என்று அன்பாகக் கூறிவிட்டார்கள்.


மனைவி கணவனிடம் அதை இதை வாங்கி தா! என்று நச்சரித்து அவனை துன்பத்தில் ஆழ்த்துவது இஸ்லாமிய பெண்ணுக்கு அழகல்ல. ஒரு பெண் தன் கணவனிடம் அது இது வேண்டும் என்று கேட்பதற்கு முன் கொஞ்ச நேரம் யோசிக்க வேண்டும். அந்த பொருள் நமக்கு தேவைதானா? அந்த பொருள் இல்லாமல் வாழ முடியாதா? அப்படி வாங்கினால் நிஜமாகவே அது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா? என்றெல்லாம் மனதுக்குள் அலச ஆரம்பித்தாலே தேவையில்லாத பொருட்களை வாங்கி வீட்டில் குவிப்பது குறையும். காசும் நிறைய மிச்சமாகும்.


ஒரு பெண் தான் நினைத்ததை வாங்கியே ஆக வேண்டும் என்ற எண்ணம் தான் அவளுடைய கணவனை கடன், வட்டி மற்றும் தவறான பாதையில் விழ செய்கிறது. இதில் விழுந்த கணவன் சில நேரங்களில் எழ முடியாமல் சிரமப்படுகிறான். தவறான வழியில் வரும் வருமானத்தால் இல்லறத்தில் இன்பம் காண முடியாது.


"விரலுகேற்ற வீக்கம் வேண்டும்" என்று தமிழ் பழமொழி. இதை உணர்ந்து கணவனின் வரவு அறிந்து செலவு செய்தால் அவளே சிறந்த மனைவியாவாள்.


தேவைக்காக அழைக்கும்போது


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் தம்முடைய மனைவியை படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்து விட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.  அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்   நூல்:- புகாரீ-5194, முஸ்லிம்-2829


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒட்டகத்தின் மீது (பயணத்திற்காக) அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணை அவளது கணவன் (உடலுறவுக்காக) அழைத்தாலும் அவள் அதை மறுக்கக்கூடாது. (உடனே அதற்கு இணங்க வேண்டும்)          அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1843, முஸ்னது அஹ்மது


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவன் தன் மனைவியைத் தன் தேவைக்காக அழைத்தால் அவள் அடுப்பில் வேலை செய்து கொண்டிருந்தாலும் அவள் அவனிடம் செல்ல வேண்டும்.             அறிவிப்பாளர்:- தல்க் பின் அலீ (ரலி) அவர்கள்    நூல்:- நசாயீ, முஸ்னது அஹ்மது


ஒருவன் தன் மனைவியை படுக்கைக்கு அழைக்கும்போது சரியான காரணமின்றி மறுத்து வெறுத்தால் கணவன் கோபமடைவது இயல்பு. தாம்பத்திய உறவுக்கு பெரும்பாலும் கணவனிடமிருந்தே முதல் முயற்சி தொடங்கும்.


கணவனுக்கு மனைவி மீது ஏற்படும் நியாயமான ஆசைகள் மனைவியால் மறுக்கப்பட்டால் அதன் பின்விளைவுகள் விபசாரம், அந்நிய பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் என விபரீத விளைவுகளை தூண்டும் அபாயம் ஏற்படும். எனவே தம்பதியருக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தாலும் அதற்காக பழி தீர்க்க எண்ணி படுக்கையை வெறுப்பது கூடாது என்று இஸ்லாம் போதிக்கிறது.


தனக்கும் தனது கணவனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படும் போது பெரும்பாலான பெண்கள் அவனை தண்டிப்பதாக எண்ணிக் கொண்டு அவனுக்கு இல்லற சுகத்தை கொடுக்க மறுத்து விடுகின்றனர். சில வேளை இதனால் பெரும் தீங்குகள் ஏற்படும். அதாவது கணவன் தவறான வழிக்கு சென்று விடலாம். அவன் விவகாரத்தைப் பற்றி சிந்திக்கும் மனநிலைக்கு வந்து விடலாம். கணவன் அவளுக்கு எதிராக இன்னொருத்தியை மணப்பதைப் பற்றி வினயமாக சிந்திக்கத் தலைபடலாம்.


இதனால் தான் கணவன் மனைவியை படுக்கைக்கு அழைக்கும்போது அதற்கு கீழ்படிந்து விரைவாக அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வது மனைவியின் மீது பெரும் கடமையாகும்.


கற்பை காத்துக்கொள்வது தான் திருமணத்தின் முக்கிய நோக்கமாகும். எனவே ஒருவன் தன்னுடைய காம உணர்வைத் தணித்துக்கொள்ள மனைவியிடம் மட்டுமே சென்று தன் கற்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் இயம்புகிறது. ஆனால் மனைவி கணவனுக்கு இணங்க மறுத்தால் அவள் வானவர்களின் பெரும் சாபத்திற்கு ஆளாகிவிடுவாள்.


கணவன் தன் மனைவி மாதவிடாய், பிரசவத்தீட்டு உள்ளவளாகவோ, நோயாளியாகவோ, நிறைமாத கர்ப்பிணியாகவோ அல்லது வேறு ஏதேனும் துக்கத்திலோ, மன புளுக்கத்திலோ இருந்தால் இது போன்ற நிலைகளில் அவளை இல்லற சுகத்திற்கு நிர்பந்திக்கக் கூடாது. சூழ்நிலை கருதி கணவன் பொறுமையாக இருக்க வேண்டும்


மனஸ்தாபங்கள்


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எந்தப் பெண் தன் கணவர் தன்மீது மனநிறைவு கொண்டிருக்கும் நிலையில் இறக்கிறாளோ அந்தப்ப பெண் சொர்க்கம் செல்வாள்.   அறிவிப்பாளர்:- உம்மு சல்மா (ரலி) அவர்கள்     நூல்:- திர்மிதீ-1081


ஒருமுறை அலீ (ரலி) அவர்களுக்கு அவரது மனைவி பாத்திமா (ரலி) அவர்களுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. உடனே அலீ (ரலி) அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி பள்ளிவாசலுக்கு வந்து படுத்துவிட்டார்கள். அந்நேரத்தில் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமா (ரலி) அவர்கள் வீட்டுக்கு வந்தார்கள். அம்மையாரிடம்  தனது மருமகனைப் பற்றி விசாரித்தபோது அம்மையார் அண்ணலாரிடம் நடந்ததை எடுத்துரைத்துவிட்டு தனது கணவர் பள்ளிவாசலில் இருப்பார் என்று கூறினார்கள்.


அண்ணலார் பள்ளிவாசலுக்கு சென்ற போது அங்கு அலீ (ரலி) அவர்கள் தனது முதுகில் மண் ஒட்டிக்கொண்டிருக்கும் நிலையில் படுத்திருந்தார். அப்போது அண்ணலார் (இஜ்லிஸ் யா அபாதுராப்) "எழுந்து அமருங்கள் அபூதுராப் (மண்ணின் தந்தை) அவர்களே!" என்று கூறினார்கள். பிறகு அண்ணலார் அலீ (ரலி) அவர்களை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.


பிறகு தம்பதியரை அமர வைத்து தனது அருமை மகளை நோக்கி "மகளே! உனது பேச்சால் புண்பட்டுப் போயிருக்கும் உன் கணவரிடம் மன்னிப்பு கேள்! உன் கணவர் அதிருப்தி கொண்ட நிலையில் உனக்கு மரணம் வந்துவிடுமாயின் நீ சொர்க்கத்தின் நறுமணத்தைக்கூட நுகர்ந்து பார்க்க இயலாதவளாய் ஆகியிருப்பாய்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்" எச்சரித்தார்கள்.


தம்பதியர் இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வருவது இயற்கையே! அது பெரும் பிரளயமாக மாறும் அளவுக்கு விட்டு விடக்கூடாது. உடனுக்குடன் அவர்களுக்குள் சமாதானமாகிவிட வேண்டும். அல்லது அவர்களின் குடும்பப் பெரியவர்கள் ஒன்று சேர்ந்து அவர்களை சமாதானப்படுத்த வேண்டும்.


அவ்வப்போது எழும் மனஸ்தாபங்களை ஊதி பெரிதாக்கி வேடிக்கை பார்க்கக் கூடாது. ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்வதே வசந்தமான வாழ்க்கையாகும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். சுருங்கக்கூறின் கணவனின் பொருத்தத்தில் இறைவனின் பொருத்தமும், சொர்க்கமும் இருக்கிறது என்பதை மனைவி கவனத்தில் கொள்ள வேண்டும்.


நல்லுபதேசம்


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (என்னைப்பற்றி அவதூறு பரவியதை என் கணவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாயிலாக நான் செவியுற்றதும் அதை நினைத்து என் வீட்டுக்கு வந்து) நான் அழுதேன். என் தந்தை வீட்டின் மேல் பகுதியில் இருந்து (குர்ஆன்) ஓதிக்கொண்டிருந்தார். என் அழும் குரல் கேட்டு கீழே இறங்கி வந்து என் தாயிடம் ஆயிஷாவுக்கு என்ன ஆனது? என்று வினவினார். அவளுக்கு (அவதூறு) விஷயம் தெரிந்து விட்டது. (அதனால் அழுகிறாள்) என்று என் தாய் பதிலளித்தார்.


அப்போது (என் தந்தையின்) கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. "என் அருமை மகளே! நீ உன் வீட்டுக்கே திரும்பிச் செல்ல வேண்டும்" என்று சத்தியமிட்டு கூறினார். நான் (நபியின் வீட்டுக்கு) திரும்பி விட்டேன்.  நூல்:- திர்மிதீ-3180


ஒரு பெண் தன்னுடைய கணவன் வீட்டில் தனக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அதை தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு வந்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தான் சொல்லி புலம்புவாள். இது உலக நடைமுறை.


அப்போது அவளின் பெற்றோர் அல்லது உறவினர்கள் என்ன பிரச்சனை என்று தீர விசாரிக்க வேண்டும். அதன் பிறகு அவளுக்கு புத்திமதி சொல்லி அவளுடைய கணவன் வீட்டுக்கே அவளை கொண்டு போய் விடவேண்டும்.


தன் மகள் சொல்வதை நம்பிக்கை கொண்டு ஒருதலை பட்சமாக சிந்தித்து இனிமேல் அந்த கொடுமைக்காரனின் வீட்டுக்கு போக வேண்டாம் மகளே! உனக்கு நாங்கள் இருக்கிறோம் என்றெல்லாம் சொல்லி அவளை மேலும் உசுபேத்திவிடக்கூடாது. பிரச்சனை என்று பிறந்த வீட்டுக்கு வந்த பெண் பிள்ளையை, பெற்றோர் நீண்ட நாட்களாக தன் வீட்டிலேயே அவளை தங்க வைத்துக் கொண்டால் தன் மகள் வாழ்க்கை தான் பாழாய் போகும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.


மனைவி தன்னுடைய கணவனின் நல்ல கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு அவனுக்கு பிரியமானவளாக ஆக வேண்டும். அப்போது தான் அவள் சிறந்த இல்லதரசி ஆவாள். இல்லறத்தில் மனைவியின் கடமை மற்றும் கணவனின் உரிமை ஆகியவற்றை மணப்பெண்ணுக்கு திருமணத்திற்கு முன்பும் பின்பும் அவளைச் சேர்ந்தவர்களால் போதிக்கப்பட வேண்டும்.


இஸ்லாம் கூறும் நல்லுபதேசங்களை ஏற்று செயல்படுத்துவோரே சிறந்த முஸ்லிம் ஆவார். அல்லாஹ் நம்மை சிறந்த முஸ்லிம்களாக வாழச் செய்வானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...