Search This Blog

Sunday, 30 November 2025

குறைகளை ஏற்றுக்கொள்வோம்

 

குறைகளை ஏற்றுக்கொள்வோம்

 

وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضَّالِّينَ

(ஃபிர்அவ்ன்), "நீர் செய்(ய தகா)த ஒரு காரியத்தையும் செய்தீர். (நான் உன்னை வளர்த்த உபகாரத்திற்கு) நீர் நன்றி கெட்டவராகவே இருக்கிறீர்" என்றான். அதற்கு (மூசா நபியவர்கள்), "நான் அறியாதவனாக இருந்த நிலையில் அதை செய்தேன்" என்று கூறினார். திருக்குர்ஆன்:- 26:19,20

 

மனிதன் நிறைகுறைகள் நிறைந்தவன். வினோதம் என்னவென்றால் நம் குறைகள் நமக்கு தெரிவதில்லை. எனவே, ஒவ்வொருவரும் தமது குறைகள், பலவீனங்கள், பலம் ஆகிவற்றை ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுதல் அவசியம். குறைகளையும், பலவீனங்களையும் அறிந்தால் தான் அவற்றை களைய முடியும். பலம் எது என்று தெரிந்தால் தான் அதை மென்மேலும் வளர்த்துக்கொள்ள முடியும்.

 

நம்முடைய தவறை பிறர் சுட்டிக்காட்டும்போது அதை உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும். நாம் தவறிழைத்துவிட்டால் "தெரியாமல் நடந்துவிட்டது; அறியாமல் செய்துவிட்டேன்; அடுத்தமுறை திருத்திக்கொள்கிறேன்; மன்னித்துவிடுங்கள்" என்று பணிந்து சொல்வதால், நமது மதிப்பும் மரியாதையும் எந்த விதத்திலும் குறைந்துவிடாது.

 

தவறை உணர்ந்த பின்பு வெளிப்படையாக ஏற்கத் துணிவில்லாமல் அதை நியாயப்படுத்திக்கொண்டே இருப்பது தான் பெரும் தவறாகும் என்கிறது இஸ்லாம்.

 

அறியாதவனாக செய்தேன்

 

மூசா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னின் வளர்ப்பு மகனாக இருந்த காலத்தில் எளியவனை வலியவனொருவன் அநியாயமாக தாக்கிக் கொண்டிருப்பதை காண நேர்ந்தது. அதனால் மூசா (அலை) அவர்கள் கொதித்தெழுந்தார்கள். எளியவனுக்கு உதவுவதற்காக வலியவனை ஓங்கி குத்தினார்கள். எதிர்பாரா விதமாக குத்துப்பட்டவன் வலி தாங்காமல் இறந்துபோனான்.

 

பிற்காலத்தில் இறைத்தூதர் என்றானபோது ஃபிர்அவ்னிடம் நபியவர்கள் மூசா (அலை) அவர்கள் ஏகத்துவத்தை எடுத்துரைக்க வந்தபோது இந்நிகழ்ச்சியை நினைவுப்படுத்தினான். அப்போது மூசா (அலை) அவர்கள், "அந்த பாவச்செயலை நான் அறியாதவனாக இருந்த நிலையில் செய்துவிட்டேன்" என்று கூறி தனக்கு நேர்ந்துவிட்ட தவறை உணர்ந்து மறுத்து பேசாமல் ஒப்புக்கொண்டார்கள். இதைத்தான் தலைப்பில் காணும் திருவசனம் கூறுகிறது.

 

இறைத்தூதர்கள் போன்ற நல்லோர்கள் பழக்கம் குறைகளைச் சுட்டிக்காட்டினால் அதை ஒப்புக்கொள்வார்கள். ஆனால் நம்ரூத், ஃபிர்அவ்ன், அபூஜஹ்ல் போன்ற தீயவர்களிடம் அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தவறுகளை சுட்டிக்காட்டியவரின் வாயை அடைக்க என்ன வழி? அல்லது அவர்களின் மூச்சை நிறுத்த என்ன வழி? என்று சிந்திப்பார்கள்.

 

அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். என்னுடைய குறைகளை நீங்கள் சுட்டிக்காட்டாவிட்டால் உங்களிடமிருந்து எனக்கு எந்தவித நன்மையும் இல்லை. அப்படி உங்களால் எனது குறைகளை சுட்டிக்காட்டப்பட்டு அதனை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்னிடமிருந்து உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

 

நியாயமான கூற்று

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்  கூறியதாவது. (வீட்டுக்குள் இருந்த நபிகள் நாயகம் - ஸல் அவர்களின் புனித உடலை பார்த்துவிட்டு) அபூபக்ர் (ரலி) அவர்கள் வெளியே வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் (நபியவர்கள் இறக்கவில்லை என்று கோபமாக) பேசிக் கொண்டிருந்தார்கள். இதைக்கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், ( اِجْلِسْ يَا عُمَرُ ) "உமரே! அமருங்கள்" என்று கூறினார்கள்  உமர் (ரலி) அவர்கள் அமர மறுத்தார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களை நோக்கி! இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "முஹம்மத் (நபி) ஓர் தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக்கூடிய இறைவன்) அல்லர். அவருக்கு முன்பும் இவ்வாறே பல தூதர்கள் சென்றிருக்கின்றனர்." (திருக்குர்ஆன்:- 3:144) என்ற வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள்.

 

உடனே உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ( وَاللَّهِ مَا هُوَ إِلاَّ أَنْ سَمِعْتُ أَبَا بَكْرٍ تَلاَهَا فَعَقِرْتُ حَتَّى مَا تُقِلُّنِي رِجْلاَىَ، وَحَتَّى أَهْوَيْتُ إِلَى  الأَرْضِ حِينَ سَمِعْتُهُ تَلاَهَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدْ مَاتَ ) அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்கள் இந்த வசனத்தை ஓத நான் கேட்டபோதுதான், அது என் நினைவுக்கே வந்தது. எனவே, அதிர்ச்சியடைந்தேன். அப்போது என் கால்களால் என் (உடல்) சுமையையே தாங்க முடியவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்கள் ஓதிக்காட்டிய இவ்வசனத்தைக் கேட்டு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்துவிட்டேன். நூல்:- புகாரீ-4454  

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சியில் இரவு காலங்களில் நகர்வலம் வரும்போது ஒரு வீட்டிலிருந்து இன்னிசை கேட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள் சந்தேகப்பட்டு அந்த வீட்டின் சுவரை ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்தார்கள். அங்கு பாடல் இசைத்தபடி ஒரு மனிதரும் அவர் அருகே மது புட்டியும் ஒரு மங்கையும் இருப்பதை கண்டு கோபமடைந்தவர்களாக, "அல்லாஹ்வின் விரோதியே! உன்னை அல்லாஹ் பார்க்கவில்லை என்று எண்ணிக்கொண்டாயா?" என்று கேட்டார்கள்.

 

அதற்கு அம்மனிதர், "உமரே! நான் சில விஷயத்தில் அல்லாஹ்வுக்கு மாறுசெய்கிறேன். நீரும் சில விஷயத்தில் அல்லாஹ்வுக்கு மாற்றம் செய்துவிட்டீரே!" என்று கூறினார்.

 

"வீடுகளுக்கு செல்வதாக இருந்தால் அவைகளின் தலைவாசல்கள் வழியே செல்லுங்கள்" (2:189) என்பது இறைவசனம். ஆனால், நீங்களோ வீட்டின் தலைவாசல் வழியாக வராமல் வீட்டின் சுவரேறி குதித்து உள்ளே வந்து விட்டீர்கள்.

 

"பிறர் வீட்டுக்கு செல்லும்போது வீட்டினருக்கு சலாம் கூற வேண்டும். அனுமதி பெறாமல் நுழையக்கூடாது" (24:27) என்பது இறைவசனம். அதற்கு மாற்றமாக நீங்களோ எனக்கு சலாம் கூறவில்லை. என்னிடம் அனுமதியும் பெறவில்லை" என்று அம்மனிதர் உமர் (ரலி) அவர்களின் சில குறைகளை எடுத்துரைத்தார். 

 

இவரின் கூற்றில் நியாயம் இருப்பதை உமர் (ரலி) அவர்கள் உணர்ந்து தனது தவறை எண்ணி வேதனைப்பட்டார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் அம்மனிதரை நோக்கி! "நண்பரே! நான் எனது தவறை உணர்ந்துகொண்டேன். நீயும் உனது தவறை உணர்ந்து மனம் வருந்தி, திருந்திவிடு!" என்று கூறினார்கள். நூல்:- கன்ஸுல் உம்மால்

 

உமர் (ரலி) அவர்கள் அம்மனிதரின் தீய செயலை திருத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு நுழைந்தபோது அம்மனிதர் உமர் (ரலி) அவர்களின் இச்செயல் தவறாகும் என்பதற்கு இறைவசனங்களை சான்றாகக் கூறி உள்ளத்தை நெகிழ வைத்துவிட்டார்.

 

எவராக இருந்தாலும் சரி, அவர்கள் சொல்வது சரியானதாக இருக்குமானால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தவறாக இருக்குமானால் விட்டுவிடலாம்.

 

இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொல்வதை மட்டும் எவ்வித கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் நபித்தோழர்கள் மார்க்க விஷயங்கள் குறித்து அவ்வப்போது விவாதம் செய்வார்கள். குர்ஆன் மற்றும் நபிமொழிகளிலிருந்து அதற்குரிய ஆதாரங்களை எடுத்துரைப்பார்கள். அப்போது அவர்களின் விவாதங்களையும் ஆதாரங்களையும் உமர் (ரலி) அவர்கள் ஏற்றுக்கொண்டு தன்னுடைய சொல் மற்றும் செயலில் தவறு ஏற்பட்டிருந்தால் உடனே திருத்திக் கொள்வார்கள்.

 

உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். எவர் என் குறைகளை என் முன் எடுத்துக்காட்டுகிறாரோ அவரே என் நண்பர் ஆவார். எவர் என் முன்னால் என்னைப் புகழ்கிறாரோ அவர் என் கழுத்தை அறுப்பவர் போன்றவராவார்.

 

கண்ணாடியாய் இருப்போம்

 

மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். திருக்குர்ஆன்:- 4:28

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْمُؤْمِنُ مِرْآةُ الْمُؤْمِنِ ) ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறைநம்பிக்கையாளருக்கு (குறைகளை எடுத்துச் சொல்லித் திருத்தும்) கண்ணாடி ஆவார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4272, அல்அதபுல் முஃப்ரத்-239

 

உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஜனாதிபதி பொறுப்பேற்ற முதல் நாளன்று அரசு பணிகளையெல்லாம் முடித்துவிட்டு களைப்புடன் வீட்டுக்கு வந்து காலை உணவை முடித்துவிட்டு படுத்துவிட்டார்கள். இறையச்சமும் நல்லொழுக்கமும் நிறைந்த அன்னாரின் மகனார் அப்துல் மலிக் (ரஹ்) அவர்கள் அப்போது அங்கு வந்தார். வந்தவர் தமது தந்தைக்கு சலாம் கூறிவிட்டு, "(முன் சென்ற ஆட்சியாளர்களான) பனூ உமையாக்கள் பொதுமக்களிடமிருந்து அபகரித்து வைத்துள்ள பொருள்களைத் திருப்பிக் கொடுக்கும்முன் தாங்கள் தூங்க விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்.

 

அன்னார், "லுஹர் தொழுகைக்குப் பின் அந்த வேலையைச் செய்கிறேன்" என்று கூறினார்கள். மகனார், லுஹர் வரையில் தாங்கள் உயிருடன் இருப்பீர்கள் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது?" என்று கேட்டார்.

 

இதை கேட்டதும் அன்னார் துள்ளி எழுந்தார்கள். மகனை ஆரதழுவியவர்களாய், "மார்க்க காரியங்களில் எனக்கு உதவி செய்யக்கூடிய பிள்ளையைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி!" என்று கூறினார்கள்.

 

கண்ணாடி நம்முடைய குறைகளை நம்மிடம் மட்டுமே சுட்டிக்காட்டும். அதுபோல் நல்ல நண்பன் என்பவன் நம்முடைய குறைகளை தயங்காமல் முழுமையாக சுட்டிக்காட்டி நம்மை திருத்துபவனாக அமைய வேண்டும்.

 

கண்ணாடி நமது குறைகளை எடுத்துரைக்கும்போது, "என் குறைகளையா எடுத்துரைக்கிறாய்?" என்றெண்ணி நாம் அதை அடித்து உடைத்து விடுவதில்லை. மாறாக, அது எடுத்துரைக்கும் குறைகளை முழு மனதுடன் நாம் ஒப்புக்கொள்கிறோம். பிறர் நமது குறைகளை நல்ல மனதுடன் சொல்லும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, தன்னை திருத்திக்கொள்கின்ற பக்குவம் வேண்டும்.

 

மனிதனாக பிறந்தவன் எவனும் தவறுகளுக்கும், குறைகளுக்கும் அப்பாற்பட்டவன் அல்லன். ஆனால், தவறு என்று உணர்ந்த பின்போ அல்லது உணர்த்தப்பட்ட பின்போ அந்தத் தவறை ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பது தான் நம்மை மற்றவரிடமிருந்து வித்தியாசப்படுத்தும். செய்தது தவறா? தவறில்லையா? என்பதுகூட பிரச்சினையன்று. நான் அதை ஒப்புக்கொள்வதா? என்கிற அகங்கார நினைப்புதான் பிரச்சனை.

 

வியாபாரம் செய்தாலும், விளையாட்டில் ஈடுபட்டாலும் நமது தவறுகளை ஏற்றுக்கொள்வதை பொறுத்துதான் வாழ்க்கையில் நமது வெற்றி அமைகிறது. வளர்ச்சி நோக்கி செல்லும் ஒருவரிடம் நிறைகுறை இருக்கும். அதை அடையாளம் கண்டு களைய வேண்டியவற்றை களைந்து, வளர்க்க வேண்டியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

 

வாரப்பத்திரிகை மற்றும் மாதப் பத்திரிகைகளிலும் வாசகர்கள் வட்டம் என்று ஒரு பகுதி இருக்கும். மேலும், அனைத்து டி.வி. நிகழ்ச்சிகளுக்கு பின்பும் விமர்சனங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன என்ற ஒரு வாக்கியம் வரும். அதன் மூலம் வாசகர்கள் நமது பத்திரிக்கையில் உள்ள குறைகளையும், பார்வையாளர்கள் நமது நிகழ்ச்சியில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும்; பிறகு குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்; பிறகு அதில் மென்மேலும் வளர்ச்சி காண வேண்டும் என்பதே அவைகளின் நோக்கமாகும்.

 

நாவிதரின் ஞானம்

 

சட்டக்களஞ்சியம் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான் மக்காவில் இருந்தபோது ஹஜ்ஜுடைய காரியங்களில் ஐந்து தவறுகள் செய்துவிட்டேன். அவற்றை ஒரு நாவிதர் எனக்குச் சுட்டிக்காட்டினார். நான் திருத்திக்கொண்டேன்.

 

ஹஜ் கடமைகளில் இறுதியானது தலைமுடி நீக்குதல். அங்கிருந்த ஒரு நாவிதரிடம், "தலைமுடி சிரைக்க எவ்வளவு கூலி?" என்றேன். அதற்கு அவர் "இறைவழிபாட்டை நிறைவேற்றுவதில் பேரம் பேசுதல் கூடாது. உங்களால் இயன்றதை தாருங்கள். இப்போது உட்காருங்கள்" என்றார்.

 

நான் கிப்லாவை கவனிக்காமல் உட்கார்ந்தபோது, அவர், கிப்லாவை முன்னோக்கி அமரும்படி சைகை செய்தார்.

 

நான் கவனக்குறைவால் தலையின் இடப்பக்கத்தைக் காட்டியபோது அவர், "முதலில் வலப்புறத்தை காட்டுங்கள்" என்றார்.

 

நான் முடி சிரைக்கும்போது மௌனமாக இருந்தேன். அவர், "ஏதேனும் தக்பீர் கூறிக் கொண்டிருங்கள்" என்றார்.

 

நான் முடி சிரைக்கப்பட்டதற்கு பின்பு எழுந்து நின்று வாகனத்திற்கு செல்லலாம் என்று எண்ணியபோது அவர், "இரண்டு ரக்அத்துக்கள் தொழுதுவிட்டு செல்லுங்கள்" என்றார்.

 

இந்த நாவிதர் எனது ஒவ்வொரு தவறையும் சுட்டிக்காட்டியபோது நான் ஆச்சரியமடைந்தேன். இவர் சாமானிய மனிதனாக இருக்க முடியாது. ஹஜ்ஜின் சுன்னத்துக்களை இவ்வளவு நுட்பமாக கற்றுத் தேர்ந்துள்ளாரே என்றெண்ணி, இவரைப்பற்றி விசாரித்தபோது தான் இவர் மாமேதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் என்று அறிந்துகொண்டேன்.

 

பிறர் நம்மை குறை சொல்லும்போது நமது பலவீனங்களை எண்ணமாக படம் பிடித்துக்காட்டுகிறார் என்று அனுபவித்து ரசிக்க வேண்டும். பிடிச்சார்யா பாயிண்டை! என்று சொல்லி உண்மையான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆமாம் என்று தலையாட்ட வேண்டும்.

 

நியாயப்படுத்த வேண்டாம்

 

இறைவன் ஷைத்தானை நோக்கி! "நீ ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு மரியாதை செய்!" என்று கூறினான். ஷைத்தான் இறைவனின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் மறுத்து பேசுவது தவறு என்று உணர்ந்திருந்தும், மறுத்துப் பேசி தவறிழைத்தான்.

 

அந்தத் தவறை ஒப்புக்கொள்ளாமல் அதை நியாயப்படுத்த வார்த்தைகளை அடுக்கினான். அதாவது, "ஆதம் (அலை) அவர்கள் களிமண்ணால் படைக்கப்பட்டவர். நான் நெருப்பால் படைக்கப்பட்டவன். உயர்ந்தவன் தாழ்ந்தவருக்கு மரியாதை செய்து என்பது நியாயமில்லை" என்று வாய்ப்பந்தல் போட்டான். அதன் விளைவு, இறைவனால் சபிக்கப்பட்டு விரட்டப்பட்டான் என்கிறது திருக்குர்ஆன். (7: 12,13 - 15: 33,34,35)

 

நமது தவறை பிறர் சுட்டிக்காட்டிய பிறகும் ஒப்புக்கொள்ளாமல் அதை நியாயப்படுத்த மேலும் வார்த்தைகளை அடக்கிக்கொண்டே போவது மிகவும் அபாயகரமானது.

 

இணைவைப்பாளர்களாக வாழ்ந்த மக்களிடம் பல இறைதூதர்கள் வந்து அவர்களின் தவறுகளை எடுத்துரைத்து அதனை உணர்ந்து திருந்தி, ஏகத்துவவாதிகளாக மாறிவிடுங்கள் என்று கூறினார்கள். அவர்களின் தவறை உணர்ந்து திருந்தியவர்கள் இறைநம்பிக்கை கொண்டு வாழ்வில் வெற்றி பெற்றனர். தவறை உணராதவர்கள் அல்லது உணர்ந்தும் திருந்தாதவர்கள் இணைவைப்பாளர்களாக வாழ்ந்து இறைவனின் சாபத்தைப் பெற்று தோல்வியைத் தழுவி, மீள முடியாத நரக படுகுழியில் வீழ்ந்துவிட்டனர்.

 

துறவியானது எப்போது?

 

எவரேனும் தன்னுடைய தீயச் செயலுக்குப்பின் (கைசேதப்பட்டு தன் குற்றத்தை) சீர்திருத்திக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து விடுவான். திருக்குர்ஆன்:- 6:54

 

இறைநேசச் செல்வர் இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்கள் பல்க் நாட்டை அரசாட்சி செய்து கொண்டிருந்தபோது தனக்கு துறவறத்தின் பக்கம் நாட்டம் எப்படி ஏற்பட்டது என்பதை அவர்களே கூறுகிறார்கள்.

 

எனது படுக்கையில் மலர் இதழ்களை பரப்பும் பணி மேற்கொண்ட எனது அடிமைப்பெண் ஒருநாள் அந்த படுக்கையில் படுத்துறங்கிக் கொண்டிருந்தாள். அதைக் கண்டு அதிர்ச்சியுற்ற நான் அந்த அடிமையை சாட்டையால் அடித்து விளாசினேன். அலறித் துடித்துக்கொண்டு எழுந்த அவள் என்னைப் பார்த்து சிரித்தாள். அடிகளை பொறுத்துக்கொண்டு சிரிப்பதற்கான காரணத்தை வினவினேன்.

 

அதற்கு அவள், "சற்று நேரம் இந்த மலர் படுக்கையில் கண்ணயர்ந்த எனக்கு இந்தளவிற்கு தண்டனை என்றால், காலமெல்லாம் இதில் படுத்துறங்கும் தங்களுக்கு எவ்வளவு தண்டனை கிடைக்குமோ? என்று எண்ணிப் பார்த்தேன். நான் பெற்ற தண்டனை எனக்கு குறைவானதாகவே தோன்றியது. எனவே, நிம்மதி பெரும் மூச்சோடு சிரித்தேன்" என்று அந்த அடிமைப்பெண் கூறினாள்.

 

ஆடம்பர வாழ்க்கை எனும் தவறை எனக்கு எடுத்துரைத்தாள். பிறகு உணர்ந்தேன். எளிமையின் நாட்டம் கொண்டு திருந்தினேன்.

 

நம்முடைய குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள், மேலதிகாரிகள், தமக்கு கீழ் பணிபுரிபவர்கள், முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் என யாராக இருந்தாலும் சரி, அவர்கள் நம்முடைய குறை மற்றும் தவறுகளை எடுத்துரைத்தால், அதை ஒப்புக்கொள்ள தயங்கக்கூடாது.

 

தனது தவறை பிறர் சுட்டிக்காட்டினாலும் அல்லது தானாகவே அறிந்துகொண்டு திருத்திக்கொண்டாலும் சரி, எப்படியோ தவறை உணர்ந்து திருந்தி வாழ இறைஞ்சுவோரை இறைவன் மன்னிக்கிறான்.

 

தன்னுடைய பேச்சின் மூலமா அல்லது எழுத்தின் மூலமோ மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும் அழைப்பாளர்களிடம் அவர்களுடைய பேச்சிலும் எழுத்திலும் உள்ள தவறுகளை பிறர் உணர்த்தினால் அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு, உடனே திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

 

ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சியினர் கூறும் எல்லா குற்றச்சாட்டுகளையும் கண்டு கொள்ளாமல், "இவர்களுக்கு வேறு வேலை இல்லை" என்றெண்ணி அலட்சியப்படுத்திவிட்டால் மக்களின் நன்மதிப்பைப் பெறுவது சிரமமாகிவிடும். அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை ஆலோசித்து, அது உண்மையானால் அதை களைய முற்பட வேண்டும். அப்போதுதான் ஆட்சி நிலைத்து நிற்கும்.

 

ஒரு மருத்துவ ஸ்கேன் அறிக்கையில் கோளாறு சுட்டிக்காட்டப்பட்டால், உடனே சிறப்பு மருத்துவர்களைத் தேடி ஓடுகிறோம். நம் பேச்சு மற்றும் செயல்களிலுள்ள குறைபாடுகளை எதிராளி ஒருவர் செலவின்றி கண்டுபிடித்து தரும்போது அதை கிழித்து குப்பைத் தொட்டியில் போட எண்ணுவது சரியான அணுகுமுறையாகாது.

 

தவறுகளை ஒப்புக்கொள்வது என்பது எதிரிகளை நண்பர்களாகித் தரும் பலம். எதிர்த்து வீழ்த்த முடியாத பலம். குறைகளை மூச்சுவிடாமல் நிறைகளை மட்டுமே பேசி ஜால்ரா போடும் கூட்டங்களுக்கு மத்தியில் வாழ்வோர் வளர்ந்து சாதித்ததாக வரலாறு இல்லை.

 

குற்றச்சாட்டுகளில் உள்ள உண்மையை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்லி, அவற்றிற்கான முயற்சிகளை மேற்கொள்ள முன்வந்து செயலிலும் இறங்குவது தான் புத்திசாலித்தனம். இதுவே, நல்லோர்களின் நற்குணமாகும்.

 

நம்முடைய குறைகளை அடையாளம் கண்டு, அதை களைந்து கண்ணியத்துடன் வாழ, அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!


(இந்தக் கட்டுரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

Thursday, 27 November 2025

நுழைவதற்கு முன்...

 

நுழைவதற்கு முன்...

 

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

இறைநம்பிக்கையாளர்களே! உங்களுடையதல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்) அதில் இருப்பவர்களுக்கு சலாம் கூறி, (அவருடைய) அனுமதியைப்பெறும் வரையில் நுழையாதீர்கள். இவ்வாறு நடந்து கொள்வது உங்களுக்கே மிக்க நன்று. இதை (மறந்து விடாது) நீங்கள் கவனத்தில் வைப்பீர்களாக! திருக்குர்ஆன்:- 24:27

 

பிறர் வீட்டுக்கு நாம் சென்றால் அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த ஒழுக்கத்தை நமக்கு அல்லாஹ் கற்றுத்தருகிறான். முதலில் நாம் பார்வையை தாழ்த்திக் கொண்டு வீட்டின் ஓரப்பகுதியில் நிற்க வேண்டும். மனிதர்களுக்கிடையே பிரியத்தை ஏற்படுத்தக்கூடிய சலாமை கூறி அனுமதி கோர வேண்டும். தன்னை யார் என்று அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சிறந்த கலாச்சாரம் பல தீமைகளிலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும்.

 

பிற மனிதர்களைச் சந்திக்க தனது பாதங்களை எடுத்து வைக்கும்போது இந்த வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது. இந்த விதிமுறைகளை அலட்சியப்படுத்திவிட்டால் இறை கட்டளைகளை அலட்சியப்படுத்தியதாகவே கருதப்படும்.

 

பார்வை படாமல் இருக்க

 

அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு வீட்டுக்கு சென்றால் (அனுமதி கோருவதற்காக) வாசலுக்கு நேராக வந்து நிற்காமல் வலது அல்லது இடது புறத்தில் நின்று, "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறுவார்கள். (பிறகு அனுமதி கிடைத்தால் நுழைவார்கள்.) நூல்:- அபூதாவூத்-4512 

 

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் கதவில் ஒரு துவாரத்தின் வழியாக கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களது அறையினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபியவர்கள் பேன் சீப்பு மூலம் தனது தலைமுடியைக் கோதிக் கொண்டிருந்தார்கள். அவரைக் கண்ட நபியவர்கள், ( لَوْ أَعْلَمُ أَنَّكَ تَنْظُرُنِي لَطَعَنْتُ بِهِ فِي عَيْنِكَ ) "நீர் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு முன்பே தெரிந்திருந்தால் இந்த சீப்பால் உன் கண்ணை குத்தியிருப்பேன்" என்று கூறிவிட்டு, ( إِنَّمَا جُعِلَ الإِذْنُ مِنْ أَجْلِ الْبَصَرِ ) "(வீட்டிற்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வை (எல்லை மீறி வீட்டிலிருப்பவர்கள்மீது விழக் கூடும் என்ற) காரணத்தால் தான்" என்று கூறினார்கள் நூல்:- புகாரீ-5924, முஸ்லிம்-4358

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْ أَنَّ رَجُلاً اطَّلَعَ عَلَيْكَ بِغَيْرِ إِذْنٍ فَخَذَفْتَهُ بِحَصَاةٍ فَفَقَأْتَ عَيْنَهُ مَا كَانَ عَلَيْكَ مِنْ جُنَاحٍ ) உன் அனுமதியின்றி ஒரு மனிதர் உன்னை எட்டிப் பார்த்த போது அவர்மீது நீ சிறு கல்லை சுண்டியெறிய அது அவரது கண்ணை பறித்துவிட்டால் உன்மீது எந்த குற்றமில்லை. நூல்:- புகாரீ-6888, முஸ்லிம்-4362

 

பிறர் வீட்டினுள் நுழைவதற்கு அனுமதி கோரி நிற்பவர் பார்வையை தாழ்த்திக் கொண்டு, வீட்டின் தலை வாசலுக்கு நேராக நிற்காமல் ஓரப்பகுதியில் ஒதுங்கியே நிற்க வேண்டும். தலைவாசலுக்கு நேராக நின்றால் கதவு திறந்தவுடன் பார்க்கக்கூடாதவைகளின்மீது பார்வை படலாம். அதனால் வீட்டினர் சங்கடப்படலாம்.

 

ஒரு சிலர் அனுமதி கேட்கும்போது வீட்டில் பார்ப்பது, கதவு பூட்டி இருந்தால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்ப்பது, சாவி துவாரத்தின் வழியாக பார்ப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவார்கள். இது போன்ற மனிதர்களிடம் கடுமையாக நடந்து கொண்டால்கூட குற்றமில்லை என்று இந்த நபிமொழி போதிக்கிறது.

 

கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் எங்களின் வீட்டில் எங்களைச் சந்திக்க வந்த போது (வீட்டு வாசலில் நின்று, அனுமதி கோருவதற்காக) சலாம் கூறினார்கள். அதற்கு (எனது தந்தை) சஅத் (ரலி) அவர்கள் (நபிகளாருக்குக் கேட்காத வகையில்) மெதுவான குரலில் பதில் சலாம் கூறினார்கள்.

 

அப்போது நான் (என் தந்தையிடம்), ( أَلاَ تَأْذَنُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ) நபியவர்களுக்கு நீங்கள் அனுமதி தர மாட்டீர்களா?" என்று கேட்டேன் அதற்கு எனது தந்தை, ( ذَرْهُ يُكْثِرْ عَلَيْنَا مِنَ السَّلاَمِ  ) "அவர்களை அந்நிலையிலேயே விட்டுவிடு. அப்போதுதான் நபியவர்கள் நம்மீது சலாமை அதிகமாக சொல்வார்கள்" என்று கூறினார். இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக மூன்று முறை நபியவர்கள் சலாம் கூறினார்கள். (அனுமதி கிடைக்காததால்) நபியவர்கள் திரும்பினார்கள்.

 

அப்போது சஅத் (ரலி) அவர்கள் நபியவர்களைப் பின் (தொடர்ந்து) சென்று, ( يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ أَسْمَعُ تَسْلِيمَكَ وَأَرُدُّ عَلَيْكَ رَدًّا خَفِيًّا لِتُكْثِرَ عَلَيْنَا مِنَ السَّلاَمِ ) "நாயகமே! நான் உங்களுடைய சலாமை கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். நீங்கள் எங்களுக்கு அதிகமாக சலாம் சொல்ல வேண்டும் என்பதற்காக உங்களுக்கு மெதுவான குரலில் பதில் சலாம் கூறிக் கொண்டிருந்தேன்" என்று கூறினார். பிறகு சஅத் (ரலி) அவர்களுடன் நபியவர்கள் (அவரது வீட்டிற்கு) திரும்பி வந்தார்கள். நூல்:- அபூதாவூத்-4511

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلاَثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ فَلْيَرْجِعْ ) (பிறர் வீட்டிற்குள் நுழைய) உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பி விடட்டும். அறிவிப்பாளர்:- அபூமூசா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2062, முஸ்லிம்-4351, அபூதாவூத்-4510

 

அனுமதி கேட்பதற்கு அடையாளமாக அழைப்பு மணி (காலிங் பெல்) இருந்தால் மெதுவாக அழுத்தலாம். கலவரப்படுத்துகிற மாதிரி கடுமையாக அழுத்தக்கூடாது. பிறகு சலாம் சொல்ல வேண்டும். அழைப்புமணி இல்லாவிட்டால் வீட்டின் கதவை இலேசாக தட்டலாம். விரல்களை மடித்துக்கொண்டும் தட்டலாம். பதில் கிடைக்காவிட்டால் சலாமின் சப்தத்தை மெல்ல உயர்த்தலாம். ஆனால், அனுமதி கேட்பது எந்த வகையில் அமைந்தாலும் மூன்று முறை தான் இருக்க வேண்டும். பதில் வரவில்லையெனில் மற்றொரு சந்தர்ப்பத்தில் சந்தித்துக் கொள்ளலாம் என்றெண்ணி திரும்பிவிட வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் வந்தவரை வரவேற்பதைவிட மிக முக்கிய வேலைகளில் ஈடுபட்டு இருக்கலாம். நின்று கொண்டு பிடிவாதம் பிடிக்கக் கூடாது.

 

சலாம் கூற வேண்டும்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் வீட்டில் இருக்கும்போது ஒருவர் அனுமதி கோரி, "நான் உள்ளே வரலாமா?" என்று கேட்டார். அப்போது நபியவர்கள் தங்களது பணியாளரை அழைத்து, ( اخْرُجْ إِلَى هَذَا فَعَلِّمْهُ الاِسْتِئْذَانَ فَقُلْ لَهُ قُلِ السَّلاَمُ عَلَيْكُمْ أَأَدْخُلُ ) "அவரிடம் சென்று அனுமதி கோருவதற்கான ஒழுக்கத்தை கற்றுக் கொடு. அஸ்ஸலாமு அலைக்கும் நான் உள்ளே வரலாமா? என்று கூறுமாறு அவருக்குச் சொல்லிக் கொடு" என்றார்கள்.

 

நபியவர்கள் கூறியதை கேட்டுக் கொண்டிருந்த அவர், "அஸ்ஸலாமு அலைக்கும் நான் உள்ளே வரலாமா?" என்று கேட்டார். நபியவர்கள் அனுமதித்தபோது அவர் வீட்டினுள் நுழைந்தார். நூல்:- அபூதாவூத்-4508, முஸ்னது அஹ்மத்

 

பிறர் வீட்டுக்கு சென்றால் சலாம் கூறிவிட்டு நுழைவதற்கு அனுமதி கேட்க வேண்டும். "யாரது உள்ளே வாருங்கள்" என்று பதில் கிடைத்த பின்னர்தான் நுழைய வேண்டும். சலாம் மட்டும் கூறிவிட்டு அனுமதி கேட்காமல் நுழையக்கூடாது. அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்த பிறகு "நான் வரலாமா?" என்று கேட்பது மிகப்பெரிய தவறாகும்.

 

எவ்வளவு நெருங்கி பழகியவர்களின் வீடாக இருந்தாலும் சரி, பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், பிள்ளைகள் போன்றோர் அறையாக இருந்தாலும் சரி, சலாம் கூறி கதவைத் தட்டிவிட்டு காத்திருக்க வேண்டும். இதுவே சிறந்த பண்பாகும்.

 

பிறர் வீட்டின் கதவு திறந்தே கிடந்தாலும்கூட அனுமதியின்றி நுழையக்கூடாது. அனுமதியின்றி நுழைவதன் மூலம் அங்கு ஒரு பொருள் முன்கூட்டியே காணாமல் போயிருந்தாலும், அல்லது பொருள் வேறு ஒருவர் மூலம் வீணடிக்கப்பட்டிருந்தாலும் நம்மீது அதன் பழி உண்டாகிவிடலாம்.

 

பிற மக்களின் பார்வை விழாதபடி நம் வீட்டு வாசல் கதவை எப்போதும் தாழ்ப்பாள் போட்டு வைத்திருக்க வேண்டும். அல்லது வாசலில் திரைச்சீலை மாட்டியிருக்க வேண்டும்.

 

சிலர் தெரிந்தவர்கள் வீடுகளில் நுழைந்து நேரடியாக சமையலறை வரையிலும், ஏன் படுக்கையறை வரையிலும்கூட நேரே வந்து விடுகிறார்கள். "என்னங்க இப்படி?" என்று விளக்கம் கேட்டால், "அந்த அளவுக்கு நான் நெருங்கி பழகிவிட்டேன்" என்கிறார்கள். எவ்வளவு நெருங்கி பழகியவர்கள் என்றாலும் இப்படி நுழைவதை எவரும் விரும்புவதில்லை. நாகரீகம் கருதி இதை வீட்டினர் சுட்டிக் காட்டுவதில்லை.

 

பெயர் கூறுதல்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மிஃராஜ் எனும்) விண்வெளி பயணத்தின் போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு முதல் வானத்திற்கு உயர்ந்து சென்று அதன் கதவை திறக்கும்படி கூறினார்‌. அங்குள்ளவர்கள், ( مَنْ أَنْتَ ) "நீங்கள் யார்?" என்று வினவ, "ஜிப்ரீல்" என்றார். ( وَمَنْ مَعَكَ ) "உங்களுடன் யார்?" என்று வினவ, "முஹம்மத்" என்றார். இதுபோன்ற ஏழு வானத்திலும் வினவப்பட்டபோது ஏழு வானத்திலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இதுபோன்றே பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-259

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. என் தந்தை (ஒரு யூதருக்கு) கொடுக்க வேண்டிய ஒரு கடன் விஷயமாக அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது நபியவர்கள், ( مَنْ ذَا ) "யாரது?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "நான்தான்" என்றேன் அப்போது நபியவர்கள், ( أَنَا أَنَا ) "நான் நான் என்றால்...?" என அதை விரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள். நூல்:- புகாரீ-6250, முஸ்லிம் 4357

 

சமுதாயத்தின் பெரும் தலைவராக இருந்தாலும் சரி, சாமானியராக இருந்தாலும் சரி (வானவர்கள் உட்பட) பிறகு பிறர் வீட்டுக்கு சென்றால் தனது பெயரையோ அல்லது மக்களிடம் பிரபலமான தனது புனைப்பெயரையோ சொல்லித்தான் அனுமதி கோர வேண்டும். இதுவே ஒழுக்கமும் பணிவும் ஆகும். வெறுமனே நான் தான், என் குரல் உங்களுக்கு தெரியவில்லையா? என்று கூறி வீட்டினரை குழப்பத்திற்கு ஆளாக்குவது நற்பண்பல்ல.

 

தனது பெயரை தெளிவாக கூறுவது தான் நபி வழியாகும். ஆண்கள் மட்டுமே வசிக்கும் இல்லமாக இருந்தாலும் சலாமும் பெயரையும் கூறி அனுமதி பெற்று தான் நுழைய வேண்டும்.

 

சரி செய்து கொள்வார்கள்

 

இறைநம்பிக்கையாளர்களே! உங்களுடைய அடிமைகளும் உங்களில் பருவமடையாத (சிறிய) பிள்ளைகளும் உங்களிடம் வருவதற்கு மூன்று நேரங்களில் அனுமதி கோர வேண்டும். பஜ்ரு (அதிகாலை) தொழுகைக்கு முன்பு, மதிய வேளையில் நீங்கள் ஆடைகளைக் கலைந்து இருக்கும்போது, இஷா (இரவுத்) தொழுகைக்கு பின்னர். ஆகிய மூன்று நேரங்களும் நீங்கள் மறைவாக இருக்க வேண்டிய நேரங்கள். திருக்குர்ஆன்:- 24:58

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு தோழர் வந்து, ( يَا رَسُولَ اللَّهِ أَسْتَأْذِنُ عَلَى أُمِّي )  "நாயகமே! (வீட்டுக்குள் நுழைய) என் தாயிடம் அனுமதி பெற வேண்டுமா?" என்று வினவினார். நபியவர்கள், "ஆமாம்" என்றார்கள். அவர், ( إِنِّي مَعَهَا فِي الْبَيْتِ ) "நானும் என் தாயாரும் ஒரே வீட்டில் தான் வசிக்கின்றோம். (அப்படி இருந்தும் அவளிடம் அனுமதி பெற்றுத்தான் நுழைய வேண்டுமா?)" என்று கேட்டார். நபியவர்கள், ( اسْتَأْذِنْ عَلَيْهَا ) "நீர் அவளிடம் அனுமதி பெறத்தான் வேண்டும்" என்றார்கள். 


அவர், ( إِنِّي خَادِمُهَا ) நான் தான் அவளின் பணியாளராக இருக்கிறேன். (அப்படி இருந்தும் அவளிடம் நான் அனுமதி பெற்றுத்தான் நுழைய வேண்டுமா?)" என்று கேட்டார். நபியவர்கள், ( اسْتَأْذِنْ عَلَيْهَا أَتُحِبُّ أَنْ تَرَاهَا عُرْيَانَةً ) "நீர் அவளிடம் அனுமதி பெறத்தான் வேண்டும். உன் தாயை (அரைகுறையான) நிர்வாணக் கோலத்தில் காண்பதை நீர் விரும்புவீரா?" என்று கேட்டார்கள். அவர், "விரும்ப மாட்டேன்" என்று கூறினார். நபியவர்கள், ( فَاسْتَأْذِنْ عَلَيْهَا )  "(அப்படியானால்) நீர் அவளிடம் அனுமதி பெற்றுத்தான் நுழைய வேண்டும். (ஏனெனில், தனிமையில் இருக்கும்போது அவர்கள் எந்த நிலையிலும் இருக்கலாம் அல்லவா?)" என்று கூறினார்கள். நூல்:- முவத்தா மாலிக்-1857

 

ஒருவர் தனிமையில் இருக்கும் போது அவரின் அனுமதியின்றி படுக்கையறைக்குள் வந்துவிட்டால் தங்கள் கண்டதை பிறரிடம் சொல்லிக் காட்டுவார்கள் என்பது மட்டுமல்ல, அது அவர்களுடைய உள்ளங்களில் தவறான எண்ணங்களை உண்டாக்கிவிடும். தன் வீட்டுப் பிள்ளைகளுக்குகூட இது போன்ற உயரிய பண்பாட்டை போதிப்பது இஸ்லாம் மட்டுமேயாகும்.

 

ஒருவர் தன்னுடைய பெற்றோர், சகோதர சகோதரிகள், பிள்ளைகள் போன்றோரின் அறைக்குள் நுழைவதாக இருந்தாலும் பெயரைச் சொல்லி அழைத்தோ, கதவைத் தட்டியோ அனுமதி பெற்று நுழைவது தான் நாகரீகமாகும்.

 

அரைகுறை ஆடையுடன் ஒழுங்கற்ற கோலத்தில் அவர்கள் தம் அறையில் இருக்கலாம். அனுமதியின்றி உள்ளே சட்டென நுழையும் போது அவர்களுக்கு சங்கடமாகிவிடலாம். அனுமதி கேட்டு நுழைந்தால் அவர்கள் தன் நிலையை சரி செய்து கொள்வார்கள்; எச்சரிக்கையாகி விடுவார்கள். தனக்கு மிக நெருங்கிய உறவினர்கள் அறைக்குள் நுழைவதற்கே இந்த நிலை என்றால், பிறர் வீடுகள் நிலையைக் கேட்கவே வேண்டாம்.

 

பெண்கள் மட்டும் இருந்தால்

 

நீங்கள் திரும்பிவிடுங்கள் என்று (அவ்வீட்டில் இருக்கும் பெண்கள் முதலிய எவராலும்) கூறப்பெற்றால் நீங்கள் திரும்பிவிடுங்கள். இதுவே உங்களை பரிசுத்தமாக்கி வைக்கும். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிவான். திருக்குர்ஆன்:- 24:28

 

பெண்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்கு பயப்பட்டவர்களாயின் (அந்நியருடன் பேசும்போது) நளினமாக பேசாதீர்கள். ஏனெனில், (பாவ) நோய் இருக்கும் உள்ளமுடையவர் (தவறான) விருப்பங்களைக் கொள்ளக்கூடும் திருக்குர்ஆன்:- 33:32

 

நாம் பிறர் வீட்டுக்குச் செல்லும்போது அங்கு பெண்கள் மட்டும் இருந்தால் உள்ளே நுழையக்கூடாது. அவசியமான அல்லது அவசரமான செய்தியானால் வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டே சுருக்கமாக சொல்லிவிட்டு சென்றுவிட வேண்டும். ஆண்கள் இல்லாதபோது வீட்டுக்குள் நுழைந்து உட்கார்ந்து கொண்டு, "சகோதரர் வரட்டும் நான் காத்திருக்கிறேன்" என்றெல்லாம் சொல்லக்கூடாது.

 

மேலும், நம் வீட்டுப் பெண்களும் வீட்டில் ஆண்கள் இல்லாதபோது, பிறர் தேடி வந்தால், "தற்போது ஆண்கள் இல்லை. பிறகு பேசிக்கொள்ளுங்கள்" என்று கண்டிப்பாக கூற அனுப்பிவிட வேண்டும்.

 

அந்நிய ஆண்களின் மனதை கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும்படியாக நளினமாக பேசுவதும், உரத்த தொனியில் பேசுவதும் கூடாது. வீட்டினர், "திரும்பி விடுங்கள்" என்று சொல்லிவிட்டால், உடனே நாம் திரும்பி விட வேண்டும். என்னை மதிக்கவில்லை என்று வருந்தக்கூடாது. எதிரியாக இருந்தாலும் வந்தவர்களை வாருங்கள் என்று சொல்வது தான் நாகரீகம் இவர்களுக்கு இதுகூட தெரியவில்லையே என்று அவர்களை தவறாக எண்ணக்கூடாது. பிறர் சூழ்நிலையைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

 

சில காரணங்கள்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவரும் இல்லாத வீட்டுக்குள் நுழைந்தால் ( السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ )  "நம் மீதும் நல்லடியார்கள் மீதும் அமைதி எனும் சலாம் உண்டாவதாக" என்று கூறவேண்டும். இதற்கு வானவர்கள் பதில் கூறுவார்கள்.

 

திடீரென்று அறிவிப்பு இல்லாமல் ஒருவர் ஏன் மற்றவரின் அறைக்குள் ஒரு வீட்டுக்குள் நுழையக்கூடாது என்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

 

1) அவர்கள் எந்த கோலத்தில் இருப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது.

2) தங்களுக்கே உரிய விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும்போது மற்றவர்கள் நுழைவதை எவரும் விரும்புவதில்லை

3) ஏதோ பேச்சிலும் நினைப்பிலும் இருக்கும் அவர்களுக்கு ஒரே நொடியில் முற்றிலும் புதியவர்களை அல்லது தெரிந்தவர்களை வரவேற்கும் மனநிலை இருப்பதில்லை. இருக்கும் மனநிலையிலிருந்து மாற அவர்களுக்கு சில அறிவிப்பும், சில நொடிகளும் அவகாசமும் தேவைப்படுகின்றன.

 

நம்முடைய ஒவ்வொரு செயலும் நம் பண்பை காட்ட வல்லவை. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பிறர் வீட்டுக்குள் நுழையும்போது பேண வேண்டிய இந்த பண்பாடுகளை தமது வாழ்நாளிலும், தம் சமுதாயத்தினர் வாழ்விலும் நடைமுறைப்படுத்தி ஒழுக்கம் நிறைந்த சிறந்த சமுதாயமாக உருவாக்கி விட்டுச் சென்றுள்ளார்கள்.

 

எனவே, நாமும் இந்த ஒழுக்கம் மாண்புகளை முறையாக கடைபிடித்து, அதன் மூலம் இறையன்பை பெறுவோமாக! ஆமீன்!

 

(இந்தக் கட்டுரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

குறைகளை ஏற்றுக்கொள்வோம்

  குறைகளை ஏற்றுக்கொள்வோம்   وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ قَالَ فَعَلْتُهَا إِذًا وَأَنَا مِنَ الضّ...