Search This Blog

Wednesday, 25 June 2025

சமிக்ஞை போதும்!

 

சமிக்ஞை போதும்!

اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ لِىْ سٰجِدِيْنَ‏

யூசுஃப் (நபி, யஅகூப் நபியாகிய) தன் தந்தையை நோக்கி, ‘‘என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிய மெய்யாகவே நான் (கனவு) கண்டேன்'' என்று கூறினார். திருக்குர்ஆன்:- 12:4

 

ஒரு விஷயம் குறித்து பிறர் அறியாதிருக்க, சம்பந்தப்பட்டவருக்கு அது குறித்து ஜாடைமாடையாக சமிக்ஞையில் உணர்த்தப்படுவது உலக மரபு. அல்லாஹுத்தஆலாவும் மனிதர்களுக்கு அவ்வபோது சில இலாப நஷ்டங்கள் குறித்து சமிக்ஞை செய்கிறான். அறிந்தவர்கள் விழித்துக்கொள்கிறார்கள்; அறியாதவர்கள் அகப்பட்டுக்கொள்கிறார்கள்.

 

எளியவனை அடித்தால் அவனால் திருப்பி அடிக்க இயலாது. ஆனால், வலிமையுள்ளவனை கைவைத்தால் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான் என்பதையும், "ஆழம் தெரியாமல் காலைவிடக் கூடாது" என்பதையும் சமிக்ஞையால் உணர்த்தப்பட்டுள்ளார்கள்.

 

"கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை" என்று வியாக்கியானம் பேசியவனைப்போல் ஆகிவிட்டார்கள்.

 

வருங்காலத்திலாவது அவர்கள் தமது ரவுடித்தனத்தைக் கைவிட்டால் நல்லது. இல்லையெனில் இதைவிட கடுமையான சேதாரத்தையும்,  இழிவையும் சந்திப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ ) இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6133

 

( الْعَاقِلُ تَكْفِيهِ الْإِشَارَةُ وَالْأَحْمَقُ لَا تَنْفَعُ مَعَهُ الْعِبَارَةُ ) புத்திசாலிக்கு சமிக்ஞையே போதுமானது. மடையனுக்கு வார்த்தையால் விவரித்தாலும் பயனளிக்காது.

 

நோய்கள் மூலம்

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (கவர்னராக) அனுப்பி வைத்தார்கள். அப்போது அண்ணலார்,  ( اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ، فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ ) "அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை அஞ்சுங்கள். ஏனெனில், அவர் செய்யும் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2448, முஸ்லிம்-29, திர்மிதீ-1937

 

சவூதி அரேபியாவைச் சேர்ந்த அறிஞர் முஹம்மத் அப்துர் ரஹ்மான் அல்அரீஃபீ அவர்கள் கூறுகிறார்கள். எனது நண்பர் ஒருவர் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தவர். மிகுந்த இறையச்சமுடையவர். குர்ஆனைக்கொண்டு ஓதிப்பார்ப்பதில் தேர்ச்சிப்பெற்றவர்.

 

ஒருமுறை என்னிடம் அவர் தமது அனுபவம் ஒன்றை கூறினார்: என்னிடம் மிகப் பெரிய ஓர் வியாபாரி வந்து, "ஹள்ரத்! எனது இடக்கையில் மிகுந்த வலியாக உள்ளது. என்னால் இரவில் தூங்க முடியவில்லை. பகலில் சற்று இளைப்பாறகூட முடியவில்லை. இதற்காக நான் நிறைய மருத்துவர்களை ஆலோசித்து, நிறைய மருந்துகளையும் உட்கொண்டுவிட்டேன். அதனால் எந்த பயனும் கிடைக்கவில்லை. வலிதான் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இது எனது வாழ்க்கையையே துன்பமாக ஆக்கிவிட்டது. என்மீது கண்ணேறு பட்டிருக்கலாமோ, அல்லது என்மீது யாராவது மந்திரித்து ஊதிவிட்டிருக்கலாமோ என்று அஞ்சுகிறேன்" என்றார்.

 

நான் குர்ஆனின் பல வசனங்களைகொண்டு ஓதிவிட்டேன். இருப்பினும் அவருடைய நிலையில் மாற்றமில்லை. அவர் எனக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதே போன்று மூன்று முறை என்னிடத்தில் ஓதி பார்ப்பதற்கு வந்தார். நானும் எனக்குத்தெரிந்த வசனங்களையெல்லாம் ஓதிவிட்டு பார்த்தேன். இருப்பினும் அவருடைய நிலையில் மாற்றமில்லை. அவருடைய வலி மட்டும் அதிகரித்துக்கொண்டே போனது.

 

பிறகு இறுதியாக நான் அவரிடம், "உங்களுடைய இந்த வலி, நீங்கள் ஏற்கனவே செய்துவிட்ட பாவங்களுக்கான தண்டனையாக இருக்கலாம்; அல்லது நீங்கள் பலவீனர் யாருக்காவது அநியாயம் செய்திருக்கலாம்; அல்லது யாருடைய உரிமையையாவது பறித்திருக்கலாம்; அல்லது வேறு ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்காக உடனடியாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டுவிட்டு, நீங்கள் பிறரிடமிருந்து பறித்துக்கொண்ட உரிமைகளை அவர்களுக்கு உரிய முறையில் வழங்கிவிடுங்கள்; உங்களுடைய கடந்த காலப் பாவங்கள் அனைத்திற்கும் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுங்கள்" என்று கூறினேன்.

 

நான் சொன்னதை விரும்பாத அந்த வியாபாரி, "நான் ஒருபோதும் யாருக்கும்  அநியாயம் செய்யவில்லை; யாருடைய உரிமையிலும் வரம்புமீறவில்லை"  என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

 

பல நாட்களுக்குப் பிறகு நான் அவரை ஒருமுறை சந்தித்தேன். அவர் எந்த மருந்தும் சிகிச்சையும் இல்லாமல் தமது கை நலமாகிவிட்டதாக தெரிவித்தார். "அது எப்படி?" என்றேன். அவர், “ஹள்ரத்! நீங்கள் கூறியவற்றை நான் ஆழமாக சிந்தித்தேன். அப்போது என்னுடைய நினைவுக்கு ஒன்று வந்தது.

 

அதாவது, நான் எனது வீட்டை மாளிகையைப் போன்று கட்டிக்கொண்டிருந்தபோது எனது அந்த வீட்டுக்கு அருகில் ஒரு துண்டு நிலம் இருந்தது. நான் அதையும் என் நிலத்தோடு சேர்த்துக் கொண்டு என் வீட்டை மேலும் அழகுபடுத்த விரும்பினேன். அந்தத் துண்டு நிலம் ஒரு விதவைப் பெண்ணுக்குரியதாக இருந்தது. நான் அந்த நிலத்தை அப்பெண்ணிடம் விலைக்கு கேட்டேன். ஆனால், அப்பெண் தர மறுத்துவிட்டாள். இறுதியாக நான் என் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த துண்டு நிலத்தையும் கைப்பற்றிவிட்டேன். பிறகு அவள் அந்த நிலத்திற்கு அடிக்கடி வந்து, அங்கு கட்டடப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களிடம் சத்தமிடுவாள். அவர்களை வேலை செய்யவிடாமல் தடுக்க முயல்வாள். ஆனால், அவர்களோ அவளைப் பைத்தியக்காரி என நினைத்து கேலி செய்வார்கள். அவள் அங்கு வந்து அழுவாள். வானத்தை நோக்கிக் கைகளை ஏந்துவாள். நான் அதை என் கண்களால் கண்டுள்ளேன்.

 

ஒருவேளை அவள் இருள் சூழ்ந்த இரவுகளில் எனக்கு எதிராக செய்த பிரார்த்தனைதான் மிகக் கடுமையாக என்னை பாதித்துவிட்டது என்று நினைத்தேன். அவளைத் தேடி அலைந்து ஒரு வழியாக அவளைக் கண்டுபிடித்துவிட்டேன். நான் அவளை சந்தித்து, அழுது, என்னை மன்னிக்குமாறு கெஞ்சினேன். அவருடைய நிலத்திற்கான அபராதத் தொகையை அவள் பெற்றுக்கொள்ளச் சம்மதிக்கும் வரை, நான் அங்கேயே அமர்ந்துவிட்டேன். பிறகு அவள் என்னை மன்னித்து எனக்காகப் பிரார்த்தனை செய்தாள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவள் பிரார்த்தனைக்குப்பின் தன் கைகளைக் கீழே போட்டதும் என் கைகள் நலமடைந்ததை உணர்ந்தேன். மேலும், அவளுடைய பிரார்த்தனைதான் எந்த மருந்தும் குணப்படுத்த முடியாத என் கைகளைக் குணப்படுத்தியது" என மன உருக்கத்தோடு  கூறினார். நூல்:- இஸ்தம்திஃ பிஹயாதிக்க பக்கம்-238

 

எனவே, நாம் யாருக்கும் அநீதமிழைத்துவிடாமல் நம்மை தற்காத்துகொள்ள வேண்டும். அப்படியே நாம் ஏதோ ஒரு சூழ்நிலையில் அநீதமிழைத்துவிட்டாலும்கூட உடனே உஷாராகி அவனிடம் உரிய வகையில் மன்னிப்பு தேடிட வேண்டும். அவன் மனதார மன்னித்துவிட்டால் தப்பித்தோம். இல்லையெனில் நம் நிலை படுமோசமாகிவிடும் என்பதில் கவனம் தேவை.

 

நமக்கு ஏற்பட்டுள்ள தீராத நோய்க்கு வாழ்நாளில் நாம் பிறருக்கு செய்துவிட்ட அநீதம்கூட காரணமாக இருக்கலாம். எனவே, இது குறித்து நாம் யோசிக்க வேண்டும்.

 

கனவுகள் மூலம்

 

யூசுஃப் நபி தமது சிறுபிராயத்தில் ஓர் வித்தியாசமான கனவு ஒன்றைக் கண்டார். அதை தமது தந்தை யஅகூப் (அலை) அவர்களிடம் எடுத்துரைத்தார். அதாவது, எதிர்காலத்தில் இறைத்தூதர் யூசுஃப் (அலை) அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்படுவார். அப்போது யூசுஃப் நபியின் பதினொரு சகோதரர்கள் யூசுஃப் நபியின் அதிகாரத்திற்கு அடிபணிந்து, மரியாதை கௌரவம் மற்றும் பாராட்டுக்காக அவர் முன் சிரம் பணிவார்கள். இவ்வாறு யூசுஃப் நபியின் எதிர்கால உயர்வை அல்லாஹுத்தஆலா அவருக்கு சிறுபிராயத்தில் கனவில் மூலம் சமிக்ஞையாக எடுத்துரைத்தான். இதையே தலைப்பில் காணும் திருவசனம் விவரிக்கிறது.

 

காலித் பின் சயீத் (ரலி) அவர்கள் கனவு ஒன்றைக் காணுகிறார்கள். ( أَنَّهُ وَقَفَ بِهِ عَلَى شَفِيرِ النَّارِ كَأَنَّ أَبَاهُ يَدْفَعُهُ مِنْهَا ، وَيَرَى أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ آخِذٌ بِحَقْوَتِهِ لَا يَقَعُ ، فَفَزِعَ مِنْ نَوْمِهِ ، فَقَالَ : أَحْلِفُ بِاَللَّهِ أَنَّ هَذِهِ الرُّؤْيَا حَقٌّ ، فَلَقِيَ أَبَا بَكْرِ بْنَ أَبِي قُحَافَةَ فَذَكَرَ ذَلِكَ لَهُ ) அதில் அவர் நரகத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார். அவரது தந்தை அவரை நரகில் தள்ள முயற்சிக்கிறார். அதைக் கண்ட அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அவர் நரகில் விழாதவாறு அவரின் இடுப்பை பிடித்துக்கொள்கிறார்கள். இதற்குப் பிறகு திடுக்கிட்டு விழித்த காலித் பின் சயீத் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த கனவு உண்மையானதுதான்” என்று கூறிக்கொண்டு அபூபக்ர் (ரலி) அவர்களை சந்தித்து நடந்ததைக் கூறினார்கள்.

 

அதற்குஅபூபக்ர் (ரலி) அவர்கள், ( أُرِيدُ بِك خَيْرٌ ، هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ ، فَاتَّبِعْهُ فَإِنَّكَ سَتَتْبَعُهُ وَتَدْخُلُ مَعَهُ فِي الْإِسْلَامِ ) “நான் உனக்கு நல்லதையே நாடுகிறேன். இதோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள். அவர்களை நீர் பின்பற்று. அவ்வாறு நீர் அவர்களைப் பின்பற்றிவிட்டால், நீர் அவர்களுடன் இஸ்லாத்தில் நுழைந்தவராகிவிடுவீர். (நீர் நரகில் விழாமல் அவர்கள் உன்னை பாதுகாப்பார்கள். ஆனால், உனது தந்தையோ நரகில் விழுந்துவிட்டார்)” என்று கூறினார்கள். அதன் பிறகு காலித் பின் சயீத் (ரலி) அவர்கள் நபியவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அறிவிப்பாளர்:- அம்ர் பின் உஸ்மான் (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம், அல்பிதாயா வந்நிஹாயா

 

காலித் பின் சயீத் (ரலி) அவர்கள் இஸ்லாத்தில் ஏற்பதற்கு அவர்கள் கண்ட இந்த கனவே காரணமாக அமைந்தது.

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் ரஹ்மத், (நிஅமத் எனும்) அருள்வளம் பற்றிய திருவசனங்களை ஓதுவதாகக் கண்டால், அது அவருடைய நற்செயல்களை குறிக்கும். கோபம், தண்டனைகள், எச்சரிக்கைகள் பற்றிய திருவசனங்களை ஓதுவதாகக் கண்டால் அவர் பாவம் செய்து வருகிறார். அதிலிருந்து அவர் விடுபட வேண்டும் என்ற இறைவிருப்பத்தின் அச்சுறுத்தல்கள் என்று புரிந்துகொண்டு அவர் திருந்த முன் வர வேண்டும். நூல்:- தலீலுல் ஹைரானி ஃபீ தஃப்சீரில் அஹ்லாம் - முஹம்மத் அலீ குத்ப்

 

கனவுகளுக்கு விளக்கம் கூறுவதில் பேரறிஞராகத் திகழ்ந்த முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, "இமாம் அவர்களே! நான் கனவில் குர்ஆனின் நஸ்ர் (110 வது) அத்தியாயத்தை ஓதுவதாகக் கண்டேன்" என்றார். அதற்கு இமாம் அவர்கள், "உமது குடும்பத்தாரிடையே நண்பர்களிடையே கொடுக்கல் வாங்கல்களை சரிசெய்து கொள்வீராக. (வஸிய்யத் எனும்) இறுதி விருப்பம் ஏதேனும் தெரிவிக்க வேண்டியதிருந்தால் தெரிவித்துவிடுவீராக"  என்றார்கள். அவர் "ஏன்?" என்று கேட்டார். அதற்கு இமாம் அவர்கள், "வானத்திலிருந்து இறங்கிய அத்தியாயத்தில் கடைசி அத்தியாயம் 'அந்நஸ்ர்' ஆகும்" என்று கூறினார்கள்.

 

அதன்படி அந்தக் கனவு கண்டவரின் மரணம் வெகுசீக்கிரம் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்ல மரணமாக அமைந்தது. நூல்:- தலீலுல் ஹைரானி ஃபீ தஃப்சீரில் அஹ்லாம் - முஹம்மத் அலீ குத்ப்

 

இமாம் இப்னு சீரீன் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, “ஒரு கூஜாவிற்கு இரண்டு வாய்கள் இருக்கிறது. நான் அதில் ஒரு வாயில் தண்ணீர் குடிக்கும்போது அந்தத் தண்ணீர் சுவையாக இருக்கிறது. மற்றொரு வாயில் நான் தண்ணீர் குடிக்கும்போது அந்தத் தண்ணீர் உப்பாக இருக்கிறது” என்று கூறினார். அதற்கு இப்னு சீரீன் அவர்கள், “நீ அல்லாஹ்விற்கு பயந்துகொள்! நீ உனது மனைவியின் சகோதரியுடன் உறவுகொள்கிறாய். இதை தவிர்த்துவிடு!” என்றார்கள்.

 

பஸரா நகரத்தின் பேரறிஞர் இயாஸ் பின் முஆவியா (ரஹ்) அவர்கள் தமக்கு 76 வயது நிறைந்த அந்த வருடத்தில் ஒரு கனவு காண்கிறார். அதாவது, தாம் ஒரு குதிரையிலும் தமது தந்தை ஒரு குதிரையிலும் செல்லும்போது இருவரின் குதிரைகள் ஒரே மாதிரி செல்கின்றன. யாருடைய குதிரையும் ஒன்றையொன்று முந்தி செல்லவில்லை.

 

இவ்வாறு தான் கண்ட கனவின் விளக்கத்தையும் அறிந்திருந்தார். (அதாவது எனது தந்தை மரணம் அடைந்த அதே வயதில் நானும் மரணம் அடைவேன்.) இதைக் குறித்து தமது வீட்டாரிடம் சொல்லி வைத்துவிட்டார்.

 

இவரின் தந்தை முஆவியா 76 வது வயதில் மரணமடைந்தார். இவரும் 76 வயதை அடைந்துவிட்டார்.

 

தமது 76 வது வயது முடிகின்ற இறுதி இரவில், (அதாவது தமது வாழ்நாளின் இறுதி இரவு) இவர் தமது மனைவியிடம், "இந்த இரவு என்ன இரவு என்பதை நீ அறிவாயா? என்று கேட்டார். பிறகு எனது தந்தையின் வயதை நானும் பூர்த்தி செய்துவிட்டேன் என்று கூறிவிட்டு, இரவு படுத்தார். இவர் இறந்துவிட்டதை இவர் குடும்பத்தார் காலையில் அறிந்துகொண்டனர். இவர் தமது 76 வது வயதில் ஹிஜ்ரி 122 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

 

அறிஞர்  முஹம்மத் அலீ குத்ப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் தமது கனவில் குர்ஆனை வாங்குபவராகக் கண்டால், கல்வி ஞானத்தின் மூலம் அவர் மக்களிடம் பிரபல்யமாகுவார்.

ஒருவர் குர்ஆனை விற்பவராகக் கண்டால், உலக ஆசாபாசங்களுக்காக மார்க்கத்தின் நெறிகளிலிருந்து அவர் விலகுவதைக் குறிக்கிறது.

ஒருவர் குர்ஆனை எரிப்பதாகக் கண்டால், மார்க்கத்திலிருந்து அவர் வெளியேறி விடுவார்.

ஒருவர் குர்ஆனை திருடுவதாகக் கண்டால் அவர் தொழுகையைப் புறக்கணிப்பவராக இருப்பார்.

ஒருவர் தமது கையில் குர்ஆன் உள்ளது. அதை அவர் விரித்துப் பார்க்கும்போது உள்ளே வெற்றுக் காகிதங்கள் தான் தெரிகின்றன. இறைவசனங்கள் எதுவும் இல்லை என்பதாகக் கண்டால், அவர் உள்ளொன்றும் புறமொன்றும் பேசுபவராக இருப்பார். அல்லது அப்படி பேசுபவர்களுடன் அவர் இருக்கிறார் என்பதை உணர்த்துவதாகும். நூல்:- தலீலுல் ஹைரானி ஃபீ தஃப்சீரில் அஹ்லாம்

 

தவறைத் திருத்தும்போது

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதரைப் பற்றி (வெறுப்பான) செய்தி ஏதேனும் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு கிட்டினால், "இந்த மனிதருக்கு என்ன நேர்ந்தது? (இவ்விதம்) கூறுகிறாரே!" என்று கூற மாட்டார்கள். மாறாக,( مَا بَالُ أَقْوَامٍ يَقُولُونَ كَذَا وَكَذَا ) "சில கூட்டத்தினருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இவ்வாறெல்லாம் கூறுகிறார்களே!" என்று தான் சொல்வார்கள். நூல் அபூதாவூத்-4156

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தாருக்கு நல்லொழுக்கம் கற்பிக்கும் சிறந்த ஆசானாக திகழ்ந்தார்கள். மக்களின் நலன்களைப் பாதுகாப்பார்கள். தவறிழைத்தவரின் மனதைப் புண்படுத்தி அவரை இழிவுக்குள்ளாக்க மாட்டார்கள். மக்களுக்கு மத்தியில் தவறிழைத்தவரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் இவ்விதம் சொல்லுகிறார் அல்லது செய்கிறார் என்று சொல்லாமல் மக்களில் சிலர் அல்லது பலர் இவ்விதம் சொல்கின்றனர் அல்லது செய்கின்றனர் என்று பொதுவாகக் கூறிவிடுவார்கள். நபியவர்களின் சமிக்ஞையைப் புரிந்துகொண்டு சம்பந்தப்பட்டவர் தம்மை திருத்திக்கொள்வார்.

 

ஹசன் (ரலி) ஹுசைன் (ரலி) ஆகிய இருவரும் ஒரு பெரியவர் (உளூ எனும்) அங்கத்தூய்மையை தவறாக செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். இருவருக்கும் அது பொறுக்க இயலவில்லை. அவரின் பிழையைச் சுட்டிக் காட்ட வேண்டும். ஆனால், அவரோ வயதில் மூத்தவராக இருக்கிறார். என்ன செய்வது? இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டு அந்த பெரியவரை நெருங்கினார்கள்.

 

"பெரியவரே! நாங்கள் இருவரும் உளூ செய்கிறோம். அதை நாங்கள் சரியாகச் செய்கிறோமா? என்று நீங்கள் பார்த்து சொல்லுங்கள்" என்றனர். அவரும் சரி என்று சொல்லி, இருவரும் உளூச் செய்வதை கூர்ந்து பார்ப்பதில் தன் பிழை அவருக்கு புரிந்தது. அப்போது அவர், "குழந்தைகளே! நீங்கள் சரியாகத்தான் உளூச் செய்கிறீர்கள். நான்தான் பிழையாக செய்தேன். இனிமேல் அதை சரி செய்து கொள்கிறேன்" என்றார்.

 

நாம் செய்கின்ற தவறை ஜாடை மாடையாக சுட்டிக் காட்டப்படும்போது அதை புரிந்துக்கொண்டு உடனே திருத்திக்கொள்ள வேண்டும். அதுவே, நல்லவர்களின் பண்பாகும்.

 

நஷ்டங்கள் மூலம்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلاَّ فَشَا فِيهِمُ الطَّاعُونُ وَالأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلاَفِهِمُ الَّذِينَ مَضَوْا )  எந்த ஒரு கூட்டத்தினரிடம் ஒழுக்கக்கேடான தீங்குகள் தோன்றி அவற்றை அவர்கள் வெளிப்படையாகச் செய்யும் அளவுக்குப் போய்விட்டால், கொள்ளைநோயும் முன் வாழ்ந்த அவர்களின் முன்னோர்களுக்கிடையே ஏற்பட்டிராத விதவிதமான நோய்களும் அவர்களிடையே நிச்சயம் பரவும்.

 

( وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلاَّ أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَؤُنَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ ) அவர்கள் எடை அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யும்போது பஞ்சம், கடும் நெருக்கடி, நாடாளும் மன்னரின் அடக்குமுறை ஆகியவற்றின் பிடியில் சிக்குவார்கள்.

 

( وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلاَّ مُنِعُوا الْقَطْرَ مِنَ السَّمَاءِ وَلَوْلاَ الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا ) அந்த சமூக மக்கள் தமது செல்வங்களுக்கான (ஸகாத் எனும்) கட்டாயக் கொடையை வழங்காமல் தம்மிடம் வைத்துக் கொள்வார்கள். அதன் விளைவாக வான் மழை பொழிவது நிறுத்தப்பட்டு விடும். கால்நடைகள் மற்றும் இல்லாதிருந்தால் மழை பொழிவது முற்றிலும் நின்றுபோகும்.

 

( وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلاَّ سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ ) அந்த மக்கள் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தையும் அவனது தூதரின் ஒப்பந்தத்தை முறித்து விடும்போது அல்லாஹ், அவர்களின் மீது மற்றவர்களிலிருந்து பகைவர்களை ஏற்படுத்தி அடக்கி ஆளச் செய்வான். எனவே பகைவர்கள், அவர்களின் கைவசம் இருக்கும் சிலவற்றையும் பறித்து கொள்வார்கள்.

 

( وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ إِلاَّ جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ )  அந்த சமூகத்தாரின் தலைவர்கள் அல்லாஹ்வின் வேதத்தின்படி தீர்ப்பு வழங்காமல் அல்லாஹ் தமக்கு அருளியவற்றை தேர்ந்தெடுக்காமல் செயல்படும்போது அவர்களில் சிலரை சிலருக்குப் பகைவர்களாய் ஆக்கிவிடுவான். (அதனால் பிளவுகள் தோன்றும் இறைவேதனை இறங்கும்.) அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-4009, ஹுல்யத்துல் அவ்லியா இமாம் அபூநயீம், ஹாக்கிம், தப்ரானீ, ஸஹீஹ் ஜாமிஉ-7978 

 

பாவச்செயல்கள் ஆற்றுவது சோதனைகளையும் தண்டனையும் உருவாக்கித் தரும் என்று இந்த நபிமொழி எச்சரிக்கிறது.

 

அப்துல்லாஹ் பின் ஹவாலா அல்அஸ்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தமது (சிறப்பிற்குரிய) கையை என்னுடைய தலையில் வைத்து, ( يَا ابْنَ حَوَالَةَ إِذَا رَأَيْتَ الْخِلاَفَةَ قَدْ نَزَلَتْ أَرْضَ الْمُقَدَّسَةِ فَقَدْ دَنَتِ الزَّلاَزِلُ وَالْبَلاَبِلُ وَالأُمُورُ الْعِظَامُ، وَالسَّاعَةُ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنَ النَّاسِ مِنْ يَدِي هَذِهِ مِنْ رَأْسِكَ ) "ஹவாலாவின் மகனே! (பொதுவான) அரசு, புனித (ஷாம்) பூமியில் அமையக் கண்டால் பூகம்பமும், கவலைகளும், துக்கங்களும் போன்ற மிகப்பெரிய காரியங்களும் (ஒன்றன்பின் ஒன்றாக) நெருக்கமாகவே நடந்தேறும். மறுமைநாள் (அடையாளங்கள்) உனது தலையில் உள்ள இந்த என் கையைவிட அந்நாளில் மக்களுக்கு மிக நெருக்கமாக நிகழும் (என்பதை அறிந்துக்கொள்!)" என்று கூறினார்கள்.  அபூதாவூத்-2173

 

மனிதனிடம் பாவங்கள் அதிகரிக்கும்போது அல்லாஹ் இந்த உலகத்தை அழிப்பதற்கு ஆயத்தமாகிவிடுகிறான். அதன் துவக்கமாக நிலநடுக்கங்கள் ஏற்படலாம். எனவே, இந்த நிலநடுக்கங்கள் மூலம் மனிதன் படிப்பினை பெற்று, தம்மை திருத்திக்கொள்ள முயல வேண்டும்.

 

மனிதனுக்கு ஏற்படும் கவலைகள், நஷ்டங்கள், அழிவுகள் என அனைத்தும் அவன் ஆற்றிய வினைக்கு எதிர்வினையாகக்கூட இருக்கலாம் என்று இஸ்லாம் இயம்புகிறது.

 

தாபியீன்களில் ஒருவருமான ஃபள்ல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைப்படி நடப்பதில் நான் குறைவு செய்யும்போது அதன் பிரதிபலிப்பை என் மனைவி, அடிமைகள் மற்றும் எனது வாகனமான கால்நடைகளில் கண்டு கொள்வேன். அதாவது, அல்லாஹ்வின் கட்டளைகளை செயல்படுத்துவதில் நான் சோம்பல் செய்யும்போது எனக்கு கீழ் இருப்பவர்கள் எனக்குரிய கடமையை நிறைவேற்றுவதில் குறை செய்வார்கள்.

 

ஏராளமான இலாபங்களை தந்த தொழில்துறை, தற்போது நஷ்டத்தை தருகிறது என்றால் அதற்கு நமது பாவச்செயலே காரணம் என்று உணர்த்தப்படுவதாக எண்ணவேண்டும்.

 

நம்முடைய வாழ்க்கையில் சமிக்ஞையால் உணர்த்தப்படுவதை அறிந்துகொள்ளும் புத்திசாலிகளாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 


Wednesday, 18 June 2025

சமாதானம் பேணுவோம்!

 

சமாதானம் பேணுவோம்!

 

فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ

(பிறரின் அநியாயத்தை) மன்னித்து சமாதானமாக செல்வோருக்கு அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அவன் அநியாயம் செய்பவர்களை விரும்பமாட்டான். திருக்குர்ஆன்:-  42:40

 

உலகெங்கும் அமைதி நிலவ சமாதானம் தேவைப்படுகிறது.

 

சண்டை, வழக்கு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் அமைதிப்படுத்துவதை அரபியில் "அல்இஸ்லாஹ்" (சமாதானம்) என்பர். சமாதானம் பல வகைப்படும். முஸ்லிம் - முஸ்லிம் அல்லாதவர் இடையே சமாதானம், கணவன் - மனைவி இடையே சமாதானம், நீதியை விரும்புவோர் - அநீதியை விரும்புவோர் இடையே சமாதானம், கோபத்தில் உள்ள இருவரிடையே சமாதானம், காயங்களுக்கு சமாதானம் ஆகியவை அவ்வகைகளில் அடங்கும்.

 

மனிதர்கள் பல்வேறு உணர்வுகளையும் எண்ணங்களையும் கொண்டவர்கள். அவர்களிடையே கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு, வழக்கு போன்றவை ஏற்படுவது இயல்பு. ஆனால், அமர்ந்து பேசி, சீர்தூக்கிப் பார்த்து அமைதிக்கான வழியை தேடினால் நிச்சயம் வழி பிறக்கும். இவ்வாறு சமாதானம் அடைவதும் சமாதானப்படுத்துவதும் மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்பதில் சந்தேகமில்லை. இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம் என்பதால் சமாதானத்திற்கு முதலிடம் அளிக்கிறது. அதை ஒரு அறச்செயலாக கருதுகிறது.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டு துல்கஅதா மாதம் உம்ரா செய்வதற்காக சுமார் 1500 முஸ்லிம்களுடன் மக்கா நகர் நோக்கி வந்தார்கள். மக்காவிலிருந்து சற்று தூரத்தில் உள்ள "ஹுதைபியா" எனும் இடத்தில் தங்கினார்கள். தமது நோக்கத்தை மக்காவாசிகளிடம் தெரிவித்து வருமாறு உஸ்மான் (ரலி) அவர்களை நபியவர்கள் அனுப்பிவைத்தார்கள். ஆனால், மக்காவாசிகள் முஸ்லிம்களை மக்கா நகருக்குள் நுழைய அனுமதிக்கவில்லை இறுதியில் ஹுதைபியா எனும் அந்த இடத்தில் முஸ்லிம்களுக்கும் மக்காவாசிகளுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது.

 

முஸ்லிம்கள் சார்பாக நபியவர்களும் மக்கா குறைஷியர் சார்பாக சுஹைல் பின் அமர் என்பவரும் இதில் கலந்துகொண்டனர். பின்னர், அதே இடத்தில் தாம் கொண்டு வந்திருந்த குர்பானி பிராணியை அறுத்து தலையை மழித்துக்கொண்ட நபியவர்கள் மதீனா திரும்பினார்கள். அடுத்த ஆண்டு உம்ரா செய்தார்கள். வரலாற்று சிறப்புமிக்க இந்த சமாதான ஒப்பந்தம் தான், மக்கா வெற்றிக்கு வழிகோலியது. பலர் இஸ்லாத்தைத் தழுவிடக் காரணமானது. நபியவர்களின் இராஜதந்திரம் இதில் பளிச்சிட்டது.

 

சான்றோர்களின் கூற்று

 

அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( أَلاَ أُخْبِرُكُمْ بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ الصِّيَامِ وَالصَّلاَةِ وَالصَّدَقَةِ ) "நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றின் அந்தஸ்தைவிட மிகச்சிறந்த நற்செயலை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?" என்று (எங்களிடம்) கேட்டார்கள். நாங்கள், ஆம் (அறிவியுங்கள்)" என்று கூறினோம்.

 

நபியவர்கள், ( صَلاَحُ ذَاتِ الْبَيْنِ فَإِنَّ فَسَادَ ذَاتِ الْبَيْنِ هِيَ الْحَالِقَةُ ‏  ((பகைமை கொண்ட) இருவருக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதே அது. ஏனெனில், இருவருக்கிடையே பிணக்கை ஏற்படுத்துவதானது, மழிக்ககூடியதாகும்" என்று கூறினார்கள். மீண்டும் நபியவர்கள், ( هِيَ الْحَالِقَةُ لاَ أَقُولُ تَحْلِقُ الشَّعْرَ وَلَكِنْ تَحْلِقُ الدِّينَ ) "அது மழிக்கக்கூடியதாகும். தலைமுடியையும் மழிக்கும் என்று நான் சொல்லவில்லை. மாறாக, மார்க்கத்தையே மழித்து அழித்துவிடக் கூடியதாகும்" என்று கூறினார்கள் நூல்:- அபூதாவூத்-4273, திர்மிதீ-2433

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இருவருக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தியவருக்கு, ஒவ்வொரு வார்த்தைக்கும் அல்லாஹ் ஒரு அடிமையை விடுவிப்பதற்கான வெகுமதியை வழங்குகிறான்.

 

அபூ உமாமா (ரலி ) கூறினார்கள். நோயாளியைப் பார்க்க ஒரு மைல் (ஆனாலும்) நடந்து செல்லுங்கள். அல்லாஹ்வுக்காக உங்கள் சகோதரரைப் பார்க்க இரண்டு மைல்கள் (ஆனாலும்) நடந்து செல்லுங்கள். இருவருக்குமிடையே சமாதானத்தை ஏற்படுத்த மூன்று மைல்கள் (ஆனாலும்) நடந்து செல்லுங்கள்.

 

இருவரிடையே அல்லது இரு சமூகங்களுக்கிடையே சமாதானத்துவமும் புரிந்துணர்வும் நிலவுவது அமைதியான வாழ்க்கைக்கு துணை நிற்கும். அமைதியான சூழல் நிலவினால்தான் பிழைப்பு மற்றுமின்றி வழிபாடுகளும் சீராக நடைபெறும். சமாதானத்தை கெடுப்பதானது நல்லுறவையும் அமைதியையும் பாதிக்கும். இறுதியில் அது மார்க்கத்தையே அழித்துவிடும்.

 

பொய் சொல்லலாம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَيْسَ بِالْكَاذِبِ مَنْ أَصْلَحَ بَيْنَ النَّاسِ فَقَالَ خَيْرًا أَوْ نَمَى خَيْرًا ) (பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடையே நல்லதைப் புனைந்து சொல்லி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தியவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொன்னார். அறிவிப்பாளர்:- உம்மு குல்ஸும் பின்த் உக்பா (ரலி) அவர்கள் நூல்:-  புகாரீ-2692, முஸ்லிம்-5079 திர்மிதீ-1861

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَحِلُّ الْكَذِبُ إِلاَّ فِي ثَلاَثٍ يُحَدِّثُ الرَّجُلُ امْرَأَتَهُ لِيُرْضِيَهَا وَالْكَذِبُ فِي الْحَرْبِ وَالْكَذِبُ لِيُصْلِحَ بَيْنَ النَّاسِ ) மூன்றில் தவிர வேறு எதிலும் பொய்யுரைப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவை: 1) மனைவியைத் திருப்திப்படுத்துவதற்காக கணவன் அவளிடம் சொல்லும் (பொய்ச்) செய்தி. 2) (எதிரியை வீழ்த்த) போரில் சொல்லப்படும் பொய். 3) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக சொல்லப்படும் பொய். அறிவிப்பாளர்:-  அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5079, திர்மிதீ-1862

 

சண்டைக்காரர்களுக்கிடையே நற்பேச்சை பேசிய தீய கருத்துக்களை களைபவர் பாராட்டுக்குரியவர் ஆவார். எடுத்துக்காட்டாக: இன்னார் உமக்கு சலாம் கூறினார். உன்மீது அன்பு வைத்துள்ளார் உம்மைப்பற்றி நல்ல விதமாக பேசுகிறார். என்பன போன்ற சமாதான வாக்கியங்களை அவரிடமிருந்து செவியுற்றிருக்காவிட்டாலும் எடுத்துக்கூறி இருவருடைய சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர்.

 

பெரும் பிரளயம் தடுக்கப்பட்டது

 

ஹிஜ்ரீ ஐம்பதாம் ஆண்டு ஹசன் (ரலி) அவர்கள் இந்த உலகை விட்டு பிரிந்ததும் அவர்களின் உடலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருகில் அடக்கம் செய்திட ஆயிஷா (ரலி) அவர்களிடம் அனுமதி கோரப்பட்டது. அன்னையவர்களும் பெருந்தன்மையுடன் அனுமதி அளித்தார்கள்.

 

ஹசன் (ரலி) அவர்கள் உயிருடன் இருந்தபோது எண்ணியது போலவே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதாவது, அப்போது மதீனா நகரில் இருந்த மர்வான் என்பவருக்கு இச்செய்தி கிடைத்தது. அவர், "ஹசன் (ரலி) அவர்களுடைய உடலை நபியவர்களின் அருகில் அடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். காரணம், ஹசன் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களின் உடலை நபியவர்களுக்கு அருகில் அடக்கப்பட அனுமதி வழங்க தடையாக இருந்தார். எனவே, ஹசன் (ரலி) அவர்களை மட்டும் எப்படி அங்கே அனுமதிக்கலாம். இது கூடாது இதற்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன்" என்று அடம் பிடித்தார்.

 

ஹுசைன் (ரலி) அவர்கள் மர்வானுடன் போர் புரிய தயாராகிவிட்டார்கள். மர்வானும் போருக்கு தயாராகிவிட்டார். மதீனா வீதியில் முஸ்லிம்களின் இரத்தம் ஆறாக ஓடும் நிலை ஏற்பட்டுவிட்டது. இத்தருணத்தில் நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கு வருகை தந்து விவரத்தை கேட்டறிந்த பிறகு, "இது என்ன அநியாயம்? நபியவர்களின் பேரர் தங்கள் பாட்டனார் அருகே அடக்கப்படும் விஷயத்தில் மறுக்கப்படுகிறது?" என்று கூறினார்.

 

பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ஹுசைன் (ரலி) அவர்களை நோக்கி! "என்னை அடக்கம் செய்யும் விஷயத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்படுமாயின், எனது பாட்டனார் அருகில் அடக்க வேண்டும் என்று வற்புறுத்தாமல், பொதுமக்கள் அடக்கப்படும் ஜன்னத்துல் பகீஉ என்ற பொதுமையவாடியில் அடக்கம் செய்துவிட வேண்டும் என்று ஹசன் (ரலி) அவர்கள் கடைசியாக உபதேசம் செய்திருப்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்" என்று ஹசன் (ரலி) அவர்களின் இறுதி உபதேசத்தை (மரண வசியத்தை) நினைவு படுத்தினார்.

 

தக்க தருணத்தில் இதை நினைவுபடுத்தியதும் ஹுசைன் (ரலி) அவர்களின் கோபம் சட்டென தனிந்தது. பிறகு ஹசன் (ரலி) அவர்களை மதீனாவில் உள்ள ஜன்னத்துல் பகீஉ என்ற பொதுமையவாடியில் தமது தாயார் பாத்திமா (ரலி) அவர்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

இதனால் பனூ உமையா -  பானு ஹாஷிம் ஆகிய இரு குலத்தார்களிடையே ஏற்படவிருந்த மிகப்பெரிய போர் அடங்கிவிட்டது.

 

ஹசன் (ரலி) அவர்கள் உயிரோடிருந்தபோதும், இறந்த பின்பும் முஸ்லிம் சமுதாயம் பிளவுபடாமல், இரத்தம் சிந்தாமல் அவரால் ஒற்றுமை ஏற்பட்டது.

 

பொய் சொல்வது ஹராமாக இருந்தாலும், மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்களை நீக்கவும் அல்லாஹ் பொய் சொல்வதை அனுமதித்திருப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில், மோதல்கள் மற்றும் வாதங்கள் தனி மனிதர் மற்றும் சமூகங்களின் மத உறுதிப்பாட்டின் மீது ஏற்படுத்தும் பெரும் எதிர்மறையான விளைவுகளே இதற்குக் காரணம்.

 

ஒதுங்கிச்செல்லக் கூடாது  

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம், ‘‘தாங்கள் அப்துல்லாஹ் பின் உபையிடம் வந்தால் (நன்றாயிருக்கும்)” என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அவரிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவரை நபி (ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது அவர், ( إِلَيْكَ عَنِّي، وَاللَّهِ لَقَدْ آذَانِي نَتْنُ حِمَارِكَ ) “தூர விலகிப் போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கழுதையின் துர்நாற்றம் எனக்குத் தொல்லை தந்துவிட்டது” என்று கூறினார்.

 

அப்போது அவர்களிடையே இருந்த அன்சாரி (தோழர்) ஒருவர், ( وَاللَّهِ لَحِمَارُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَطْيَبُ رِيحًا مِنْكَ ) “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கழுதை உன்னைவிட நல்ல வாசனையுடையதுதான்” என்று கூறினார்.

 

அப்துல்லாஹ்வுக்காக அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏச, அன்சாரியும் ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். அவர்கள் தங்களுக்கிடையே ஈச்சங் (கிளையின்) குச்சியாலும் கைகளாலும் செருப்புகளாலும் அடித்துக்கொண்டார்கள். அப்போது, ‘‘இறைjநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டால், அவர்களிடையே சமாதானம் செய்துவையுங்கள்” (49:9) எனும் வசனம் அருளப்பட்டது என்ற செய்தி எங்களுக்கு எட்டியது. நூல்:- புகாரீ-2691

 

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் மீதொருவர் கற்கள் வீசிக் கொள்ளுமளவிற்கு 'குபா' வாசிகள் (தமக்கிடையே) சண்டையிட்டனர். அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நபியவர்கள், ( اذْهَبُوا بِنَا نُصْلِحُ بَيْنَهُمْ ) "நம்மை அழைத்துச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வைப்போம்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2693

 

யாரோ இருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் நமக்கு ஏன் வந்தது வம்பு? என்ற அடிப்படையில் ஒதுங்கிச் செல்வது முறையல்ல. அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள சண்டையால் பிறருக்கு பாதிப்பு வரக்கூடும் என்று தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து, அவர்களை சமாதானத்திற்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

 

மக்கள் நலனில் அக்கறை

 

அபூபக்ரா (ரலி) அவர்கள்கூறியதாவது. (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீதிருக்க, அவர்களின் ஒரு பக்கத்தில் (பேரர்) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் அமர்ந்திருக்க, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருமுறை மக்களை நோக்கியும், மற்றொரு முறை ஹசன் (ரலி) அவர்களை நோக்கியும் (உரை நிகழ்த்திய வண்ணம்), ( إِنَّ ابْنِي هَذَا سَيِّدٌ، وَلَعَلَّ اللَّهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ عَظِيمَتَيْنِ مِنَ الْمُسْلِمِينَ ) ‘‘இந்த என் (புதல்வியின்) புதல்வர் தலைவர் ஆவார். முஸ்லிம்களின் இரு பெரும் கூட்டத்தாரிடையே இவர் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்துவைக்கவிருக்கிறான்” என்று கூறிக்கொண்டிருந்தை நான் பார்த்தேன். நூல்:- புகாரீ-2704

 

ஹிஜ்ரி 40 ஆம் ஆண்டு (கி.பி. 660) ரமளான் மாதம் ஆட்சித் தலைவர் (கலீஃபா) அலீ (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்ட பிறகு, அவர்களின் மூத்த மகனார் ஹசன் (ரலி) அவர்களுக்கு சிலர் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்து வாக்களித்தனர். கூஃபாவாசிகள் இவ்வாறு ஹசன் (ரலி) அவர்களுக்கு பைஅத் செய்து கொடுக்க, (ஷாம்) சிரியாவாசிகள் முஆவியா (ரலி) அவர்களுக்கு பைஅத் செய்தனர்.

 

இந்நிலையில் கூஃபாவில் ஓரிடத்தில் இருவரும் சந்திக்கும் நிலை உருவானது. முஆவியா (ரலி) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பி, இருவரைத் தமது சார்பாக அனுப்பினார்கள். முஆவியா (ரலி) அவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு, சமாதானத்திற்கு ஹசன் (ரலி) அவர்கள் இசைந்தார்கள். இதன் மூலம் இருபெரும் கூட்டத்தாரிடையே நடைபெறவிருந்த பெரும்போர் தவிர்க்கப்பட்டு, அமைதி திரும்பியது. ஹசன் (ரலி) அவர்கள் பதவி விட்டுக் கொடுத்தார்கள். முஆவியா (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவரானார்கள். நூல்:- உம்தத்துல் காரீ

 

இரு நாட்டுக்கு மத்தியில் போர் மேகம் சூழ்ந்த போதிலும், அந்த நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடி, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சமாதானத்தை விரும்புவது தான், தமது குடிமக்கள்மீதுள்ள அக்கறை உள்ள சிறந்த தலைமைப் பண்பிற்குரிய அடையாளமாகும்.

 

பெரிய மனசு

 

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் எனக்கு இப்னு அபீ ஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் வைத்துத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். (எங்கள்) இருவரின் குரல்களும் உயர்ந்தன. வீட்டிலிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கேட்டு விட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். தமது அறையின் திரையை விலக்கி, ‘கஅபே!’ என்றழைத் தார்கள். நான், ‘‘இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன்.

 

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ( فَأَشَارَ بِيَدِهِ أَنْ ضَعِ الشَّطْرَ )  "பாதிக்கடனைத் தள்ளுபடி செய்துவிடு" என்று தம் கரத்தால் சைகை காட்டினார்கள். ‘‘அவ்வாறே செய்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கூற, இப்னு அபீஹத்ரத் (ரலி) அவர்களிடம், ( قُمْ فَاقْضِهِ )  ‘‘நீங்கள் எழுந்து சென்று அவரது கடனை அடையுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்:- புகாரீ-2710

 

கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்படும்போது பொருள்வளம் உள்ளவர் சிறிது விட்டுக்கொடுப்பது மூலம் சமாதானம் ஏற்படக்கூடும்.

 

சமயோசிதமாக

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்ரவேலர்களில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருடைய நிலம் ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தமது நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், ‘‘என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத்தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை” என்று கூறினார்.

 

நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், ‘‘நிலத்தை, அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத்தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்குத்தான் உரியது)” என்று கூறினார்.

 

(இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக்கேட்டு சென்ற அந்த மனிதர், ( أَلَكُمَا وَلَدٌ ) ‘‘உங்கள் இருவருக்கும் பிள்ளை இருக்கிறதா?” என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், ( لِي غُلاَمٌ ) ‘‘எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்” என்று சொன்னார். மற்றொருவர், ( لِي جَارِيَةٌ ) ‘‘எனக்கு மகள் ஒருத்தி இருக்கிறாள்” என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், ( أَنْكِحُوا الْغُلاَمَ الْجَارِيَةَ، وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا مِنْهُ، وَتَصَدَّقَا ) ‘‘அந்தப் பையனுக்கு அந்தச் பெண்ணை மணமுடித்துவையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தானதர்மமும் செய்யுங்கள்” என்று தீர்ப்பளித்தார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3472, முஸ்லிம்-3544

 

சமாதானம் என்பது பலவிதமான பிரச்சினைகளையும், பலவிதமான சிக்கல்களையும் தீர்த்து வைக்கும் ஒரு கேடயமாக விளங்குகிறது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சமாதானத்தில்தான் அமைந்துள்ளது. சமாதானம் ஏற்படுத்துவது சாதாரணமானது அல்ல. அது சாதுர்யமாக, சமயோசிதமாக நடப்பவர்களின் கைகளில் உள்ளது.

 

மத்தியஸ்த்தார்

 

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. என் தந்தையின் சகோதரி ருபய்யிஉ பின்த் நள்ர், ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தாரிடம் என் குலத்தார், ‘‘இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள்; அல்லது (ருபய்யிஉவை) மன்னித்துவிடும்படி சொல்லுங்கள்” என்று கோரினார்கள். அவர்கள் (இரண்டில் எதற்குமே ஒப்புக்கொள்ள) மறுத்துவிட்டார்கள். ஆகவே, எங்கள் குலத்தார் நபி (ஸல்) அவர்களிடம் (விவரம் கூறி, தீர்ப்புப் பெற) வந்தார்கள்.

 

நபி (ஸல்) அவர்கள் (ருபய்யிஉவைப்) பழிவாங்கும்படி அவர்களுக்கு உத்தர விட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (என் சகோதரி) ருபய்யிஉவின் முன்பல் உடைக்கப்படுமா? அப்படி நடக்காது. தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பிவைத்தவனின் மீது சத்தியமாக! அவளது முன்பல் உடைக்கப்படாது” என்று கூறினார்கள்.

 

நபி (ஸல்) அவர்கள், ( يَا أَنَسُ كِتَابُ اللَّهِ الْقِصَاصُ ) "அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும். (ஆகவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)” என்று கூறினார்கள். பிறகு அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக்கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்துவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ( إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ ) "அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின்மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகின்றான்” என்று சொன்னார்கள். நூல்:- புகாரீ-2703

 

ஒரு வீட்டில் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு கணவர் தன் தந்தையின் பெயரான "முஹம்மது" என்பதைத்தான் வைக்க வேண்டும் என்று கூறினார். அவரின் மனைவி இல்லை, தன் தந்தையின் பெயரான "அப்துல்லாஹ்" என்பதைத்தான் வைக்க வேண்டும் என்று கூறினாள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து கொள்ளாமல் சண்டையிட்டுக் கொண்டனர். காரசாரமாக சண்டை முற்றியது.

 

இந்த சண்டையை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் வந்து என்னவென்று விசாரித்துவிட்டு, உங்களுக்கு மத்தியில் சமாதானம் ஏற்பட நான் அழகான யோசனை சொல்கிறேன். அதாவது, “முஹம்மது சலீம் அப்துல்லாஹ் என்று பெயர் வையுங்கள்” என்று கூறினார். சரி, “என் தந்தை பெயர் முஹம்மது. என் மனைவியின் தந்தை பெயர் அப்துல்லாஹ். இடையில் சலீம் என்று ஒரு பெயர் வருகிறது. அது யாருடையது?” என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர், “அது என் தந்தையின் பெயர்” என்றார்.

 

மத்தியஸ்த்தார் இயன்றவரை சண்டையிட்ட அந்த இரண்டு பேருக்கும் மத்தியில் சமாதானமாகும் அளவுக்கு அழகிய தீர்வைச் சொல்லவேண்டும். மாறாக, எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பது போல், அவர்களை மேலும் மோதவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தீயவர்களின் குணமாகும். சமாதானம் ஏற்படுத்த வருகின்றவன் விஷமியாக இருந்துவிட்டால், மேலும், பிரச்சினையை பெரிதாக்கி,  அதில் அவன் ஆதாயம் பார்த்துவிடுவான்.

 

"ஆனது ஆகிவிட்டது பெரிது படுத்தாதீர்கள். அவரவர் வேலையை போய் பாருங்கள்" என்று வெற்று வார்த்தையில் சமாதானம் கூறுவது சரியல்ல. பாதிப்புக்குள்ளானவன் இந்த சமாதானத்திற்கு ஒத்து வர மாட்டான். சமாதானத்தை ஏற்படுத்த வருபவர், பாதிப்பை உண்டாக்கியவருக்கு முறையாக புரியவைத்து, பாதிக்கப்பட்டவருக்குரிய இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும். ‌

 

உலக மக்கள், பிறர் உரிமைகளைப் பேணி, சண்டை சச்சரவின்றி நிம்மதியாக வாழ, அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...