Search This Blog

Monday, 28 April 2025

யாரிடம் கற்பது?

 

யாரிடம் கற்பது?

 

قَالَ لَهُ مُوسَى هَلْ أَتَّبِعُكَ عَلَى أَنْ تُعَلِّمَنِ مِمَّا عُلِّمْتَ رُشْدًا

அவரிடம் மூசா, ‘‘உமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ள நல்வழிகளில் சிலவற்றை எனக்கு நீர் கற்றுக்கொடுப்பதற்காக நான் உம்மைப் பின்தொடர்ந்து வரலாமா?" என்று கேட்டார். திருக்குர்ஆன்:- 18:66

 

இன்றைய நவ யுகத்தில் இஸ்லாமியர்கள் இணையதளத்தின் மூலமாக பூமிப்பந்தின் ஒரு கோடியில் இருந்து மற்றொரு கோடியில் இருப்பவரிடம் மார்க்கத்தை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

 

அவ்வாறு கற்றுக்கொடுப்பவர்கள் உண்மையாகவே முஸ்லிம் தானாஅவரின் பெற்றோர், அவரின் சொந்த ஊர், அவருடைய கொள்கை, அவருடைய இன்ன பிற விஷயங்கள் என்னவென்று அறியாமல் அவரிடம் கல்வி பயில்வது ஆபத்தானவையே!

 

ஒருவரின் அறிவாற்றல் அல்லது அவருடைய தொப்பி, தலைப்பாகை போன்ற இஸ்லாமிய உருவ அமைப்பை வைத்து, அவர் இறையச்சமுள்ள ஒரு முஸ்லிம் என்று முடிவெடுக்க முடியாது.

 

இஸ்லாமியர்கள் மத்தியில் புதுப்புது குழப்பங்களை உருவாக்குவதற்கும், இஸ்லாத்தின்மீது ஓர் தவறான நிலைப்பாட்டை உருவாக்குவதற்கும் யூத கிறிஸ்தவர்கள் இஸ்லாமியக் கல்வியை மிகவும் திறம்பட கற்று, இஸ்லாமியர்களின் உருவ அமைப்பில் தன்னை மாற்றியவாறு சதி வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது பேருண்மையாகும்.

 

நான்தான்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒருமுறை) மூசா (அலை) அவர்கள், இஸ்ரவேலர்களிடையே நின்று சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், ‘‘மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?” என்று வினவப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘நான்தான்” என்று பதிலளித்துவிட்டார்கள். ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில் மூசா (அலை) அவர்கள், ‘‘(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு” என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.

 

ஆகவே, அல்லாஹ் மூசா (அலை) அவர்களுக்கு, ( إِنَّ لِي عَبْدًا بِمَجْمَعِ الْبَحْرَيْنِ، هُوَ أَعْلَمُ مِنْكَ )  ‘‘(இல்லை;) இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர்” (எனவே, அவரிடம் சென்று சிலவற்றை கற்றுக்கொள்வீராக!)” என்று அறிவித்தான்.

 

மூசா (அலை) அவர்கள், ‘‘என் இறைவா! அவரைச் சந்திப்பதற்கு எனக்கு வழி எப்படி?” என்று கேட்டார்கள். (அதையும் அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்துத் தந்தான்.) அறிவிப்பாளர்:- உபை பின் கஅப் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-4725

 

வல்லோன் அல்லாஹுத்தஆலா, மூசா (அலை) அவர்களிடம் "நீர்,  எமது நேசர் களிர் (அலை) அவர்களிடம் சென்று சிலவற்றை கற்றுக்கொள்வீராக! அவர் உமக்கு கற்றுக் கொடுப்பதற்கு தகுதிமிக்கவர்" என்பதை அறிவித்தான்.

 

ஆம்! இஸ்லாமியப் போதனைகளைக் கற்றுக்கொடுப்பதற்கும் நல்லொழுக்கம் பேணுதல், நல்லறங்கள் புரிதல், (சுன்னத் வல்ஜமாஅத் எனும்) நேரிய கொள்கையில் நிலைத்திருத்தல் போன்ற தகுதிகள் அவசியமாகும். அப்படிப்பட்டவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது மட்டுமே அந்தக் கல்வி நேர்த்தியான, பயனுள்ள கல்வியாக அமையும்.

 

குழப்பத்திற்கே வழிவகுக்கும்

 

முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ( إِنَّ هَذَا الْعِلْمَ دِينٌ ، فَانْظُرُوا عَمَّنْ تَأْخُذُونَ دِينَكُمْ )  நிச்சயமாக இந்த (நபிமொழி) கல்வியும் மார்க்கம் தான். எனவே, உங்களுடைய மார்க்க ஞானத்தை எவரிடமிருந்து பெறுகிறீர்களோ அவரை உற்றுக் கவனியுங்கள். அறிவிப்பாளர்:- ஹிஷாம் பின் ஹஸ்ஸான் நூல்:- முஸ்லிம் முன்னுரை-24

 

சமீபத்தில் கேரளாவில் முஸ்லிமல்லாத ஒருவர் அரபுத்துறை பேராசிரியர் ஆனார். இந்தியாவின் முதல் முஸ்லிம் அல்லாத அரபுத்துறைப் பேராசிரியர்.

 

கேரளாவில் திருவனந்தபுரம் குற்றிச்சல் பகுதியைச் சேர்ந்த சமுத்திரா ஜி.ஜே. திருவனந்தபுரம் கலைக்கல்லூரி, அரபுத்துறையில் உதவிப் பேராசிரியராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ஒன்றாம் வகுப்பிலிருந்தே அரபு மொழியைக் கற்கத் தொடங்கிய சமுத்திரா, ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தாலும் அரபுத்  துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தாலும்  திருவனந்தபுரம் பல்கலைக் கழக கல்லூரியில் அரபு இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் முடித்து உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சில நாள்களுக்கு முன்பு பணியில் சேர்ந்திருக்கிறார்.

 

முஸ்லிமல்லாதவர்கள் குறிப்பாக பிராமணர்கள் அரபுத்துறைக்கு வருவதும், அரபுக்கல்லூரிகளில் சேர்ந்து பாடம் பயில்வதும், நிச்சயமாக இஸ்லாம் அல்லாத அரபு பாடத்திட்டம் உருவாகுவதற்கு வழிவகுக்கும்.

 

மேலும் தஃப்சீர், ஹதீஸ் பாடங்களை முஸ்லிமல்லாதவர்களிடம் கற்கும் வழிவகையும் ஏற்படும். இது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரபு நாடுகளில் குறிப்பாக எகிப்து, லெபனான், சிரியா, ஈராக் நாடுகள் சந்தித்ததாகும். முஸ்தஷ்ரீகீன் எனப்படும் புதிய கல்வியாளர்கள் உருவானார்கள். அவர்கள் மேற்கு நாடுகளில் இருந்து வந்து, அந்நாட்டு கல்வி உதவியில் அரபு நாடுகளில் உள்ள கல்வி நிலையங்களில் கல்வி கற்று, பின்னர் ஹதீஸ், குர்ஆன் போன்ற இஸ்லாமியப் பாடங்களை விமர்சித்து ஏராளமான ஆய்வு நூல்களை எழுதினார்கள். அவர்களுக்கெதிராக முஸ்லிம் அறிஞர்கள் பெரும்பாடுபட்டு போராடினார்கள். 

 

மத்தியில் பாசிசம் ஆளும் நிலையில், முஸ்லிமல்லாத பலர் இஸ்லாமிய இலக்கியங்களில் ஆய்வு செய்பவர்களாக வடஇந்தியாவில் வந்துவிட்டனர். இப்போது இந்நிலை தென்இந்தியாவுக்கு பரவத் தொடங்கியுள்ளது.

 

பாலஸ்தீனத்திலுள்ள அல்அக்சா பள்ளியில் பத்தாண்டுகள் இமாமாக ஒரு யூதர் இருந்து பின்னர் அம்பலமானதும் இத்தகைய போக்கின் விளைவு தான்.

 

அரபு நாடுகளில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட குழப்பங்களைப் போன்று ஒரு பெரும் குழப்பத்திற்கு தென்னிந்திய முஸ்லிம்கள் தயாராக இருக்க வேண்டும்.

 

ஏற்கனவே இங்கு குழப்பங்களுக்கு பஞ்சமில்லை தான். இஸ்லாமே வேண்டாம். ஹதீஸ்களே வேண்டாம். குர்ஆனே வேண்டாம் எனும் சூழ்நிலைகள் வர வாய்ப்புகள் உண்டு.

 

இணையதளத்தின் மூலம் அறியப்பட்ட அறிஞர்கள் என்றும், அவர் யார்? எந்தக் கொள்கைக்காரர் என்றும் எதைப்பற்றியும் அறியாமல் அவரின் சொற்பொழிவுகளை கேட்பதும், அவரின் நூல்களை வாசிப்பதும் குழப்பத்திற்கே வழிவகுக்கும்.

 

ஒருவரிடம் இருந்து மார்க்க ஞானங்களைப் பெறுவதற்கு முன்னர், அவர் யார்? என்ன? என்று அறிந்துக்கொள்வது அவசியமாகும். ஒருவரின் பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றல் நம்மை கவரும்போது, அவர் யார்? என்று உடனே அறிந்துகொள்ள நாம் முயற்சிக்க வேண்டும்.

 

ஒழுக்கநெறிகளைப் பேணாதவர்  

 

அபூசஹ்லா அஸ்ஸாயிப் கல்லாத் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு கூட்டத்தாருக்கு ஒருவர் தலைமை தாங்கி தொழுகை நடத்தினார். அப்போது அவர் கிப்லா திசையில் துப்பினார். அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் தொழுகையை நடத்தி முடித்ததும் நபியவர்கள் அவரது கூட்டத்தினரிடம், ( حِينَ فَرَغَ‏ لاَ يُصَلِّي لَكُمْ ) "இனி இவர் உங்களுக்கு தொழுகை நடத்த வேண்டாம்" என்று கூறினார்கள்.

 

அதன் பிறகு அவர் அந்தக் கூட்டத்தினருக்குத் தொழுகை நடத்த நாடியபோது மக்கள் அவரை தடுத்தனர். நபியவர்கள் அவர் குறித்துக் கூறியதை அவரிடம் தெரிவித்தனர். அவர் அது குறித்து நபியவர்களிடம் எடுத்துரைத்து (விளக்கம் கேட்ட) போது நபியவர்கள், "ஆம்! (நான் தான் அவ்விதம் கூறினேன்)" என்றார்கள்.

 

(அறிவிப்பாளர் கூறுகிறார்:) ( إِنَّكَ آذَيْتَ اللَّهَ وَرَسُولَهُ ) "நீர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் சிரமம் அளித்து (மாறு செய்து)விட்டீர்" என்று நபியவர்கள் அவரிடம் கூறியதாக நான் கருதுகிறேன். நூல்:- அபூதாவூத்-407, முஅஜமுல்கபீர் இமாம் தப்ரானீ

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ أَحَدَكُمْ إِذَا اسْتَقْبَلَ الْقِبْلَةَ فَإِنَّمَا يَسْتَقْبِلُ رَبَّهُ جَلَّ وَعَزَّ وَالْمَلَكُ عَنْ يَمِينِهِ فَلاَ يَتْفُلْ عَنْ يَمِينِهِ وَلاَ فِي قِبْلَتِهِ وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ ) நீங்கள் (தொழுகையில்) கிப்லாவை முன்னோக்குவது (உண்மையில்) அல்லாஹ்வை முன்னோக்குவதாகும். வலப்புறத்தில் வானவர்கள் இருப்பார்கள். (எச்சில் துப்பவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) கிப்லா திசையில் அல்லது வலப்பக்கத்தில் துப்பாதீர்கள். இடப்பக்கத்தில் அல்லது காலுக்குக் கீழ் துப்பிக்கொள்ளட்டும். அறிவிப்பாளர்:- அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-406

 

கிப்லா திசைக்கென்று ஒரு கண்ணியம் உள்ளது. அந்த கண்ணியத்தை தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் பேணவேண்டும். இதைக்கூட அறியாதவர் இமாமாக இருப்பதற்கு பொருத்தமற்றவர் என்பது நபியவர்களின் நிலைபாடு.

 

அபூயஸீத் அல்பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் ஒருமுறை தங்கள் மாணவர்களை நோக்கி, "இந்த இடத்தில் ஒரு இறைநேசர் இருக்கின்றார் என்று கூறப்படுகிறது. எனவே, வாருங்கள் அவரை போய் பார்த்து வரலாம்" என்று கூறினார்கள். இதைப்பற்றி ஒரு மாணவர் கூறுகிறார். நாங்கள் அவ்வாறு அந்த இறைநேசரைப் பார்ப்பதற்கு எங்கள் ஆசானுடன் போய்க்கொண்டிருந்த அந்நேரத்தில், ஒரு மனிதர் பள்ளிவாசலை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தார். அவருக்கு காரல் எச்சில் வரவே, சட்டென்று காரி கிப்லா திசையை நோக்கி துப்பிக் கொண்டே சென்றார்.

 

இதைப்பார்த்த எங்கள் ஆசான், "நாம் திரும்பிச்சென்று விடலாம் வாருங்கள். நாம் பார்க்க வந்தவர் அதோ கிப்லா திசையை நோக்கி எச்சிலைத் துப்பிக்கொண்டே செல்கிறாரே அவர்தான். அருமை நாயகம் (ஸல்) அவர்களுடைய (சுன்னத்) ஒழுக்கநெறிகளைப் பேணாத இவரிடம் என்ன இறைநேசத்தின் (விலாயத்தின்) தன்மையை நாம் பார்க்கமுடியும்?" என்று கூறி திரும்பிவிட்டார்கள். அவருக்கு எங்கள் ஆசான் சலாம்கூட சொல்லவில்லை. நூல்:- அல்மஃபாஹீம் யஜிபு அன் துஸஹ்ஹிஹ

 

ஓர் பள்ளிவாசலில் இமாமாக பணிபுரிபவர், மக்களுக்கு மார்க்க ஞானங்களை கற்பிக்கும் ஆசிரியர் மார்க்க ஞானங்களை முறையாக கற்றவராகவும்,  நல்லொழுக்கங்களை பேணுபவராகவும் இருக்கவேண்டும். அவ்வாறு பேணத் தவறும்போது அவர் இமாமாக அல்லது ஆசிரியராக இருக்க தகுதியற்றவராக ஆகிவிடுகிறார்.

 

ஒரு பொறுப்புக்கு பொருத்தமற்றவரை அமர்த்துவது சரியல்ல. மார்க்க ஞானங்களை பிறருக்குக் கற்பிப்பவருக்கு சில தகுதித் தரங்கள் தேவைப்படுகிறது. அது இல்லாதபோது அவரிடம் கல்வி கற்பதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.

 

வழிகெடுத்துவிடுவார்கள்

 

அஸ்மா பின்த் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. மனஇச்சைப்படி செயல்படக்கூடிய இருவர் இப்னு சீரீன் (ரஹ்) அவர்களிடம் வந்து, ( يَا أَبَا بَكْرٍ نُحَدِّثُكَ بِحَدِيثٍ؟ ) "அபூபக்ர் அவர்களே! ஒரு நபிமொழியை நாங்கள் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று வினவினார்கள். அதற்கு அன்னார் வேண்டாம் என்றார்கள். அவ்விருவர், ( فَنَقْرَأُ عَلَيْكَ آيَةً مِنْ كِتَابِ اللَّهِ )அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு வசனத்தை நாங்கள் உங்களிடம் ஓதி காட்டட்டுமா?” என்று வினவினார்கள். அதற்கும் அன்னார் அவர்கள் ( لَا، لِتَقُومَانِ عَنِّي أَوْ لَأَقُومَنَّ ) "வேண்டாம்; நீங்கள் இருவரும் என்னிடமிருந்து எழுந்து செல்கிறீர்களா? அல்லது நான் எழுந்து செல்லட்டுமா?" என்று கேட்டார்கள். அதன் பின் அவர்கள் இருவரும் புறப்பட்டுவிட்டனர்.

 

அதைக்கண்ட மக்கள் சிலர், "அபூபக்ர் அவர்களே! அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு வசனத்தை அவர்கள் உங்களிடம் ஓதி காட்டுவதில் உங்களுக்கு என்ன (சிரமம்) இருக்கிறது" என்று வினவினர். அன்னார், ( إِنِّي خَشِيتُ أَنْ يَقْرَآ عَلَيَّ آيَةً مِنْ كِتَابِ اللَّهِ فَيُحَرِّفَانِهَا، فَيَقِرُّ ذَلِكَ فِي قَلْبِي ) "அவர்கள் என்னிடம் ஏதாவது ஒரு இறைவசனத்தை ஓதுவார்கள். அ(தன் விளக்கத்)தை மாற்றிக் கூறுவார்கள். அது என் உள்ளத்தில் பதிந்துவிடும். (அது எனக்குச் சிரமத்தை ஏற்படுத்திவிடும்) என்று பதிலளித்தார்கள். நூல்:- தாரிமீ-411, மஆலிமுஸ் ஸுன்னா-384


ஹஜ்ரத் ஜீ மௌலானா முஹம்மத் யூசுப் (ரஹ்) அவர்கள் 30-03-1965 அன்று லாஹூர் மாநகரில் ஆற்றிய பேருரையில் கூறினார்கள்.

 

அபுல் ஃபலுல் பைஃஸி என்பவர் திருக்குர்ஆனுக்கு ஒரு விரிவுரை எழுதினார். அதில் அரபி வார்த்தைகளில் நுக்தா என்கிற புள்ளிகள் இல்லாமல் எழுதினார். இருப்பினும், இவர்தான் நமது நாட்டின் முகலாய மன்னரை வழிகெடுத்து புதிய மார்க்கத்தை ஏற்படுத்தி சமுதாயத்தைப் பாழாக்கினார்.


முகலாய மன்னர் அக்பர், “தீனே இலாஹி” என்ற ஒரு புதிய மதத்தை உருவாக்கினார். இது விஷயத்தில் அக்பரின் பின்புலத்தில் இருந்து உதவியவர் தீய ஆலிமாக இருந்த அபுல் ஃபைஸல் என்பவர் தான். அக்பரின் வழிகேட்டிற்கு இவர் தான் காரணமாக இருந்தார்.

 

இமாம் அபூஹாமித் அல்கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். வழிகேட்டை உருவாக்கியவர்கள் அனைவரும் புத்திசாலிகள் தான். (மாறாக, புத்திசாலிகள் அனைவரும் வழிகெடுப்பார்கள் என்று தவறாக எண்ணி விடக்கூடாது.)

 

கொக்கு அனைத்தும் வெள்ளையாகத்தான் இருக்கும். ஆனால் வெள்ளையாக இருப்பவை அனைத்தும் கொக்குகள் அல்ல.

 

இறையச்சமுள்ளவர்களா? என்று கவனி!

 

அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் யாரிடம் நபிமொழிகள் இருக்கின்றது என்று கேள்விப்படுகின்றாரோ அவர்களை நோக்கி பயணித்து, சென்ற உடனேயே அந்த நபிமொழிகளை கேட்டறிந்து கொள்ளாமல் சம்பந்தப்பட்டவரின் தொழுகை மனஓர்மையோடு மிகவும் நேர்த்தியாக இருக்கிறதா? என்று கவனிப்பார். இவர் எதிர்பார்க்கும் அளவிற்கு அவர்களின் தொழுகை மிகவும் நேர்த்தியாக இருந்தால் மட்டும்தான் அவர்களிடம் நபிமொழிகளை கற்றுக்கொள்வார். இவர் எதிர்பார்க்கும் அளவிற்கு அவர்களிடம் தொழுகை சரியாக அமையவில்லை என்றால் அவர்களிடமிருந்து எதையும் கற்றுக்கொள்ள மாட்டார்.

 

அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார். ஒரு மனிதன் தொழுகையில் அசட்டையாக இருப்பானேயானால் அவன் மற்ற காரியங்களிலும் அவ்வாறுதான் இருப்பான்.

 

இமாம் புகாரீ

 

மாமேதை இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் 16 வயது முதல் 36 வயது வரை கப்பலிலும் ஒட்டகத்திலும் நடந்தும், ஒவ்வொரு ஊர் ஊராக, நாடு நாடாக  அலைந்து, சுமார் 1080 ஆசிரியர்களிடம் 30 இலட்சம் நபிமொழிகளைக் கற்று, அனைத்து நபிமொழிகளையும் மனனம் செய்திருந்தார்கள். ஒருவரிடம் ஒரு நபிமொழி இருப்பது தெரிந்தால்கூட, எத்தனை நூறு மைல்கள் ஆனாலும் சென்று அந்த நபிமொழி கற்று வருவார்கள்.

 

ஒருமுறை இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் யஅகூப் என்பவரிடம் ஒரே ஒரு நபிமொழி இருப்பதை கேள்விபட்டதும் 200 மைல்கள் நடந்து சென்றார்கள். ஆனால், அன்று அவர் இறந்து அவரின் ஜனாஸாவைதான் பார்க்க முடிந்தது.

 

அவருடைய மகனார், “அந்த நபிமொழியை என் தந்தை என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். அதை நான் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன்” என்றார்.

 

இமாம் அவர்கள் “நான் மனிதர்களின் பொன்மொழிகளை சேகரிக்கவில்லை. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை சேகரிக்க வந்திருக்கிறேன். நான் நபிமொழிகளை மட்டும் பார்ப்பதில்லை. நபிமொழிகளை வைத்திருப்பவரின் ஒழுக்கங்களையும் பார்த்த பின்புதான் பதிவுசெய்வேன்” என சொல்லிவிட்டு அவரிடமிருந்து எந்த நபிமொழிகளையும் கற்றுக்கொள்ளாமல் சென்றுவிட்டார்கள்.

 

ஒருமுறை இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் ஒருவரிடம் ஒரு நபிமொழியைப் பெறுவதற்காக செலவுக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு எண்ணற்ற கஷ்டங்களை அனுபவித்தவாறு நெடுந்தூரம் பயணம் செய்து கடைசியாக குறிப்பிட்ட அந்த மனிதரை அடைந்தார்கள். அப்பொழுது அம்மனிதர் தனது குதிரையை அழைப்பதற்காக கையில், தீனி நிரம்பியது போலிருக்கும் ஒரு வெற்று பையைக் காட்டி அந்த குதிரையை அழைத்தார். அது வந்ததும் பையைக் பக்கத்தில் வைத்துவிட்டு அதைக் கட்டிப்போட்டார்.

 

இதைக் கவனித்த இமாம் அவர்கள், ( إِذَا كَانَ الرَّجُلُ يَكْذِبُ عَلَى بَهِيمَتِهِ فَأَخْشَى أَنْ يَكْذِبَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ) "ஒரு மனிதன் தன்னுடைய வளர்ப்புப் பிராணியிடம் பொய் சொல்லும்போது, அவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கூறிய நபிமொழிகள்) குறித்து பொய் சொல்வான் என்றே நான் பயப்படுகிறேன்" என்று எண்ணியவாறு அவரிடமிருந்து எந்த நபிமொழிகளையும் கேட்டறிந்து கொள்ளாமல் ஊர் வந்து சேர்ந்துவிட்டார்கள். நூல்:- அல்ஜவாமிஉ வல்முஜல்லாது வநஹ்வுஹா ( الْجَوَامِعُ وَالْمَجَلَّاتُ وَنَحْوُهَا )

 

இந்த மனிதர் தனது குதிரையை அருகில் வரவழைக்க இத்தகைய ஓர் தந்திரத்தை கையாளலாம். ஆனால், இத்தகைய ஒரு குறை கூட இல்லாதவரிடமே நான் நபிமொழிகளைப் பெற வேண்டுமே தவிர, இவரிடம் கேட்டு நான் அறிவிக்கும் நபிமொழியின் பரிசுத்தத்திற்கு இழுக்காகும்" என்று எண்ணினார்கள்.

 

ஒரு நபிமொழிக்காக நெடுந்தூரம் பயணம் செய்து அலைந்து திரிந்தும், கையிலிருந்த பணத்தைச் செலவழித்தும், ஓர் சின்ன குறைக்காக ஒரு நபிமொழியைப் பெறாமல் திரும்பி விட்டார்களெனில் இவர்களின் நபிமொழிகளின் தூய்மையை என்னவென்று சொல்வது?

 

குதிரையை தமது அருகில் வரவழைக்க,  அதை ஏமாற்றுபவர் நபிமொழி விஷயத்தில் அவ்வாறு இருக்கமாட்டார் என்று உறுதியாக சொல்ல இயலாது.

 

சுருங்கக்கூறின், "தவறானவர்களிடம் மார்க்க ஞானங்களை கற்றுக்கொள்வது சரியில்லை" என்பது இமாம் புகாரீ (ரஹ்) அவர்களின் நிலைப்பாடாகும்.

 

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் தமது மரண நேரத்தில் தமது புதல்வர்களிடம், ( يَا بَنِيَّ لَا تَقْبَلُو الْحَدِيثَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اِلَّا مِنْ ثِقَةٍ ) "என் அருமை புதல்வர்களே! நம்பிக்கையற்ற ஒருவர் மூலம் அறிவிக்கப்படும் எந்த ஒரு நபிமொழியையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம்" என்று கூறினார்கள். நூல்:-  தப்ரானீ, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-3 பக்கம்-291

 

போலிகள்

 

இராக்கிலும் சிரியாவிலும் மனித நாகரிகம் கண்டிராத காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்திய (அரபி இதழ்கள் தாஇஷ் என்று குறிப்பிடும்) ஐ.எஸ். இயக்கம் உண்மையில் யாருடையது? அதன் நிறுவனரும் தலைவரும் நான்தான் என்று வீடியோக்களில் காட்சியளித்து, தூய அரபிமொழியில் மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்த அபூபக்ர் அல்பஃக்தாதீ என்பவன் யார்? இவர்களின் பின்னணி என்ன என்பதெல்லாம் தெரியாமல் உலக முஸ்லிம்கள் பெரும் குழப்பத்தில் இருந்தனர்.

 

இந்நிலையில், குவைத்திலிருந்து வெளிவரும் ‘அல்முஜ்தமா’ எனும் (அக்டோர் 2014) இஸ்லாமிய அரபு மாத இதழில் ஃபிரான்ஸ் கலாசாரத் துறை பேராசிரியர் டாக்டர், ஸைனப் அப்துல் அஸீஸ் என்பவர்,  “இராக் கிறித்தவர்களும் இனப் படுகொலை பற்றிய ஊகங்களும்” என்ற தலைப்பில் பின்வருமாறு ஓர் கட்டுரை எழுதியிருக்கிறார்.

 

ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் ‘அபூபக்ர் அல்பஃக்தாதி’யை ‘பஃக்தாத் கலீஃபா’ என அவருடைய ஆதரவாளர்கள் அழைக்கின்றனர்.

 

பக்தாத் கலீஃபா, இஸ்ரேல் உளவு அமைப்பான ‘மொசாத்’தின் கையாள். இவன் யூதப் பெற்றோருக்குப் பிறந்தவன். அபூபக்ர் அல்பஃக்தாதியின் உண்மையான பெயர்: ஷைமோன் எலியூட். இவனை சியோனிஸ மொசாத், தன் உளவுப் பணிகளுக்காக உருவாக்கிப் பயிற்சியையும் அளித்துள்ளது. உளவுத் துறையிலும் வெளியுறவுத் துறையிலும் அவன் பயிற்சியை முடித்துள்ளான்.

 

அத்துடன், பல்வேறு இராணுவப் பயிற்சிகளுக்கும் உட்படுத்தப்பட்டான். பல்வேறு சோதனைகளையும் அவன் கடந்துவந்துள்ளான். இதுவெல்லாம் எதற்காக? அரபு மற்றும் முஸ்லிம்களின் வாழ்வையும் இஸ்லாமியச் சிந்தனைகளையும் அழிக்கும் சதிவேலைகளுக்கு எலியூட் தலைமை ஏற்க வேண்டும்; அழிவு சக்திகளை ஒருங்கிணைத்து வழிநடத்த வேண்டும் என்பதற்காகத்தான்!

 

இவனுடைய படையினர் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனும் கலிமா பொறிக்கப்பட்ட கறுப்புக் கொடியைத் தூக்கிக் காட்டுவார்கள். இதன்மூலம், இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பை உலக மக்களிடம் விதைக்கமுடியும் என்பது இவனை உருவாக்கிய யூத பயங்கரவாத அமைப்பான ‘மொசாத்’தின் கனவாகும். இப்படையினர், ஈவிரக்கமின்றி கைதிகளைத் துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை அறுத்தும் கொலை செய்வார்கள். இந்தப் பயங்கரமான காட்சிகளைப் படமாக்கி இணையதளம் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியிடுவார்கள். இவர்கள் (அதாவது, இஸ்லாமியர்கள்) இரத்த வெறிபிடித்த காட்டுமிராண்டிகள் என உலகம் அடையாளம் காண வேண்டும் என்பதே ‘மொசாத்’தின் நோக்கம்.

 

.எஸ். எனும் இந்தப் படைக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் அறவே இல்லை. இது, முஸ்லிம்களின் கரத்தாலேயே இஸ்லாத்தின் மீது போர் தொடுப்பதற்காக அமெரிக்க யூதர்கள் நிகழ்த்திய  நாடகமாகும்.  


இவன், நீண்ட தாடியுடன், அழகிய முறையில் தலைப்பாகை அணிந்த நிலையில் தன்னை ஒரு இஸ்லாமிய அறிஞராக காட்டிக்கொண்டு, தமது பேச்சாற்றலால் அப்பாவி இளைஞர்கள் பலரையும் வழிகெடுத்துள்ளான். இவனால் வழி கெட்ட இளைஞர்கள் இவனது பூர்வீகத்தை ஆய்வு செய்திருந்தால் வழிகெட்டிருக்கமாட்டார்கள்.

 

உலகளவில் இஸ்லாமிய எதிரிகள் (யூத, கிருஸ்தவர்கள், இந்தியாவில் சங்கிகள்) மார்க்கத்தின் பெயரால் முஸ்லிம்களுக்கு இடையே குழப்பங்களை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே போலியான இஸ்லாமிய அறிஞர்களை உருவாக்கி வருகின்றனர். இந்தியாவில் சங்கிகள் இதற்கு கடும் பயிற்சி கொடுத்து வருகின்றனர். முஸ்லிம்களுக்கு இது குறித்து கவனம் தேவை.

 

இறையச்சமும், நல்லொழுக்க மாண்புகளும் நிறைந்த நல்லோர்களிடமிருந்து மார்க்க ஞானங்களைக் கற்று, அதன்படி வாழும் நற்பாக்கியத்தை அல்லாஹுத்தஆலா நமக்கு வழங்கி அருள்புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

Friday, 25 April 2025

சுயமரியாதை

 

சுயமரியாதை

 

(அவர்களின் வறுமையைப் பற்றி) அறியாதவர், அவர்களின் சுயமரியாதையால் அவர்களை செல்வந்தர்கள் என்றே எண்ணுவார். திருக்குர்ஆன்:- 2:273

 

சுயமரியாதை (தன்மானம்) என்பது ஒரு மனிதன் தன்னை எப்படி பார்க்கிறான் என்பதை குறிக்கிறது. ஒவ்வொரு மனிதனும் சுயமரியாதையை விரும்புகிறான். அதைக் காத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துகிறான். ஏனெனில், ஒருவன் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் மதிப்பு - அதுதான் சுயமரியாதை.

 

தங்கள்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களைப் பாருங்கள். அவர்கள் பார்வையில் துணிச்சல் இருக்கும். வார்த்தைகளில் உறுதியும் உண்மையும் இருக்கும்.

 

அவர்கள் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் செயல்படுவார்கள். அதனால்தான், சுயமரியாதையைக் குறித்து எந்தவொரு மனநல நிபுணரிடம் கேட்டாலும், அவர் சொல்கின்ற அறிவுரை 'உங்களை நம்புங்கள்' என்பதே.

 

பிள்ளைகளுக்கும் சிறுவயதிலிருந்தே சுயமரியாதை என்ற நற்பண்பை ஊட்டி வளர்க்க வேண்டும். மரியாதையைப் பெறுகின்றவர்களாய் மட்டுமல்ல, மற்றவர்களையும் மரியாதையுடன் பார்க்கின்ற குணம் மேலோங்க வேண்டும். சுயமரியாதை எல்லோருக்கும் உண்டு. அதை எல்லோரும் மனதில் கொள்வதே சிறப்பு.

 

அறப்போருக்குச் சமம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஒரு மனிதர் கடந்து சென்றார். அப்போது அவரின் வலுவையும், சுறுசுறுப்பையும் கண்ட நபித்தோழர்கள் நபியவர்களிடம், ( يا رَسُولَ اللَّهِ، لَوْ كانَ هَذا في سَبِيلِ اللَّهِ ) "நாயகமே! இவர் அல்லாஹ்வின் பாதையில் (போராடுவதற்கு) வந்திருந்தால் நன்றாய் இருக்கும்" என்றனர்.

 

அதற்கு நபியவர்கள், ( إنْ كانَ خَرَجَ يَسْعى عَلى ولَدِهِ صِغارًا فَهو في سَبِيلِ اللَّهِ، وإنْ كانَ خَرَجَ يَسْعى عَلى أبَوَيْنِ شَيْخَيْنِ كَبِيرَيْنِ فَهو في سَبِيلِ اللَّهِ، وإنْ كانَ خَرَجَ يَسْعى عَلى نَفْسِهِ يُعِفُّها فَهو في سَبِيلِ اللَّهِ، وإنْ كانَ خَرَجَ يَسْعى رِياءً ومُفاخَرَةً فَهو في سَبِيلِ الشَّيْطانِ ) "இவர் தமது சிறு பிள்ளைகளுக்காக உழைக்க புறப்பட்டு சென்றால், இவர் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். இவர் தமது வயதான பெற்றோருக்காக உழைக்க புறப்பட்டுச் சென்றால், இவர் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். தான் சுயமரியாதையுடன் வாழ்வதற்காக உழைக்க புறப்பட்டு சென்றால், இவர் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். முகஸ்துதிக்காகவும் பெருமையடிப்பதற்காகவும் புறப்பட்டுச் சென்றால் இவர் ஷைத்தானின் பாதையில் இருக்கிறார்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அல்பகரா வசனம்-262

 

ஒரு முஸ்லிம் தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்துவதைப்போன்று தமது பெற்றோரையும் மனைவி மக்களையும் காப்பாற்றுவதற்காகவும், பிறரிடம் கையேந்தாமல் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் உழைக்கச் செல்வது சிறந்த அறப்போர் என்கிறது இந்த நபிமொழி.

 

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்பது தமிழ் பழமொழி. (அதாவது, கடல் கடந்து சென்றாவது செல்வத்தை தேடு.)

 

எதிர்பாராமல் ஏற்படுகின்ற அதிகப்படியான செலவுகளைச் சமாளிப்பதற்கு, சிலர் தங்கள் இடம், வீடு, நகை போன்றவற்றை  விற்கிறார்களே, ஏன்? இடம், வீடு, நகை போனால் மீண்டும் சம்பாதித்து வாங்கிக்கொள்ளலாம். ஆனால், நம் சுயமரியாதையை நாம் ஒருபோதும் இழந்துவிடக்கூடாது என்ற எண்ணம் தான்.

 

கடைவீதி எங்கே?

 

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது. (முஹாஜிர்களான) நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். சஅத் (ரலி) அவர்கள், ( إِنِّي أَكْثَرُ الأَنْصَارِ مَالاً، فَأَقْسِمُ لَكَ نِصْفَ مَالِي، وَانْظُرْ أَىَّ زَوْجَتَىَّ هَوِيتَ نَزَلْتُ لَكَ عَنْهَا، فَإِذَا حَلَّتْ تَزَوَّجْتَهَا‏ ) ‘‘நான் அன்சாரிகளிலேயே அதிகமான செல்வம் உடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என் இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக மணவிலக்குச் செய்கிறேன். அவரது (இத்தா எனும்) காத்திருப்புக் காலம் முடிந்ததும் அவரை உமக்கு மணமுடித்துத் தருகிறேன்” எனக் கூறினார்.

 

அப்போது நான், ( لاَ حَاجَةَ لِي فِي ذَلِكَ، هَلْ مِنْ سُوقٍ فِيهِ تِجَارَةٌ ) ‘‘இது எனக்குத் தேவையில்லை. வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?” எனக் கேட்டேன். அவர், ‘‘கைனுகா எனும் சந்தை இருக்கிறது” என்றார். நான் (அடுத்த நாள்) காலை அங்கு சென்று, (சம்பாதித்து) பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (இலாபமாகக்) கொண்டுவந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) அடையாளத்துடன் (அண்ணல் நபி - ஸல் அவர்களிடம்) வந்தேன்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ( تَزَوَّجْتَ ) ‘‘நீர் மணமுடித்துவிட்டீரா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். ‘‘யாரை?” என்றார்கள். ‘‘ஓர் அன்சாரிப் பெண்ணை” என்றேன். ( كَمْ سُقْتَ ) ‘‘எவ்வளவு (மஹ்ர் எனும்) மணக்கொடை கொடுத்தீர்?” என்று கேட்டார்கள். ‘‘ஒரு பேரீச்சங்கொட்டை எடைக்கு அளவுக்கு தங்கம்” என்றேன். அப்போது நபியவர்கள் ( أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ ) ‘‘ஓர் ஆட்டையேனும் (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளிப்பீராக!” என்றார்கள். நூல்:- புகாரீ-2048, முஸ்லிம், திர்மிதீ

 

ஒருவனுக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட, அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடு! சீன பழமொழி.

 

நம்மீது உள்ள மரியாதையால் அன்பளிப்பாக பிறர் தருவதையே பெற்று வாழ்வதைவிட, சம்பாதிக்கும் ஆற்றல் உள்ளவர், சுயமாக சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேறுவதே சிறந்தது. இதுவே சுயமரியாதைக்குரியவருக்கு அழகாகும்.

 

நாம் பிறருக்கு தர்மம் வழங்குவதைவிட அவர்களின் சுயமரியாதை பாதிக்காத வகையில் அவர்களாகவே சுயமாக பிழைத்துக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு வழியைக் காட்ட வேண்டும். அதாவது, அவர்கள் திறம்பட கல்விக் கற்க, அல்லது சுயதொழில் தொடங்க என எதற்காவது வழிகாட்ட வேண்டும். நாம் ஒருவருக்கு காலம் முழுவதும் வழங்கிக் கொண்டிருப்பது சாத்தியமாகாது. காலம் முழுவதும் பிறரின் நிழலில் வாழ்வது சுயமரியாதையற்ற கேவலமான வாழ்க்கையாகிவிடும்.

 

சுய முன்னேற்றம்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அன்சாரிகளுள் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யாசகம் கேட்டு வந்தார். (அவருக்கு யாசகம் கொடுப்பதற்குப் பதிலாக) ( أَمَا فِي بَيْتِكَ شَىْءٌ ) "உம்முடைய வீட்டில் ஏதேனும் (பொருள்) இருக்கிறதா?" என்று அவரிடம் வினவினார்கள். அதற்கு அவர், "ஆம் ஒரு போர்வை இருக்கிறது. அதில் ஒரு பகுதியை நாங்கள் அணிந்துகொண்டு, ஒரு பகுதியை விரித்துக் கொள்கிறோம். மேலும், நாங்கள் தண்ணீர் பருகின்ற ஒரு குவளையும் உள்ளது" என்று கூறினார்.

 

நபியவர்கள், ( ائْتِنِي بِهِمَا ) "அவ்விரண்டையும் எடுத்துவருவீராக" என்று கூறினார்கள். எனவே அவர் இரண்டையும் நபியவர்களிடம் எடுத்து வந்தார். நபியவர்கள் அவற்றை தமது கையில் வாங்கி ( مَنْ يَشْتَرِي هَذَيْنِ ) "இவ்விரண்டையும் யார் விலைக்கு வாங்கிக்கொள்கிறார்?" என்று கேட்டார்கள். ஒருவர், "நான் இவ்விரண்டையும் ஒரு வெள்ளிக்காசுக்கு வாங்கிக் கொள்கிறேன்" என்று கூறினார். அப்போது நபியவர்கள், ( مَنْ يَزِيدُ عَلَى دِرْهَمٍ ) "ஒரு வெள்ளிக்காசைவிட அதிகத் தொகைக்கு யார் வாங்கிக்கொள்கிறார்?" என்று இரண்டு அல்லது மூன்று தடவை கேட்டார்கள். அப்போது ஒருவர், "நான் அவ்விரண்டையும் இரண்டு வெள்ளிக்காசுகளுக்கு(ப் பகரமாக) வாங்கிக் கொடுக்கிறேன்" என்று கூறினார். எனவே, நபியவர்கள் அவ்விரண்டையும் அவரிடம் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து அந்த இரண்டு வெள்ளிக்காசுகளையும் வாங்கிக்கொண்டார்கள்.

 

நபியவர்கள், அந்த இரண்டு வெள்ளிக்காசுகளையும் அந்த அன்சாரி தோழரிடம் கொடுத்து, ( اشْتَرِ بِأَحَدِهِمَا طَعَامًا فَانْبِذْهُ إِلَى أَهْلِكَ وَاشْتَرِ بِالآخَرِ قَدُومًا فَأْتِنِي بِهِ ) "இவ்விரண்டில் ஒன்றின் மூலம் உணவுப் பொருளையும் வாங்கி, அதை உன் குடும்பத்தாருக்கு கொடுப்பீராக! மற்றொன்றின் மூலம் ஒரு கோடாரியை வாங்கிக்கொண்டு என்னிடம் வருவீராக" என்று கூறினார்கள்.

 

அவ்வாறே அவர் செய்தார். (அவர் வாங்கிக் கொண்டு வந்த கோடாரியை) நபியவர்கள் எடுத்து அதில் தமது கையால் ஒரு (கைப்பிடிக்) கம்பை இணைத்தார்கள். (பின்னர் அதை அவரிடம் கொடுத்து) ( اذْهَبْ فَاحْتَطِبْ وَبِعْ وَلاَ أَرَيَنَّكَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا ) "நீர் சென்று விறகு வெட்டி விற்பீராக! நான் உம்மை பதினைந்து நாள்களுக்குப் பார்க்கக் கூடாது" என்று கூறினார்கள். அவ்வாறே அவர் (சென்று) விறகு வெட்டி விற்கத் தொடங்கினார். (பின்னர் பதினைந்து நாள்கள் கழித்து) பத்து வெள்ளிக்காசுகளை சம்பாதித்துக் கொண்டு வந்தார்.

 

நபியவர்கள், ( فَاشْتَرَى بِبَعْضِهَا  طَعَامًا وَبِبَعْضِهَا ثَوْبًا ) "அவற்றுள் சிலவற்றின் மூலம் உணவையும் மேலும் சிலவற்றின் மூலம் ஆடைகளையும் வாங்கிக்கொள்வீராக!" என்று கூறிவிட்டுப், பின்னர், ( هَذَا خَيْرٌ لَكَ مِنْ أَنْ تَجِيءَ الْمَسْأَلَةُ نُكْتَةً فِي وَجْهِكَ يَوْمَ الْقِيَامَةِ ) "நீர் யாசகம் கேட்டு வருவதைவிட இதுவே சிறந்தது. யாசகம் கேட்பது மறுமையில் உமது முகத்தில் உள்ள (கரும்)புள்ளியாகும்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1398, நசாயீ-4432, இப்னுமாஜா-2089, முஸ்னது அஹ்மத்

 

இந்நிகழ்வின் மூலம் நபியவர்கள் உடல் வலிமையுள்ளவர்கள் யாசிப்பதை தடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உழைப்பின் அருமையை புரியவைத்துள்ளார்கள் எனத் தெரிகிறது.

 

யாரையும் அலட்சியமாக எண்ணிவிடக்கூடாது. இன்று நம்மிடம் உதவி கேட்டு நிற்பவர்கள், நாளை நம்மைவிட பலமடங்கு பெரிய நிலைக்கு வந்துவிடலாம். யாருக்குத் தெரியும்! அல்லாஹ்வே அறிந்தவன்.

 

நம்மிடம் கேட்டு வருபவர்களிடம், “ஆலோசனை சொல்கிறேன்” என்ற பெயரில் அவர்கள் மனம் நோகும்படியோ அல்லது  அவர்களை அவமானப்படுத்தும்படியோ நாம் நடந்துவிடக் கூடாது.

 

உடல் திடகாத்திரமானவர் யாசிப்பதை நாம் காணும்போது, "பிறரிடம் யாசிப்பது உமது சுயமரியாதையைப் பாதிக்கும். எனவே, நீ யாசிக்கும் பழக்கத்தை தவிர்த்திடு. மாறாக, ஏதேனும் சுயதொழில் செய்வதைப்பற்றி யோசி. அப்படி ஏதேனும் யோசனை இருந்தால் சொல். அதற்கு நான் ஏதேனும் உதவி செய்கிறேன். அல்லது வேலை வேண்டும் என்றால் சொல். அதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி, அதற்குரியதை அவருக்கு நாம் செய்துகொடுக்க வேண்டும். அவரின் சுயமரியாதையை நாம் நினைவூட்ட வேண்டும்.

 

கொடுக்கும் கரம்

 

ஒருமுறை பல்க் தேசத்தைச் சேர்ந்த இறைநேசர் ஷகீக் அல்பல்கி (ரஹ்) அவர்கள் வியாபார நோக்கமாக ஒரு பயணத்தை மேற்கொண்டார்கள். பயணிப்பதற்கு முன்னர் தனது நண்பர் இறைநேசர் இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்களைக் கண்டு பிரியாவிடை பெற்றுக்கொண்டார்கள். இவரது இந்த பயணம் நீண்ட நாள் பயணமாக அமைய இருந்தது. ஆனால், ஓரிரு நாட்களுக்குள் அவர் ஊர் திரும்பினார்கள். அவரை பள்ளியில் சந்தித்த இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் ஆச்சரியப்பட்டு, “என்ன நடந்தது? ஏன் அவசரமாக ஊர் திரும்பினீர்கள்” என்று வினவினார்கள்.

 

அதற்கு ஷகீக் (ரஹ்) அவர்கள், “நான் எனது பயணத்தின் பொழுது இடையில் ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்தேன். அது பாழடைந்த ஒரு இடமாக இருந்தது. அங்கே நான் குருடான, முடமான ஒரு பறவையைக் கண்டேன். கண் பார்வையற்ற, பறக்கவோ அசையவோ முடியாத அந்த பறவை இந்த ஒதுக்குப்புறமான இடத்தில் எப்படி உயிர் வாழ்கிறது? என்று நினைத்து ஆச்சரியம் அடைந்தேன். சற்று நேரத்தின் பின் அங்கு மற்றொரு பறவை வந்தது. அது இந்த பறவைக்கு தன் அலகுகளால் உணவளித்தது.  இவ்வாறு ஒரே நாளில்  பல தடவை உணவளித்தது. இதை பார்த்த நான், ஏன் நமக்கும் அல்லாஹ் இவ்வாறு உணவு அளிக்கமாட்டான்? என்ற எண்ணம் தோன்றவே, உழைப்பை நோக்காக கொண்ட எனது பயணத்தை இடைநிறுத்தி உடனே நான் ஊர் திரும்பிவிட்டேன்” என்று காரணத்தை விவரித்தார்கள்.

 

இதனை கேட்ட இப்ராஹீம் (ரஹ்) அவர்கள், “ஷகீக்! உமது இந்த நிலைப்பாடு எனக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. பிறரின் தயவில் வாழ்கின்ற அந்த குருடான, முடமான பறவையாக நீர் இருக்க விரும்புகிறீரா? ஏன் தனக்காகவும் குருடர்களுக்காகவும்  முடவர்களுக்காகவும் உழைக்கும் அந்த (உழைப்பாளி)  பறவையாக நீர் இருக்கக்கூடாது? (கொடுக்கும்) மேல் கரம் (வாங்கும்) கீழ் கரத்தைவிட சிறந்தது என்பதை நீர் அறியமாட்டீரா?” என்று வினவினார்கள். இதனைக் கேட்ட ஷகீக் (ரஹ்) அவர்கள், இப்ராஹீம் (ரஹ்) அவர்களின் கரங்களில் முத்தமிட்டு, “அபூஇஸ்ஹாக்! நீர் எமது ஆசானல்லவா?” என்று கூறிவிட்டு, மீண்டும் தனது தொழிலை மேற்கொள்வதற்காக கிளம்பினார்கள். நூல்:- தாரீக் திமிஷ்கு இமாம் இப்னு அசாகிர், முகாஷபத்துல் குலூப்

 

நாம் பிறரிடம் தேவையாகாமலும், பிறருக்கு  கொடுப்பவராகவும் இருப்பதே சுயமரியாதை ஆகும்.

 

பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர்கள் திடீர் விபத்தால், பெரும் நோயால் பாதிப்படைந்து இருந்ததெல்லாம் செலவாகி போகுதல், அல்லது இயற்கை பேரிடர் மூலம் இருந்ததை இழந்து நிற்பது, அல்லது எதிர்பாராத விதமாக வியாபாரத்தில் பெரிய நஷ்டம் ஏற்படுதல் ஆகியவற்றால் தமது வாழ்க்கை தலைகீழாக புரண்டு, பிறரிடம் தேவையாகும் அளவுக்கு வரும்போது தமது சுயமரியாதை பாதிக்கப்படுகிறதே என்று அவர்கள் மிகவும் சஞ்சலப்படுவார்கள். இதுவே யதார்த்தம். (இந்த நிலையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!) (பேரலை எனும்) சுனாமி மற்றும் நிலச்சரிவுகளின் போது பல செல்வந்தர்கள் இந்த நிலைக்கு ஆளானதை இந்த உலகம் கண்டது.

 

(வாழ்ந்து கெட்டவர்கள் எனும்) செல்வந்தராக இருந்து ஏழையாகிவிட்ட சிலர் மிகவும் தன்மானத்தோடு இருப்பார்கள். ஒரு காலத்தில் நாம் பிறருக்கு அள்ளி அள்ளி கொடுத்தோம். இப்போது நாம் எப்படி பிறரிடம் உதவி கேட்பது? என்று தயங்குவார்கள்.

 

எண்ணம் போல்

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. அன்சாரிகளில் சிலர் வள்ளல் பெருமானார் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும், செலவுக்கு பணமும்) கேட்டார்கள். அவர்களுக்கு நபியவர்கள் கொடுத்தார்கள். பிறகு (மீண்டும் மீண்டும்) அவர்கள் கேட்டபோதும் நபியவர்கள் கொடுத்தார்கள்.

 

இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் (கொடுத்துத்) தீர்ந்துவிட்டபோது, ( مَا يَكُونُ عِنْدِي مِنْ خَيْرٍ فَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ، وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ ) "என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப்போவதில்லை. (இருப்பினும்,) யார் சுயமரியாதையோடு நடந்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச்செய்வான். யார் பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான்என்று கூறினார்கள்.  நூல்:- புகாரீ-1769, முஸ்லிம்-1902, அபூதாவூத்-1401, திர்மிதீ-1947, நசாயீ-2541, முஸ்னது அஹ்மத்

 

சிலர் வறுமை நிலையில் இருந்தபோதும், தன்மானத்தை இழந்து அவர்கள் தாழ்ந்து போனதில்லை. எந்த ஒன்றைப் பெறுவதற்கும் தன்மானத்தை நாம் விலையாகக் கொடுத்துவிடக் கூடாது. தன்மானத்தை விற்றுப் பெறுகின்ற எந்தவொரு பொருளாயினும் அது அவமானத்திற்குரியதுதான். சுயமரியாதையை இழக்காமல் வாழ்வதே மகத்தான வாழ்க்கை.

 

தன்னை மரியாதை இல்லாமல் நடத்துபவர் பின்னால் சென்று, அவர் செய்யும் உதவியைப் பெற்று உயிர் வாழ்வதைவிட இறந்துவிட்டான் என்று பேசப்படுவதே நல்லது.

 

நம் சுயமரியாதையை இழந்துதான் ஒருவரின் அன்பையும் நட்பையும் பெற முடியுமென்றால், அந்த அன்பும் நட்பும் நமக்குத் தேவையில்லை. தன்மானம்தான் தலை. அது இல்லையெனில், தலையின்றித் திரிவதாகத்தான் அர்த்தம்.

 

வெட்கப்படுவார்கள்

 

நபிகள் நாயகம் )ஸல்( அவர்கள் கூறினார்கள். ( لَيْسَ الْمِسْكِينُ بِالَّذِي تَرُدُّهُ التَّمْرَةُ وَالتَّمْرَتَانِ وَلاَ اللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ إِنَّمَا الْمِسْكِينُ الْمُتَعَفِّفُ اقْرَءُوا إِنْ شِئْتُمْ ‏{‏ لاَ يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا‏} ) ஒரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரிச்சம் பழங்களுக்காக அலைபவன் ஏழையல்லன். ஏழை என்பவன் (தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு, இருப்பதைக்கொண்டு போதுமாக்கி) தன்மானத்துடன் நடந்து கொள்பவனே ஆவான். நீங்கள் விரும்பினால் "அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள்" (2:273) எனும் இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1880

 

சுயமரியாதையைப் பேணக்கூடியவர்கள் தாம் எவ்வளவு சிரமப்பட்டாலும் தமது சிரமத்தை வெளியே சொல்லி எங்கும் உதவிதேட மாட்டார்கள். அப்படியே யாரேனும் அறிந்து ஏதேனும் உதவி செய்யட்டுமா? என்று வலிய வந்து கேட்டாலும்கூட, தற்போது வேண்டாம்; இன்ஷாஅல்லாஹ் பிறகு பார்க்கலாம்; அல்லது தேவையுள்ள நேரத்தில் நானே கேட்டு வாங்கிக்கொள்கிறேன் என்று ஏதேனும் சொல்லி சமாளித்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வற்புறுத்தியேனும் ஏதேனும் நாம் உதவி செய்துவிட வேண்டும்.

 

தமக்குத் தேவை இருந்தும் தேவையற்றவரைப் போல் காட்டிக் கொள்ளும் சுயமரியாதைக்காரர்களை தேடிச் சென்று வழங்க வேண்டும் என்கிறது திருக்குர்ஆன்.

 

சுயமரியாதைக்காரர்கள் சிரமப்படும் பொழுது உதவி வேண்டுமா? என்று கேட்பதைவிட, உடனே உதவி செய்வது சிறந்ததாகும்.

 

நாம் சுயமரியாதையை பேணக்கூடியவர்கள் என்பதற்காக, நாம் சிரமப்படுவதைக் கண்டு நமது நேசத்திற்குரியவர்கள் வலிய வந்து செய்கின்ற உதவியை மறுப்பதும் சிறந்ததல்ல. மேலும், கேட்காமலேயே கிடைக்கிறது என்பதற்காக கிடைத்ததையெல்லாம் வாங்கி நிரப்பிக்கொள்வதும் சரியல்ல. தமக்குத் தேவையானதை மட்டும் வாங்கிக்கொள்வதே சிறந்தது.

 

சிலர் தங்கள் பதவி உயர்வுக்காக, சுயமரியாதையைத் தாரை வார்த்துவிடுகிறார்கள். பணத்திற்காக சாஷ்டாங்கமாய் விழுந்து, யாரோ ஒருவரின் கால் விரல்களின் நகங்களை முத்தமிட்டு நாணமே இல்லாமல் எழும்புகிறார்கள்.

 

அப்படி ஒரு வாழ்க்கை எதற்கு! மானத்தோடு வாழ்வதுதான் மானிட வாழ்க்கை. பச்சை மிளகாயைக் கடித்துக் கொண்டு பழைய சோறு சாப்பிட்டாலும், அதனைத் தன் உழைப்பினால் சாப்பிடுகிறவன் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கின்றான். குடிசையோ, கோபுரமோ வாழ்கிறோமா? என்பதுதான் முக்கியம்.

 

சுயமரியாதை என்பது ஓர் அற்புதமான உணர்வு. அது எல்லோருக்குள்ளும் இருக்கிறது.

 

எனவே, அல்லாஹுத்தஆலா நம்மை என்றென்றும் சுயமரியாதையைப் பேணி வாழும் பண்பளார்களாய் வாழச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...