Search This Blog

Sunday, 29 September 2024

முற்றிலும் விரித்துவிடாதீர்

 

முற்றிலும் விரித்துவிடாதீர்

 

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا مَحْسُورًا

(நபியே! உமது பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உமது கையைக் கழுத்தில் மாட்டிக்கொள்ளாதீர்கள்! மேலும் (உம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உம்முடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர்! (அவ்வாறு செய்தால்) தூற்றப்பட்டவராகவும் முடக்கப்பட்டவராகவும் நீர் அமர்ந்துவிடுவீர். திருக்குர்ஆன்:- 17:29

 

யாருக்கும் ஒன்றும் தரமாட்டேன் என்று கையை இறுக மூடிக்கொள்ளவும் கூடாது. அப்படிச் செய்தால், மக்களின் தூற்றலுக்கு ஆளாக நேரும். இருக்கிறதே என்பதற்காக எல்லாவற்றையும் வாரி இறைத்துவிடவும் கூடாது. அப்படி செய்தால் தனக்கே ஒன்றும் இல்லாமல் முடங்க வேண்டியதுதான்.

 

இவ்வாறு, தர்மம் செய்வதன் சரியான முறையை தலைப்பில் காணும் திருவசனம் எடுத்துரைக்கிறது.

 

இந்த இறைவசனம் தர்மம் செய்வதற்கான அளவுகோலை மட்டும் குறிப்பிடவில்லை.  நம்முடைய வாழ்க்கையில் தொழுகை, நோன்பு போன்ற இறைவழிபாட்டிற்காக முழுமையாக நேரம் ஒதுக்கிவிட்டு, உலகத்திற்காக நேரம் ஒதுக்காமல் (அதாவது, சம்பாதிக்கச் செல்லாமல்) இருப்பதும் தவறு. உலகத்திற்காக (அதாவது, பணம் சம்பாதிப்பதிலும் சொத்து சுகங்கள் சேர்த்து குவிப்பதிலும் கவனம் செலுத்திவிட்டு, இறைவழிபாட்டிற்கு நேரம் ஒதுக்காமல்) மறுமையை முற்றிலும் தவிர்ப்பதும் தவறு. மேலும், மனைவி மக்களுக்காக பெற்றோரை தவிர்ப்பதும் அல்லது பெற்றோருக்காக மனைவி மக்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் தவறு என்ற கருத்தையும் சுட்டிக் காட்டுகிறது.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ خَيْرَ الصَّدَقَةِ مَا تَرَكَ غِنًى أَوْ تُصُدِّقَ بِهِ عَنْ ظَهْرِ غِنًى وَابْدَأْ بِمَنْ تَعُولُ  ) தர்மம் செய்த பின்பும் தன்னிறைவு பெற்றவனாக, அல்லது தன்னிறைவு பெற்ற நிலையில் (தேவைபோக எஞ்சியதை) தர்மம் செய்வதே சிறந்ததாகும். உமது வீட்டாரிடமிருந்தே (உமது தர்மத்தை) தொடங்குவீராக அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:-  புகாரீ-1426 அபூதாவூத்-1427, நசாயீ-2487, தாரிமீ-1592 முஸ்னது அஹ்மத்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا عَالَ مَنِ اقْتَصَدَ ) நடுநிலையுடன் செலவிடுபவர் வரியவராகமாட்டார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் பனீ இஸ்ராயீல் வசனம்-29

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ لِكُلِّ شَيْءٍ شِرَّةً وَلِكُلِّ شِرَّةٍ فَتْرَةً فَإِنْ كَانَ صَاحِبُهَا سَدَّدَ وَقَارَبَ فَارْجُوهُ ) நிச்சயமாக ஒவ்வொன்றுக்கும் ஒரு வேகம் உண்டு; ஒவ்வொரு வேகத்திற்கும் ஒரு தேக்கம் உண்டு. எனவே, வேகமுடையவர் சீராகவும் நடுநிலையோடும் நடந்துகொண்டால், அவருக்கு நான் (வெற்றியை) எதிர்பார்க்கிறேன். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2377

 

வாரிசுகளுக்கு

 

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. மக்காவில் (நோயுற்று) இருந்த என்னை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜின்போது) நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது நான், "நாயகமே! என் செல்வம் முழுவதையும் நான் (அறக்காரியங்களுக்காக) இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா?" என்று கேட்டேன். பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், 'வேண்டாம்' என்று கூறிவிட்டு, ( إِنَّكَ أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ فِي أَيْدِيهِمْ ) "நீங்கள் உங்கள் வாரிசுகளை தன்னிறைவுடையவர்களாக விட்டுச்செல்வது அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாக விட்டுச் செல்வதைவிட நல்லதாகும்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2742, முஸ்லிம்-3349, திர்மிதீ-897, நசாயீ-3567

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا بَقِيَ مِنْ أَمْوَالِكُمْ وَإِنَّمَا فَرَضَ الْمَوَارِيثَ لِتَكُونَ لِمَنْ بَعْدَكُمْ ‏ ) (நீங்கள் இறந்த பின்) உங்கள் செல்வங்கள் உங்களுக்கு பின்னால் உங்கள் குடும்பத்தாருக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் வாரிசுரிமைச் சட்டத்தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தினான். (அவ்வாறானால், உங்கள் செல்வத்தை நீங்கள் சேமித்து வைப்பது குற்றமில்லை) என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1417

 

ஒரு குடும்பத்தலைவன் தம்முடைய சொத்தில் இருந்து ஒரு பகுதியை தமது மண்ணறை வாழ்க்கைக்காக அறக்கொடை வழங்கலாம். ஆனால்,  அதிலிருந்து கொஞ்சமாவது தமது வாரிசுகளுக்கு விட்டுச்செல்லவேண்டும்.  அதற்காக கொஞ்சம் சேமித்து வைப்பது தவறல்ல. அவ்வாறு சேமித்து வைப்பதன் மூலமாக தான் இஸ்லாம் கூறும் வாரிசுரிமை சட்டத்தை நிலைநாட்ட முடியும்.

 

கொஞ்சமாக இருந்தால்  

 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நாங்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது ஒருவர் முட்டை அளவு தங்கத்தைக் கொண்டு வந்து, "நாயகமே! சுரங்கத்திலிருந்து இதை நான் எடுத்தேன். எனவே, நீங்கள் இதில் வாங்கிக்கொள்ளுங்கள். இது தர்மமாகும். இதைத்தவிர வேறுபொருள் என்னிடம் எதுவும் இல்லை" என்று சொன்னார். அப்போது நபியவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.

 

அப்போது அவர் நபியவர்களின் வலப்பக்கம் வந்து முன்பு சொன்னது போன்றே சொன்னார். அப்போதும் நபியவர்கள் முகத்தை திருப்பிக்கொண்டார்கள். மீண்டும் அவர் நபியவர்களின் இடப்பக்கம் வந்தார். அப்போதும் நபியவர்கள் முகத்தை திருப்பிக் கொண்டார்கள் மீண்டும் அவர் நபியவர்களின் பின் பக்கமாக வந்தார். அப்போது நபியவர்கள் அந்தத் தங்கத்தை வாங்கி தூக்கி எறிந்தார்கள். அப்போது அது அவர்மீது பட்டிருந்தால் அவருக்கு வலியை ஏற்படுத்தி இருக்கும்; அல்லது காயத்தை ஏற்படுத்தியிருக்கும்.

 

பிறகு நபியவர்கள், ( يَأْتِي أَحَدُكُمْ بِمَا يَمْلِكُ فَيَقُولُ هَذِهِ صَدَقَةٌ ثُمَّ يَقْعُدُ يَسْتَكِفُّ النَّاسَ خَيْرُ الصَّدَقَةِ مَا كَانَ عَنْ ظَهْرِ غِنًى ) "உங்களில் ஒருவர் நம்மிடம் உள்ள முழு செல்வத்தையும் கொண்டு வந்து இது தர்மம் என்கிறார். பிறகு அவர் மக்களிடம் யாசிப்பார். தர்மத்தில் சிறந்தது, தர்மம் செய்த பின்பும் (யாரிடமும் யாசிக்காமல்) தேவையற்றவராக இருப்பதுதான்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1425, தாரிமீ-1600, இப்னுகுஸைமா-2441, ஹாகிம்

 

உம்மிடமிருந்து தொடங்குவீராக!

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. பனூ உத்ரா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் தான் இறந்த பிறகு தம்முடைய அடிமை ஒருவர் விடுதலையாகிக் கொள்ளட்டும் என்று (பின் தேதியிட்டு விடுதலை) அறிவித்திருந்தார். இந்த விஷயம் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (அவரிடம்), ( أَلَكَ مَالٌ غَيْرُهُ ) “அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் உன்னிடம் இருக்கிறதா? என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்றார்.

 

அப்போது நபியவர்கள் (அந்த அடிமையைக் காட்டி), "இவரை என்னிடமிருந்து வாங்கிக் கொள்பவர் யார்?" என்று கேட்டார்கள். நுஐம் பின் அப்துல்லாஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் அந்த அடிமையை எண்ணூறு வெள்ளிக்காசுகளுக்கு வாங்கிக்கொண்டார். நுஐம் (ரலி) அவர்கள் அந்தக் காசுகளை நபியவர்களிடம் கொண்டுவர, நபியவர்கள் அந்த அடிமையின் உரிமையாளரிடம் அவற்றை கொடுத்து, ( ابْدَأْ بِنَفْسِكَ فَتَصَدَّقْ عَلَيْهَا فَإِنْ فَضَلَ شَىْءٌ فَلأَهْلِكَ فَإِنْ فَضَلَ عَنْ أَهْلِكَ شَىْءٌ فَلِذِي قَرَابَتِكَ فَإِنْ فَضَلَ عَنْ ذِي قَرَابَتِكَ شَىْءٌ فَهَكَذَا وَهَكَذَا ‏"‏ ‏.‏ يَقُولُ فَبَيْنَ يَدَيْكَ وَعَنْ يَمِينِكَ وَعَنْ شِمَالِكَ ) "உமது தர்மத்தை முதலில் உம்மிடமிருந்து தொடங்குவீராக! பிறகு உமது தேவைபோக ஏதேனும் மிஞ்சினால் அது உன்னுடைய குடும்பத்தாருக்கு உரியதாகும். உன் வீட்டிற்கு வழங்கியது போக ஏதேனும் மிஞ்சினால், அது உறவினர்களுக்கு உரியதாகும். உன் உறவினர்களுக்கு வழங்கியது போக ஏதேனும் எஞ்சினால், அது இவ்வாறு இவ்வாறு உமக்கு முன் பக்கமும் வலப் பக்கமும் இடப் பக்கமும் (அறவழிகளின் அனைத்து முனைகளிலும் செலவு செய்வீராக!)" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-1820, அபூதாவூத்-3446, நசாயீ-2499

 

குலுக்குச்சீட்டுப் போடலாம்  

 

இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் தமது மரணத்தருவாயில் தமக்குச் சொந்தமான ஆறு அடிமைகளை விடுதலை செய்துவிட்டார். அந்த அடிமைகளைத் தவிர வேறு செல்வங்கள் எதுவும் அவரிடம் இருக்கவில்லை. இச்செய்தி பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவரைக் கடுமையாக கண்டித்தார்கள். பிறகு அந்த அடிமைகளை அழைத்து அவர்களை (இரண்டு, இரண்டு அடிமைகளாக) மூன்று பிரிவாகப் பிரித்தார்கள். பிறகு அவர்களிடையே சீட்டுக் குலுக்கிப்போட்டு, அவர்களில் இருவருக்கு மட்டுமே விடுதலையளித்தார்கள். நால்வரை அடிமைகளாகவே நீடிக்கச் செய்தார்கள். நூல்:- அபூதாவூத்-3447, திர்மிதீ-1284, இப்னுமாஜா-2236, முஸ்னது அஹ்மத்

 

அன்றைக்கு அடிமைகள் என்பது மிகப்பெரிய சொத்தாக கருதப்பட்டது. தம்முடைய அடிமைகளைத் தவிர வேறு செல்வம் எதுவும் பெற்றிராத ஒருவர் தமது மரணத்தருவாயில் அந்த அடிமைகளுக்கு விடுதலை வழங்க விரும்பினால் சட்டப்படி அவர்களின் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே விடுதலை தர முடியும் என்பதை இந்த நபிமொழி உணர்த்துகிறது.  வாரிசுதாரர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை இதற்குக் காரணமாகும். அன்பளிப்பு உள்ளிட்ட உதவிகளுக்கும் இது பொருந்தும் தானதர்மத்திற்கும் இதுவே சட்டமாகும்.

 

இந்த நிகழ்வில் விடுதலை வழங்கப்பட்ட ஒவ்வொருவரும் விடுதலைக்கான தமது வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. மூன்றில் ஒரு பாகத்தினருக்கு மட்டுமே விடுதலை கிடைக்கமுடியும். அவர்களில் யாரைத் தேர்வு செய்வது? யாரை விடுவது? இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண நபியவர்கள் குலுக்கல் முறையை தேர்ந்தெடுத்தார்கள். ஆறு பேரை மூன்று பாகத்தினராகப் பிரித்து அவர்களில் ஒரு பாகத்தினரை அதாவது, இருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களின் விடுதலைக்கு ஏற்பளித்தார்கள். மற்ற நால்வரின் விடுதலையை ரத்து செய்தார்கள்.

 

ஒரு திரண்ட சொத்துக்காரருக்கு தமது சொத்தில் எதை பொது நிறுவனங்களுக்கு அறக்கொடையாக வழங்குவது என்று குழப்பம் வரும்போது அவற்றை குலுக்குச்சீட்டுப்போட்டு பார்த்து அதற்குத் தோதுவாக செயல்படலாம்.

 

ஒரு தந்தை தனது பிள்ளைகளை வெறுத்த நிலையில் தமது சொத்துக்கள் அனைத்தையும் பள்ளிவாசல், மதரசா போன்ற பொதுநிறுவனத்திற்கு உயில் எழுதிக் கொடுப்பது இஸ்லாமியச் சட்டப்படி செல்லாது.

 

அப்படியே அவர் கொடுப்பதாக இருந்தாலும் அந்தச் சொத்தில் இருந்து மூன்றில் ஒரு பாகத்தை தான் அவர் விருப்பப்படி கொடுக்க முடியுமே தவிர, அனைத்தையும் கொடுக்க இயலாது.

 

தேவையுடையவராக இருக்கும்போது  

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. வெள்ளிக்கிழமையன்று பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்க, ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்தார். (அவர் பள்ளி காணிக்கை தொழுகை தொழாமல் அமர்ந்துவிட்டார்.) அப்போது நபியவர்கள், "(அவரிடம்) இரண்டு ரக்அத் தொழுவீராக!" என்று கூறினார்கள்

 

பிறகு (நபியவர்கள் தம் உரையில் அவருக்கு) ( تَصَدَّقُوا ) "தர்மம் செய்யுங்கள்" என்று கூற, மக்கள் (தங்களிடம் கூடுதலாக இருந்த ஆடைகளை) தர்மம் செய்தனர். (அவற்றிலிருந்து) இரண்டு ஆடைகளை அவருக்கு நபியவர்கள் வழங்கினார்கள். பின்னர் நபியவர்கள் (அடுத்த ஜும்ஆவிலும்) "தர்மம் செய்யுங்கள்" என்று (தம் உரையில்) கூறினார்கள். (அடுத்த ஜும்ஆவிலும் கலந்து கொண்ட) அம்மனிதர் தம் இரு ஆடைகளுள் ஒன்றைக் கழற்றி (தர்மமாகப்) போட்டார். இதைக்கண்ட நபியவர்கள், அவரை கண்டித்து ( خُذْ ثَوْبَكَ ) "(நீர் போட்ட) உமது ஆடையை எடுத்துக்கொள்வீராக!" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1426, திர்மிதீ-469, நசாயீ-2489, முஸ்னது அஹ்மத்

 

அவர் தர்மமாக வழங்கிய ஆடையை அவரே பெற்றுக்கொள்ளும்படிக் கூறி நபியவர்கள் அவரைக் கண்டித்துள்ளார்கள். காரணம், அவர் தேவையுடையவராக இருக்கும் நிலையில் தற்போது தர்மம் வழங்கிவிட்டு மீண்டும் யாசிக்கக்கூடும் என்று நபியவர்கள் எண்ணியிருக்கலாம். தேவையுடையவராக இருக்கும் நிலையில் எவரும் தர்மம் செய்ய வேண்டியதில்லை; அது தவறுமில்லை. மக்கள் நம்மை கஞ்சன் என்று சொல்லிவிடக் கூடாது என்று எண்ணியவாறு வழங்குவதும் தவறு. தனக்குப்போக மிஞ்சியதே தர்மம் என்கிறது இந்த நபிமொழி.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( طُوبَى لِمَنْ عَمِلَ بِعِلْمٍ وَأَنْفَقَ الْفَضْلَ مِنْ مَالِهِ، وَأَمْسَكَ الْفَضْلَ مِنْ قَوْلِهِ ) (கற்ற) ஞானத்தை கொண்டு செயல்படுபவனுக்கும், மேல் மிச்சமானதை (நற்காரியங்களுக்கு) செலவழிப்பவனுக்கும், அதிகமாக பேசுவதைவிட்டும் தவிர்ந்து கொள்பவனுக்கும் சோபனம் உண்டாகட்டும். நூல்:- தப்ரானீ

 

உமக்கு நல்லது

 

அவர்கள் தானம் கொடுத்தால் அளவு கடந்தும் கொடுத்துவிட மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அ(வர்களின் தானமான)து அதற்கிடையே நடுநிலையானதாக இருக்கும். திருக்குர்ஆன்:- 25:67

 

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம், ( يَا رَسُولَ اللَّهِ إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ) "நாயகமே! நான் செய்த தவறு மன்னிக்கப்பட்டதற்காக எனது செல்வம் முழுவதையும் அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் (அவர்கள் விரும்பும் வழியில் செலவிட்டு கொள்வதற்காக) தர்மமாக ஒப்படைத்துவிடுகிறேன்" என்று கூறினேன். அதற்கு நபியவர்கள், ( أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ لَكَ ) "உமது செல்வத்தில் சிறிதளவை உமக்காக நீர் வைத்துக்கொள்ளும். அதுவே உமக்கு நல்லது" என்றார்கள். அதற்கு நான், "கைபர் போரில் கிடைத்த எனது பங்கை மட்டும் நான் எனக்காக வைத்துக்கொள்கிறேன்" என்று கூறினேன். நூல்:- புகாரீ- 4418, முஸ்லிம்-5346, நசாயீ-3763

 

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் தமக்கு அனைத்து வசதிகளும் இருந்தும்கூட தபூக் போருக்கு செல்லாமல் பொடுபோக்காக இருந்துவிட்டார். பிறகு அவர், தாம் செய்த தவறை எண்ணி மிகவும் வருத்தப்பட்டு கண்ணீர்விட்டு பாவமன்னிப்புக் கோரினார். அதைத்தான் (இந்த நபிமொழியில்) தாம் செய்துவிட்ட தவறு சொல்கிறார்.

 

சில நிபந்தனைகள்

 

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்)அவர்கள் (தபூக் செல்வதற்கு முன்பு ஒருநாள் நிதி திரட்டிக்கொண்டிருந்தார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள். அப்போது என்னிடம் செல்வம் அதிகமாக இருந்தது. எனவே,  என்னுடைய செல்வத்தில் பாதியை நபியவர்களிடம் கொண்டு வந்தேன்.

 

அபூபக்ர் (ரலி) அவர்கள் தங்களிடம் இருந்த அனைத்து பொருள்களையும் கொண்டு வந்திருந்தார்கள். அப்போது நபியவர்கள், ( يا أبا بَكرٍ مَا أَبْقَيْتَ لأَهْلِكَ )  "அபூபக்ரே! உம்முடைய குடும்பத்தாருக்கு எதை விட்டு விட்டு வந்தீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ( أَبْقَيْتُ لَهُمُ اللَّهَ وَرَسُولَهُ ) “அவர்களுக்கு அல்லாஹ்வையும், அவருடைய தூதரையும் (அதாவது அவ்விருவரின் திருப்தியையும்) விட்டு வந்தேன்" என்று கூறினார்கள்.   நூல்:- அபூதாவூத்-1429 திர்மிதீ-3598, தாரிமீ-1601, ஹாகிம்

 

சொத்து முழுவதையும் தர்மம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமென்றால் அதற்காகச் சில நிபந்தனைகளை இஸ்லாமியச் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். தர்மம் செய்பவர் ஆரோக்கியமானவராகவும், சம்பாதிக்கும் ஆற்றல் மிக்கவராகவும், பொறுமைசாலியாகவும், கடன்சுமை இல்லாதவராகவும் இருக்கவேண்டும். மேலும் அவருடைய செலவில் கீழ் வாழ்பவர்கள் என்று எவரும் இல்லாமல் இருக்கவேண்டும். இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் ஒருவர் தம்முடைய முழு சொத்தையும் தர்மம் செய்வது (மக்ரூஹ் எனும்) வெறுக்கத்தக்க செயலாகும். இது கைவிடப்பட வேண்டிய செயலே ஆகும்.

 

ஆகவே நாம், இஸ்லாம் கூறும் வரைமுறைகளைப் பேணி வாழ, அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

Saturday, 28 September 2024

அழகைப்பேணி இறையருளைப் பெறுவோம்!

 

அழகைப்பேணி இறையருளைப் பெறுவோம்!

 

قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللَّهِ الَّتِي أَخْرَجَ لِعِبَادِهِ وَالطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ قُلْ هِيَ لِلَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا خَالِصَةً يَوْمَ الْقِيَامَةِ

 

(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கின்ற அலங்காரத்தையும் நல்ல உணவையும் (ஆகாதவையென்று) தடுப்பவர் யார்? என்று கேட்டு அது இவ்வுலகில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே!) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது என்றும் கூறுவீராக! திருக்குர்ஆன்:- 7:32

 

மனிதன் இயற்கையாகவே அழகைப் பேணுபவன். அழகான பொருள்கள் பக்கம் அவனது மனம் தானாகவே சாயும். அழகை விரும்பும் தன்மை மனிதனுக்கு இயல்பாய் அமைந்தது. ஆடம்பரமின்றி செயற்கையான அழகை வலிய உண்டு பண்ணாத வகையில் கண்ணியமான தோற்றத்தை உருவாக்கிக் கொள்வதை இஸ்லாம் எப்போதும் தடுத்ததில்லை. அதிலும் குறிப்பாக, இறைவனை வணங்கும்போது மிக அழகான தோற்றத்தோடு காட்சியளிக்க வேண்டும்.

 

பணிவின் பிறப்பிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போதும் அழகிய தோற்றத்துடன் இருப்பார்கள். தங்களது தோழர்களையும் அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்க வேண்டும் என்பார்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும், வீட்டிலும், வெளியிலும் இஸ்லாமியர்கள் தங்கள் தோற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

 

 குளிப்பது எதற்காக

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ ) ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-879

 

தன் மீது அக்கறை எடுத்துக் கொள்பவர்கள் தன்னை அழகுபடுத்திக் கொள்வார்கள். முடிந்தவரை நமது உடலை வியர்வை நாற்றம், கற்றாழை நாற்றம் இல்லாமல் குளித்து சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும்.

 

தினமும் குளித்து ஆரோக்கியத்தைப் பேணினால் நம்மை பார்க்கும் கண்களுக்கு நாம் அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்கலாம். அதன் மூலம் பிறருக்கு நம் மீது மதிப்பு ஏற்படும்.

 

காற்றில் மிதக்கும் தூசிகள் எப்போதும் நம்மை சூழ்ந்த வண்ணம் இருக்கின்றன. வியர்வையுடன் இவையும் தோலில் படிந்து உடலை மாசுபடுத்துகின்றன. உடம்பின் மீது தூசி தெரியாதிருந்தால் நம் உடம்பு சுத்தமாக இருக்கிறது என்று எண்ணக்கூடாது. தோலில் உள்ள பல ஆயிரக்கணக்கான எண்ணெய் சுரப்பிகளும், வியர்வை சுரப்பிகளும் இயங்கிக்கொண்டே இருப்பதால் இக்கழிவுப் பொருள்கள் எப்போதும் வெளியாகிக் கொண்டே இருக்கும்.

 

நம் வியர்வையால் வெளியேற்றப்படும் கழிவு பொருள்கள் என்னென்ன என்பதை படியுங்கள்.

 

1) கொழுப்பு 2) ஆவியாகும் கொழுப்பு எண்ணெய்கள் 3) ஆல்புமின் புரதம் 4) யூரியா 5) லேக்டிக் அமிலம் 6) சோடியம் குளோரைடு 7) பொட்டாசியம் ஆல்கலைன் பாஸ்பேட் 8) சர்க்கரை 9) அஸ்காபிக் அமிலம்.

 

வெளியாகும் வியர்வை ஆவியாக மாறினாலோ அல்லது ஆடையில் உறிஞ்சப்பட்டாலோ தோலின் மீது உப்புகள் (திடப்பொருள்கள்) படிந்து விடுகின்றன. இவற்றை நாள்தோறும் அகற்றாவிடில் வியர்வை துகள்கள் மீண்டும் அடைபட்டு வியர்வை வெளியேற முடியாமல் தடுக்கப்பட்டு விடும். இதனால் நம் உடல் வெப்பத்தை சீராக கட்டுப்படுத்த இயலாத நிலை உருவாகிறது.

 

நமது உடலில் வெளித் தோலிலுள்ள செல்கள் பெரும்பாலானவை ஒவ்வொரு நொடியும் இறந்து புதிய செல்கள் உண்டாகி கொண்டே இருக்கின்றன. இந்த மடிந்த செல்களும் வியர்வையிலிருந்து படிந்த கழிவு பொருள்களும், காற்றில் மூலம் உடலில் படிந்த தூசி அழுக்குகளும் தோலில் தங்கி, நோய் வளர்வதற்கு நம் உடல் சிறந்த இடமாக அமைந்து விடுகிறது.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொருவரும் குளிப்பது கடமை எனக் கூறியதன் நோக்கம் இப்போது புரிகின்றதா?

 

ஷைத்தானின் தோற்றம்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் அவர்களிடம் ஒருவர் வந்தார். அவருடைய தலைமுடியும், தாடியும் அலங்கோலமாக விரிந்து கிடந்தன. அப்போது நபியவர்கள், அவரிடம் அவருடைய முடியை ஒழுங்குபடுத்துமாறு கட்டளையிடுவது போல் சாடை செய்தார்கள். அவர் சென்று (அவ்விதம் செய்து கொண்டு) திரும்பினார். அப்போது நபியவர்கள், "ஷைத்தானைப் போல் தலைவிரி கோலமாக உங்களில் ஒருவர் வருவதைவிட இது மிகவும் மேலானது இல்லையா?" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அதாஉ பின் யசார் (ரலி) அவர்கள் நூல்:- முஅத்தா மாலிக்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களை சந்திக்க சில நபித்தோழர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். நபியவர்கள் அத்தோழர்களை சந்திக்கச் செல்லும் முன்பு வீட்டில் இருந்த தண்ணீர் துருத்தியில் முகத்தைப் பார்த்து தன் தாடியையும், தலைமுடியையும் சீர்படுத்திக் கொண்டார்கள்.

 

அப்போது நான், ( يَا رَسُولَ اللَّهِ، وَأَنْتَ تَفْعَلُ هَذَا؟ ) "நாயகமே! நீங்களா இப்படி செய்கிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள்,  ( نَعَمْ إِذَا خَرَجَ الرَّجُلُ إِلَى إِخْوَانِهِ فَلِيُهَيِّئْ مِنْ نَفْسِهِ فَإِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ ) "ஆம்! ஒருவர் தம் சகோதரர்களைச் சந்திக்கச் சென்றால் தம்மை அதற்கு தயார்படுத்திக் கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகாக இருப்பதையே விரும்புகிறான்" என்று கூறினார்கள். நூல்:- தஃப்சீர்  குர்துபீ அல்அஃராப் வசனம்-197

 

வீண் செலவுகள் ஏதுமின்றி ஒருவர் தமது தாடி, தலைமுடிகளுக்கு எண்ணெய் பூசி வாரிக் கொண்டு தூய்மையாகவும், அழகிய அமைப்பில் தன்னை வைத்துக் கொள்வதும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகவும், பண்பாகவும் இருக்கிறது.

 

மாறாக, ஒருவர் தமது முடியை கவனிக்காத பரட்டையாக காட்சியளிப்பதை நபியவர்கள் வெறுத்துள்ளார்கள். இது பார்ப்பதற்கு மிக விகாரமாக இருப்பதால் அவரை ஷைத்தானுக்கு ஒப்பிட்டு நபியவர்கள் கூறியுள்ளார்கள் என்பதை நாம் விளங்க வேண்டும்.

 

அல்லாஹ்வின் விருப்பம்

 

ஆதமுடைய மக்களே! தொழும் போதெல்லாம் (ஆடைகளால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். திருக்குர்ஆன்:- 7:3

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் ( لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ ) "எவனுடைய உள்ளத்தில் அணுவளவு பெருமை இருக்கிறதோ அவன் சொர்க்கம் புகமாட்டான்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், ( إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً ) "ஒருவர் தம் ஆடையும் காலணியும் அழகாக இருக்கவேண்டுமென விரும்புகிறார். (இது பெருமையில் சேருமா?)" என்று வினவினார். 


அப்போது நபியவர்கள், ( إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ  ) "நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அழகாக இருப்பதையே விரும்புகிறான். உண்மையை ஏற்க மறுப்பதும், மக்களை இழிவாக பார்ப்பதும் தான் பெருமையாகும்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-147

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "நாயகமே! எனது ஆடை மிக சிறந்ததாக இருக்க வேண்டும்; என் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும்; என்னுடைய காலணி மேன்மையானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு பல பொருள்களை குறிப்பிட்டு கூறிய அவர், தமது சட்டையும்கூட மேலானதாக இருக்க வேண்டும்" என்று தான் விரும்புவதாக கூறினார்.

 

இதை செவியேற்ற நபியவர்கள், "புன்னகைத்துவிட்டு, இவை இறைவனிடத்தில் விருப்பமானதாகும். மேலும், இத்தகைய நல்ல தேட்டங்களை இறைவன் விரும்பி நோக்குகிறான்" என்று கூறினார்கள். நூல்:- ஹாகிம்

 

தம்மிடம் சற்று வசதி இருந்தும் வசதியற்றவர்களை போல் தென்படும் வகையிலான மட்டரகமான, கிழிந்த, அழுக்கடைந்த, பழைய துணிகளை அணிந்து கொள்வதன் மூலம் தங்களுக்கு உலகியலில் எந்த அக்கறையும் இல்லை. தாங்கள் வாழ்வதெல்லாம் மறுமைக்காக மட்டும் தான் என்று எண்ணுவது தவறாகும். இந்த எண்ணம் உண்மையான மார்க்க அறிவை பெற்றிடாததால் ஏற்படும் விளைவாகும். இது மார்க்கத்தை அடுத்தவர்களின் கண்களில் தவறாக காட்டுவதாகும். இத்தகைய எண்ணங்கள் மாற்றப்பட வேண்டும்.

 

அழுக்கில் புரளும் பணியில் ஈடுபட்டிருந்தாலும், எவ்வளவு பெரிய வேலை பளுவில் சிக்கி சிரமப்பட்டாலும் நமது தோற்றத்தின் அழகை குறைக்கும் வகையிலுள்ள தூய்மைக் குறைவான (வேலையில்லாத மற்ற நேரங்களில்) ஆடைகளை அணிவதை விட்டும் இஸ்லாம் தடுக்கிறது.

 

அழைப்பாளரின் தோற்றம்

 

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் வெளிநாட்டு செல்வந்தர் ஒருவர் அனைத்துவரப்பட்டு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டபோது, இமாம் அவர்கள் அவருடன் எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டார்கள். பின்னர் காரணம் வினவப்பட்டபோது, இமாம் அவர்கள், "இறைவன் அவருக்கு அளித்த பாக்கியத்தை வெளியே காட்டாமல், கிழிந்த ஆடைகளையல்லவா? அவர் அணிந்துகொண்டு வந்தார். இவ்வாறு அவர் ஏழையைப்போன்று இருந்தால் ஏழைகள் இவரை செல்வந்தர் என்று இனம்கண்டு இவரிடம் எவ்வாறு உதவி நாடிச் செல்வார்கள்? இவர் மக்களை ஏய்த்துக்கொண்டல்லவா இருக்கிறார்?" என்று கூறினார்கள்.

 

தமது வசதிக்குத் தகுந்த கண்ணியமான உயர்தரமான ஆடைகளை அணிவதன் மூலம் மற்றவர்களை இழிவாகப் பார்த்து தம்மை பெருமை அடித்துக்கொள்வது நோக்கமாக இல்லாமல், தாம் ஒரு செல்வந்தன் என்று ஏழைகள் அடையாளம் கண்டுகொண்டு, உதவி கேட்டுவர வேண்டும். இறைப்பொருத்தத்தை நாடி அவர்களுக்கு தாராளமாக உதவி செய்து இறைதிருப்தியை பெறவேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் இருக்க வேண்டும்.

 

எவர் கண்ணியமான ஆடைகளை, தூய்மையான ஆடைகளை அணிகிறாரோ அவரை உலகப்பற்று உடையவர் என்றும் இறைநெறியிலிருந்து பிறழ்ந்து வாழ்பவர் என்றும் சிலர் கருதுகின்றனர். ஆனால், இறைநெறி குறித்த இத்தகைய கண்ணோட்டம் முற்றிலும் தவறாகும். அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்ற அழைப்பாளர்கள் அழகிய ஆடை அணிந்து, நறுமணம் பூசி எப்போதும் அழகிய தோற்றமுடையவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் தங்களின் அழைப்பை மக்களின் உள்ளங்களில் கொண்டு போய் சேர்ப்பது சாத்தியமாகும். இறை அழைப்பாளர்கள் மார்க்கம் வெறுக்கின்ற தோற்றத்தில் காட்சியளித்தால் அழைப்பாளரின் பேச்சை மக்கள் செவியுறமாட்டார்கள். "நான் தேவையுடையவன்" என்று மக்களிடம் யாசிப்பவர் போன்று இந்த அருவருப்பான தோற்றம் அவரை எடுத்துக்காட்டிவிடும். அழகிய தோற்றத்துடன் இருப்பது அல்லாஹ் வழங்கிய அருட்கொடையை வெளிப்படுத்துவதாகும் என்றே நாம் கருதவேண்டும்.

 

நகத்தின் அழகு

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு பெண் தன் கையில் ஒரு கடிதத்தை வைத்துக்கொண்டு அதை அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் நீட்டினாள். அப்போது நபியவர்கள், அதை எடுக்காமல் தம் கையை மடக்கிக்கொண்டார்கள். அதற்கு அந்தப் பெண், "நாயகமே! நான் என் கையில் ஒரு கடிதத்தை வைத்து உங்களிடம் நீட்டினேன். அதை நீங்கள் ஏன் எடுக்கவில்லை?" என்று கேட்டாள். அதற்கு நபியவர்கள், ( إِنِّي لَمْ أَدْرِ أَيَدُ امْرَأَةٍ هِيَ أَوْ رَجُلٍ ) "இது ஆணின் கையா? அல்லது பெண்ணின் கையா? என்று நான் அறியேன்" என்றார்கள். அதற்கு அப்பெண், "இது பெண்ணின் கை தான்" என்று கூறினார். அப்போது நபியவர்கள், ( لَوْ كُنْتِ امْرَأَةً لَغَيَّرْتِ أَظْفَارَكِ بِالْحِنَّاءِ ) "நீர் பெண்ணா இருப்பின் உமது நகங்களை மருதாணியால் சாயமிட்டிருப்பீரே!" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3635, நசாயீ-5002

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் தொழுகைக்காக விரைவதற்கு முன்பாக தமது மீசையை குறைத்து, நகங்களைக் களைந்து கொள்வார்கள். நூல்:- பைஹகீ

 

நகம் களையுமளவு  எப்போது வளர்ந்து விடுகிறதோ, உடன் அது களையடப்பட வேண்டும். ஆரோக்கியத்தின் அழகு நம் நகத்தில் தெரியும் என்பார்கள். உலகில் நோய் பரப்பும் சாதனங்களில் கைவிரல் நகங்களும் இருக்கின்றன. அவற்றினுள் இருக்கும் அழுக்கும், கிருமியும் உணவோடு வயிற்றுள் செல்லுமானால் பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. நகத்தை வளர்ப்பதை விட முறையாக அதை களைவதே அழகாகத் தெரியும். குறிப்பாக, பெண்களில் சிலர் நகம் வளர்ப்பதையும் அதன் மீது நகப்பாலிஷ் பூசுவதையும் அதுவே விரல்களுக்கு அழகானது என்றும் கருதுகிறார்கள்.

 

நகப்பாலிஷ் போட்டால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜி வரும். நகப்பாலிஷ் போட்ட விரல் நகத்தோடு சில பெண்கள் கண்களை துடைக்கும் போது, நகப்பாலிஷ் கண்ணில் பட்டு அலர்ஜி உண்டாகும்.

 

உளூ செய்யும்போது உறுப்புக்கள் பரிபூரணமாக நனைய வேண்டும். அப்போதுதான் தொழுகை நிறைவேறும். உறுப்புக்களில் சிறிதளவு நனையா விட்டாலும் உளூ கூடாது. மேலும், கடமையான குளிப்பின்போது உடலில் சிறிதளவு பகுதி நனையா விட்டாலும் குளிப்பு கடமை நீங்காது. நகப்பாலிஷ் உறுப்புக்கள் நனைவதை தடுக்கும் என்பது கண்கூடு. எனவே, விரல்களையும் நகங்களையும் அழகாக வைத்துக்கொள்ள மருதாணி வைக்கலாமே தவிர, நகப்பாலிஷ் வைப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. கை விரல்களில் மருதாணி வைப்பது பெண்களுக்கு தான் அழகு சாதனமே தவிர, ஆண்களுக்கு அல்ல.

 

மேற்கத்திய அழகு சாதனம்

 

நம்முடைய முகம் எப்போதும் புத்துணர்ச்சியோடு, அழகிய தோற்றத்தோடு இருக்க வேண்டும். அதற்காக அலங்கோலத்தை எல்லாம் அழகு என்று எண்ணக்கூடாது. முகத்தை அழகுபடுத்துவதற்கு பியூட்டி பார்லர் சென்று ஃபேசியல் செய்யும் காலம் இது. இதன் விளைவு சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டு முகமே வீங்கிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

தன் முகம் தக்காளி மாதிரி சிவப்பாக மாறும் எனக் கருதி, சில பெண்கள் ஃபிளீச்சிங் செய்து கொள்கிறார்கள். இதனால் முகத்தில் இருக்கும் தோல் உணர்ந்துவிடும். எண்ணெய் பசை காய்ந்து, முகம் ஒரேயடியாக வறண்டு போய்விடும். வேண்டுமானால் ஃபிளீச்சிங் செய்து கொண்டவுடன் கொஞ்சம் சிவப்பான மாதிரி தோற்றம் தரும். ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்காது.

 

தொழுகைக்கு முன் உளூ செய்யும்போது முகத்தை நீரில் கழுவும் ஒவ்வொரு முறையும் சீன முகப்பயிற்சியான "டாயிஸ்ட்" உடன் ஒத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. புகழ்பெற்ற டாயிஸ்ட் எனும் இந்த முகப்பயிற்சியின் பலன்கள் அதிகம் இருப்பதாக சீன மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

 

உளூவைத் தொடர்ச்சியாக செய்து வரும் போது முகத்தில் தோல் மென்மை அடைகிறது. முகம் வசீகரம் அடைகிறது. முகத்தில் உள்ள தோல் சுருக்கங்கள் நீங்குகிறது. முகத்தில் புண்கள் ஏற்பட்டாலும் நீங்குகிறது. இளமையுடனும் பொலிவுடனும் விளங்க வைக்கிறது. முகத்திற்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஆகவே, முகம் அழகு பெற ஃபிளீச்சிங் செய்வதைவிட தொழுகைக்காக தினமும் ஐவேளை உளூ செய்வதே போதுமானதாகும்.

 

உதட்டுச் சாயம் மற்றும் முகத்துக்கு கிரீம்களை பயன்படுத்தினால் சூரிய ஒளி முகத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று லக்னோவில் உள்ள ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

 

அழகு சாதனங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருள்கள் சாதாரணமாக கேடு விளைவிப்பதில்லை. ஆனால், சூரிய ஒளி படும்போது சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர்கள் கிரீம்கள் மீது படும்போது அதன் மூலம் உருவாகும் நச்சுக்களில் நச்சுக்கள் தோலில் உள்ள உயிரணுக்களைச் சேதப்படுத்துகின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். பெண்கள் இதை கவனிப்பார்களா?

 

நறுமணமும் நன்மையும்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ عُرِضَ عَلَيْهِ طِيبٌ فَلاَ يَرُدَّهُ فَإِنَّهُ طَيِّبُ الرِّيحِ خَفِيفُ الْمَحْمَلِ ) ஒருவரிடம் நறுமணம் எடுத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டால் அதை அவர் மறுக்க வேண்டாம். ஏனெனில், அது சிறந்த வாசனையுடையதும், எடுத்துச் செல்வதற்கு எளிதானதும் ஆகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3641  

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( طِيبُ الرِّجَالِ مَا ظَهَرَ رِيحُهُ وَخَفِيَ لَوْنُهُ وَطِيبُ النِّسَاءِ مَا ظَهَرَ لَوْنُهُ وَخَفِيَ رِيحُهُ ) ஆண்களுக்குரிய வாசனை பொருள்களின் மிகச்சிறந்தது அதன் மணம் வெளிப்பட்டு, அதன் நிறம் மறைவாயிருப்பதாகும். பெண்களுக்குரிய வாசனைப் பொருள்களின் மிகச்சிறந்தது அதன் நிறம் வெளிப்பட்டு, அதன் மணம் மறைவாயிருப்பதாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- நசாயீ- 5036  

 

இவ்வுலகத்தில் நறுமணத்தை விரும்பாதோர் எவருமில்லை. உடலில் உண்டாகும் அருவருப்பான துர்வாடையை அனைவரும் வெறுப்பார்கள். நம்மை கண்டு எவரும் வெறுப்புக் கொள்ளாதிருக்கவும், வியர்வை நாற்றத்தை மறைக்கவும், நறுமணத்தை பூசுதல் நலமாகும். சிறந்த வாசனை திரவியங்களை நுகரும்போது உடலுக்கு சுகம், உள்ளப் பூரிப்பு, முகமலர்ச்சி யாவும் நம்மை ஆட்கொண்டு மகிழ்ச்சி ஏற்படுவதை உணர்கிறோம்.

 

முக்கியமாக மூளைக்கு குளிர்ச்சியும், சிந்தனை திறனும் ஏற்பட வாசனை திரவியம் துணை புரிகின்றது. ஆண்கள் எப்போதும் நறுமணம் பாவிக்கலாம். குறிப்பாக, தொழுகைக்குச் செல்லும் போது அதை பூசிக் கொள்வது சிறந்ததாகும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِيَجِدُوا مِنْ رِيحِهَا فَهِيَ زَانِيَةٌ ) எந்த ஒரு பெண் நறுமணப் பூசிய நிலையில், அதை மக்கள் நுகர வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு மத்தியில் நடந்து செல்கிறாரோ அவள் விபச்சாரியாவாள். நூல்:- நசாயீ- 5028  

 

பெண்கள் வெளியே செல்லும்போது வாசனை திரவியங்கள் பூசக்கூடாது என இந்த நபிமொழியின் மூலம் தடுக்கப்பட்டும்கூட, இந்தப் பழக்கம் நமது பெண்களிடம் மிக அதிகமாக பரவி நிற்கும் தீமையாகும். சில பெண்கள் தங்களது வாகன ஓட்டுனர்கள், கடைக்காரர்கள், காவலாளிகள் போன்றவர்களிடம் நறுமணம் பூசிய நிலையில் நெருங்கி பழகுகிறார்கள். மார்க்கம் இதை வன்மையாக கண்டிக்கிறது.

 

நமது குடும்பப்பெண்கள் வெளியே செல்லும்போதும், திருமணம் போன்ற விசேஷங்களில் கலந்துகொள்ளும் போதும் நறுமணம் கமழும் பூக்களை சூடிக் கொண்டும் ஆண்களுக்கு மத்தியில் வலம் வருகின்றனர். இந்தக் குற்றத்தின் கடுமையை அவர்கள் அறியவில்லை.

 

பெண்கள் பூச்சூடி கொள்வதற்கும், வாசனை திரவியங்கள் பூசி கொள்வதற்கும் கணவனோடு தனி அறையில் இருக்கும்போது மட்டுமே மார்க்கம் அனுமதிக்கிறது. அவர்கள் வெளியே செல்லும்போது பூச்சூடி கொள்ளவும் நறுமணம் பூசிக்கொள்ளவும் மார்க்கம் அனுமதிக்கவில்லை.

 

அலங்கரித்துக்கொள்ள முற்படும் ஆணோ, பெண்ணோ கடன் வாங்கியோ அல்லது தன் சக்திக்கு மீறியோ அலங்கரித்துக் கொள்ளக்கூடாது. இஸ்லாமிய வரம்பை மீறி அலங்கரிக்கக்கூடாது. அழகிய அமைப்புடன் கண்களை கவரும் தோற்றத்துடன் இருக்க வேண்டும். ஆனால், இவற்றில் நடுநிலை பேண வேண்டும். எனவே, நாம் உடல் அழகைப் பேணி இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

(இந்த கட்டுரை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...