Search This Blog

Thursday, 15 August 2024

மனிதநேயம்

 

மனிதநேயம்

وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا

யார் ஒரு மனிதரை வாழ வைக்கின்றாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார். திருக்குர்ஆன்:- 5:32

 

உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான நோக்கங்களை மதிக்கவும், மனித நலனை மேம்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் “ஆகஸ்ட் 19 அன்று உலக மனிதநேய தினம்” என்று அனுசரிக்கப்படுகிறது.

 

மனிதநேயம் என்பது வெறும் வார்த்தை அல்ல. மனிதனின் உணர்வு, சிந்தனை, கருத்துக்களோடு பின்னிப்பிணைந்தது. மக்கள் நெருக்கடியால் பாதிக்கப்படும் போதெல்லாம், அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மனிதநேயம்  உள்ளவர்கள் ஆவர்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ بِهَا كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ ) யார் தம் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். யார் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ அதற்குப் பகரமாக அவரைவிட்டு அல்லாஹ் மறுமைநாளில் அவருடைய துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்கள் நூல்:- புகாரீ-2442, முஸ்லிம்-5036

 

இயலாதவர்கள்

 

இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் எகிப்து தேசத்திலிருந்து மத்யம் நகரை நோக்கி வந்தார்கள். வரும் வழியில் போதிய உணவின்றி பசியால் சிரமப்பட்டார்கள். இறுதியாக, மத்யம் நகரின் எல்லையை அடைந்த மூசா  (அலை) அவர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கிருந்த கிணற்றிலிருந்து தம் கால்நடைகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருந்த இடையர்களைக் கண்டார்கள். அவர்கள் நீர் புகட்டி முடித்ததும் ஒரு பாறாங்கல்லால் மீண்டும் அக்கிணற்றை மூடிவிட்டார்கள். பத்து பேர்  சேர்ந்தே அக்கலை தூக்கமுடியும். அந்த அளவுக்குப் பெரிய கல்லாக அது இருந்தது.

 

அங்கே இரு பெண்கள் தமது கால்நடைகளுக்கு நீர் புகட்டுவதற்கு மக்களை விட்டு ஒதுங்கியிருந்தார்கள். இவ்விரு பெண்களையும் கண்ட மூசா (அலை) அவர்கள் இரக்கப்பட்டவராக, "உங்கள் நிலை என்ன? இவர்களுடன் சேர்ந்து நீங்கள் ஏன் நீர் போகாமல் இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.

 

அதற்கு அந்தப் பெண்கள், "இந்த இடையர்கள் தங்கள் ஆடுகளுக்குரிய நீரை இறைத்து அந்தத் தொட்டியை நிரப்பி கொண்டு தங்கள் ஆடுகளை அதில் நீர் அருந்த விடுவார்கள். அவர்களுடைய ஆடுகள் அனைத்தும் நீர் அருந்தி விட்ட பிறகு மீதமிருப்பதை தான் எங்களுடைய ஆடுகளைவிட்டு நீர் அருந்த செய்வோம். நீர் இறைக்கும் வாளி மிகப் பெரியதாக இருப்பதால் எங்களால் கிணற்றிலிருந்து நீர் இறைக்கமுடியாது. எங்கள் தந்தையோ மிகவும் வயதானவர். அவருக்கு கண்பார்வை மங்கிப்போய்விட்டதால், அவரால் எங்களுக்கு இதில் எந்தவித உதவியும் செய்ய இயலாது. இத்தகைய காரணங்களால் தான் நாங்கள் அந்த இடையர்கள் போகும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது" என்று கூறினார்கள்.

 

உடனே மூசா (அலை) அவர்கள் அந்த பாறாங்கல்லை தூக்கினார்கள். ஒரே ஒரு வாளி தான் நீர் இறைத்தார்கள். அப்பெண்களின் எல்லா ஆடுகளுக்கும் தாகம் தீர்ந்தது. இது குறித்து திருக்குர்ஆன் (28:23,24) விவரிக்கிறது. நூல்:- இப்னு அபீஷைபா, தஃப்சீர் இப்னு கஸீர், அல்பிதாயா வந்நிஹாயா

 

பேரிடர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓடோடிச் சென்று உதவுவதும், பஸ், இரயில் போன்றவற்றில் பயணிக்கும்போது வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடம் அளிப்பதும், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவருக்கு உதவி செய்வதும், ஏதேனும் ஒரு காரியத்திற்காக வரிசையில் நிற்கும்போது முதியவர்கள் முந்தி செல்ல இடமளிப்பதும், விலாசம் தெரியாமல் தேடித்திரிபவருக்கு சரியான விலாசத்தை தெரிவித்துக்கொடுப்பதும், ஏதேனும் அலுவலகத்தில் (Farm)  படிவத்தை பூர்த்தி செய்ய தெரியாமல் திணறுபவருக்கு அதனை பூர்த்தி செய்து கொடுப்பதும், அதற்காக பேனா போன்றவற்றை கொடுத்து உதவுவதும் மனிதநேயம் ஆகும். இவ்வாறே, மனிதநேயத்தின் பட்டியல் மிக நீளமானது.

 

பிரியமானவர்

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ( يَا رَسُولَ اللَّهِ: أَيُّ النَّاسِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ وَأَيُّ الْأَعْمَالِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ ) "நாயகமே! மனிதர்களில் யார் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானவர்? எந்த நற்செயல்கள் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது?" என்று வினவினார். 


நபியவர்கள், ( أَحَبُّ النَّاسِ إِلَى اللَّهِ تَعَالَى أَنْفَعُهُمْ لِلنَّاسِ، وَأَحَبُّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ تَعَالَى سُرُورٌ تَدْخُلُهُ عَلَى مُسْلِمٍ، أَوْ تَكْشِفُ عَنْهُ كُرْبَةً، أَوْ تَقْضِي عَنْهُ دَيْنًا، أَوْ تَطْرِدُ عَنْهُ جُوعًا )  மனிதர்களில் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானவர், பிற மனிதர்களுக்கு பயனளிப்பவர் தான். மேலும், ஒரு முஸ்லிம் சகோதரனின் உள்ளத்தில் மகிழ்ச்சியை நிரப்புவது அல்லது அவரின் (தேவையை நிறைவேற்றி) சிரமத்தை நீக்குவது அல்லது அவரது பசியைப் போக்குவது அல்லது அவருடைய கடனை அடைப்பது தான். இதுவே, அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமான நற்செயலாகும்” என்று பதிலளித்தார்கள்.  நூல்:- தப்ரானீ, பைஹகீ, இப்னு அபித்துன்யா, இப்னு அதீ, இப்னு அசாகிர் தாரிக் திமிஷ்க்

 

வணக்க வழிபாடுகளில் மட்டும் கவனம் செலுத்துபவரைவிட, வணக்கங்கள் புரிந்து, பிற மக்களுக்கு பயனுள்ள வகையில் வாழ்பவரே, ஆக சிறந்தவரும்  இறைவனுக்கு உவப்பானவரும் ஆவார் என்கிறது மேற்காணும் நபிமொழி.

 

தட்டிக்கேட்க வேண்டும் 

 

கொடியோன் அபூஜஹ்ல் ஓர் அனாதைச் சிறுவனின் சொத்துக்குப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டிருந்தான். ஒருநாள் அந்தச் சிறுவன் உடுத்துவதற்குச் சரியான ஆடை எதுவுமின்றி நிர்வாண கோலத்தில் அபூஜஹ்லிடம் வந்தான். தன்னுடைய ஏழ்மையை எடுத்துரைத்தான். தன் சொத்தைத் திருப்பித் தருமாறும் உதவி செய்யுமாறும் கேட்டான். ஆனால் அபூஜஹ்ல் பணம் தரமுடியாது என்று மறுத்ததுடன் அந்தச் சிறுவனின் நெஞ்சில் கை வைத்து விரட்டினான். 

 

கஅபாவின் முற்றத்தில் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குறைஷிப் பிரமுகர்கள் அந்தச் சிறுவனிடம், "நீ முஹம்மதிடம் சென்று முறையிடு. அவர் அபூஜஹ்லிடம் சென்று உனக்காகப் பரிந்துரைப்பார். உன் பணத்தைப் பெற்றுத் தருவார்" என்று கூறினர். அவர்களின் நோக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இந்த பிரச்சனையில் சிக்க வைக்க வேண்டும், அபூஜஹ்லிடம் திட்டுவாங்கச் செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் இது அந்தச் சிறுவனுக்கு தெரியாது.

 

அச்சிறுவன் அண்ணலாரிடம் வந்து அபூஜஹ்ல் பற்றி முறையிட்டான். தன்னுடைய பணத்தை மீட்டுத் தருமாறு கோரினான். எளியோருக்கு எந்த உதவியும் செய்யாமல் அவர்களை வெறுமனே திருப்பி அனுப்புவது அண்ணலாரின் பழக்கம் அல்ல. அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு அபூஜஹ்லிடம் சென்றார்கள். அண்ணலாரைக் கண்டதும் கண்ணியமாக வரவேற்றான். அனாதைச் சிறுவனுக்குரிய பணத்தை எடுத்துக் கொடுத்தான். அதைப் பார்த்துக்கொண்டிருந்த குரைஷிப் பிரமுகர்கள் அபூஜஹ்லின் செயலைக் கண்டு வியந்தனர். நீ மதம் மாறிவிட்டாயா? என்று அவனிடம் கேட்டனர்.

 

அதற்கு அவன்,  "முஹம்மதின் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் சிறியதோர் ஈட்டியைக் கண்டேன். பயந்து போய்விட்டேன். அவர் கேட்டுக்கொண்டபடி சிறுவனின் பணத்தைக் கொடுக்கவில்லை எனில் அது என்னைக் குத்திவிடுமோ என்று அஞ்சினேன். அதனால்தான் உடனே பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன்" என்று கூறினான். நூல்:- தஃப்சீர் பைளாவி,  ஹாஷியத்துல் ஜமல்

 

பாதிக்கப்பட்டவர்கள் நம்மிடம் வந்து ஏதேனும் கொடுத்து உதவுமாறுக் கோரினால், அவர்கள் நம்மை தமக்காக பரிந்து பேச அழைத்தால், சிபாரிசு செய்ய அல்லது சாட்சி சொல்ல கேட்டுக்கொண்டால் நம்மால் இயன்றளவு அவர்களுக்கு உதவ வேண்டும்.

 

பார்வையற்ற மூதாட்டி

 

ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்கள் பார்வையற்ற ஒரு மூதாட்டிக்கு கோதுமை மாவும் பேரிச்சம் பழங்களும் கொண்டுபோய் கொடுப்பது வழக்கம். இதனை உமர் (ரலி) அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் இறந்தது அந்த மூதாட்டிக்கு தெரியாது. அபூபக்ர் (ரலி) அவர்கள் இறந்த பின்னர் உமர் (ரலி) அவர்கள் அந்த மூதாட்டிக்கு கோதுமை மாவும் பேரிச்சம் பழங்களையும் கொண்டு போய் கொடுத்தார்கள்.

 

அந்த மூதாட்டி அந்த பேரிச்சம் பழங்களை தொட்டு பார்த்தவுடன், ( أَمَاتُ صَاحِبُكَ؟ ) "உமது தோழர் இறந்துவிட்டாரா? என்று வினவினாள். இதை செவியுற்ற உமர் (ரலி) அவர்கள், ( وَمَا أَدْرَاكِ ) “(அம்மா! அது) உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று ஆச்சரியமாக கேட்டார்கள். அதற்கு அம்மூதாட்டி, ( جِئْتَنِي بِالتَّمْرِ، وَلَمْ تَنْزِعْ مِنْهُ النَّوَى  (“(ஆம்! உமது தோழர், பார்வையற்ற நான் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பேரிச்சம் பழங்களில் உள்ள கொட்டைகளையெல்லாம் நீக்கிவிட்டு தான் கொண்டுவந்து தருவார். ஆனால், இப்போது) நீர் பேரிச்சம் பழங்களில் கொட்டைகள் நீக்காமல் என்னிடம் கொண்டு வந்துள்ளீரே! (அதனால் அவ்வாறு கேட்டேன்)” என்று பதிலளித்தாள். (இது, உமர் – ரலி அவர்களுக்கு தெரியாது.) உடனே உமர் (ரலி) அவர்கள் மண்டியிட்டு அழுதார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள், ( لَقَدْ أَتْعَبْتَ الْخُلَفَاءَ مِنْ بَعْدِكَ يَا أَبَا بَكْرٍ ) "அபூபக்ர் (ரலி) அவர்களே! உங்களுக்கு பிறகு வரும் ஜனாதிபதிகளை சிரமத்திற்குள்ளாக்கி வீட்டீர்!" என்று கூறினார்கள்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

( السَّاعِي عَلَى الأَرْمَلَةِ وَالْمِسْكِينِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ كَالَّذِي يَصُومُ النَّهَارَ وَيَقُومُ اللَّيْلَ )

(கணவனை இழந்த) கைம்பெணுக்காகவும், ஏழைக்காகவும் பாடுபடுகின்றனர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார். அல்லது இரவில் நின்று வழிபட்டு; பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார். அறிவிப்பாளர்:- ஸஃப்வான் பின் சுலைம் (ரஹ்) அவர்கள் நூல்:- புகாரீ-6006, முஸ்லிம்-5703

 

வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள் போன்றோருக்கு அவர்களின் இருப்பிடம் சென்று, அவர்களின் தேவையறிந்து உதவுதல் மிகச் சிறந்த நற்பணியாகும்.

 

இஃதிகாஃப்பைவிட சிறந்தது

 

அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்ததைப் போன்று நீயும் (பிறருக்கு) உபகாரம் செய். திருக்குர்ஆன்:- 28:77

 

நபிகள் பெருமானார் (ஸல்) கூறினார்கள். ( وَلَأَنْ أَمْشِيَ مَعَ أَخٍ لِي فِي حَاجَةٍ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ اعْتَكِفَ فِي هَذَا الْمَسْجِدِ شَهْرًا  يعني: مسجِدَ المدينَةِ )  தன்னுடைய சகோதரனின் தேவையை நிறைவேற்ற நடந்து செல்வதானது, (மதீனாவில் இருக்கின்ற என்னுடைய மஸ்ஜிதுந் நபவீ என்ற) இந்த பள்ளிவாசலில் ஒரு மாதம் இஃதிகாஃப் இருப்பதைவிட எனக்கு பிரியமானதாகும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, அத்தர்ஙீபு வத்தர்ஹீபு, இப்னு அபித் துன்யா, மஜ்மஉஸ் ஸவாயித்

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் இஃதிகாஃபில் இருக்கின்றபோது ஒரு மனிதர் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கவிடத்திற்கு  வந்து தன்னுடைய கடன்சுமையைப் பற்றி முறையிட்டார். அதைச் செவியுற்ற அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அவரது கையை பிடித்து அழைத்துக்கொண்டு தெருவில் இறங்கி நடக்கலானார்கள். அந்தத் தோழர், “நீங்கள் இஃதிகாஃபில் இருப்பவர் அல்லவா?” என்று வினவினார். அதற்கு அன்னார், ( مَنْ مَشَى فِي حَاجَةِ أَخِيهِ كَانَ خَيْرًا لَهُ مِنِ اعْتِكَافِ عَشْرِ سِنِينَ ) “தமது சகோதரரின் தேவையை நிறைவேற்றுவதற்கு (துயர் துடைப்பதற்கு) ஒருவர் நடந்து சென்றால், அது பத்து ஆண்டுகள் இஃதிகாஃப் இருப்பதைவிட சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.  நூல்:- தப்ரானீ, அத்தர்ஙீபு வத்தர்ஹீபு

 

ஒருவரின் துயர் துடைப்பதானது, மஸ்ஜிதுந் நபவீயில் ஒரு மாதம் இஃதிகாஃப் இருப்பதை விடவும், பிற பள்ளிவாசல்களில் பத்து ஆண்டுகள் இஃதிகாஃப் இருப்பதை விடவும்  சிறந்தது என்று தெளிவாகிறது. மேலும், நெருக்கடிக்கு ஆளான மக்களுக்கு அவர்களின் தேவையைக் கண்டறிந்து செய்கிற ஒவ்வொரு உதவியும் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானது.

 

சிறு வியாபாரி

 

ஒருவர் தமது கனவில் இறைநேசர் மஅரூஃப் அல்கர்கீ (ரஹ்) அவர்கள் சொர்க்கத்தில் இருப்பதைக் கண்டு அன்னாரிடம், “நீங்கள் சொர்க்கம் செல்ல காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு அன்னார், “ஒருநாள் நான் (நஃபில் எனும்) உபரியான நோன்பு நோற்றிருந்தேன். குடிபானம் விற்கும் ஒரு ஏழைக்கு அன்று விற்பனை ஆகவில்லை. அவன், “ஒரு கிளாஸ் குடிபானம் வாங்கி பருகுங்கள்; உங்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான்” என்று கூறினார். அவருடைய பிரார்த்தனையைப் பெறுவதற்காக, இன்னொரு நாள் நோன்பை (களா செய்து) நோற்றுக்கொள்ளலாம் என்று கருதி நோன்பை விட்டுவிட்டு காசு கொடுத்து ஒரு கிளாஸ் குடிபானம் வாங்கிக் பருகினேன்” என்றார்கள்.

 

சில நேரங்களில் சாலையோரத்தில் வயதானவர்கள், வாழ்க்கையில் முடக்கம் ஏற்பட்டவர்கள் (அதாவது, அவர்களைப் பார்த்தாலே கணித்துவிடலாம்) சில பொருள்களை வைத்து கடைவிரித்திருப்பார்கள். அவர்களிடம் நமக்கு தேவையான பொருள்களை வாங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றலாம். நாம், அவர்களுக்கு உதவி செய்தது போன்றும் ஆகிவிடும். அவர்களிடம் பொருள் வாங்கும்போது "அடிபுடி" என்று பேரம் பேசுவதும், "வைச்சு பார்க்காதே! வித்துப்பாரு!" என்றெல்லாம் வசனம் பேசுவதும் சரியல்ல. நாம் பெரும் பெரும் சூப்பர் மார்க்கெட்களில் பேரம் பேசுவதில்லை; பேரம் பேசவும் முடியாது.

 

இரத்தத் தானம்

 

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்.  திருக்குர்ஆன் : 2:237

 

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட காலகட்டம் லக்னோவில் மௌலானா ஸஜ்ஜாஸ் நுஃமானீ (ரஹ்) அவர்கள் ஒரு பொது சேவை இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார்கள். அதில் பல மருத்துவர்களும் இருந்தனர். ஒருமுறை நள்ளிரவில் மௌலானா அவர்களுக்கு, "குறிப்பிட்ட இந்த மருத்துவமனையில் ஒரு சிறுமிக்கு இந்த குருப் இரத்தம் அவசரமாக தேவைப்படுகிறது" என அழைப்பு வந்தது. இந்த குருப் இரத்தம் உடையவர்கள் தான் மௌலானா அவர்கள்.

 

எனவே, அந்த நள்ளிரவில் அந்த மருத்துவமனைக்கு மௌலானா அவர்கள் சென்று கொண்டிருக்க, அந்த வழியில் மௌலானாவை கொல்வதற்கு Rss கூட்டத்தினர் எதிர்ப்பார்த்திருந்தனர். மௌலானாவின் வாகனத்தை மறித்து மௌலானாவை அவர்கள் தாக்க எண்ணினார்கள். அவர்களிடம் மௌலானா, "அரை மணி நேரம் எனக்கு அவகாசம் தாருங்கள். பிறகு நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். காரணம் அருகிலிருக்கும் மருத்துவமனையில் ஒருவருக்கு இரத்தம் கொடுக்க போகிறேன். நீங்கள் என்னை நம்பாவிட்டால் என்னுடன் நீங்களும் வரலாம்" என்றார்கள்.

 

பிறகு அவர்கள் மௌலானாவை அவர்களின் வாகனத்திலேயே ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு போய் அங்கே பார்த்தால், Rss இயக்கத்தில் உள்ள ஒருவரின் மகளுக்கு தான் அவசரமாக இரத்தம் தேவைப்படுகிறது. அந்த குழந்தைக்கு இரத்தம் கொடுக்க மௌலானா வந்துள்ளார்கள் என்று அவர்கள் அறிந்ததும் ஆச்சரியப்பட்டுப்போனார்கள். இரத்தம் கொடுத்த பிறகு அவர்கள் மௌலானாவை ஒன்றும் செய்யாமல் நள்ளிரவிலேயே  மௌலானாவை பத்திரமாக கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டு, "பிறகு காலையில் வந்து பேசிக்கொள்வோம்" என்று கூறி சென்று விட்டனர். பிறகு மறுநாள் காலையில் வந்து நாங்கள் முஸ்லிம்களை தவறாக எண்ணிவிட்டோம். இனிமேல் நாங்கள் முஸ்லிம்களை தாக்கமாட்டோம் என்று அந்த குறிப்பிட்ட பேர் சொல்லி விட்டு சென்றனர்.

 

இரத்தம் வழங்கினால் மட்டுமே காப்பாற்றமுடியும் என்ற நிர்ப்பந்த நிலையில் இருப்பவருக்கு, இரத்தத் தானம் செய்து அவரின் உயிரைக் காப்பாற்றுவது ஓர் அறச்செயலாகும்.

 

ஆய்வுகள்

 

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை பேராசிரியர் டாக்டர் கென்னத் பிரிடியர் கூறுகிறார். பொதுவாக நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது அல்லது மற்றவர்களை நாம் நேசிக்கிறபோது நாம் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். அந்தச் சமயத்தில் நமது உடம்பில் இருக்கக்கூடிய நோயை எதிர்க்கும் செல்கள் (Cells of immune system) முழு சக்தியோடு இயங்குகிறது. அப்படி அவையெல்லாம் இயங்கும்போது நமது உடம்பில் நோய் எதுவும் வருவதில்லை.

 

ஆனால், அதே சமயம் நாம் கவலையோடு இருக்கும்போதோ, தனிமையாக வாழும்போதோ நோய் தடுப்பு செல்கள் உடம்பில் குறைவாகவே இருக்கின்றன என்ற உண்மை இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக இப்படிப்பட்டவர்களுக்கு பிணிகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

 

இது தொடர்பாக அமெரிக்காவின் ‘சான்பிரான்சிஸ்கோ’வில்கூட ஒரு ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறார்கள். அதாவது, குடும்பத்தைவிட்டுப் பிரிந்து தனியே வாழ்ந்து கொண்டிருக்கிற முதியவர்களைத் தேடி கண்டுபிடித்தார்கள். அவர்களுக்கு உடம்பில் என்னென்ன நோய்கள் இருக்கின்றன என்பதை விவரமாக குறித்து வைத்துக்கொண்டார்கள். அந்த முதியவர்களையெல்லாம் ஒன்றாக திரட்டி ஒரே இடத்தில் தங்கவைத்தார்கள். அவர்களை மூன்று குழுவாக பிரித்தார்கள். ஒவ்வொரு பிரிவினருக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்கிற மாதிரியான பொறுப்புக்களை கொடுத்தார்கள்.

 

உதாரணமாக: ஒரு குழுவினர் சிறைச்சாலைக்குப் போய் அங்குள்ளவர்களுக்கு அன்பாக அறிவுரைகளைக் கூறவேண்டும். இன்னொரு குழுவினருக்கு சின்னப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற வேலை. இது மாதிரியான பொறுப்புக்களைக் கொடுத்தார்கள்.

 

அதற்குப் பிறகு பார்த்தால் அந்த முதியவர்களெல்லாம் ரொம்ப சுறுசுறுப்பாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள். ஆறு மாதம் கழித்து அவர்கள் எல்லோரும் உடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அந்த பரிசோதனை முடிவில் அவர்கள் தெரிந்துகொண்ட உண்மை, அவர்களில் பாதி பேருக்கு நோயின் தன்மை வெகுவாக குறைந்திருந்தது.

 

அடுத்தவர்களுக்கு உதவுவது என்பது ஒரு வகையான மனிதநேயம். அதை ஆங்கிலத்தில் Amuism என்று சொல்வார்கள். நம்ம ஊரில் பெரியவர்கள் எல்லாம் அடுத்தவர்களுக்கு உதவுவது புண்ணியம் என்று சொல்லி வருகிறார்களே அதை இப்போது அறிவியலும் ஒப்புக்கொள்கிறது. அடுத்தவர்களுக்கு உதவுதல் மூலம் மனிதநேயத்தையும் மருந்தாக பயன்படுத்தலாம்.

 

உடம்பும் மனதும் சரியாக இருந்தால் தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். ஆகவே, இவை இரண்டையும் சரியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உடம்புக்கு ஒரு வியாதி வந்தால் அதை கண்டுபிடிக்க எவ்வளவோ வசதிகள் இருக்கின்றன. உடம்புக்குள்ளே என்ன கோளாறு என்பதை வெளியில் இருந்து கொண்டே பார்த்துவிட முடியும். ஆனால், மனதில் வியாதி என்றால் அதை கண்டுபிடிப்பதற்கு அதிக சாமர்த்தியம் வேண்டும்.

 

மற்றவர்கள் தான் அதைக் கவனித்துப் பார்த்துக் கண்டுபிடிக்கவேண்டும். “ஆள் ஒரு மாதிரியாக இருக்கிறாரே என்னவாக இருக்கும்? என்று அக்கறையாகக் கவனிக்க வேண்டும்.

 

ஆதாயம் கருதிப் பிறருக்கு உதவி செய்யாதீர். திருக்குர்ஆன்:- 74:6

 

சுருங்கக்கூறின், இயலாதவர்கள் உதவி கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவர்களின் நிலையறிந்து உதவுவதே மனிதநேயம்.

 

எனவே, நாம் வாழ்க்கையில் மனிதநேயம் பேணி, இறையருளை பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...