Search This Blog

Monday, 23 October 2023

இறுதி மரியாதை

 

இறுதி மரியாதை

 

ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ

 

பின்னர் அல்லாஹ் மனிதனை மரணிக்கச் செய்கிறான். பின்னர் அவனை மண்ணறையில் ஆக்குகிறான். திருக்குர்ஆன்:-  80:21

 

மனிதனின் அனைத்து காரியங்களிலும் சட்டதிட்டங்களை அமைத்து வாழ்க்கை நெறியை வகுத்துத் தருகிறது இஸ்லாம். ஒவ்வொரு மனிதனுடைய இறப்பு நேரத்திலும் அதன் பிறகும் சில ஒழுக்கங்களைப் பிற மனிதர்கள் கடைபிடிப்பது அவசியமாகும்.

 

அருகில் இருந்து ஓத வேண்டியவை

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَقِّنُوا مَوْتَاكُمْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ) உங்களில் இறப்பின் நெருக்கத்தில் இருப்பவருக்கு லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லை) எனும் கலிமாவை நினைவுபடுத்துங்கள். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1672, அபூதாவூத்-2710, திர்மிதீ-898

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ( اقْرَءُوا  يس‏ عَلَى مَوْتَاكُمْ   உங்களில் மரணத்தை நெருங்கிவிட்டவர் மீது யாசீன் அத்தியாயத்தை ஓதுங்கள். அறிவிப்பாளர்:- மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள்  நூல்:- அபூதாவூத்-2714, முஸ்னது அஹ்மத்    

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَ آخِرُ كَلاَمِهِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ دَخَلَ الْجَنَّةَ ) எந்த மனிதனின் இறுதிப் பேச்சு "லா இலாஹ இல்லல்லாஹ்" என்ற கலிமாவாக அமைந்துவிட்டதோ அவர் சொர்க்கம் சென்று விடுவார். அறிவிப்பாளர்:- முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-2709, திர்மிதீ-899

 

மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் சென்று ஆறுதலாக அவருக்கு அருகில் அமர்ந்து திருக்கலிமாவை நினைவுபடுத்துவது நபிவழியாகும்.

 

இறப்பின் நெருக்கத்தில் இருப்பவரின் அருகில் அமர்ந்து அவர் செவியுறுமாறு  திருக்கலிமாவை நாம் சற்று சப்தமாக ஓதிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், திருக்கலிமாவை சொல் என்று அவரை வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது இறுதிக்கட்டத்தில் உள்ள ஒருவர் எத்தகைய துன்பத்தில் இருக்கிறார் என்று நமக்கு தெரியாது. எனவே, நாம் கலிமாவை சொல்லுமாறு வற்புறுத்த அவர் எரிச்சல் அடைந்து அதை வெறுத்து விடக்கூடும். இதில் நமக்கு கவனம் தேவை.

 

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இம்மையின் சுகவாழ்வு நிரந்தரமில்லாததும் அழியக்கூடியதுமாகும் என்பன போன்ற கருத்துக்களும் மற்றும் மறுமையின் சுகவாழ்வு நிரந்தரமும் மகிழ்ச்சியும் உடையதுமாகும் என்பன போன்ற கருத்துக்களும் யாசீன் அத்தியாயத்தில் பரவலாக இடம் பெற்றிருக்கின்றன. மரணிக்க கூடியவரின் முன்பாக அமர்ந்து கொண்டு இதை ஓதப்படும்போது இறைவன் அதன் கருத்துக்களை அவருக்கு புரிய வைக்கலாம்.

 

அப்போது இம்மை வாழ்விலிருந்து மறுமை வாழ்வுக்கு செல்ல வேண்டும் என்ற உணர்ச்சி அவரை தட்டி எழுப்பும். இந்த உணர்ச்சி எழும்போது இறைவனிடம் போய் சேர வேண்டும் என்ற ஆர்வம் கொள்வார். அந்நேரம் மரண நேரத்தை மறந்து மறுமை உடைய சுகவாழ்வின் எண்ணத்தில் மூழ்கி விடுவார். இதனால் தான் "மரண தருவாயில் படுத்து கொண்டிருக்கின்ற மனிதரின் அருகில் அமர்ந்து யாசீன் அத்தியாயத்தை ஓதுங்கள்" என்று தூண்டப்படுகிறது.

 

பிரார்த்திப்பது

 

எங்கள் இறைவா! எங்களையும் நீ மன்னிப்பாயாக. எங்களுக்கு முன் இறைநம்பிக்கை கொண்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னிப்பாயாக. திருக்குர்ஆன்:- 59:10

 

ஸைத் (ரலி), ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் மரணித்த தகவலை மக்களுக்கு நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, "அவர்களுக்காக பாவமன்னிப்பு தேடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள். நூல்:- முஸ்னது அஹமத்

 

இறந்தவர்களுக்காக உயிருடன் இருப்பவர்கள் செய்யும் நற்செயலில் ஒன்று, அவர்களுக்காக அதிகமாக இறைவனிடம் பிரார்த்திப்பதாகும். பிள்ளைகள், மறைந்த பெற்றோருக்காக பாவமன்னிப்பு தேடுவதே சிறந்த நற்செயலாகும்.

 

தீதார் பார்த்தல்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் மரணச் செய்தியை செவியற்ற அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து எவரிடமும் பேசாமல் நபியவர்களின் புனித உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்கு வந்து நபியவர்கள் மீது போர்த்தப்பட்டிருந்த போர்வையை சற்று நீக்கிவிட்டு முத்தமிட்டு விட்டு அழுதார்கள். நூல்:- புகாரீ-1241

 

ஒருவர் மரணமடைந்த பின்பு பிரேதத்தை சற்று நேரம் மூடி வைப்பதும், பிறர் பார்ப்பதும் மார்க்கம் அனுமதித்தவையேயாகும். ஆனால், "தீதார்" என்ற பெயரில் ஒரு ஆண் பிரேதத்தை அந்நியப் பெண்கள் பார்ப்பதும், ஒரு பெண் பிரேதத்தை அந்நிய ஆண்கள் பார்ப்பதும் தவறாகும். இந்தத் தவறு நமது சமுதாயத்தில் புரையோடிப் போய்விட்டது.

 

மார்க்கம் அனுமதித்தவையே

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் (தம் பால்குடி சகோதரரான) உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் இறந்தபோது அழுதுகொண்டே அல்லது கண்களில் கண்ணீர் மல்க, அவரை முத்தமிட்டார்கள். நூல்:- திர்மிதீ-910

 

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் மரண தருவாயில் படுத்து கொண்டிருக்கின்ற தனது பேரக்குழந்தையின் மூச்சு திணறிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த நபியவர்கள் கண்ணீர் சொரிந்தார்கள். அப்போது சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், "நாயகமே! என்ன இது? (ஏன் அழுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ( هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ  ‏   ) "இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் இரக்கமுடையவனுக்கே இரக்கம் காட்டுகிறான்”  என்றார்கள் நூல்:- புகாரீ-1284 முஸ்லிம்-1682

 

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. எனது தந்தை கொல்லப்பட்டு கிடந்தபோது நான் அவரின் முகத்தின் மீதிருந்த துணியை அகற்றிவிட்டு அழுதேன். அப்போது (அங்கிருந்தவர்கள்) என்னை தடுத்தார்கள். ஆனால், கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை. பிறகு எனது மாமி ஃபாத்திமா (ரலி) அவர்களும் அழ ஆரம்பித்து விட்டார்கள். நூல்:- புகாரீ-1244

 

பற்றும் பாசமும் கொண்டிருக்கக்கூடிய குடும்பத்தினர் மற்றும் உறவினர் ஆகியோரில் எவரேனும் மரணித்து விடும்போது மனிதன் கவலையில் துன்பத்தில் மூழ்கி விடுவது இயற்கையே. அவ்வேளையில் அவன் சோகத்தினால் கண்ணீர்விட்டு அழுகிறான். இது தவறாகாது.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உள்ளத்தாலும் கண்களாலும் சோகத்தை வெளிப்படுத்துவது இறைவன் புறத்திலிருந்து உள்ளதாகும். நூல்:- முஸ்னது அஹ்மத்

 

அழக்கூடாது என்ற கருத்தில் காணப்படும் நபிமொழிகள் கண்ணீர் விடுவதையும் சத்தமின்றி அழுவதையும் குறிப்பிடவில்லை. மாறாக, முகத்திலும் கன்னத்திலும் அடித்துக்கொண்டும், ஒப்பாரி வைத்துக் கொண்டும், ஆடைகளை கிழித்துக்கொண்டும், மார்க்கம் அனுமதிக்காத வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டும் அழுவதையே குறிப்பிடுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. குடும்பத்தினர் அழுவதால் மண்ணறையில் இருப்பவர்களுக்கு வேதனை செய்யப்பட மாட்டாது. காரணம், "ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றொரு ஆத்மா சுமக்காது" (35:18) என்ற திருமறை வசனம் சான்றாகும். நூல்:- முஸ்லிம்-1694, திர்மிதீ-1004

 

குடும்பத்தினர் அழும் காரணத்தினால் அந்தப் பிரேதம் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறது. (முஸ்லிம்-1687) என்ற நபிமொழிக்கு இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகின்ற விளக்கமாவது: அரபு மக்களின் வழக்கப்படி இறப்பதற்கு முன்பே ஒருவர் தாம் இறந்த பின் தமக்காக ஒப்பாரி வைத்து அழவேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்து போக அதன்படி அவரது உறவினர்கள் ஒப்பாரி வைத்து அழுதால் வேதனை செய்யப்படுவார். இந்த ஒப்பாரிக்கு அவரது தூண்டுதலே காரணமாக இருக்கிறது என்பதே இதற்கு காரணம். அல்லது இறந்தவருக்காக நீங்கள் அழ வேண்டாம். நீங்கள் அழுகின்ற குரல் கேட்டு இறந்தவர் துக்கப்படுவார். இவ்வாறு துக்கப்படுவதின் மூலம் இறந்தவர் வேதனை அடைகிறார். நூல்:- அல்மின்ஹாஜ்

 

ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் மரணமடைந்த செய்தி அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது நபியவர்கள், ( اصْنَعُوا لآلِ جَعْفَرٍ طَعَامًا فَإِنَّهُ قَدْ أَتَاهُمْ أَمْرٌ شَغَلَهُمْ ) "ஜஅஃபரின் குடும்பத்தாருக்காக நீங்கள் உணவு தயாரிங்கள். ஏனெனில், அவர்களை (வேலை செய்ய விடாமல்) தடுக்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது" என்று (ஜஅஃபர் பின் அபீதாலிப் - ரலி அவர்கள் மூத்தா போரில் கொல்லப்பட்டபோது)  கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-2725,  திர்மிதீ-919

 

இறந்தவரின் வீட்டினர் சோகத்தில் ஆழ்ந்திருப்பதால் உறவினரோ, அண்டை வீட்டினரோ உணவு சமைத்துக் கொண்டு வந்து கொடுத்து அவ்வீட்டினருக்கு ஆறுதல் கூறி அவர்களை உண்ணச் செய்ய வேண்டும். மாறாக, துக்கம் விசாரிக்க வந்தவர்கள் இறந்தவரின் வீட்டில் உணவு உண்டுவிட்டு செல்வது உகந்த செயல் அல்ல.

 

துக்கம் அனுஷ்டிப்பது

 

ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது. அபீசுஃப்யான் (ரலி) அவர்களுடைய மரணச் செய்தி சிரியாவிலிருந்து வந்த மூன்றாம் நாள் (அவரது மகளார்) அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் மஞ்சள் நிற வாசனை திரவியத்தை வரவழைத்து தமது கன்னங்களிலும் முழங்கைகளிலும் தடவிக் கொண்டார்கள்.

 

பிறகு அன்னையவர்கள், ( لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ، إِلاَّ عَلَى زَوْجٍ، فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ) "இறைநம்பிக்கை கொண்டுள்ள ஒரு பெண் தனது கணவன் இறந்தாலே தவிர, வேறு எவர் இறந்தாலும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைபிடிக்கக் கூடாது. கணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதம் பத்து நாள்கள் துக்கம் கடைபிடிக்க வேண்டும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேள்விப்பட்டிராவிட்டால் இந்த வாசனை திரவியமானது எனக்கு தேவையற்றது தான் என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-1280

 

துக்கம் அனுஷ்டிப்பது என்பது மகிழ்ச்சி தரும் முறையில் தன்னை அலங்கரித்துக் கொள்வதை தவிர்ப்பது தானே தவிர, உண்ணுவது, பருகுவது போன்ற சுய தேவைகளை செய்து கொள்வது கூடாது என்று அர்த்தமல்ல. கணவன் அல்லாத பிற உறவினரில் எவர் இருந்தாலும் அதற்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிப்பது மார்க்கத்திற்கு முரணானதாகும்.

 

ஆனால், கணவனை இழந்த பெண் மட்டும் நான்கு மாதம் பத்து நாள்களில் இத்தா எனும் பெயரில் துக்கம் கடைபிடிக்க வேண்டும். இத்தா நாள்களில் வாசனை திரவியங்கள் பூசிக்கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்ளக்கூடாது. அதற்காக இத்தா நாள்கள் முழுவதும் தலைமுடிக்கு எண்ணெய்கூட தேய்க்காமல் அருவருப்பான கோலத்தில் இருப்பதும், வெண்ணிற ஆடைகள் மட்டும்தான் அணிய வேண்டும் என்று எண்ணுவதும், எவரிடமும் பேசாமல் வீட்டில் இருட்டான ஒரு மூளையில் தான் அடைந்து கிடக்க வேண்டும் என்று எண்ணுவதும், இறந்தவரின் வீட்டினர் ஒரு வருடத்திற்கு எந்த பெருநாள்களையும் மற்ற விசேஷங்களையும் கொண்டாடக்கூடாது என்று எண்ணுவதும் தவறாகும்.

 

நல்லதையே சொல்லுவோம்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا حَضَرْتُمُ الْمَرِيضَ أَوِ الْمَيِّتَ فَقُولُوا خَيْرًا فَإِنَّ الْمَلاَئِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ ) நீங்கள் நோயாளியையோ, இறந்தவரையோ சந்திக்கச் சென்றால் நல்லதையே சொல்லுங்கள். ஏனெனில், நீங்கள் கூறும் வார்த்தைக்கு வானவர்கள் ஆமீன் (அப்படியே ஆகட்டும்!) கூறுகிறார்கள். அறிவிப்பாளர்:- உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1677

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (கண்மணி பெருமானார் - ஸல் அவர்களை கடந்து) பிரேதம் ஒன்று கொண்டு செல்லப்பட்டது. அது குறித்து நல்லவிதமாக (புகழ்ந்து) பேசப்பட்டது. அதை செவியேற்ற அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( وَجَبَتْ ) "உறுதியாகிவிட்டது" என்று மூன்று முறை கூறினார்கள். பின்னர் மற்றொரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாக பேசப்பட்டது அப்போது நபியவர்கள், "உறுதியாகிவிட்டது" என்று மூன்று முறை கூறினார்கள்.

 

அப்போது உமர் (ரலி) அவர்கள், "நாயகமே! உறுதியாகிவிட்டது என்று கூறியதின் பொருள் என்ன?" என்று வினவினார்கள். நபியவர்கள், ( مَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ وَمَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا وَجَبَتْ لَهُ النَّارُ أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الأَرْضِ ) "நீங்கள் யாரைப் பற்றி நல்லவிதமாக பேசினீர்களோ அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. நீங்கள் யாரைப் பற்றி இகழ்வாக பேசினார்களோ அவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சியாளர்களாக ஆவீர்கள்" என்று மூன்று முறை கூறினார்கள். கூறினார்கள். நூல் புகாரீ-2642, முஸ்லிம்-1731

 

நாம் யாரைப் பற்றி பேசினாலும் தவறாக பேசக்கூடாது. குறிப்பாக, இறந்தவர் வீட்டுக்குச் சென்றாலும் அல்லது பிரேதத்தை நல்லடக்கம் செய்யும்போதும் இறந்தவரின் நற்குணம் மற்றும் நற்செயலை பற்றி மட்டுமே பேச வேண்டும். அவர் தீயவராக இருந்தாலும் சரியே! நாம் பேசும் வார்த்தைக்கு வானவர்கள் "ஆமீன்" கூறுகிறார்கள். அதனால் அவர் பாதிக்கப்படலாம். நம் எல்லோரிடமும் ஏதேனும் சில கெட்ட குணம் மற்றும் கெட்ட செயல் இருக்கலாம். இறந்தவரைப் பற்றி நாம் விமர்சனம் செய்தால் நாம் இறந்த பின்னர் பிறர் நம்மைப் பற்றி விமர்சனம் செய்யும் நிலை ஏற்படலாம். நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்ளக் கூடாது தானே! சிந்திப்போமா?

 

விரைவுப்படுத்துவது

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَسْرِعُوا بِالْجَنَازَةِ فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُونَهَا عَلَيْهِ وَإِنْ تَكُنْ غَيْرَ ذَلِكَ فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ ) பிரேதத்தை துரிதமாகக் கொண்டு செல்லுங்கள். ஏனெனில், அந்த பிரேதம் நற்செயல்கள் புரிந்ததாயிருந்தால் (அதற்காக) நன்மையின் பக்கம் அதை விரைவுப்படுத்துகிறீர்கள். வேறு விதமாக இருந்தால் ஒரு தீங்கை உங்கள் தோள்களிலிருந்து (விரைவாக) இறக்கி வைக்கிறீர்கள். நூல்:- புகாரீ-1315, முஸ்லிம்-1721

 

ஒருவர் இறந்தவுடன் அவரை நல்லடக்கம் செய்வதற்கு விரைவுபடுத்த வேண்டும். குடும்பத்தினர் மற்றும் உறவினர் இறந்தவரை "தீதார்" பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருநாள் அல்லது இரு நாள்கள் வரையிலும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொண்டு நல்லடக்கம் செய்வதற்கு தாமதப்படுத்துவது தவறாகும். இறந்தவரை பிறர் பார்ப்பதின் மூலம் இறந்தவருக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை. 


உடல்கூறு நிபுணர்கள் கூறுகிறார்கள். உடலிலிருந்து உயிர் பிரிந்த 36 மணி நேரத்திற்கு பின்பு அந்த உடலில் ஈக்கள் முட்டையிட ஆரம்பிக்கின்றது.

உடலிலிருந்து உயிர் பிரிந்த அனுமதி 60 மணி நேரத்திற்கு பின்பு அவ்வுடலிலிருந்து துர்நாற்றம் தோன்ற ஆரம்பிக்கிறது.

உடலிலிருந்து உயிர் பிரிந்த மூன்று நாள்களுக்குப் பின்பு அவ்வுடலிலிருந்து நகங்கள் கழன்று விழுகின்றது.

உடலிலிருந்து உயிர் பிரிந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு தலையில் இருக்கின்ற மூளை உருக ஆரம்பிக்கின்றது.

உடலிலிருந்து உயிர் பிரிந்த ஆறு நாள்களுக்குப் பிறகு அவ்வுடலில் இருக்கின்ற வாயுக்களால் வயிறு வெடிக்க ஆரம்பிக்கிறது.

உடலிலிருந்து உயிர் பிரிந்த இரண்டு மாதங்களில் அழுகிய பழங்கள் உருகுவதைப் போல் அவ்வுடல் உருக ஆரம்பிக்கிறது.

 

இப்படியாக தொடர்புடைய பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு மக்கி போய் அழிந்து மண்ணோடு மண்ணாகி விடுகிறது. உண்டு கழித்ததுஉடுத்திக் கிழித்ததுஅனுபவித்து முடித்தது அனைத்தும் இந்த மண்ணிலிருந்து வந்தவைத தான். இம்மண்ணிலிருந்து வந்த எல்லாவற்றையும் தின்று வளர்ந்த மனிதனின் உடலை இறுதியாக மண் தின்று விடுகிறது.


பிரேதத்தை தோளில் சுமந்த பின் மிக வேகமாக ஓடாமலும், மிக மெதுவாக செல்லாமலும் நடுநிலையை கடைபிடித்து, பிரேதம் ஆடாமல் அசையாமல் கொண்டு செல்ல வேண்டும். பிரேதத்தை தூக்கிக் கொண்டு ஓட்டமாக ஓடினால் பிறர் பார்வைக்கு கேலிக்கூத்தாகிவிடும்.

 

அதிக நன்மை

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள், ( مَنْ شَهِدَ الْجَنَازَةَ حَتَّى يُصَلَّى عَلَيْهَا فَلَهُ قِيرَاطٌ وَمَنْ شَهِدَهَا حَتَّى تُدْفَنَ فَلَهُ قِيرَاطَانِ ) "எவர் (ஜனாஸா) பிரேதத் தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு 'கீராத்' நன்மையுண்டு. நல்லடக்கம் செய்யப்படும் வரை எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு கீராத் நன்மையுண்டு" என்று கூறினார்கள். அப்போது "கீராத் என்றால் என்ன?" என்று வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள், ( مِثْلُ الْجَبَلَيْنِ الْعَظِيمَيْنِ ) "இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1325, முஸ்லிம்-1723

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ فَيَقُومُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلاً لاَ يُشْرِكُونَ بِاللَّهِ شَيْئًا إِلاَّ شَفَّعَهُمُ اللَّهُ فِيهِ ) ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக  (பிரேதத் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1730

 

அறிஞர் அபூ உபைத் பின் ஹர்பவைஹி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். எங்களது ஆசிரியர் சரிய்யிஸ் ஸகதீ (ரஹ்)  அவர்கள் மரணமடைந்த பிறகு ஒருநாள் அன்னாரை கனவில் கண்டேன். கனவில் நான் அன்னாரிடம், "அல்லாஹ் உங்களுடன் எவ்வாறு நடந்து கொண்டான்? உங்களின் நிலை இப்போது எவ்வாறு உள்ளது?" என்று வினவினேன். அதற்கு அன்னார், "அல்லாஹ் என்னையும் மன்னித்து விட்டான். எனது பிரேதத் தொழுகையில் கலந்து கொண்ட அனைவரையும் மன்னித்துவிட்டான்" என்று பதிலளித்தார்கள். உடனே நான், "ஆசிரியர் அவர்களே! தங்களது பிரேதத் தொழுகையில் நானும் கலந்து கொண்டேன். எனவே, என்னையும் அல்லாஹ் மன்னித்துவிட்டானா?" என்று கேட்டேன். அன்னார், "ஆம்" என்று கூறினார்கள். 


நல்லோர்களின் பிரேதத் தொழுகைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைத்தால் அதை நாம் தவறவிடக்கூடாது. அங்கு அல்லாஹ்வுடைய அருளும் மற்றும் வானவர்களும் இறங்குகிறார்கள். அந்த நல்லடியார்களின் பொருட்டால் அவர்களின் பிரேதத் தொழுகையில் கலந்து கொண்டவரின் பாவங்களையும் அல்லாஹுத்தஆலா மன்னிக்கக்கூடும்.


ஒரு முஸ்லிம் இறந்து விடும்போது, அவருக்காக பிரேதத் தொழுகை நடத்தப்பட வேண்டியது (ஃபர்ளு கிஃபாயா எனும்) கட்டாயக் கடமையாகும். இக்கடமையை சமுதாயத்தில் ஒருவர் செய்து முடித்தாலும் சமுதாயத்தின் மீதுள்ள கடமை நீங்கிவிடும். இந்த கடமையை எவரும் செய்யவில்லையெனில் அதன் பாவம் சமுதாயம் முழுமைக்கும் சாரும்.

 

(ஜனாஸா தொழுகை எனும்) பிரேதத் தொழுகையின் நோக்கம் என்னவெனில் இறந்தவரின் நல்வாழ்வுக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதாகும். ஒருவரது பிரேதத் தொழுகையில் பலர் கலந்து கொள்வது அவர் ஒரு இறைநம்பிக்கையாளர் என்பதற்கு அவர்கள் சாட்சியம் அளிப்பதை போன்று உள்ளது. அத்துடன் அவர்களெல்லாம் அவருக்காக இறைவனிடம் பரிந்துரை செய்கின்றனர். ஆகவே, அவர்களின் பரிந்துரையை இறைவன் ஏற்றுக் கொள்வான்.

 

நாம் நினைத்த நேரத்தில் எல்லாம் தொழ முடியாத தொழுகைகளில் ஒன்று தான் (ஜனாஸா தொழுகை) பிரேதத் தொழுகை. பிற உபரியான (நஃபில்) தொழுகைகளைவிட பிரேதத் தொழுகைக்கு அதிக நன்மைகள் உண்டு. ஏனெனில், நஃபில் தொழுகைகள் தொழுவதின் மூலம் நமக்கு மட்டும்தான் நன்மைகள் கிடைக்கும். ஆனால், ஒருவரது பிரேதத் தொழுகையில் கலந்து கொள்வதின் மூலம் நமக்கும் மலையளவு நன்மைகள் கிடைக்கும். இறந்தவருக்கும் நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அத்தொழுகையில் கலந்து கொள்வதில் சோம்பல் இருக்கக் கூடாது.

 

எனவே, நாம் இறந்தவருக்கு அனைத்தும் மரியாதையும் செய்து கண்ணியமாக அவரை வழியனுப்பி, அதன் மூலம் நாம் இறையருளை பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

Friday, 6 October 2023

பரிந்துரை செய்வோம்

 

பரிந்துரை செய்வோம்

 

مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا

 

எவரேனும் யாதொரு நன்மையானவற்றுக்கு பரிந்துரை செய்தால் அந்த நன்மையில் ஒரு பங்கு அவருக்கு உண்டு. (அவ்வாறே) யாதொரு தீய விஷயத்திற்கு எவரேனும் பரிந்துரை செய்தால் அத்தீமையிலிருந்தும் அவருக்கு ஒரு பாகம் உண்டு. அல்லாஹ் அனைத்தையும் முறைப்படி கவனிப்பவனாக இருக்கின்றான். திருக்குர்ஆன்:- 4:85

 

மனித குலத்திற்கு சேவை செய்யும் வழிகள் ஏராளமுண்டு. அதில் ஒன்று பரிந்துரை செய்தல். நம்மால் முடியுமானால் தாராளமாக பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால், நற்காரியத்திற்கு மட்டும் பரிந்துரை செய்ய முன் வர வேண்டும். அதற்கு நன்மையும் கிடைக்கும். அதை விடுத்து தீய காரியத்திற்கு நாம் பரிந்துரை செய்வோமேயானால் அந்த தீமையின் பாதிப்பு எப்படியாவது நம்மை வந்து சேரும்.

 

தேவையுடையவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தால், தம்முடன் அமர்ந்திருப்பவர்களை நோக்கி, ( اشْفَعُوا تُؤْجَرُوا ) "(இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் வழங்கப்படும்" என்று கூறுவார்கள். அறிவிப்பாளர்:- அபூமூசா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1432, முஸ்லிம்-5123

 

நம்மால் பிறருக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும், உதவி செய்பவரை கண்டறிந்து அவரிடம் நமக்குள்ள அறிமுகத்தை பயன்படுத்தி பிறருக்கு உதவுமாறு பரிந்துரை செய்தால் அதற்காக நமக்கும் நன்மை கிடைக்கும். ஆட்சியாளர், உறவினர், நண்பர்கள் என யார் மூலம் உதவி கிடைக்குமோ அவர்களை அணுகி பிரச்சனைகளை தீர்க்கவோ, உதவிகள் புரியவோ பரிந்துரைக்கலாம்.

 

பரிந்துரை செய்வதில் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்கக் கூடாது. தேவையுடையோர் என்றால் காலதாமதமின்றி உடனடியாக பரிந்துரைக்க வேண்டும். மேலும், நம்முடைய பரிந்துரையின் தேவை நற்காரியத்திற்காகவா? அல்லது தீய காரியத்திற்காகவா? அல்லது பிறரை ஏமாற்றிவிட்டு தான் முந்திக் கொள்வதற்காக வா? என்றெல்லாம் சிந்தித்த பிறகே பிறருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

 

குறைவின்றி கிடைக்கும்

 

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் மதிய வேளையில் செருப்பு அணியாதவர்களாகவும் ஆடை குறைந்த நிர்வாணிகளாகவும் முளர் குலத்தைச் சேர்ந்தவர்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களது ஏழ்மை நிலையை கண்ட நபியவர்கள் முகம் நிறம் மாறியது. (ஒருவித தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வந்து பிலால் (ரலி) அவர்களை பாங்கு சொல்லும்படி கூறினார்கள். பிறகு ளுஹர் தொழுதுவிட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது திருமறையின் (4:1, 59:18) சில வசனங்களை ஓதினார்கள்.

 

உடனே நபித்தோழர்கள் தம்மிடமிருந்த பொற்காசுகள், வெள்ளிக்காசுகள், ஆடைகள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றை கொண்டு வந்து பெரும் குவியலாகச் சேர்த்துவிட்டனர். அப்போது நபியவர்களின் முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதை கண்டேன்.

 

நபியவர்கள், ( مَنْ سَنَّ فِي الإِسْلاَمِ سُنَّةً حَسَنَةً فَلَهُ أَجْرُهَا وَأَجْرُ مَنْ عَمِلَ بِهَا بَعْدَهُ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَىْءٌ وَمَنْ سَنَّ فِي الإِسْلاَمِ سُنَّةً سَيِّئَةً كَانَ عَلَيْهِ وِزْرُهَا وَوِزْرُ مَنْ عَمِلَ بِهَا مِنْ بَعْدِهِ مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَوْزَارِهِمْ شَىْءٌ ‏"எவர் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்கு பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு. அதற்காக அவர்களது (அமல் செய்தவர்) நன்மையில் எதுவும் குறைந்து விடாது. அவ்வாறே, எவர் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும், அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் உண்டு. அதற்காக அவர்களது பாவத்தில் எதுவும் குறைந்து விடாது" என்று கூறினார்கள். பின்பு தர்மமாகக் கிடைத்த பொருள்களை முளர் குலத்தினருக்கு பங்கிட்டு கொடுத்தார்கள். நூல்:-முஸ்லிம்-1848, நசாயீ

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "எனக்கு (தாங்க முடியாத பசி) துன்பம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். நபியவர்கள், தம் துணைவியாரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதும் இருக்கிறதா என்று கேட்டு வரச் சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை.

 

அப்போது நபியவர்கள், தம் தோழர்களை நோக்கி! ( أَلاَ رَجُلٌ يُضَيِّفُ هَذِهِ اللَّيْلَةَ يَرْحَمُهُ اللَّهُ ) "இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள்புரிவான்" என்று கேட்டார்கள். அப்போது அன்சாரி தோழர்களில் ஒருவர் (அபூதல்ஹா - ரலி அவர்கள்) "நான் இவருக்கு விருந்தளிக்கிறேன்" என்று கூறி, அவரை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். நூல்:- புகாரீ-4889

 

கருணைக் கடலான அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் உதவி கேட்டு வந்தால் மறுப்பு கூறாமல் இயன்றவரை உதவி செய்வார்கள். இயலாது போனால் பிறரிடம் அதற்காக பரிந்துரை செய்வார்கள். இதுவே நபியவர்களின் குணமாகும். நற்செயலை செய்வதும், மற்றவருக்கு வழிகாட்டுவதும், அதில் ஈடுபடும்படி மற்றவர்களை தூண்டிவிடுவதும் ஓர் நற்செயலாகும்.

 

பிறர் நம்மிடம் உதவி கேட்டு வந்தால் முடிந்தவரை அதற்காக நாமே முயற்சி செய்ய வேண்டும். கஞ்சத்தனத்தால் நம் கைகளை முடக்கிக்கொண்டு பிறரிடம் இதற்காக பரிந்துரை செய்தல் தவறாகும். இதனால் மக்களிடம் நமக்குள்ள மதிப்பு குறைந்து போகலாம். நாம் எவரிடம் பரிந்துரை செய்கிறோமோ அவர் நம்மிடம் "நீயே இதை செய்யலாமே இதற்கு உன்னிடம் போதிய வசதி உள்ளது தானே" என்று திருப்பி கேட்டுவிட்டால் அது நமக்கு அசிங்கமாகிவிடும்.

 

எவர் நம்மிடம் பரிந்துரை செய்தாலும் அதற்கு மதிப்பளிக்க வேண்டும். பரிந்துரை செய்பவர் ஏழை, சமுதாயத்தில் அந்தஸ்து இல்லாதவர், பெரும் பாவி என்பதற்காக கண்டு கொள்ளாமல் இருக்கக்கூடாது. பரிந்துரை போன்ற நற்செயலில் ஈடுபடும் போது முஸ்லிம் பிற சகோதர சமயத்தவர்கள் என்ற பாகுபாடு தேவையில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிற சகோதர சமயத்தவர்களுக்கு உதவியும் செய்வார்கள். தேவைக்கேற்ப பரிந்துரையும் செய்வார்கள். தெருவில் போகிற யாராவது நம்மிடம் யாசித்தால் முடிந்தளவு உதவிட வேண்டும். இல்லையெனில் உதவி செய்பவரை அவருக்கு அடையாளப்படுத்த வேண்டும். முடிந்தால் அவருக்கு பரிந்துரை செய்யலாம்.

 

அவரவர் விருப்பம்

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அடிமையாக இருந்த மஃகீஸ் என்பவர் தனது மனைவி பரீரா மீது அதிக பெரியமாக இருந்தார். அவர் (பரீரா மணமுறிவால் தம்மை பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்தபோது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவுக்கு அழுத வண்ணம் பரீரா பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார். அப்போது அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ( يَا عَبَّاسُ أَلاَ تَعْجَبُ مِنْ حُبِّ مُغِيثٍ بَرِيرَةَ، وَمِنْ بُغْضِ بَرِيرَةَ مُغِيثًا ‏  ) அப்பாஸ்! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா முஃகீஸ் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு வியப்படையவில்லையா? என்று கேட்டார்கள்.

 

(முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்டபோது) நபியவர்கள், ( لَوْ رَاجَعْتِهِ )  முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக்கூடாதா? என்று  பரீராவிடம் வினவினார்கள். அதற்கு பரீரா, நாயகமே! எனக்கு தாங்கள் கட்டளையிடுகிறீர்களா? என்று வினவினார். நபியவர்கள், ( إِنَّمَا أَنَا أَشْفَعُ ) "(இல்லை,) நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்" என்றார்கள். அப்போது பரீரா, ( لاَ حَاجَةَ لِي فِيهِ ) "அப்படியானால் அவர் எனக்கு தேவையில்லை" என்று கூறிவிட்டார். நூல்:- புகாரீ5283, பத்ஹுல் முல்ஹிம்

 

இஸ்லாத்தில் ஒரு பெண் தான் சுயமாக தீர்மானம் செய்வதற்கு முழு உரிமை உடையவள். இந்த உரிமையை எவரும் பறிக்கக் கூடாது. பரிந்துரை செய்வது நற்செயலாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் அவரவர் விருப்பமாகும். பரிந்துரை ஏற்றுக் கொள்ளாவிட்டால் பரிந்துரை செய்தவர் கோபப்படக்கூடாது. ஆனாலும், பரிந்துரை செய்தவருக்கு அதற்கான நற்கூலி உண்டு என்பதை இந்நபிமொழி தெளிவு படுத்துகிறது.

 

சிலர் தனக்கு ஏதேனும் கஷ்ட நஷ்டங்கள், நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் வெட்கத்தால் அதை பிறரிடம் சொல்லி உதவி தேட மாட்டார்கள். உதவியோ, பரிந்துரையோ என்னிடம் நேரடியாக கேட்டு வந்தால் மட்டுமே செய்வேன் என்று இறுமாப்புக் கொள்ளாமல், சிரமப்படுவோரின் செய்தி நமக்கு வந்துவிட்டாலே ஓடோடிச் சென்று இயன்றளவு உதவியோ பரிந்துரையோ செய்ய வேண்டும். இதுவே, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நற்பண்பாகும். ஓடோடிச் சென்று உதவிகள் புரிய பூகம்பம், சுனாமி, பெரும்வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் வரவேண்டும் என்ற அவசியமில்லை.

 

நமக்கு நல்லதாக, சிறந்ததாக தெரிவதில் பிறருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். நான் பரிந்துரை செய்துவிட்டால் அது உடனே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு எதிராக எவரும் மறுத்தோ, எதிர்த்தோ பேசக்கூடாது என்று எண்ணுவது ஆணவத்தின் அடையாளமாகும்.

 

யாராக இருந்தாலென்ன?

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது மக்ஸுமி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாலள். அந்தப் பெண் தொடர்பாக கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் (பேசி தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க) சொல்வது யார்? என்று குறைஷியர் ஆலோசித்து, நபியவர்களின் செல்லப்பிள்ளை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தேர்வு செய்தனர்.

 

அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் பரிந்து பேசினார். அப்போது நபியவர்கள், ( أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ ) "அல்லாஹ் விதித்த தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்ற விடாமல் விட்டுவிடுமாறு) நீ பரிந்துரை செய்கின்றாய்?" என்று கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரையாற்றினார்கள்.

 

( أَيُّهَا النَّاسُ إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ وَايْمُ اللَّهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا ) மக்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த (பனீ இஸ்ராயீல்) மக்கள் அழிந்து போனதற்கு காரணமே (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால், அவர்கள் அவரை தண்டிக்காமல் விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால், அவர்கள் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். இறைவன் மீதாணையாக! இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி இருந்தாலும் நான் அவரது கையை துண்டித்தே இருப்பேன். நூல்:- புகாரீ-3475, முஸ்லிம்-3485

 

குற்றவியல் தண்டனைகளில் தலையிட்டு வேண்டியவருக்கு பரிந்து பேசுவது தடை செய்யப்பட்டதாகும். பணம் வாங்கிக் கொண்டு பொய் வழக்குகளுக்கு வழக்காடும் வக்கீலை போல் ஒரு தவறை நிலைநாட்டுவதற்காக அல்லது மெய்யை பொய்யாக்குவதற்காக பரிந்து பேசுவதும் இஸ்லாம் வெறுத்த ஒன்றாகும்.

 

பாவத்திற்கு துணை போவது பெரும் பாவமாகும். தனது ஆட்சி, அதிகாரம், பாசம், நட்பு இவைகளை கருவியாகப் பயன்படுத்தி தீய காரியங்களுக்கு பரிந்துரை செய்யக்கூடாது. தகுதி இல்லாதவர்களெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு மக்களுக்கு தொல்லை கொடுப்பதற்கு காரணம் தீய பரிந்துரையேயாகும்.

 

பதவிக்கு உள்ள பொறுப்பு

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ شَفَعَ لأَخِيهِ بِشَفَاعَةٍ فَأَهْدَى لَهُ هَدِيَّةً عَلَيْهَا فَقَبِلَهَا فَقَدْ أَتَى بَابًا عَظِيمًا مِنْ أَبْوَابِ الرِّبَا ) எவரேனும் ஒருவர் தன்னுடைய சகோதரனுக்கு பரிந்துரை செய்து அதற்காக அவருக்கு அன்பளிப்பு அனுப்பப்பட்டு, அதை அவர் பெற்றுக் கொண்டால் நிச்சயமாக அவர் வட்டியின் பெரும் வாசலுக்குச் சென்று (நுழைந்து)விட்டார். அறிவிப்பாளர்:- அபூ உமாமா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3541, புலூகுல் மராம்-862

 

பிரபல தாபிஉ ஹசன் பின் சஹ்ல் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அதனை ஹசன் (ரஹ்)  அவர்கள் நிறைவேற்றிக் கொடுத்தார்கள். பயன் பெற்ற மனிதர் நன்றி கூற வந்தார். அவரிடம் ஹசன் (ரஹ்) அவர்கள், "எதற்காக எனக்கு நன்றி சொல்கிறீர்? நாங்கள் பொருள்களுக்கு ஸகாத் எனும் கடமை இருப்பது போல், பதவிக்கும் ஸகாத் இருப்பதாகக் கருதுகிறோம்" என்று கூறினார்கள்.

 

பட்டம், பதவி, செல்வாக்கு ஆகியவை அல்லாஹ்வின் அருட்கொடையாகும். அருட்கொடைக்காக அல்லாஹ்வை புகழ்ந்து சமுதாய முன்னேற்றத்திற்காக அவற்றை பயன்படுத்த வேண்டும். சிலர் தங்களது செல்வாக்கின் மூலம் ஒருவருக்கு பதவி கிடைப்பதற்கும், பதவி உயர்வுக்கும், சிறந்த மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்கிறார்கள். அதற்குப் பகரமாக ஏதேனும் அன்பளிப்பை பெற்றுக் கொள்கிறார்கள். இவ்வாறு அன்பளிப்புகள் தடை செய்யப்பட்டதாகும். அன்பளிப்பு தர வேண்டும் என நிபந்தனை இல்லாமல் கொடுக்கப்பட்டாலும் அதைப் பெறுவதும் குற்றமாகும்.

 

மனிதனுக்கு உலகத்தில் வாழும்போது பிறரின் பரிந்துரை தேவைப்படுகிறது. மறுமைநாளிலும் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் பரிந்துரை தேவைப்படுகிறது.

 

நம்முடைய சமுதாயத்தில் சிலர், கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காகவும், சிலருக்கு சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும், சிலருக்கு நரகம் விதியாக்கப்பட்ட பின்பு அவர்கள் நரகம் செல்லாமல் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காகவும், சிலர்கள் நரகத்திற்குச் சென்ற பின் அவர்கள் சொர்க்கத்திற்குள் நுழைய வேண்டும் என்பதற்காகவும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் பரிந்துரை செய்வார்கள் என்ற நபிமொழிகள் புகாரீ, முஸ்லிம் போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

உணவு, உடை, உறைவிடம், போதிய கல்வியறிவு, போதிய வேலைவாய்ப்பு, போதிய மருத்துவ வசதி ஆகியவைகளில் எது பிறருக்கு தேவையாக இருந்தாலும் அது அவர்களுக்கு கிடைத்திட இயன்றவரை நாம் உதவி செய்ய வேண்டும். நம்மால் இயலாது போனால் இவைகளை நிறைவு செய்து தரும் வசதியுள்ள கொடை உள்ளம் கொண்டவர்களிடம், இது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியிடம் பரிந்துரை செய்ய வேண்டும். இதுவே, இஸ்லாம் போதிக்கும் நல்லறமாகும்.

 

மனித சமுதாயத்தின் நலனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் இஸ்லாத்தின் பார்வையில் இறை வழிபாடே ஆகும். ஆகவே, நாம் பிறரின் நற்காரியங்களுக்கு இயன்றவரை பரிந்துரை செய்து இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

 

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...