இறுதி மரியாதை
ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ
பின்னர் அல்லாஹ் மனிதனை மரணிக்கச் செய்கிறான். பின்னர் அவனை மண்ணறையில் ஆக்குகிறான்.
திருக்குர்ஆன்:- 80:21
மனிதனின் அனைத்து காரியங்களிலும் சட்டதிட்டங்களை அமைத்து வாழ்க்கை நெறியை வகுத்துத்
தருகிறது இஸ்லாம். ஒவ்வொரு மனிதனுடைய இறப்பு நேரத்திலும் அதன் பிறகும் சில ஒழுக்கங்களைப்
பிற மனிதர்கள் கடைபிடிப்பது அவசியமாகும்.
அருகில் இருந்து ஓத வேண்டியவை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَقِّنُوا مَوْتَاكُمْ لاَ إِلَهَ إِلاَّ
اللَّهُ ) உங்களில் இறப்பின் நெருக்கத்தில் இருப்பவருக்கு
லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லை) எனும் கலிமாவை
நினைவுபடுத்துங்கள். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1672,
அபூதாவூத்-2710, திர்மிதீ-898
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( (
اقْرَءُوا يس عَلَى مَوْتَاكُمْ உங்களில் மரணத்தை நெருங்கிவிட்டவர் மீது யாசீன் அத்தியாயத்தை
ஓதுங்கள். அறிவிப்பாளர்:- மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-2714, முஸ்னது அஹ்மத்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَ آخِرُ كَلاَمِهِ لاَ إِلَهَ إِلاَّ
اللَّهُ دَخَلَ الْجَنَّةَ ) எந்த மனிதனின் இறுதிப் பேச்சு "லா இலாஹ இல்லல்லாஹ்"
என்ற கலிமாவாக அமைந்துவிட்டதோ அவர் சொர்க்கம் சென்று விடுவார். அறிவிப்பாளர்:- முஆத்
பின் ஜபல் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-2709, திர்மிதீ-899
மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒருவரிடம் சென்று ஆறுதலாக அவருக்கு அருகில்
அமர்ந்து திருக்கலிமாவை நினைவுபடுத்துவது நபிவழியாகும்.
இறப்பின் நெருக்கத்தில் இருப்பவரின் அருகில் அமர்ந்து அவர் செவியுறுமாறு திருக்கலிமாவை நாம் சற்று சப்தமாக ஓதிக் கொண்டிருக்க
வேண்டும். ஆனால், திருக்கலிமாவை சொல்
என்று அவரை வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ
கூடாது இறுதிக்கட்டத்தில் உள்ள ஒருவர் எத்தகைய துன்பத்தில் இருக்கிறார் என்று நமக்கு
தெரியாது. எனவே, நாம் கலிமாவை சொல்லுமாறு
வற்புறுத்த அவர் எரிச்சல் அடைந்து அதை வெறுத்து விடக்கூடும். இதில் நமக்கு கவனம் தேவை.
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இம்மையின் சுகவாழ்வு நிரந்தரமில்லாததும்
அழியக்கூடியதுமாகும் என்பன போன்ற கருத்துக்களும் மற்றும் மறுமையின் சுகவாழ்வு நிரந்தரமும்
மகிழ்ச்சியும் உடையதுமாகும் என்பன போன்ற கருத்துக்களும் யாசீன் அத்தியாயத்தில் பரவலாக
இடம் பெற்றிருக்கின்றன. மரணிக்க கூடியவரின் முன்பாக அமர்ந்து கொண்டு இதை ஓதப்படும்போது
இறைவன் அதன் கருத்துக்களை அவருக்கு புரிய வைக்கலாம்.
அப்போது இம்மை வாழ்விலிருந்து மறுமை வாழ்வுக்கு செல்ல வேண்டும் என்ற உணர்ச்சி அவரை
தட்டி எழுப்பும். இந்த உணர்ச்சி எழும்போது இறைவனிடம் போய் சேர வேண்டும் என்ற ஆர்வம்
கொள்வார். அந்நேரம் மரண நேரத்தை மறந்து மறுமை உடைய சுகவாழ்வின் எண்ணத்தில் மூழ்கி விடுவார்.
இதனால் தான் "மரண தருவாயில் படுத்து கொண்டிருக்கின்ற மனிதரின் அருகில் அமர்ந்து
யாசீன் அத்தியாயத்தை ஓதுங்கள்" என்று தூண்டப்படுகிறது.
பிரார்த்திப்பது
எங்கள் இறைவா! எங்களையும் நீ மன்னிப்பாயாக. எங்களுக்கு முன் இறைநம்பிக்கை கொண்ட
எங்களுடைய சகோதரர்களையும் மன்னிப்பாயாக. திருக்குர்ஆன்:- 59:10
ஸைத் (ரலி), ஜஅஃபர் பின் அபீதாலிப்
(ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி)
ஆகியோர் மரணித்த தகவலை மக்களுக்கு நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு,
"அவர்களுக்காக பாவமன்னிப்பு
தேடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள். நூல்:- முஸ்னது அஹமத்
இறந்தவர்களுக்காக உயிருடன் இருப்பவர்கள் செய்யும் நற்செயலில் ஒன்று, அவர்களுக்காக அதிகமாக இறைவனிடம் பிரார்த்திப்பதாகும்.
பிள்ளைகள், மறைந்த பெற்றோருக்காக பாவமன்னிப்பு தேடுவதே சிறந்த நற்செயலாகும்.
தீதார் பார்த்தல்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் மரணச் செய்தியை
செவியற்ற அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து எவரிடமும் பேசாமல் நபியவர்களின் புனித உடல்
வைக்கப்பட்டிருந்த அறைக்கு வந்து நபியவர்கள் மீது போர்த்தப்பட்டிருந்த போர்வையை சற்று
நீக்கிவிட்டு முத்தமிட்டு விட்டு அழுதார்கள். நூல்:- புகாரீ-1241
ஒருவர் மரணமடைந்த பின்பு பிரேதத்தை சற்று நேரம் மூடி வைப்பதும், பிறர் பார்ப்பதும் மார்க்கம் அனுமதித்தவையேயாகும்.
ஆனால், "தீதார்" என்ற பெயரில்
ஒரு ஆண் பிரேதத்தை அந்நியப் பெண்கள் பார்ப்பதும், ஒரு பெண் பிரேதத்தை அந்நிய ஆண்கள் பார்ப்பதும் தவறாகும். இந்தத்
தவறு நமது சமுதாயத்தில் புரையோடிப் போய்விட்டது.
மார்க்கம் அனுமதித்தவையே
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் (தம் பால்குடி
சகோதரரான) உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் இறந்தபோது அழுதுகொண்டே அல்லது கண்களில்
கண்ணீர் மல்க, அவரை முத்தமிட்டார்கள். நூல்:- திர்மிதீ-910
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள்
மரண தருவாயில் படுத்து கொண்டிருக்கின்ற தனது பேரக்குழந்தையின் மூச்சு திணறிக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த நபியவர்கள் கண்ணீர் சொரிந்தார்கள். அப்போது சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள்,
"நாயகமே! என்ன இது?
(ஏன் அழுகிறீர்கள்?)” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ( هَذِهِ
رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ عِبَادِهِ وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ
مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ ) "இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய
இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் இரக்கமுடையவனுக்கே இரக்கம் காட்டுகிறான்” என்றார்கள் நூல்:- புகாரீ-1284 முஸ்லிம்-1682
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. எனது தந்தை கொல்லப்பட்டு கிடந்தபோது
நான் அவரின் முகத்தின் மீதிருந்த துணியை அகற்றிவிட்டு அழுதேன். அப்போது (அங்கிருந்தவர்கள்)
என்னை தடுத்தார்கள். ஆனால், கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை. பிறகு எனது மாமி ஃபாத்திமா (ரலி) அவர்களும் அழ ஆரம்பித்து
விட்டார்கள். நூல்:- புகாரீ-1244
பற்றும் பாசமும் கொண்டிருக்கக்கூடிய குடும்பத்தினர் மற்றும் உறவினர் ஆகியோரில்
எவரேனும் மரணித்து விடும்போது மனிதன் கவலையில் துன்பத்தில் மூழ்கி விடுவது இயற்கையே.
அவ்வேளையில் அவன் சோகத்தினால் கண்ணீர்விட்டு அழுகிறான். இது தவறாகாது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உள்ளத்தாலும் கண்களாலும் சோகத்தை வெளிப்படுத்துவது
இறைவன் புறத்திலிருந்து உள்ளதாகும். நூல்:- முஸ்னது அஹ்மத்
அழக்கூடாது என்ற கருத்தில் காணப்படும் நபிமொழிகள் கண்ணீர் விடுவதையும் சத்தமின்றி
அழுவதையும் குறிப்பிடவில்லை. மாறாக, முகத்திலும் கன்னத்திலும் அடித்துக்கொண்டும், ஒப்பாரி வைத்துக் கொண்டும், ஆடைகளை கிழித்துக்கொண்டும், மார்க்கம் அனுமதிக்காத வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டும் அழுவதையே
குறிப்பிடுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. குடும்பத்தினர் அழுவதால் மண்ணறையில் இருப்பவர்களுக்கு
வேதனை செய்யப்பட மாட்டாது. காரணம், "ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றொரு ஆத்மா சுமக்காது" (35:18) என்ற திருமறை வசனம் சான்றாகும். நூல்:- முஸ்லிம்-1694,
திர்மிதீ-1004
குடும்பத்தினர் அழும் காரணத்தினால் அந்தப் பிரேதம் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறது.
(முஸ்லிம்-1687) என்ற நபிமொழிக்கு
இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகின்ற விளக்கமாவது: அரபு மக்களின் வழக்கப்படி இறப்பதற்கு
முன்பே ஒருவர் தாம் இறந்த பின் தமக்காக ஒப்பாரி வைத்து அழவேண்டும் என்று சொல்லிவிட்டு
இறந்து போக அதன்படி அவரது உறவினர்கள் ஒப்பாரி வைத்து அழுதால் வேதனை செய்யப்படுவார்.
இந்த ஒப்பாரிக்கு அவரது தூண்டுதலே காரணமாக இருக்கிறது என்பதே இதற்கு காரணம். அல்லது
இறந்தவருக்காக நீங்கள் அழ வேண்டாம். நீங்கள் அழுகின்ற குரல் கேட்டு இறந்தவர் துக்கப்படுவார்.
இவ்வாறு துக்கப்படுவதின் மூலம் இறந்தவர் வேதனை அடைகிறார். நூல்:- அல்மின்ஹாஜ்
ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் மரணமடைந்த செய்தி அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு
எட்டியது. அப்போது நபியவர்கள், ( اصْنَعُوا لآلِ جَعْفَرٍ طَعَامًا فَإِنَّهُ
قَدْ أَتَاهُمْ أَمْرٌ شَغَلَهُمْ ) "ஜஅஃபரின் குடும்பத்தாருக்காக நீங்கள் உணவு தயாரிங்கள். ஏனெனில், அவர்களை (வேலை செய்ய விடாமல்) தடுக்கும் நிலை அவர்களுக்கு
ஏற்பட்டுள்ளது" என்று (ஜஅஃபர் பின் அபீதாலிப் - ரலி அவர்கள் மூத்தா போரில்
கொல்லப்பட்டபோது) கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-2725, திர்மிதீ-919
இறந்தவரின் வீட்டினர் சோகத்தில் ஆழ்ந்திருப்பதால் உறவினரோ, அண்டை வீட்டினரோ உணவு சமைத்துக் கொண்டு வந்து கொடுத்து
அவ்வீட்டினருக்கு ஆறுதல் கூறி அவர்களை உண்ணச் செய்ய வேண்டும். மாறாக, துக்கம் விசாரிக்க வந்தவர்கள் இறந்தவரின் வீட்டில்
உணவு உண்டுவிட்டு செல்வது உகந்த செயல் அல்ல.
துக்கம் அனுஷ்டிப்பது
ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது. அபீசுஃப்யான் (ரலி) அவர்களுடைய
மரணச் செய்தி சிரியாவிலிருந்து வந்த மூன்றாம் நாள் (அவரது மகளார்) அன்னை உம்மு ஹபீபா
(ரலி) அவர்கள் மஞ்சள் நிற வாசனை திரவியத்தை வரவழைத்து தமது கன்னங்களிலும் முழங்கைகளிலும்
தடவிக் கொண்டார்கள்.
பிறகு அன்னையவர்கள், ( لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ
الآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ، إِلاَّ عَلَى زَوْجٍ،
فَإِنَّهَا تُحِدُّ عَلَيْهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ) "இறைநம்பிக்கை கொண்டுள்ள ஒரு பெண் தனது கணவன் இறந்தாலே
தவிர, வேறு எவர் இறந்தாலும் மூன்று
நாள்களுக்கு மேல் துக்கம் கடைபிடிக்கக் கூடாது. கணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதம்
பத்து நாள்கள் துக்கம் கடைபிடிக்க வேண்டும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறியதை நான் கேள்விப்பட்டிராவிட்டால் இந்த வாசனை திரவியமானது எனக்கு தேவையற்றது தான்
என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-1280
துக்கம் அனுஷ்டிப்பது என்பது மகிழ்ச்சி தரும் முறையில் தன்னை அலங்கரித்துக் கொள்வதை
தவிர்ப்பது தானே தவிர, உண்ணுவது,
பருகுவது போன்ற சுய தேவைகளை செய்து கொள்வது கூடாது
என்று அர்த்தமல்ல. கணவன் அல்லாத பிற உறவினரில் எவர் இருந்தாலும் அதற்காக மூன்று நாள்களுக்கு
மேல் துக்கம் அனுஷ்டிப்பது மார்க்கத்திற்கு முரணானதாகும்.
ஆனால், கணவனை இழந்த பெண்
மட்டும் நான்கு மாதம் பத்து நாள்களில் இத்தா எனும் பெயரில் துக்கம் கடைபிடிக்க வேண்டும்.
இத்தா நாள்களில் வாசனை திரவியங்கள் பூசிக்கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்ளக்கூடாது.
அதற்காக இத்தா நாள்கள் முழுவதும் தலைமுடிக்கு எண்ணெய்கூட தேய்க்காமல் அருவருப்பான கோலத்தில்
இருப்பதும், வெண்ணிற ஆடைகள் மட்டும்தான்
அணிய வேண்டும் என்று எண்ணுவதும், எவரிடமும் பேசாமல்
வீட்டில் இருட்டான ஒரு மூளையில் தான் அடைந்து கிடக்க வேண்டும் என்று எண்ணுவதும்,
இறந்தவரின் வீட்டினர் ஒரு வருடத்திற்கு எந்த பெருநாள்களையும்
மற்ற விசேஷங்களையும் கொண்டாடக்கூடாது என்று எண்ணுவதும் தவறாகும்.
நல்லதையே சொல்லுவோம்
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا حَضَرْتُمُ الْمَرِيضَ أَوِ الْمَيِّتَ
فَقُولُوا خَيْرًا فَإِنَّ الْمَلاَئِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ ) நீங்கள் நோயாளியையோ,
இறந்தவரையோ சந்திக்கச் சென்றால் நல்லதையே சொல்லுங்கள்.
ஏனெனில், நீங்கள் கூறும் வார்த்தைக்கு
வானவர்கள் ஆமீன் (அப்படியே ஆகட்டும்!) கூறுகிறார்கள். அறிவிப்பாளர்:- உம்மு ஸலமா (ரலி)
அவர்கள் நூல்:- முஸ்லிம்-1677
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (கண்மணி பெருமானார் - ஸல் அவர்களை கடந்து) பிரேதம்
ஒன்று கொண்டு செல்லப்பட்டது. அது குறித்து நல்லவிதமாக (புகழ்ந்து) பேசப்பட்டது. அதை
செவியேற்ற அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( وَجَبَتْ ) "உறுதியாகிவிட்டது" என்று மூன்று முறை கூறினார்கள். பின்னர்
மற்றொரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அது குறித்து இகழ்வாக பேசப்பட்டது அப்போது நபியவர்கள்,
"உறுதியாகிவிட்டது" என்று
மூன்று முறை கூறினார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், "நாயகமே! உறுதியாகிவிட்டது என்று கூறியதின் பொருள் என்ன?" என்று வினவினார்கள். நபியவர்கள், ( مَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا وَجَبَتْ
لَهُ الْجَنَّةُ وَمَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا وَجَبَتْ لَهُ النَّارُ
أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الأَرْضِ ) "நீங்கள் யாரைப் பற்றி நல்லவிதமாக பேசினீர்களோ அவருக்கு சொர்க்கம்
உறுதியாகிவிட்டது. நீங்கள் யாரைப் பற்றி இகழ்வாக பேசினார்களோ அவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது.
நீங்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சியாளர்களாக ஆவீர்கள்" என்று மூன்று முறை கூறினார்கள்.
கூறினார்கள். நூல் புகாரீ-2642, முஸ்லிம்-1731
நாம் யாரைப் பற்றி பேசினாலும் தவறாக பேசக்கூடாது. குறிப்பாக, இறந்தவர் வீட்டுக்குச் சென்றாலும் அல்லது பிரேதத்தை
நல்லடக்கம் செய்யும்போதும் இறந்தவரின் நற்குணம் மற்றும் நற்செயலை பற்றி மட்டுமே பேச
வேண்டும். அவர் தீயவராக இருந்தாலும் சரியே! நாம் பேசும் வார்த்தைக்கு வானவர்கள்
"ஆமீன்" கூறுகிறார்கள். அதனால் அவர் பாதிக்கப்படலாம். நம் எல்லோரிடமும் ஏதேனும்
சில கெட்ட குணம் மற்றும் கெட்ட செயல் இருக்கலாம். இறந்தவரைப் பற்றி நாம் விமர்சனம்
செய்தால் நாம் இறந்த பின்னர் பிறர் நம்மைப் பற்றி விமர்சனம் செய்யும் நிலை ஏற்படலாம்.
நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்ளக் கூடாது தானே! சிந்திப்போமா?
விரைவுப்படுத்துவது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَسْرِعُوا بِالْجَنَازَةِ فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُونَهَا عَلَيْهِ وَإِنْ تَكُنْ غَيْرَ ذَلِكَ فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ ) பிரேதத்தை துரிதமாகக் கொண்டு செல்லுங்கள். ஏனெனில், அந்த பிரேதம் நற்செயல்கள் புரிந்ததாயிருந்தால் (அதற்காக) நன்மையின் பக்கம் அதை விரைவுப்படுத்துகிறீர்கள். வேறு விதமாக இருந்தால் ஒரு தீங்கை உங்கள் தோள்களிலிருந்து (விரைவாக) இறக்கி வைக்கிறீர்கள். நூல்:- புகாரீ-1315, முஸ்லிம்-1721
ஒருவர் இறந்தவுடன் அவரை நல்லடக்கம் செய்வதற்கு விரைவுபடுத்த வேண்டும். குடும்பத்தினர் மற்றும் உறவினர் இறந்தவரை "தீதார்" பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருநாள் அல்லது இரு நாள்கள் வரையிலும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொண்டு நல்லடக்கம் செய்வதற்கு தாமதப்படுத்துவது தவறாகும். இறந்தவரை பிறர் பார்ப்பதின் மூலம் இறந்தவருக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை.
உடல்கூறு நிபுணர்கள் கூறுகிறார்கள். உடலிலிருந்து உயிர் பிரிந்த 36 மணி நேரத்திற்கு பின்பு அந்த உடலில் ஈக்கள் முட்டையிட ஆரம்பிக்கின்றது.
உடலிலிருந்து உயிர் பிரிந்த அனுமதி 60 மணி நேரத்திற்கு பின்பு அவ்வுடலிலிருந்து துர்நாற்றம் தோன்ற ஆரம்பிக்கிறது.
உடலிலிருந்து உயிர் பிரிந்த மூன்று நாள்களுக்குப் பின்பு அவ்வுடலிலிருந்து நகங்கள் கழன்று விழுகின்றது.
உடலிலிருந்து உயிர் பிரிந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு தலையில் இருக்கின்ற மூளை உருக ஆரம்பிக்கின்றது.
உடலிலிருந்து உயிர் பிரிந்த ஆறு நாள்களுக்குப் பிறகு அவ்வுடலில் இருக்கின்ற வாயுக்களால் வயிறு வெடிக்க ஆரம்பிக்கிறது.
உடலிலிருந்து உயிர் பிரிந்த இரண்டு மாதங்களில் அழுகிய பழங்கள் உருகுவதைப் போல் அவ்வுடல் உருக ஆரம்பிக்கிறது.
இப்படியாக தொடர்புடைய பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு மக்கி போய் அழிந்து மண்ணோடு மண்ணாகி விடுகிறது. உண்டு கழித்தது, உடுத்திக் கிழித்தது, அனுபவித்து முடித்தது அனைத்தும் இந்த மண்ணிலிருந்து வந்தவைத தான். இம்மண்ணிலிருந்து வந்த எல்லாவற்றையும் தின்று வளர்ந்த மனிதனின் உடலை இறுதியாக மண் தின்று விடுகிறது.
பிரேதத்தை தோளில் சுமந்த பின் மிக வேகமாக ஓடாமலும்,
மிக மெதுவாக செல்லாமலும் நடுநிலையை கடைபிடித்து,
பிரேதம் ஆடாமல் அசையாமல் கொண்டு செல்ல வேண்டும்.
பிரேதத்தை தூக்கிக் கொண்டு ஓட்டமாக ஓடினால் பிறர் பார்வைக்கு கேலிக்கூத்தாகிவிடும்.
அதிக நன்மை
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள், ( مَنْ شَهِدَ الْجَنَازَةَ حَتَّى يُصَلَّى
عَلَيْهَا فَلَهُ قِيرَاطٌ وَمَنْ شَهِدَهَا حَتَّى تُدْفَنَ فَلَهُ قِيرَاطَانِ ) "எவர் (ஜனாஸா) பிரேதத் தொழுகையில் பங்கேற்கின்றாரோ
அவருக்கு ஒரு 'கீராத்' நன்மையுண்டு. நல்லடக்கம் செய்யப்படும் வரை எவர்
கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு கீராத் நன்மையுண்டு" என்று கூறினார்கள். அப்போது
"கீராத் என்றால் என்ன?" என்று வினவப்பட்டது.
அதற்கு நபியவர்கள், ( مِثْلُ الْجَبَلَيْنِ الْعَظِيمَيْنِ ) "இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)" என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1325, முஸ்லிம்-1723
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ فَيَقُومُ
عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلاً لاَ يُشْرِكُونَ بِاللَّهِ شَيْئًا إِلاَّ
شَفَّعَهُمُ اللَّهُ فِيهِ ) ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்வுக்கு எதையும்
இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (பிரேதத்
தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை. அறிவிப்பாளர்:-
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1730
அறிஞர் அபூ உபைத் பின் ஹர்பவைஹி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். எங்களது ஆசிரியர் சரிய்யிஸ் ஸகதீ (ரஹ்) அவர்கள் மரணமடைந்த பிறகு ஒருநாள் அன்னாரை கனவில் கண்டேன். கனவில் நான் அன்னாரிடம், "அல்லாஹ் உங்களுடன் எவ்வாறு நடந்து கொண்டான்? உங்களின் நிலை இப்போது எவ்வாறு உள்ளது?" என்று வினவினேன். அதற்கு அன்னார், "அல்லாஹ் என்னையும் மன்னித்து விட்டான். எனது பிரேதத் தொழுகையில் கலந்து கொண்ட அனைவரையும் மன்னித்துவிட்டான்" என்று பதிலளித்தார்கள். உடனே நான், "ஆசிரியர் அவர்களே! தங்களது பிரேதத் தொழுகையில் நானும் கலந்து கொண்டேன். எனவே, என்னையும் அல்லாஹ் மன்னித்துவிட்டானா?" என்று கேட்டேன். அன்னார், "ஆம்" என்று கூறினார்கள்.
நல்லோர்களின் பிரேதத் தொழுகைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைத்தால் அதை நாம் தவறவிடக்கூடாது. அங்கு அல்லாஹ்வுடைய அருளும் மற்றும் வானவர்களும் இறங்குகிறார்கள். அந்த நல்லடியார்களின் பொருட்டால் அவர்களின் பிரேதத் தொழுகையில் கலந்து கொண்டவரின் பாவங்களையும் அல்லாஹுத்தஆலா மன்னிக்கக்கூடும்.
ஒரு முஸ்லிம் இறந்து விடும்போது, அவருக்காக பிரேதத் தொழுகை நடத்தப்பட வேண்டியது (ஃபர்ளு கிஃபாயா எனும்) கட்டாயக்
கடமையாகும். இக்கடமையை சமுதாயத்தில் ஒருவர் செய்து முடித்தாலும் சமுதாயத்தின் மீதுள்ள
கடமை நீங்கிவிடும். இந்த கடமையை எவரும் செய்யவில்லையெனில் அதன் பாவம் சமுதாயம் முழுமைக்கும்
சாரும்.
(ஜனாஸா தொழுகை எனும்) பிரேதத் தொழுகையின் நோக்கம் என்னவெனில் இறந்தவரின் நல்வாழ்வுக்காக
இறைவனிடம் பிரார்த்திப்பதாகும். ஒருவரது பிரேதத் தொழுகையில் பலர் கலந்து கொள்வது அவர்
ஒரு இறைநம்பிக்கையாளர் என்பதற்கு அவர்கள் சாட்சியம் அளிப்பதை போன்று உள்ளது. அத்துடன்
அவர்களெல்லாம் அவருக்காக இறைவனிடம் பரிந்துரை செய்கின்றனர். ஆகவே, அவர்களின் பரிந்துரையை இறைவன் ஏற்றுக் கொள்வான்.
நாம் நினைத்த நேரத்தில் எல்லாம் தொழ முடியாத தொழுகைகளில் ஒன்று தான் (ஜனாஸா தொழுகை)
பிரேதத் தொழுகை. பிற உபரியான (நஃபில்) தொழுகைகளைவிட பிரேதத் தொழுகைக்கு அதிக நன்மைகள்
உண்டு. ஏனெனில், நஃபில் தொழுகைகள்
தொழுவதின் மூலம் நமக்கு மட்டும்தான் நன்மைகள் கிடைக்கும். ஆனால், ஒருவரது பிரேதத் தொழுகையில் கலந்து கொள்வதின் மூலம்
நமக்கும் மலையளவு நன்மைகள் கிடைக்கும். இறந்தவருக்கும் நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு
இருக்கிறது. எனவே, அத்தொழுகையில் கலந்து
கொள்வதில் சோம்பல் இருக்கக் கூடாது.
எனவே, நாம் இறந்தவருக்கு
அனைத்தும் மரியாதையும் செய்து கண்ணியமாக அவரை வழியனுப்பி, அதன் மூலம் நாம் இறையருளை பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி
மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951