மனதோடு போராடுவோம்!
وَلَا تَتَّبِعِ الْهَوَى فَيُضِلَّكَ عَنْ سَبِيلِ اللَّهِ
(இறைத்தூதர் தாவூதே!)
மனஇச்சையைப் பின்பற்றாதீர்கள். பின்பற்றினால், அது உங்களை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்தும் தவறிவிடும்படி
செய்யும். திருக்குர்ஆன்:- 38:26
மனிதன் நேர்வழியின்
பக்கம் சென்று வெற்றிபெற வேண்டுமென்றால் (நஃப்ஸ் எனும்) மனஇச்சையை எதிர்க்க வேண்டியது
அவசியமாகும். அவ்வாறில்லையென்றால் இம்மனிதன் அதன் வலையில் சிக்குண்டு வழிகேட்டில் சென்றடைந்து
விடுவான். இறுதியில் ஈடுகட்ட முடியாத கடும் வீழ்ச்சியைச் சந்திப்பான். ஆகவே, இவ்வலையில் சிக்கிக்கொள்ளாமல் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மனிதன் தனது வாழ்நாள்
முழுவதும் தனது மனஇச்சையுடன் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. இப்போராட்டத்தில்
வெற்றி கண்டுவிட்டால் அம்மனது மனிதனுக்கு அடிபணிவதுடன் அதற்கு கீழ்படிந்துள்ள அனைத்து
அங்க அவயங்களும் அதற்கு தகுந்தவாறு செயல்பட ஆரம்பித்துவிடும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு
அவர்கள் கூறினார்கள் ( أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ
مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ
كُلُّهُ، أَلَا وَهِيَ الْقَلْبُ ) அறிக! உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீரடைந்துவிட்டால், உடல் முழுவதும் சீரடைந்துவிடும். அது சீரழிந்துவிட்டால், முழு உடலும் சீரழிந்துவிடும். அறிக! அதுவே இதயம். அறிவிப்பாளர்:- நுஅமான் பின்
பஷீர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-52, முஸ்லிம்-3259
இறைவழியில்
எவர்கள் நம்முடைய
வழியில் (செல்ல) முயற்சிக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம்முடைய (நல்) வழிகளில்
செலுத்துகின்றோம். திருக்குர்ஆன்:- 29:69
மேற்காணும் வசனத்திற்கு
பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 1) யார் தம் மனஇச்சையோடும் ஷைத்தானோடும் மார்க்கத்தின்
விரோதிகளோடும் கடுமையாக போராடுவாரோ அவருக்கு நாம் நம் வழிகளைத் திறந்து விடுவோம்.
2) அல்லாஹ்வுக்குக்
கீழ்ப்படிந்து நடப்பதிலும், அவன் கொடைகளுக்கு
நன்றி பாராட்டுவதிலும், சோதனைகளைச் சகித்துக்கொள்வதிலும்
யார் தனது மன இச்சையோடு கடுமையாகப் போராடுவாரோ அவர் நல்வழி அடைய மென்மேலும் வழிகாட்டுவோம்.
3) யார் இறைநம்பிக்கையில்
நிலைத்திருக்கக் கடுமையாகப் போராடுவாரோ அவருக்குச் சொர்க்கத்தின் வழியை நாம் காட்டுவோம்.
4) யார் தமக்கு தெரிந்ததை
கொண்டு செயல்படுகிறாரோ அவர் அறியாததை அறிந்துகொள்ள அல்லாஹ் வழி காட்டுவான். நூல்:-
தஃப்சீர் இப்னு கஸீர், தஃப்சீர் அல்பஹ்ருல் முஹீத்
அருமை நாயகம் ஸல்லல்லாஹு
அவர்கள் கூறினார்கள். ( اَلْمُجَاهِدُ مَنْ
جَاهَدَ نَفْسَهُ ) தன் மனஇச்சையுடன் போராடுகின்றவரே (உண்மையான) அறப்போராளி
ஆவார். அறிவிப்பாளர்:- ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1546, முஸ்னது அஹ்மத், தாரிமீ, தப்ரானீ
போர்க்களத்தில் விரோதிகளுடன்
அறப்போர் புரிவது ஜிஹாத் ஆகும். ஆனால், ஒவ்வொரு மனிதனும்
தனது மனதில் எழும் ஆசைகள் அபிலாசைகளை கட்டுப்படுத்தி, மனதை சீர்படுத்தி இறைவனின் வழியில் அழைத்துச் செல்வது
மிகக் கடுமையான போராட்டம் தான். எனவேதான், மனதோடு போராடி அதை
வெல்வதையே உண்மையான அறப்போர் என்கிறது இந்த நபிமொழி.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ الْمَوْتِ وَالْعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّى عَلَى اللَّهِ ) யார் தமது மனத்தைத் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்து, இறப்புக்குப் பின்னுள்ள வாழ்க்கைக்காகச் செயல்படுகிறாரோ அவரே புத்திசாலி ஆவார். (இதற்கு மாறாக) தம் விருப்பத்திற்குக் கட்டுப்பட்டு நடந்துவிட்டு, அல்லாஹ்விடம் (மன்னிப்பை) எதிர்பார்த்து காத்திருக்கிறாரோ அவர்தான் முடங்கியவர் ஆவார். அறிவிப்பாளர்:- சத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2383
அழகு அழைக்கிறது
ஆணழகராகத் திகழ்ந்த
இறைத்தூதர் யூசுஃப் (அலை) அவர்களை மிஸ்ர் நாட்டின் அரசி விபச்சாரத்திற்கு அழைத்தபோது, அவர் அல்லாஹ்வை அஞ்சி தவிர்த்துக்கொண்டார் என்பதாக
திருக்குர்ஆனின் யூசுஃப் அத்தியாயம் விவரிக்கிறது.
முஹம்மது பின் சீரின் (ரஹ்) அவர்கள் தமது இளமையில் மிக்க அழகிய தோற்றத்துடன் இருப்பார்கள். அவர்களின் தொழில் துணி வியாபாரம் ஆகும். பல வகையான வண்ண வண்ண துணிகளை எடுத்துச்சென்று ஊர் ஊராக விற்று வருவார்கள். ஒருநாள் அவ்வாறு அவர்கள் துணி வியாபாரத்திற்கு சென்றபோது அவர்களை பெரும் சோதனை ஒன்று எதிர்கொண்டது.
பணக்கார விதவை பெண்ணொருத்தி அன்னாரின் மீது மையல் கொண்டாள். அவள் வயதான தமது பணிப்பெண்ணை அவர்களிடம் அனுப்பி, ஏராளமான துணிகள் வாங்க விரும்புவதாகவும் அவற்றை எடுத்துக்கொண்டு தன்னுடைய மாளிகைக்கு வருமாறும் சொல்லச் சொன்னாள்.
கிழவி அவ்வாறே அன்னாரிடம் செய்தியை எடுத்துரைக்க, அன்னாரும் துணி மூட்டையை எடுத்துக்கொண்டு அவளுடன் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்கள். அன்னார் விதவையின் மாளிகைக்குள் நுழைந்தவுடன் அப்பெண் கதவைத் தாளிட்டுக்கொண்டு அவர்களுடன் சரசமாட முனைந்தாள். தன்னுடைய உடல் இச்சைக்கு இணங்குமாறு அன்னாரை வற்புறுத்தினாள்.
எனினும் அன்னார் அவளின் தவறான எண்ணங்களுக்கு அணுவளவும் இடம் கொடுக்காதவாறு தம்முடைய மனஇச்சையை பேணிப் பாதுகாத்துக் கொண்டார்கள். அவளோ விடுவதாக இல்லை. எவ்வாறாயினும் அன்னாருடன் கூடி இன்பம் பெற்றுவிட வேண்டும் என்பதில் துடியாய் துடித்தாள்.
நிலைமையை புரிந்துகொண்ட அன்னார், இந்த இக்கட்டான நிலையில் இருந்து தப்புவதற்கு என்ன வழி என்று சிந்தித்து ஓர் யுக்தியை கையாண்டார்கள்.
அன்னார் அவளை நோக்கி, "நான் மலம் கழிக்கவேண்டும். அதற்குரிய இடம் எங்கு உள்ளது. அதன் பின்னர் வந்து உன்னுடைய இச்சையைத் தீர்த்து வைக்கிறேன்" என்று கூறினார்கள். அவள் அதற்கு சம்மதித்தாள் உடனே அன்னார் கழிப்பறைக்கு சென்று, அங்கிருந்த மலத்தையெல்லாம் வாரித் தம்மீது பூசிக்கொண்டு அவள் முன் வந்து நின்றார்கள்.
அது கண்டு அவள் அன்னார் மீது வெகுண்டெழுந்தாள். மலத்தின் துர்நாற்றத்தை அவளால் பொறுக்க இயலவில்லை. அவளுக்கு அன்னார் மீது இப்போது சொல்லொணா வெறுப்பு ஏற்பட்டது. அன்னார் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்து உடனே வெளியேறி, ஒரு கிணற்றில் குளித்து தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு பள்ளிவாசலுக்கு சென்றார்கள். அங்குள்ளோர் இவர்களை நோக்கி, "என்ன ஒரே மணமாக உள்ளது? என்று வினவ, அப்போது அன்னார் நடந்த உண்மையை எடுத்துரைத்தார்கள். மக்கள் அவர்களின் ஆடையை முகர்ந்து பார்க்க அதிலிருந்து கஸ்தூரி வாடை கமகமத்தது. உடனே அவர்கள், "இந்த வாசனை தான் எங்களின் மூக்கைத் துளைக்கிறது" என்று கூறி பெருவியப்புற்றனர். முஹம்மது பின் சீரின் (ரஹ்) அவர்கள் இவ்வாறு தங்கள் மன இச்சையின் சதியில் இருந்து சிக்கிக்கொள்ளாமல் தப்பித்தார்கள். அன்னார் அன்றிரவு படுத்துறங்கியபோது இறைத்தூதர் யூசுஃப் (அலை) அவர்கள் அன்னாரின் கனவில் தோன்றி, அன்னாரைப் பாராட்டி தங்களின் மேலங்கியை அன்னாருக்கு அணிவித்துவிட்டு மறைந்தார்கள்.
அன்றைய நாளில் இருந்து தான் முஹம்மது பின் சீரின் (ரஹ்) அவர்கள் கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் ஆற்றல் பெற்றார்கள் என்கிறது வரலாறு.
இன்றும் நம்மவருள் எத்தனையோ பேர்களுக்கு இத்தகைய வாய்ப்புகளும், சூழ்நிலைகளும் ஏற்படத்தான் செய்கின்றன. நம்மில் மனஇச்சைக்கு மாறு செய்பவர் எத்தனை பேர்? அல்லாஹ்வே அறிவான்.
நாம் பாவங்களை விட்டு
விலகும்போது ஆரம்பத்தில் சிரமமாக தோன்றும். ஆனால், ஒருமுறை உறுதிசெய்து
நெஞ்சை உயர்த்திக்கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் செயல்பட துவங்கிவிட்டால், அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவிகள் வர ஆரம்பித்துவிடும்.
பின்னர் இச்சிரமத்திலும் அல்லாஹ்வுக்கு வழிபட்டு நடப்பதில் இன்பமும் தனி சுவையும் ஏற்படத்
தொடங்கிவிடும்.
மனிதர்கள் இறைகட்டளைகளுக்கு மாறுசெய்வதற்கு மனஇச்சையே காரணமாக இருக்கிறது. அதிகாலையில் தொழுகைக்காக எழ முயற்சி செய்யும்போது மனஇச்சையுடன் போராட வேண்டியுள்ளது. வைகறையின் இதமான காற்றும், குளுமையான சூழலும், இடையூறற்ற நிலையில் மனிதனுக்கு இன்பம் வழங்குகின்றன. அப்போது அவனின் மனஇச்சை அவனை இன்னும் சற்று நேரம் உறங்குமாறு தூண்டுகிறது. அந்நிலையில் அவன் மனஇச்சைக்கு வழிப்படுவானாயின், இறைக்கட்டளையாம் வைகறை (சுப்ஹ்) தொழுகையை அவன் விட்டுவிட நேரிடுகிறது.
வீதியில் செல்லும்
அந்நியப் பெண்களின் அழகை மனஇச்சை பெரிதாக வர்ணித்து அவர்களை அணுவணுவாக இரசிக்குமாறு
செய்கிறது. இதுவும் இறைகட்டளைக்கு மாறு செய்வதாகும். இவ்வாறு ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டே
போகலாம். மொத்தத்தில் மனஇச்சை மனிதனின் இம்மை வாழ்வையும், மறுமை வாழ்வையும் கெடுத்துவிடும்.
கடிவாளமிட
வேண்டும்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اَللَّهُمَّ أَعُوذُ بكَ منْ شَرِّ نَفسي وشَرِّ الشَّيْطَانِ وَشِرْكهِ ) இறைவா! என்னுடைய மனதின் தீமையிலிருந்தும், ஷைத்தானின் தீமையிலிருந்தும் இறைவனுக்கு இணைவைக்க தூண்டும் அவனது சதிவலைகளிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். நூல்:- அபூதாவூத்-4405 திர்மிதீ-3342, முஸ்னது அஹ்மத்-7620, தாரிமீ-2573
இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான் சொர்க்கத்தில் இருப்பதை போன்று கற்பனை செய்தவாறே என் மனத்திடம் பேசுவது வழக்கம். சொர்க்கத்தின் கனிகளை உண்பது, அங்குள்ள சுவைமிகு ஓடைகளில் அருந்துவது, அங்குள்ள கன்னியர்களை கட்டித்தழுவுவது என்றெல்லாம் கற்பனை செய்வேன். அதேபோல், நரகத்தில் இருப்பதைப் போன்றும் கற்பனை செய்வேன். ஸக்கூம் எனும் நரக உணவை உண்பது, சீழையும் குருதியையும் உட்கொள்வது, நரகத்தின் விலங்குகளில் மாட்டித் தவிப்பது என்றெல்லாம் கற்பனை செய்துகொள்வேன். பிறகு மனத்திடம், "நீ எங்கிருக்க ஆசைப்படுகிறாய்?" என்று வினவினேன். யதார்த்த உலகிற்கு திரும்பிச் செல்வோம். நான் நற்செயல்களில் ஈடுபடுகிறேன்" என்று அது பதிலளிக்கும். நூல்:- முஹாஸபத்துந் நஃப்ஸ், இப்னு அபீத்துன்யா
உதவுவதில்
தீவிரம்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( فَأَعْطِ الْفَضْلَ
وَلاَ تَعْجِزْ عَنْ نَفْسِكَ ) உன் தேவைக்குப் போக எஞ்சியதை
தர்மம் செய். தர்மம் செய்யாதே என்று உன் மனம் சொன்னால் அதற்கு மாற்றம் செய். அறிவிப்பாளர்:-
மாலிக் பிக் நக்ழா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்1406, இப்னு குஸைமா-2440, இப்னு ஹிப்பான்-829, முஸ்னது அஹ்மத், ஹாக்கிம், பைஹகீ
பேரறிஞர் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து உதவி கோரினார். உடனே அன்னார் பத்தாயிரம் தீனார் தமது இடக்கையால் அவருக்கு கொடுத்தார்கள். வந்தவர், "இவரை மாமேதை என்று நினைத்தோமே, இவரோ கொடுக்கும் உதவியை நபிவழிக்கு மாற்றமாக இடக்கையால் கொடுக்கிறாரே" என்று வருத்தத்தோடு எண்ணினார். இவர் முகம் பார்த்து இவரது மன ஓட்டத்தை புரிந்துகொண்ட இமாமவர்கள், "சகோதரரே! நீங்கள் வந்து உதவி கோரியபோது எமது பணப்பை எமது இடப்புறம் இருந்தது. நான் திரும்பி அந்தப் பணப்பையை எடுத்து வலது கையால் கொடுக்க முயற்சிப்பதற்கு எனது மனம் மாறிவிடுமோ என்ற அச்சம் தான் நான் இடக்கையால் கொடுத்ததற்கு காரணம்" என்றார்கள்.
ஒரு மனிதன் நீரில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு மீனவன் அங்கு வந்து உதவினான். உதவிப்பெற்ற அந்த மனிதன் மீனவனை நோக்கி, "தம்பி! நாளைக்கு என் வீட்டுக்கு வா! உனக்கு தேவையான வசதிகள் செய்து தருகிறேன்" என்று கூறினான். நமது சொத்திலிருந்து ஒரு பெரும் பகுதியை நாளைக்கு அவனுக்கு அன்பளிப்பு செய்யவேண்டும் என்று தமக்குள் சொல்லிக்கொண்டு வீட்டுக்குச் சென்றான். மறுநாள் அந்த மீனவன் அவனின் வீட்டுக்கு வந்தான். உதவிப்பெற்ற மனிதன், "இவனுக்கு பத்தாயிரம் கொடுக்கலாம் என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறான். உடனே அவனின் உள்மனம் "இவன் சுமார் ஐந்து நிமிடம் வேலை பார்த்திருப்பான் அதற்காக இவ்வளவா கொடுப்பது வேண்டாம்" என்று சொல்லி கொண்டே 5000 கொடுப்போமா? அல்லது 1000 அல்லது 500 அல்லது 100 அல்லது 50 என்று யோசித்து யோசித்து இறுதியாக 10 என முடிவெடுத்து அதையே கொடுத்தான். இதுதான் மனப் போராட்டம்.
உணவில் கவனம்
அண்ணல் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் தபூக் போரை முடித்துவிட்டு வந்துகொண்டிருந்தபோது, நபியவர்கள், ( رجعْنا مِنَ الجهادِ الأصغرِ إلى الجهادِ الأكبرِ ) "நாம் சிறிய போரிலிருந்து பெரியப் போரின் பக்கம் திரும்புகிறோம்" என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ( وما الجهادُ الأكبرُ؟ ) "(நாயகமே!) பெரியப் போர் என்றால் என்ன?" என்று வினவினர். அதற்கு நபியவர்கள், ( جهادُ القلبِ ) "(பெரிய போர் என்றால் தமது வாழ்நாளில்) மனதோடு போராடுவது ஆகும்" என்று கூறினார்கள். நூல்:- பைஹகீ
ஒருமுறை கலீல் அஹ்மது கீரனூரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் தப்லீக் ஜமாத் நாற்பது நாள் போய்விட்டு வந்து தம் மனைவியிடம் இனிமேல் என் வாழ்க்கையில் ஹலால் ஹராம் சரியாக பேணப்போகிறேன் என்று கூறிவிட்டு, அன்றைய மதிய உணவுக்கு பருப்பு ஆணம் சமைக்க அதற்குரிய சாமான்களை வாங்கிக்கொண்டு வந்து மனைவியிடம் கொடுத்துவிட்டு, வெளியே சென்றுவிட்டார். பிறகு மதிய சாப்பாட்டுக்கு வந்து அமர்ந்துகொண்டு மனைவி நோக்கி, "சாப்பாட்டை எடுத்து வா!" என்று கூறினார். அப்போது மனைவி சுவையான கோழி ஆணம் கொண்டு வந்து வைத்தாள். அவர், “நான் கோழி வாங்கித் தரவில்லையே, எப்படி கோழி ஆணம் வந்தது? என்று கேட்டார்.
மனைவி ஏதோ ஒரு கோழி
நமது வீட்டுக்குள் தானாக வந்தது. வந்ததை பிடித்து அறுத்து ஆணம் வைத்துவிட்டேன் என்றாள்.
அவர், “இது ஹராம் வேண்டாம் இதை எடுத்து போ!” என்று கோபமாகக் கூறினார். மனைவி வந்து
மணமிக்க அந்த ஆணத்தை எடுக்க வந்தபோது அவர், “சரி நில்! நில்! கோழி மட்டும் தானே மற்றவர்
உடையது. இதில் போடப்பட்டுள்ள மசாலா நம்முடையது தானே!” என்று கேட்டுவிட்டு, “சரி போகட்டும்!
ஆணம் மட்டும் ஊன்று!” என்றார் மனைவி ஆணத்தை மட்டும் ஊற்றும்போது தவறி கோழி இறைச்சி
ஒரு துண்டு உணவுத் தட்டில் விழுந்துவிட்டது. உடனே அவள் பதறியவாறு அதை எடுக்க எண்ணியபோது,
கணவர், "அதை ஏன் எடுக்கிறாய் விடு! நீயாக வேண்டுமென்று உணவுத்
தட்டில் இந்த இறைச்சித்துண்டை போடவில்லையே, அதுவாக தானே விழுந்தது பரவாயில்லை. அந்த இறைச்சித்துண்டை
எடுக்க வேண்டாம்" என்றார். அப்போது மனைவி, "சண்டாளனே கோழியும் அதுவாகத்தான் வீட்டுக்கு வந்தது"
என்று கோபத்தோடு கூறினாள்.
உலகத்தில் உண்ணக் கிடைக்காமல் இறந்தவர்களைவிட, மனஇச்சையை கட்டுப்படுத்தமுடியாமல் கண்டதையும் உண்டதால் இறந்தவர்கள் அதிகம்.
நம்முடைய மனஇச்சை
உணவு விஷயத்தில் அவ்வளவு இலகுவாகக் கட்டுப்பாடாது. நம்மில் பலருக்கும் உணவுக்கட்டுப்பாடு
இல்லாததால் தான் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதை சாப்பிட்டுவிட்டு
ஒரு மாத்திரையை கூடுதலாக போட்டுக்கொள்வோம்
என்று பலரும் எண்ணுகிறார்கள். அல்லது இந்த ஒருமுறை மட்டும் சாப்பிட்டுக் கொள்வோம்.
அடுத்தமுறை சாப்பிடாமல் தவிர்த்துக் கொள்வோம் என்றும் எண்ணுகிறார்கள். இந்த நிலைப்பாட்டில்
தான் மனிதன் ஹராமான உணவையும்கூட உண்டுவிடுகிறான்.
இரவு வணக்கம்
அவர்கள் இரவில் வெகு
சொற்ப (நேர)மே உறங்குவார்கள். அவர்கள் அதிகாலை நேரத்தில் (எழுந்து இறைவனை வணங்கி, தங்கள் இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். திருக்குர்ஆன்:-
51:17,18
மாமேதை சுஃப்யான்
அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் என்றேனும் சற்று அதிகமாக சாப்பிட்டுவிட்டார்களானால் அன்றைய
இரவு முழுவதையும் இறை வணக்கத்திலேயே கழித்துவிடுவார்கள். அவர்களிடம் இதுபற்றி வினவப்பட்டது.
அன்னார், "கழுதைக்கு அதிக மேய்ச்சல் காட்டப்பட்டால் அதனிடம்
வேலையும் சற்று அதிகமாகவே வாங்கப்படுகிறது. நான் மட்டும் இதற்கு விதிவிலக்கா?" என்று பதிலளித்தார்கள்.
நம்முடைய மனஇச்சை நம்மை பள்ளிவாசலுக்கு சென்று தொழுவதற்கு விடாது. நாம் அதனுடன் போராடி பள்ளிவாசலுக்கு சென்றாலும், அது நம்மை நிம்மதியாக மன ஓர்மையுடன் தொழவிடாது. அதையும் தாண்டி மனதுடன் போராடி மன ஓர்மையுடன் தொழுவதுதான் மனப் போராட்டம். மனத்திற்கு இறைவணக்கம் புரிவதில் ஆர்வத்தையும் அதன் மூலம் கிடைக்கும் சுவையும் உணர்த்த வேண்டும்.
மரியாதை
ஒருமுறை அபாயஜீதுல் பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் ரமளான் நாள்களில் உம்ராவிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களை வரவேற்க ஊர் மக்கள் ஊருக்கு வெளியே வந்து காத்திருந்தனர்.
அபாயஜீதுல் பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் ஊருக்குள் நுழையும்போது தன் கைகளில் ஒரு ரொட்டித் துண்டை வைத்திருந்தார்கள். அதைப் பார்த்த மக்கள் இவர் என்ன (சூஃபி எனும்) ஆன்மீகவாதி? ரமளானில் நோன்பு வைக்காமல் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாரே என்று பேசிக்கொண்டே திரும்பிவிட்டனர்.
அபாயஜீதுல் பிஸ்தாமி
(ரஹ்) அவர்கள் தன் நஃப்ஸைப் பார்த்து, “வரவேற்பு கிடைக்கும் என்று மனப்பால் குடித்தாயே! என்னாயிற்று?” என்றார்கள்.
மனஇச்சையின் தீங்கிலிருந்து
தப்பித்துக்கொள்ள நம்மில் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் எச்சரிக்கை விடுத்துக்கொண்டுதான் இருக்கிறான். எனினும்,
நம்மில் பலர் அல்லாஹ்வின்
தண்டனையை எண்ணிப் பார்ப்பதில்லை. இதனால், மனஇச்சையின் அடிமைகளாக உள்ளோம்.
மனஇச்சை என்பது ஆன்மீக வாழ்வுக்கு பெரும் தடைக்கல்லாக இருக்கிறது எனவேதான், ஆன்மீகவாதிகள் தங்களின் மனஇச்சையுடன் அயராது போராடினர்.
ரொட்டியும்,
முட்டை குருமாவும்
இறைநேசர் "அபுதுராப் பக்ஃஷி" (ரஹ்) அவர்கள் உள்ளத்தில் நீண்ட நாள்களாக ரொட்டியும், முட்டை குருமாவும் சாப்பிடவேண்டும் என்கிற ஆசை மேலோங்கிக்கொண்டே இருந்தது. அபுதுராப் பக்ஃஷி (ரஹ்) அவர்களும் அவ்வப்போது ரொட்டிக்கும் முட்டை குருமாவுக்கும் மனம் ஆசைப்படும் போதெல்லாம் அதன் மண்டையில் கொட்டிக் கொண்டே இருந்தார்கள்.
ஒருநாள் வெளியூருக்கு
ஒரு வேலையாக சென்றிருந்தபோது அந்த ஊரின் தெரு வழியாக நடந்து கொண்டிருக்க எதிரே ஒருவன்
அபுதுராப் பக்ஃஷி (ரஹ்) அவர்களிடம் பதைபதைப்புடன் வந்து, "என் ஆடு காணாமல் போய்விட்டது
அதை பார்த்தீர்களா?” என்று கேட்டான். அபுதுராப்
பக்ஃஷி (ரஹ்) அவர்கள் "இல்லையப்பா! அதை நான் பார்க்கவில்லை" என்றார்கள்.
கேட்டவனுக்கு சந்தேகம். இவர்தான் ஊரில் புதிதாக நடமாடிக் கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கு டிப்டாப் ஆசாமியாகவும் இல்லை. (பொதுவாகவே இறைநேசர்களின் ஆடைகள் அலங்காரமாக இருப்பதில்லை. பலதரப்பட்ட ஒட்டு போடப்பட்ட துணியோடுதான் அவர்கள் வலம் வருவார்கள்.) வந்தவன் சந்தேகப்பட்டதிலும் தவறில்லை. "இவர் ஒருவேளை என் ஆட்டை திருடி விற்பதற்காக ஒளித்து வைத்திருப்பாரோ? என்கிற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது
மீண்டும் அழுத்தி, கொஞ்சம் அதிகாரத்தோடு கேட்டான். "என் ஆட்டை நீங்கள் பார்க்கவில்லையா? கேட்பவன் நம்மை சந்தேகத்தோடு கேட்கிறான் என்பதை புரிந்துகொண்ட அபுதுராப் பக்ஃஷி (ரஹ்) அவர்கள் "உன் ஆட்டைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று அவன் நினைப்பை புரிந்துகொண்டு சிரித்துக்கொண்டே பதில் கூறினார்கள்.
ஆனால் கேட்டவனுக்கோ, தன் ஆடு தொலைந்துபோனது என்கிற வருத்தம், எரிச்சல் ஒருபுறம்,, சிரித்துக்கொண்டே நக்கலாக இவர் பதில் கூறுவது மேலும் அவன் கோபத்தை அதிகப்படுத்த,, பக்கத்திலிருந்த மரக்கிளை ஒன்றை ஒடித்து அபுதுராப் பக்ஃஷி (ரஹ்) அவர்களை அடிக்கத் துவங்கினான்.
அன்னார் தன் நஃப்ஸை நோக்கி! "நீ உன்னை பெரிய இறைநேசர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால் உன்னை திருடன் என்று ஒருவன் அடித்துக் கொண்டிருக்கிறான் பார்!" என்று சிரித்துக்கொண்டே முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். சுமார் எழுபது அடிகள் வாங்கியிருப்பார்கள்.
அப்போது அந்த வழியாக அபுதுராப் பக்ஃஷி (ரஹ்) அவர்களை நன்கு அறிந்திருந்த பெரியவர் ஒருவர் வேக வேகமாக வந்து அவனை தடுத்து நிறுத்தி "ஏய்.. நீ யாரை அடித்துக் கொண்டிருக்கிறாய் என்று தெரியுமா? இவர் எப்படிப்பட்ட மஹான் என்று உனக்கு தெரியுமா? ஒரு மிகச்சிறந்த இறைநேசச் செல்வர் அபுதுராப் பக்ஃஷி (ரஹ்) அவர்களை அல்லவா நீ அடித்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கூறியதுதான் தாமதம், உடனே அவன், "நீங்கள் தான் அபுதுராப் பக்ஃஷியா? உங்களைப்பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். என் வாழ்நாளில் ஒரு முறையாவது அபுதுராப் பக்ஃஷி என்கிற மஹானை பார்க்க வேண்டுமென்று நான் ஆசைப்பட்டு இருக்கிறேன். நீங்கள் யார்? என்று தெரியாமல் உங்களை நான் அடித்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்" என்று அன்னாரின் காலை பிடித்து கண்ணீரோடு கெஞ்ச துவங்கினான்.
அபூதுராஃப் பக்ஃஷி (ரஹ்) அவர்கள் தன்னை அடித்ததை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் "சரி மன்னித்துவிட்டேன் பரவாயில்லை" என்று அங்கிருந்து நகர துவங்கினார்கள். அடித்தவனோ அன்னாரை விடவில்லை. "நீங்கள் என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்லவேண்டும். அப்போதுதான் என்மனம் அமைதிபெறும்" என்று மீண்டும் கெஞ்சத் துவங்கினான்.
அபூதுராஃப் பக்ஃஷி (ரஹ்) அவர்கள் அவனின் வற்புறுத்தல் தாங்காமல் "அல்லாஹ் அடியும் கொடுக்கிறான்.. அடித்தவன் கையால் சாப்பாடும் கொடுக்கிறான்" என்று நினைத்து சிரித்துக்கொண்டே அவனோடு செல்ல, அவன் வீட்டில் விருந்துக்கான உணவு தயாராக இருந்தது .
சாப்பிடுவதற்கு தயாரான அபூதுராஃப் பக்ஃஷி (ரஹ்) அவர்களுக்கு முன் தட்டையை வைத்து தன் வீட்டில் தயார் செய்யப்பட்டு மூடி வைக்கப்பட்ட உணவு பாத்திரங்களின் மூடியைத் திறந்தான் வீட்டுக்காரன். அங்கே, அன்னார் மனம் நெடுநாளாய் ஆசைப்பட்ட ரொட்டியும் முட்டை குருமாவும் இருந்தது.
அபுதுராஃப் பக்ஃஷி (ரஹ்) அவர்கள் மெதுவாக தன் நஃப்ஸை நோக்கி!, "நடுரோட்டில் முன்பின் தெரியாத ஒருவனிடம் திருட்டு பட்டம் சூட்டப்பட்டு, எழுபது அடிகள் வாங்கி, நீ இந்த ரொட்டியும் முட்டை குருமாவும் சாப்பிட வேண்டுமா? இது உனக்கு தேவையா? இனிமேல் இப்படி நீ ஆசைப்படுவாயா?” என்று கூறியவாறே ஆசைக்கு ஒரு கவளம் மட்டும் எடுத்து உண்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.
இறையச்சம் நிறைந்த
ஆன்மீகவாதிகள் மன இச்சைக்கு கட்டுப்பட்டு வயிறு நிரம்ப உணவு உண்ணுவதில்லை. நினைத்ததையெல்லாம்
உண்ணுவதுமில்லை. ஆனால், சாமானியர்களான நாம் மூன்று வேளையும் வயிறு புடைக்க
உண்பது மட்டுமல்லாது, அவ்வப்போது டீ, காபி, பழச்சாறு போன்ற பானங்களை பருகி,
வடை, முறுக்கு போன்ற நொறுக்குத் தீனிகள், மற்றும் பழங்களையெல்லாம்
சாப்பிட்டு வாழும் சுகவாசிகள். நாம் எப்போது மன இச்சையை
கட்டுப்படுத்தி வாழும் ஆன்மீக வாழ்க்கையைப்பற்றி சிந்திக்கப்போகிறோம்?
பொதுவாகவே, ஏதாவது குறிப்பிட்ட ஒன்றை சாப்பிடவேண்டும் என்கிற ஆசை அவ்வப்போது மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய ஒன்று தான். ஆனால் மனிதர்களுக்கும் மஹான்களுக்கும் சின்ன வித்தியாசம் உண்டு. சாப்பிட வேண்டும் என்று நம் மனம் ஆசைப்பட்டதை எப்படியாவது, எப்போதாவது சாப்பிட்டு மனதின் ஆசையை நிறைவேற்றி அதை சமாதானப்படுத்தி விடுவோம்.
ஆனால், மஹான்கள் அப்படியல்ல. "உனக்கு என்ன அப்படி ஒரு ஆசை?” என்று மனதிடமே கேள்வி கேட்டு அதை அடக்குவதற்கு பயிற்சி எடுத்துக் கொள்வார்கள். அதனால்தான் அவர்கள் மஹான்கள்.
ரமளான் என்கிற ஒரு மாதத்தில் நம்முடைய நஃப்ஸை அடக்குவதற்கு படாதபாடுபடுகிறோம். ஆனால் வாழ்நாள் முழுக்க தன் நஃப்ஸை தனக்கு அடிமையாக்கி வாழ்ந்தவர்கள் தான் இறைநேசச் செல்வர்கள்.
மஹான் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் தங்களின் கவிதையிலே இப்படிச் சொல்லுவார்கள்.
"மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னில் வந்து உன்னாசை ஒழித்தேன் உடையவனே! நீ அறிவாய். என்னாசை ஒழித்து உன்னாசை என்னில் வர கன்னாஸை விட்டும் காத்தருள்வாய் ரஹ்மானே"...
கன்னாஸ்: உள்ளத்தில் உலகத்தின் ஆசைகளை ஏற்படுத்தும் ஷைத்தானியத்தான மனதிற்கு பெயர். (அல்கன்னாஸ்.. அல்லதி யு வஸ்விஸு ஃபீ ஸுதூரின்னாஸ்)
சத்தியத்தை
நோக்கி!
நீங்கள் நன்கறிந்து கொண்டே உண்மையை ஏன் மறைக்கின்றீர்கள். திருக்குர்ஆன்:- 3:71
இவர்கள் (சத்தியத்தைப்) பொய்ப்படுத்திவிட்டுத் தங்களின் மனஇச்சைகளின் பின்னால் போய்க்கொண்டிருக்கின்றனர். திருக்குர்ஆன்:- 54:3
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (கவிஞர்) ( وَكَادَ أُمَيَّةُ بْنُ أَبِي الصَّلْتِ أَنْ يُسْلِمَ ) "உமய்யா பின் அபிஸ்ஸல்த் என்பவர் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு நெருங்கி வந்துவிட்டார்". அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4542, திர்மிதீ, இப்னுமாஜா-3747
உமய்யா பின் அபிஸ்ஸல்த் என்பவர் அறியாமைக் கால கவிஞர் ஆவார். அவர் முற்கால வேதங்களைப் படித்துவந்தார். சிலை வழிபாட்டை தவிர்த்து வந்தார். ஒரு இறைத்தூதர் அனுப்பப்படுவார் என்றும் அவர் வரும் காலம் நெருங்கி விட்டது என்றும் அறிவித்து வந்தார். அவர் தாமே ஒரு நபியாக நியமிக்கப்படக்கூடும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதராக வந்துள்ள செய்தி அறிந்து (தமது மனஇச்சைக்கு கட்டுப்பட்டவராக) பொறாமையின் காரணத்தால் நபியவர்களை ஏற்க மறுத்துவிட்டார்.
அவர் தம் கவிதைகளில்
நபிமார்கள் பற்றி குறிப்புகள், முந்தைய வேதங்களின்
கருத்துக்கள், வேதக்காரர்களின் செய்திகள்
ஆகியவற்றை கூறிவந்தார். இதனால் தான் நபியவர்கள் அவரைக் குறித்து "அவர் நாவு நம்பிக்கை
கொண்டுள்ளது; உள்ளம் மறுத்துவிட்டது"
என்று குறிப்பிட்டார்கள். நூல்:- தக்மிலா
முஙீரா பின் ஷுஅபா
(ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அபூஜஹ்ல் என்னை நோக்கி!
( وَاللَّهِ إِنِّي لَأَعْلَمُ أَنَّ مَا يَقُولُ حَقٌّ، وَلَكِنْ يَمْنَعُنِي
شَيْءٌ ; إِنَّ بَنِي قُصَيٍّ، قَالُوا: فِينَا الْحِجَابَةُ. فَقُلْنَا: نَعَمْ. ثُمَّ
قَالُوا: فِينَا السِّقَايَةُ. فَقُلْنَا: نَعَمْ. ثُمَّ قَالُوا: فِينَا النَّدْوَةُ.
فَقُلْنَا: نَعَمْ. ثُمَّ أَطْعَمُوا وَأَطْعَمْنَا، حَتَّى إِذَا تَحَاكَّتِ الرُّكَبُ،
قَالُوا: مِنَّا نَبِيٌّ. وَاللَّهِ لَا أَفْعَلُ. )
"அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (முஹம்மத்) கூறுவது சத்தியம் ஆகும்" என நான் அறிவேன். எனினும் ஒரு விஷயம் என்னைத் தடுக்கிறது. அதாவது, (முஹம்மதின் பரம்பரையான) குஸை கோத்திரத்தினர் (கஅபாவிற்கு) திரைத்துணி கட்டுதல் எங்களிடம் உள்ளது என்கின்றனர். ஆமாம் (எங்களிடமும் உள்ளது) என்று (நாங்கள்) கூறுகின்றோம். பிறகு அவர்கள் (ஹாஜிகளுக்கு) தண்ணீர் வினியோகம் செய்தல் எங்களிடம் உள்ளது என்கின்றனர். ஆமாம் (எங்களிடமும் உள்ளது) என்று (நாங்கள்) கூறுகின்றோம். பிறகு அவர்கள் (பொதுச்சேவை மையமாக திகழ்ந்த) தாருந் நத்வா நிர்வாகம் எங்களிடம் உள்ளது என்கின்றனர். ஆமாம் (எங்களிடமும் உள்ளது) என்று (நாங்கள்) கூறுகின்றோம். பிறகு அவர்கள் (ஹாஜிகளுக்கு) உணவளிக்கின்றனர். நாங்களும் உணவளிக்கின்றோம்.
ஆக, (அவர்களும் நாங்களும்) முந்தாளிட்டு பந்தயத்திற்கு
தயாராகும்போது, அவர்கள், எங்களில் இறைத்தூதர் தோன்றியுள்ளார் என்று கூறுகின்றனர்.
(இச்சிறப்பு மட்டும் அவர்களுக்கு எப்படி?) அல்லாஹ்வின் மீதாணையாக! இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என்று கூறினான்.
நூல்:- தலாயிலுந் நுபுவ்வா இமாம் பைஹகீ, அல்பிதாயா வந்நிஹாயா
அலீ (ரலி) அவர்கள்
கூறுகிறார்கள். ( إِنَّ أَخْوَفَ مَا
أَخَافُ اتِّبَاعُ الْهَوَى، فَأَمَّا اتِّبَاعُ الْهَوَى فَيَصُدُّ عَنِ الْحَقِّ ) நான் மிகவும் பயப்படக்கூடிய விஷயம், மனஇச்சைக்கு கட்டுப்படுவது தான். மனஇச்சைக்கு கட்டுப்படுவதானது, அது (நம்மை) சத்தியத்தில் இருந்து விலக்கிவிடும்.
உமய்யா பின் அபிஸ்ஸல்த், அபூஜஹ்ல் போன்று, இன்று பலரும் இஸ்லாத்தின் சிறப்பம்சங்களை நன்கு விளங்கி வைத்திருக்கின்றனர். இஸ்லாத்தின் பெருமைகளை மேடைகளிலும் இணையதளங்களில் மூலமாகவும் முழங்குகின்றனர். மேலும், அது குறித்து பல நூல்களையும் எழுதிக் குவிக்கின்றனர். ஆனாலும், இவர்கள் இஸ்லாத்தில் இணைய மறுக்கின்றனர் என்பதுதான் வேதனையான விஷயம்.
காரணம், அவர்கள் தமது மனஇச்சைக்கு கட்டுப்பட்டு,
தற்போது கிடைத்திருக்கும்
கௌரவங்களும் மதிப்பு மரியாதைகளும் இஸ்லாத்தில் இணைந்துவிட்டால் காணாமல் போய்விடுமோ
என்று பதறுகிறார்கள்.
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது.
உன்னுடைய இச்சைக்கு மாறுசெய். நேர்வழியில் செல்வாய்!
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (நஃப்ஸ் எனும்) மனஇச்சை என்பது எழுபது ஷைத்தான்களைவிட அதிக தீமைகளை விரும்பும் ஒரு படைப்பாகும். எனவே, மனஇச்சையின் தீமைகளிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள மிகவும் கவனமாகவும், கட்டுப்பாடாகவும் இருங்கள்.
அலீ (ரலீ) அவர்கள் கூறினார்கள். (ஸுஹ்த் எனும்) பற்றற்ற நிலையென்பது, எதையும் உன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாமல் இருப்பதல்ல; எதுவும் உன்னைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராதிருப்பது.
இறைநேசர் முஹ்யித்தீன்
அப்துல்காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ( أَخْرَجَ الدُّنْيَا مِنْ قَلْبِكَ إِلَي يَدَكَ فَاِنَّهَا لَا تَضُرُّكَ
) உலகத்தை உன் கையில் வைத்துக்கொள்! உள்ளத்தில் வைக்காதே! அது உனக்கு தீங்கிழைக்காது.
நூல்:- தபகாத்துல் குப்ரா பக்கம்-229
அல்லாஹுத்தஆலா நம்மை மனஇச்சையின் தீங்கில் இருந்து பாதுகாத்து, வெற்றியடையச் செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
அல் ஹம்து லில்லாஹ் படிக்க படிக்க இன்னும் சுவாரஸ்யமாக மெற்கு ஏற்றிக்கொண்டே போகுகிறது தங்களின் அழகான ஆழமான அர்த்தங்கள் கொண்டுள்ள கட்டுரை அல்லாஹ் தங்கள் இல்மில் பரகத் செய்வானாக
ReplyDeleteآمين
Deleteஹஜ்ரத் மது சம்பந்தமாக ஒரு கட்டுரை இட்டால் நன்றாக இருக்கும்
ReplyDeleteதள்ளாடுபவர்கள் என்ற தலைப்பில் மது குறித்து ஏற்கனவே நமது தளத்தில் பதிவிடப்பட்டள்ளது.
ReplyDelete