Search This Blog

Sunday, 29 January 2023

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

 

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

 

وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثْلُهَا

 

ஒரு தீங்கின் சரியான தண்டனை, அதைப் போல் தீங்கு செய்வதே ஆகும். திருக்குர்ஆன்:- 42:40

 

மனிதனின் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. மனிதன் செய்யும் தீங்குகள் சிறியது பெரியது என எதுவாக இருந்தாலும் அதற்கான கூலி தீங்காகவே அமையக்கூடும். அந்தக் கூலி எப்போது வேண்டுமானாலும் கிடைக்கப்பெறலாம். அதனால் தான் தீங்கு செய்ய எண்ணும்போது சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ ضَارَّ ضَارَّ اللَّهُ بِهِ وَمَنْ شَاقَّ شَاقَّ اللَّهُ عَلَيْهِ ) யார் (பிறருக்குத்)  தீங்கிழைக்கிறாரோ அவரை அல்லாஹ் தீங்கில் சிக்கவைப்பான். யார் (பிறரைத்) துன்புறுத்துகிறாரோ அவரை அல்லாஹ் துன்பத்தில் ஆழ்த்துவான். அறிவிப்பாளர்:- அபூஸிர்மா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1863, இப்னுமாஜா-2333

 

பதிலடி கொடு

 

எனவே உங்களிடம் எவரேனும் வரம்பு மீறினால் அவர் எந்த அளவுக்கு உங்களிடம் வரம்பு மீறினாரோ அந்த அளவுக்கே நீங்கள் பதிலடிகொடுங்கள் திருக்குர்ஆன்:- 2:194

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) என்னுடைய அனுமதியின்றி (நபியவர்களின் மனைவியருள் ஒருவரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் மிகுந்த கோபத்துடன் என் வீட்டினுள் நுழைந்து விட்டார். அது எனக்கே தெரியாது. பின்னர் அவர், ( حَسْبُكَ إِذَا قَلَبَتْ لَكَ ابْنَةُ أَبِي بَكْرٍ ذُرَيّعَتَيهَا ) "நாயகமே! அபூபக்ரின் இளைய மகள் தம் இரு சிறு கைகளையும் புரட்டுவதே உங்களுக்குப் போதுமா? (மற்ற மனைவியர் விஷயத்தில் கவனம் செலுத்த மாட்டீர்களா?)" என்று வினவினார். பின்னர் என்னிடம் திரும்பி (என்னை) ஏசினார். ஆனால், நான் அவரைப் புறக்கணித்து விட்டேன். (அவர் பேசியதற்கு எதிராக நான் எதுவும் பேசவில்லை.)

 

அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( دُونَكِ فَانْتَصِرِي ) "(ஆயிஷாவே!) உன்னை நீ பாதுகாத்துக்கொள்ள எதையாவது பேசு" என்று கூறினார்கள். (நபியவர்கள் அனுமதி கொடுத்தவுடன்) நான் சென்று, அவருடைய வாயில் உமிழ்நீர் காயும் வரை பிடிபிடியென்று பிடித்துவிட்டேன். நான் பேசியதற்கு எதிராக அவர் எதையும் திரும்பப் பேசவில்லை. அப்போது நபியவர்களின் முகம் (மகிழ்ச்சியால்) ஒளிர்ந்ததைப் பார்த்தேன். நூல்:- இப்னுமாஜா-1971, முஸ்னது அஹ்மத்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு நபித்தோழர்கள் அவ்வப்போது அன்பளிப்புக்கள் வழங்குவது உண்டு. அது பெரும்பாலும் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் நபியவர்கள் தங்கியிருக்கும் நாள்களில் அன்பளிப்புக்கள் வரும். இதனால் மற்ற மனைவியருக்கு ஆதங்கம். இது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு தெரியாமலேயே இருந்தது.

 

ஒருநாள் நபியவர்களின் மனைவியரில் ஒருவரான ஸைனப் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டினுள் கோபமாக வந்து, அபூபக்ரின் செல்ல மகள் ஆயிஷாவின் கை அசைவுகள் உங்களுக்குப் போதும்தானே என்று கேட்டார்.

 

பிறகு தம்மை நோக்கி ஸைனப் (ரலி) அவர்கள் திரும்பியபோது அவரது பார்வையை ஆயிஷா (ரலி) அவர்கள் நாசூக்காகத் தவிர்த்தார்கள். இருந்தாலும் தமது மனக் காயத்திற்கு மருந்திடும் வகையில் பதிலுக்குப் பதில் பேச ஆயிஷா (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.

 

அவர்களிடம் அனுமதி பெறாமல் அவர்களது வீட்டினுள் ஸைனப் (ரலி) அவர்கள் நுழைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜைனப் (ரலி) அவர்களின் நாக்கு வறண்டு போனது. இதை அடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது. தனக்கு நேர்ந்த மனக்காயத்திற்கு பதில் தர ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இருந்த உரிமையை நபியவர்கள் நிலைநாட்டினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நூல்:- ஃபைய்ளுல் கதீர்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்காக "ஹரீர்" என்ற உணவை சமைத்தேன். நான் அப்போது அங்கு வந்து அமர்ந்த சவ்தா (ரலி) அவர்களிடம்  "சாப்பிடுங்கள்" என்று கூறினேன். நபியவர்கள் எனக்கும் சவ்தா (ரலி) அவர்களுக்கும் மத்தியில் அமர்ந்திருந்தார்கள். ஆனால் சவ்தா (ரலி) அவர்கள் சாப்பிட்ட மறுத்துவிட்டார். "கண்டிப்பாக நீங்கள் அதை சாப்பிட்டே ஆகவேண்டும். அல்லது அதை உங்களது முகத்தில் பூசி விடுவேன்" என்று கூறினேன். அப்போதும் அவர் சாப்பிட மறுத்துவிட்டார். நான் ஹரீராவில் எனது கையை வைத்து அவரது முகத்தில் பூசி விட்டேன். இதை பார்த்த நபியவர்கள் சிரித்தவர்களாக ஹரீராவில் சவ்தாவிற்காக தனது கரத்தை வைத்து சவ்தாவிடம் "ஆயிஷாவின் முகத்தில் நீ இதைப் பூசி விடு!" என்று கூறினார்கள். நூல்:- அல்ஹைஸமி

 

பழிக்குப்பழி

 

(அநீதிக்கு) நீங்கள் தண்டனை வழங்குவதானால் உங்கள் மீது எந்த அளவுக்கு அக்கிரமும் புரியப்பட்டதோ அதே அளவுக்குத் தண்டனை வழங்குங்கள். திருக்குர்ஆன்:- 16:126

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. யூதனொருவன் ஒரு சிறுமியை அவளது வெள்ளி நகைக்காகக் அவளது தலையைக் கல்லால் நசுக்கி விட்டான். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த அந்த சிறுமி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது. அவளிடம் நபியவர்கள், ( اَقَتَلَكِ فُلَانٌ ) "இந்த மனிதரா உன்னைத் தாக்கினார்?" என்று கேட்டார்கள். அவள் "இல்லை" என்று தலையால் சைகை செய்தாள். மீண்டும் நபியவர்கள், "இன்ன மனிதராக உன்னைத் தாக்கினார்?" என்று கேட்டார்கள். அவள் அப்போதும் "இல்லை" என்று தலையாட்டினாள். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவளிடம், "இன்ன மனிதரா உன்னை தாக்கினார்?" என்று (மூன்றாவது முறை ஒரு மனிதரின் பெயரைக் குறிப்பிட்டுக்) கேட்டபோது அவள் "ஆம்" என்று தலையால் சைகை செய்தாள். ஆகவே, அந்த யூதனை (அழைத்து வந்து விசாரித்து, அவனது அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டதும்) இரு கற்களுக்கிடையே வைத்து அவ(னது தலையி)னை (நசுக்கி)க் கொல்லுமாறு நபியவர்கள் உத்தரவிட்டார்கள். நூல்:- புகாரீ-2413, முஸ்லிம்-3453

 

திட்டமிட்டு செய்யப்பட்ட கொலைக்கு மரண தண்டனை வழங்கவேண்டும். எந்த ஆயுதத்தால் எந்த முறையில் கொலை நடந்ததோ அதே முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்கிறது இஸ்லாமிய குற்றவியல் சட்டம்.

 

செய்தது செய்யப்படும்

 

தீமைகளை எவர்கள் செய்தபோதிலும் தீமைக்குரிய கூலி அதைப்போன்ற தீமையே! திருக்குர்ஆன்:- 10:27

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( بَرُّوا آبَاءَكُمْ تَبَرَّكُمْ أَبْنَاؤُكُمْ وَعِفِّوا عَنْ نِسَاءِ النَّاسِ تَعِفَّ نِسَاؤُكُمْ ) உங்கள் பெற்றோருக்கு நீங்கள் பணிவிடை செய்யுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு பணிவிடை செய்வார்கள். அந்நியப் பெண்களை பத்தினியாக இருக்கவிடுங்கள். உங்கள் பெண்கள் பத்தினியாக இருப்பார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம், தப்ரானீ

 

இறைநேசர் ஸாபித்துல் புனானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருநாள் கடைவீதியில் ஒரு வாலிபன் ஒரு முதியவரை அடித்து கொண்டிருந்தான். அதைப்  பார்த்த நான் அவ்வாலிபனை தடுக்க முற்பட்டேன். அப்போது அந்த முதியவர், "அவனை ஒன்றும் செய்துவிடாதீர். அவன் என் மகன் தான். என் பாவத்தால் தான் நான் இவ்வாறு சோதிக்கப்படுகிறேன். அதாவது, நான் வாலிபனாக இருந்தபோது இதே இடத்தில் இவ்வாறு தான் என் தந்தையை அடித்து நோவினை செய்தேன். அந்த பாவத்தின் கூலியைத்தான் இப்போது அனுபவிக்கிறேன்" என்றார்.

 

நாம் பெற்றோருக்கு பணிவிடை செய்தால் வருங்காலத்தில் நமது பிள்ளைகள் நமக்கு பணிவிடை செய்வார்கள். நாம் அடுத்த வீட்டு பெண்களுடன் விபச்சார தீங்கை செய்தால் அதற்குக் கூலி, நமது வீட்டுப் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடக்கூடும் என்பதில் மிகுந்த கவனம் தேவை. அல்லாஹ் நம்மை இந்த நிலையை விட்டும் பாதுகாப்பானாக. விதைத்தது தானே முளைக்கும்.

 

இன்று பிள்ளைகளாய் இருப்பவர்கள் தான் நாளை பெற்றோர்களாய் மாறுகிறார்கள். "முன்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற பழமொழியை மனதில் இருத்தி வாழ வேண்டும். 


இன்று நமது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தால், நாளை நமது பிள்ளைகள் நம்மை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவர். முதியோர் இல்லங்கள் மூடப்படாமல் நீடித்து இருப்பதற்குரிய காரணம் புரிகிறதா?

 

ஒருவன் (காதல் என்ற பெயரில் எவளோ ஒருத்தியை அல்லது ஒருவனை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிப்போகுதல் போன்ற) பெரும் தவறை செய்து பெற்றோருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டால், அவன் மகன் அல்லது மகள் அதேபோல் ஒரு பெரும் தவறை செய்து அவனுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். அதுவே, அவன் செய்த தவறுக்குரிய தண்டனையாக ஆகிவிடும். இதுவே வாழ்க்கையின் யதார்த்தமாகும்.

 

குற்றமாகாது

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ لِلْخَطِيئَةِ يَعْمَلُهَا ) மனிதன் செய்யும் பாவத்தினால் அவனுடைய வாழ்வாதாரம் (ரிஸ்க்) தடுக்கப்படுகிறது. அறிவிப்பாளர்:- ஸவ்பான் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-87


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நாயகமே! (என் கணவர்) அபூசுப்யான் கருமியான மனிதர். எனக்கும், என் குழந்தைக்கும் செலவுக்கு போதிய பணத்தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்கு தெரியாமல் (திருட்டுத்தனமாக) எடுத்துக் கொண்டதைத்தவிர (போதுமான தொகையை அவர் தர மாட்டார்) என்று கூறினார். அதற்கு அண்ணலார் ( خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالْمَعْرُوفِ )  "உனக்கும், உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்!" என்று கூறினார்கள்.   நூல்:- புகாரீ-5364

 

குடும்பச் செலவுக்கு போதுமான தொகை வைத்திருந்தும் அதை தர மறுக்கும் கருமியான தன் கணவனிடமிருந்து அவனுக்கே தெரியாமல் வீட்டு செலவுக்கு போதுமான தொகையை மனைவி எடுத்துக் கொண்டால் அது திருட்டு குற்றமாகாது. அதற்காக அவளை தண்டிக்கவும் கூடாது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.

 

கணவனின் கஞ்சத்தனம் என்ற தீங்குக்கு தண்டனை தான், அவனுடைய பணம் அவனுக்கு தெரியாமல் திருடப்படுகிறது. கஞ்சத்தனம் என்ற தீங்குக்கு திருட்டு என்ற தீங்கு தண்டனையாக வழங்கப்பட்டது.

 

கொடுங்கோலர்கள்

 

ஆகவே, தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயலுக்குத் தக்கவாறு (தீமையைக்) கூலியாகக் கொடுக்கின்றான். திருக்குர்ஆன்:- 53:31

 

அப்பாசிய (கலீஃபா) ஆட்சியாளர்களான மஅமூன் மற்றும் அவரின் சகோதரர் முஅத்தஸிம் ஆகியோர் குர்ஆன் இறைவனுடைய படைப்பாகும். படைப்புகள் அனைத்தும் யுக முடிவு நாளில் அழிந்து விடுவது போன்று, குர்ஆனும் அழிந்து போகும் என்ற "முஅத்தஸிலா" கொள்கை உடையவர்களாக இருந்தனர்.

 

தமது கொள்கைக்கு யார் உடன்படவில்லையோ அவர்களுக்குச் சிறை தண்டனையும், அதன் பின்னரும் கட்டுப்படாவிட்டால் கசையடியும் கொடுக்கப்படும் என்று அறிவித்தனர். அன்றைய தலைமை நீதிபதியாக அஹ்மத் பின் அபீ துஆத் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

 

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள், குர்ஆன் அல்லாஹ்வின் வாக்கு. எனவே, அது அழியாது என்ற "அஹ்லுஸ் ஸுன்னா" கொள்கை உடையவராக இருந்தார்கள்.

 

இந்த ஆட்சியாளர்கள் தமது கொள்கைக்கு ஒத்துவராத இமாமவர்களுக்கு ஆடைகள் கிழிந்து போகும் அளவிற்கு கடுமையான கசையடிகள் வழங்கினர். மேலும், இமாமவர்களை சிறையில் தள்ளி அவர்கள் நகர முடியாத அளவுக்கு பலமான சங்கிலிகளால் காலில் விலங்கிட்டனர். இமாமவர்களை இது போன்ற சொல்லொன்னா கொடுமைகளுக்கு ஆளாக்கினர்.

 

கொடுமை உச்சத்திற்குச் சென்ற பிறகு ஆட்சியாளரே மனமிறங்கி, இமாமவர்களை விடுவித்துமாறு கூறியும், தலைமை நீதிபதி அஹ்மத் பின்  அபீ துஆத் அதற்குச் சம்மதிக்கவில்லை. இந்தத் தலைமை நீதிபதி தான் இமாமவர்களை வதை செய்வதில் முன்னணியில் நின்றவர்.

 

கொடுமையாளர்களின் காலம் கடந்தது. கலீஃபா முஅத்தஸிமின் மகன் அல்முத்தவக்கில் என்பவர் கலீஃபாவாக ஆனார். அவர், இமாமவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடுமைகள் அனைத்திற்கும் முடிவுகட்டினார். மேலும், இதுவரை தலைமை நீதிபதியாக இருந்த அஹ்மத் பின் அபீ துஆதின் பதவியைப் பறித்து, அவரை கீழிறக்கினார். அவர் பக்தாதிலிருந்து துரத்தப்பட்டார். அவருடைய இயக்கம் வரையறை செய்யப்பட்டது. அவருடைய வாழ்வின் இறுதி நான்கு ஆண்டுகளில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இறப்பு நெருங்கியபோது, அவர் முழுமையாக வாதநோயின் பிடியில் சிக்கித் தவித்தார். அவர் இறந்தபோது, மிகச் சிலரே அவருக்கு (ஜனாஸா தொழுகை) இறப்புத் தொழுகையில் கலந்து கொண்டனர்.

 

அல்லாஹ் உங்களின் விரோதிக்கு சரியான தண்டனை கொடுத்துவிட்டான் என்று ஒருவர் இமாமவர்களிடம் தெரிவித்தபோது, இமாமவர்கள் ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டு, பிறகு தலைப்பில் காணும் திருவசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள்.

 

மேலும், ( أَدِّ الأَمَانَةَ إِلَى مَنِ ائْتَمَنَكَ وَلاَ تَخُنْ مَنْ خَانَكَ )  "உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை நிறைவேற்றுங்கள். உங்களை ஏமாற்றியவரைக்கூட நீங்கள் ஏமாற்றாதீர்கள்" (அபூதாவூத்-3068) என்ற நபிமொழியையும் கூறினார்கள். நூல்:- மஅல் அஇம்மா


பாவத்தின் ஊதியம் எப்படி இருக்கும் தெரியுமா? நாம் எதை யாருக்கு செய்தோமோ அதை அப்படியே நமக்கு வேறொருவர் மூலமாக நடக்கும். அவர்களுக்கு எப்படி வலித்ததோ அப்படியே அச்சு பிசகாமல் நமக்கும் வலிக்கும். எதை தருகிறோமோ அதை அப்படியே எடுத்துக்கொள்வோம். எவரையும் இலகுவாக விட்டுவிடுவதில்லை இறைவன். பாவத்திற்கு நிகர் பாவமே கூலியாக கிடைக்கக்கூடும்.

 

சோதனைகளுக்கும் தண்டனைகளுக்கும் காரணம்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِي قَوْمٍ قَطُّ حَتَّى يُعْلِنُوا بِهَا إِلاَّ فَشَا فِيهِمُ الطَّاعُونُ وَالأَوْجَاعُ الَّتِي لَمْ تَكُنْ مَضَتْ فِي أَسْلاَفِهِمُ الَّذِينَ مَضَوْا )  எந்த ஒரு கூட்டத்தினரிடம் ஒழுக்கக்கேடான தீங்குகள் தோன்றி அவற்றை அவர்கள் வெளிப்படையாகச் செய்யும் அளவுக்குப் போய்விட்டால், கொள்ளை நோயும் முன் வாழ்ந்த அவர்களின் முன்னோர்களுக்கிடையே ஏற்பட்டிராத விதவிதமான நோய்களும் அவர்களிடையே நிச்சயம் பரவும்.

 

( وَلَمْ يَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ إِلاَّ أُخِذُوا بِالسِّنِينَ وَشِدَّةِ الْمَؤُنَةِ وَجَوْرِ السُّلْطَانِ عَلَيْهِمْ ) அவர்கள் எடை அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யும்போது பஞ்சம், கடும் நெருக்கடி, நாடாளும் மன்னரின் அடக்குமுறை ஆகியவற்றின் பிடியில் சிக்குவார்கள்.

 

( وَلَمْ يَمْنَعُوا زَكَاةَ أَمْوَالِهِمْ إِلاَّ مُنِعُوا الْقَطْرَ مِنَ السَّمَاءِ وَلَوْلاَ الْبَهَائِمُ لَمْ يُمْطَرُوا ) அந்த சமூக மக்கள் தமது செல்வங்களுக்கான (ஸகாத் எனும்) கட்டாயக் கொடையை வழங்காமல் தம்மிடம் வைத்துக் கொள்வார்கள். அதன் விளைவாக வான் மழை பொழிவது நிறுத்தப்பட்டு விடும். கால்நடைகள் மற்றும் இல்லாதிருந்தால் மழை பொழிவது முற்றிலும் நின்றுபோகும்.

 

( وَلَمْ يَنْقُضُوا عَهْدَ اللَّهِ وَعَهْدَ رَسُولِهِ إِلاَّ سَلَّطَ اللَّهُ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَأَخَذُوا بَعْضَ مَا فِي أَيْدِيهِمْ ) அந்த மக்கள் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தையும் அவனது தூதரின் ஒப்பந்தத்தை முறித்து விடும்போது அல்லாஹ், அவர்களின் மீது மற்றவர்களிலிருந்து பகைவர்களை ஏற்படுத்தி அடக்கி ஆளச் செய்வான். எனவே பகைவர்கள், அவர்களின் கைவசம் இருக்கும் சிலவற்றையும் பறித்து கொள்வார்கள்.

 

( وَمَا لَمْ تَحْكُمْ أَئِمَّتُهُمْ بِكِتَابِ اللَّهِ وَيَتَخَيَّرُوا مِمَّا أَنْزَلَ اللَّهُ إِلاَّ جَعَلَ اللَّهُ بَأْسَهُمْ بَيْنَهُمْ )  அந்த சமூகத்தாரின் தலைவர்கள் அல்லாஹ்வின் வேதத்தின்படி தீர்ப்பு வழங்காமல் அல்லாஹ் தமக்கு அருளியவற்றை தேர்ந்தெடுக்காமல் செயல்படும்போது அவர்களில் சிலரை சிலருக்குப் பகைவர்களாய் ஆக்கிவிடுவான். (அதனால் பிளவுகள் தோன்றும். இறைவேதனை இறங்கும்.) அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-4009, ஹுல்யத்துல் அவ்லியா இமாம் அபூநயீம், ஹாக்கிம், தப்ரானீ, ஸஹீஹ் ஜாமிஉ-7978 

 

பாவச் செயல்கள் ஆற்றுவது சோதனைகளையும் தண்டனையும் உருவாக்கித் தரும் என்று இந்த நபிமொழி எச்சரிக்கிறது.

 

மனிதன் அருவருப்பான காரியங்கள் செய்யும்போது அதற்குரிய கூலியும் அருவருப்பாகத்தானே இருக்கும்.

 

சென்னை போன்ற சில பெருநகரங்களில் அவ்வபோது மழைநீர் பெருக்கெடுத்து ஆங்காங்கே தேங்கி நிற்பதை அறிவோம். காரணம் ஏரி, குளங்களும் பிளாட் போட்டு பில்டிங்காக மாற்றிவிட்டதால் நீருக்கு வடிகால் இல்லை. மறுபுறம் கிணற்றில், போரிங்கில் வறட்சி. காரணம், மழைநீரை உள்ளே உறிஞ்சி (தேக்கி) பாதுகாத்து திருப்பித் தரும் விளைச்சல் நிலம், மண் தரை யாவும் தார் சாலையாக, சிமெண்ட் சாலையாக பளிங்கி தரையாக மாற்றியதால்.

 

அவ்வபோது, மழை வெள்ளத்தால் சென்னையில் சேதாரம் என்கிறோமே! இதைப் பற்றி என்றாவது நாம் சிந்தித்தோமா?

 

முகம் சுளிக்கும் அருவருப்பான பாவக்காரியங்களையும்விட்டும், அல்லாஹுத்தஆலா நம்மையும் நமது சந்ததிகளையும் பாதுகாப்பானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

Friday, 20 January 2023

பசியாற்று!

 

பசியாற்று!

 

وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ  فَكُّ رَقَبَةٍ  أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ  يَتِيمًا ذَا مَقْرَبَةٍ  أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ

 

(நபியே) 'அகபா' என்னவென்று நீங்கள் அறிவீரா? அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது. அல்லது கடும் பசியான நாளில் உணவளிப்பது. உறவு முறையில் உள்ள அனாதைக்கு அல்லது (வறுமையில்) மண்ணைக் கவ்விக் கிடக்கும் ஓர் ஏழைக்கு உணவளிப்பது. திருக்குர்ஆன்:- 90:12, 13, 14, 15, 16

 

தர்மங்களில் சிறந்த தர்மம், உணவு தர்மமே! காரணம், அதில் மட்டும் தான் மனிதனுக்கு போதுமென்ற மனநிலை உருவாகிறது. பழையக்கஞ்சியை உண்டு வயிறு நிரம்பியவனிடம்கூட சுவைமிக்க உயர் ரக பிரியாணியைக் கொடுத்து சாப்பிடு! என்று சொல்லப்பட்டாலும், "வயிறு நிரம்பிவிட்டது; வேண்டாம்" என்பான். மனிதனுக்கு உலகப் பொருட்களில் எதை கொடுத்தாலும், எவ்வளவு கொடுத்தாலும் போதுமாகாது. ஆனால், உணவைத்தவிர.


அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ( أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ ) "இஸ்லாமி(ய பண்புகளி)ல் சிறந்தது எது?" என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ( تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ ‏ ) "(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும், நீங்கள் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-12, முஸ்லிம்-63, அபூதாவூத்-4520, நசாயீ-4914, இப்னுமாஜா-3244, முஸ்னது அஹ்மத்

 

 

பாதுகாப்புப் பெற்றவர்கள்

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் சமூகத்தில் இருந்தோம். அப்போது ஒரு மனிதர் வந்தார். அவர் கைஸ் குலத்தைச் சேர்ந்தவர் என்று கருதுகிறேன். அவர், "நாயகமே! ஹிம்யர் குலத்தைச் சபியுங்கள்" என்று கூறினார். அப்போது அண்ணலார் அவரிடமிருந்து முகத்தை திருப்பிக் கொண்டார்கள். பிறகு வேறு ஒரு பக்கத்திலிருந்து அவர் அண்ணலாரிடம் வந்தார். அப்போதும் அண்ணலார் அவரிடம் இருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். பிறகு இன்னொரு புறத்திலிருந்து அண்ணலாரிடம் வந்தார். அப்போதும் அண்ணலார் அவரிடமிருந்து முகத்தை திருப்பிக் கொண்டார்கள்.

 

அண்ணலார், ( رَحِمَ اللَّهُ حِمْيَرًا أَفْوَاهُهُمْ سَلاَمٌ وَأَيْدِيهِمْ طَعَامٌ وَهُمْ أَهْلُ أَمْنٍ وَإِيمَانٍ )  "அல்லாஹ் (யமன் தேசத்து) ஹிம்யர் குலத்தினருக்கு அருள் புரிவானாக! அவர்களின் வாய்களில் எப்போதும் சலாம் இருக்கிறது. (அதாவது மக்களிடையே சலாத்தை - அமைதியை அதிகமதிகம் பரப்புகிறார்கள்.) அவர்களின் கைகளில் உணவு இருக்கிறது. (அதாவது அவர்கள் ஏழைகளுக்கும் விருந்தினருக்கும் உணவு வழங்கிய வண்ணம் இருக்கிறார்கள்.) அவர்கள் அமைதியாகவும் இறைநம்பிக்கை மிக்கவர்களாகவும் இருக்கின்றனர்" என்று கூறினார்கள். நூல்:-  திர்மிதீ-3864, முஸ்னது அஹ்மத்

 

கண்ணாடி அறைகள்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَنَّ فِي الْجَنَّةِ غُرَفا يُرى ظَاهِرُهَا مِنْ بَاطِنِهَا، وَبَاطِنُهَا مِنْ ظَاهِرِهَا، أعدَّها اللَّهُ لِمَنْ أَطْعَمَ الطَّعَامَ، وَأَطَابَ الْكَلَامَ، وَأَبَاحَ الصِّيَامَ، وَأَقَامَ الصَّلَاةَ وَالنَّاسُ نِيَامٌ )  சொர்க்கத்தில் சில கண்ணாடி அறைகள் உள்ளன. அவற்றின் உள்ளிருந்து வெளியேயும்  வெளியில் இருந்து உள்ளேயும் பார்க்க முடியும். யார் (பசித்தவருக்கு) உணவளித்து, இன்சொல் பேசி, தொழுகையையும் நோன்பையும் முறையாக கடைபிடித்து, இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது அல்லாஹ்வை நின்று வழிபட்டாரோ அவர்களுக்கே உயர்ந்தோன் அல்லாஹ் அவற்றைத் தயார் செய்து வைத்துள்ளான். அறிவிப்பாளர்:-  அபூ மாலிக் அல்அஷ்அரீ (ரலி)  அவர்கள் நூல்:- முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னுகஸீர் அல்அன்கபூத் வசனம்-58

 

தக்கச் சமயத்தில் உயிர் காக்கும்

 

ஸகர் (எனும்) நரகத்தில் உங்களைப் புகுத்தியது எது? (என்று குற்றவாளிகளிடம் கேட்கப்படும்.) அதற்கு அவர்கள் கூறுவார்கள்: நாங்கள் தொழுகையாளிகளாக இருக்கவில்லை. நாங்கள் ஏழைகளுக்கு உணவு அளிக்கவுமில்லை. திருக்குர்ஆன்:- 74:42, 43, 44

 

ஒருமுறை இறைவன் இறைத்தூதர் மூசா (அலை) அவர்களிடம், "இன்னான் மிகப் பெரும் பாவி. அவனைப் பிடித்து கொன்றுவிடுவீராக!" என்று கூறினான். இது அவனுக்குத் தெரிந்துவிட்டது. எனவே, அவன் 'தர்மம், சோதனைகள் மற்றும் விதியைத் தட்டிவிடும்' எனக் கருதி, சில ரொட்டிகளைத் தயாரித்து ஏழைகளுக்குக் கொடுத்து வந்தான். மூசா (அலை) அவர்கள் அவனை இறையாணைப்படிக் கொல்வதற்காக எங்கும் தேடித் திரிந்த போதினும், அவன் அன்று செய்த அறத்தின் காரணமாக அவர்களின் கண்களில் தென்படவில்லை.

 

இவ்வாறு ஒரு நாள் இரு நாளல்ல. இருபத்தி நான்கு ஆண்டுகள் அவன் செய்து வந்தான். அதன் காரணமாக, அவன் மூசா (அலை) அவர்களின் எதிரே சென்ற போதினும் அவர்களால் அவனைக் கண்டுகொள்ள இயலாது போய்விட்டது.

 

இருபத்தி நான்கு ஆண்டுகளுக்குப்பின் ஒரு நாள் விதி அதன் வேலையை செய்தது. அன்று அவன் ரொட்டி தயாரித்து ஏழைகளுக்குக் கொடுக்க மறந்துவிட்டான். அன்று மூசா (அலை) அவர்கள், தெருவிலே நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவன் அவர்களின் கண்களில் தென்பட்டதும், அவர்கள் அவனை அக்கணமே வாளால் ஒரே வெட்டாக வெட்டிக் கொன்றுவிட்டார்கள்.

 

அதன்பின் மூசா (அலை) அவர்கள், "இறைவா! அவன் இவ்வளவு காலமாக என் கண்களில் படாது எங்கே ஒளிந்திருந்தான்?" என்று வினவினார்கள். அதற்கு இறைவன், "அவன் எங்கும் ஒளியவுமில்லை. உன் கண் முன்னாலேயே நடமாடிக் கொண்டிருந்தான். அவன் இவ்வளவு காலமாக அறம் செய்து வந்தான். அதன் காரணமாக, நாம் அவனை உன் கண்ணிலிருந்து மறைத்து வைத்திருந்தோம். இன்று அவன் அறம் செய்வதை அசட்டை செய்து மறந்துவிட்டான். எனவே, இன்று அவனை உன் கண்களில் தென்படச் செய்து, உம் கையால் கொலையுறச் செய்தோம்" என்று பதிலளித்தான்.

 

நல்லவர்கள் உண்ணட்டும்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ரொட்டியும் ஆலிவ் எண்ணையும் கொண்டு வந்து உண்ணக் கொடுத்தார். அண்ணலார் உணவருந்திவிட்டு, ( أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلاَئِكَةُ )  "உங்களிடம் நோன்பாளி நோன்பு துறக்கட்டும். உங்கள் உணவை நல்லவர்கள் உண்ணட்டும். வானவர்கள் உங்களுக்காக அருள் வேண்டிப் பிரார்த்திக்கட்டும்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-3356, இப்னுமாஜா-1737, முஸ்னது அஹ்மத், தாரமீ-1707

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (  وَلاَ يَأْكُلْ طَعَامَكَ إِلاَّ تَقِيٌّ ) உனது உணவை இறையச்சம் உடையவர் தவிர வேறெவரும் உண்ண வேண்டாம். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ- 2318

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَيُّمَا مُؤْمِنٍ أَطْعَمَ مُؤْمِنًا عَلَى جُوعٍ أَطْعَمَهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ مِنْ ثِمَارِ الجَنَّةِ ) ஓர் இறைநம்பிக்கையாளர் பசியோடு இருக்கும் மற்றொரு இறைநம்பிக்கையாளருக்கு உணவளித்தால்மறுமை நாளில் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் கனிகளை உண்ணச் செய்வான். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2373


பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் நல்லோர்களுக்கு உபகாரம் செய்கிறாரோ அவர் அவர்களை அடிமையாக்கிக்கொள்கிறார். எவர் கீழ்த்தரமான மனிதனுக்கு உபகாரம் செய்கிறாரோ அவர் அவனுடைய பகைமையை தன் பக்கம் இழுத்துக் கொள்கிறார். நூல்:- கன்ஸுல் உம்மால்

 

ஒருவர் எப்போதும் தமது உணவை சூபி மகான்களுக்கும் விருந்தளிப்பார். மற்றொருவர், "நீர் பொதுவான ஏழை எளியவருக்கு உணவளித்தால் மேலானதாக இருக்குமே!" என்றார். அதற்கவர், "அவர்களின் முழு சிந்தனையோ அல்லாஹ்வின் பக்கம் இருக்கிறது. அவர்களுக்கு பசிக்குமாயின் அவர்களின் சிந்தனையில் இடையூறு விளையும். ஒருவருடைய சிந்தனையை அல்லாஹ்வுடன் இணைந்திருப்பதில் நான் உதவியாய் இருப்பது, உலக சிந்தனையிலேயே முழு கவனமாய் மூழ்கியிருக்கும் ஓராயிரம் மனிதர்களுக்கு உணவளிப்பதை காட்டிலும் சிறந்ததாக கருதுகிறேன்" என்றார். இதை செவியுற்ற ஜுனைத் அல்பக்தாதி (ரஹ்) அவர்கள் இக்கருத்தை மிகவும் சிலாகித்து போற்றினார்கள்.

 

பசி தேவை என்று வரும்போது மனிதநேய அடிப்படையில் யாருக்கேனும் உணவும் உதவியும் வழங்கிட வேண்டும். விரும்பி அழைக்கும் விருந்துகளில் நல்ல இறையச்சமுடைய நல்லடியார்கள் கலந்து கொள்ளுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இறையச்சமுடையவர் உண்டால் இறைவழிபாடு செய்வதற்கு அந்த உணவு பயன்படும்.

 

நம்முடைய உணவை ஓர் இறைமறுப்பாளன் உண்ணுவதைவிட ஓர் முஸ்லிம் உண்ணுவது சிறந்தது. சாதாரண ஓர் முஸ்லிம் உண்ணுவதைவிட தொழுகை வணக்கம் போன்றவற்றை பேணுதலுடன் நிறைவேற்றும் ஓர் இறையச்சமுள்ளவர் உண்ணுவது சிறந்தது. ஓர் இறையச்சமுள்ள பாமரன் உண்ணுவதைவிட ஓர் இறையச்சமுள்ள மார்க்க அறிஞர் (ஆலிம்) உண்ணுவது சிறந்தது.

 

பாவங்களை அழித்துவிடும்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ ) தண்ணீர், நெருப்பை அணைப்பதைப் போன்று தானதர்மங்கள் பாவங்களை அழித்துவிடும். அறிவிப்பாளர்:- முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2538, இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பனூ இஸ்ரவேலர்களில் ஓர் இறைநேசர் காட்டுப்பகுதியில் சிறிய குடில் அமைத்து தங்கி 60 ஆண்டுகளாக இறைவணக்கம் செய்து வந்தார். சில நேரங்களில் அந்தத் துறவி தன் இருப்பிடத்தை விட்டு வெளியே (வந்து சிறிது நேரம் உலாவுவார் பின்னர் சென்று) விடுவார். அவ்வாறு வரும்போது, "நான் என் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்தாலும் எப்போதும் இறைநினைவிலேயே இருப்பேன்; நன்மைகளை இன்னும் அதிகமாக செய்வேன்" எனச் சொல்லிக்கொள்வார்.

 

(இவ்வாறு வரும்போது ஒரு சமயம்) ஒரு பெண்ணைப் பார்த்தார். அவளோடு பேசினார். இப்பேச்சு காதலானது. காதலின் உச்சத்தில் அவர் அப்பெண்ணோடு ஆறு இரவுகளை கழித்தார். பிறகு அவர் தன் நிலையை உணர்ந்து தன் இருப்பிடத்திற்கு வந்துவிட்டார். மூன்று தினங்கள் கவலையோடு உணவேதும் உண்ணாமல் இருந்தார். அச்சமயம் தம் கையிலிருந்த ஒரு ரொட்டியை உடைத்து இரண்டு யாசகர்களுக்கு தர்மம் அளித்தார். அதன் பிறகு அல்லாஹ் அவருடைய உயிரைக் கைப்பற்றி வருமாறு வானவரை அனுப்பினான். அவர் ஆன்மா இறைவனிடம் வந்ததும், அவருடைய 60 வருட நன்மைகளை ஒரு தட்டிலும், அவர் செய்த விபச்சாரத்தின் தீமையை ஒரு தட்டிலும் வைத்து நிறுத்தப்பட்டது. விபச்சாரத்தின் தீமை வைத்து நிறுக்கப்பட்ட தட்டே அதிகம் கனத்தது.

 

பின்னர் அறுபது வருட நன்மைகளோடு இரு அரை (ஒரு) ரொட்டித் துண்டுகளின் நன்மையையும் அத்துடன் சேர்த்து நிறுத்து பார்க்கப்பட்டபோது,  விபச்சாரத்தின் தீமையை வைத்து நிறுக்கப்பட்ட  தட்டைவிட இப்போது நன்மைகள் வைத்து நிறுக்கப்பட்ட தட்டு கனத்தால் கீழிறங்கியது. உடனே அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டது. நூல்:- பைஹகீ, இப்னு ஹிப்பான்

 

இந்த இறைநேசர் அறுபது  ஆண்டுகளாக செய்துவந்த தொழுகை, நோன்பு, இறை தியானம் போன்ற இறைவணக்கங்களில் கிடைத்த நன்மைகளின் எடையைவிட தர்மத்தின் எடை  கனமாக இருந்ததால் அவர் பாவம் மன்னிக்கப்பட்டது. எனவே, எடை அதிகமுள்ள நன்மையைத் தரும் உணவு தர்மத்தை தாராளமாக வழங்க வேண்டும்.

 

நீங்காமல் நிலைத்திருக்கும்

 

அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். ( اَطعِمُوا المِسکِینَ یَربُو کَسبُکُم ) ஏழைகளுக்கு உணவு கொடுங்கள். உங்கள் வருமானம் பெருகிவிடும். அறிவிப்பாளர்:- அபூமதர் (ரஹ்) அவர்கள் நூல்:- பைஹகீ, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-752

 

இறைத்தூதர் மூசா (அலை ) அவர்களின் காலத்தில் ஒரு தம்பதியினர் நீண்ட நெடுங்காலமாக வறுமையோடே வாழ்ந்து வந்தனர். வறுமையின் துயரத்தை தாங்கமுடியாத நிலை ஏற்பட்டபோது, தங்களுடைய வறுமை நிலையை மூசா (அலை) அவர்களிடம் எடுத்துரைத்து நபியவர்களை தங்களுக்காக பிரார்த்திக்கும்படி வேண்டிக்கொண்டனர். மூசா (அலை) அவர்களும் அந்தத் தம்பதியினர் நலன் கருதி பிரார்த்தித்தார்கள்.

 

அப்போது இறைவன், “அவர்களின் வறுமை அகல இன்னும் ஒரு ஆண்டுகள் ஆகும். அதன்பின் அவர்களுக்கு செல்வத்தை கொடுப்பேன். அந்த செல்வநிலை அவர்களிடம் ஒரு வருடம்தான் இருக்கும்” என்று கூறினான்.  


இறைவன் கூறியபடி, ஓராண்டு காலம் கடந்த பிறகு அவர்களிடம் செல்வம் கொழித்தது. ஓராண்டை கடந்து பல ஆண்டுகளாக செல்வம் நிலைத்து நின்றது. இதைப் பார்த்த மூசா (அலை) அவர்கள், "இறைவா! வறுமையில் வாடிய அந்த தம்பதியருக்கு ஓர் ஆண்டுதான் செல்வம் நிலைத்திருக்கும். அதன்பிறகு நீங்கிவிடும் என்று சொன்னாயே, ஆனால் பல ஆண்டுகள் கடந்த பிறகும் அவர்கள் செல்வநிலை நீங்காமல் நிலைத்திருக்கிறதே, அவர்கள் அப்படி என்ன நற்காரியம் செய்தார்கள்? எதனால் உன்னுடைய நாட்டம் மாறியது?" என வினவினார்கள்.

 

இறைவன், "நான் கொடுத்த ஓராண்டு செல்வத்தில் மாளிகை ஒன்றை கட்டி, அதற்கு ஏழு வாசல்களை அமைத்தார்கள். அந்த ஏழு வாசல்களிலும் தினந்தோறும் ஏழை எளியோருக்கு உணவு வழங்கினார்கள். இதன்மூலம் பலரின் கஷ்டங்களை நீக்கினார்கள். இதன் பிறகு, அவர்களுக்கு கொடுத்ததை நிறுத்துவதற்கு எனக்கு மனமில்லை. அந்தக் காரியத்தைச் செய்வதற்கு நான் வெட்கப்படுகிறேன். எனவே, செல்வத்தை தொடர்ந்து அவர்களுக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறேன்" என்று கூறினான்.

 

உமர் (ரலி) அவர்கள் சுஹைப் ரூமி (ரலி) அவர்களிடம், சாப்பாட்டு விஷயத்தில் அளவுக்குமீறி செலவழிப்பதாக குறைபட்டுக் கொண்டார்கள். அதற்கு சுஹைப் (ரலி) அவர்கள், ( خَيرُكُمْ مَنْ أَطْعَمَ الطعامَ ) "பசித்தவருக்கு உணவளிப்பவரே உங்களில் மிகச் சிறந்தவர்” என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன். எனவே, பிறருக்கு உணவளிக்கும் விஷயத்தில் தாராளமாக செலவழிப்பது எனக்கு சந்தோசம்தான் (நான் அதை விரயமாக எண்ணவில்லை) என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், ஹாகிம், இப்னு ஹிப்பான், தப்ரானீ, உசுதுல் ஙாபா

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وأحبُّ الأعمالِ إلى اللَّهِ سُرورٌ تُدخِلُهُ علَى مُسلمٍ أو تكشِفُ عنهُ كُربةً أو تطردُ عنهُ جوعًا أو تقضي عنهُ دَينًا ) ஒரு முஸ்லிம் சகோதரனின் உள்ளத்தில் மகிழ்ச்சியை நிரப்புவது அல்லது அவரின் (தேவையை நிறைவேற்றி) சிரமத்தைப் போக்குவது அல்லது அவரது பசியை போக்குவது அல்லது அவருடைய கடனை அடைப்பது தான் அல்லாஹ்விடம் மிகச் சிறந்த நற்செயலாகும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்கள் நூல்:- பைஹகீ, இப்னு அபித்துன்யா, இப்னு அதீ, தாரிக் திமிஷ்க் இமாம் இப்னு அசாகிர்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து தன்னுடைய உள்ளம் மென்மையாக இல்லையென முறையிட்டார். அண்ணலார், ( أَطْعِمِ الْمِسْكِينَ وَامْسَحْ رَأسَ الْيَتِيمِ ) "(உங்கள் உள்ளத்தை மென்மையாக்கிக்கொள்ள விரும்பினால்) எளியோருக்கு உணவளியுங்கள். அனாதை குழந்தைகளின் தலையை வருடிக் கொடுங்கள்" என்று ஆலோசனை கூறினார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், பைஹகீ, மஜ்மஉஸ் ஸவாயித், ஃபத்ஹுல் பாரீ

 

நன்மையின் தட்டு கனமானது  

 

அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அளிப்பான். எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகின்றார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். திருக்குர்ஆன்:- 65:3

 

(இஸ்லாமியப் பெருங்குடி மக்களின் இரண்டாம் தலைமுறை) எனும் தாபிஈன் காலம் அஹ்மத் பின் மிஸ்கீன் (ரஹ்) அவர்களின் மாணவர் அபூ நஸ்ரு தனது மனைவி மக்களுக்கு போதிய உணவு வழங்க முடியாத அளவுக்கு வறுமையில் வாடினார். தனது ஆசிரியரின் வழிகாட்டுதல்படி மீன் பிடிக்க சென்று பிடிப்பட்ட மீன்களை விற்று, தனது மனைவி மக்களுக்காக இரண்டு உணவுப் பைகளை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இடையில் ஒரு பெண் பச்சிளங்குழந்தையை தூக்கி கொண்டு அழுதபடி இவரிடம் வந்து, பசியால் பல நாட்கள் அவஸ்தைபட்டு வருகிறோம். எங்களுக்கு உண்ண ஏதேனும் தாருங்கள் என்று கேட்டாள்.

 

இந்த அபலைப் பெண்ணின் நிலையில்தான், தனது மனைவி மக்களும் இருக்கிறார்கள். இருப்பதோ இரண்டு உணவுப் பை. என்ன செய்வது? என்று யோசித்துவிட்டு, அந்த உணவுப் பையை அப்பெண்ணிடமே கொடுத்து விட்டு வெறுங்கையோடு வீட்டிற்கு வந்தார். 


அவர் வீட்டிற்கு வந்த கொஞ்ச நேரத்திற்குள் ஒருவர் வந்து, ( إِنَّ أَبَاكَ كَانَ قَدْ أَقْرَضَنِي مَالًاً مُنْذُ عِشْرِينَ سَنَةً ثُمَّ مَاتَ وَ لَمْ أَسْتَدِلَّ عَلَيْهِ، خُذْ يَا بَنِي هَذِهِ الثَّلَاثِينَ أَلْفَ دِرْهَمٍ مَالَ أَبِي ) "உங்கள் தந்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கடன் கொடுத்து உதவினார். அவரும் இறந்துவிட்டார். அதைத் திருப்பி தர இயலாமல் போனேன். (இப்போது அதைக் கொண்டு வந்துள்ளேன். இதோ!) உங்கள் தந்தைக்கு கொடுக்கவேண்டிய முப்பதாயிரம் வெள்ளிக்காசுகளைப் பெற்றுக்கொள்வீராக" என்று கூறி கொடுத்துவிட்டு சென்றார். பிறகு இவரின் நிலை செல்வ செழிப்பாக மாறிப்போனது.


பிறகு இவர் ஒருநாள் இரவு கனவில் மறுமைநாளை கண்டார். அதில் இவருடைய நன்மை தீமைகள் நிறுக்கப்பட்டன. உணவு  கிடைத்துவிட்டது என்றெண்ணி சந்தோஷப்பட்ட அந்த குழந்தையின் சந்தோஷத்தை நன்மையில் தட்டில் வைத்தபோது நன்மை தட்டு கனமாகிப்போனது.

 

எவர்களுடைய நன்மையின் எடை கணக்கிறதோ அவர்கள்தான் வெற்றி அடைவார்கள்.     திருக்குர்ஆன்:- 23:102

 

ஆர்வமூட்ட வேண்டும்

 

(பின்னர் நாம்) "அவனைப் பிடியுங்கள், அவனுக்கு விலங்கிடுங்கள்; அவனை நரகத்தில் தள்ளுங்கள் என்றும், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" என்றும் (கூறுவோம்). நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வையே நம்பிக்கைக் கொள்ளவில்லை. ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன், பிறரையும்) உணவளிக்கும்படி அவன் தூண்டவில்லை. திருக்குர்ஆன்:- 69:30, 31, 32, 33, 34

 

இந்த வசனங்கள் ஓர் அடியான் வாழும் காலத்தில் 1.இறைநம்பிக்கை கொள்ளவில்லை. 2.ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை. பிறரையும் உணவளிக்க தூண்டவுமில்லை. ஆகிய இரண்டு நற்காரியங்களை செய்யாததால் மறுமைநாளில் நரகத்தில் சிக்கிக்கொள்கின்ற பரிதாபத்திற்குரிய காட்சிகளை இது விவரிக்கிறது.

 

அபூதர்தா (ரலி) அவர்கள் இந்த வசனங்களை தமது குடும்பத்தினருக்கு ஓதிக்காட்டி, "நாம் இறைநம்பிக்கை கொண்டுவிட்டதால் பாதி சங்கிலியிலிருந்து விடுபட்டுவிட்டோம். மீதியிருக்கின்ற பாதியிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால், பிறருக்கு உணவளித்துக் கொண்டே இருக்கவேண்டும். பிறரையும் உணவளிக்க தூண்டிக்கொண்டே இருக்கவேண்டும்" என்று சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்.

 

இறைநேசச் செல்வர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி  (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ( قِمَّةٌ فِي بَطْنٍ جَائِعٍ خَيْرٌ مِنْ بِنَاءِ أَلْفِ جَامِعٍ . وَخَيْرٍ مِمَّنْ كَسَا الْكَعْبَةَ وَأَلْبَسَهَا الْبَرَاقِعَ . وَخَيْرَ مِمَّنْ قَامَ لِلَّهِ رَاكِعٌ . وَخَيْرَ مِمَّنْ جَاهَدَ لِلْكُفْرِ بِسَيْفِ مُهَنَّدٍ قَاطِعٌ . وَخَيْرَ مِمَّنْ صَامَ الدَّهْرَ وَالْحُرُّ وَاقِعٌ . وَإِذَا نَزَلَ الدَّقِيقُ فِي بَطْنٍ جَائِعٍ لَهُ نُورٌ كَنُورُ الشَّمْسِ سَاطِعٌ . فَيَا بُشْرَى لِمَنْ أَطْعَمَ جَائِعٍ )மக்களே! பசித்தவனுக்கு ஒரு கவளம் உணவளிப்பது ஆயிரம் பள்ளிவாசல்கள் எழுப்புவதை விடவும், கஅபாவின் மீது போர்வைகளையும், அலங்காரச் சீலைகளையும் அணிவிப்பதை விடவும், இரவு முழுதும் அல்லாஹ்வுக்காக குனிந்து வணக்கத்தில் ஈடுபடுவதை விடவும், இறைமறுப்பை எதிர்த்து கூரிய வாளோடு அறப்போர் புரிவதை விடவும், கடும் வெயிலில் பகலெல்லாம் நோன்பு நோற்பதை விடவும் பன்மடங்கு மேலான காரியமாகும். பசித்தவன் வயிற்றில் ஒரு கவள உணவு விழுந்ததும், பிரகாசிக்கும் சூரியனின் ஒளி போன்ற ஒளி அதற்குண்டாகிறது. பசித்தோனுக்கு உணவளிப்போனே! உமக்கு சுபசோபனம் உண்டாகட்டும்!

 

( أَوَدُّ لَوْ كَانَتِ الدُّنْيَا بِيَدِي أَطْعِمُهَا الْجَائِعَ ) அகிலம் முழுவதும் உள்ள எல்லா புதையல்களும் எனக்கு கொடுக்கப்பட்டாலும், அவை அனைத்தையும் பசித்தோனுக்கு உணவளிப்பதிலேயே செலவளிப்பேன். ( فُتِّشَتِ الْأَعْمَالُ كُلُّهَا فَمَا وُجِدَتْ فِيهَا أَفْضَلُ مِنْ إِطْعَامِ الطَّعَامِ ) அனைத்து நற்செயல்களையும் ஆராய்ந்து பார்த்தேன். பசித்தவனுக்கு உணவளிப்பதைவிட சிறந்த நற்செயலாக எதையும் காணவில்லை. நூல்:கலாயிதுல் ஜவாஹிர், தாரீக் இப்னு நஜ்ஜார், தத்கிரதுல் அவ்லியா

 

பிறரின் பிரார்த்தனை கிடைக்கும்

 

சஅத் பின் உபாதா (ரலி)  அவர்கள் அதிகமாக ஏழைகளுக்கு உணவளிப்பவர். ஒருமுறை அவருடைய உணவுக்கொடையைக் கண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்கள், "இறைவா! உன் ரஹ்மத்தையும், அருளையும் சஅத் பின் உபாதா உடைய சந்ததிகளுக்கும் வழங்குவாயாக" என்று  பிரார்த்தனை செய் துள்ளார்கள்.

 

திண்ணைத் தோழர்களுக்கு யாராவது உணவு கொடுக்கிறீர்களா? அல்லது மக்காவாசிகளுக்கு யாராவது உணவு கொடுக்கிறீர்களா? என்று அறிவிப்புச் செய்தால், மற்றவர்கள் ஓரிரு ஆட்களைத்தான் அழைத்துச் செல்வார்கள். ஆனால், சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் ஒரே நேரத்தில் 80 பேரை அழைத்துச் செல்வார்கள்.  நூல்:- அல்இசாபா

 

எனவே, நாம் பசித்தோருக்கு பசியாற்றி, படைத்தவனின் பரிவைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...