Search This Blog

Saturday, 31 October 2020

எச்சரிக்கை செய்வோம்

 

எச்சரிக்கை செய்வோம்

وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ


(நபியே) உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!      திருக்குர்ஆன்:- 26:214


குடும்பத் தலைவன் குடும்ப உறுப்பினர்களிடம் அதாவது, மனைவி பிள்ளைகள் மற்றும் தனது கட்டுப்பாட்டின் கீழ்இருப்பவர்களிடம், இஸ்லாமிய நல்லொழுக்க வாழ்வின் சிறப்புகளைப் பற்றியும், இறைகடமைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியத்தைப் பற்றியும்  அன்பாக எடுத்துரைக்க வேண்டும். தமது குடும்பத்தினர் இஸ்லாமிய கொள்கைக்கு எதிராக செயல்படும்போது எச்சரிக்கை செய்து, அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இது குடும்பத் தலைவன் மீதுள்ள தார்மீக கடமையாகும். 


காரணம், மறுமைநாளில் இறைவன் நம்மிடம் "உலக வழக்கத்திற்கு உன் குடும்பத்தினர் மாறு செய்தபோது நீ கோபமுற்றாய்! எனினும் எமக்குரிய கடமையை நிறைவேற்றாமல் எமது தூதரின் வழிமுறைக்கு மாறு செய்தபோது நீ கோபமுற்றாயா? அவர்களை சீர்திருத்தம் செய்ய முயற்சி செய்தாயா?" என்று விசாரணை செய்வான் என்பது உறுதி.


பகிரங்க பிரச்சாரம்


தலைப்பில் காணும் (26:214) திருவசனம் அருளப்பெற்ற போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறைஷியரை ஓரிடத்திற்கு அழைத்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினர்.


அப்போது பொதுவாகவும் தனித் தனியாகவும் பெயர் குறிப்பிட்டு, "கஅப் பின் லுஅய்யின்  மக்களே! முர்ரா பின் கஅபின் மக்களே! அப்துஷ் ஷம்சின் மக்களே! அப்து முனாஃபின் மக்களே! அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (என் மகள்) பாத்திமாவை உன்னை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்! ஏனென்றால் அல்லாஹ்விடமிருந்து வரும் (முடிவாகிவிட்ட சோதனை) எதிலிருந்தும் உங்களை காக்க என்னால் இயலாது" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:-  அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2753 முஸ்லிம்-348, நஸாயீ-3584


அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( يَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ سَلِينِي مَا شِئْتِ مِنْ مَالِي، لاَ أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا ) "முஹம்மதின் புதல்வியான பாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதை என்னிடம் கேள்! (தருகிறேன்). ஆனால், அல்லாஹ்விடமிருந்து, உன்னை என்னால் ஒரு சிறிதும் காப்பாற்ற முடியாது" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-4771, முஸ்லிம்-351,திர்மிதீ-2232, நஸாயீ-3587


இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து, தீமைகளை கைவிட்டு வாழ்வதன் மூலமே ஒருவர் மறுமையில் நல்வாழ்வு பெற முடியும்; இறைவனின் வேதனையிலிருந்து அவர் தப்பிக்க முடியும். இது பொதுவான விதியாகும். இதில் யாருக்கும் விதி விலக்கு கிடையாது. நபியவர்களின் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும், எவ்வளவு பெரிய அந்தஸ்து உள்ளவராக இருந்தாலும் சரியே! யார் இந்த சட்டத்தை மீறினாலும் இறைவனின் தண்டனையிலிருந்து அவர்கள் தப்ப முடியாது.


நான் வேண்டுமானால் இம்மை வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவலாம். அல்லாஹ்வின் பிடியிலிருந்து உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள். அதற்காக இறைக் கட்டளைப்படி நடந்து வாருங்கள் என்பதே இந்த நபிமொழியின் கருத்தாகும். இஸ்லாத்தில் இவ்வுலகச் சட்டங்களில் மட்டுமின்றி, மறுமை வாழ்விலும்கூட பிறவி வித்தியாசம் காட்டப்படமாட்டாது என்பதற்கு இது வலுவான ஆதாரம் ஆகும்.


வாதம் புரியாதே!


அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடமும் (அவர்களது மகளார்) பாத்திமா (ரலி) அவர்களிடமும் இரவு நேரத்தில் வந்து ( أَلاَ تُصَلِّيَانِ ) "நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?" என்று கேட்டார்கள். நான், ( يَا رَسُولَ اللَّهِ، أَنْفُسُنَا بِيَدِ اللَّهِ، فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا ) "நாயகமே! எங்களது உயிர் அல்லாஹ்வின் கையில் உள்ளது. அவன் எங்களை(த் தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் அவன் எழுப்பிவிடுவான்" என்று கூறினேன். நான் இவ்வாறு கூறியதும் அண்ணலார் (எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல்) திரும்பிச் சென்றார்கள். அவர்கள் திரும்பிச் சென்றபோது தமது தொடையில் தட்டியவாறே (நான் உடனே பதில் சொன்னதை எண்ணி) ( وَكَانَ الإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلاً ) "மனிதன் அதிகமாக வாதம் புரிபவனாகவே இருக்கின்றான்" எனும் (18:54) வசனத்தைக் கூறியபடியே சென்றார்கள்.          நூல்:- புகாரீ -1127, முஸ்லிம்-1424, நஸாயீ-1593, முஸ்னது அஹ்மது,  இப்னுகுஸைமா, இப்னு ஹிப்பான்


அவர் (நபி இஸ்மாயீல் – அலை) தொழுகையைக் கடைபிடித்தொழுகும்படியும், ஸகாத்தும் கொடுத்து வரும்படியும் தன் குடும்பத்தினரை ஏவிக்கொண்டிருந்தார். அவர் தன் இறைவனால் மிகவும் விருப்பப்பட்டவராகவும் இருந்தார்.  திருக்குர்ஆன்:- 19:55


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( رحِمَ اللَّه رَجُلا قَامَ مِنَ اللَّيْلِ، فصلىَّ وأيْقَظَ امرأَتهُ، فإنْ أَبَتْ نَضحَ في وجْهِهَا الماءَ، رَحِمَ اللَّهُ امَرَأَةً قَامت مِن اللَّيْلِ فَصلَّتْ، وأَيْقَظَتْ زَوْجَهَا فإِن أَبي نَضَحَتْ فِي وجْهِهِ الماءَஅல்லாஹ் ஒரு மனிதருக்கு அருள்புரிவானாக! அவர் இரவில் எழுந்து (தாமும்) தொழுது தம் (மனைவியையும்) தொழுவதற்காக எழுப்ப, அவளும் தொழுகிறாள். அவள் எழ மறுத்தால் அவளுடைய முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புகிறார். (அத்தகைய மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!)


(அவ்வாறே) ஒரு பெண்மணிக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! அவள் இரவில் எழுந்து (தானும்) தொழுது தன்னுடைய கணவரையும் தொழுவதற்காக எழுப்ப, அவரும் எழுந்து தொழுகிறார். அவர் எழ மறுத்தால் அவருடைய முகத்தில் தண்ணீரைத் தெளித்து எழுப்புகிறாள். (அத்தகைய பெண்மணிக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!)        அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூது-1113, நசாயீ-1592, இப்னுமாஜா-1226, இப்னுகுஸைமா, இப்னுஹிப்பான், ஹாக்கிம்


அடக்கவிடத்திற்கு பெண்கள்


அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) நாங்கள் (பிரேதம் ஒன்றை அடக்கம் செய்துவிட்டு) நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தோம். வரும் வழியில் பாத்திமா (ரலி) அவர்களை கண்டோம். அண்ணலார், பாத்திமா (ரலி) அவர்களை அழைத்து,  ( مَا أَخْرَجَكِ مِنْ بَيْتِكِ يَا فَاطِمَةُ )"பாத்திமா (இந்நேரத்தில்) நீர் வீட்டிலிருந்து வெளியேறக் காரணம் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு பாத்திமா (ரலி) அவர்கள், "இறந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்று வந்தேன்" என்று பதிலளித்தார்கள். அப்போது அண்ணலார், ( لَعَلَّكِ بَلَغْتِ مَعَهُمُ الْكُدَی ) "நீரும் அவர்களுடன் அடக்கவிடத்திற்குச் சென்றீர் போலும்?" என்று கேட்டார்கள்.


அதற்கு பாத்திமா (ரலி) அவர்கள், "நான் அவர்களுடன் அடக்கவிடத்திற்குச் செல்வதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்; இது தொடர்பாக நீங்கள் கூறியவற்றை தங்களிடமிருந்து நான் (ஏற்கனவே) செவியுற்றுள்ளேனே" என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார்,  ( لَوْ بَلَغْتِهَا مَعَهُمْ مَا رَأَيْتِ الْجَنَّةَ حَتَّى يَرَاهَا جَدُّ أَبِيكِ ) "அவர்களுடன் நீரும் அடக்கவிடத்திற்குச் சென்றிருந்தால் உமது தந்தையின் பாட்டனார் சொர்க்கத்தைக் காணும் வரை நீர் சொர்க்கத்தைக் காண மாட்டீர்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூது-2716, நஸாயீ-1857, முஸ்னது அஹ்மது, இப்னுஹிப்பான், ஹாகிம், பைஹகீ


(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) அடக்கவிடத்திற்கு செல்வது பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது. அடக்கவிடத்திற்கு செல்லும் பெண்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். (திர்மிதீ-976) என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.


அதனால்தான் அண்ணலார் பாத்திமா (ரலி) அவர்களிடம், "உனது தந்தையின் பாட்டனார் அதாவது அப்துல் முத்தலிப் சொர்க்கத்தைக் காணும் வரை நீரும் சொர்க்கத்தைக் காண முடியாது" என்று கூறியுள்ளார்கள். அப்துல் முத்தலிப் இறைமறுப்பாளராகவே இறந்தார். எனவே, அவர் சொர்க்கம் செல்லமாட்டார். 'அவ்வாறே நீரும் சொர்க்கம் செல்ல முடியாது' என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். நூல்:- தகீரத்துல் உக்பா


ஒருமுறை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), மிக்தாது (ரலி) ஆகியோருக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மிக்தாது (ரலி) அவர்களை திட்டிவிட்டார். உடனே மிக்தாது (ரலி) அவர்கள் இதைப்பற்றி (அவரின் தந்தை (உமர் - ரலி) அவர்களிடம் முறையிட்டார். உமர் (ரலி) அவர்கள், "(தனது மகனான) அவரின் நாவை நான் வெட்டுவேன்" என்று நேர்ச்சை செய்தார்கள்.


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், இதனால் தனது தந்தைக்குப் பயந்து பல நபர்களை சந்தித்து (தனக்காக தனது தந்தையிடம்) சிபாரிசு செய்யுமாறு வேண்டிக் கொண்டார். அவ்வாறே அவர்கள் சிபாரிசு செய்தபோது உமர் (ரலி) அவர்கள், ( دَعَونِی حَتَّی اَقطَعَ لِسَانَهُ حَتَّی لَا یَشتِمَ بَعدُ اَحَدًا مَّن اَصحَابِ رَسُولِ اللّٰهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ )  "என்னை விட்டுவிடுங்கள். நிச்சயமாக நான் (எனது மகனாக இருந்தாலும் சரி) அவரின் நாவை வெட்டுவேன். எனக்குப்பின் தோன்றுவோருக்கு இது ஓர் நல்ல வழி முறையாக அமைய வேண்டும். அதன்மூலம் எவர் நபித்தோழர்களை திட்டினாலும் அவரின் நாவு துண்டிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மது, முன்தகப் கன்ஸுல் உம்மால், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம் - 2 பக்கம்- 540


எண்ணிக் கொண்டிராதே!


அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَنْفِقِي، أَو انْفَحِي، أَو انْضِحِي، وَلا تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَلَيكِ، وَلا تُوعِي فيُوعِيَ اللَّهُ عَلَيْكِநபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் என்னிடம், "அள்ளி வழங்குவாயாக! அல்லது (தாராளமாக நல்வழியில்) செலவழிப்பாயாக! எண்ணி எண்ணி(ச் செலவழித்து)க் கொண்டிராதே! (அப்படி செலவு செய்தால்) அல்லாஹ் உனக்கு எண்ணியே தருவான். கஞ்சத்தனமாகப் பையில் (முடிந்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் அல்லாஹ்வும் உன் விஷயத்தில் (தனது அருள் வளங்களைப் புரியாமல் தனது) பையை முடிந்து வைத்துக் கொள்வான்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-1433 முஸ்லிம்-1866


கஞ்சத்தனம் செய்து கையை இறுக்கினால் இறைவனும் இறுக்கிக் கொள்வான். தீர்ந்துவிடும் என்ற அச்சம்தான் தர்மத்திற்குத் தடையாக உள்ளது. அந்த அச்சமே அருள்வளம் (பரக்கத்) துண்டிக்கப்பட காரணமாகிறது.


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரி (அக்காள்) தான், இந்த அஸ்மா (ரலி) அவர்கள். அண்ணலாருக்கு இவர்  கொழுந்தியாள் என்ற உறவு முறையாகும். நல்வழியில் செலவு செய்வதற்கு கஞ்சத்தனம் கூடாது. கஞ்சத்தனத்தால் அல்லாஹ்வின் அருள் வளம் தடைபட்டுப் போகும் என்று அண்ணலார் இந்த அம்மையாருக்கு எடுத்துரைக்கிறார்கள்.


தார்மீக கடமை


இறைநம்பிக்கையாளர்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை, மனிதர்களும் கற்களுமாகும். திருக்குர்ஆன்:- 66:6


அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். மேற்காணும் (66:6) இந்த வசனத்தில் –    ( أَدِّبُوهُمْ عَلِّمُوهُم ) உங்களின் குடும்பத்தினருக்கு நல்லொழுக்கம் புகட்டுங்கள், நற்கல்வி போதியுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.   நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ஏதேனும் ஒரு காரியத்திலிருந்து பொது மக்களைத் தடுக்க நினைத்தால் முதலில் தமது குடும்பத்தினரிடம் வந்து,   ( لَاَعلَمَنَّ اَحَدًا وَقَعَ فِي شَيءٍ مِمَّا نَهَيتُ عَنهُ اِلَّا اَضعَفتُ لَهُ العُقُوبَةَ ) "நான் தடை செய்த காரியங்களில் உங்கள் எவரேனும் ஈடுபட்டதாக எனக்கு தெரிந்தது என்றால் அவருக்கு இரட்டிப்பு தண்டனை வழங்குவேன்" என்று எச்சரிக்கை செய்வார்கள்.     நூல்:- கன்ஸுல் உம்மால், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம் 2, பக்கம் - 869


ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் இரவு நேரங்களில் உபரியான தொழுகைகள் அதிகம் ஈடுபடுவார்கள். அதிகாலை நெருங்கும்போது தம்முடைய வீட்டில் உள்ளோரையும் (தொழுகைக்காக) எழுப்புவார்கள். பிறகு "(நபியே) தொழுது வருமாறு நீங்கள் உங்கள் குடும்பத்தினரை ஏவுங்கள். நீங்களும் அதன் மீது உறுதியாக இருங்கள்" என்ற திருக்குர்ஆனின் (20:132) வசனத்தை ஓதுவார்கள்.         நூல்:- முஅத்தா இமாம் மாலிக்


ஷிஃபா பின்த் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் சில தேவைகளைக் கேட்டு வந்தேன். ஆனால், அண்ணலார் சில காரணம் கூறி மறுத்துவிட்டார்கள். அப்போது தொழுகையின் நேரம் வந்து விட்டது. நான் அங்கிருந்து வெளியேறி என் மகள் வீட்டுக்குச் சென்றேன். அங்கு அவளின் கணவர் (மருமகன்) ஷுரஹ்பீல் பின் ஹசனா (ரலி) அவர்கள் வீட்டில் இருந்தார். நான் அவரிடம்,  ( قَد حَضَرَتِ الصَّلَاةُ وَاَنتَ فِی البَیتِ )  "தொழுகை நேரம் வந்துவிட்டது; நீர் வீட்டில் இருக்கிறீரே!" என்று அவரைக் கடிந்து கொண்டேன்.


அப்போது அவர், "என் சிறிய தாயாரே! என்னை திட்டாதீர்கள். காரணம், என்னிடம் ஒரே ஓர் ஆடை தான் இருந்தது. அதையும் அண்ணலார் என்னிடமிருந்து இரவலாக வாங்கி கொண்டார்கள்" என்று கூறினார். மேலும் "எங்களிடம் சரி செய்து அணிந்து கொள்வதற்குச் சின்னதொரு ஆடையைத் தவிர வேறில்லை" என்று கூறினார். நூல்:- கன்ஸுல் உம்மால், இஸாபா, ஹாகிம், ஹயாத்துஸ் ஸஹாபா  பாகம் -1 பக்கம் -  424


பெற்றோர் தன்னுடைய மக்கள் சரியாக பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிக்குப் போகவில்லை என்றால் கோபப்படுவது போல், அல்லது உரிய நேரத்திற்கு வேலைக்கு செல்லவில்லை என்றால் கோபப்படுவது போல், அல்லது தான் ஈடுபட்டிருக்கும் வேலையில் தனக்கு ஒத்துழைக்காவிட்டால் கோபப்படுவது போல், தன் மக்கள் சரியாக தொழவில்லை, நோன்பு நோற்கவில்லை, குர்ஆன் ஓதவில்லை, ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளவில்லை எனும்போது இதைவிட அதிகமாக கோபப்பட வேண்டும். அவர்களை முறையாக கண்டிக்க வேண்டும்.


ஒருமுறை அன்னை ஸைனப் பின்த் ஜஹஷ் (ரலி) அவர்கள், அன்னை சஃபிய்யா (ரலி) அவர்களை யூதப்பெண் என்று தரக்குறைவாக பேசி விட்டார். இதனை அறிந்த அருமை நாயகம் ஸல் அவர்கள் ஜைனப் (ரலி) அவர்களின் செயலை கண்டிக்கும் விதமாக அவருடன் இரண்டு மாதங்கள் அண்ணலார் பேசவில்லை. நூல்:- அபூதாவூது, முஸ்னது அஹ்மத் 


தவறு செய்தால்


ஒரு இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும், அன்னை ஸைனப் (ரலி) அவர்களும் வாக்குவாதம் செய்தனர். தொழுகைக்காக 'இகாமத்' சொல்லப்பட்டும்கூட அவர்கள் சப்தமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்விருவரின் சப்தத்தைக் கேட்டுக் கொண்டே சென்றார்கள். பிறகு தொழுகையை முடித்ததும் அபூபக்ர் (ரலி) அவர்கள் (தனது மகளார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து கடுஞ்சொற்களால் அவரைக் கண்டித்தார்கள். மேலும்( أَتَصْنَعِينَ هَذَا"இப்படியா நடந்துகொள்கிறாய்?" என்று கேட்டார்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2898


அபூபக்ர் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் (வருவதற்கு) அனுமதி வேண்டினார்கள். அவர்கள் (வீட்டிற்குள்) நுழைந்த போது ஆயிஷா (ரலி) அவர்களின் உரத்த சப்தத்தைச் செவியுற்றார்கள். அண்ணலாரிடத்தில் சப்தத்தை உயர்த்துபவளாக உன்னை நான் காண்கிறேன் என்று கூறி ஆயிஷாவை அடிப்பதற்காக அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் பிடிக்கலானார். அண்ணலார் அபூபக்ரை (அடிக்க விடாமல்) தடுத்து நிறுத்தினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் கோபமுற்றவராக வெளியே சென்றார். நூல் : அபூதாவூது-4347


நமது பிள்ளை தவறு செய்தால் பாசத்தைக் காரணம் காட்டி கண்டிக்காமல் விட்டு விடுகிறோம். நாளடைவில் பிள்ளைகள் பெரும் பெரும் தவறுகளைச் செய்வதற்கு பெற்றோர்களின் அலட்சியப்போக்கு காரணமாகி விடுகிறது. அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்கள் சில சிறிய சிறிய தவறுகளை செய்யும் போது அதைக் கண்டிக்கும் அக்கரையுள்ள பொறுப்புள்ள தந்தையாக அபூபக்ர் (ரலி) அவர்கள் நடந்து கொண்டார்கள். தன்னாலும் தன் பிள்ளையாலும் யாருக்கும் இடஞ்சல் வந்து விடக் கூடாது என்று கருதினார்கள்.


தொழுகைக்காக 'இகாமத்' சொல்லப்பட்ட பிறகும் தொழுகையைப்பற்றி கவனமில்லாமல் வாக்குவாதம் தொடர்ந்து கொண்டே இருப்பது சரியல்ல. அதுவும் கணவனுக்கு முன்னால் மனைவி தனது குரலை உயர்த்தி காரசாரமாக பேசுவது சிறந்த மனைவிக்கு அழகல்ல. எனவே தான் அபூபக்ர் (ரலி) அவர்கள் தனது மகளை கண்டித்தார்கள்.


சிறு பிள்ளைகள்


அபுல் பக்தரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் மிம்பரில் நின்று உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஹுஸைன் (ரலி) அவர்கள் எழுந்து, "எனது தந்தையின் மிம்பரை விட்டு இறங்குங்கள்" என்று கூறினார். உடனே உமர் (ரலி) அவர்கள், "இது உன் தந்தையின் மிம்பர் தான் எனது தந்தையுடையதல்ல. உன்னை இப்படி கூறச் சொன்னது யார்?" என்று கேட்டார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள் எழுந்து, ( مَا اَمَرَهُ بِهَذَا اَحَدٌ اَمَا لَاُوجِعَنَّكَ يَاغُدَرُ )  "எவரும் அவரை அவ்வாறு கூறுமாறு ஏவவில்லை" என்று கூறிவிட்டு (ஹுஸைன் - ரலி அவர்களை நோக்கி)  "மோசடிக்காரனே! நிச்சயமாக உன்னை  தண்டிப்பேன்" என்றார்கள்.


அப்போது உமர் (ரலி) அவர்கள், "எனது சகோதரர் மகனே! நீர் அவரை தண்டிக்க வேண்டாம். எனது தந்தையின் மிம்பர் என்று அவர் உண்மைதான் கூறியுள்ளார். (ஏனெனில் இது அண்ணல் நபி - ஸல் அவர்களின் மிம்பர் தான்)" என்று கூறினார்கள்.    நூல்:- கன்ஸுல் உம்மால், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம் - 2 பக்கம் -592


நம் வீட்டு சிறுபிள்ளைகள் பெரியவர்களிடத்தில் அல்லது அவர்கள் முன்னிலையில் துடுக்குத்தனமாக எதையாவது பேசிவிட்டால், அதை உடனடியாக பெற்றோர்கள் எச்சரிக்கும் விதமாக கண்டிக்க வேண்டும். இல்லையெனில், இந்த பிள்ளை யாரோ சொல்லிக் கொடுத்ததை பேசுகிறது என்று அவர்கள் தவறாக விளங்கக்கூடும். எனவே, சிறுபிள்ளை தானே பேசுகிறது இதையெல்லாம் யாராவது வினையமாக எடுத்துக்கொள்வார்களா? என்று அதை சாதாரணமாக எண்ணக்கூடாது. இது போன்றதை உடனக்குடன் கண்டிக்க வேண்டும். இதுவே ஒழுக்கப் போதனையாகும்.


நல்லதை எடுத்துரைத்து, தீயதை தடுக்கக்கூடிய திருப்பணியை நமது வீட்டிலிருந்து துவங்க வேண்டும். அதற்குரிய போதிய ஆற்றலை  அல்லாஹ் நமக்கு தந்தருள் புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

இறுதிவரை இறைநம்பிக்கை வேண்டும்

 

இறுதிவரை இறைநம்பிக்கை வேண்டும்

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

எங்கள் இறைவா! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பிறகு, (அதிலிருந்து) எங்கள் உள்ளங்களைப் பிறழச் செய்துவிடாதே. எங்களுக்கு உன்னிடமிருந்து (விசேஷ) அருளை வழங்குவாயாக. நீயே வாரி வழங்குபவன் ஆவாய். திருக்குர்ஆன்:- 3:8

அனைத்து காரியத்திலும் இறுதிமுடிவு எப்படி என்பதைப் பொறுத்து அதற்கு மரியாதை கிடைக்கும். முடிவு நல்லதாக இருந்தால் வரவேற்பு கிடைக்கிறது. இல்லையெனில் அது கவனிக்கப்படுவதில்லை. இதுபோன்றுதான் மனித வாழ்க்கையும். அவனது  இறுதி முடிவை பொறுத்துத்தான் அவன் நல்லவா? அல்லது கெட்டவா? என்று சொல்ல முடியும் என இஸ்லாம் இயம்புகிறது.

மனிதன் தன்னுடைய இறுதி முடிவு குறித்து கவனமாக இருக்குமாறும், அதுபற்றி அடிக்கடி சிந்திக்குமாறும் திருக்குர்ஆனும் நபிமொழிகளும் பல இடங்களில் வலியுறுத்துகிறது.

ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரகீ (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( اَللَّهُمَّ أَحْيِنَا مُسْلِمِينَ وَأَمِتْنَا مُسْلِمِينَ، وَأَلْحَقْنَا بِالصَّالِحِينَ، غَيْرَ خَزَايَا وَلَا مُبْدِّلَيْنِ ) "இறைவா! முஸ்லிம்களாகவே எங்களை வாழச் செய்வாயாக! முஸ்லிம்களாகவே எங்களை மரணிக்கச் செய்வாயாக! நல்லோருடன் எங்களைச் சேர்ப்பாயாக! இழிவுக்குள்ளாகாமலும் மாறுதலுக்கு ஆளாகாமலும் (எங்களை வாழ வைப்பாயாக)" என்று பிரார்த்தித்தார்கள்.                     நூல்:- முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கசீர் அஷ்ஷுஅரா வசனம்-83

உம்மு சல்மா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( اللَّهُمَّ مُقَلِّب الْقُلُوب ثَبِّتْ قَلْبِي عَلَى دِينك ) "இறைவா! உள்ளங்களைப் புரட்டுபவனே! எனது உள்ளத்தை உனது மார்க்கத்தின் மீதே நிலைப்படுத்திவாயாக" என்று அதிகமாகப் பிரார்த்தனை புரிவார்கள். நான் அதற்கான காரணத்தை வினவினேன்.

அப்போது அண்ணலார், ( يَا أُمَّ سَلَمَةَ إِنَّهُ لَيْسَ آدَمِيٌّ إِلاَّ وَقَلْبُهُ بَيْنَ أُصْبُعَيْنِ مِنْ أَصَابِعِ اللَّهِ فَمَنْ شَاءَ أَقَامَ وَمَنْ شَاءَ أَزَاغَ )  "உம்மு சலமாவே! மனிதர்கள் அனைவரின் உள்ளங்கள், அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கிடையே தான் உள்ளன. அவன் நாடியோரை (அதில்) நிலைத்திருக்கச் செய்கின்றான். அவன் நாடியோரை (அதிலிருந்து) தடம் புரளச்செய்கின்றான்" என்று பதிலளித்தார்கள்.          நூல்:- திர்மிதீ-3434, முஸ்னது அஹ்மது, தஃப்சீர் தபரீ, இப்னு கஸீர் ஆலுஇம்ரான், வசனம்-8

மனிதனின் மனம் கூட அவன் கையில் இல்லை என இந்த நபிமொழி தெரிவிக்கிறது. தன் மனம் எப்போது, எப்படி மாறும் என்பது அவனுக்கே தெரியாது. மனிதனின் மனமாற்றம் இறைவன் கையில்தான் உள்ளது. தான் நாடியவாறு மனித உள்ளங்களை இறைவன் திருப்பிப்போடுகின்றான். "உள்ளங்களை மாற்றுகின்றவன்" (முகல்லிபுல் குலூப்) என்ற பெயர் அல்லாஹ்வுக்கு உண்டு. எனவே, ஒருவர் நல்லவராக வாழ்வதற்கும் இறைவனின் நாட்டமும் தயவும் தேவை. அதனாலேயே, எனது உள்ளத்தை உன் மார்க்கத்திலேயே நிலைத்திருக்கச் செய்வாயாக! என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்து வந்தார்கள்.

நன்றி செலுத்துவோம்

பேரறிஞர் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களிடம் "இறைநம்பிக்கை பறிபோகும் அளவுக்குண்டான பாவச் செயல் எது?" என்று வினவப்பட்டது. இமாம் அவர்கள், "1) தான் கொண்டிருக்கும் இறை நம்பிக்கைக்கு நன்றி செலுத்தாமல் இருப்பது. 2) இறுதி காலத்தில் இறைவனின் மீது பயமற்று தான்தோன்றித்தனமாக வாழ்வது. 3) அடியார்களின் மீது அட்டூழியம் செய்வது. எவனிடத்தில் இந்த மூன்று துர்குணங்கள் இருக்குமோ அவன் உலகத்திலேயே இறை மறுப்பாளனாக ஆகிட நேரும்" என்று பதிலளித்தார்கள்.

ஒரு நாள் இறைநேசர் பிஷ்ருல் ஹாஃபீ (ரஹ்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து மாடியில் ஏறுவதற்காக ஒரு படியில் கால் வைத்தார்கள். மறுபடி ஏறாமல் அப்படியே நின்று விட்டார்கள். நீண்ட நேரம் அப்படியே நின்று கொண்டிருப்பதைக் கண்ட அவரது சகோதரி, "என்ன அண்ணே! ஆழ்ந்த சிந்தனை?" என்று கேட்டார். இந்த பக்தாது மாநகரத்தில் பிஷ்ரு என்ற பெயரில் ஒரு கிறிஸ்தவர் வாழ்கிறார். யூதர் வாழ்கிறார். ஒரு நெருப்பு வணங்கியும் வாழ்கிறார் அவர்களெல்லாம் வழிகேட்டில் மூழ்கியிருக்கும் பொழுது, இந்த பிஷ்ருக்கு மட்டும் அல்லாஹுதஆலா நேர்வழி காட்டியிருக்கிறானே இந்த ஓர் அருட்கொடைக்காக நான் எவ்வாறு அவனுக்கு நன்றி செலுத்துவேன் என்பதை எண்ணி, பிரமித்துப் போய்விட்டேன்" என்றார்கள்.

பூமி துப்பிவிட்டது

(அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம்.                              திருக்குர்ஆன்:- 3:102

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் கிறிஸ்தராக இருந்தார். பிறகு அவர் இஸ்லாத்தைத் தழுவினார். "அல்பகரா" மற்றும் "ஆலு இம்ரான்" ஆகிய அத்தியாயங்களை ஓதினார். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக (வஹிய்யி எனும் வேத அறிவிப்பை) எழுதி வந்தார். அவர் மீண்டும் கிறிஸ்தவராகவே மாறிவிட்டார். பிறகு அவர் (மக்களிடம்) "முஹம்மதுக்கு நான் எழுதித் தந்ததைத் தவிர வேறெதுவும் அவருக்கு தெரியாது" என்று சொல்லி வந்தார். பிறகு அல்லாஹ் அவருக்கு மரணத்தை அளித்தான் அவரை மக்கள் புதைத்து விட்டனர்.

ஆனால் (மறுநாள்) அவரை பூமி துப்பிவிட்டு இருந்தது. உடனே (கிறிஸ்தவர்கள்), "இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களின் வேலையாகும். அதாவது, எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடிவந்து விட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள்" என்று கூறினர். ஆகவே, அவருக்காக இன்னும் ஆழமாக ஒரு புதை குழியைத் தோண்டினர். (அதில் புதைத்த பின்பு) மீண்டும் பூமி அவரை (வெளியே) துப்பி விட்டிருந்தது.

அப்போதும், "இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களின் வேலைதான். நம் தோழர் அவர்களை விட்டு வந்துவிட்ட காரணத்தால் அவரைத் தோண்டி எடுத்து மண்ணறைக்கு வெளியே போட்டு விட்டனர்" என்று கூறினர். மீண்டும் அவர்களால் முடிந்த அளவிற்கு மிக ஆழமான குழியை அவருக்காகத் தோண்டி அதில் அவரைப் புதைத்தனர். ஆனால், அவரை பூமி மீண்டும் துப்பிவிட்டிருந்தது. அப்போதுதான் அது மனிதர்களின் வேலையல்ல (இறைவனின் தண்டனை தான்) என்று புரிந்து கொண்டனர். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டுவிட்டனர்.       நூல்:- புகாரீ-3617

இறைத்தூதர்கள்,  நபித்தோழர்கள், இமாம்கள் மற்றும் நல்லடியார்களை கேலி கிண்டல் செய்வது அவ்வளவு சாதாரணமான பாவமல்ல. அதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளாகி, இறைநம்பிக்கையை இழக்க நேரிடும்.

ஆணவக்குணம்

எங்கள் இறைவனே! நீ எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக! எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றிடுவாயாக! (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரணிக்கும்படிச் செய்வாயாக!                                                                                                                                                                திருக்குர்ஆன்:- 3:193

புதிதாக இஸ்லாமை ஏற்றுக்கொண்ட ஷாம் தேசத்தின் கவர்னர் ஜபலா பின் அய்ஹம் என்பவர், ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் விருந்தாளியாக வந்து மதீனாவில் சில நாட்கள் தங்கி விட்டு, ஜனாதிபதி அவர்களுடன் ஹஜ்ஜுக்கு சென்றார். அவர் கஅபாவை வலம் வந்து கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் அவரின் காலை ஒரு கிராமவாசி மிதித்து விட்டார்.

ஜபலா, தான் ஒரு தேசத்தின் கவர்னர் என்ற ஆணவத்தில் அந்த கிராமவாசியின் உடல் உறுப்பு சேதமாகும் அளவுக்கு கடுமையாக தாக்கிவிட்டார். அந்த கிராமவாசி இது குறித்து ஜனாதிபதி அவர்களிடம் முறையிட்டார். உடனே ஜனாதிபதி அவர்கள் ஜபலாவை அழைத்து விசாரித்து விட்டு, "ஜபலா! அந்த கிராமவாசி உன்னை மன்னித்துவிட்டால் பரவாயில்லை. இல்லையெனில் பழிக்குப் பழி எனும் அடிப்படையில் நீர் அவரை அடித்ததைப் போன்று, அவர் உன்னை அடிப்பார். காரணம்  ஆண்டானும் அடிமையும் தீர்ப்பு விஷயத்தில் சமமே என்கிறது இஸ்லாம். மக்களுக்கு  மத்தியில் பேதமை கிடையாது" என்று கூறினார்கள்.

ஜபலா, "அப்படியென்றால் நான் மீண்டும் கிறிஸ்தவனாக மாறப் போகிறேன்" என்று மிரட்டிப் பார்த்தார். ஜனாதிபதி அவர்கள், "நீர் மதம் மாறினால் மரண தண்டனை விதிக்கப்படும்" என்றார்கள்.

அவ்வளவு தான் ஜபலாவின் முகம் வெளிறியது. எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். நாளை இது குறித்து நான் பதில் சொல்கிறேன் என்றார். அவருக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.

ஜபலாவுக்கு ஆணவம் பிடித்திருந்ததால் அவரது மனம் பணிந்து போக மறுத்தது. எனவே, மறுநாள் அங்கிருந்து ஓடிபோய் கிறிஸ்தவராகவே மாறிவிட்டார். இறுதியில் ஜபலா கிறிஸ்தவராகவே மரணித்தார். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

ஜபலா தம்மைப் பெரியவனாகக் கருதி தமக்கு சாதகமாகவே நீதி நிர்வாகம் இயங்க வேண்டுமென எண்ணினார். அது நிகழவில்லை. எனவே அவர் இஸ்லாமை விட்டும் வெளியேறி நஷ்டத்திற்குரியவராகிவிட்டார்.

அபூலஹ்ப், அபூஜஹ்ல் போன்றோர் ஆணவத்தால் தான் இஸ்லாமை ஏற்கவில்லை. மேலும் உபை பின் சலூல் போன்றோர் முஸ்லிமான பிறகும்கூட ஆணவத்தால் தான் நயவஞ்சகர்களாக ஆனார்கள்.

தீயோருக்கு துணைபோவது

(இறைவா!) என்னை நீ முஸ்லிமாகவே இறக்கச்செய்வாயாக! மேலும் நல்லோருடன் என்னைச் சேர்த்திடுவாயாக! (என்று நபி யூசுஃப் - அலை அவர்கள் பிரார்த்தித்தார்கள்.)                        திருக்குர்ஆன்:- 12:101

ஷாம் தேசத்திலுள்ள கன்ஆன் என்னும் ஊரில் வசித்து வந்த கொடிய முரடர்களுடன் அறப்போர் புரிவதற்காக நபி மூசா (அலை) அவர்கள் தங்கள் கூட்டத்தினருடன் வந்தார்கள். இவ்வூரில் அல்லாஹ்வின் மகத்தான பெயரை (இஸ்முல் அஃழம்) அறிந்திருந்த "பல்ஆம் பின் பாஊரா" என்னும் ஒரு பெரியார் வாழ்ந்து வந்தார். அவர் கேட்கும் வேண்டுகோள் அல்லாஹ்விடம் உடனே ஏற்றுக் கொள்ளப்படும். இப்பெரியாரிடம் அம்முரடர்கள் வந்து, மூசாவும் அவரது கூட்டத்தினரான இஸ்வேலர்களும் நம்மோடு போர் புரிய வந்துள்ளனர். அவர்கள் வெற்றி கொண்டால் நம்மை எல்லாம் இந்த நாட்டை விட்டு வெளியேற்றி விடுவர். அல்லது கொன்றுவிடுவர். நீர் பிரார்த்தனை ஒப்பு கொள்ளப்பட்ட மனிதர் ஆவீர். எனவே, அவர்களுக்கெதிரான பிரார்த்திப்பீராக" என்று முறையிட்டனர்.

அதற்கு பல்ஆம், “மூசா அல்லாஹ்வின் தூதர்; அவருடன் வானவர்களும் இறைநம்பிக்கையாளர்களும் உள்ளனர். நான் எப்படி அவர்களுக்கெதிராக பிரார்த்திப்பேன்? நான் அல்லாஹ்விடமிருந்து பல விஷயங்களை அறிந்தவன்" என்று கூறி மறுத்தார்.

ஆனால் அவர்கள் அவரிடம் பணிவாகவும் மென்மையாகவும் பேசி குழப்பினர். இறுதியில் அவரும் குழப்பத்தில் சிக்கினார்.

இதையடுத்து அவர் தமது கழுதையில் ஏறி ஒரு மலை உச்சிக்குச் சென்று மூசா (அலை) அவர்களுக்கெதிராக பிரார்த்தனை புரிய எண்ணியபோது, அவரது நாவை அவருடைய சமுதாயத்திற்கு எதிராகவும் மூசா நபிக்கு ஆதரவாகவும் அல்லாஹ் திருப்பி விட்டான். (அதாவது மூசா நபிக்கு வெற்றியைக் கொடு! எனது கூட்டத்தினருக்கு தோல்வியை கொடு! என்று நாவு தடுமாறி பிரார்த்தித்தார்.)

இதைக் கண்டு திகைத்த அவருடைய சமுதாயத்தார் அவரிடம், "பல்ஆம்! நீர் என்ன செய்கிறீர் என்பது தெரிகிறதா?" என்று வினவினர். அதற்கு அவர், ( فَهَذَا مَا لَا أَمْلِك هَذَا شَيْء قَدْ غَلَبَ اللَّه عَلَيْهِ قَدْ ذَهَبَتْ مِنِّي الْآن الدُّنْيَا وَالْآخِرَة ) "இது என்னை மீறிய செயல்; இதில் அல்லாஹ்வின் கை ஓங்கி விட்டது" என்று கூறினார். இப்போது இம்மையும்-மறுமையும் என்னை விட்டு சென்று விட்டன (இறைநம்பிக்கை பறிபோய் விட்டன)” என்று கூறினார்.

(பிறகு,) சதியும் சூழ்ச்சியும் தான் இப்போதுள்ள ஒரே வழி. நான் உங்களுக்காக சதி செய்யப் போகிறேன் என்று கூறிவிட்டு, அழகான பெண்களை அலங்கரித்து இஸ்ரவேலர்கள் மத்தியில் அனுப்புங்கள் அவர்கள் இப்பெண்கள் மீது ஆசை கொண்டு தகாத செயலில் ஈடுபடுவர் அவர்களுக்கு தோல்வி ஏற்படும் என்று அவர் தமது கூட்டத்தினருக்கு தவறான யோசனையைக் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.     நூல்:- தஃப்சீர் காஸின், தஃப்சீர் இப்னு கசீர் அல்அஃராஃப் வசனம்-175,176

(நபியே இஸ்ரவேலர்களில்) ஒருவரைப் பற்றிய செய்தியை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக. நாம் அவருக்கு நம் சான்றுகளை வழங்கியிருந்தோம். ஆனால் அவர் அவற்றிலிருந்து நழுவிக்கொண்டார். ஆகவே, அவரை ஷைத்தான் தன் ஆதரவாளராக ஆக்கிக் கொண்டான். (இதையடுத்து) தவறான (வழியில் சிக்கி அழிந்து போன) வர்களில் ஒருவராக மாறினார்.

நாம் நாடியிருந்தால் (அந்தச்) சான்றுகள் மூலம் அவரை நாம் உயர்த்திருப்போம்; ஆனால், அவர் இவ்வுலக (இன்ப)த்தில் மையல் கொண்டு தமது மன விருப்பத்தைப் பின்பற்றினார். அவரது நிலை நாயின் நிலையை ஒத்திருக்கிறது. அதை நீர் துரத்தினாலும் நாக்கைத் தொங்க விடும்; அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடும். இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கருதிய மக்களின் நிலையாகும். (நபியே இது போன்ற) வரலாறுகளை (அவர்களுக்கு) எடுத்துரைப்பீராக. (இதனால்) அவர்கள் சிந்தித்து உணரலாம்.                  திருக்குர்ஆன்:- 7: 175, 176

நபி மூசா (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல்ஆம் பின் பாஊரா என்பவர் போதிய மார்க்க ஞானம் பெற்று,  வணக்க வழிபாடுகளில் அதிகமாக ஈடுபட்டு வாழ்ந்த துறவி தான். இருந்தாலும் அவர், தமது மன இச்சையைப் பின்பற்றியதால் இறுதி நேரத்தில் இறைநம்பிக்கையின்றி இறந்தார். மேற்காணும் வசனங்கள் (7:175,176) அவரைப்பற்றி தான் எடுத்துரைக்கிறது.

தன்னுடைய சமுதாயத்தினர் தவறானவர்கள் என்று அறிந்த பிறகும் அவர்களின் தவறுக்கு துணைபோவது சரியல்ல. அதுவும் இறைநெருக்கத்தைப் பெற்றவர்களுக்கு எதிராக செயல்படுவது மாபெரும் தவறாகும். இதுபோன்ற தவறான செயலால்கூட இறைநம்பிக்கை பறிபோகிவிடும் என்பதற்கு பல்ஆம் பின் பாஊரா ஓர் உதாரணமாகி விட்டார்.

எவரையும் இழிவாக எண்ணாதே!

எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையை அருள்வாயாக; எங்களை (உனக்கு அடிபணிந்த) முஸ்லிம்களாக இறக்கச்செய்வாயாக (என்றும் கூறினர்).                                             திருக்குர்ஆன்:-7:126

இறைநேசச் செல்வர் ஷிப்லீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. எங்கள் ஆன்மீக ஆசான் அபூ அப்தில்லாஹ் அந்துலுஸீ (ரஹ்) அவர்கள் திருக்குர்ஆனை ஏழு வகையான முறையிலும் ஓதுவதில் தேர்ச்சி பெற்றவர். முப்பது ஆயிரம் நபிமொழிகளை மனனமிட்ட நபிமொழி துறை நிபுணர். அவரிடம் பன்னிரெண்டாயிரம் பேர் தீட்சை பெற்றுள்ளார்கள்.(முரீதுகள்) அவருடைய முரீதுகளில் பிரபலமானவர் ஸுனைதுல் பக்தாதீ (ரஹ்) அவர்களும் ஒருவராவார்கள்.

ஒருமுறை எங்கள் ஆன்மீக ஆசானுடன் நானும் அவர்களுடைய  சீடர்கள் பலரும் வெளியூர் பயணம் மேற்கொண்டோம்.

வழியில் ஒரு கிறிஸ்தவக் கோயில் தென்பட்டது. அங்கிருந்தோர் சிலுவையை வணங்கிக்கொண்டிருந்தனர். அந்த ஊரின் எல்லையிலுள்ள ஓர் கிணற்றில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த ஓர் அழகான பெண்ணின் மீது எங்கள் ஆசானின் பார்வை விழுந்தது. அப்பெண்ணின் அழகைக் கண்டு அவள் மீது காதல் கொண்டதால் ஆசானின் ஆன்மீக நிலை மாறுபட ஆரம்பித்தது. அவரின் முகத்தில் நிறமும் மாறுபட்டது.

அதன் பிறகு ஆசான் மூன்று நாட்கள் வரை எதுவும் உண்ணாமல், பருகாமல் எவருடனும் பேசாமல் இருந்து வந்தார். அவரது நிலை மற்றவர்களுக்கு பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. இறுதியாக அவர், "என்னால் இந்த ஊரை விட்டு  இப்போது வர முடியாது; நீங்கள் இங்கிருந்து போய் விடுங்கள்" என்று எங்களிடம் கூறினார். நாங்களும் ஒன்றும் அறியாது சென்றுவிட்டோம்.

பிறகு ஒரு வருடம் கழித்து அவரது சீடர்கள் அதாவது நாங்கள், ஆசானின் நிலை எவ்வாறு ஆயிற்று என்று தெரிந்து கொள்வதற்காக அங்கே மீண்டும் வந்தோம். தேடி கண்டுபிடித்தபோது, ஆசான் கிறிஸ்தவர்கள் அணியும் தொப்பி அணிந்து கிறிஸ்தவர்களின் அடையாளமான பூணூலையும் இடுப்பில் கட்டிக்கொண்டு பன்றி மேய்த்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த நாங்கள் அதிரிச்சியடைந்தோம். எங்கள் வருகையை கண்டதும் அவர் தலையைக் குனிந்துகொண்டார். நாங்கள் அவரை அணுகி, மார்க்க ஞானம் பெற்ற உங்கள் நிலை இப்படி ஆகிவிட்டதே! என்று எங்களின் உள்ள குமுறலை வெளிப்படுத்திவிட்டு, குர்ஆன் முழுவதையும் மனனமிட்ட ஹாஃபிளாக இருந்தீர்கள்! இப்போது அதிலிருந்து ஏதேனும் தங்களுக்கு நினைவிருக்கிறதா? என்று வினவினோம்.

وَمَنْ يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِنْ مُكْرِمٍ  "அல்லாஹ் எவரை இழிவுபடுத்திவிடுகின்றானோ அவருக்கு கண்ணியம் அளிக்கக்கூடியவர் எவரும் இல்லை" (22:18) என்ற வசனமும் وَمَنْ يَتَبَدَّلِ الْكُفْرَ بِالْإِيمَانِ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ  "எவர் இறைநம்பிக்கைக்குப் பகரமாக இறைநிராகரிப்பை தேர்ந்தெடுத்துக் கொள்கிறாரோ அவர் நேரான வழியை விட்டும் தவறிவிட்டார்" (2:108) என்ற இந்த இரண்டு வசனங்களைத் தவிர வேறு எதுவும் என் நினைவில் இல்லை என்றார்.

தங்களுக்கு முப்பது ஆயிரம் நபிமொழிகள் அறிவிப்பாளர்களுடைய பெயர்களுடன் சேர்த்து மனனமாக இருந்தது நாங்கள் அறிவோம். அவற்றில் ஏதேனும் இப்போது தங்களுக்கு நினைவிருக்கிறதா? என்று கேட்டோம். ( مَن بَدَّلَ دِینَهُ فَاقتُلُوهُ ) "தன்னுடைய (இஸ்லாமிய) மார்க்கத்தை மாற்றிக் கொண்டவரை கொலை செய்யுங்கள்" என்ற இந்த நபிமொழியை தவிர வேறு எதுவும் எனக்கு நினைவில்லை என்றார்.

நாங்கள் எங்களின் ஆசானின் நிலையைக் கண்டு மிகுந்த கவலை கொண்டு அவருக்காக பிரார்த்தித்த நிலையில் அந்த இடத்தைவிட்டு நாங்கள் பக்தாது நகர் நோக்கி சென்றோம். நாங்கள் புறப்பட்ட மூன்றாம் நாள் ஓர் ஆறு தென்பட்டது. அதன் அருகே சென்றபோது எங்கள் ஆசான் ஆற்றில் குளித்துவிட்டு முஸ்லிமைப் போன்று வெண்ணிற ஆடை அணிந்து எதிரில் வருவதை பார்த்தோம். அவர் எங்களுக்கு அருகே வந்ததும் ஷஹாதத் கலிமாவை ஓதினார். எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. நாங்கள் அவரிடம் உங்களுக்கு இந்நிலை ஏன் ஏற்பட்டது? விவரமாகக் கூறுங்கள் என்றோம்.  

நான் முன்பு அந்த கிறிஸ்துவ கோயில் அருகே சென்றபோது அந்த கிறிஸ்தவர்களை பார்த்து, "இவர்கள் துர்பாக்கியவான். அறிவீனர்கள். உணர்வில்லாத, எதையும் அறியமுடியாத பொருட்களை வணங்குகிறார்களே என்று அவர்களை கேவலமாக எண்ணினேன். என்னிடமோ இறைநம்பிக்கை உள்ளது என்றெண்ணி என்னைச் சற்றுப் பெருமையாகி எண்ணி கர்வம் கொண்டேன்.

அந்த நேரத்தில் என்னுடைய உள்ளத்தில் இருந்து ஏதோ ஒரு ஜோதி வெளியாகி செல்வது போன்ற ஓர் உணர்வு எனக்கு ஏற்பட்டது. உண்மையில் அது என்னுடைய இறைநம்பிக்கையாகும். பிறகு என் உள்ளம் இருளடைந்து போய்விட்டது. அதன்பின் அங்கே ஒரு கிறிஸ்தவப் பெண் கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தாள். அவள் மீது காதல் கொண்டேன். அவளைத் திருமணம் செய்து கொள்ள தூது அனுப்பினேன். அதற்கு அவர்களோ என்னை பன்றி மேய்க்க வேண்டும் என நிபந்தனை விதித்தார்கள்.

அதற்கும் நான் உடன்பட்டேன். மீண்டும் நான் உங்களை சந்தித்த பின்  அல்லாஹ்விடம் அழுது புலம்பி, 'யா அல்லாஹ்! இந்த சோதனையிலிருந்து விடுதலை அளிப்பாயாக!  நான் பாவம் புரிந்த உன்னுடைய அடியானாக இருக்கிறேன்' என்று பாவமன்னிப்பு கோரினேன். அல்லாஹ் என்னை மன்னித்தான். என்னுளிருந்து முன்னர் வெளியேறிய அதே ஜோதி மீண்டும் என்னுள் நுழைவதைக் கண்டேன். எனக்கு இஸ்லாத்தின் நல்லுதவி  கிடைத்துவிட்டது" என்று கூறினார். பிறகு அவர் கற்றிருந்த மார்க்க ஞானம் அனைத்தும் கிடைக்கப் பெற்றார். நூல்:- ஆப் பீதீ, ஹயாத்துல் ஹயவான்

தொழுகை நோன்பு போன்ற இறைக்கடமைகளை முறையாக நிறைவேற்றுபவர்களாக, தர்ம சிந்தனை உள்ளவர்களாக இருக்கும் போது, தொழுகை நோன்பு தர்மம் போன்ற நற்காரியங்களைகளை முறையாக பேணாதவர்களை மட்டமானவர்களாகவும் அவர்களைவிட நாமே மேலானவர்கள் என்று எண்ணமும் தோன்றிவிட்டால் நமது தொழுகை நோன்பு தர்மம் போன்ற நற்காரியங்கள் வீணாகிவிடுகிறது. 

பிறரைவிட நாம் மேலானவர்கள் என்ற தீய எண்ணத்தால், அல்லாஹ்வின் பார்வையில் தொழுகை நோன்பு போன்ற நற்காரியங்களை பேணாதவர்களைவிடவும், மகா கஞ்சர்களைவிடவும், பெரும் பாவிகளைவிடவும் நாம் தாழ்ந்தவர்களாகி விடுகிறோம். இதனால்கூட சில நேரங்களில் நமது இறைநம்பிக்கையை இழக்க நேரிடும். அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக!

பேரறிஞர் மௌலானா அஷ்ரஃப் அலீ தானவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் இறை நம்பிக்கையில் எந்தளவுக்கு உறுதியுள்ளது என எனக்குத் தெரியாது. அவர் என்னைவிட இறைநம்பிக்கையில் முன்னேற்றம் அடைந்தவராக இருக்கலாம். எனவே, நான் ஒவ்வொரு முஸ்லிமையும் என்னை விட சிறந்தவராகவே கருதுகிறேன். தற்போது இறைமறுப்பாளராக (காஃபிராக) இருப்பவர் வருங்காலத்தில் இறைநம்பிக்கை என்ற நற்பாக்கியம் கொடுக்கப்பட்டு, அவர் என்னை விட இறைநம்பிக்கையில் முன்னேறி விடலாம். எனவே எந்த ஒரு இறை மறுப்பாளரையும் என்னை விட சிறந்தவராகவே கருதுகிறேன்.

இறைமறுப்பாளர்கள் மற்றும் மிகத் தீய மனிதர்களையும் கீழ்த்தரமாக எண்ணக்கூடாது. அவர்களைப் பற்றி பழித்துக் கூறுவதும் சரியல்ல. மாறாக, அவர்கள் செய்யும் தவறான செயல்களை மட்டும் தீயது எனக் கருத வேண்டும். காரணம், அவர்களின் இறுதி முடிவு என்னவாகும் என்று நமக்கு தெரியாது. நல்லடியார்கள் இறுதி முடிவை எண்ணியே அஞ்சி வாழ்ந்துள்ளார்கள்.

நம்முடைய இறைநம்பிக்கை நிலைத்திருக்கும் என்று யாராலும் உறுதியாக சொல்லமுடியாது. நம்முடைய இறைநம்பிக்கை நம் இஷ்டத்துக்கு உட்பட்டதல்ல. அல்லாஹ் இறைநம்பிக்கையை அவன் வசம் வைத்துள்ளான். அல்லாஹ் நினைத்தால அதை மாற்றி அமைத்திட முடியும். எனவே, மனிதன் தன் நிலைமையின் மீது பெருமை கொள்வதும், பிறரைக் கேவலமாக எண்ணுவதும் மாபெரும் தவறாகும். இதனால் இறைநம்பிக்கையை இழக்க நேரிடும். எனவே, இது விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை.

ஷைத்தான், தன்னை உயர்வாக எண்ணி, நபி ஆதம் (அலை) அவர்களை கண்ணியக்குறைவாக எண்ணினான். அதனால் அவன் இறைநம்பிக்கையை இழந்தான் என்பது குர்ஆனின் கூற்று.

இறுதி நேரத்தில்

"பின்னர் அவர்களுக்கு முன்னாலிருந்தும் அவர்களுக்கு பின்னாலிருந்தும் அவர்களுக்கு வலப் புறங்களிலிருந்தும் அவர்களுக்கு இடப் புறங்களிலிருந்தும் (அவர்களைக் கெடுக்க) அவர்களிடம் நான் வருவேன். (எனவே,) அவர்களில் பெரும் பெரும்பாலோரை நன்றி செலுத்துபவராக நீ காணமாட்டாய்" (என்றும் இப்லீஸ் கூறினான்).          திருக்குர்ஆன்;- 7:17

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பார்கள். ( وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ ) “இறைவா! இறக்கும்போது ஷைத்தான் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.”                   அறிவிப்பாளர்:- அபூ யஸர் (ரலி) அவர்கள்      நூல்:- அபூதாவூத்-1328

பேரறிஞர் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மனிதனின் உயிர் கைப்பற்றப்படும் நேரத்தில்தான் பெரும்பாலும் இறைநம்பிக்கை பறிபோகிறது.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார்கள். முற்காலத்தில் ஆடு மேய்க்கும் பெண் ஒருவள் இருந்தாள். அவளுக்கு நான்கு சகோதரர்கள் இருந்தனர். பகல் முழுவதும் ஆடு மேய்க்கும் அவள், இரவில் பர்ஸீஸா என்பவரின் (ஆசிரமத்தில்) வணக்கத்தலத்தில் சென்று தங்கி விடுவாள். பர்ஸீஸா என்பவர் அறுபது ஆண்டுகளாக அவ்விடத்தில் தனித்திருந்து இறைவணக்கம் புரிந்து வந்தார். மக்கள் மத்தியில், "மார்க்க பக்தியுள்ள சிறந்த இறைநேசர்" என பேசப்பட்டவர்.

ஒருநாள் அவர் ஷைத்தானின் தூண்டுதலால் அப்பெண்ணை விபச்சாரம் செய்து விட்டார். இதனால் அவள் கர்ப்பமானாள். பிறகு ஷைத்தான் மனித உருவில் அவரிடம் வந்து, "கர்ப்பமாகி விட்ட அவளை விட்டு வைத்தால் உனது இரகசியம் வெளியாகி விடும். எனவே, அவளை கொலை செய்து புதைத்து விடு!  மக்களுக்கு உன் மீதுள்ள நம்பிக்கையால் உன் மீது சந்தேகம் வராது" என்றான். 

அவளின் சகோதரர்கள் அவளைத் தேடினர். ஷைத்தான் அந்நால்வரின் கனவிலும் பர்ஸீஸா செய்த கொடுமையை அறிவித்தான். அரசு உதவியுடன் பர்ஸீஸைவை பிடித்து விசாரித்தபோது உண்மை வெளிப்பட்டது.

அவரை காவலில் வைத்து இருந்த போது ஷைத்தான் மனித உருவில் தோன்றி, "இதற்கு காரணம் நான் தான். இனி நீ தப்பிக்க வேண்டுமானால் அது என் கையில் தான் இருக்கிறது. எனவே நீ இறைவனை மறுத்தவனாக எனக்கு (சஜ்தா எனும்) சிரவணக்கம் செய்து  விடு! உனக்கு உதவி செய்கிறேன்" என்றான்  பர்ஸீஸா தன்னுடைய பாவத்தை எண்ணி அல்லாஹ்விடம்  பாவமன்னிப்பு கோராமல், அவமானத்திற்கு அஞ்சி  ஷைத்தானுக்கு சிரவணக்கம் செய்தார். வந்த வேலை முடிந்ததும் ஷைத்தான் தலைமறைவாகி விட்டான். அவர் இறைநம்பிக்கையை இழந்தவராக அரசு சட்டப்படி தூக்குத் தண்டனைக்கு ஆளாகி இறைமறுப்பாளராக இறந்தார்.   நூல்:-  தஃப்சீர் தபரீ அல்ஹஷ்ர் வசனம்-16, அல்பிதாயா வந்நிஹாயா

மரண வேதனை

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ ) மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு.                                          நூல்:- புகாரீ-4449

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கியபோது அவர்களை நான் பார்த்தேன். அவர்களுக்கு அருகில் தண்ணீர் நிரம்பிய பாத்திரம் ஒன்று இருந்தது. (தாம் அடைந்த வேதனையால்) அந்த பாத்திரத்திற்குள் தமது கையை நுழைத்து (தண்ணீர் அள்ளி) அந்தத் தண்ணீரை தமது முகத்தில் தடவிக் கொண்டே இருந்தார்கள். பின்னர், ( اللَّهُمَّ أَعِنِّي عَلَى غَمَرَاتِ الْمَوْتِ ) "இறைவா! இறப்பின் துயரங்களில் இருந்து விடுபட எனக்கு உதவி செய்வாயாக!" என்று கூறிக் கொண்டிருந்தார்கள். நூல்:- புகாரீ-4449, திர்மிதீ-900

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( مَا أَغْبِطُ أَحَدًا بِهَوْنِ مَوْتٍ بَعْدَ الَّذِي رَأَيْتُ مِنْ شِدَّةِ مَوْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ )  அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பட்ட மரண வேதனையை நான் கண்ட பிறகு, (சிரமமின்றி) எளிதாக மரணம் அடைந்த எவரைக் கண்டும் நான் ஏக்கம் கொண்டதில்லை.         நூல்:- திர்மிதீ-901

உடலிலிருந்து உயிர் பிரியும் போது அதன் வலி கடுமையாக இருக்கும். உடலில் ஏற்படும் காயத்தின் வலியை உணர வைப்பதே உயிர்தான். அந்த உயிர் பிரியும் போது வலி கடுமையாக இருப்பது இயற்கையே. எனவே ஒருவர் சிரமத்துடன் இறப்பது கெட்ட முடிவுக்கு அடையாளமோ, சிரமமின்றி இறப்பது நல்ல முடிவுக்கு அடையாளமோ அல்ல. காரணம், அண்ணல் நபி (ஸல்) அவர்களே இறப்பின் வலியை அனுபவித்து உள்ளார்கள். எனவே தான், சிரமமில்லாமல் இறக்கும் எவரைப் பார்த்தும் "இப்படியல்லவா இறப்பு வரவேண்டும்" என்று நான் ஏங்கியதில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.      நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ

இறைநேசச் செல்வர் அபா ஸகரிய்யா (ரஹ்) அவர்களுக்கு இறுதி நேரம் நெருங்கியது. இதை அறிந்த அன்னாருடைய நண்பர் ஒருவர், அன்னாரின் அருகில் அமர்ந்து "லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்று கலிமா சொல்லிக் கொடுத்தார். கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்ட உடன் அன்னார் தனது முகத்தை வெறுப்போடு சுளித்து திருப்பிக் கொண்டார்கள்.

கொஞ்ச நேரம் சென்றது. மீண்டும் நண்பர் கலிமாவை சொல்லிக் கொடுக்கிறார். இப்போதும் அப்படியே அன்னார் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.

இன்னும் கொஞ்ச நேரம் சென்று மீண்டும் கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்ட போதும், அன்னார் முன் செய்தது போலவே முகத்தைச் சுளித்து கொண்டு, "நான் சொல்ல மாட்டேன்" என்றார்கள்.

இதைக்கண்டு அச்சப்பட்ட அந்த நண்பர் மிகுந்த கவலையுடன் அன்னாரின் அருகில் காத்திருந்தபோது, அன்னாருக்கு கொஞ்சம் தெளிவு ஏற்பட்டு கண்களைத் திறந்து சுற்றுமுற்றும் பார்க்க தொடங்கினார்கள்.

தன் அருகே அமர்ந்திருந்த நண்பரை பார்த்து புன்முறுவல் செய்தவராக, "சற்று முன் நீங்கள் என் காதருகில் எதையாவது சொல்லி கொடுத்தீர்களா?" என்று கேட்டார்கள். ஆமாம்! கலிமாவை முதலிரண்டு தடவை சொல்லிக்கொடுத்தேன் அப்போதெல்லாம் நீங்கள் முகத்தை சுளித்து வெறுப்புடன் திரும்பிக் கொண்டீர்கள். ஆனால் மூன்றாவது தடவை சொல்லிக் கொடுத்தபோது "ஊஹும்... சொல்ல மாட்டேன்" என்று சொல்லிவிட்டீர்கள். அதைக் கேட்டு எனக்கு மிகுந்த கவலையாகிவிட்டது. என்று அந்த நண்பர் கூறினார்.

"விஷயம் அப்படியல்ல. சற்று முன்னால் இப்லீஸ் என் முன் தோன்றினான். அவனிடம் தண்ணீர் துருத்தி காணப்பட்டது. அவன் வந்து, எனது வலப் பக்கம் அமர்ந்து கொண்டு, தன்னிடம் இருந்த தண்ணீர் துருத்தியை அசைத்துக் காண்பித்து, "இதோ குளிர்ச்சியான தண்ணீர் என்னிடம் இருக்கிறது உனக்கு வேண்டுமானால் தருகிறேன்" என்றான். நான், வேண்டாம் என்று தலையை திருப்பிக் கொண்டேன்.

அதைத்தொடர்ந்து அவன், "ஈசா அல்லாஹ்வின் குமாரர்" என்பதாக சொல். உன்னுடைய வேதனை நீங்கும்" என்றான் அப்போதும் வெறுப்புடன் எனது தலையைத் திருப்பிக் கொண்டேன்

எனது கால் பகுதிக்கு எழுந்து வந்து நின்ற அவன், "அல்லாஹ் என்று ஒருவன் இல்லை" என சொல் உனக்கு சொர்க்கம் கிடைக்கும்" என்று ஏமாற்றப் பார்த்தான். அப்போது தான், நான் "அப்படி சொல்ல மாட்டேன்" என்று கூறினேன்.

அதைக்கேட்ட அவன், தன்னிடம் இருந்த தண்ணீர் துருத்தியை கீழே போட்டு உடைத்து விட்டு என்னை விட்டும் வெருண்டு ஓடி விட்டான். இப்லீஸிடம் நான் கூறியதை தான் நீங்கள், நான் கலிமா சொல்ல மறுத்ததாக கருதிக் கொண்டீர்கள்.

எனவே, இதோ இப்போது நான் கலிமா சொல்லுகிறேன் என்று கலிமாவை சொன்னார்கள். அன்னாரின் உயிரும் பிரிந்தது. நூல்:- ஜுஹ்ரதுர் ரியாள்

மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். மனிதர்களில் நல்லோர், தீயோர் அனைவருக்கும் மரண வேதனை உண்டு. அந்நேரத்தில் உடல் வேதனையாக இருக்கும். கடுமையான தாகமும் ஏற்படும். அத்தருணத்தில் இப்லீஸ் தண்ணீர் பாத்திரத்துடன் அந்த மனிதரின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, "ஏன் இவ்வளவு சிரமப்படுகிறாய்? உனது ஓரிறை கொள்கையை விட்டுவிடு! அதாவது அல்லாஹ் என்று ஒருவன் இல்லை என்று சொல்! அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இறைவன் உண்டு என்று சொல்! நான் உனக்கு குளிர்ந்த தண்ணீர் தந்து உன் தாகம் தீர்க்கிறேன்" என்று கூறி இறைநம்பிக்கையை தகர்க்க சதி செய்வான். 

அல்லாஹ் நல்லோரை இதுபோன்ற ஷைத்தானின் சதியிலிருந்து பாதுகாப்பான். தீயோர் அவனின் சதியில் அகப்பட்டு, இறைநம்பிக்கையை இழந்து துர்மரணம் அடைவார்கள்.

இறைநேசர்கள்

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் நல்ல முடிவை கேட்டு இவ்வாறு பிரார்த்தித்துள்ளார்கள். ( اَللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا، وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَمِنْ عَذَابِ الْآخِرَةِ ) "இறைவா! எங்கள் காரியங்கள் அனைத்திலும் எங்கள் முடிவை நன்மையானதாக ஆக்குவாயாக! இவ்வுலகின் இழிவிலிருந்து மறுவுலக வேதனையிலிருந்தும் எங்களைக் காப்பாயாக!                                                                               நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اَلعِبرَةُ بِالخَوَاتِیمِ ) இறுதி நிலையில் தான் தீர்மானிக்கப்படும்.

இறைநேசர் அஹ்மது கபீர் ரிஃபாயீ (ரஹ்) அவர்களிடம் ஒருவன் கிண்டலாக, நீர் சிறந்தவரா அல்லது என்னுடைய இந்த நாய் சிறந்ததா?" என்று வினவினான். அதற்கு அன்னார் கோபமடையவில்லை. அன்னாரது இயல்பிலும் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை. அன்னார், இப்போது இதற்கு பதிலளிக்க இயலாத நிலையில் உள்ளேன். இருந்தாலும், "இறைநம்பிக்கையுடன் நான் இறந்தால், நாயையைவிட நான் சிறந்தவன் ஆவேன். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். மாறாக, இறைநம்பிக்கையை இழந்தவனாக நான் இறந்தால், என்னைவிட உங்களுடைய நாய் தான் சிறந்ததாகும். ஏனெனில், அந்நாய் நரகம் செல்லாது. மிருகங்களெல்லாம் மறுமையில் விசாரணைக்குப் பிறகு மண்ணோடு மண்ணாகி விடும்." என்று அமைதியாக பதிலளித்தார்கள்.

எனவே தான்,  பெரும்பெரும் இறைநேசர்கள் இதைப்பற்றி எண்ணி பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பார்கள். மேலும் அல்லாஹ்விடத்தில் யா அல்லாஹ்! நமது இறுதி முடிவை நல்லதாக்குவாயாக! ஈமானின் மீதே இறக்கச் செய்வாயாக! என பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பார்கள். எனவே மனிதன் எதை எண்ணி பெருமை கொள்ள முடியும்? ஏனெனில் நாளை என்ன நேரிடும் என்பது யாருக்கும் தெரியாது. இதனால்தான் "எவரையும் தாழ்வாகக் கருதாதீர்கள்" என்கிறது ஒரு நபிமொழி.

ஷைத்தானின் சதி வலையில் சிக்கி விடாமல், முஸ்லிமான நிலையிலேயே நமக்கு மரணம் வர வேண்டும் என நாம் ஒவ்வொரு நாளும் இறைவனிடம் பிரார்த்தித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

அல்லாஹுதலா நம்மை இறைநம்பிக்கையோடு வாழ செய்து இறைநம்பிக்கையோடு மரணமடைய செய்வானாக! ஆமீன்!

மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலி இம்தாதி, இமாம்: இமாம்: நீலாங்கரை, சென்னை.

 

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...