அஞ்சிறைத் தும்பி
وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ
اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ
(நபியே!) உம்முடைய இறைவன் தேனீக்களுக்கு, "மலைகளிலும் மரங்களிலும்
(மனிதர்கள்) கட்டுகின்றவற்றிலும் கூடுகளை அமைத்துக் கொள்" என்று அறிவித்தான்.
திருக்குர்ஆன்:- 16:68
சர்வதேச அளவில் உணவு உற்பத்தியை அதிகரிப்பது, ஊட்டச்சத்தை மேம்படுத்துவது மற்றும் பட்டினியை எதிர்த்துப்
போராடுவது ஆகியவற்றில் தேனீ வளர்ப்பு மற்றும் தேனீக்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும்
விதத்தில், 2018 முதல் ஒவ்வோர் மே 20 ஆம் தேதி உலக தேனீக்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
தேனீக்களை "அஞ்சிறைத் தும்பி" என்று இலக்கியத்தில் சிறப்பிக்கப்படுகிறது.
தேன் என்பது இனிப்பான, பிசுபிசுப்பான பெரும்பாலும் பொன்னிறமான திரவ உணவாகும். தேனீக்கள்
பல மலர்களிலிருந்து உறிஞ்சி எடுத்து, தேனடையில் தேனை சேகரிக்கின்றன. தேன் மிக பண்டைய
காலத்தில் இருந்தே மனிதனின் ஊட்டச்சத்துணவில் மிக முக்கிய இடம்பெற்று வருகிறது.
ஊட்டச்சத்து மிக்கது
தேனில் வைட்டமின் பி-2 அதிக அளவு உள்ளது. இது, கோழி இறைச்சியில் இருக்கும்
வைட்டமினுக்கு நிகரானது. இது ஆப்பிள் மற்றும் திராட்சைச் சாறுகளில் உள்ள வைட்டமின்
சக்தியைவிட 16 மடங்கு அதிகமாகும். வைட்டமின் பி-2 ஆனது எண்ணெய், சர்க்கரை, புரதம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் கொண்டதாகும். நாம்
உட்கொள்ளும் உணவு வகைகளில் இந்த வைட்டமின் சத்து குறைந்தால் குடற்புண், அழற்சி, பரு ஆகியன தோன்றும்.
களைப்பு நீங்க, தேன் ஓர் அரிய பானமாகும். ஒரு கிலோ தேனில் 31.2 கிலோ கிராம் இறைச்சி,
12 கிலோ காய்கறிகளில் கிடைக்கும் சக்தி உள்ளது. தேனில் உள்ள குளுக்கோஸ் சத்தே நோய்
நிவாரணி ஆகிறது. இது உயிரினங்களுக்கும் உடல் உறுப்புக்கும் சிறந்த உணவாகும். காயங்களுக்கும்
தேன் சிறந்த மருந்தாகும். மூச்சுத்திணறல், குடல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிரஞ்சீவி ஆகும்.
1445 ஆண்டுகளுக்கு முன்பு தேனைப் பற்றி கூறப்பட்ட திருக்குர்ஆனின் கூற்றை இன்று மருத்துவ
உலகம் ஆமோதிக்கிறது. முன்னாள் வல்லரசான ரஷ்யாவின் "மிர்" விண்வெளி நிலையத்தில்
அலெக்சாண்டர்வோல்கோப், செர்கிரினெல் யோவ் ஆகிய வீரர்கள் தங்கியிருந்தனர். இவர்களுக்கு
தேவையான உணவுப் பொருள்களில் தேனும் முக்கிய உணவாக இடம் பெற்றிருந்தது. இதன் இயக்குனர்
பாலியோகோவ் கூறுகையில் விண்வெளி வீரர்களுக்கு பற்றாக்குறையின் காரணமாக தரமான தேன் அனுப்பப்படவில்லை.
அதனால், விண்வெளி வீரர்கள் பெரிதும்
பாதிக்கப்பட்டார்கள் என்ற இச்செய்தியை ரஷ்யாவின் ஆதாரப்பூர்வமான செய்தி ஏஜென்சியான
ரீடா கூறியுள்ளது.
விருப்ப உணவு
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُحِبُّ
الْحَلْوَاءَ وَالْعَسَلَ )
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டத்தையும், தேனையும் விரும்பிவந்தார்கள். நூல்:- புகாரீ-5431, முஸ்லிம்-2938, அபூதாவூத்-3227
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்)
ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (அவர்களது அறையில் அதிகநேரம்) தங்கியிருந்து தேன்
சாப்பிடுவது வழக்கம். ஆகவே, (இது பிடிக்காமல் நபியவர்களின் துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும்
எங்களுக்குள் "நபியவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில்
வந்தாலும் "தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா?" என்று கேட்க வேண்டும்"
எனக் கூடிப் பேசி முடிவு செய்துகொண்டோம்.
அவ்வாறே எங்களில் ஒருவரிடம் நபியவர்கள் வந்தபோது, முன்பு பேசி வைத்திருந்தபடி கேட்டோம். அதற்கு நபியவர்கள், ( لاَ بَلْ شَرِبْتُ عَسَلاً عِنْدَ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ وَلَنْ أَعُودَ لَهُ ) "(அப்படியெல்லாம் இல்லை.)
மாறாக, ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம்
(அவரது அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவு தான். சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு
செய்யமாட்டேன்" என்று கூறினார்கள்.
அப்போதுதான், "நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு
அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக்கொள்கிறீர்கள்?"
என்று தொடங்கி "நீங்கள் இருவரும் இதற்காக அல்லாஹ்விடம்
பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)" என முடியும் (66:1-4) வசனங்கள் அருளப்பெற்றன.
நூல்:- புகாரீ-5267, முஸ்லிம்-2937, அபூதாவூத்-3227
அல்லாஹ்வினால் அனுமதிக்கப்பட்ட ஒன்றை அருமை நாயகம் (ஸல்) அவர்களேகூட எந்த காரணத்தை
முன்னிட்டும் தடை செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதைத்தான் இந்த வசனம் எடுத்துரைக்கிறது.
தேன் என்பது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும், மருத்துவ குணமும் கொண்டது. எனவே, அதை வேண்டாம் என்று
வெறுத்தொதுக்குவது நல்லதல்ல. நபியவர்கள் வெறுத்துவிட்டதை நபிநேசர்களும் வெறுத்துவிடுவார்கள்
என்பதற்காக அல்லாஹ் இவ்வாறு கட்டளையிட்டிருக்கலாம்.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்குத்
தேன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை எங்கள் மத்தியில் ஒரு ஒரு கரண்டி (அளவுக்குப்)
பகிர்ந்தளித்தார்கள். அப்போது நான் என்னுடைய ஒரு கரண்டி அளவு தேனை எடுத்துக்கொண்டேன்.
பின்னர், ( يَا رَسُولَ اللَّهِ أَزْدَادُ أُخْرَى ) "நாயகமே! எனக்கு இன்னும் அதிகம் கிடைக்குமா?" என்று கேட்டேன். அதற்கு
நபியவர்கள், "ஆம்" என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-3442
இறைவனின் இராணுவம்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (பத்துப் பேர் கொண்ட)
உளவுப் படையொன்றை (ஓரிடத்திற்கு) அனுப்பினார்கள். ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்களை
அப்படையினருக்குத் தலைவராக்கினார்கள். அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்து)
மக்காவுக்கும் உஸ்ஃபானுக்கும் இடையிலுள்ள (‘ஹத்தா' என்ற) இடத்தில் இருந்தபோது ‘ஹுதைல்' குலத்தைச் சேர்ந்த பனூலிஹ்யான்
என்றழைக்கப்பட்ட கிளையினருக்கு அவர்களைப்பற்றித் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், அம்பெய்யும் வீரர்கள்
சுமார் நூறு பேருடன் கிளம்பி, உளவுப் படையினரை சுற்றி வளைத்துக்கொண்டு அவர்களைப் பார்த்து, “நீங்கள் எங்களிடம் இறங்கிவந்துவிட்டால், உங்களில் யாரையும் நாங்கள்
கொலை செய்யமாட்டோம் என்று உங்களுக்கு உறுதிமொழியும் வாக்குறுதியும் தருகிறோம்” என்று
கூறினர்.
அப்போது ஆஸிம் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நான் ஓர் இறைமறுப்பாளரின் (வாக்குறுதியை நம்பி அவரது)
பாதுகாப்பில் இறங்கிச் செல்லமாட்டேன். இறைவா! எங்களைப் பற்றிய செய்தியை உன் தூதருக்குத்
தெரிவித்துவிடு” என்று கூறினார்கள். அப்போது அக்கிளையினர்,
உளவுப்படையினர் மீது அம்பெய்தி சண்டையிட்டு ஆஸிம்
(ரலி) அவர்கள் உட்பட ஏழுபேரை அம்பெய்து கொன்றுவிட்டனர்.
மேலும், (ஆஸிம் பின் ஸாபித் - ரலி அவர்கள் கொல்லப்பட்டுவிட்ட செய்தி குறைஷியருக்குக் கிடைத்தபோது)
அவர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்வதற்காக அவரது உடலில் ஓர் உறுப்பை எடுத்து வரும்படி
ஆளனுப்பினார்கள். (ஏனெனில்,) ஆஸிம் (ரலி) அவர்கள் பத்ர் போரின்போது அவர்களின் தலைவர்களில்
ஒருவரைக் கொலை செய்திருந்தார். (அவரது உடலின் ஒரு முக்கிய உறுப்பை வெட்ட அவர்கள் போனபோது)
ஆஸிம் (ரலி) அவர்களுக்குமேல் (அன்னாரைப் பாதுகாக்கும் நோக்கில்) அல்லாஹ் மேகத்தைப்
போன்று ஆண் தேனீக்களை அனுப்பினான். குறைஷியரின் தூதர்களிடமிருந்து ஆஸிம் (ரலி) அவர்களை
(சூழ்ந்துகொண்டு) அவை பாதுகாத்தன. ஆகவே, அவரிடமிருந்து எதையும் எடுக்க அவர்களால் இயலவில்லை.
நூல்:- புகாரீ-4086
ஆஸிம் (ரலி) அவர்கள் தமது இறுதி நேரத்தில் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான்.
அவரைப்பற்றிய தகவல் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அன்னாரின் புனித
உடலை எதிரிகள் தொடக்கூட முடியாத அளவிற்கு தேனீக்களால் பாதுகாக்கப்பட்டது. அதாவது, அன்னாரின் புனித உடல்
தேனீக்களால் ஒரு மனித உருவம் செய்தால் எப்படி இருக்கும், அது போன்ற தோற்றத்தில் காட்சியளித்தது. அப்போது
தேனீக்கள் இறைவனின் இராணுவமாக செயல்பட்டது. சுருங்கக்கூறின், ஆஸிம் (ரலி) அவர்களின் புனித உடலுக்கு அருகில் யாரும் நெருங்க
முடியாதவாறு அல்லாஹுத்தஆலா தேனீக்களைக்கொண்டு இஸட் பாதுகாப்பு வழங்கினான்.
நோய் குணமாக
அதன் வயிறுகளிலிருந்து பல வண்ணப் பானம் ஒன்று வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு
நோய் நிவாரணம் உள்ளது. சிந்தித்து உணரும் மக்களுக்கு நிச்சயம் இதில் சான்று உள்ளது.
திருக்குர்ஆன்:- 16:69
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الشِّفَاءُ فِي ثَلاَثَةٍ شَرْبَةِ عَسَلٍ ) மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. (அதில் ஒன்று) தேன் அருந்துவது.
அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5680
ஆமிர் பின் மாலிக் ரலி அவர்கள் கூறியதாவது. ( بَعَثْتُ إلى النَّبِيِّ ﷺ مِن وعْكٍ كانَ بِي
ألْتَمِسُ مِنهُ دَواءً أوْ شِفاءً، فَبَعَثَ إلَيَّ بِعُكَّةٍ مِن عَسَلٍ ) நான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது அதற்குரிய மருந்து அல்லது
நிவாரணம் தேடியவனாக ஒருவரை கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் அனுப்பினேன். அப்போது
நபியவர்கள் தேன் ஜாடி ஒன்றை எனக்கு அனுப்பிவைத்தார்கள். நூல்:- ஷுஅபுல் ஈமான் இமாம்
பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
ஒரு மனிதர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து,
"என் சகோதரருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருக்கிறது"
என்று கூறினார். நபியவர்கள், ( اسْقِهِ عَسَلاً
) "அவருக்கு தேன் புகட்டுவீராக!" என்று கூறினார்கள். அவ்வாறே
தேன் புகட்டினார். ஆனால், அது அவருக்கு வயிற்றுப்போக்கை அதிகமாக்கியது. இவ்வாறு நான்கு
முறை அவர் நபியவர்களிடம் வந்து கூறினார். நான்காவது முறை நபியவர்கள், ( صَدَقَ اللَّهُ، وَكَذَبَ بَطْنُ أَخِيكَ، اسْقِهِ عَسَلاً ) "அல்லாஹ் உண்மையை சொல்லியுள்ளான்.
உன்னுடைய சகோதரரின் வயிறு தான் பொய் சொல்லுகிறது. அவருக்கு தேன் புகட்டுவீராக!" என்று கூறினார்கள். அதன் பின்பு அவர் தன் சகோதரருக்கு
தேனைக் கொடுத்தார். அவரின் வயிற்றுப்போக்கு குணமடைந்தது. அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ
(ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5684, முஸ்லிம்-4454, திர்மிதீ-2008
ஒரு நோய் குணமடைவதற்கு அதற்குரிய மருந்து ஓரளவு உடலினுள் போய் சேர வேண்டும். அந்த
நபித்தோழர் மூன்று முறை சாப்பிட்டும் அவருடைய வயிற்றுப்போக்கு குணமாவதற்குரிய அளவு
தேன் அவரின் உடலினுள் போய் சேரவில்லை. நான்காவது முறை தேன் கொடுக்கப்பட்டதும் அவருடைய
நோய் சுகமாவதற்குரிய அளவு சேர்ந்துவிட்டதால் அவர் குணமடைந்தார் என்று அறிஞர் இப்னு
கைய்யிம் (ரஹ்) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். நூல்:- அத்திபுந் நபவீ
இந்த நபிமொழி குறித்து மருத்துவ அறிஞர்கள் சிலர் கூறியிருப்பதாவது: அந்த மனிதரின்
வயிற்றில் கழிவுப்பொருள்கள் தேங்கியிருந்தன. சூட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்ட தேனை
அவர் அருந்தியதும் அது வயிற்றை இளக்கி கழிவுகளின் வெளியேற்றத்தை துரிதப்படுத்தியது.
அவரது வயற்றோட்டத்தை அதிகமாக்கிவிட்டது.
இது, அவரது உடலில் நல்ல விளைவை ஏற்படுத்திக்கொண்டிருந்த நிலையில் நபியவர்களிடம் வந்த
அவருடைய சகோதரர் தேன் இடையூறு அளிப்பதாகக் கருதினார்.
தொடர்ந்து அவர் தேனைப் புகட்டியபோது அது வயிற்றொட்டத்தை மேலும் அதிகமாகியது. அவ்வாறே
மூன்றாவது முறையாகவும் தேனைப் புகட்டினார். அது அவருடைய சகோதரரின் உடலுக்கு தீங்கிழைத்துக்
கொண்டிருந்த கழிவு பொருள்களை அடியோடு வெளியேற்றியதும் அவரது வயிற்றில் இருக்கும் ஏற்பட்டு
உடல்நிலை சீரடைந்தது வயிற்றொட்டமும் நின்றுவிட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் இறைவனின் வழிகாட்டலின் பேரில் எடுத்துரைத்த வளமிக்க
யோசனையின் காரணத்தால் அவரது நோய் அகன்று வலியும் மறைந்தது. நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
தேன் மலத்தை இளகச் செய்யும் என்பது உண்மைதான். இதனாலேயே மலச்சிக்கலுக்கு தேன் சிறந்த
நிவாரணி என்பர். ஆனாலும், வயிற்றுப்போக்குப் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அவற்றில்
அஜீரணம் அல்லது குடலில் ஏற்படும் நச்சும் (Septic) ஒன்றாகும். இந்தக் காரணத்தால் ஏற்படும் வயிற்றுப்போக்குக்குத்
தேன் சிறந்த நிவாரணையாகும். குடலில் குடிகொண்டுள்ள நச்சுக்கிருமிகள் வெளியேறி, வயிற்றுப்போக்கு குணமாகும்.
நூல்:- தக்மிலா
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ لَعِقَ الْعَسَلَ ثَلاَثَ غَدَوَاتٍ كُلَّ
شَهْرٍ لَمْ يُصِبْهُ عَظِيمٌ مِنَ الْبَلاَءِ ) எவர் ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் காலையில்
தேனைச் சுவைத்தாரோ அவருக்கு பெருந்துன்பத்தை விளைவிக்கும் நோய் எதுவும் ஏற்படாது. அறிவிப்பாளர்:-
அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-3441, அத்தாரீகுல் கபீர் இமாம்
புகாரீ, அல்அஸ்வத் இமாம் தப்ரானீ, ஷுஅபுல் ஈமான் இமாம்
பைஹகீ
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( عَلَيْكُمْ بِالشِّفَاءَيْنِ الْعَسَلِ وَالْقُرْآنِ ) தேன், திருக்குர்ஆன் ஆகிய இரண்டு நிவாரணிகளை நீங்கள் அவசியம் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-3443
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ( إنَّ العَسَلَ شِفاءٌ مِن كُلِّ داءٍ، والقُرْآنَ
شِفاءٌ لِما في الصُّدُورِ ) நிச்சயமாக தேனில்
அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உண்டு. மேலும், குர்ஆனில் உள்ளத்தின் நோய்களுக்கு நிவாரணம் உண்டு.
நூல்:- இப்னு அபீஷைபா, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள், மனித மருத்துவத்தையும் - இறை மருத்துவத்தையும், உடல்களுக்கான மருத்துவத்தையும்
- ஆன்மாக்களுக்கான மருத்துவத்தையும், மண்ணக (நில) மருந்தையும் - விண்ணக மருந்தையும் ஒன்றிணைத்து கூறியுள்ளார்கள்.
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. உங்களில் ஒருவர் ஏதேனும் நோயிலிருந்து நிவாரணம்
பெற விரும்பினால், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு வசனத்தை ஒரு தட்டில் எழுதி, மழை நீரால் அதை கழுவட்டும்.
பின்னர் தம் மனைவி மனமுவந்து அளிக்கும் ஒரு வெள்ளிக்காசைப் பெற்று அதைக் கொண்டு தேன்
வாங்கி, அதனுடன் அருந்தட்டும்.
இது (அனைத்து வகையிலும்) நிவாரணமாகும்
மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்: நாம் இந்த குர்ஆனில், இறை நம்பிக்கையாளர்களுக்கு நிவாரணமாகவும் அருளாகவும்
உள்ளவற்றை அருளியிருக்கிறோம். (17:82)
மற்றொரு வசனத்தில் "நாம் வானிலிருந்து வளம் பொருந்திய (மழை) நீரை பொழியச்
செய்தோம்" (50:9) என்று அல்லாஹ் கூறுகிறான்.
இன்னொரு வசனத்தில் "அதில் எதையேனும் அவர்கள் மனமுவந்து உங்களுக்கு விட்டுக்
கொடுத்தால் அதை மனநிறைவுடன் மகிழ்வுடனும் உண்ணுங்கள்" (4:4) என்று அல்லாஹ் கூறுகிறான்.
தேனைப் பற்றி "அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது" என்று அல்லாஹ்
கூறுகிறான். (16:69) நூல்:- தப்சீர் இப்னுகஸீர் அந்நஹ்ல் வசனம்-69
குர்ஆன் வசனங்களிலும் தேனிலும் நோய் நிவாரணம் உள்ளது;
மழைநீர் வளமிக்கது. மனைவி மனமுவந்து தரும் பணத்தைப் பெறுவதில் தவறில்லை.
இது, அலீ (ரலி) அவர்களின்
மேற்சொன்ன கூற்றுக்கு சான்றாக உள்ளது.
இறைநம்பிக்கையாளருக்கு உதாரணம்
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ مَثَلَ الْمُؤْمِنِ كَمَثَلِ النِّحْلَةِ
إِنْ صَاحِبَتَهُ نَفْعُكَ، وَإِنْ شَاوَرْتَهُ نَفْعَكَ، وَإِنْ جَالَسْتَهُ نَفْعَكَ
وَكُلُّ شَأْنُهُ مَنَافِعُ، وَكَذَلِكَ النِّحْلَةُ كُلُّ شَأْنُهَا مَنَافِعُ ) ஒரு இறைநம்பிக்கையாளர் தேனீயைப்
போன்றவர். அவருடன் நீ சேர்ந்திருந்தால் அவர் உனக்கு பயன் அளிப்பார். அவரிடம் யோசனை
கேட்டால் பயனுள்ள யோசனைகளை வழங்குவார். அவருடன் நீ அமர்ந்திருந்தால் உனக்குப் பலன்
உண்டு. அவருடன் ஒவ்வொரு அசைவும் பயனுள்ளதாகவே இருக்கும். தேன் கூட்டின் ஒவ்வொரு அம்சமும்
இவ்வாறு தான், பயனுள்ளதாகவே இருக்கும். அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல்
ஈமான் இமாம் பைஹகீ
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مِثْلُ الْمُؤْمِنِ مِثْلُ النِّحْلَةِ، لَا
تَأْكُلُ إِلَّا طَيِّبًا، وَلَا تَضَعُ إِلَّا طَيِّبًا ) ஒரு இறைநம்பிக்கையாளர் தேனீயைப் போன்றவர். அது
நல்லதை மட்டுமே உண்டு, நல்லதை மட்டுமே வெளிப்படுத்தும். (அதாவது, மனிதனுக்கு, தேன் பயனளிக்கும்; தீங்கு விளைவிக்காது.) நூல்:-
இப்னுஹிப்பான், ஜாமிஉஸ் ஸஙீர், ஸஹீஹ் ஜாமிஉ
தேனீக்கள் கூட்டாக தான் வாழும். தமது கூட்டை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ளும்.
தேனீக்கள் போல உழைக்கும் உயிர்களை இந்த உலகில் பார்ப்பது கடினம். கூட்டை கட்டுவது, இளம் குஞ்சுகளுக்கு
உணவளிப்பது, தேன் சேகரிப்பது, அதை சேமிப்பது என எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கும்.
ஒரு பண்ணையில் தேனீக்களை வளர்ப்பதன் மூலம் அந்தப் பகுதியில் மகரந்தச் சேர்க்கை
சிறப்பாக நடைபெறும். அதன்மூலம் அமோக விளைச்சல் ஏற்படும்.
வழி அறியும் திறன்
நீ அனைத்து வகையான கனி(களின் மலர்)களிலிருந்தும் அருந்து! உன் இறைவன் (காட்டிய) வழிகளில் எளிதாக(ப் பறந்து) செல் (என்றும் அறிவித்தான்.) திருக்குர்ஆன்:- 16:69
தேனீக்களின் வழி அறியும் திறன் இவ்வசனத்தில் (16:68) தேனீக்களை நோக்கி உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் என்று தேனீக்களுக்கு உள்ளுணர்வை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தேனீக்கள் பாதைகளை அறிவதில் தனித்து விளங்குகின்றன என்பதை இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து பிரிட்டனைச் சேர்ந்த ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது: தேனைத் தேடி, தேனீக்கள் அதிகப் பயணம் மேற்கொள்கின்றன. ஆனால், அவை அதிகமான குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகின்றன. இதற்காக, கம்ப்யூட்டரின் உதவியுடன், செயற்கைப் பூக்களைக் கொண்டு, தேனீக்களின் பயண வழியைக் கண்காணித்தோம். அதில், தேனீக்கள் மிகக் குறைவான நேரத்தில், வெவ்வேறு பூக்களுக்குச் செல்வதற்கு அதிக குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தோம்.
அந்த வழிகள், விற்பனைப் பிரதிநிதி செல்வதற்காக, கம்ப்யூட்டர் உருவாக்கிக் கொடுத்த வழிகளை விட, அதிக வழிகளாகும். இதன் மூலம், கம்ப்யூட்டரின் அறிவை, மிகச்சிறிய தேனீயின் மூளை மிஞ்சியுள்ளது. இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
வழிகளை எளிதாகக் கண்டு கொள்ளும் திறன் தேனீக்களுக்கு உள்ளது என்ற இந்த உண்மையை திருக்குர்ஆன் அன்றே சொல்லிவிட்டது.
எளிதாக வழிகளைக் கண்டுபிடிப்பது என்பது குறுக்கு வழிகளை மட்டும் குறிக்காது. சரியான வழியையும் கண்டுபிடித்தால் தான் எளிதாக இருக்கும். ஒரு மலரில் அல்லது கனியில் தனக்கு உரிய உணவு உள்ளதா? என்பதை மோப்ப சக்தி மூலம் சரியாகக் கண்டுபிடித்தால் தான் வழிகள் எளிதாக இருக்கும். ஒவ்வொரு பூவாகச் சென்று ஏமாந்தால் வழிகள் எளிதாக இருக்காது. அலைச்சல் தான் மிச்சமாகும். தேனீக்களின் மோப்ப சக்தி மிகத் துல்லியமாக அமைந்துள்ளதயும் இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள்.
பலவீனமான படைப்பான இந்தத் தேனீப் பூச்சிகளுக்கு விசாலமான ஆகாயவெளியில் பறந்து சென்று, பல வகை மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி, மெழுகையும் தூய்மையான பொருளான தேனையும் சேகரிக்கும் அகத்தூண்டலை இறைவன் ஏற்படுத்திருப்பதில் சிந்திக்கும் மக்களுக்கு நிச்சயமாக சான்று உண்டு.
காதியானி
மௌலானா மஹ்மூது ஹசன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஒருமுறை ஒரு காதியானியிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
அப்போது அவன் "மிர்ஸா குலாம் அஹமது நபியாக இருந்தார்" என்று கூறினான். அவருக்கு
வஹீ (எனும் இறைச் செய்தி) வந்து கொண்டிருந்தது. வஹீ நபி எனும் இறைத்தூதரிடம் தான் வரும்!
வேறு யாரிடமும் வராது என்றான்.
நான், நபி அல்லாதவருக்கும்
வஹீ வந்துள்ளதே! வஹீ வருவதற்கு நபியாக இருக்க வேண்டுமென்பது என்ன அவசியம்? இன்னும் சொல்லப்போனால்
மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
ஏனெனில் திருக்குர்ஆனில் உமது இறைவன் தேனீக்களுக்கு அனுப்பினான் (16:68) என்றுள்ளது. எனவே, தேனீயும் நபி என்று சொல்லலாமா?
நபித்துவப் பிரச்சனை, கொள்கை விசுவாச சம்பந்தமானவகைகளில் உள்ளது என்பதால் அதற்கு உறுதியான
ஆதாரங்கள் தேவை. அவை பரிசுத்த திருக்குர்ஆனிலிருந்து இருக்க வேண்டும் எனவே எல்லாவற்றையுமே
திருக்குர்ஆனிலிருந்து சமர்ப்பித்து கொண்டிருக்கிறேன். நூல்:- குத்பாத் மஹ்மூது
எனவே, வஹீ வருகிறது என்பதற்காக
அவர் நபியாக ஆகிவிட முடியாது. வரும் வஹீ யாரிடமிருந்து யாருக்கு என்ன செய்தி வருகிறது
என்று கவனித்துத்தான் அவர் நபியா? அல்லது அவன் வேறு மாதிரியானவனா? என்று தீர்மானிக்க முடியும். எனவே தனக்கு வஹீ வருகிறது
என்பதால், தான் நபி என்று வாதிடுபவனெல்லாம்
நபியாகிவிட முடியாது” என்று பதிலளித்தார்கள்.
கெட்டுப்போவதில்லை
தேன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போவதில்லை. தேன் பல்லாண்டு காலமாக மாற்றம்
எதுவும் இன்றி எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு இன்று வரை புரியவில்லை.
மலர்களை நாடிவரும் தேனீக்கள் மலர்களில் உள்ள பூந்தேன் (Nectar) அல்லது மகரந்தத்தேனை
உறிஞ்சித் தன் தேனீயின் இரைப்பையில் (Honey Sac) சேகரித்துத் தங்கள் கூட்டிற்கு எடுத்துச் செல்கின்றன.
இந்தப்பை தேனீயின் செரிமானப்பாதையில் இரைப்பைக்குப் பக்கத்தில் ஒரு சிறு பிதுக்கமாக
அமைந்துள்ளது. தேன் பையில் இருக்கும்போது, முதற்படியாக பூந்தேன் வேதியல் மாற்றமடைந்து (Chemical Chenge) தேனாக மாறுகிறது. இதைத்
தெளிவாக அன்று திருக்குர்ஆன் கூறியிருப்பது இன்றைய விஞ்ஞானமாக அறியப்படுகிறது.
இங்கு தேனிலுள்ள பெருமளவு நீர் ஆவியாகமாறி வெளியேற்றப்படுகிறது. தங்கள் தேன் அறைகளில்
சேமித்து வைக்கும் தேன், பூந்தேனை போன்றே மிகவும் நீர்த்த நிலையிலேயே இருப்பதால் விரைவில்
புளித்துவிடும். தேன்கூடுகளில் சேமித்து வைக்கப்படும் தேன், பூந்தேனில் இருந்து
பெருமளவு நீர் அகற்றப்பட்டிருப்பதால் பல மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இதற்காக தேனீக்கள்
கூட்டமாககூடி தேன்கூடுகளை சுற்றி நின்று தங்கள் உடல்களின் உதவியால் அவற்றை வெப்பநிலையில்
பாதுகாக்கின்றன.
தேன் பல்லாண்டுக்காலமாக மாற்றம் எதுவுமின்றி எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி
விஞ்ஞானிகளுக்கு இன்று வரை புரியவில்லை. கொதிக்க வைக்கும் முறையை பின்பற்றாமலேயே தேனை
தேனீக்கள் பாதுகாக்கின்றன. மனிதன் கண்டுபிடிப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
தேனீக்கள் ஒரு இரசாயன கிருமி நாசியை கண்டுபிடித்துள்ளன. இது இறைவனின் அற்புதங்களில்
ஒன்று என்கின்றனர் விஞ்ஞானிகள்.
சடலங்களைப் பதப்படுத்த
12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மருத்துவரும் சுற்றுலா பயணியுமான அப்துல் லத்தீஃப் பக்தாதி
அவர்கள் எகிப்து நாட்டின் கிசே என்னுமிடத்திலுள்ள
பிரமிடுகளின் ஒன்றுக்கடியில் பாத்திரம் ஒன்றைக் கண்டெடுத்தார். பாத்திரம் நன்றாக
மூடப்பட்டிருந்தது. அதை உடைத்துப் பார்த்தபோது, பாத்திரம் நிறைய தேனும், தேனில் ஒரு குழந்தையின்
சடலமும் இருந்தது. குழந்தையின் சடலம் கெடாமல் அப்படியே இருந்ததை கண்டு அவர் வியப்படைந்தார்.
மத்திய கிழக்கில் படையெடுப்பில் ஈடுபட்டிருந்த மகா அலெக்சாண்டர் மரணமடைந்தபோது
அவரது உடல் ஒரு பாத்திரத்தில் தேனில் ஊறவைக்கப்பட்டு மாசிடோனியாவுக்கு புதைக்கப்பட
எடுத்துச் செல்லப்பட்டது என சரித்திர சான்றுகள் கூறியுள்ளன.
தேன் எவ்வளவு காலமானாலும் கெடாது. தேனில் உள்ள அழியா தன்மையை எகிப்தியரே முதலில்
கண்டுபிடித்தனர்.
அமெரிக்கா குளோரைடு பல்கலைக் கழக ஆய்வாளர் டாக்டர் சாக்கிட் (Sakkett) என்பவர் தேனில் நோய்க்கிருமிகள்
இருப்பதாக கருதினார். இதை உறுதி செய்வதறகாக அவர் மேற்கொண்ட ஆய்வுகள் பல, அவரது கருத்தை பொய்யாக்கிவிட்டன.
தேனில் விழக்கூடிய கிருமிகளில் பெரும் பகுதி சில மணி நேரங்களில் மடிந்துவிடுகின்றன
என்றும் எஞ்சியுள்ள கிருமிகளும் ஒரு சில நாள்களில் செத்துவிடும் என்றும் அவர் கண்டறிந்தார்.
சுத்தமான தேனில் ஈரத்தை உறிஞ்சும் தன்மை உண்டு. கிருமிகள் உயிர் வாழ்வதற்கு தேவையான
ஈரப்பதத்தை தேன் உறிஞ்சி விடுவதால், அவை உயிர் வாழ முடியாது.
டாக்டர் சாக்கிட் ஆராய்ச்சியிலிருந்து இந்த புள்ளி விவரமும் கிடைத்தது: தேனில்
விழக்கூடிய டொனஸ்டாரியா கிருமிகள் பத்து மணி நேரத்திலும்,
டைஃபாய்டு மற்றும் பாரா டைஃபாய்டு A,B கிருமிகள் 48 மணி நேரத்திலும் செத்து விடுகின்றன. தேனில் இருக்கும் உயிர் எதிர்ப்பு சக்தியை
இதற்குக் காரணம்.
அழிவின் விளிம்பில்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( عَنْ قَتْلِ أَرْبَعٍ مِنَ الدَّوَابِّ النَّمْلَةِ وَالنَّحْلِ وَالْهُدْهُدِ
وَالصُّرَدِ ) நான்கு உயிரினங்களைக் கொல்வதை தடை செய்தார்கள். அவை: எறும்பு, தேனீ, ஹுத் ஹுத் பறவை, ஸுரத் கொல் பறவை ஆகியவையாகும்.
நூல்:- அபூதாவூத்-4583, இப்னுமாஜா-3215, முஸ்னது அஹ்மத்-2907 தாரிமீ-1915
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الذبابُ كلُّهُ في النارِ إلَّا النحلَةُ ) தேனீயைத் தவிர, மற்ற அனைத்து ஈக்களும் நரகத்திற்குச் செல்பவை ஆகும். அப்துல்லாஹ்
பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- அல்கபீர் இமாம் தப்ரானீ, அல்முஅஜம் அபூயஅலா, மஜ்மஉஸ் ஸவாயித்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الذُّبَانُ كُلُّهَا فِي النَّارِ يَجْعَلُهَا
عَذَابًا لِأَهْلِ النَّارِ إِلَّا النَّحْلَ ) தேனீக்களைத் தவிர, மற்ற அனைத்து ஈக்களுக்கும் நரகம் தான். அவற்றைக்
கொண்டு நரகவாசிகளுக்கு வேதனை செய்யப்படும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல்:- நவாதிரில் உசூல், தஃப்சீர் குர்துபீ அந்நஹ்ல் வசனம்-28
விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தேனீக்கள் குறித்து, "உலகில் தேனீக்கள் அழிந்துவிட்டால், அடுத்த நான்கு ஆண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும்”
என்று கூறினார்.
மகரந்தத் தூள் ஒரு தாவரத்தில் இருந்து மற்றொன்றிற்கு கடத்தப்படும்போது மகரந்தச்
சேர்க்கை நடக்கும். இதனால் தாவரங்கள் பல்கிப் பெருகும். 80% மகரந்தச் சேர்க்கைக்கு தேனீ, பட்டாம்பூச்சி போன்ற உயிரினங்களே காரணம் என்கிறது ஐ.நா. அறிக்கை.
தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்த தூள், அடுத்தடுத்த பூக்களின்
மேல் அவை உட்காரும்போது பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்கு முக்கிய காரணம். பூக்களில்
உள்ள மகரந்தத்தை வெவ்வேறு பூக்களுக்குக் கடத்துவதன் மூலமாக, தேனீக்கள் தாவரங்களுக்கு
மிகப்பெரிய உதவியைச் செய்கின்றன என்றே சொல்லலாம்.
"தேனீக்கள் இல்லையென்றால் தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகள், தென்னை, வாழை, எண்ணெய் உற்பத்திக்கான
பயிர்கள், பாதாம், வால்நட்டுகள், தேயிலை, காபி, கோகோ பீன்கள், ஆப்பிள், ஏலக்காய், பருத்தி போன்ற பல பயிர்களில்
மகரந்தச் சேர்க்கைகள் பாதிக்கப்படும். இது மனித உணவில் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு
வழிவகுக்கும் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே, தேன் உற்பத்திக்கு மட்டுமல்லாது, உலகளவிலான உணவு உற்பத்திக்கும்
தேனீக்கள் இன்றியமையாததாக உள்ளன.
தேனீக்கள் என்பவை தேன் கொடுக்க மட்டும்தான் இந்த உலகத்தில் உள்ளன என்றுதானே பெரும்பாலானோர்
நினைக்கிறார்கள்.
தேனீக்கள் செய்யும் மகரந்தச் சேர்க்கைக்காக மனிதர்கள் அதைக் கண்டிப்பாகப் பாதுகாக்க
வேண்டும். உலகின் மிகச்சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர் இந்த தேனீக்கள்தான். தேனீக்களின்
மகரந்தச் சேர்க்கை இல்லையென்றால், தாவர இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படும். பின்னர் உணவு உற்பத்தி
குறைந்து, மனித அழிவின் தொடக்கமாக
அது இருக்கும்.
சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளையின் மூத்த நிபுணரான, முனைவர் பிரியதர்ஷனன்
தர்ம ராஜன் என்பவர் எந்தெந்த வழிகளில் மனிதர்களால்
தேனீக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதை பட்டியலிட்டு விளக்கினார்.
சில பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாடு தேனீக்களை நேரடியாக கொல்லலாம்
அல்லது அவற்றைக் கடுமையாக பலவீனப்படுத்தலாம். தேனீக்களின் அழிவுக்கு அவைதான் முக்கிய
காரணம்.
தேனீக்கள் விளைநிலங்களையும் பூக்களையும் தேடிச் செல்வது உணவுக்காகவும், மகரந்தச் சேர்க்கைக்காகவும்
தான். விவசாய நிலங்கள் அழிக்கப்படும்போது அவை உணவின்றி அழிவைச் சந்திக்கின்றன.
தேனீக்களில் காட்டுத் தேனீ வகைகள் தான் அதிகம். சாதாரண தேனீக்களைப் போல் அல்லாமல், காட்டுத் தேனீக்களுக்கு
மிகப்பெரிய வாழ்விடம் தேவைப்படுகிறது. காடுகள், மரங்கள் அழிக்கப்படும்போது, அவை கூடுகள் கட்டும், உணவு சேகரிக்கும் பகுதிகளும்
சேர்ந்தே அழிகின்றன.
தேனீக்களின் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse
Disorder (சுருக்கமாக: CCD) அதாவது, கூட்டில் இருந்து உணவுசேகரிக்கச் சென்ற பணிபுரியும்
தேனீக்கள் கொத்துக் கொத்தாகக் காணாமல் போய்விடும். ராணித் தேனீ மட்டும் கூட்டில் இருக்கும்.
பணித்தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதென்றுத்
தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும். இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும்.
பணித்தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது
செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்.
செயற்கை உரத்தில் உள்ள நியோநிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு
மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால், கூட்டுக்குத் திரும்பும்
வழி மறந்துபோய் பறந்து அலைந்து திரிந்து இறந்துவிடும்.
மரபணு மாற்றப்பட்ட உணவுப்பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதைதானியத்தை’ உருவாக்காது.
மலட்டு விதைகளைத்தான் உருவாக்கும். அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில்
உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்,செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும். இப்படி
விவசாயத்தில் 'வணிக இலாபத்துக்காக’ மனிதன் செய்த பலமாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த
ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன.
அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப்
பெரிய அபாயம் ஏற்படவில்லை. ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)
ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி,பெருமளவு குறைந்து வருவதற்கு
காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.
தற்போது உலகில், அழியும் உயிரினங்களின் பட்டியலில் தேனீக்கள் இடம்பெற்றிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சிகரமான
தகவல்.
சுருங்கக்கூறின்: தேனீக்களின் எண்ணிக்கை குறைந்தால் அதனால் முதலில் நேரடியாகப்
பாதிக்கப்படுவது மனிதர்கள் தான் என எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மேற்காணும் நபிமொழி, தேனீக்களை நேரடியாக கொல்வதையும், கண்டிக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும்
மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்துதல், காடுகள் மரங்கள் மலைகள்
அழிக்கப்படுதல் மூலம் தேனீக்கள் கொல்லப்படுவதையும் கண்டிக்கிறது.
நோய்களின் எதிரி
"தேனை நோய்களின் எதிரி" என்று அழைப்பதுதான்
சரியான பெயராகும். அது தடுக்காத, தீர்க்காத நோயே இல்லை என்று கூறலாம். யுனானி, ஹோமியோபதி, அலோபதி, ஆயுர்வேதம், சித்த வைத்தியம், சீன வைத்தியம் என்று
உலகிலுள்ள அனைத்து வைத்தியங்களும் தேனைப் போற்றுகின்றன.
பேரறிஞர் இமாம் இப்னு கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
1) இதயம் சம்பந்தப்பட்ட எந்த நோயாகட்டும் தேனும், மாதுளம்
பழமும் உண்டு வந்தால் தீரும்.
2) படபடப்பு, இரத்த கொதிப்பு உள்ளவர்கள் ஒவ்வொரு வேளை உணவிலும்
இரண்டு மேஜைக்கரண்டி அளவு தேன் கொண்டு வந்தால் குணமடையலாம். ஏனென்றால், தேன் உடலை அமைதிப்படுத்தும்
பொருளாகும். அது தானியங்கி நரம்பு மண்டலத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி அமைதிப்படுத்துகிறது.
உடலின் பாஸ்பரஸ் அளவை குறைத்து கால்சியத்தை அதிகப்படுத்தி இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்துகிறது.
ஒரு நாளைக்கு 70 கிராம் என்ற அளவில்
இரண்டு மாதம் அருந்திவந்தால் இரத்தத்தின் தன்மை உடம்புக்கு ஏற்ற வகையில் மாறுகிறது.
3) ஜலதோஷம், மார்புச்சளி, கபம் போன்றவற்றுக்கு இளஞ்சூடான பாலில் தேன் கலந்து
சாப்பிடுவது சிறந்தது.
4) நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு மட்டும் தேன் கலந்து
அருந்த அருமையான தூக்கம் வரும்.
5) முருங்கைப் பிசினைத் தூளாக்கி தேன் கலந்து சாப்பிட்டால்
நரம்புகள் வலிமை பெறும்.
6) சீரகத்தை பொடி செய்து தேன் கலந்து நாவில் தடவினால்
விக்கல் நிற்கும்.
7) பேரிச்சம்பழத்தைப் பாலில் காய்ச்சி தேன் கலந்து
சாப்பிட தாது உற்பத்தியாகி ஆண்மை பெருகும். இரவில் பாலுடன் தேன் கலந்து அருந்துவது
ஆண்மைக்கு நல்லது.
8) இளநீரோடு தேன் சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.
9) மாதவிடாய் இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் மாங்கொட்டையின்
பருப்பை இடித்து தேன் கலந்து சாப்பிட வேண்டும்.
10) படுக்கப் போகும் முன் தேனில் வாயை கொப்பளித்தால்
கிருமிகள் அழிக்கப்படுகின்றன. வாய் நாற்றம் நீங்கும். ஈறுகள் பாதுகாக்கப்படும். சொத்தை
விழாது. தேனும், எலுமிச்சைச்சாறும் கொண்டு பற்களில் தேய்த்தால் பல் பளபளக்கும்.
11) தேனை உண்ணுவதன் மூலம் அசதி, பயம், படபடப்பு, சோர்வு போன்றவை நீங்கி, உடலுக்கு அதிக சக்தியை
தந்து, சுறுசுறுப்பை உண்டாக்குகிறது.
12) புண்களின் மீது தேனைத் தடவி வந்தால் அசிங்கமான தழும்புகள்
இல்லாமல் விரைவில் குணமடையும். மருத்துவத் தந்தை இப்னு சீனா ஹிப்டோகிரட்ஸ் போன்றோர்
காயங்களையும், புண்களையும் தீக்காயங்களையும் ஆற்றும் சக்தி தேனுக்கு உண்டு என்று நிரூபித்துக்
காட்டி பல மருத்துவக் குறிப்புகளை தருகிறார்கள்.
மற்ற மருந்து களிம்பு போன்றவற்றால் மருத்துவம் செய்யப்படும் புண்களின் மேல் இறந்த
திசுக்களை அகற்ற வேண்டியிருக்கும் (Surgical Debridement)
தோலை அழகுபடுத்த (Skin
Grafting) சில வேலைகளைச் செய்ய
வேண்டியிருக்கும். ஆனால் புண்கள்மீது தேனைத் தடவி செய்யப்பட்ட ஆய்வின் இதுவெல்லாம்
தேவையில்லாமல் அசிங்கமான தழும்புகளே இல்லாமல் மறைந்து போனது. மேலும் எட்டு வாரத்தில்
ஆறும் புண்கள் நான்கு வாரத்தில் மறைந்து போயின. நூல்:- அத்திப்புந் நபவீ
மூத்திரப்பையில் கிருமி தாக்காதிருக்க, பல்வலி தீர, உடம்பில் கொழுப்பு குறைய, தடுமல் வராதிருக்க, மலட்டுத்தன்மை நீங்க, வயிற்றுக்கோளாறு நீங்க, இருதநோயை தடுக்க, செறிமான கோளாறு ஏற்படாமல் இருக்க, முகப்பரு வராதிருக்க, புற்று நோயைத்தடுக்க, தோல் நோய் நீங்க, ஆயுளும், இளமையும் அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தொடர்ந்து நாம் தேன் சாப்பிட வேண்டும் என்கிறது மருத்துவ உலகம்.
சுவாரஸ்யமான தகவல்
ஒரு குழுவில் ராணித்தேனீ, ஆண்தேனீ, வேலைக்காரத் தேனீ ஆகிய மூன்று வகைகள் உள்ளன. இந்த மூன்றின் உடலமைப்பிலும் மாறுபாடுகள்
இருக்கின்றன. இவைகளின் கூட்டமைப்பினால் தான் தேன் கூடு உருவாகிறது. ஒரு தேன்கூட்டில்
ஒரே ஒரு ராணி தேனீ, ஒரு சில ஆண் தேனீக்கள் மற்றும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வேலைக்கார
தேனீக்கள் இருக்கும்.
ராணித் தேனீக்கும்,
வேலைக்கார தேனீக்களுக்கும் கொடுக்குகள் உள்ளன. ஆண்
தேனீக்களுக்கு கொடுக்கு இல்லை. தேன் சேகரிக்கும் உறுப்பும் இல்லை. எனவே, ஆண் தேனீக்கள் ராணித்தேனீயுடன் உறவு கொள்வதற்கு மட்டுமே பயன்படுகிறது.
ராணி தேனீ கூட்டத்தை வழிநடத்தும் ஒரு தலைவியாக செயல்படும். ஒரு கூட்டில் ஒரே ஒரு ராணி
தேனீ தான் இருக்கும். சராசரியாக இந்த ராணி தேனீ 3 ஆண்டுகள் வரை உயிர் வாழும். இந்த ராணி தேனீக்கு வயதாகும்போது கூட்டைவிட்டு வெளியேறிவிடும்.
அதன் பின்னர் வேலைக்கார தேனீக்கள் தங்களுக்குள் ஆலோசித்து,
அடுத்த தலைவியை உருவாக்கும் வேலையில் ஈடுபடும்.
ராணி தேனீ உயிரோடு நன்றாக இருக்கும்போது புது ராணி தேனீ உருவாகும் பட்சத்தில் பழைய
ராணி தேனீ கூட்டைவிட்டு சில படைகளை கூட்டிக்கொண்டு வெளியேறிவிடும். இவை தான் உழைக்கும்
தேனீக்களின் நிர்வாகம்.
தேன் மெழுகினாலும் தேன் பிசினாலும் ஆன ஒரே அளவான அரக்கோண வடிவில் அமைந்த இரு அடுக்குகளைக்
கொண்ட கூட்டில் தேன் சேகரிக்கப்படுகிறது. ஒரு கிலோ கிராம் தேனுக்கு, ஒரு தேனீ சுமார் 4 மில்லியன் மலர்களில் தேனை சேகரிக்கிறது. இதற்காக
பூமியை நான்கு முறை சுற்றிவரும் அளவுக்கு அது பறக்கிறது. தேன் கூட்டிலுள்ள தேன் தேனீக்களுக்கு
குளிர் காலத்தில் உணவாக பயன்படுகிறது.
தேனீக்களுக்கு ஆறு கால்கள் உள்ளன. அவை தன்னுடைய இறக்கைகளால் ஒரு மணி நேரத்துக்கு
25 கி.மீ கிடக்கும். பணித்தேனீ தமது வாழ்நாளில் சுமார்
500 மைல் கடக்கிறது. ஒரே நாளில் கிட்டத்தட்ட 2000 மலர்களில் இருந்து தேன் எடுக்கும் திறனையும் தேனீக்கள்
பெற்றுள்ளன.
தேன் எடுக்க சிறந்த காலமாக ஆடி, தை, மாசி ஆகிய மாதங்களையே தேர்வு செய்கின்றனர்.
தேனீக்கள் தாம் சிரமப்பட்டு சேர்த்த தேனை அமாவாசை இருளிலேயே அமர்ந்து ஒட்ட உறிஞ்சி
குடித்துவிடும். அமாவாசை நாள்களில் புவியீர்ப்பு விசை அதிகமாக இருக்கும். அப்போது தேன்கூடு
கீழ்நோக்கி இழுக்கப்படுவதினால் தேனீக்கள் வழக்கமான மாற்றம் ஒன்றை சந்திக்கிறது. இதனால்
வெளியாட்கள் தேன்கூட்டை கலைக்க முயற்சிக்கிறார்கள் என்று நினைத்து தேனீக்கள் தேனை குடித்துவிடும்.
கூட்டின் வெப்ப நிலையைக் குறைக்கவும் தேவையின் போது குளிர் காலங்களில் கூட்டில்
வெப்ப நிலையை ஏற்படுத்துவதும், எதிரிகள் தங்கள் கூட்டைத் தாக்க வரும்போது தங்கள் கொடுக்கினால்
எதிரியைக் கொட்டிப் பாதுகாக்கவும் செய்கின்றன. இவை ஒரு முறை எதிரியைக் கொட்டியவுடன்
இறந்துவிடுகின்றன.
மார்க்க அறிஞர்கள்,
"தேனீக்களை கனவில் கண்டால்
வசதி வாய்ப்புகள் பெருகும்" என்று விளக்கமளிக்கிறார்கள்.
இஸ்லாம் கூறுகின்ற அறிவுரைகளையும், விழிப்புணர்வையும், ஏற்று நடைமுறைப்படுத்தும் நல்லடியார்களாக அல்லாஹுத்தஆலா
நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்:
நீலாங்கரை, சென்னை. செல்:
9840535951