உறவோடு உறவாடுவோம்!
وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ
بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
எவனை முன்னிறுத்தி
நீங்கள் ஒருவருக்கொருவர் (உதவி) கேட்கின்றீர்களோ அந்த அல்லாஹ்வையும், உறவுகளை (முறிப்பதை)யும் அஞ்சி (நடந்து) கொள்ளுங்கள். அல்லாஹ்
உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். திருக்குர்ஆன்:- 4:1
மனிதன் இயல்பிலேயே
தனித்து வாழ முடியாதவனாகவும் பிறரைச் சார்ந்திருக்கும் பண்புகொண்டவனாகவும் படைக்கப்பட்டிருப்பதனால்,
தனது தேவைகளை நிறைவேற்ற பிறரைநாடிச் செல்கின்றான். தனது இன்ப, துன்பங்களில் ஏனையோர்களையும் இணைத்துக்கொள்ள விரும்புகின்றான்.
இதனால் குடும்பமாக, சமூகமாக வாழ தலைப்பட்டுள்ளான்.
இரத்த உறவைப் பேணுவது
வெறும் சமூகக் கட்டமைப்பிற்காக மட்டும் அவசியமானதல்ல. இஸ்லாமிய நோக்கில் இது இறைநம்பிக்கையின்
அம்சங்களில் ஒன்றாகும்.
அவனே மனிதனை நீரால்
படைத்தான். அவனுக்கு (வம்சத்தின் மூலம்) சொந்தங்களையும் (திருமணத்தின் மூலம்) பந்தங்களையும்
ஏற்படுத்தினான். உம்முடைய இறைவன் பேராற்றல் உடையவனாவான். திருக்குர்ஆன்:- 25:54
உறவுகள் மனிதனுக்கு
கிடைத்த ஒரு பலம். ஆறுதல்; உதவிக்கரம். இந்த
உறவுகளில் இரு வகைகள் உண்டு. 1) பிறப்பால் ஏற்படும் இரத்த உறவு. இதையே சொந்தம் (நசப்)
என அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான். இடையில் வரும் திருமண உறவு. இதையே பந்தம் (ஸிஹ்ர்)
எனக் குறிப்பிடுகின்றான். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
அழகிய வழிபாடு
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( أَسْرَعُ الْخَيْرِ ثَوَابًا الْبِرُّ وَصِلَةُ ) விரைவாக நற்கூலி பெற்றுத் தரும் நற்செயல்கள் யாதெனில் நன்னெறிப்
பேணுவதும், உறவுமுறை காப்பதும் ஆகும். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-4202, அபூயஅலா, தப்ரானீ, மீஸானுல் இஃதிதால்
இமாம் தஹபீ
அபூஅய்யூப் அல்அன்சாரி
(ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம், “நாயகமே! என்னைச் சொர்க்கத்தில்
சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்” என்று கேட்டார்.
அதற்கு நபியவர்கள், ( تَعْبُدُ
اللَّهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلاَةَ، وَتُؤْتِي الزَّكَاةَ،
وَتَصِلُ الرَّحِمَ ) “நீர் அல்லாஹ்வை வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையையும், (கடமையான) ஸகாத்தையும்
நிறைவேற்ற வேண்டும். உறவைப் பேணிவாழ வேண்டும்” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5983
உறவுகளை மதித்துப்
பேணி வாழ்வது கட்டாய கடமையாகும். உறவுகளைத் துண்டித்து வாழ்வது பெரும் பாவமாகும். உறவைப்
பேணி நடப்பதன் உயர்ந்தபட்ச அளவு என்னவென்றால், உறவினரின் இன்பம் மற்றும் துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்வதும், அவர்களுக்கு வேண்டிய உதவிகளை அளிப்பதும் ஆகும். குறைந்தபட்ச
அளவு உறவை துண்டிக்காமல் அவர்களுடன் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்வதாகும். முகமன்
(சலாம்) கூறுவதும் இதில் அடங்கும்.
அல்லாஹ்விற்கு எந்த
ஒன்றையும் இணைவைக்காத நிலையில் அவனுக்காக தொழுகையை நிலை நாட்டுவது, ஸகாத்தை கொடுப்பது
என்ற கட்டாய கடமைகளுடன் உறவைப் பேணி வாழ்வதையும் இணைத்து ஒரே வரிசையில் நபியவர்கள்
குறிப்பிட்டுள்ளார்கள். எனவே, உறவைப் பேணி வாழும் நற்பண்பு என்பது சொர்க்கத்தை வழங்கி, நரகத்திலிருந்து பாதுகாப்பையும்
வழங்கும் அழகான வழிபாடுகளில் உள்ள ஒன்றாகும்.
ஆம்! உறவைப் பேணி
வாழுதல் என்பது அல்லாஹ் விரும்புகின்ற உயரிய வழிபாடாகும். அந்த உயரிய வழிபாட்டை மேற்கொள்ளாதவருக்கு
சொர்க்கத்தில் இடமில்லை என்ற நபிமொழி சரியானதாகவே இருக்கிறது.
சொந்தங்களை
அறிவது
அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( تَعَلَّمُوا مِنْ أَنْسَابِكُمْ مَا تَصِلُونَ بِهِ أَرْحَامَكُمْ فَإِنَّ
صِلَةَ الرَّحِمِ مَحَبَّةٌ فِي الأَهْلِ مَثْرَاةٌ فِي الْمَالِ مَنْسَأَةٌ فِي
الأَثَرِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا
الْوَجْهِ . وَمَعْنَى قَوْلِهِ " مَنْسَأَةٌ فِي الأَثَرِ " .
يَعْنِي زِيَادَةً فِي الْعُمُرِ ) உங்கள் இரத்த உறவுகளைப்
பேணி வாழ்வதற்கேற்ப உங்கள் வம்சாவழியை அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில், இரத்த உறவுகளைப் பேணி
வாழ்வதானது, குடும்பத்தாரிடையே அன்பு மலரவும், செல்வத்தில் பெருக்கம் ஏற்படவும், தவணை தள்ளிப்போகவும்
காரணமாக அமையும். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1902
உறவுகளை, குறிப்பாக இரத்த சம்பந்தங்களை
பேணி வாழ்வது முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். அந்த உறவுகளை முறிப்பது பாவமாகும். அவ்வாறு
உறவுகளை மதித்து வாழ வேண்டுமானால் உறவுகளின் சங்கிலித் தொடரை (வம்சாவளியை) அறிந்திருப்பது
அவசியம். தந்தை தந்தையின், தந்தை தந்தையின் சகோதரர்கள் தாயின் சகோதரர்கள் போன்ற நெருங்கிய
உறவினர்கள் யார்; அவர்களின் பெயர்கள் என்ன என்பன போன்ற தகவல்களை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.
அப்போதுதான் அவர்களுடன் நெருக்கமாகவும் பாசத்தோடும் உறவாடவும் தேவைப்படின் அவர்களுக்கு
உதவவும் முடியும்.
உயிரூட்டுத் தொகை
முஙீரா பின் ஷுஅபா
(ரலி) அவர்கள் உர்வாபின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் தந்தையின் தம்பி மகன் (சாச்சாவின்
மகன்) ஆவார். முஙீரா (ரலி) அவர்கள் முஸ்லிமாவதற்கு முன்பு எகிப்தின் அருகில் வைத்து
பனூமாலிக் குடும்பத்தார் 13 பேரைக் கொலை செய்துவிட்டு, அவர்களின் பொருள்களைக்
கொள்ளையடித்துக்கொண்டு மதீனா சென்றுவிட்டார்.
இப்போது அந்தப் பனூமாலிக்
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உர்வா (ரலி) அவர்களிடம் வந்து, "உமது சிற்றப்பா மகன் முஙீரா செய்த 13 கொலைகளுக்குப் பதிலாக நாங்கள் உங்கள் குடும்பத்தில்
13 பேரை கொலை செய்யப்போகிறோம். நீ என்ன சொல்கிறாய்?" என்று கேட்டனர்.
13 கொலைகளுக்கு உயிர்ப்பலி கேட்கின்றனர்.
இப்போது முடிவு எடுக்கின்ற பொறுப்பில் நாட்டாமையாக உர்வா இருக்கிறார்; என்ன முடிவு சொல்லப் போகிறார் என்று கூடியிருந்த மக்கள் யோசித்துக்கொண்டிருந்தனர்.
உர்வா அவர்கள் நீண்ட யோசனைக்குப் பிறகு "சண்டை வேண்டாம். உயிர்ப்பலி வேண்டாம்.
13 பேருக்கான உயிரூட்டுத்
தொகையை நான் வழங்கி விடுகிறேன்" என்று பொதுமக்கள் முன்னிலையில் தமது தீர்க்கமான
முடிவை அறிவிப்புச் செய்தார். இதைக்கேட்டதும் கூடியிருந்த மக்கள் ஒருகணம் திகைத்துப்
போய்விட்டனர்.
இந்த நிகழ்ச்சி நடைபெறும்
போது உர்வா அவர்கள் இணைவைப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு
தான் அவர் முஸ்லிமானார்.
காரணம், ஒரு கொலை இரு கொலைக்கே இழப்பீடு கொடுப்பது
பெரும் சிரமமான காரியம். ஆனால், இவரோ 13 கொலைகளுக்கு இழப்பீடு
தருகிறேன் என்கிறாரே என்று நினைத்து வியந்தனர். இந்தக் குற்றத்தை இவரோ அல்லது இவரின்
பிள்ளைகளோ செய்யவில்லை. இவருடைய உறவினர்களில் ஒருவர் செய்த குற்றத்திற்காக இவர் பொறுப்பேற்கிறார்
என்றால், அதுவும் பல்லாயிரக்கணக்கான
வெள்ளிக்காசுகள் கொண்ட மிகப்பெரிய இழப்பீட்டுத் தொகைக்கு இவர் பொறுப்பேற்கிறார் என்றால்
இவர் எந்த அளவிற்குத் தமது உறவினர்களை விட்டுக்கொடுக்காமல் பேணியிருக்கிறார் என்பதை
இங்கு நாம் சிந்திக்க வேண்டும்.
உறவுவட்டம் பெரிதாக
இருக்கும் குடும்பங்களில் மகிழ்ச்சியும், மனநிறைவும் தானாகவே வந்து
குடியேறுகிறது. மாறாக,
உறவை ஒதுக்கும் குடும்பங்களில்
மனஉளைச்சலும், பதற்றமுமே காணப்படுகின்றன.
அன்பளிப்பு
நீதி செலுத்துமாறும், நன்மையே செய்யுமாறும், உறவுக்காரர்களுக்குக் கொடுத்து உதவுமாறும் நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
திருக்குர்ஆன்:- 16:90
அனஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது. "நீங்கள் விரும்புகின்றவற்றில் தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள்
(நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்" எனும் இந்த (3:92 வது) வசனம் அருளப்பெற்றதும் அன்சாரித் தோழரான அபூதல்ஹா (ரலி) அவர்கள், "நம் இறைவன் நம் செல்வங்களிலிருந்து
சிலவற்றை நம்மிடம் (தர்மம் செய்யுமாறு) கோருவதாகவே நான் கருதுகிறேன். ஆகவே, நான் எனது பைரஹா எனும் நிலத்தை அல்லாஹ்வுக்காக வழங்கிவிட்டேன்.
இதற்குத் தங்களையே சாட்சியாக ஆக்குகிறேன் நாயகமே!" என்று கூறினார். அதற்கு அருமை
நாயகம் (ஸல்) அவர்கள், ( اجْعَلْهَا فِي قَرَابَتِكَ )
"அதை உங்கள் நெருங்கிய
உறவினர்களுக்கிடையே (தானமாக) வழங்குவீராக!" என்று கூறினார்கள். அவ்வாறே அபூதல்ஹா
(ரலி) அவர்கள் அதை (தமது உறவினர்களான) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி), உபை பின் கஅப் (ரலி)
ஆகியோருக்கு தானமாக வழங்கிவிட்டார்கள். நூல்:- முஸ்லிம்-1822
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَ لَهُ أَقَارِبُ ضُعَفَاءُ وَلَمْ يُحْسِنْ إِلَيْهِمْ وَيَصْرِفُ
صَدَقَتَهُ إِلَى غَيْرِهِمْ لَمْ يَقْبَلِ اللهُ مِنْهُ صَدَقَتَهُ وَلاَ يَنْظُرُ
إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ ) யாருக்காவது ஏழை
உறவினர்கள் இருந்து அவர்களுக்கு (ஸகாத்தை கொடுத்து) உபகாரம் செய்யாமல், அவரின் ஸகாத்தை வேறு யாருக்காவது கொடுத்தால் அல்லாஹ் அதை அவரிடமிருந்து
ஏற்றுக்கொள்ளவும் மாட்டான். மறுமையில் அவரை (கருணை கொண்டு) பார்க்கவும் மாட்டான். நூல்:-
தப்ரானீ, அல்கபாயிர் இமாம் அத்தஹபீ
அன்னை ஹஃப்ஸா (ரலி)
அவர்கள் தமது தந்தையின் சகோதரர் ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்களின் மகளுக்கு வாழ்நாள்
முழுவதும் தமது இல்லத்தில் தங்கிக்கொள்ள அனுமதி அளித்திருந்தார்கள். நூல்:- முவத்தா
இமாம் மாலிக்
நம்முடைய உறவினர்
ஏழைகளாக இருப்பின், அவர்களுக்கு உதவி செய்யும் முன் வர வேண்டும். உதவுவதில் முதல் உரிமை
உறவினர்களுக்குரியதாகும். அவர்களுக்கு உதவுவதில் தான் நிறைய நன்மைகள் இருக்கின்றன.
அத்துடன் அல்லாஹ்வும் அதை விரைவில் ஏற்றுக் கொள்வான்.
இரண்டு நன்மைகள்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( الصَّدَقَةُ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ وَهِيَ عَلَى ذِي الْقَرَابَةِ
اثْنَتَانِ صَدَقَةٌ وَصِلَةٌ ) ஏழைக்கு தர்மம்
செய்வது ஒரு நன்மை மட்டுமே; அதையே (நெருங்கிய) உறவினர்களுக்குச் செய்தால் தர்மம், உறவைப் பேணுதல் ஆகிய
இரண்டு நன்மை ஆகும். அறிவிப்பாளர்:- சல்மான் பின் ஆமீர்
(ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-594, நசாயீ-2535, இப்னுமாஜா-1834, முஸ்னது அஹ்மத், தாரிமீ, இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான், ஹாகிம்
குரைப் பின் அபீ முஸ்லிம்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் அன்னை மைமூனா
பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் தம்முடைய அடிமைப்பெண் ஒருத்தியை விடுதலை செய்தார்கள்.
அதை அவர்கள் நபியவர்களிடம் கூறினார்கள். அப்போது நபியவர்கள், ( أَمَا
إِنَّكِ لَوْ أَعْطَيْتِيهَا أَخْوَالَكِ كَانَ أَعْظَمَ لأَجْرِكِ ) "நீ உன் தாய்மாமன்களுக்கு
அவளை (அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தால் உனக்கு பெரும் நற்பலன் கிடைத்திருக்குமே"
என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2592, முஸ்லிம்-1823
சிறப்புக்குரியவர்
எ(ந்த உறவு முறையான)து
அரவணைக்கப்பட வேண்டும் என அல்லாஹ் ஆணையிட்டுள்ளானோ அதை அவர்கள் அரவணைத்துக் கொள்வார்கள்.
திருக்குர்ஆன்:- 13:21
அலீ (ரலி) அவர்களுக்கு
ஃபாத்திமா (ரலி) அவர்கள் மூலமாக பிறந்தவர் ஹஸன் (ரலி) அவர்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள்
மரணித்த பின்னர் ஹனஃபிய்யா (ரலி) என்ற பெண்ணை அலீ (ரலி) அவர்கள் மணந்தார். அதன் மூலம்
பிறந்தவர் முஹம்மத் (ரஹ்) அவர்கள்.
ஒருநள் சகோதரர்கள்
இருவருக்குமிடையே ஏதோ பிரச்சினை வர, பேச்சுவார்த்தை தடைபட்டது. இரண்டு நாள் கடந்தது.
மூன்றாம் நாள் சிறியவர் முஹம்மத் (ரஹ்) தம் அண்ணன் ஹஸன் (ரலி) அவர்களுக்குக் கடிதம்
எழுதுகிறார் இவ்வாறு:
"அன்புச் சகோதரரே! உங்கள் தந்தையும் என் தந்தையும் ஒருவரே. அதில்
நாம் இருவரும் சமம். ஆனால், உங்கள் தாய்
நபிகளாரின் மகள், சுவனத்துத் தலைவி.
என் அம்மாவோ அவ்வளவாக
யாருக்கும் தெரியாத சாதாரணப் பெண். என் அம்மாபோல் ஆயிரம் பெண்கள் ஒன்று சேர்ந்தாலும்
உங்கள் அம்மாவுக்கு இணையாகமாட்டார்கள். அந்த வகையில் என்னைவிட நீங்கள் சிறப்புக்குரியவர்.
தாங்களோ நபியின் பேரர்.
நானோ ஒரு சாதாரண முஸ்லிம். அந்த வகையிலும் நீங்களே சிறப்புக்குரியவர்.
தாங்களோ என்னைவிட
வயதிலும் வம்சாவழியிலும் அறிவிலும் சிறந்தவர். நானோ இவற்றுள் எந்தச் சிறப்புக்கும்
சொந்தக்காரன் அல்லன்.
என்னருமைச் சகோதரரே!
இவ்வளவு சிறப்புகள் தங்களுக்கு இருக்க, நபிகள் (ஸல்) அவர்கள், "இரண்டு முஸ்லிம்கள்
பேசாமலிருந்து ஸலாம் கூறி எவர் முதலில் பேச்சைத் தொடங்குகிறாரோ அவரே சிறப்புக்குரியவர்” என்று கூறியுள்ளார்களே.
ஆகவே, மேலே குறிப்பிட்ட
எல்லாச் சிறப்புகளும் தங்களுக்கு இருக்க, இந்தக் கடிதம் கண்டதும் என்னிடம் வந்து ஸலாம் கூறி
பேச்சைத் துவங்கி, அந்தச் சிறப்பையும் தாங்களே பெற்றுக்கொள்ளுங்கள். வாருங்கள்!”
கடிதம் கிடைத்ததும்
அண்ணன் ஹஸன் (ரலி) அவர்கள் ஓடி வந்து ஸலாம் சொல்லி தன் தம்பியைக் கட்டியணைத்து, "எனக்கே அறிவுரை சொல்லி
எனது தவறை உணர்த்திய நீர்தான் என்னைவிடச் சிறப்புக்குரியவர்” என்று அழுகையை அடக்க
முடியாமல் கூறினார்.
இஸ்லாம் உறவுகளை ஒட்டி
வாழக் கற்றுத்தருகிறது; வெட்டி வாழ்வதற்கல்ல. சொர்க்கத்தின் திறவுகோல்களில் ஒன்று; இரத்தபந்த உறவுகளைப்
பலப்படுத்துவது.
இந்த அவசர உலகில்
உறவுகளை நலம் விசாரிக்கும்போதுகூட ‘ஹாய், ஹலோ’ என்ற ஒற்றை வார்த்தையுடன்
துண்டித்துப் பேசுவதும் கண்ணெதிரே கண்டாலும் காணாததுபோல் துண்டாடிச் செல்வதும் வேதனைக்குரிய
விஷயம்.
இன்றைய அவசர உலகில்
உறவுகளிடம் உட்காா்ந்து பேசக்கூட பலருக்கும் நேரமிருப்பதில்லை. எல்லாவற்றையும், நட்பு தொடங்கி பகை
வரை கைப்பேசி வழியே பேசி முடித்துக் கொள்கிறோம். நல்ல விஷயங்களைக் கூட பிறரிடம் நேரில்
கூறி மகிழ முடியாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். நமக்கு அருகில் இருக்கிற உறவுகளைக் கூட
மாதம் ஒரு தடவை சந்திப்பது என்பது அரிதாக இருக்கிறது.
மரத்தடியில், குளக்கரையில், குழாயடியில் பேசியது
எல்லாவற்றையும் இப்போது கைப்பேசியே பாா்த்துக் கொள்கிறது. நாளுக்கு நாள் உறவுகளின்
அடா்த்தி குறைந்து கொண்டே வருகிறது. உறவினா்களிடம் அன்பை பிச்சையெடுக்க வேண்டியதாக
இருக்கிறது.
தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மைத்துனன் இப்படி
தவிா்க்க முடியாத உறவுகளில் கூட இன்று விரிசல் விழுந்துகொண்டே இருக்கிறது. முன்பெல்லாம்
உறவுகள் பாசத்தாலும், உணா்வாலும் பின்னப்பட்டிருந்தது. இப்போது அவை பணத்தால், பதவியால், தான் என்கிற அகங்காரத்தால்
அறுபட்டுக் கிடக்கிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட
சகோதர சகோதரிகள் உள்ள குடும்பங்களில் அவரவா்களின் பொருளாதார நிலைக்கு ஏற்பவே அவா்களது
உறவு நிலைத்து நிற்கிறது. எவ்வளவு நல்லவராக இருந்தாலும் வறுமையில் வாடும் உடன்பிறந்தாா்
மதிக்கப்படுவதில்லை. இருவரின் வருமானமும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே அவா்கள்
ஒருவரை ஒருவா் சமமாக நேசிக்கிறாா்கள். அவ்வாறு இல்லாதபோது வசதியற்றவா் மீதான பற்றுதல்
குறைகிறது.
வெட்டினாலும்
ஒட்டவேண்டும்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( مَنْ سَرَّهُ أَنْ يُشْرَف لَهُ الْبُنْيَانُ، وَتُرْفَعَ لَهُ الدَّرَجَاتُ
ويَصِلْ مَنْ قَطَعَهُ ) (மறுமையில் தமது)
மாளிகை உயரமாக அமைவதும், தகுதிகள் உயர்த்தப்படுவதும் ஒருவருக்கு மகிழ்ச்சி அளிக்குமானால், அவர் தமது உறவை முறித்துக்கொண்டு
வாழ்பவருடன் சேர்ந்து வாழட்டும். அறிவிப்பாளர்:- உபை பின் கஅப் (ரலி) அவர்கள் ஹாக்கிம், தப்ரானீ, தப்ஸீர் இப்னு கஸீர்
ஆலு இம்ரான் வசனம்-134
ஹக்கீம் பின் ஹிஸாம்
(ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர், அருமை நாயகம் (ஸல்)
அவர்களிடம் "நாயகமே! சிறந்த தர்மம் எது?" என்று வினவினார். நபியவர்கள், ( أَفْضَلُ الصَّدَقَةِ عَلَى ذِي الرَّحِمِ الْكَاشِحِ -
الْكَاشِح: الْمُبْغِضُ الْمُعَادِي ) "வெறுப்பும் பகைமையும்
கொண்ட உறவினர்களுக்கு வழங்குவதே மிகச்சிறந்த தர்மமாகும்" என்று கூறினார்கள். நூல்:-
அத்தர்ஙீபு வத்தர்ஹீபு, மஜ்மஉஸ் ஸவாயித்
கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ، وَلَكِنِ
الْوَاصِلُ الَّذِي إِذَا قَطَعَتْ رَحِمُهُ وَصَلَهَا ) பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப்
பேணுகின்றவர் அல்லர்;
மாறாக, உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர்
ஆவார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர்
(ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5991, திர்மிதீ-1831
அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது. ஒரு மனிதர் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே!
எனக்கு உறவினர்கள் சிலர் உள்ளனர். அவர்களுடன் நான் ஒட்டி உறவாடுகிறேன். ஆனால், அவர்கள் எனது உறவை
முறிக்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன். ஆனால், அவர்கள் எனக்கு அபகாரம்
செய்கிறார்கள். (என்னைப் புண்படுத்தும்போது) அவர்களை நான் சகித்துக்கொள்கிறேன். (ஆனாலும்,) அவர்கள் என்னிடம்
அறியாமையோடு நடந்துகொள்கிறார்கள்" என்று கூறினார்.
நபியவர்கள், ( لَئِنْ
كُنْتَ كَمَا قُلْتَ فَكَأَنَّمَا تُسِفُّهُمُ المَلَّ، وَلا يَزَالُ معكَ مِنَ
اللَّهِ ظَهِيرٌ عَلَيْهِمْ مَا دُمْتَ عَلَى ذَلكَ )
"நீங்கள் சொன்னதைப் போன்று
நீங்கள் நடந்திருந்தால், அவர்களது வாயில் நீங்கள் சுடு சாம்பலைப் போட்டவரைப் போன்றுதான்.
இதே நிலையில் நீங்கள் நீடித்திருக்கும்வரை இறைவனிடமிருந்து ஓர் உதவியாளர் அவர்களுக்கெதிராக
உங்களுடன் இருந்துகொண்டேயிருப்பார்" என்றார்கள். நூல்:- முஸ்லிம்-5000
சுடுசாம்பலை வாயில் போடுவது என்றால், சுடுகின்ற சாம்பலை வாயில் போட்டால் எவ்வளவு வலி ஏற்படுமோ, அவ்வளவு வலி அவர்களுக்கு ஏற்படும். அதாவது, உறவைத் துண்டிப்பது மட்டுமின்றி சேர்ந்து வாழ விரும்புகின்றவருக்கு தொல்லை தருவதால் பெரும் பாவத்தை அவர்கள் செய்கிறார்கள். அல்லது தீங்கிழைக்கும் அவர்களுக்கு நன்மை செய்வதே அவர்களுக்குத் தக்க பதிலாகும். சுடுசாம்பலை வாயில் போட்டுக் கொள்பவன் கூனிக்குறுகிவிடுவதைப் போன்று அவர்களும் அவமானப்படுவார்கள் என்று பொருள். நூல்:- அல்மின்ஹாஜ்
அபுர்ரத்தாத் ரஹ்
அவர்கள் கூறுகிறார்கள். ( خَيْرُهُمْ وَأَوْصَلُهُمْ ) மக்களிலேயே
நல்லவர் அவர்களின் நன்கு உறவு பாராட்டுபவர் ஆவார். நூல் திர்மிதீ-1830
நமது உறவினர்களில்
நம்முடன் சிறந்த முறையில் நடந்து கொள்பவரிடம் நாம் நல்ல முறையில் நடந்து கொள்கிறோம்.
ஆனால், நம்முடன் தீய முறையில் நடந்து கொள்பவரிடன் நல்ல
முறையில் நடந்து கொள்வதைக் கண்ணியக் குறைவாக கருதுகிறோம். இன்னார் நம்முடன் நல்ல முறையில்
நடந்து கொள்ளாதபோது நாம் ஏன் அவருடன் நல்ல முறையில் நடக்க வேண்டும்? நாம் என்ன அவரை விட அந்தஸ்த்தில் குறைந்தவர்களா? என்று கருதுகிறோம். இந்த எண்ணம் தவறானது என்று இந்த நபிமொழி
எடுத்துரைக்கிறது.
உறவினர்கள் என்றாலே
வெறுக்கும் மனிதர்களுக்கு, தாமும் யாரோ ஒருவருக்கு உறவினர்
தான் என்ற புரிதல் வேண்டுமே!
விசாலமான
வாழ்நாள், வாழ்வாதாரம்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ، وَيُنْسَأَ لَهُ فِي
أَثَرِهِ، فَلْيَصِلْ رَحِمَهُ ) தமது வாழ்வாதாராம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீடிக்கப்படுவதையும்
விரும்புகின்றவர் தமது உறவைப் பேணி வாழட்டும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:-
புகாரீ-5986, முஸ்லிம்-4999, அபூதாவூத்-1443, முஸ்னது அஹ்மத்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( وَمَا فَتَحَ رَجُلٌ بَابَ عَطِيَّةٍ يُرِيدُ بِهَا صِلَةً، إِلَّا زَادَهُ
اللَّهُ بِهَا كَثْرَةً ) ஒரு மனிதன் அன்பளிப்பின் வாயிலைத் திறந்து அதன்
மூலம் இரத்த உறவைப் பேணி நடக்க விரும்பினார் எனில், அதன் பயனாக அவருக்கு அல்லாஹ் அதிகமாக வாரி வழங்காமல் இருப்பதில்லை. அறிவிப்பாளர்:-
அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் அஷ்ஷூரா வசனம்-43
ஒருவரது ஆயுள் அறுபது
ஆண்டுகளாகும் என்றால், அவர் உறவைப் பேணி வாழ்ந்தால் நாற்பது ஆண்டுகள் அதிகரிக்கப்படும்
என விதியில் எழுதப்பட்டிருக்கும். அவர் உறவை பேணுவாரா, இல்லையா என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்.
அதன்படி, அவரது முடிவு அமையும்.
இதையே அல்லாஹ், "அதில் (பதிவில்), தான் நாடியதை அல்லாஹ்
அழிப்பான்; தான் நாடியதை அப்படியே வைப்பான். (13:31) என்று குர்ஆனில் கூறுகின்றான்.
அல்லது வாழ்நாளில்
அதிகப்படுவது என்றால், அதில் அருள்வளத்தை ஏற்படுத்துவது என்று பொருளாகும். அதாவது, அதிகமான ஆண்டுகளில்
ஆற்றுகின்ற சாதனைகளை அவர் தமது குறைந்த வாழ்நாளில் ஆற்றுவார்.
மிகுந்த சிரமத்திலும்
துயரத்திலும் இருந்த ஒருவர் இறைத்தூதர் மூசா (அலை) அவர்களிடம் வந்து, தம்முடைய வாழ்வாதாரத்தை
அதிகப்படுத்தித் தரவேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சும்படிக் கேட்டுக்கொண்டார்.
மூசா (அலை)
அவர்கள் இறைவனிடம் பிரார்த்திக்க, இறைவன், “மூசா! அந்த அடியாருக்கு வாழ்வாதாரத்தை மிகுதியாக அருளினால் ஆயுளைக்
குறைத்துவிடுவேன். அல்லது ஆயுளை மிகுதியாக அருளினால் (ரிஜ்க் எனும்) வாழ்வாதாரத்தைக்
குறைத்துவிடுவேன். எது வேண்டும் என்று கேட்டுச் சொல்லுங்கள்”
என்று மறுமொழி கூறினான்.
மூசா (அலை)
அவர்கள் அந்த மனிதரிடம் இந்த விவரத்தைச் சொன்னார்கள். அந்த மனிதர், “சிறிது காலமே வாழ்ந்தாலும்
நிம்மதியாக, துயரங்கள் இல்லாமல் வாழவே விரும்புகிறேன். ஆகவே வாழ்வாதாரங்களை அதிகம் தரச் சொல்லுங்கள்” என்றார். குறுகிய காலத்தில்
அந்த மனிதர் இறந்துவிடுவார் எனும் செய்தியுடன் ஏராளமான செல்வங்கள் அவருக்கு அருளப்பட்டன.
சில ஆண்டுகளுக்குப்
பிறகு அந்த ஊருக்கு வந்த மூசா (அலை) அவர்கள், திகைத்துப் போய்விட்டார்கள். “ஒன்றிரண்டு ஆண்டுகளில்
இறப்பு உறுதி என்று சொல்லப்பட்டவர் இன்னும் உயிரோடு நடமாடிக்கொண்டிருக்கிறாரே’ என்று எண்ணியபடி இறைவனிடம்
அதற்கான காரணத்தைக் கேட்டார்கள்.
இறைவன் “நான் அவருக்கு அருளிய செல்வங்கள்
மூலம் அவர் உறவினர்களை அரவணைத்தார். ஏழை எளிய மக்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் தாராளமாக
உதவினார். இந்த நற்செயல்கள் காரணமாக அவருடைய வாழ்நாள் நீட்டிக்கப்பட்டது” என்றான்.
கெட்டமரணம் ஏற்படாது
தாபிஈன்களில்
(நபித்தோழர்களின் தோழர்கள்) ஒருவரான இமாம்
சயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்களிடம் மற்றொரு தாபிஈன் இப்ராஹீம் பின் முஹம்மது
பின் தல்ஹா (ரஹ்) அவர்கள் வீடு இடிந்து அதில் நசுங்கி மரணித்துவிட்டார் எனச் சொல்லப்பட்டது.
சயீத் (ரஹ்) அவர்கள்,
“இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் அவ்வாறு ஒரு போதும் மரணித்திருக்கமாட்டார்” என்றார்கள். பின் விசாரித்தபோது, இப்ராஹீம் (ரஹ்) அவர்கள்
மரணிக்கவில்லை என்றும், கால் முறிந்த நிலையில் இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டார் என்றும் தெரியவந்தது.
சயீத் (ரஹ்) அவர்களிடம், “எவ்வாறு இப்ராஹீம் (ரஹ்) அவர்கள்
அந்நிலையில் மரணித்திருக்கமாட்டார் என உறுதிபட சொன்னீர்கள்? என
வினவப்பட்டது, அதற்கு அவர்கள், “இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் உறவினர்களைப் பேணி,
அவர்களின் நலனில் அக்கரை கொண்டவர் என்று எனக்கு நன்றாக தெரியும். எனவே, யார் உறவினர்களிடம்
கருணையுடன் நடந்து கொள்கிறாரோ அவர்களுக்கு
துர்மரணம் ஏற்படவே மாட்டாது” என்று கூறினார்கள்.
மேற்காணும் நபிமொழிகளின்
அடிப்படையில் அறிஞர்கள் கூறுகிறார்கள். உறவை பேணுவதால் மூன்று வகையான அருள்வளங்கள்
கிடைக்கும்.
1) நீண்ட ஆயுள். 2) வளமான வாழ்வாதாரம். 3) கெட்ட மரணத்திலிருந்து பாதுகாப்பு.
பிற சமயத்தினரிடம்
(நபியே!) நெருங்கிய
உறவுக்காரருக்கும், ஏழைக்கும், வழிப்போக்கருக்கும் அவரவரின் உரிமைகளை வழங்குவீராக!
திருக்குர்ஆன்:- 17:26
அஸ்மா பின்த் அபீபக்ர்
(ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் என் தாயார் ஆசையாக
என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பாளராக இருந்தார்.) நான் நபியவர்களிடம் ( آصِلُهَا ) “(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப் பேணிக்கொள்ளட்டுமா?” என்று கேட்டேன். நபியவர்கள், “ஆம்” என்று கூறினார்கள்.
“ஆகவே, அஸ்மாவின் தாயார்
தொடர்பாக, ‘மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும்
இருந்தார் களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செலுத்துவதையும் அல்லாஹ்
தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கிறான்’ எனும் (60:8ஆவது)
வசனத்தை அல்லாஹ் அருளினான். நூல்:- புகாரீ-5978
ஒருமுறை பட்டு அங்கிகளில்
சில அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டன. (அவற்றிலிருந்து) ஓர் அங்கியை
நபியவர்கள் உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள், “நான் இதை எப்படி அணிய
முடியும்? இந்தப் பட்டாடை தொடர்பாகத்
தாங்கள் முன்பு வேறுவிதமாகச் சொன்னீர்களே? (அதாவது, ஆண்கள் பட்டாடை அணிவது கூடாது)” என்று கேட்டார்கள்.
நபியவர்கள், ( إِنِّي
لَمْ أُعْطِكَهَا لِتَلْبَسَهَا، وَلَكِنْ تَبِيعُهَا أَوْ تَكْسُوهَا ) “இதை நீங்கள் அணிந்துகொள்ள
நான் உங்களுக்குத் தரவில்லை. மாறாக, இதை நீங்கள் விற்றுவிடலாம்; (பெண்களுக்கோ மற்ற
மதத்தாருக்கோ) அணிவிக்கலாம் என்பதற்காகவே வழங்கினேன்” என்று சொன்னார்கள்.
எனவே, உமர் (ரலி) அவர்கள்
அதை மக்காவாசியான தம் சகோதரர் ஒருவருக்குக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது அவர் முஸ்லிமாயிருக்கவில்லை.
நூல்:- புகாரீ-5981
புதிதாக
முஸ்லிமானவர்களின் உறவினர்கள் பிற சமயத்தினராக இருந்தாலும், அவரகளிடமும் உறவைப்
பேணி வாழ வேண்டும் என்றே இஸ்லாம் இயம்புகிறது.
பிரித்துவிடாதே!
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( مَنْ فَرَّقَ بَيْنَ الْوَالِدَةِ وَوَلَدِهَا فَرَّقَ اللَّهُ بَيْنَهُ
وَبَيْنَ أَحِبَّتِهِ يَوْمَ الْقِيَامَةِ ) யார் தாயையும் பிள்ளையையும்
பிரிக்கிறாரோ அவரையும் அவருடைய பாசத்திற்குரியவரையும் மறுமைநாளில் அல்லாஹ் பிரித்துவிடுவான்.
அறிவிப்பாளர்:- அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி)
அவர்கள் நூல் திர்மிதீ-1204
அலீ (ரலி) அவர்கள்
கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் சகோதரர்களான அடிமைகள் இருவரை எனக்கு அன்பளிப்பாக
கொடுத்தார்கள். அவர்களில் ஒருவரை நான் விற்றுவிட்டேன் (இச்செய்தி அறிந்த) நபியவர்கள், ( يَا
عَلِيُّ مَا فَعَلَ غُلاَمُكَ ) "அலீ! உம்முடைய அடிமையை என்ன செய்தீர்?" என்று கேட்டார்கள்.
நான் அ(ந்த அடிமையை விற்றுவிட்டேன் என்ப)தைப பற்றி நபியவர்களிடம் கூறினேன். நபியவர்கள், ( رُدَّهُ
رُدَّهُ ) "அ(ந்த வியாபாரத்)தை ரத்துச் செய்துவிடுவீராக!" என்று இரண்டு முறை கூறினார்கள்
நூல்:- திர்மிதீ-1205
தாய் பறவையையும் அதன்
குஞ்சையும் பிரிப்பதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிமைகளை விற்கும்போதோ, அன்பளிப்புச் செய்யும்போதோ
தாயையும் பிள்ளைகளையும், இரு சகோதரர்களையும், தந்தையையும் பிள்ளையையும் பிரிப்பது குற்றமாகும்.
அதாவது, உறவைப் பிரிப்பது
குற்றமாகும் என்பதையே இந்த நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
ஓர் ஆண் தமது மாமனார், மாமியார், மைத்துனர் அல்லது மனைவியின்
உறவினர் ஆகியோரை தமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தமது மனைவி மக்களை அவர்களுடன் எந்த
ஒட்டு உறவும் வைத்துக்கொள்ள கூடாது என்று கூறி, அவர்களுடன் உறவாட விடாமல் பிரித்து வைப்பது சரியல்ல. அவர்கள்
மார்க்கத்திற்கு எதிராக காரியங்களை செய்யக்கூடியவர்களாக இருந்தால் (உதாரணமாக: வட்டி, விபச்சாரம், திருட்டு போன்றவை தொழிலாகக்
கொண்டிருந்தால்) அவர்களை விட்டும் நாமும், நமது மனைவி மக்களும் சற்று ஒதுங்கி இருக்கலாம்; தவறில்லை. மற்றபடி அற்ப காரணங்களுக்காக அவர்களை விட்டும்
ஒதுங்கியிருப்பது சரியல்ல.
இறையருள் இறங்காது
அல்லாஹ் சேர்ந்திருக்கச் சொன்ன (உறவைத்) துண்டிப்பவர்கள், பூமியில் குழப்பம் விளைவிப்பவர்கள் ஆகியோருக்குச் சாபம் ஏற்படட்டும்; அவர்களுக்குத் தீய வீடு (மறுமையில்) உள்ளது. திருக்குர்ஆன்:- 13:25
ஒருநாள் அபூஹுரைரா
(ரலி) அவர்கள் நபிமொழி பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, (
أَحْرَجَ كُلُّ قَاطِعٍ رَحِمٍ إِلَّا قَامَ
مِنْ عِنْدِنَا ) "இச்சபையில் உறவினரை வெறுத்திருப்பவன் கலந்துக்கொள்ள
வேண்டாம்" என்று கூறினார்கள். சபையின் கடைசியில் இருந்த ஒரு வாலிபர் எழுந்து சென்றார்.
அவர், இரண்டு வருடங்களாக
வெறுத்து பேசாமலிருந்த தமது மாமியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டார்.
அவரது மாமி, "என் உடன் பிறந்தான்
மகனே! நீ என்னை இவ்வளவு காலம் வெறுத்திருந்தபோது இன்று வந்து ஏன் என்னிடம் மன்னிப்பு
கேட்கிறாய்?" என்று வினவினார். அவர், "நான் இன்று அபூஹுரைரா (ரலி) அவர்களின் வகுப்புக்குச்
சென்றேன். அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டு (மனம் வருந்தி) உங்களிடம் மன்னிப்புக்
கேட்க வந்தேன்" என்றார். மாமி, "நீ அவரிடம் சென்று, ஏன் அவ்வாறு கூறினார் என்று கேட்டு வா" என்று
கூறினார். அவர் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்து, "தாங்கள் அவ்வாறு ஏன் கூறினீர்கள்?" என்று கேட்டார். மேலும், தனக்கும் தமது மாமிக்கும்
இடையே நடைபெற்ற நிகழ்வை எடுத்துரைத்தார்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள், ( إِنِّي
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ الرَّحْمَةَ
لَا تَنْزِلُ عَلَى قَوْمٍ فِيهِمْ قَاطِعُ رَحِمٍ ) "அருமை நாயகம் (ஸல்) அவர்கள், 'உறவினரை வெறுத்தவன்
இருக்கும் கூட்டத்தில் அல்லாஹ்வின் (ரஹ்மத் எனும்) நல்லருள் இறங்காது' என்று கூறியதை கேட்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
மற்றொரு அறிவிப்பில்
( فَلَا يُقْبَلُ عَمَلُ قَاطِعِ رَحِمٍ ) "உறவை முறித்து வாழ்பவனின் (நற்)செயலை (அல்லாஹ்வால்)
அங்கீகரிக்கப்பட மாட்டாது" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வருகிறது.
நூல்:- முஸ்னது அஹ்மத்,
அல்அதபுல் முஃப்ரத்-61, ஜாமிஉஸ் ஸஙீர், அல்கபாயிர் இமாம்
அத்தஹபீ
இம்மையிலும்
மறுமையிலும்
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ ذَنْبٍ أَجْدَرُ أَنْ يُعَجِّلَ
اللَّهُ لِصَاحِبِهِ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي
الآخِرَةِ مِنَ الْبَغْىِ وَقَطِيعَةِ الرَّحِمِ ) ஒரு மனிதன் செய்த பாவத்திற்கு அல்லாஹ் மறுமையில் தண்டனையைத் தயாராக
வைத்திருப்பதுடன் இம்மையிலையே துரிதமாகத் தண்டனை அளிப்பதற்கு மிகவும் தகுதி வாய்ந்தது
(இரண்டு பாவங்கள் ஆகும். அவை:) 1) பிறருக்கு அநீதியிழைத்தல். 2) இரத்த உறவைத் துண்டித்தல்.
அறிவிப்பாளர்:- அபூபக்ரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4256 திர்மிதீ-2435, இப்னுமாஜா-4201, இப்னு ஹிப்பான், முஸ்னது அஹ்மத்
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ ) உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான். அறிவிப்பாளர்:-
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5984, முஸ்லிம்-4996, திர்மிதீ-1832
அநீதி இழைத்தல்,
இரத்த உறவைத் துண்டித்தல் ஆகிய இவ்விரண்டும் பெரும் பாவங்களாகும். இவையிரண்டுக்கும்
இம்மையிலும் மறுமையிலும் தண்டனை உண்டு. இரத்த உறவைத் துண்டித்து வாழ்வது வந்த வழியை
மறப்பதும், நன்றி மறந்த துரோகமும் ஆகும். இவை மனித உரிமை மீறல்களில் உள்ளடங்கும்.
வாழ்வை வசதியாக மாற்ற தான் பணம் வேண்டும். வாழ்வையே மகிழ்ச்சியாக மாற்ற நல்ல உறவுகள் போதும். எனவே, உறவுகளோடு உளமாற உறவாடி, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது
ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951