Search This Blog

Saturday, 6 April 2024

கொஞ்சம் அரசியல் பேசுவோமா?

 

கொஞ்சம் அரசியல் பேசுவோமா?

 

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

 

(நபியே! பிரார்த்தித்து) நீங்கள் கூறுங்கள்: "எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களை கண்ணியப் படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். திருக்குர்ஆன்:- 3:26

 

இஸ்லாமிய மார்க்கம், கொள்கை வணக்க வழிபாடுகள் ஒழுக்கங்கள் மற்றும் வாழ்வியல் துறைகளில் வழிகாட்டுவது போலவே அரசியல் ரீதியாகவும் தகுதி மிகுந்த வழிகாட்டுதலை வழங்கிக் கொண்டிருக்கிறது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து (ஹிஜ்ரத் செய்து) நாடு துறந்து மதீனாவிற்கு சென்ற பின்னர் அங்கிருந்த மக்கள் தங்களை ஆளும் உரிமையை நபியவர்களுக்கு வழங்கினார்கள்.

 

மதீனாவில் நபியவர்கள் வாழ்ந்த பத்து ஆண்டு காலத்தில் ஆட்சியாளர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும், ஆளப்படுவோர் கேட்டுப்பெற வேண்டிய உரிமைகளையும் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள். அதன் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு  வந்த நபித்தோழர்களும் இது தொடர்பாக நமக்கு நல்வழி காட்டியுள்ளார்கள்.

 

அரசியல் என்பது தீண்டத்தகாத அம்சமாக முஸ்லிம்களில் சிலர் கருதுகின்றனர். ஆன்மீகப்பாட்டையில் நடைபோட்டு அரசியலுக்குத் திரும்பி இருக்கும் சிலரிடம்கூட இஸ்லாமிய அரசியல் பண்பை காண முடியவில்லை. இஸ்லாமிய அரசியலைப் பற்றி சிந்திப்பதுகூட தடை செய்யப்பட்ட சில இயக்கங்களை முன்மாதிரியாக கொண்டு தேச விரோத நடவடிக்கையாக சித்தரிக்கப்படுகிறது.

 

வாழ்வில் வேறு துறைகளை விடவும் அதிகமான தாக்கங்களை அரசியலே உண்டாக்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அரசியல் வாழ்வில் அதிகாரத்தை கைப்பற்றிய பின்பு ஆட்சியாளர்கள் தீர்மானிக்கும் அம்சங்களே தேசத்தில் வாழும் மக்கள் போக்கை தீர்மானிப்பதாக அமைந்துவிடுகிறது.

 

இஸ்லாமிய பண்பாட்டின்படி வாழ்வதற்கான முயற்சிகள் முனைப்பாக மேற்கொள்ளப்பட்ட போதும், ஆட்சியாளர்களின் தாக்கம் இஸ்லாமியர்களின் வாழ்வை அசைத்துப் பார்த்துவிடுகிறது. எனவே, அரசியல் வட்டத்தில் இருக்கும் இஸ்லாமியர்களும் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் இஸ்லாத்தை அறிந்தவர்களும் தமது செயல்பாடுகளை இஸ்லாமிய அரசியல் வழிகாட்டுதலின்படி அமைத்துக்கொள்வது ஒரு கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

 

மார்க்கத்தில் முக்கியமான துறைகளில் அரசியலும் ஒன்றாகும். ஐரோப்பியர் தான், "மதம் வேறு; அரசியல் வேறு" என்று பிரித்து, "சீசருக்கு கொடுப்பதை சீசருக்கும், கர்த்தருக்கு கொடுப்பதை கர்த்தருக்கும் கொடுத்து விடுங்கள்" என்று பிரச்சாரம் செய்தனர்.

 

ஆனால், இஸ்லாத்தை பொறுத்தவரை அரசியலும் மார்க்கத்தில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கம்தான். அரசியல் இறைக்கட்டளைப்படியும், இறைத்தூதரின் வழிகாட்டுதலின்படியும் அமைய வேண்டும்.

 

அரசியல் மற்றும் ஆட்சியமைப்பு இவ்வாறு தான் அமைய வேண்டும் என்று சில அடிப்படை விதிகளை இஸ்லாம் வகுத்துள்ளது. இவை எக்காலத்துக்கும் எந்த இடத்திற்கும் பொருந்தக்கூடியவை ஆகும். மற்றபடி, அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் அந்தந்த காலத்துக்கும், இடத்திற்கும் ஏற்ப எப்படி வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம். அடிப்படை விதிகளுக்கு மாற்றமானவையாக இருக்கலாம். ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. எனவே, இறைக்கட்டளைகளுக்கு எதிரான எந்த சட்டத்தையும் இயற்ற ஆட்சியாளருக்கு உரிமை கிடையாது.

 

மன்னராட்சி

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரப் பணியை தொடங்கியபோது, அரேபியாவிலும் அதை சுற்றியுள்ள நாடுகளிலும், உலகின் பிற பகுதிகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் எதுவும் இருக்கவில்லை. அரபு தீபகற்பத்தில் குலத்தலைவர்களின் ஆட்சி நடைபெற்றது. அரேபியாவை சுற்றியுள்ள பகுதிகளில் பாரசீக, பைசாந்தியப் பேரரசுகள், மன்னராட்சி முறையைப் பின்பற்றி வந்தனர். நபியவர்கள் மட்டும் தான் மதீனாவில் மக்கள் விரும்பும் மாறுபட்ட ஒரு புதிய ஆட்சி முறையை செயல்படுத்தினார்கள்.

 

சர்வாதிகார ஆட்சி, எதேச்சதிகார ஆட்சி, ராணுவ ஆட்சி, மன்னராட்சி, குல ஆட்சி, குடும்ப ஆட்சி இவை நடைபெறும் நாடுகளில் மயான அமைதியே நிலவும். மக்கள் எப்போதும் அச்சத்தோடும் பதற்றத்தோடும் உள்ள குமுறலோடும் தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எந்நேரமும் வெடிக்க காத்திருக்கும் எரிமலை நாடுகள் என இவற்றை குறிப்பிடலாம்.

 

ஜனநாயகம் என்றால் ஜனங்கள் தான் நாயகர்கள். அரபு நாடுகளில் மன்னராட்சி முறை இருந்தாலும் நீதி நேர்மையுள்ள இஸ்லாமிய அரசியலாக அதை ஏற்கக்கொள்ள முடியாது. சவூதி உட்பட வளைகுடா நாடுகளின் மன்னர்கள் அனைவரும் 85 ஆண்டுகளுக்கு முன்பு 1925 ஆம் ஆண்டு பிரிட்டனாலும், ஃபிரான்ஸாலும் அமர்த்தபட்டவர்கள். அவர்களின் வாரிசுகள் தற்போது அரபு நாடுகளின் மன்னர்களாகி, பொய்மைகளாக இருந்து வருகின்றனர்.

 

உலகில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மேம்பாட்டிற்காக இறைவன் இஸ்லாமிய நாடுகளில் வழங்கிய பலன்களை ஒரு சிலர் மட்டும் கொள்ளையடித்து வருகின்றனர். இந்த கொள்ளையர்களுக்கு பாதுகாப்பளித்து அவர்களோடு சேர்ந்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள். இதன் காரணமாக 57 இஸ்லாமிய நாடுகளில் பாதிக்குமேற்பட்ட நாடுகள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றன.

 

பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் (2003) ஜார்ஜ் கார்லோவே, "ஊழல் நிறைந்த கைபொம்மைகளாக இவர்கள் மேற்கத்திய நாடுகளின் நலன்களை பாதுகாக்கத் தான் அரபு நாடுகளின் மன்னர்களாக உள்ளனர். அரபு மக்களின் நலனை பாதுகாக்க அல்ல" என்று கூறினார். 

 

பயங்கரவாதத்தை ஒழிப்பதே நமது இலட்சியம் என்று மாறுதட்டிக் கொள்ளும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தமது இலாபங்களுக்காக பல நாடுகளில் மக்களாட்சி மலர்வதை தடுத்து, மன்னராட்சி நீடிக்க துணைபுரிவது அவர்களின் நயவஞ்சகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

 

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பல நாடுகளில் குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் மன்னராட்சியும், சர்வாதிகார ஆட்சியும், எதேச்சதிகார ஆட்சியும், ராணுவ ஆட்சியும் நீடிக்கிறது.

 

சூடானின் இஸ்லாமிய இயக்கத் தலைவர் ஹசன் துராபி, "முஸ்லிம் நாடுகளில் ஜனநாயகம் அனுமதிக்கப்பட்டால், அந்த நாடுகளில் பயங்கரவாதம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்" என்றார்.

 

கேட்டுப் பெறக்கூடாது

 

அப்துர் ரஹ்மான் பின் சமூரா (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் என்னிடம், ( يا عَبْدَ الرَّحْمَنِ بنَ سَمُرَةَ، لا تَسْأَلِ الإمارَةَ؛ فإنَّكَ إنْ أُعطِيتَها عن مَسْأَلَةٍ وُكِلْتَ إلَيْها، وإنْ أُعطِيتَها عَن غَيرِ مَسْأَلَةٍ أُعِنْتَ عَلَيهَا ) “அப்துர் ரஹ்மான்! ஆட்சிப்பொறுப்பை (நீங்களாக) கேட்காதீர்கள். ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு வழங்கப்பட்டால், அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள். கேட்காமல் அது உங்களுக்கு வழங்கப்பட்டால், அது தொடர்பாக உங்களுக்கு (அல்லாஹ்வின்) உதவி கிடைக்கும்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-6622, முஸ்லிம்-3726, அபூதாவூத்-2540, நசாயீ-5289  

 

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் இருவர் வந்து, "நாயகமே! எங்களுக்கு (அரசாங்கப்) பதவி ஏதேனும் தாருங்கள்" என்று கூறினார்கள். நபியவர்கள், ( إنَّا، وَاللهِ، لَا نُوَلِّي هَذَا العَمَلَ أَحَدًا سَأَلَهُ، وَلَا أَحَدًا حَرَصَ عَلَيهِ )  “கேட்பவருக்கும் ஆசைப்படுபவருக்கும் நாம் இதை (பதவியை) வழங்க மாட்டோம்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-7149, முஸ்லிம்-3727, நசாயீ-5287   

 

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம், "நாயகமே! எனக்கு ஏதேனும் (அரசுப்) பதவி வழங்கக்கூடாதா?" என்று கேட்டேன். நபியவர்கள், ( أَبَا ذَرٍّ، إنَّكَ ضَعِيفٌ، وإنَّهَا أَمانةٌ، وإنَّها يَوْمَ القيامَة خِزْيٌ ونَدَامةٌ، إلَّا مَنْ أخَذها بِحقِّها، وَأدَّى الَّذِي عليهِ فِيها ) "அபூதர்! நீர் பலவீனமானவர். அது (பதவி) ஒரு அமானிதப் பொருளாகும். அதை முறைப்படி அடைந்து, அதில் தமக்குரியப் பொறுப்புகளை நிறைவேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமைநாளில்) இழிவும் துயரமும் ஆகும்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-3729, கன்ஸுல் உம்மால்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ أَخْوَنَكُمْ عِنْدَنَا مَنْ طَلَبَهُ ) நம்மிடம் உங்களின் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகி ஆட்சியதிகாரத்தைத் தேடுபவர்தான். நூல்:- அபூதாவூத்-2541

 

ஒருவர் ஆட்சியதிகாரத்தையோ, நீதி நிர்வாகத்தையோ எதற்காக விரும்புகிறார் என்பதை பொறுத்து அவரது விருப்பம் சரியா? தவறா? என்பதை தீர்மானிக்கப்படும்.

 

பதவி ஆசை, சுயநலம், கௌரவம் உள்ளிட்ட ஆதாயத்திற்காக ஒருவர் பதவியை விரும்பினால் அது தடை செய்யப்பட்டதாகும். மக்களுக்கு நன்மை செய்தல், மக்களை சீர்திருத்தல், நீதியை நிலைநாட்டுதல் ஆகிய நல்ல நோக்கங்களுக்காக ஒருவர் பதவியை விரும்பினால் அது தவறாகாது.

 

நல்ல நோக்கங்களுக்காக சூழ்நிலை கருதி, உயர் பதவியைக் கேட்டால் கிடைக்கும் என்ற நிலையில் அந்த பதவியைப் பயன்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடலாம். இதையே இறைத்தூதர் யூசுப் (அலை) அவர்களும் கருதினார்கள் என்று திருக்குர்ஆன் (12:55) கூறுகிறது.

 

தன்னை தேடி வரும் அரசுப் பதவிகளை விட்டும் நல்லவர்கள் ஒதுங்கிக்கொண்டால் அப்பதவியில் தீயோர் அமர்ந்து கொண்டு, நாட்டை சீரழித்து விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

 

ஆட்சியதிகாரம் என்பது கவர்ச்சியான அதே நேரத்தில் கடினமானதொரு பதவியாகும். பதவி மீதான மோகம் அதை அடைய செய்வதற்காக எந்த ஒரு தவறையும் நியாயப்படுத்திவிடும். பதவி ஆசையில் ஆட்சியதிகாரத்தைத் தேடி, அலைந்து கேட்டுப் பெற்றால் அதற்கு இறைவனின் உதவி கிடைக்காது. கேட்டுப் பெற்ற பதவியின் பணி சுமை, நம் மீது மட்டுமே நிற்கும். இந்தச் சுமையை தாங்க இயலாமல் பணியில் கோளாறு ஏற்பட்டு பதவி வழங்கியவர்களால் "பதவிக்கே தகுதியற்றவன்" என்று கூறும் அவல நிலைக்கு ஆளாகலாம்.

 

ஆனால், பதவியை விரும்பாத ஒருவரிடம் வலியக் கொண்டு வந்து அதை திணிக்கப்பட்டால், அதில் அவர் சிறப்பாக பணியாற்ற இறைவனின் உதவி கிடைக்கும்.

 

எவ்வளவுதான் கற்றவனாகவோ, செல்வந்தனாகவோ இருந்தாலும் அவன், தான் தலைவனாக வேண்டுமென்று ஆசை உள்ளவனாக இருந்தால் அவன் தன்னுடைய திறமையிலிருந்து அல்லது செல்வத்திலிருந்து அதன் முழு பயனையும் பெற முடியாதவனாக ஆகிவிடுகிறான். ஏனெனில், அவனுக்கு இறையருள் கிடைக்காமல் போய்விடுகிறது. இறையருள் கிடைக்காதவன் வாழ்க்கையில் தோற்றுப் போவான்.

 

வாரிசு அரசியல்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ وَلِيَ مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ شَيْئًا فَأَمَّرَ عَلَيْهِمْ أَحَدًا مُحَابَاةً لَهُ بِغَيرِ حَقٍّ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ، لَا يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَرْفًا وَلَا عَدْلًا حَتَّى يُدْخِلَهُ جَهَنَّمَ ) எவரேனும் ஒருவர் முஸ்லிம்களின் ஏதேனும் ஒரு வேலைக்கு பொறுப்பாளராகி பின்பு அவர் நட்பின் காரணமாக தகுதியற்ற ஒருவரை முஸ்லிம்களின் தலைவராக்கினார் என்றால் அவர் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும். மேலும், அவருடைய (நஃபில்) உபரியான, (ஃபர்ளு) கட்டாயக் கடமையான எந்த வணக்கங்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான். கடைசியாக, அவரை நரகில் தள்ளிவிடுவான். நூல்:- ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்2, பக்கம்-152

 

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் மரணத்தருவாயில் அவர்களுடைய மகனார் அப்துல்லாஹ் (ரலி) அவர்களை ஜனாதிபதியாக (கலீஃபா) அறிவிக்கும்படி குடிமக்கள் உமர் (ரலி) அவர்களிடம் வேண்டிக்கொண்டனர்.  

 

அப்போது உமர் (ரலி) அவர்கள், "(மறுமைநாளில் பதில் சொல்லியாக வேண்டிய ஆட்சிப்) பொறுப்பு எனும் விலங்கு என் கழுத்தில் மாட்டிக் கொண்டதே போதும். என் மகனுடைய கழுத்திலும் அந்த பாரத்தை மாற்றி அமைக்க விரும்பவில்லை" என்று கூறிவிட்டார்கள். ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமளவுக்கு தன்னுடைய மகனார் தகுதி பெறவில்லை என்பதையும் காரணமாக கூறினார்கள். நூல்:- தாரீக் அத்தபரீ-4/228

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள், “(உஸ்மான்-ரலி, அலீ-ரலி, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்-ரலி, சஅத் அபீவக்காஸ்-ரலி, ஸுபைர் பின் அவ்வாம்-ரலி, அபூதல்ஹா-ரலி ஆகிய) ஆறு பேர் கொண்ட ஓர் தேர்வுக் குழுவை நியமித்தார்கள். இந்த தேர்வுக் குழுவில் கூட தமது மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்களை சேர்க்கக் கூடாது என்றும் இந்த தேர்வுக் குழுவின் போது அவர் தமது ஆலோசனையை தெரிவிக்கலாம். என்றாலும், அவரின் ஆலோசனையை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்றும் கூறினார்கள். நூல்:- தாரீக் அத்தபரீ-4/228

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தேர்வுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த ஆறு பேர்களுக்கு வழங்கிய அறிவுரை: உங்களில் யார் ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர் தமது கோத்திரத்தாருக்கு எந்த விதமான தனிப்பட்ட சலுகையும் அளிக்கக்கூடாது. நூல்:- பத்ஹுல் பாரீ

 

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நான்காம் ஜனாதிபதி அலீ (ரலி) அவர்களின் மரணத்தருவாயில் அவருடைய மகனார் ஹசன் (ரலி) அவர்களை ஜனாதிபதியாக (கலீஃபா) நாங்கள் ஏற்றுக்கொள்ளலாமா? என்று குடிமக்கள் கேட்டனர். அப்போது அலீ (ரலி) அவர்கள், "நான் அதற்காக அனுமதியும் தரமாட்டேன்; மறுக்கவும் மாட்டேன். நீங்களே எது நல்லது என்றெண்ணி தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். தாரீக் அத்தபரீ-3/112

 

நமது நாட்டை பொறுத்தவரையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, வாரிசு ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. வாரிசு அரசியல் நடப்பில் இருந்தாலும் அதை யாரும் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள தயாரில்லை.

 

அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால் தங்களது வாரிசுகளை ஜனாதிபதிகளாக நியமித்திருக்கலாம். குடிமக்கள் அனைவரும் அதை மன விருப்பத்தோடு ஏற்றிருப்பார்கள். ஆனாலும், அதை அவர்கள் செய்யவில்லை. வாரிசு வாரிசாக தொடரும் மன்னராட்சியாக மாறிவிடக்கூடாது என்ற பயத்தில் மிக கவனமாக இருந்துள்ளார்கள். தமது வாரிசை ஜனாதிபதியாக நியமிக்கும்படி குடிமக்களே வற்புறுத்தியபோதும் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த ஆட்சியாளர்களை இஸ்லாமிய வரலாற்றில் தான் காண முடியும்.

 

அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வாரிசு அரசியலை ஒழித்துவிட்டு தகுதியானவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார்கள். வாரிசு அடிப்படையிலோ, வலிமையை பயன்படுத்தியோ பதவிக்கு வந்தால் அது ஜனநாயகம் அல்ல. மாறாக, அது மன்னராட்சி என்று நினைத்தார்கள்.

 

பொது நிதியிலிருந்து...  

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَ لَنَا عَامِلاً فَلْيَكْتَسِبْ زَوْجَةً فَإِنْ لَمْ يَكُنْ لَهُ خَادِمٌ فَلْيَكْتَسِبْ خَادِمًا فَإِنْ لَمْ يَكُنْ لَهُ مَسْكَنٌ فَلْيَكْتَسِبْ مَسْكَنًا مَنِ اتَّخَذَ غَيْرَ ذَلِكَ فَهُوَ غَالٌّ أَوْ سَارِقٌ ) நமக்கு அதிகாரியாக பணிபுரிக்கின்றவர் (மனைவியற்றவராக இருப்பின், ஊதியம் பெற்று அதன்மூலம்) மணமுடித்துக் கொள்ளட்டும். பணியாள் இல்லாவிட்டால் (ஊதியம் பெற்று அதன்மூலம்) பணியாள் அமர்த்திக் கொள்ளட்டும். வீடு இல்லாவிட்டால் (ஊதியம் பெற்று அதன்மூலம்) வீடு ஒன்றை வாங்கிக் கொள்ளட்டும். அதைவிட அதிகமாக பெற்றால் அவர் மோசடிக்காரர் அல்லது திருடர் ஆவார். அறிவிப்பாளர்:- முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-2556, கன்ஸுல் உம்மால்

 

கல்லூரிப் படிக்கும்போது கல்வி கட்டணத்திற்கு வழியில்லாதவர்கள், கட்சியில் சேரும்போது பேருந்தில் பயணம் செய்தவர்கள், ஆட்சியதிகாரத்தில் அமர்ந்ததும் பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபதிகளாக ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு ஆட்சியதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரித்து வெளியிட்டால் அது பல புத்தகங்களாகிவிடும்.

 

நாம் ஒரு மனிதனை உயர்ந்த ஒரு பதவியில் அமர்த்துகிறோம் என்றால் அந்தப் பதவியிலுள்ள எல்லா அதிகாரங்களையும் அந்த மனிதனை நம்பி ஒப்படைக்கிறோம் என்றே பொருள். இந்த அதிகாரத்தை அவர் தன்னை உயர்ந்தவர் என்று பிரஸ்தாபிக்கவோ, தனது உறவினர்கள் உற்ற தோழர்கள் பலன் பெற வேண்டும் என்பதற்காகவோ பயன்படுத்தக்கூடாது.

 

பேராசான் பெருமானார் ஸல் அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ وَالٍ يَلِي رَعِيَّةً مِنَ الْمُسْلِمِينَ، فَيَمُوتُ وَهْوَ غَاشٌّ لَهُمْ، إِلاَّ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ ) முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரானால், சொர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகிறான். அறிவிப்பாளர்:- மஅகில் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-7151

 

அரசாங்க சொத்தை தனது சொத்தாகவோ நாட்டு மக்களை தனது அடிமைகளாகவே எண்ணக்கூடாது. அரசு பதவியில் இருப்பவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவே சம்பளம் கிடைக்கும் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. அவர் அதைக் கொண்டே போதுமாக்கிக்கொள்ள வேண்டும். தனது செல்வாக்கை பயன்படுத்திய அதிக வருவாய் சேர்த்திட லஞ்சம், ஊழல் போன்றவைகளில் ஈடுபடுவதும், பலவீனமானவர்களுக்காகவும் ஏழைகளுக்காகவும் செலவிடப்பட வேண்டியதை தனதாக்கிக் கொள்வதும் மாபெரும் மோசடியாகும்.

 

இன்றைய சூழலில் அரசாங்க வருமானம் ஆட்சியாளர்களின் சுகபோக வாழ்வுக்காகவும், அவர்கள் யாருக்கெல்லாம் சிபாரிசு செய்கிறார்களோ அவர்களுக்கும் செலவிடப்படுகிறது. மக்கள் நலனில் அக்கறை குறைந்துவிட்டது. இதன் காரணமாக செல்வந்தர்கள் மேலும் மேலும் செல்வந்தர்களாகிக் கொண்டே போகிறார்கள். ஏழைகளின் தேவைகளும் அவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

 

ஆனால், அண்ணல் நபி (ஸல்) அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமிய அரசாங்கத்தின் பொதுநிதியிலிருந்து பயனடைவதற்கு செல்வமோ, ஆட்சியாளர்களுடனான நெருக்கமோ காரணமாக அமையாமல் தேவைகளே அளவுகோலாக கொள்ளப்பட்டன.

 

கேட்கும் உரிமை

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் சல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்கள், "பொது நிதியிலிருந்து குடிமக்களுக்கு பங்கிடப்பட்ட போது எல்லோருக்கும் ஒரு போர்வை வந்தது. ஆனால், உங்களுக்கு மட்டும் இரண்டு போர்வை எப்படி வந்தது?" என்று கேட்டார்கள். உடனே ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தமது மகனார் அப்துல்லாஹ் (ரலி) அவர்களை கைகாட்டினார்கள். அவர் எழுந்து, தமது பங்கை தமது தந்தையாருக்கு வழங்கி விட்டதாகக் கூறினார். நூல்:- சீரா உமர் பின் கத்தாப் இமாம் இப்னு ஜவ்ஸீ பக்கம்-127

 

அருமை நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்த இஸ்லாமிய ஆட்சியாளர்களும் தனது பொருளாதார நிலை குறித்தும் தனிப்பட்ட ஒழுக்கநிலை குறித்தும் மற்றும் பொது விவகாரங்கள் குறித்தும் தகவல் பெற, குடிமக்களுக்கு முழு உரிமை வழங்கியிருந்தார்கள்.

 

மனதில் பட்டதை கேட்கும் துணிச்சலை வழங்கியதோடு அதற்குரிய விளக்கங்களையும் கேட்பவர்களுக்கு முகம் சுளிக்காமல் பதில் சொல்லும் பண்புள்ளவர்களாக இருந்துள்ளார்கள்.

 

அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தங்களைப்பற்றி குடிமக்கள் விமர்சனம் செய்யும்போது அவர்களின் வாயை அடைக்க முயற்சித்ததில்லை. எல்லோருக்கும் சரியான விளக்கத்தை ஒவ்வொரு முறையும் அளித்துள்ளார்கள்.

 

அவர்களுக்கென்று எந்த கட்சியும், கொடியும் இருந்ததில்லை. நாள்தோறும் ஐவேளை தொழுகையிலும் மக்களை நேரடியாக சந்திப்பார்கள். அவர்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்; விசாரிக்கலாம்; விமர்சிக்கலாம். அனைவருக்கும் இதற்கான முழு உரிமை இருந்தது.

 

அரசுத் துறை சம்பந்தமாக தகவல் அறியும் உரிமை மட்டும் பெரிய ஜனநாயகமல்ல. தேவைப்படும்போது ஆட்சியாளர்களின் நன்னடத்தை குறித்தும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மக்களுக்கு தரப்பட வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம்.

 

வேண்டாம் என்றார்கள்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் ஆட்சியாளராக உள்ளாரோ அவர் கடினமான கேள்விக் கணக்குக்கு உள்ளாக்கப்படுவார். அனைவரையும்விட கொடுமையான வேதனைக்கு ஆளாக்கப்படுவார். யார் ஆட்சியாளராக இல்லையோ அவர் எளிமையான கேள்வி கணக்கை சந்திப்பார். அவருக்கு வேதனை கிடைத்தாலும் இலேசாக இருக்கும். ஏனெனில், ஆட்சியாளர் குடிமக்களை அதிகமாக துன்புறுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது. குடிமக்களை துன்புறுத்துபவன் இறைவனுக்கு மோசடி செய்துவிட்டான். நூல்:- கன்ஸுல் உம்மால்

 

அதீ பின் அமீரா அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( مَنِ اسْتَعْمَلْنَاهُ مِنْكُمْ عَلَى عَمَلٍ فَكَتَمَنَا مِخْيَطًا فَمَا فَوْقَهُ كَانَ غُلُولاً يَأْتِي بِهِ يَوْمَ الْقِيَامَةِ ) "நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்திருந்து, பின்னர் அவர் ஒரு ஓர் ஊசியையோ அதைவிடச் சிறியதையோ நம்மிடம் (கணக்குக் காட்டாமல்) மறைத்து விட்டால் அது மோசடியாகவே அமையும். அவர் மறுமைநாளில் அந்த பொருளுடன் வருவார்" என்று கூறியதை கேட்டேன்.

 

அப்போது அன்சாரிகளில் ஒரு கறுப்பு நிற மனிதர் எழுந்து, அவரை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்று உள்ளது. ( يَا رَسُولَ اللَّهِ اقْبَلْ عَنِّي عَمَلَكَ ) "நாயகமே! என்னிடம் தாங்கள் ஒப்படைத்திருந்த பணியை நீங்கள் (திரும்ப) ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.

 

நபியவர்கள், ( وَمَا لَكَ )  "உங்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். அவர், ( سَمِعْتُكَ تَقُولُ كَذَا وَكَذَا ) "தாங்கள் இன்னின்னவாறு கூறியதை நான் கேட்டேன்" என்றார். நூல்:- முஸ்லிம்-3743

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் சஅத் பின் ஆமீர் (ரலி) அல்ஜுமஹிய்யி (ரலி) அவர்களை படைப்பிரிவு ஒன்றுக்கு தலைவராக்க எண்ணியபோது, சஅத் பின் ஆமிர் (ரலி) அவர்கள் அதை ஏற்க மறுத்தார்கள். அப்போது ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள், ( وَاللَّهِ لَا اَدَعُكُمْ جَعَلْتُمُوهَا فِي عُنُقِي ثُمَّ تَخَلَّيْتُمْ مِنِّي ) " அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை விட மாட்டேன். இந்த ஆட்சிப் பொறுப்பை என் தலையில் போட்டுவிட்டு என்னை தனியாக விட்டுவிட்டு நீங்கள் ஒதுங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறீர்களா?" நான் உங்களை விடப்போவதில்லை. நீங்களும் இந்த சுமையில் பங்கேற்க வேண்டும்" என்று பிடிவாதமாகக் கூறியபோது தான் சஅத் (ரலி) அவர்கள் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். நூல்:- ஸஃப்வத்துஸ் ஸஃப்வா இமாம் இப்னு ஜவ்ஸீ, ஹயாத்துஸ் ஸஹாபா 2/102

 

இராக் மாகாண கவர்னர் யஸீத் பின் உமர் பின் ஹுமைரா என்பவர் பேரறிஞர் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களை அழைத்து, "தங்களுடைய கையில் நான் என்னுடைய முத்திரை மோதிரத்தை கொடுத்துவிடுகிறேன். தாங்கள் முத்திரை குத்தாத வரைக்கும் எந்த கட்டளையும் பிறப்பிக்கப்படாது. எந்த பொருளும் பொதுநிதியிருந்து வெளியேறாது" என்றார். அப்பொறுப்பை இமாம் அவர்கள் ஏற்க மறுத்து விட்டார்கள். அதன் காரணமாக இமாம் அவர்கள் கைது செய்யப்பட்டு, கசையடிகள் வழங்கப்பட்டார்கள்.

 

மேலும், இமாம் அவர்களுக்கு கூஃபா நகரின் நீதிபதி பொறுப்பு தேடி வந்தபோது ஏற்க மறுத்துவிட்டார்கள். அதன் காரணமாக, இமாம் அவர்கள் பத்து பதினைந்து நாள்கள் வரை நாள்தோறும் பத்து கசையடிகள் வழங்கப்பட்டார்கள். நூல்:- அல்இன்திகாஉ இப்னு அப்துல் பர்

 

நல்லோர்களின் ஆட்சியில் பதவி தன்னை தேடி வந்த போதும், அது வேண்டாம் என்று முடிந்தவரை ஒதுங்கி வாழ முயற்சித்துள்ளார்கள் நபித்தோழர்கள். ஏனெனில், சிறிய பெரிய எந்த பதவியாக இருந்தாலும் அதன் சுமை மிகவும் பாரமானது என்றும் ஆட்சியதிகாரத்தை விஷத்தை விட மோசமானதாகவும் கருதினார்கள்.

 

தீயோர்களின் ஆட்சியில் பதவி தன்னைத் தேடி வந்தபோதும் அதை ஏற்க மறுத்ததால் சிறைச்சாலை வரை சென்று, பல துன்ப துயரங்களை அனுபவித்துள்ளார்கள் நமது இமாம்கள். தீய ஆட்சியாளர்களின் தவறுக்கு ஒத்துப்போவது கொடுமையிலும் கொடுமையானது என நமக்கு தெளிவுபடுத்தினார்கள் நமது முன்னோர்கள்.

 

நேர்மையான இஸ்லாமிய ஆட்சியாளர்களான அபூபக்ர் (ரலி), உமர்  (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி) ஆகியோர் நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கான பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதி, செல்வத்தை செலவழித்தல் போன்ற எந்த முயற்சியும் செய்யவில்லை. இனவாதம் முன்வைக்கவில்லை; பலாத்காரம் பிரயோகப்படவில்லை; வன்முறை பயன்படுத்தப்படவில்லை. குடிமக்கள் தங்களாகவே சென்று ஆட்சியதிகாரத்தை அவர்கள் மீது சுமத்தினர்.

 

அந்த பெருமக்கள், தங்கள் மீது சுமத்தப்பட்ட ஆட்சியதிகாரத்தை செல்வம் காய்க்கும் மரமாக எண்ணி, அவர்கள் சந்தோஷம் அடையவில்லை; அதை அவர்கள் முள் கிரீடமாகத்தான் கருதினார்கள்.

 

தகுதி வேண்டும்

 

அருமை நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். ( إِذَا أُسْنِدَ الأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ، فَانْتَظِرِ السَّاعَةَ ) (ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற) எந்தப் பொறுப்பும் அதற்குத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமைநாளை எதிர்பார்த்துக்கொள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6496

 

இன்று ஆட்சியதிகாரம் பெரும்பாலும் தகுதியில்லாதவர்களிடமே ஒப்படைக்கப்படுகிறது. அரசாட்சி மட்டுமல்ல, சாதாரண ஒரு அலுவலக நிர்வாகம் கூட தகுதி இல்லாதவர்களிடமே ஒப்படைக்கப்படுகிறது என்பது உண்மையாகும். அரசியல் கட்சிகளில் ரவுடித்தனம் புரிபவர்களும், படிப்பறிவு இல்லாதவர்களும், தலைவரின் வாரிசுகள் என்ற அடிப்படையிலும், மக்களிடம் பிரபலமான சினிமா நடிகர் நடிகைகள் கூட M.P.  / M.L.A. என்ற பெயரில் பெரும் பொறுப்புகளில் அமர வைக்கப்படுகிறார்கள்.

 

இப்படி பொறுப்புக்கு வரும் மனிதர் தனக்கு வழங்கப்படும் பொறுப்பு பற்றியோ, அந்த பொறுப்புக்குரிய அதிகார வரம்பு பற்றியோ பெரும்பாலும் அறியாதவர்களாக உள்ளனர்.

 

தகுதியில்லாதவர்களின் தலைமையில் அடாவடி நிர்வாக முறை காரணமாகவும், திடீரென ஆணையிடும் தொலைநோக்கு பார்வையில்லாத அதிரடி சட்டங்கள் மூலமாகவும் குடிமக்கள் சொல்லொணா துன்ப துயரங்களுக்கு ஆளாகி விடுகிறார்கள். இந்த கடுமையான சோதனையிருந்து விடுபட தகுதி இல்லாதவர்களுக்கு பொறுப்புகளை வழங்காமல் இருப்பதே முறையாகும் என்கிறது மேலும் நபிமொழி.

 

தலைமைக்கு கட்டுப்படுதல்

 

இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; அவனுடைய தூதருக்கும் உங்களில் அதிகாரம் உடையவருக்கும் கீழ்படியுங்கள். திருக்குர்ஆன்:- 4:59

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( السَّمْعُ وَالطَّاعَةُ عَلَى الْمَرْءِ الْمُسْلِمِ، فِيمَا أَحَبَّ وَكَرِهَ، مَا لَمْ يُؤْمَرْ بِمَعْصِيَةٍ، فَإِذَا أُمِرَ بِمَعْصِيَةٍ فَلاَ سَمْعَ وَلاَ طَاعَةَ )  (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவதும் கடமையாகும். (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது. அறிவிப்பாளர்:-  அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:-  புகாரீ-7144

 

எதிர்க்கட்சிக்காரர்களாக நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பலர் வீற்றிருந்தாலும் அவர்களும் ஆளப்படுவோரில் ஒரு அங்கத்தினரே. எதிர்க்கட்சிக்காரர்கள் எதிரிகளாகவே இருந்து தலைமைக்குக் கட்டுப்படாமல் ஆட்சியாளர்கள் நல்ல பல திட்டங்கள் முடக்கி போடுபவர்களாக இருப்பது மாபெரும் தவறாகும்.

 

ஆட்சியாளர்கள் பிறப்பிக்கும் ஆணைகள் மார்க்கத்திற்கு விரோதமாக இல்லாமல் இருக்கும் வரை, அதற்கு கட்டுப்படுவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். நாட்டு மக்களிடம் தலைமைக்குக் கட்டுப்படுதல் என்ற தன்மை வந்துவிட்டால் நாட்டில் நல்லாட்சி ஏற்படும். நல்ல முறையில் நிர்வாகமும் செயல்படும்.

 

அவ்வாறு இல்லாமல் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை முன்வைத்து தலைமைக்குக் கட்டுப்படாத நிலை குடிமக்களிடம் வந்துவிட்டால், நாட்டில் தேவையில்லாத குழப்பங்கள் தலைதூக்கம் என்பதில் சந்தேகமில்லை. குடிமக்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது இறைவன் மற்றும் இறைத்தூதரின் கட்டளையாகும்.

 

பாராட்டுதல்

 

அண்ணல் நபி (ஸல்) செல்வர்கள் கூறினார்கள். ( أُمَرَاءُ يَكُونُونَ بَعْدِي لَا يَهْتَدُونَ بِهَدْيِي وَلَا يَسْتَنُّونَ بِسُنَّتِي فَمَنْ صَدَّقَهُمْ بِكَذِبِهِمْ وَأَعَانَهُمْ عَلَى ظُلْمِهِمْ فَأُولَئِكَ لَيْسُوا مِنِّي وَلَسْتُ مِنْهُ ) எனக்குப் பின்  ஆட்சியாளர்களில் சிலர் வருவார்கள். (அவர்கள்)  எனது வழிகாட்டுதலை பின்பற்ற மாட்டார்கள். எனது (சுன்னத் எனும்) வழிமுறையை பொருட்படுத்தமாட்டார்கள். அவர்களுடைய பொய்களை ஆதரிப்பவனும், அவர்கள் அநீதமிழைக்க உறுதுணையாய் இருப்பவனும் என்னைச் சார்ந்தவன் அல்லர்; நான் அவனைச் சார்ந்தவன் அல்லர். அறிவிப்பாளர்:- கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், இப்னு ஹிப்பான்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எவன் ஒருவன் ஆட்சியாளரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக இறைவனுக்கு பிடிக்காத வார்த்தையை கூறினானோ, அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டான். நூல்:- கன்ஸுல் உம்மால்

 

அபூ மூசா (ரலி) அவர்கள் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் மற்றொரு மனிதரை அளவு கடந்து புகழ்ந்து கொண்டிருப்பதை செவியுற்றார்கள். அப்போது நபியவர்கள், ( قَطَعْتُمْ ظَهْرَ الرَّجُلِ ) "அந்த மனிதரின் முதுகை ஒடித்து விட்டீர்" என்று (கடிந்து) கூறினார்கள். நூல்:- புகாரீ-6060

 

ஒருவரை அளவுகடந்து புகழும்போது அவருக்கு தலைக்கனமும், கர்வமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும், அவரிடம் இல்லாத பண்புகளை இருப்பதாகக் கூறி புகழ்கின்ற நிலையும் உருவாகும். இது, அவரது முன்னேற்றத்தை பாதிக்கும். ஏனெனில், தாம் நிறையவே செய்துவிட்டதாக, அவர் எண்ண துவங்கி விடுவார். ஆகவேதான், அவ்வாறு புகழ்வது ஒருவரை அழிப்பதற்கு சமமாகும் என்கிறது இந்த நபிமொழி.

 

அன்றைய காலத்தில் மன்னரின் அவையில் மன்னரை புகழ்வதற்காகவே கவிஞர்கள் இருப்பார்கள். அவர்களை "அரசவைக் கவிஞர்கள்" என அழைக்கப்படும். அவர்களுக்கு வேலை மன்னரை புகழ்வது மட்டும் தான்.

 

இன்றைய பாராளுமன்ற சட்டமன்றங்களில் பொருத்தவரையில் M.P. /  M.L.A. க்களை பொருத்தவரை பிரதமரும், முதலமைச்சரும் கடவுளுக்கு சமமானவர்கள் என்றெண்ணி, "இதய தெய்வமே! காவல் தெய்வமே! கர்ம வீரரே! வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!" என்றெல்லாம் புகழ்வதையும், அவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெறுவதையும் காணலாம்.

 

இது சில முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல. தன்னை கடவுளுக்கு சமமாக புகழும் M.P / M.L.A. க்களுக்கும் உடனே மந்திரி மற்றும் வாரியத் தலைவர் பொறுப்புக்களை வாரி வழங்குவதைக் காணலாம்.

 

ஏதேனும் பதவிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ, அல்லது கட்சியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காகவோ ஆட்சியாளர்கள் கொண்டுவரும் எல்லா சட்டதிட்டங்களுக்கும் ஒத்து ஊதக்கூடாது. அந்தச் சட்ட திட்டங்களால் மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என தெரிந்தால், உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும். மேலும், அதனை தடுக்க முயற்சிக்க வேண்டும். அவர்களின் தவறான சிந்தனைகளை உடனடி சுட்டிக்காட்ட வேண்டும்; தயங்கக்கூடாது.

 

ஓட்டுப்போடுவது

 

ஒவ்வொரு குடிமகனும் பல்வேறு வழிகளில் ஜனநாயக ஆட்சியில் பங்கு கொள்ளமுடியும். அவற்றின் மிகவும் முக்கியமானது தேர்தலில் ஓட்டுப்போடுவது. ஓட்டுப்போடும் உரிமையை பயன்படுத்தாமல் இருப்பது பொறுப்பற்ற செயலாகும். நாட்டின் நலனுக்கு யாரை தேர்ந்தெடுப்பது சிறந்தது என்று ஒவ்வொருவரும் எப்படி புரிந்திருக்கிறாரோ அதற்கு தக்கவாறு மிக கவனத்துடன் நிச்சயமாக ஓட்டுப்போட வேண்டும் என்பதற்காகவும் நமது முன்னோர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். நாம் குறைந்தபட்சம் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போடவாவது செய்ய வேண்டும்.

 

நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முதலாக 1952 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற முதல் தேர்தல் மற்றும் இரண்டாவது தேர்தலில் வாக்கு பெட்டி அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. இந்த முறைப்படி ஒவ்வொரு வேட்பாளருக்கும் பச்சை, மஞ்சள், சிவப்பு என ஒவ்வொரு நிறத்திலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட வேட்பாளரின் வாக்குப்பெட்டியில் தங்கள் வாக்குகளைச்சீட்டுகளைப் போடுவார்கள்.

 

அதன்பிறகு 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இருந்து வேட்பாளரின் பெயர்களும் அவருடைய சின்னங்களும் அச்சிடப்பட்ட பொதுவான வாக்குச்சீட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்படும். அவர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட வேட்பாளரின் சின்னத்தின் மீதோ அல்லது அதன் அருகில் அம்புக்குறியை பதித்து, அந்த வாக்குச்சீட்டை பொதுவான ஒரு பெட்டியில் போடுவார்கள்.

 

தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளரின் பெயர் மற்றும் அவரது சின்னத்திற்கு எதிரே உள்ள பொத்தானை அழுத்துவிட்டு ஓட்டுப்போடும் முறை நடைமுறையில் உள்ளது.

 

குடிமக்களை ஓட்டு வங்கிகளாக மட்டும் பயன்படுத்திக்கொண்டு ஆட்சியதிகாரத்தில் அமர்ந்து பொதுச்சொத்தை முடிந்தவரை சுருட்டிக் கொள்வதே நடைமுறையில் உள்ளது. அதன் விளைவு தான் பல இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அள்ளி வீசப்படுகிறது. இலவசமான கலர் டிவி, கேஸ் அடுப்பு, மிக்ஸி,  மின்விசிறி, தங்கத்தில் தாலி, நிலம், வீடு விவசாயிகள் கடன் ரத்து, மாணவர்களுக்கு லேப்டாப் இவ்வாறு இலவசங்களின் பட்டியல் நீளுகிறது.

 

மக்களுக்கு இலவசங்கள் தருகிறோம் என்ற போர்வையில் ஆட்சியாளரும், அதிகாரிகளும் ஊழல் மூலம் கொள்ளை அடிக்கிறார்கள் என்பதும்; இலவசங்கள் எதுவும் தரமாக இருப்பதில்லை என்பதும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும். இலவசகளுக்காக தாங்கள் மிகவும் அலைக்கழிக்கப்படுவதும், அவமானங்களுக்கு ஆளாகுவதும் பெரும்பாலான மக்களின் அனுபவமாக இருக்கிறது.

 

எந்த ஜனநாயக நாட்டிலும் இவ்வளவு இலவசங்கள் மக்களுக்கு தரப்படுவதில்லை. இலவச அறிவிப்புகள் உழைப்பை கொச்சைப்படுத்தி சோம்பேறிகளை உருவாக்கும். ஏற்கனவே, நம் நாடு சோம்பேறித்தனத்திற்கு பெயர்போன நாடு. இலவச அறிவிப்புகளை இனியும் நாம் நம்பி சோம்பேறியாக்கிக் கொள்ள வேண்டாம்; ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்.

 

இலஞ்சம் - பொய்சாட்சி

 

தேர்தல் ஆணையம் எவ்வளவு கெடுபிடி காட்டினாலும், தேர்தலில் கொடுப்பதும் வாங்குவதும் சகஜமான ஒன்றாகிவிட்டது. ஓட்டுக்கு எவ்வளவு கிடைக்கும்; வேறு என்னென்ன கிடைக்கும் என்பதுதான் பெரும்பாலான வாக்காளர்களின் இயல்பான மனநிலை என்றாகிவிட்டது.

 

இதே நிலை நீடித்தால், கொஞ்சம் கொஞ்சமாக சில்லறை வியாபாரமாகிவிடும் அரசியல்; சீக்கிரமே மொத்த வியாபாரம் ஆகிவிடும். ஓட்டுக்கு பணமே பிரதானம் என நினைத்தால் கொள்கை, கோட்பாடு, பிரச்சாரம், ஓட்டுவேட்டை எல்லாம் எதற்கு?

 

நாங்கள் தானே ஓட்டு போட்டோம். எங்கள் வீதிக்கு விளக்கு இல்லை, சாலை வசதி இல்லை, குடிநீர் இல்லை என மக்கள் கேட்க முடியாமல் உள்ளனர். தவறி யாராவது கேட்டால் சும்மாவா ஓட்டுப்போட்ட... பணம் வாங்கல... பிரியாணி சாப்பிடல... இன்னபிற பொருள்களெல்லாம் வாங்கல... வந்துட்ட என்னவோ கேள்வி கேட்க... என வெற்றி பெற்றவர் உண்மையை போட்டு உடைக்கும்போது அங்கே வாக்காளன் கப்சிப் ஆகிறான்.

 

ஊரெங்கும் இதே கூத்து தான். கொள்கை, தேர்தல் அறிக்கை, வாக்குறுதி, வேட்பாளர் தகுதி, படிப்பு எல்லாம் பொய்யாகிவிட்டது.

 

ஓட்டுக்கு பணம் தர முன் வருவதிலிருந்து அப்படிப்பட்டவர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளோம் என அம்பலப்பட்டு விடுகிறார்கள். அப்படி அம்பலப்பட்டு நிற்பவர்களை நாம் அறுவறுத்து ஒதுக்க வேண்டுமே தவிர, அவர்களை ஆதரிக்கக் கூடாது.

 

ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொள்வதின் மூலம் அவர்களின் ஈனச் செயலிலும், பாவச் செயலிலும் நாம் பங்குதாரர்களாகி, பொதுச்சொத்தை கொள்ளையடிக்கும் வாய்ப்பை மீண்டும் அவர்களுக்கு நாம் அளிக்கிறோம் என்றே பொருளாகும்.

 

சீச்சீ... வேண்டாம் என்று அந்த பணத்தை புறக்கணிப்பதை காட்டிலும் அவர்களை அவமதிக்க சிறந்ததொரு வாய்ப்பு நமக்கு மறுபடியும் வரப்போவதில்லை. தேர்தல் எப்போதும் "ஜனநாயகம்" சார்ந்ததாக இருக்க வேண்டும்; "பணநாயகம்" சார்ந்ததாக இருக்கக் கூடாது.

 

ஓட்டுப் போடுவது, இஸ்லாமியப் பார்வையில் சாட்சி சொல்வது போலாகும். அதாவது, ஒரு வேட்பாளருக்கு ஓட்டுப்போடுவது என்பது அந்த வேட்பாளர் நீதம், சட்ட ஒழுங்கு, மக்கள் சேவை இவற்றில் அக்கறை உள்ளவர் என்பதற்கு சாட்சி அளிப்பதுதான்.

 

ஒருவன் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போட்டால் இரண்டு குற்றமாகும். ஒன்று இலஞ்சம் வாங்கிய குற்றம். அதாவது, பணத்தை வாங்கிக்கொண்டு அவருக்கு சாதமாக வாக்களித்தால் அது ஓட்டுக்கு வாங்கப்பட்ட இலஞ்சம் தானே!

 

மற்றொன்று, பொய் சாட்சி சொல்வது. அதாவது, மக்களுக்கு பணம் கொடுத்து ஆட்சியில் அமருபவன் செலவழித்ததை சம்பாதிப்பதற்கு தவறான வழிகளை கையாளுவான். சரியான முறையில் ஆட்சி புரியமாட்டான் என தெரிந்தும் அவனுக்கு ஓட்டுப்போடுவது, தகுதி இல்லாதவனை தகுதியுள்ளவன் என பொய்சாட்சி சொல்லியது போல் தானே!

 

ஓட்டுப்போடுவதற்கு வாங்கிய பணத்தை உபயோகிப்பதை மார்க்கம் எந்த வகையிலும் அனுமதிக்கவில்லை. அது, ஹராமான பணம் தான் என்று நினைவில் கொள்ள வேண்டும்.

 

மார்ச் 2009 ஆம் ஆண்டு டெல்லி தேவ்பந்த் எனும் பகுதியில் உள்ள "தாருல் உலூம்" இஸ்லாமியக் கல்லூரியிலிருந்து வெளியிடப்பட்ட மார்க்க தீர்ப்பு: "இந்தியாவில் கட்சி அடிப்படையில் யாரையும் ஆதரிக்கக்கூடாது. ஏனெனில், இங்கு எந்த கட்சியும் நீதி, நேர்மையை கடைப்பிடிப்பதில்லை. அதனால், அந்தந்த தொகுதியிலுள்ள நல்ல வேட்பாளர்களுக்கு மட்டுமே முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்" என்று இவ்வாறு கூறுகிறது.

 

"பெரிய சோதனைக்கு சிறிய சோதனை பரவாயில்லை" என்கிறது ஒரு நபிமொழி.

 

இவர் நல்லவர் என்று பார்த்தால் யாரையும் சட்டென்று சொல்லிவிட முடியாது. பரவாயில்லை; அல்லது குறைந்தபட்ச நல்ல தகுதி இவைகளைப் பார்க்க வேண்டியதுதான்.

 

ஒரு ஊருக்கு வெளியூர்காரர் ஒருவர் வந்து, அங்கிருந்த ஒரு பெண்ணிடம், "உங்கள் பிள்ளைகளில் எந்த பிள்ளை, நல்ல பிள்ளை?  என்று கேட்டாராம். அப்போது அப்பெண், "அதோ அந்தப் பக்கத்து வீட்டு கூரையில் ஏறி கொள்ளி வைக்கிறானே, அவன் தான் என் பிள்ளைகளிலேயே நல்ல பிள்ளை” என்றாளாம். இதுதான் இன்றைய அரசியல்வாதிகளின் நிலை.

 

அவருக்கு, இவர் பரவாயில்லை என்றுதான் சொல்ல முடியுமே தவிர, இவர் சொக்கத்தங்கம் என்று யாரையும் சொல்ல முடியாது. அதுதான் இன்றைய யதார்த்தம். குறைந்தபட்சம் இந்தத் தகுதியை பார்த்தாவது, யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதை நாம் தான் முடிவெடுக்க வேண்டும்.

 

பாகிஸ்தான் முஃப்தி தகீ உஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மார்க்கத்தின் பார்வையில் ஓட்டு போடுவது சாட்சி சொல்வதைப் போன்றதாகும். பொய் சாட்சி சொல்வது ஹராமாக இருப்பதைப் போல், தேவையான நேரத்தில் சாட்சி சொல்லாமல் மறைப்பதும் ஹராமாகும். நூல்:- ஃபிக்ஹீ மகாலாத் ஓட் கீ இஸ்லாமீ ஹைஸியத்


யார் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும் நாட்டை சுரண்டுவார்கள். அதற்கு நான் ஏன் ஓட்டுப்போட வேண்டும் என்றெண்ணி, ஓட்டுப்போடாமல்  இருப்பது சரியல்ல.

 

நமக்குத் தேவை, நமது தொகுதியின் மேம்பாடு. இப்படி ஒவ்வொருவரும் சிந்தித்தாலே தேசம் சீராகும்.


அநியாயம் புரியும் ஆட்சியாளர்களை விட்டும் பாதுகாப்புப் பெற, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்காணும் பிரார்த்தனையைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

 

 ( اللهم لَا تُسَلِّطْ عَلَینَا مَنْ لَّا یَرْحَمْنَا وَلَا يَخَافُكَ فَینَا ) இறைவா! எங்கள் இரக்கம் காட்டாதவரையும், எங்கள் விஷயத்தில் உன்னை அஞ்சாதவரையும் எங்கள் மீது (ஆட்சியாளராக) சாட்டிவிடாதே! நூல்:- திர்மிதீ-3502

 

இந்திய மக்கள் இப்போது இந்த பிரார்த்தனையை அனுதினமும் பிரார்த்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

 

உலகமெங்கும் நீதி நேர்மையுள்ள இஸ்லாமிய ஆட்சி மலர, அல்லாஹுத்தஆலா அருள் புரிவானாக! ஆமீன்!

 

(இந்த கட்டுரை சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...