அஹ்லு பைத்தினர்
قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي
الْقُرْبَى
(நபியே இவர்களிடம்)
நீர் கூறுவீராக! இதன் காரணமாக நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை; உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர. திருக்குர்ஆன்:-
42:23
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள், தமது குடும்பத்தினருக்கு நல்ல உபகாரம் செய்யுமாறும், அவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்றும், அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும்
என்று கூறிய அறிவுறுத்தலை இந்த முஸ்லிம் சமுதாயம் மறந்துவிடக்கூடாது. ஏனெனில், நபியவர்களின் குடும்பத்தினர் தூய்மை மிக்க வழித்தோன்றல்கள் ஆவர். இந்த பூமியில்
தோன்றிய மிகச்சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கௌரவத்திலும் குலச் சிறப்பிலும்
குடும்பச் சிறப்பிலும் உயர்ந்தவர்கள் ஆவர்.
நபியவர்களின் குடும்பத்தினரை
நேசித்து மரியாதை செய்து, அவர்களுக்கு உதவி உபகாரங்கள் செய்வது மூலம் இறைநம்பிக்கை
உறுதி பெறலாம்; நபியவர்களின் துஆவைப் பெறலாம்; பாவங்கள் மன்னிக்கப்படலாம்; இறைநேசராக உயர்வு பெறலாம். பொருளாதாரத்தில் அருள்வளம் காணலாம்.
அஹ்லு பைத்தினர் மீது பிரியம் கொள்ள வேண்டும் என்பதற்காக ஹுசைன் (ரலி) அவர்களின் இறப்புக்காக வருடந்தோறும் ஆஷூரா தினத்தன்று துக்கம் அனுஷ்டிக்க வேண்டும் என்பதும், ஒப்பாரிவைத்து அழுதுகொண்டே மாரடித்து இரத்த களரியை ஏற்படுத்திக்கொள்வதும், பஞ்சா எடுத்து கொண்டு ஊர் சுற்றி வருவதும், ஊரைக் கூட்டிவைத்து கொண்டு பொது மைதானத்தில் தீ மிதிப்பதும் அவசியம் என்று எண்ணுவது மடத்தனமாகும்.
அண்ணல் நபி ஸல் அவர்களின் அன்புப் பேரர் ஹுசைன் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ-61 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் அன்று இராக் நாட்டிலுள்ள "கர்பலா" எனும் இடத்தில் நடந்த சண்டையில் அநீதமாக கொல்லப்பட்டார்கள்.
நபியவர்களின் குடும்பத்தினரின் இறப்பு முஸ்லிம் சமுதாயத்திற்கு துக்கத்திற்குரியவை தான். அதற்காக இதை எண்ணி வருடந்தோறும் துக்கம் அனுஷ்டிப்பது தவிர்க்கப்பட வேண்டியவையே! நபிவழிக்கு முரணானவையே!
மேலும், முஆவியா (ரலி) அவர்கள் மற்றும் அவர்களின் மகன்
யஸீதை திட்டித்தீர்க்க வேண்டும் என்பதோ அவசியமில்லை. அஹ்லு பைத்தினரை நேசித்தல் என்பது
அவர்கள் காட்டித் தந்த நல்லறங்களை ஏற்று நடப்பது. அதுதான் உண்மையான நேசம்.
அன்பு வைத்தல்
சயீத் பின் ஜுபைர்
(ரஹ்) அவர்களிடம் (தலைப்பில் காணும்), “உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிர” என்ற
வசனத்திற்குரிய விளக்கம் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு அன்னார், "என்னுடைய உறவினர்களிடம் அன்பு பாராட்ட வேண்டும்
என்று நான் விரும்புகிறேன். (அதாவது, என் உறவினர்களிடம்
அன்பாதரவுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும்) என்பதாகும்"
என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-3497, தஃப்சீர் இப்னு கஸீர்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَحِبُّوا اللَّهَ لِمَا يَغْذُوكُمْ بِهِ مِنْ نِعَمِهِ ، وَأَحِبُّونِي لِحُبِّ اللَّهِ ، وَأَحِبُّوا أَهْلَ بَيْتِي لِحُبِّي ) அல்லாஹ் தனது அருள்வளங்களின் மூலமாக உங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கியதற்காக அவனை நேசியுங்கள். அல்லாஹ்வை நேசித்ததற்காக என்னை நேசியுங்கள். என்னை நேசித்ததற்காக எனது குடும்பத்தினரை நேசியுங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-3712
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( أَدِّبُوْا أَوْلَادَكُم
عَلَى ثَلَاثِ خِصَالٍ : حُبِّ نَبِيِّكُم، وَحُبِّ أَهْلِ بَيتِهِ، وَعَلَى قِرَاءَةِ
الْقُرآن ) உங்கள் பிள்ளைகளுக்கு
மூன்று விஷயங்களைக் கற்பியுங்கள். உங்கள் நபியின் மீது அன்பு வைத்தல், நபியுடைய குடும்பத்தினர்
மீது அன்பு வைத்தல், குர்ஆன் ஓதி வருதல். நூல்:- தைலமீ, கன்ஸுல் உம்மால்
உசாமா பின் ஸைத்
(ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ஹசன் (ரலி)
ஹுசைன் (ரலி) ஆகிய இருவரையும் சுட்டிக்காட்டி, ( هَذَانِ ابْنَايَ وابْنَا
ابْنَتِي، اللَّهُمَّ إِنِّي أُحِبُّهمَا فَأَحبَّهما وَأَحِبَّ مَنْ يُحِبُّهُمَا )
"இவ்விருவரும் எனது மகன்கள். மகளின் மகன்கள் ஆவர்.
யா அல்லாஹ்! இவ்விருவரையும் நான் நேசிக்கிறேன். இவ்விருவரையும் நீயும் நேசிப்பாயாக! இவ்விருவரையும் நேசிப்போரையும் நீ
நேசிப்பாயாக!" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-3692
ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ( وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَرَابَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَحَبُّ إِلَىَّ أَنْ أَصِلَ مِنْ قَرَابَتِ ) என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! என் உறவினர்களின் உறவைப் பேணி (அவர்களுடன் நல்ல முறையில்) நடந்துகொள்வதைவிட கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுடைய உறவினர்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள். நூல்:- புகாரீ-3712, முஸ்லிம்-3615
ஜனாதிபதி அபூபக்ர்
(ரலி) அவர்கள் கூறினார்கள். ( ارْقُبُوا مُحَمَّدًا صلى الله عليه وسلم فِي أَهْلِ بَيْتِهِ
) முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்துகொள்ளுங்கள். (அவர்களைப்
பாதுகாத்து வாருங்கள். அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்.) அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ்
பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3713
உமர் (ரலி) அவர்கள்
அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கி! ( وَاللَّهِ لَإِسْلَامُكَ يَوْمَ أَسْلَمْتَ كَانَ أَحَبَّ إليَّ مِنْ إِسْلَامِ
الْخَطَّابِ لَوْ أَسْلَمَ؛ لَأَنَّ إِسْلَامَكَ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ
مِنْ إِسْلَامِ الْخَطَّابِ ) "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் இஸ்லாத்தில்
சேர்ந்தது தான் எனக்கு மிகவும் பிரியமானது. ஒருவேளை (என் தந்தை) கத்தாப் இஸ்லாத்தில்
இணைந்திருந்தால், அதைவிட அதிகமாக நீங்கள் இணைந்ததைத்தான் நான் விரும்புகிறேன்.
அதற்கு காரணம், கத்தாப் இஸ்லாத்தில் இணைவதைக் காட்டிலும் நீங்கள்
இஸ்லாத்தில் இணைவதுதான் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமாக இருந்தது என்பதுதான்"
என்று கூறினார்கள். நூல்:- தப்ரானீ,
தஃப்சீர் இப்னு கஸீர் அஷ்ஷூரா
வசனம்-23
ஒருமுறை உமர் பின்
அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களிடம் அலீ (ரலி) அவர்களின் (மற்றொரு மனைவிக்கு பிறந்த) மகளார் ஃபாத்திமா (ரஹ்) அவர்கள் வந்தார்கள். அப்போது அன்னார் அந்த பெண்மணியை
நோக்கி, "எனக்கு இந்த உலகத்தில் எனக்கு பிரியமான குடும்பத்தினர் உங்கள் குடும்பத்தினரைத்
தவிர வேறு யாருமில்லை" என்று கூறினார்கள். நான் அஹ்லே பைத்தினரை நேசிக்கிறேன்.
எந்த அளவுக்கென்றால் என்னுடைய குடும்பத்தினரைவிட அஹ்லே பைத்தினரை நான் அதிகம் நேசிக்கிறேன்"
என்று கூறினார்கள்.
முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்), காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி (ரஹ்), நாகூர் ஷாகுல் ஹமீத் (ரஹ்), திருச்சி நத்ஹர்ஷா (ரஹ்), போன்ற மாபெரும் மகான்கள், பெரும் சிறப்பிற்கும் கௌரவத்திற்கும் உரிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வம்சத்தினர்கள் ஆவர்.
மன்னித்துவிடுதல்
இமாம் அஹ்மத் பின்
ஹன்பல் (ரஹ்) அவர்களை அஹ்லு பைத்தினராக இருந்த கலீபா மாமூன் ரஷீத் என்பவர் நோவினை செய்தார்.
இருந்தாலும் இமாம் அவர்கள் மாமூன் ரஷீதை மன்னித்துவிட்டார்கள். காரணம், “நாளை மறுமையில் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்)
அவர்களின் குடும்பத்திற்கு எதிராகவா வழக்காடுவேன்?" என்றார்கள்.
அஹ்லு பைத்தினர் ஏதேனும் தவறித்துவிட்டால், அவர்களை மன்னித்துவிடுதே சாலச்சிறந்தது என தெளிவாகிறது.
கோபப்படுத்திவிடக்
கூடாது
ஒருமுறை அப்பாஸ்
(ரலி) அவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் கோபமுற்ற நிலையில் வந்தார்கள். நபியவர்கள், "உங்களை கோபப்படுத்திய நிகழ்வு எது?” என்று வினவினார்கள்.
அப்பாஸ் (ரலி) அவர்கள், "நாயகமே! (பனூ ஹாஷிம்
கிளையைச் சேர்ந்த) நமக்கும் (அவர்களைத் தவிர உள்ள ஏனைய) குறைஷிகளுக்கும் என்ன (பகைமை)
நிலவுகிறது? அவர்கள் தங்களுக்கிடையே சந்தித்துக்
கொண்டால் மலர்ந்த முகத்துடன் சந்தித்துக் கொள்கின்றனர். அதே நேரத்தில் நம்மை எதிர்கொண்டால்
அதைத் தவிர்த்து வேறு வழியில் (கடுப்பான முகத்துடன்) நம்மை எதிர்கொள்கின்றார்கள்"
என்று கூறினார்கள்.
அப்போது நபியவர்கள்
முகம் சிவப்பாகும் அளவிற்கு கோபமுற்றார்கள். பிறகு, ( وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَا يَدْخُلُ قَلْبَ الرَّجُلِ الْإِيمَانُ حَتَّى
يُحِبَّكُمْ لِلَّهِ وَلِرَسُولِهِ ) "இறைவன் மீதாணையாக!
எந்த ஒரு மனிதரும் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் (அஹ்லு பைத்தினராகிய)
உங்களை விரும்பாதவரை அவருடைய உள்ளத்தில் இறைநம்பிக்கை நுழையாது. மேலும், ( يَا أَيُّهَا النَّاسُ مَنْ آذَى عَمِّي فَقَدْ آذَانِي فَإِنَّمَا
عَمُّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ ) மக்களே! என் சிறிய தந்தையை நோவினை செய்தவர் என்னை
நோவினை செய்துவிட்டார். ஏனெனில், ஒருவருடைய தந்தையின்
சகோதரர் அவரது தந்தைக்கு ஒப்பானவரேயாவார்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:-
அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-3681, முஸ்னது அஹ்மத், சியரு அஃலாமுந் நுபலா இமாம் அத்தஹபீ
அஹ்லு பைத்தினரின்
கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி விடாமல்
நம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும்.
பின்பற்றுதல்
பேராசான் பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَأَنَا تَارِكٌ فِيكُمْ ثَقَلَيْنِ أَوَّلُهُمَا كِتَابُ اللَّهِ فِيهِ الْهُدَى
وَالنُّورُ فَخُذُوا بِكِتَابِ اللَّهِ وَاسْتَمْسِكُوا بِهِ " . فَحَثَّ
عَلَى كِتَابِ اللَّهِ وَرَغَّبَ فِيهِ ) "நான் உங்களிடையே
கனமான இரண்டு பொருள்களை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும்.
அதில் நல்வழியும் பேரொளியும் உள்ளது. ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தை
ஏற்று அதை பலமாகப் பற்றிக்கொள்ளுங்கள்" என்று கூறி, அல்லாஹ்வின் வேதப்படி வாழுமாறு தூண்டினார்கள். அதில்
ஆர்வமும் ஊட்டினார்கள்.
பிறகு, ( وَأَهْلُ بَيْتِي أُذَكِّرُكُمُ اللَّهَ فِي أَهْلِ بَيْتِ ) "(மற்றொன்று) என் குடும்பத்தார்
ஆவர். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு)
உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்" என்று மூன்று முறை கூறினார்கள்.
அறிவிப்பாளர்:- ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4782
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் அரஃபா நாளன்று, ( يَا أَيُّهَا النَّاسُ إِنِّي تَرَكْتُ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا: كِتَابَ اللَّهِ، وَعِتْرَتِي أَهْلَ بَيْتِ ) "மக்களே! நீங்கள் எதை பின்பற்றி நடந்தால் வழி தவறவே மாட்டிர்களோ அதை உங்களிடையே விட்டுச் செல்கிறேன். 1) அல்லாஹ்ன் வேதம். 2) எனது வீட்டினர். நூல்:- திர்மிதீ-3708, தாரிமீ, முஸ்னது அஹ்மத், முஸ்தத்ரக் இமாம் ஹாகிம்
இமாம் ஹக்கீம் திர்மிதீ (ரஹ்) அவர்கள் இந்த நபிமொழிக்குரிய தெளிவான விளக்கத்தை பின்வருமாறு கூறுகிறார்கள். ( وَاقِعٌ عَلَى الَايمَةٌ مِنْهُمْ السَّادَةُ لَاعَلَى غَيْرِهِمْ ) இந்த நபிமொழியில் அவர்களுள் உள்ள (சாதாத்துமார்கள் எனும்) அறிஞர்களைக் குறிக்கும். இவர்கள் அல்லாத பாமரர்களை அல்லர். நூல்:- நவாதிருல் உசூல்
அஹ்லு பைத்தைச் சேர்ந்தவர்கள் மார்க்க அறிஞர்களாக நற்பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்களாயின், கண்டிப்பாக அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தே ஆக வேண்டும். இது நமது கடமை!
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إنّما مَثَلُ أهلِ بَيتي فيكُم كمَثَلِ سَفينَةِ نُوحٍ عليه السلام مَن دخَلَها نَجا ومَن تَخَلّفَ عَنها غَرِقَ ) (அறிந்துக்கொள்ளுங்கள்!) உங்களுக்கு மத்தியில் உள்ள எனது குடும்பத்தினருக்கு உதாரணமாகிறது, இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களின் கப்பலைப் போன்றதாகும். யார் அதில் ஏறிக்கொண்டாரோ அவர் வெற்றிப்பெற்றுவிட்டார். யார் அதில் ஏறிக்கொள்ளவில்லையோ அவர் மூழ்கி (அழிந்து)விட்டார். அறிவிப்பாளர்:- அபூதர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், ஹாகிம், தப்ரானீ, மிஷ்காத்-573
அஹ்லு பைத்துகளில் உள்ள அறிஞர்களுடைய கப்பலில் ஏறினால் அந்த அறிஞர்களான மாலுமிகள் சரியான இலக்கில் மக்களை வழி நடத்தி சேர்த்து வைப்பார்கள் என்று பொருள்.
இப்னு மலிக் (ரஹ்)
அவர்கள் கூறியதாவது. வேதத்தைப் பற்றி பிடிப்பது என்பது அதைப் பின்பற்றுவதாகும். அல்லாஹ்வின்
கட்டளை ஏற்று நடந்து அவன் தடை செய்தவற்றை விட்டும் தவிர்ந்திருப்பதாகும். அண்ணல் நபி
(ஸல்) அவர்களின் குடும்பத்தினரை பின்பற்றுவது என்பது, அவர்களை நேசித்து அவர்களின் நடைமுறைகளை எடுத்து
நடப்பதாகும்.
நபியவர்களின் குடும்பத்தினரை
பின்பற்றி நடப்பது என்பதன் பொருள்: அவர்களை நேசிப்பது; அவர்களது கண்ணியம் காப்பது; (குர்ஆன் ஹதீஸ் தொடர்பாக) அவர்கள் தெரிவிக்கும் செய்திகளை
ஏற்று செயல்படுவது; அவர்களின் சொற்களில் நம்பிக்கை
வைப்பது ஆகும் என மார்க்க அறிஞர்கள் விளக்கமளித்துள்ளனர்.
தய்யிபி (ரஹ்) அவர்கள்
கூறுகிறார்கள். கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் விஷயத்தில் அல்லாஹ்வுக்கு
அஞ்ச வேண்டும். அவர்களுக்கு துன்பம் கொடுக்கக்கூடாது. அவர்களைப் பாதுகாத்து நடந்துகொள்ள
வேண்டும் என்பதுதான் இந்த நபிமொழியின் கருத்தாகும். நூல்:- மிர்காத்துல் மஸாபீஹ்
அந்தஸ்த்தை
விளங்குதல்
ஜுபைர் பின் ஹுவைரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு பொது நிதி வழங்குவதற்காக பதிவேடு ஒன்றை தயாரிக்க வேண்டும் என்று ஆலோசித்தபோது அதன் அடிப்படையில் அகீல் பின் அபீதாலிப் (ரலி), மக்ரமா பின் நவ்ஃபல் (ரலி), ஜுபைர் பின் முத்இம் (ரலி) ஆகியோரை அழைத்து, ( اكْتُبُوا النَّاسَ عَلَى مَنَازِلِهِمْ ) "மக்களின் தகுதிக்குத் தக்க அவர்களின் பெயர்களை வரிசையாக எழுதுங்கள்" என்று கூறினார்கள். எனவே அவர்கள் எழுதத் தொடங்கி, பனூ ஹாஷிமை ஆரம்பமாகவும் பின்பு அவர்களைத் தொடர்ந்து அபூபக்ர் (ரலி) மற்றும் அவர்களின் கூட்டத்தார்கள் பின்பு உமர் (ரலி) மற்றும் அவர்களின் கூட்டத்தார்கள் என, ஆட்சியாளர்கள் முறைப்படி எழுதினார்கள்.
உமர் (ரலி) அவர்கள்
அந்த பதிவேட்டைப் பார்த்ததும், ( لَوَدِدْتُ وَاللَّهِ أَنَّهُ هَكَذَا وَلَكِنِ ابْدَؤَا بِقَرَابَةِ رَسُولِ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الِاقْرَبَ فَالِاقْرَبْ حَتَّى تَضَعُوا
عُمَرَ حَيْثُ وَضَعَهُ اللَّهُ ) "அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறே எழுத வேண்டும் என்று
விரும்பினேன். எனினும், நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் குடும்பத்தாரிலிருந்து ஆரம்பம் செய்யுங்கள். பின்பு அடுத்த அந்தஸ்திலுள்ளவர்கள்
பின் அதை அடுத்துள்ளவர்கள் என்று, அல்லாஹ் இயற்கையாக
உமரை எங்கு வைத்தானோ அங்கு உமரின் பெயரை எழுதுங்கள்" என்று கூறினார்கள். நூல்:-
தாரீக் அத்தபரீ, ஹயாத்துஸ் ஸஹாபா 2/280
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் (அஹ்லுல் பைத்துக்கள் எனும்) அருமை நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்கு பொதுநிதியிலிருந்து கொஞ்சம் அதிகமாகக் கொடுப்பார்கள். இதுவே அன்னாரின் வழமையாகும்.
ஒருமுறை அப்துல்லாஹ்
பின் உமர் (ரலி) அவர்கள் (தமது தந்தையாகவும் ஜனாதிபதியாகவும் இருந்த) உமர் (ரலி) அவர்களிடம்
பொதுநிதியிலிருந்து ஹுசைன் (ரலி) அவர்களுக்கு என்னைவிட கொஞ்சம் அதிகமாகவே கொடுக்கிறீர்களே! ஏன்? (அவர் என்னைவிட வயதில் சிறியவராயிற்றே!) என்று வினவினார்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "ஹுசைன் (ரலி) அவர்களின்
தந்தை அலீ (ரலி) அவர்கள் உனது தந்தையைப் போன்றவர் அல்லர் (அதாவது அலீ - ரலி அவர்கள்
அண்ணல் நபி - ஸல் அவர்களின் மருமகனார் ஆவார்)" என்று கூறினார்கள்.
உபகாரம் புரிதல்
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( خَيْرُكُمْ خَيْرَكُمْ
لِأَهْلِي مِنْ بَعْدِي ) என் மறைவுக்குப் பிறகு
என் குடும்பாத்தார்ருக்கு நல்லவரே! உங்களில் நல்லவர் ஆவார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா
(ரலி) அவர்கள் நூல்:- மஜ்மஸ் ஸவாயித், ஹாகிம், தாரீக் அஸ்பஹான்,
தாரீக் பாக்தாத், முஸ்னது அபீயஅலா, ஃபைளுல் கதீர்
ரபீய் பின் சுலைமான்
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நானும் இன்னும் சிலரும் சேர்ந்து ஹஜ்ஜூக்காக பயணம் செய்தோம்.
நாங்கள் கூஃபா நகரை அடைந்ததும் பயணத்துக்குத் தேவையான சாமான்களை வாங்குவதற்கு கடைவீதிக்கு
சென்றோம். அப்போது அங்கு பாழடைந்து போன ஒரு இடத்தில் கோவேறுக் கழுதை ஒன்று செத்து கிடந்தது.
பச்சை நிற ஆடை உடுத்திய ஒரு பெண்மணி கத்தியால் அக்கழுதையின் மாமிசத்தை துண்டு துண்டாக
அறுத்து ஒரு கூடையில் போட்டுக் கொண்டிருந்தாள்.
நான் அவள் அருகில் சென்று, செத்துப்போன கழுதையின் மாமிசம் உண்ணுவது (ஹராம் எனும்) தடுக்கப்பட்டு இருக்கிறதே?" என்று கூறினேன். அதற்கு அவள், ஆம்! செத்ததைச் சாப்பிடக்கூடாது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் பரம்பரையைச் சேர்ந்த "சைய்யத்" குடும்பமாகும். எனது கணவர் இறந்துவிட்டார். எனக்கு வயதுக்கு வந்த நான்கு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் நான்கு நாள்களாக பசி பட்டினியோடு தான் இருக்கிறோம். எனவே, தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நிர்பந்த நிலையில் இருக்கும் எங்களுக்கு தற்போது இது ஆகுமானதாக விடுகிறது" என்று கூறினாள்.
நான் அவர்களின் வறுமை நிலையை கேட்டு நிம்மதியற்றவனாய் மன சஞ்சலத்துடன் அழுதுகொண்டே அங்கிருந்து திரும்பினேன்.
நான் இந்த வருடம் ஹஜ்ஜுக்கு வரவில்லை என்று என்னுடன் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு, நேராக கடைவீதிக்குச் சென்று நான் ஹஜ்ஜுக்கு செல்ல வைத்திருந்த 600 வெள்ளிக்காசுகளில் 100 வெள்ளிக்காசுக்கு கோதுமை மாவு, 100 வெள்ளிக்காசுக்கு துணிமணிகளும், மீதமிருந்த வெள்ளிக்காசுகளையும் மாவுக்குள் மறைத்து வைத்து அச்சாமான்கள் அனைத்தையும் அந்த பெண்மணி வீட்டிற்கு எடுத்துச் சென்று அவளிடம் கொடுத்தேன்.
உடனே அதை வாங்கிக்கொண்ட அப்பெண்மணி அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவளாக, “அல்லாஹ் உன்னுடைய சகல பாவங்களையும் மன்னிப்பானாக! உமக்கு ஹஜ்ஜின் நன்மைகளை வழங்குவானாக! உமக்கு சொர்க்கத்தில் உயர்ந்ததொரு இடம் அளிப்பானாக! இந்த உதவிக்கு எவ்வாறான பிரதிபலன் உமக்கு அளிக்கப்பட வேண்டுமென்றால், அது வெளிப்படையாக உமக்கும் தெரிந்து விடவேண்டும்!" என்று மனமுருகி எனக்காக பிரார்த்தனை செய்தாள். அதுபோன்றே அவளின் நான்கு மகள்களும் எனக்காக பிரார்த்தனை செய்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு ஹாஜிகள் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். நமக்கு ஹஜ் செய்யும் பாக்கியம் கிடைக்கவில்லையே! என்ற ஏக்கத்தோடு நான் அவர்களிடம் "அல்லாஹ் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பிரதிபலன் அளிப்பானாக! உங்கள் ஹஜ்ஜை ஏற்றுக்கொள்வானாக! என்று வாழ்த்து கூறினேன்.
அவர்கள், "இந்த பிரார்த்தனை எப்படிப்பட்டது? என்றனர். அதற்கு நான் "வாசல் வரை செல்லும் பாக்கியத்தை இழந்த ஒரு மனிதனுடைய பிரார்த்தனை" என்றேன்.
உடனே அவர்கள், "இது ஆச்சரியமான பேச்சாக அல்லவா இருக்கிறது? நீர் அங்கு சென்றிருந்ததை மறுக்கின்றீரே? நீர் அரபகத்தின் வெளியில் எங்களுடன் இருக்கவில்லையா? நீர் எங்களுடன் தவாப் செய்யவில்லையா? நீர் எங்களுடன் ஷைத்தானுக்கு கல்லெறியவில்லையா? என்று அடுக்கிக்கொண்டே போனார்கள். அவர்களில் ஒருவர் சற்று முன்னே வந்து, "சகோதரரே! ஹஜ்ஜுக்கு வரவில்லை என்று ஏன் மறுக்கின்றீர்? அப்படி கூறக் காரணம் என்ன? நீர் எங்களுடன் மக்காவில் இருக்கவில்லையா? அல்லது மதீனாவில் இருக்கவில்லையா? நாம் சங்கைபொருந்திய அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மண்ணறையை ஸியாரத் செய்துவிட்டு, பாபே ஜிப்ரீல் வாசல் வழியாக வெளியே வந்து கொண்டிருக்கும்போது கூட்டத்தின் நெருக்கடியின் காரணமாக இந்தப் பையை என்னிடம் அமானிதமாக வைக்கச் சொல்லி நீர் கொடுக்கவில்லையா? அதன் வாய் முத்திரையின் மீது ( مَنْ عَامَلَنَا رَبِحَ ) "எமக்காக செயல்படுபவர் இலாபமடைவார்" என்று எழுதப்பட்டுள்ளது. இதோ உன்னுடைய பை, திரும்ப பெற்றுக் கொள்வீராக!" என்று கூறி பையை என்னிடம் ஒப்படைத்தார்.
அல்லாஹ்வின் மீதாணையாக!
நான் அப்பையை அதற்கு முன் பார்த்ததே இல்லை. அதை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன்.
இஷா தொழுதுவிட்டு, வழக்கமாக ஓத வேண்டிய அனைத்தையும் ஓதி முடித்துவிட்டு, நடைபெற்ற சம்பவம் தான் என்ன? என்று சிந்தித்தவாறே தூங்கிவிட்டேன்.
அன்றைக்கு கனவில் அருமை நாயகம் (ஸல்) அவர்களைக் கண்டு சலாம் கூறி, அன்னாரின் திருக்கரங்ககளை பிடித்து முத்தமிட்டேன். நபியவர்களும் புன்முறுவல் பூத்தவாறு பதில் சலாம் கூறினார்கள். மேலும், நபியவர்கள், “நீர் ஹஜ் செய்தாய் என்பதற்கு எத்தனை சாட்சிகளை தான் நாம் நியமிப்பது? நீரோ நம்ப மறுக்கிறீரே! நீர் ஹஜ் செல்வதற்கு வைத்திருந்த தொகையை எம்முடைய குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு நீர் தர்மம் செய்துவிட்டு, உனது ஹஜ்ஜை தள்ளிப்போட்டாய். அதனால் நான் அல்லாஹ்விடம் உனக்கு அழகிய பகரம் கிடைக்கவேண்டுமென பிரார்த்தித்தேன்.
எனவே, அல்லாஹ் ஒரு வானவரை உன்னுடைய உருவத்தில் படைத்து,
அவருக்கு மறுமைநாள் வரை ஒவ்வொரு
ஆண்டும் உன் சார்பாக ஹஜ் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளான். மேலும், அல்லாஹ்,
உலகில் உனக்கு அந்த 600
வெள்ளிக்காசுகளுக்கு பகரமாக
600 தங்கக்காசுகளை கொடுத்துவிட்டான்.
எனவே, நீர் சந்தோஷம் பெறுவீராக!”
என்று கூறிய பின்னர் நபியவர்களும் அந்த பணப்பையின் முத்திரையில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை
கூறினார்கள். நான் தூங்கி எழுந்த பிறகு அந்த பணப்பையை திறந்து பார்த்தபோது அதில் 600
தங்கக்காசுகள் இருந்தன. நூல்:-
ருஷ்பதுஸ் ஸாவீ
அண்ணல் நபி (ஸல்)
அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதவுபவருக்கு நபியவர்களின் உயரிய பிரார்த்தனை
கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அந்தப் பெரும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
சொர்க்கத்தைப்
பெறலாம்
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பரம்பரையைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவள் தமது பிள்ளைகளை வளர்ப்பதற்கு சிரமப்பட்ட நிலையில் வெளியூருக்கு போய் அங்குள்ள பணக்கார முஸ்லிமிடம், தமது பரம்பரையைப் பற்றியும் தமது குடும்பச் சிரமங்களை பற்றியும் எடுத்துரைத்து, உதவி கேட்டாள். அதற்கு அவர், "நீ அஹ்லு பைத்தைச் சேர்ந்த பெண் என்பதற்கு என்ன ஆதாரம்?" என்று கேட்டார். அதற்கு அவள் எதையும் சொல்ல முடியாமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
பிறகு அவள் ஒரு நெருப்பு வணங்கியிடம் சென்று தம் பரம்பரையைப் பற்றியும் தமது குடும்ப வறுமையைப் பற்றியும் எடுத்துரைத்தார். உடனே, அந்த மனிதர் அந்தப் பெண்ணின் வார்த்தையை நம்பி அவளையும் அவளின் குழந்தைகளையும் தமது வீட்டில் தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
அந்த பணக்கார
முஸ்லிம் அன்றிரவு "மறுமைநாள் வந்துவிட்டது. அப்போது நபியவர்களையும் அவர்களுக்கு
அருகில் ஒரு மாளிகை இருக்கிறது. அந்த மனிதர் நபியவர்களை நோக்கி, "நாயகமே! இந்த மாளிகை யாருக்குரியது?"
என்று கேட்டார். நபியவர்கள்,
"ஒரு முஸ்லிமுக்குரியது"
என்றார்கள். அப்போது அவர் "நாயகமே! நானும் ஒரு முஸ்லிம்தான்" என்று கூறினார்.
உடனே நபியவர்கள், "நீ முஸ்லிம் என்பதற்கு
ஆதாரம் என்ன?” என்று கேட்டார்கள்.
அப்போது அவர் பதறியவராக கண்விழித்தார்.
பிறகு அவர் அந்த ஏழைக்
குடும்பத்தினரைத் தேடினார். இறுதியாக, அவர்கள் ஒரு நெருப்புவணங்கியின் வீட்டில் இருப்பதாக கேள்விப்பட்டு, அங்கே சென்று அந்த நெருப்புவணங்கியிடம்,
"உமக்கு ஆயிரம் பொற்காசுகள்
தருகிறேன். இவர்களை என்னிடம் ஒப்படைத்துவிடு! இவர்களை நான் நல்லமுறையில் கவனித்துக்
கொள்கிறேன்" என்று கெஞ்சினார்.
அதற்கு நெருப்பு வணங்கி,
"முடியாது" என்று கூறிவிட்டு,
நேற்று இவர்கள் என் வீட்டிற்கு
வந்தபோதே நானும் எனது குடும்பமும் இஸ்லாத்தில் இணைந்துவிட்டோம். நேற்றிரவு நான் ஒரு
கனவு கண்டேன். அதில் நபியவர்களும் அவர்களுக்கு அருகில் ஒரு மாளிகையும் இருந்தது. அப்போது
நான் நபியவர்களிடம், "இந்த மாளிகை யாருக்குரியது?"
என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள்,
"நீ என்னுடைய குடும்பத்தினரை
கண்ணியப்படுத்தியதால் இந்த மாளிகை உமக்குரியது தான் என்று கூறினார்கள்" என்ற செய்தியை
அவர் எடுத்துரைத்தார். நூல்:- அஸ்ஸவாஜிர், ஸஹீஹ் வஸாயா ரசூல் 2/137
மனிதன் மறுமை நாளில்
எதிர்பார்க்கின்ற பெரிய விஷயமே சொர்க்கம் தான். அந்த சொர்க்கமே அஹ்லு பைத்தினரை முறையாக
கண்ணியப்படுத்தியவருக்கு அல்லாஹுத்தஆலா வழங்கப் போதுமானவன்.
மரியாதை செய்தல்
ஷஅபிய்யி (ரஹ்) அவர்கள்
கூறியதாவது. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் ஒட்டகத்தின் மீது
அமர்ந்திருந்தபோது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அந்த ஒட்டகத்தின் கடிவாளத்தைப்
பிடித்து நடந்து வந்தார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “(நீங்களெல்லாம் இதை
பிடிக்கலாமா?) விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள். அப்போது அப்துல்லாஹ்
பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், ( هَكَذَا أُمِرْنَا أَنْ نَفْعَلَ بِعُلَمَائِنَا وَكُبَرَائِنَا
) “எங்களில் மார்க்கம் படித்த ஆலிம்களிடமும் பெரியவர்களிடமும் இவ்வாறு தான் நடந்துகொள்ள
வேண்டும் என்று நாங்கள் ஏவப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள். பின்பு ஸைத் பின்
ஸாபித் (ரலி) அவர்கள் ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கி அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ( أَرِنِي يَدَكَ ) “உங்கள் கையைக் கொடுங்கள்”
என்று கூறி, அவர்களின் கையில் முத்தமிட்டார்கள். பின்பு ( هَكَذَا أُمِرْنَا أَنْ نَفْعَلَ بِأَهْلِ بَيْتِ نَبِيِّنَا صَلَّى
اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ) “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
குடும்பத்தாரோடு இவ்வாறு தான் நடந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் ஏவப்பட்டிருக்கிறோம்”
என்று கூறினார்கள். நூல்:- அல்இஸாபா, தப்ரானீ, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்- 596, அத்தபகாத்துல் குப்ரா,
அர்ருக்ஸத்தி ஃபீ தக்பீலில் யதி இமாம் இப்னு அல்முக்ரிஇ ஹி-381 ( الرُّخْصَةِ فِي تَقْبِيلِ الْيَدِ لِابْنِ الْمُقْرِئِ
)
இறைநேசராகலாம்
இமாம் அஹ்மத் பின்
ஹன்பல் (ரஹ்) அவர்களின் ஆன்மீக ஆசான் பிஷ்ருல் ஙாஃபீ (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள். ஓர் நாள் நான் கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்தேன்.
அப்போது நபியவர்கள், "பிஷ்ரே! நீர் மகான்
என்ற இந்த உயர் அந்தஸ்தை எதன் பொருட்டால் அடைந்தீர் என்பது உமக்குத் தெரியுமா?"
என்று கேட்டார்கள். நான்,
"நாயகமே! அறியேன்" என்று
கூறினேன். நபியவர்கள், "நீர் என்னுடைய வழிமுறையை
(சுன்னத்தை முறையாக) பின்பற்றியது; நல்லவர்களுக்கு பணிவிடை
செய்தது; சக மனிதர்களிடம் நற்குணம்
பேணியது; மற்றும் என்னுடைய
குடும்பத்தினரை நீ விரும்பியது. இவை தான் மற்றவர்களைவிட உமது அந்தஸ்து உயர காரணமாகும்"
என்று விவரித்தார்கள். நூல்:- அல்மஃபாஹீம் யஜிபு அன் துஸஹ்ஹிஹ
முறையாக இறைவணக்கங்கள்
புரிந்து, அஹ்லு பைத்தினரை நேசித்து, அவர்களுக்கு உபகாரம்
செய்து வாழ்பவர் இறைநேசராகலாம்.
அஹ்லு பைத்தினர் யார்?
பரிசுத்தமானோர் என்று திருக்குர்ஆன் அழைக்கின்ற அந்த அஹ்லு பைத்தினர் என்பவர்கள் யார்? என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
சஅத் பின் அபீவக்காஸ்
ரலி அவர்கள் கூறியதாவது. (முபாஹலா எனும்) சாப அழைப்பு குறித்து "வாருங்கள் எங்கள்
பிள்ளைகளையும் உங்கள் பிள்ளைகளையும் அழைப்போம்" (3:61) என்ற வசனம் அருளப்பெற்றபோது
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகியோரை அழைத்து, ( اللَّهُمَّ هَؤُلاَءِ أَهْلِي ) "இறைவா! இவர்கள்தான்
என் குடும்பத்தினர்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-4778
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நிச்சயமாக கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு புறப்பட்டால் ஆறு மாத காலமாக ஃபாத்திமா (ரலி) அவர்களின் (வீட்டு) வாசலருகே சென்று "வீட்டாரே (அஹ்லு பைத்தினரே! ஃபஜ்ர்) தொழுகை (நேரம் நெருங்கிவிட்டது, அதற்கு தயாராகிக் கொள்ளுங்கள்)" என்று சொல்பவர்களாக இருந்தார்கள்.
(நபியின்) குடும்பத்தார்
ஆகிய உங்களைவிட்டு அசுத்தத்தை அகற்றி உங்களை நன்கு தூய்மைப்படுத்தவே அல்லாஹ் விரும்புகிறான்.
(33:33) எனும் வசனத்தில் வரும்
“அஹ்லு பைத்” (நபியின் வீட்டார்கள்) யார் என்பது இந்த நபிமொழி தெளிவுபடுத்துகிறது.
நூல்:- திர்மிதீ-3120
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் மனைவியார் கதீஜா (ரலி) அவர்களுடன் தொடர்புள்ள நபியவர்களின் உறவினர்களே “அஹ்லு
பைத்” ஆவர். இதன்படி கதீஜா (ரலி) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) மற்றும் ஃபாத்திமா
(ரலி) அவர்களின் மக்களான ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) அன்னை
கதீஜா அவர்களின் வீட்டில் சிறுவயதிலிருந்தே வளர்ந்த அலீ (ரலி) ஆகியோரே "அஹ்லு
பைத்" எனப்படும். நூல்:- ஃபத்ஹுல் பாரீ
உமர் பின் அபீ சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அன்னை உம்மு சலமா (ரலி) அவர்களின் வீட்டில் இருந்தபோது கீழ்காணும் வசனம் இறங்கியது.
(நபியின் துணைவியரே!) உங்கள் இல்லங்களிலேயே தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தில் பெண்கள் தமது அழகை வெளிப்படுத்தி தெரிந்ததைப் போன்று திரியாதீர்கள். தொழுகையைக் கடைபிடியுங்கள். ஸக்காத் (எனும் கட்டாய தர்மத்)தை வழங்குங்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (இதன் மூலம் நபியின்) குடும்பத்தாராகிய உங்களைவிட்டு அசுத்தத்தை அகற்றி, உங்களை நன்கு தூய்மைப்படுத்தவே அல்லாஹ் விரும்புகிறான். (திருக்குர்ஆன்:- 33:33)
அப்போது நபியவர்கள் ஃபாத்திமா (ரலி), ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி), மற்றும் அலீ (ரலி) ஆகியோரை அழைத்து ஒரு விசாலமான போர்வையில் போர்த்தினார்கள். பின்னர், ( اللَّهُمَّ هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي فَأَذْهِبْ عَنْهُمُ الرِّجْسَ وَطَهِّرْهُمْ تَطْهِيرًا ) "இறைவா! இவர்கள் என்னுடைய குடும்பத்தினர். இவர்களைவிட்டு அசுத்தத்தை அகற்றுவாயாக. இவர்களை நன்கு தூய்மைப்படுத்துவாயாக" என்று பிரார்த்தித்தார்கள்.
அப்போது உம்மு சலமா (ரலி) அவர்கள், "நாயகமே! நானும் அவர்களோடு சேர்ந்தவளில்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ( أَنْتِ عَلَى مَكَانِكِ وَأَنْتِ إِلَى خَيْرٍ ) "நீ உம்முடைய (தகுதியான வீட்டில் தான்) இடத்தில் தான் இருக்கிறாய். (உன்னை போர்வைக்குள் வரவழைத்து நீ என் குடும்பத்தினர் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை) ஏனெனில், நீ சிறந்தவளாக இருக்கின்றாய்" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-3119
நீ சிறந்தவள்,
நீ (அஹ்லு பைத்) எனும் நபியின்
வீட்டார் என்ற அந்தஸ்தில்தான் இருக்கிறாய். உனக்கும் போர்வை போர்த்தி "நீ அஹ்லு பைத்" நபியின் வீட்டார் என்று கூறவேண்டிய அவசியமில்லை. அல்லது நபியவர்கள், அலீ (ரலி) இருக்கும்போது உம்மு சல்மா (ரலி) அவர்களையும்
போர்வைக்குள் சேர்த்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஆகவே, நபியவர்களின் துணைவியரும் மக்களும் அஹ்லு பைத்தில்
உள்ளவர்கள் தான். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ
ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறியதாவது. ஒருநாள் காலையில் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ஒட்டகச் சேணத்தின் உருவம்
பொறிக்கப்பட்ட கருப்பு நிற கம்பளிப் போர்வை அணிந்து கொண்டு புறப்பட்டார்கள். அப்போது
(அவர்களுடைய பேரர்) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். உடனே நபியவர்கள் ஹசன்
(ரலி) அவர்களை (தமது போர்வைக்குள்) நுழைத்துக் கொண்டார்கள். பிறகு ஹுஸைன் (ரலி) அவர்கள்
வந்தபோது அவர்களும் (போர்வைக்குள்) நபியவர்களுடன் நுழைந்து கொண்டார்கள். பிறகு (மகள்)
ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்தபோது, அவர்களையும் (போர்வைக்குள்)
நுழைத்துக் கொண்டார்கள். பிறகு (மருமகனும் தமது வீட்டில் வளர்ந்தவருமான) அலீ (ரலி)
அவர்கள் வந்தபோது, அவர்களையும் போர்வைக்குள்
நுழைத்துக் கொண்டார்கள்.
பிறகு, "இவ்வீட்டராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ்
விரும்புகிறான்" (33:33) எனும் திருவசனத்தை ஓதிக்காட்டினார்கள். நூல்:- முஸ்லிம்-4807
இந்த நபிமொழியின்
அடிப்படையிலே ஷிஆக்கள் அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி) அவர்களுடைய
மக்கள் ஆகியோர் மட்டுமே "அஹ்லு பைத்" (நபியின் குடும்பத்தார்) என்றும், அவர்கள் பாவங்களை விட்டு பாதுகாக்கப்பட்டவர்கள்
என்றும் வாதிடுகின்றனர். உண்மையில் இது தவறான கருத்தாகும். ஏனெனில், இங்கு இடம்பெற்றுள்ள வசனம் (33:33) நபியவர்களின்
துணைவியரைப் பற்றி பொதுவாகப் பேசிவருவதன் தொடராகும். எனவே, இதில் நபியவர்களின் துணைவியரும் அடங்குவர். அத்துடன்
மொழியிலும் மக்கள் வழக்கத்திலும் "அஹ்லு பைத்" எனும் வார்த்தை ஒருவருடைய
மனைவி மக்களைத்தான் குறிக்கும். நூல்:- தக்மிலா
பிரபலமான திருக்குர்ஆனின்
விரிவுரையாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கடைத்தெருவில் இந்த வசனத்தை (33:33) உரக்க சத்தமிட்டு
ஓதுவார்கள். பின்னர், "இந்த வசனம் பிரத்தியேகமாக நபியவர்களின் துணைவியார்
விஷயத்திலேயே அருளப்பெற்றது" என்று கூறுவார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
பிரபலமான திருக்குர்ஆனின்
விரிவுரையாளர் பேரறிஞர் இப்னு கஸீர் அவர்கள் கூறுகிறார்கள். இந்த (33:33) வசனத்தில்
"நபியின் குடும்பத்தார்" (அஹ்லு பைத்) என்பதில் நபியவர்களின் துணைவியரும்
அடங்குவர் என்பதை குறிப்பால் உணர்த்துகிறது. காரணம், இந்த வசனம் அருளப்பெறுவதற்குக்
காரணமே அவர்கள்தான். பொதுவாக ஒரு வசனம் அருளப்பெறுவதற்குக் காரணமாக இருப்போர், அந்த வசனத்தின் கருத்திற்குள் தனியாகவோ மற்றவர்களுடன்
சேர்ந்தோ அடங்குவர் இதில் மாற்றுக் கருத்து கிடையாது. நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
ஹுசைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் யார்? நபியவர்களின் மனைவியர் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையா?" என்று கேட்டார். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள், ( نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ وَلَكِنْ أَهْلُ بَيْتِهِ مَنْ حُرِمَ الصَّدَقَةَ بَعْدَهُ ) "நபியவர்களின் மனைவியரும் அவர்களின் குடும்பத்தாரில் அடங்குவர். ஆயினும், நபியவர்களுக்குப்பின் யாருக்குத் தர்மம் கொடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளதோ அவர்களே அவர்களுடைய குடும்பத்தார் ஆவர்" என்று கூறினார்கள்.
அதற்கு ஹுசைன் (ரஹ்) அவர்கள், "அவர்கள் யார்?" என்று கேட்டார். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள், "அலீ பின் அபீதாலிப் (ரலி), அகீல் பின் அபீதாலிப் (ரலி), ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி), அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) ஆகியோரின் குடும்பத்தாரே (நபியவர்களின் குடும்பத்தார் ஆவர்)" என்று பதிலளித்தார்கள்.
ஹுசைன் (ரஹ்) அவர்கள்,
( كُلُّ هَؤُلاَءِ حُرِمَ الصَّدَقَةَ ) "தர்மம் பெறுவது இவர்கள் அனைவருக்கும் தடை செய்யப்பட்டுள்ளதா?"
என்று கேட்டார். அதற்கு ஸைத்
(ரலி) அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள். முஸ்லிம்-4782
ஆகவே நாம், அஹ்லு பைத்தினரிடம் கண்ணியம் பேணி, இறையருளை பெறுவோமாக!
ஆமீன்!
மௌலவி மு.முஹம்மது
ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951