Search This Blog

Saturday, 1 April 2023

இறைவனுக்காக இஃதிகாஃப் இருப்போமாக!

 

இறைவனுக்காக இஃதிகாஃப் இருப்போமாக!

 

وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ

 

(தவாஃப்) சுற்றுவோருக்காகவும், தங்கி வழிபாடு (இஃதிகாஃப்) செய்வோருக்காகவும், குனிந்தும் சிரம் பணிந்தும் வணங்குவோருக்காகவும் என்னுடைய (இந்த) ஆலயத்தை நீங்களிருவரும் தூய்மைப்படுத்துகள் என்று இப்ராஹீமிடமும் இஸ்மாயீலிடமும் நாம் உறுதிமொழி வாங்கினோம். திருக்குர்ஆன்:- 2:125

 

இஃதிகாஃப் என்பதற்கு தங்குதல், சிறை வைத்தல், ஒன்றைப் பற்றிக்கொண்டு அதிலேயே மனதைக் கட்டுப்படுத்தி வைத்தல் ஆகிய சொற்பொருள்கள் உண்டு.

 

இஸ்லாத்தில் இஃதிகாஃப் என்பது, பள்ளிவாசலில் குறிப்பிட்ட முறையில் ஒருவர் தங்கியிருப்பதற்குப் பெயராகும். அவசிய தேவைகளுக்குத் தவிர வேறு எதற்காகவும் பள்ளிவாசலை விட்டு வெளியே போகாமலும், அவசியமான பேச்சுக்களைத் தவிர வேறு எந்தப் பேச்சுக்களையும் பேசாமலும் பள்ளிவாசலுக்குள்ளேயே தங்கி இருந்து தொழுகை, குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை புரிதல் (திக்ர் எனும்) இறைதியானம் புரிதல் போன்ற வழிபாடுகளில் ஈடுபடுவதே இஃதிகாஃப் ஆகும். இஃதிகாஃப் என்பது கட்டாயக் கடமையாக இல்லாவிட்டாலும் வலியுறுத்தப்பட்ட நபிவழி (சுன்னா) ஆகும்.

 

ஆண்டில் சில நாள்கள் மக்கள், குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் ஆகியோருடனான உலகத் தொடர்புகளைக் கைவிட்டு ஒதுங்கி, தனிமையில் இறையில்லத்தில் இருக்கின்ற அரிய வாய்ப்பு இஃதிகாஃப் மூலம் கிடைக்கிறது. இஃதிகாஃபினால் மன அழுக்குகள் கழுவப்பட்டு, உளத்தூய்மையும் மன அமைதியும் உருவாகும்.

 

முன் சென்ற சமுதாயத்தினர்மீது நோன்பு கடமையாக்கப்பட்டிருந்ததைப் போன்றே இஃதிகாஃபும் கடமையாக்கப்பட்டிருந்தது என்று தலைப்பில் காணும் திருவசனத்தில் மூலம் தெளிவாகிறது.

 

ரமளானின் இறுதி பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பது சுன்னத் முஅக்கதா கிஃபாயா ஆகும். ஒரு மஹல்லாவில் ஒருவராவது முழுமையாக பத்து நாள்கள் இருக்க வேண்டும். இல்லையெனில் சுன்னத் முஅக்கதாவை விட்ட குற்றம் முஹல்லாவாசிகள் அனைவர் மீதும் ஏற்படும். நூல்:- ரத்துல் முக்தார் 2/441

 

சிறப்புகள்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இஃதிகாஃப் இருப்பவர் பற்றிக் கூறும்போது, ( هُوَ يَعْكِفُ الذُّنُوبَ وَيُجْرَى لَهُ مِنَ الْحَسَنَاتِ كَعَامِلِ الْحَسَنَاتِ كُلِّهَا ) “அது (இஃதிகாஃப்) பாவங்களை விட்டும் தடுக்கும்; அனைத்து நற்செயல்களையும் புரிபவரைப் போன்று அவருக்கு நற்பலன்கள் வழங்கப்படும்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-1771, ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ  

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ومَنِ اعتَكَف يومًا ابتغاءَ وجهِ اللهِ جعَل اللهُ بَيْنَه وبَيْنَ النّارِ ثلاثَ خَنادِقَ كلُّ خَندَقٍ أبعَدُ ممّا بَيْنَ الخافِقَيْنِ ) யார் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியவராக ஒரு நாள் இஃதிகாஃப் மேற்கொள்வாரோ அவருக்கும் நரகத்திற்கும் இடையே அல்லாஹ் மூன்று அகழிகளை (தடுப்பாக) ஏற்படுத்துவான். அவை ஒவ்வொன்றின் தூரமும் வானம் பூமிக்கிடையே உள்ள தூரத்தைவிட அதிகமாகும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஅஜமுல் அஸ்வத் இமாம் தப்ரானீ, ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, தாரீக் அஸ்பஹான் இமாம் அபூநயீம், தாரீக் பக்தாத் இமாம் கத்தீப் அல்பக்தாதீ, மஜ்மஉஸ் ஸவாயித், அத்தர்ஙீபு வத்தர்ஹீபு

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنِ اعْتِكَفَ عَشْرٌ فِي رَمَضَانَ كَحَجَّتَيْنِ وَعُمْرَتَيْنِ ) யார் ரமளானில் இறுதிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கிறாரோ அவருக்கு இரண்டு ஹஜ்ஜுகள், இரண்டு உம்ராக்கள் செய்த நன்மைகள் கிடைக்கும். அறிவிப்பாளர்:- ஹுசைன் (ரலி) அவர்கள் நூல்:-  பைஹக்கீ, முக்தஸர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-341, முஅஜமுல் கபீர் இமாம் தப்ரானீ, ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, தக்லீஸுல் முத்தஷாபிஹ் இமாம் கத்தீப், அத்துர்ரியத்துத் தாஹிரா

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (مَنِ اعتَكَفَ إيمَانًا وَاحتِسَابًا غُفِرَ لَهُ ما تَقَدَّمَ مِن ذَنْبِهِ ) யார் இறைநம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் இஃதிகாஃப் மேற்கொள்வாரோ அவருடைய முந்தைய (சிறு) பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- ளஈஃபுல் ஜாமிஉ-5452 இமாம் அல்பானீ (இது புனையப்பட்ட நபிமொழி என குறிப்பிடப்படுகிறது.)

 

இமாம் மாலிக் (ரஹ்), மற்றும் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) போன்றவர்கள் கூறுகிறார்கள். இஃதிகாஃப் மேற்கொள்ள விரும்புகின்றவர் அதற்கு முந்தைய நாள் சூரியன் மறையும் நேரத்தில், தாம் இஃதிகாஃப் மேற்கொள்ளப்போகும் இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும். நூல்:-  திர்மிதீ-721

 

இரவு பகல் என ஒரு நாள் முழுவதும் இஃதிகாஃப் மேற்கொள்ள விரும்புபவர் சூரியன் மறைவதற்கு முன்பே பள்ளிவாசல் சென்று மறுநாள் சூரியன் மறைந்த பின்னரே திரும்ப வேண்டும். நூல்:- ஃபத்ஹுல் பாரீ


பெண்கள், பள்ளிவாசல் பெண்கள் மதரசா போன்ற பொதுஇடங்களில் இஃதிகாஃப் மேற்கொள்வது மக்ரூஹ் ஆகும். அவர்கள் தமது வீடுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து, அதில் இஃதிகாஃப் மேற்கொள்வதே மிகவும் சிறந்ததாகும். இதுவே, மார்க்கச் சட்டமாகும்.


இறுதிப்பத்து நாள்கள்

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் பத்து நாள்களே இஃதிகாஃப் இருப்பார்கள். அவர்கள் இறந்த ஆண்டில் (11 முதல் 30 வரை) இருபது நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். நூல்:-  புகாரீ-2044, அபூதாவூத்-2110, இப்னுமாஜா-1759

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது (ரமளான் மாதத்தின்) இறுதிப் பத்து நாள்கள் துவங்கிவிட்டால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (வணக்க வழிபாட்டின் மூலம்) இரவுகளுக்கு உயிரூட்டுவார்கள். (வழிபாட்டில் ஈடுபடுவதற்காக) தம் துணைவியரையும் விழிக்கச் செய்வார்கள். (வழக்கத்தைவிட வழிபாட்டில்) அதிக கவனம் செலுத்துவார்கள். தமது கீழாடையை இறுக்க கட்டிக்கொள்வார்கள். நூல்:- புகாரீ-2024, முஸ்லிம்-2184, திர்மிதீ-725, இப்னுமாஜா-1758

 

நபியவர்கள் தமது கீழாடையை இறுக்கி கட்டிக்கொள்வார்கள் என்பதன் பொருள்: தாம்பத்திய உறவை நிறுத்திக்கொள்வதை குறிக்கும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். நூல்:-  அல்மின்ஹாஜ்

 

அசல் நோக்கம்

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் முதல் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். பின்னர் நடுப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்.

 

பிறகு நபியவர்கள் மக்களை நோக்கி! ( إِنِّي اعْتَكَفْتُ الْعَشْرَ الأَوَّلَ أَلْتَمِسُ هَذِهِ اللَّيْلَةَ ثُمَّ اعْتَكَفْتُ الْعَشْرَ الأَوْسَطَ ثُمَّ أُتِيتُ فَقِيلَ لِي إِنَّهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَعْتَكِفَ فَلْيَعْتَكِفْ ) "இந்த (ரமளானில் லைலத்துல் கத்ர்) இரவைத் தேடியவாறு நான் முதல் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தேன். பின்னர் நடுப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருந்தேன். பிறகு அந்த இரவு இறுதிப்பத்து நாள்களில் உள்ளது என (வானவர் மூலம்) என்னிடம் வந்து சொல்லப்பட்டது. ஆகவே, உங்களில் இறுதிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகின்றவர் இஃதிகாஃப் இருக்கட்டும்" என்றார்கள். எனவே, மக்களும் நபியவர்களுடன் இஃதிகாஃப் இருந்தனர். நூல்:- முஸ்லிம்-2170

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ( تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ ) "ரமளானின் இறுதிப் பத்து நாள்களில் (ஒன்றில்) லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்!" என்று கூறுவார்கள். நூல்:- புகாரீ-2020, திர்மிதீ-722

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒருமுறை (வானவர் ஜிப்ரீல் - அலை அவர்கள் அதுவரை அருளப்பெற்ற) குர்ஆன் வசனங்களை கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மொத்தமாக ஓதிக் காட்டுவது வழக்கம். நபியவர்கள் இறந்துபோன ஆண்டில் இரண்டு முறை நபியவர்களுக்கு (ஜிப்ரீல் - அலை அவர்கள்) ஓதிக் காட்டினார்கள். நபியவர்கள் ஒவ்வொரு ஆண்டும் (ரமளான் மாதத்தின் இறுதிப்) பத்து நாள்கள் இஃதிகாஃப் மேற்கொள்வது வழக்கம். அவர்கள் இறந்த ஆண்டு (ரமளானில்) இருபது நாள்கள் இஃதிகாஃப் மேற்கொண்டார்கள். நூல்:- புகாரீ-4998, இப்னுமாஜா-1759

 

இஃதிகாஃப் மேற்கொள்வதின் நோக்கம், அருள்வளம் நிறைந்த லைத்துல் கத்ர் பெற்று அதில் வழிபாடுகள் புரியவேண்டும். மேலும் அதிகமாக குர்ஆன் ஓதவேண்டும். குறைந்தது ஒருமுறையாவது குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கவேண்டும்.

 

நேர்ச்சை

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் கஅபாவில் ஒருநாள் இஃதிகாஃப் இருப்பதாக நேர்ச்சை செய்திருந்தார்கள். நபியவர்களிடம் இது குறித்து உமர் (ரலி) அவர்கள் வினவினார்கள். நபியவர்கள், ( اِعْتَكِفْ وَصُمْ ) "நோன்பு நோற்று இஃதிகாஃப் இருப்பீராக!" என்று கூறினார்கள். நூல்:-  அபூதாவூத்-2116, சுனனுல் குப்ரா-3355 இமாம் நசாயீ

 

இஃதிகாஃப் என்பது மூன்று வகைப்படும். 1) யார் இஃதிகாஃப் இருப்பதாக நேர்ச்சை செய்து கொண்டாரோ அவர் இஃதிகாஃப் இருப்பது வாஜிப் ஆகும். 2)  ரமளானின் இறுதிப் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருப்பது சுன்னத் முஅக்கதா கிஃபாயா ஆகும். 3)  மேற்கூறிய இரண்டும் அல்லாத மற்ற நேரங்களில் சிறிது நேரம் பள்ளியில் இஃதிகாஃப் எண்ணத்துடன் தங்குவது முஸ்தஹப் ஆகும்.

 

இமாம் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இஃதிகாஃப் எண்ணத்துடன் பள்ளிவாசலில் சற்று நேரம் தங்கி இருந்தாலும் அது கூடும்.

 

வாஜிபான இஃதிகாஃப் மற்றும் சுன்னத் முஅக்கதாவான இஃதிகாஃப் ஆகிய இரண்டிற்கும் நோன்பு நோற்பது அவசியமாகும். நஃபிலான இஃதிகாஃப் மேற்கொள்ள நோன்பு நோற்பது அவசியமல்ல.

 

நஃபிலான இஃதிகாஃப் மேற்கொள்ள நாடியவாறு பள்ளிவாசலில் நுழைந்து, உள்ளே சென்று ஓரிடத்தில் அமராமல் உலாவிக் கொண்டிருந்தாலும், இரவானாலும், பகலானாலும் முஸ்தஹப்பான இஃதிகாஃபிற்குரிய நன்மைகள் கிடைத்துவிடும்.

 

பள்ளிவாசலில் நுழையும்போதே இஃதிகாஃப் எண்ணத்துடன் நுழைவது மிகவும் சிறந்தது. ஏனெனில், தொழுகை போன்ற வணக்கங்களில் ஈடுபட்டிருப்பதுடன் இஃதிகாஃபுடைய நன்மையும் கிடைத்துவிடுகிறது. அதனால் தான் சில பள்ளிவாசல்களின் தலைவாசலில்  نَوَيْتُ الِاعْتِكَافَ مَا دُمْتُ فِي هَذَا الْمَسْجِدِ  (பொருள்: நான் இந்த பள்ளிவாசலில் தங்கி இருக்கும் வரை இஃதிகாஃப் மேற்கொள்ள நாடுகிறேன்.) என்று இஃதிகாஃபின் நிய்யத்தை பெரிய எழுத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

 

மனத்தூய்மை

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பதற்காக நாடி, (பள்ளிவாசலில்) தமக்கு கூடாரத்தை அமைக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே கூடாரம் அமைக்கப்பட்டது. அதை நான் கண்டபோது எனக்கும் கூடாரம் அமைக்குமாறு உத்தரவிட்டேன். அவ்வாறே கூடாரம் அமைக்கப்பட்டது. நபியவர்களின் மற்ற மனைவியரும் கூடாரம் அமைக்குமாறு உத்தரவிட்டனர். அவர்களுக்காகவும் கூடாரம் அமைக்கப்பட்டது.

 

நபியவர்கள் பல கூடாரங்களை கண்டார்கள். ( مَا هَذِهِ آلْبِرَّ تُرِدْنَ ) “(இதன் மூலம்) நீங்கள் நன்மையை தான் நாடினீர்களா?" என்று கேட்டுவிட்டு, தமது கூடாரத்தை அகற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறு அது அகற்றப்பட்டது. உடனே நபியவர்களின் மனைவியர் தங்களின் கூடாரத்தை அகற்றுமாறு உத்தரவிட்டனர். அவ்வாறே அவையும் அகற்றப்பட்டன. நூல்:- முஸ்லிம்-2183, அபூதாவூத் -2108, இப்னுமாஜா-1761

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அந்த ஆண்டில் தம் மனைவியரில் சிலர் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்க  அனுமதியளித்திருந்தார்கள். இதையறிந்து மற்ற மனைவியரும் இஃதிகாஃப் இருக்க திரைக் கூடாரங்களை அமைத்துவிட்டனர்.

 

மூன்று, நான்கு மனைவியர் பள்ளிவாசலில் நபியவர்களுடன் இருக்கும் நிலை ஏற்பட்டு விட்டதால் வீட்டில் மனைவியோடு இருப்பது போன்ற சூழல் உருவாகிவிடும். இந்நிலையில் வழிபாடுகள் செய்ய வழியின்றிப் போய் நோக்கம் சிதைந்துவிடும். உண்மையிலேயே இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்ற தூய எண்ணத்தில் அவ்வாறு செய்தார்களா? அல்லது போட்டி போட்டுக்கொண்டு நபியவர்களின் நெருக்கத்தைப் பெறுவதற்காக இவ்வாறு செய்தார்களா? என்ற கேள்வி எழ ஆரம்பித்தது. அது மட்டுமின்றி, திரைக் கூடாரங்கள் பள்ளிவாசலில் அதிகமானதால் தொழுகையாளிகளுக்கு நெருக்கடி ஏற்படும் நிலையும் உருவானது. இதனாலேயே நபியவர்கள் அந்த ஆண்டு ரமளானில் இஃதிகாஃப் இருக்கும் தமது திட்டத்தை கைவிட்டார்கள். நூல்:- அல்மின்ஹாஜ்

 

மனத்தூய்மையுடன் இஃதிகாஃப் மேற்கொள்வது அனைத்து நற்காரியங்களை விடவும் சிறந்ததாகும். அதனுடைய சிறப்புக்கள் கணக்கில் அடங்காதவையாகும். ஏனெனில், உலகம், மற்றும் அதிலுள்ள அனைத்தையும் விட்டு மனதை ஒரு முகமாக திருப்புதல் அதில் இருக்கிறது. மேலும், மனதை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுதலும் அவனுடைய இல்லத்தில் வீழ்ந்து கிடப்பதும் அதில் அமைந்திருக்கிறது. நூல்:- மராக்கில் ஃபலாஹ்

 

நாம் மனத்தூய்மையுடன் இஃதிகாப் மேற்கொள்ளும்போது நம்முடைய உண்ணுதல், உறங்குதல், ஓய்வெடுத்தல் போன்ற அனைத்தும் இறைவழிபாடாக கருதப்படுகிறது. சுருங்கக்கூறின், நம்முடைய இருபத்தி நான்கு மணி நேரமும் இறைவழிபாடாகவே கருதப்படுகிறது.

 

அவசியத் தேவைக்காக செல்லலாம்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு தமது தலையை (வீட்டிலுள்ள) என்னிடம் நீட்டுவார்கள். நான் அதை வாரிவிடுவேன். இஃதிகாஃப் இருக்கும்போது (அவசியத்) தேவைக்காகத் தவிர (வேறு காரணங்களுக்காக) வீட்டிற்கு வர மாட்டார்கள். நூல்:- புகாரீ-2029, அபூதாவூத்-2111

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் (பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும்போது) இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்கு வருவேன். வீட்டில் யாரேனும் உடல் நலமில்லாமல் இருந்தால் போகிற போக்கில் அப்படியே (உடல்நலம்) விசாரித்துக் கொள்வேன். நூல்:-  முஸ்லிம்-498, இப்னுமாஜா-1766

 

அன்றைய காலத்தில் பள்ளிவாசலில் கழிப்பறை அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. இஃதிகாஃப் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய நபிவழி (சுன்னத்து)கள்: நோயாளியை நலம் விசாரிப்பதற்காக (வெளியில்) செல்லக்கூடாது. இறந்தவரை காண (வெளியில்) செல்லக்கூடாது. மனைவியை (இச்சையோடு) தீண்டக்கூடாது. மனைவியைக் கட்டியணைக்கக்கூடாது. மிக மிக அவசியமான தமது சுயத் தேவைக்காக தவிர வேறெதற்கும் வெளியே செல்லக்கூடாது. நோன்பு நோற்பதுடன் தான் இஃதிகாஃப் இருக்கவேண்டும். ஜும்ஆ தொழுகை நடைபெறும் பள்ளிவாசலில் தான் இஃதிகாஃப் இருக்க வேண்டும். நூல்:-  அபூதாவூத்-2115, தாரகுத்னீ-2338

 

இஃதிகாஃப் இருப்பவர் இயற்கை கடன்களை நிறைவேற்ற பள்ளிவாசலில் வசதி இல்லாதபோது வெளியே செல்லலாம். உணவுத் தேவைக்காக வெளியே செல்வதற்கும் அனுமதி உண்டு. உணவு கொண்டு வர ஆள் இருந்தால் உணவுக்காக வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மார்க்க அறிஞர்களில் சிலர் கூறுகின்றனர். நூல்:-  ஃபத்ஹுல் பாரீ

 

அவசியத்திற்காகப் பேசலாம்

 

அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது. (எனது கணவர்) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ரமளானில் இறுதித் பத்து நாள்களில் (பள்ளிவாசலில்) இஃதிகாஃப் இருந்தபோது அவர்களைச் சந்திக்க நான் (இரவில்) சென்றேன். சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுந்தேன். அப்போது நபியவர்களும் என்னுடன் எழுந்து வந்தார்கள். பள்ளிவாசலின் தலைவாசலை நாங்கள் அடைந்தபோது அன்சாரிகளில் இருவர் கடந்து சென்றனர். நபிவர்களுக்கு அவ்விருவரும் சலாம் கூறினர். அப்போது அவ்விருவரிடமும் நபியவர்கள், ( عَلَى رِسْلِكُمَا إِنَّمَا هِيَ صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ ) "சற்று நில்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை தான்" என்று கூறினார்கள்.

 

அவ்விருவரும், (ஆச்சரியத்துடன்) “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) நாயகமே! (தங்களையா சந்தேகிப்போம்!)” என்றனர். அப்போது நபியவர்கள், ( إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنَ الإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ، وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا ) "நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஊடுருவி இருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் விதைத்து விடுவானோ என நான் அஞ்சினேன்" என்று கூறினார்கள். நூல்:-  புகாரீ-2035, முஸ்லிம் -4387, அபூதாவூத்-2113, முஸ்னது அஹ்மத்

 

இஃதிகாஃப் இருப்பவர் தேவையின்றி உலக விஷயங்களைப் பேசக்கூடாது. ஆனால், அவசியத் தேவைக்காக பிறரிடம் பேசலாம்.

 

குறிப்பாக, இஃதிகாஃப் மேற்கொள்பவர் கைப்பேசி வைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. அப்போது தான் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்கமுடியும். கைப்பேசியுடன் இருப்பது உலகத் தொடர்புடன் இருப்பது போலாகும். தேவையற்ற பேச்சுக்கள் இஃதிகாஃபை வீணாக்கிவிடும் என்பதில் கவனம் தேவை.

 

தவறான விளக்கம்

 

நீங்கள் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃப்) இருக்கும்போது மனைவியருடன் உறவு கொள்ளாதீர்கள். திருக்குர்ஆன்:- 2:187

 

இன்றைய குழப்பமான காலத்தில் இந்த வசனத்தை மேற்கோள் காட்டி, இஃதிகாஃப் இருப்பவர் பள்ளிவாசலில் வைத்துத்தான் மனைவியை உறவு கொள்ளக்கூடாது. தமது வீட்டிற்குச் சென்று உறவு கொள்ளலாம் என்று தவறாக விளங்கிக்கொண்டு, அதையே பரப்புரை செய்து வருகின்றனர்.

 

இந்த (2:187) வசனம் குறித்து பிரபலமான திருக்குர்ஆன் விரிவுரையாளர் பேரறிஞர் ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மக்களில்) ஒருவர் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அவர் விரும்பினால் பள்ளிவாசலில் இருந்து வெளியே சென்று (மனைவியோடு) தாம்பத்திய உறவு கொள்வார். இந்தப் பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. அப்போதுதான் இவ்வசனத்தை அல்லாஹ் அருளினான்.

 

அதாவது, பள்ளிவாசலிலோ பள்ளிவாசல் அல்லாத வேறு இடங்களிலோ இஃதிகாஃப் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும்போது நீங்கள் உங்கள் மனைவியரை நெருங்காதீர்கள் என்பது இதன் கருத்தாகும். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

இஃதிகாஃப் வழிபாடு தொடர்பாக அறிஞர்களின் ஒருமித்த கருத்தாவது: இஃதிகாஃப் வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர், பள்ளிவாசல் இருக்கும் காலமெல்லாம் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது அவருக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

 

ஏதேனும் அவசியத் தேவையை முன்னிட்டு அவர் தமது இல்லத்திற்குச் செல்ல நேர்ந்தால், இயற்கை கடனை நிறைவேற்றல் உணவு உட்கொள்ளல் போன்ற தேவைகளை முடித்துக் கொள்கிற அளவுக்கு மேலாக அங்கு தங்குவதற்கு அவருக்கு அனுமதியில்லை. அப்போது அவர் மனைவியை முத்தமிடவோ, கட்டியணைக்கவோ கூடாது. தாம் மேற்கொண்டுள்ள இஃதிகாஃப் வழிபாட்டைத் தவிர வேறு எதிலும் அவர் ஈடுபடவும் கூடாது. நோயாளியை நலம் விசாரிக்க (வெளியில் செல்ல)க்கூடாது. எனினும், தமது (தேவையை முன்னிட்டு வெளியே செல்லும்போது) வழியில் நோயாளியைச் சந்தித்தால் விசாரித்துக் கொள்ளலாம். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

பேரறிஞர் இப்னு கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ் ரமளானின் இறுதிப்பத்து நாள்களில் அடியானின் மூளையைச் சலவை செய்யவே விரும்புகிறான். நூல்:- ஸாதுல் மஆத் 1/178

 

அல்லாஹ், தமது அடியானை பத்தரை மாற்றுத் தங்கத்தைப் போன்று பரிசுத்தவானாக மாற்றிட விரும்புகிறான். இனி அடியானின் தனிமை அனைத்தும் எனக்காகவே ஒதுக்க வேண்டும் என்று விரும்புகிறான்.

 

அடியானுடைய ரமளானின் இறுதிப்பத்து நாள்களில் மனைவி மக்கள் என யாருக்கும் பங்கில்லை. அந்தப் பத்து நாள்கள் எனக்கு மட்டுமே.

 

இனி, அவனது உண்ணுதல், பருகுதல், உறங்குதல், விழித்தல் என அனைத்தும் எனக்காகவே, இவை அனைத்தும் எனது இல்லத்திலேயே இருக்க வேண்டும். என்னைப் பற்றிய நினைவுகள் இனி, தூய்மை பெறவேண்டும். அதில் கலப்படம் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே, என்னைப் பற்றி மட்டுமே நினைத்துப் பார்ப்பதற்கு எனது அடியானுக்கு எனது இல்லமே சரியான இடமாகும் என்று எண்ணுகிறான்.

 

எனவே, நாம் இஃதிகாஃபை முறையாகப் பேணி, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...