ஓதப்படவேண்டியது
فَاقْرَءُوْا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْاٰنِ
குர்ஆனிலிருந்து உங்களால் இயன்றளவு ஓதுங்கள். திருக்குர்ஆன்:- 73:20
குர்ஆன் என்பது ஏக இறைவன் அல்லாஹுதஆலாவால் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக அகில உலகத் தலைவர் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன் அரபு மொழியில் இறக்கப்பட்ட இறைவேதமாகும்.
அன்று முதல் இன்று வரை மனித உள்ளங்களிலும், நூல் வடிவிலும் பாதுக்காக்கப்பட்டு வருவதே அதன் தனிப்பெரும் சிறப்பாகும். குர்ஆன் என்ற அரபு சொல்லுக்கு ஓதப்பட்டது, ஓதக்கூடியது, ஓதப்படவேண்டியது என மூன்று அர்த்தங்கள் உள்ளன.
உலகில் காணப்படும் நூல்களில் குர்ஆன் மட்டுமே அதிகம் வாசிக்கப்பட்ட, வாசிக்கப்படுகின்ற இறை நூலாகும்.
உலகத்தில் குர்ஆன் என்ற ஒரேயொரு நூல் தான் தன்னை ஏற்றுக்கொண்ட மக்களின் உள்ளத்தில் வசிக்கின்றது. இரவும் பகலும் அதிகமான மக்கள் ஓதுகின்ற நூலும் இதுவேயாகும். வாழ்க்கையில் எத்தனை முறை ஓதினாலும் அளுப்பு ஏற்படாத நூல் இது மட்டுமேயாகும். அது அருளப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை இல்லையில்லை யுக முடிவு வரை அதன் அசல் தன்மை மாறாமலும், அது அருளப்பட்ட மொழியிலிருந்து பிறழாமலும் இருக்கும்.
மேன்மைகள்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّكُمْ لاَ تَرْجِعُونَ إِلَي اللهِ بِشَيْءٍ أَفْضَلَ مِمَّا خَرَجَ مِنْهُ يَعْنِي الْقُرْآنَ ) அல்லாஹ்விடமிருந்து வெளியான குர்ஆனைவிடச் சிறந்த வேறு எதன் மூலமாகவும் அல்லாஹ்வின் நெருக்கத்தை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாது. அறிவிப்பாளர்:- அபூதர் (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ( إنَّ هَذِهِ الْقُلُوبَ تَصْدَأُ، كَمَا يَصْدَأُ الْحَدِيدُ إِذَا أَصَابَهُ الْمَاءُ ) "தண்ணீர் பட்டால் இரும்பு துருப்பிடிப்பதுபோல் இந்த இதயங்களும் துருப்பிடித்துவிடுகின்றன" என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் நாயகமே! இதயத்துருவை நீக்குவது எது? என்று வினவினார்கள். அதற்கு அண்ணலார் ( كَثْرَةُ ذِكْرِ الْمَوْتِ، وَتِلَاوَةِ الْقُرْآنِ ) "மரணத்தை அதிகம் நினைப்பதும் குர்ஆனை அதிகம் ஓதுவதும் ஆகும்" என்று விளக்கமளித்தார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான்கு சாராரை சொர்க்கம் விரும்பிக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு சாரார் (அதிகம்) குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பவர்கள். நூல்:- ரவ்ளதுல் மஜாலிஸ்
நம்மனைவரின் இலக்கு சொர்க்கம் தான். அதனால் தான் நமது அனைத்து பிரார்த்தனையிலும் சொர்க்கத்தையே வேண்டுகிறோம். அதிகம் குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பவர்களை சொர்க்கமே விரும்புகிறது என்றால் அதிகம் குர்ஆன் ஓதுவதின் மூலம் ஏற்படும் நன்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். குர்ஆனை எவ்வளவு ஓதினாலும் அறிஞர்கள் திருப்தியடைய மாட்டார்கள். திரும்பத் திரும்ப ஓதினாலும் அவர்களின் ஆர்வம் குன்றிவிடாது. அதன்மூலம் கிடைக்கும் அற்புதமான கருத்துக்களும் வற்றாது. குர்ஆனை மீண்டும் மீண்டும் ஓதுவதால் அறிவு விருத்தி ஆகிக் கொண்டேயிருக்கும்.
தாபிஈன்களில் ஒருவரான உவைசுல் கர்னீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். குர்ஆன் உங்களை இறைவன்பால் அழைத்துச் செல்லும் இறைநேசர் கிள்ரு (அலை) அவர்களைப் போன்று கருதிக் கொள்ளுங்கள்.
நபித்தோழர்களில் குர்ஆன் முழுவதையும் முறையாக முதன்முதலில் மனனமிட்டவர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஆவார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( اللهم اِنّي اَساَلُكَ أنْ تَجعَلَ القُرآنَ رَبِيعَ قَلبِي وَنُورَ بَصَرِي وَجِلاءَ حُزْنِي وَذَهَابَ هَمِّي ) "இறைவா! குர்ஆனை என் இதயத்தின் வசந்தமாகவும், என் கண்களின் ஒளியாகவும், என் கவலைகளைப் போக்கும், துயர் நீக்கும் அருமருந்தாகவும் ஆக்குவாயாக!" என்று பிரார்த்தித்துள்ளார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்
நிரந்தரமாக ஓத வேண்டும்
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் பயணித்துக்கொண்டிருந்தபோது நாயகமே! எனக்கு பயனுள்ள ஏதேனும் செய்தியைக் கூறுங்கள் என்று கோரினேன். அதற்கு அண்ணலார் "நீர் இறையச்சமுள்ளவர்களின் வாழ்க்கை வாழ வேண்டும் என்றும், அறப்போரில் உயிர் நீத்தவர்களின் அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்றும், மறுமை நாளின் விசாரணையின்போது ஈடேற்றம் பெற வேண்டும் என்றும், தீய வழியைவிட்டும் விலகி நேர்வழியில் நிலைத்திருக்க வேண்டும் என்றும் உண்மையாகவே விரும்பினால் திருக்குர்ஆனை நிரந்தரமாக ஓதி வா!" என்று எனக்கு நற்செய்தி கூறினார்கள். நூல்:-பத்ரர் ரஷீத்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لأَبِي ذَرٍّ: عَلَيْكَ بِتِلاَوَةِ الْقُرْآنِ وَذِكْرِ اللهِ فَإِنَّهُ ذِكْرٌ لَّكَ فِي السَّمَاءِ وَنُورٌ لَّكَ فِي اْلاَرْضِ ) அபூதர் (ரலி) அவர்களே! திருக்குர்ஆன் ஓதுவதையும், அல்லாஹ்வை தியானிப்பதையும் பேணுதலாகச் செய்து வருவீராக! இந்த நற்செயல்களால் வானத்தில் உம்மைப் பற்றி நினைவு கூறப்படும். மேலும் இது பூமியில் உமக்கு ஒளியாகும். நூல்:- பைஹகீ
ஒருநாள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் அல்லாஹ்விடம் மிகுந்த மதிப்புக்குரியவர்கள் (அதிகம்) திருக்குர்ஆன் ஓதியவர்களே ஆவார்கள். அச்சமயம் அல்லாஹ் வானவ தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் "விசாரணைக்காக (அதிகம்) திருக்குர்ஆன் ஓதியவர்களைத் தவிர மற்ற அனைவரையும் அழைத்து வா! என்று உத்தரவிடுவான். அவர் அழைப்பார். அவரது அழைப்பை ஏற்று அனைவரும் அணி அணியாய் வந்து நின்று விடுவார்கள்.
சிறிது நேரத்திற்கு பின்னர் (அதிகம்) திருக்குர்ஆன் ஓதியவர்களை மிகுந்த மரியாதையுடன் அழைத்து வரச்செய்து அவர்களிடம் 'உங்களின் குரலை உயர்த்தி ஓதுங்கள்' என்று அல்லாஹ் அவர்களுக்கு உத்தரவிடுவான். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ் எந்த அத்தியாயத்தை அவரவருக்கு நினைவுப்படுத்துகின்றானோ அதை அவர்கள் ஓதுவார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவரவரின் குரல் இனிமை, அச்ச உணர்வு, சிந்தித்து ஓதும் திறன் ஆகியவற்றைக் கவனித்து அவரவரின் அந்தஸ்தை அல்லாஹ் அதிகப்படுத்துவான்.
அதன் பின்னர் அவர்களை நோக்கி "எனது குடும்பத்தினரே! நீங்கள் தான் உலகில் வாழ்ந்த அனைவரையும்விட தலை சிறந்தவர்கள் என்பதை அறிவீர்களா? என்று வினவுவான். அதற்கு அவர்கள் ஆம்!" என்பார்கள். அதன் பின்னர்; அந்த விசாரணை மன்றத்தில் நிற்கும் மனிதர்களில் உங்களுக்கு அறிமுகமானவர்கள் அனைவரையும் உங்களுடன் சேர்த்து அழைத்துக் கொண்டு சொர்க்கத்திற்குச் செல்லுங்கள்" என்று உத்தரவிடுவான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- துர்ரத்துந் நாசிஹீன்
நபித்தோழர்களில் பெரும்பாலோர் வாரத்திற்கு ஒருமுறை குர்ஆன் முழுவதையும் ஓதிமுடிக்கின்ற பழக்கமுள்ளவர்களாகவே இருந்துள்ளனர்.
குர்ஆன் ஓதுதலை நம்முடைய அன்றாட அலுவல்களில் ஒன்றாகக் கருத வேண்டும். தினமும் குறைந்தபட்சம் ஒரு ஜுஸ்உ (பாகம்) ஓதி வந்தால் ஒரு மாதத்தில் குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்துவிடலாம். குர்ஆனை அன்றாடம் ஓதுவதால் நமக்கு மார்க்க விழிப்புணர்வு ஏற்படும். நமது அறிவு விசாலமடைந்து இதயம் தூய்மை பெறும்.
சிறந்த வழிபாடு
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் உபரியான நோன்புகள் நோற்பதைக் குறைத்துக்கொண்டு அதிகமாக குர்ஆன் ஓதி வந்தார்கள். அது குறித்து அன்னாரிடம் வினவப்பட்டபோது நான் உபரியான நோன்புகளை அதிகமாக நோற்றால் பலவீனமடைந்து விடுவேன் இதனால் குர்ஆனை ஓத இயலாமல் போய்விடும். எனவே எனக்கு உபரியான நோன்புகள் நோற்பதைவிட குர்ஆன் ஓதுவதே மிகவும் விருப்பமான செயலாகும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- ஷகீக் பின் அபீவாயில் (ரஹ்) அவர்கள் நூல்:- அன்னஷ்ரு
( أفضلُ العبادةِ قراءةُ القرآنِ ) "வணக்க வழிபாடுகளில் சிறந்தது குர்ஆன் ஓதுவதேயாகும்" என்கிறது ஒரு நபிமொழி. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, ளஈஃபுல் ஜாமிஉ இமாம் அல்பானீ-1027
அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் கூறியதாவது. "(அதிகமாக குர்ஆன் ஓதுவதில் ஆர்வம் கொண்ட) என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( اقْرَإِ الْقُرْآنَ فِي شَهْرٍ ) “ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை குர்ஆனை) ஓதி நிறைவு செய்!" என்று கூறினார்கள். அப்போது நான், ( إِنِّي أَجِدُ قُوَّةً ) “(அதைவிடவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது” என்று கூறினேன். பிறகு அண்ணலார், ( اقْرَأْ فِي عِشْرِينَ ) “இருபது நாட்களில் (ஒரு குர்ஆன்) ஓதி நிறைவு செய்!" என்று கூறினார்கள். அப்போதும் நான், “அதைவிட அதிகமாக ஓத எனக்கு சக்தி உள்ளது என்றேன்.
பிறகு அண்ணலார், ( اقْرَأْ فِي خَمْسَ عَشْرَةَ ) “பதினைந்து நாட்களில் (ஒரு குர்ஆன்) ஓதி நிறைவு செய்!" என்று கூறினார்கள். அப்போதும் நான், “அதைவிட அதிகமாக ஓத எனக்கு சக்தி உள்ளது” என்றேன். பிறகு அண்ணலார், ( اقْرَأْ فِي عَشْرٍ ) “பத்து நாட்களில் (ஒரு குர்ஆன்) ஓதி நிறைவு செய்!" என்று கூறினார்கள். அப்போதும் நான் அதைவிட அதிகமாக ஓத எனக்கு சக்தி உள்ளது என்றேன். பிறகு அண்ணலார், ( فَاقْرَأْهُ فِي سَبْعٍ وَلاَ تَزِدْ عَلَى ذَلِكَ ) “ஏழு நாட்களில் (ஒரு குர்ஆன்) ஓதி நிறைவு செய்! அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதே!” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5054, அபூதாவூத்-1388
அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் வணக்க வழிபாடுகளில் மிகுந்த ஆர்வமுள்ளவர். எந்தளவுக்கு என்றால் திருமணம் முடித்த பிறகும்கூட மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடாமல் ஒவ்வொரு இரவிலும் குர்ஆனை முழுமையாக ஓதிமுடிப்பதிலும், அதிமான நேரங்களில் தொழுகையிலும், பகலெல்லாம் நோன்பு நோற்பதிலும் ஈடுபட்டு வந்தார். இவரின் மனைவி இதைப்பற்றி முறையிடும் நிலை ஏற்பட்டது. இவர் மனைவியின் கடமையையும் நிறைவேற்ற வேண்டும். மேலும் வணக்க வழிபாடுகளில் நடுநிலையை பேண வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவர் ஓதும் குர்ஆனின் அளவை (வணக்க வழிபாடுகளின் அளவை) குறைக்குமாறு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு கட்டளையிட்டார்கள்.
அந்த நபித்தோழருக்கு குர்ஆன் ஓதுவதில் இருந்த ஆர்வத்தை குறிப்பிடுவது தான் இங்கு நோக்கமாகும். மற்றப்படி ஒரு மாதத்திற்கு ஒருமுறை தான் குர்ஆனை ஓதிமுடிக்க வேண்டும் என்பது அவருக்கு மட்டும் சொல்லப்பட்டதே தவிர, அனைவருக்குமான பொது சட்டமல்ல.
குர்ஆனை ஒவ்வொருவரும் அவரவர் வசதி வாய்ப்பிறகேற்ப எவ்வளவு வேண்டுமானாலும் ஓதிக்கொள்ளலாம். அதற்கு குறிப்பிட்ட வரைமுறை கிடையாது.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اقْرَءُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ قُلُوبُكُمْ، فَإِذَا اخْتَلَفْتُمْ فَقُومُوا عَنْهُ ) உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும்வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) உங்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள். அறிவிப்பாளர்:- ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5060
இந்த நபிமொழிக்கு பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. குர்ஆனை மன ஓர்மையுடனும் ஓரே கவனத்துடனும் ஓதுங்கள். கவனம் சிதறி மனம் அலைபாயும் நிலை ஏற்படின் ஓதுவதை நிறுத்திவிடுங்கள். என்பது ஒரு விளக்கம். மன அமைதியுடனும் உற்சாகத்துடனும் குர்ஆனை ஓதுங்கள். சோர்வு ஏற்படின் ஓதுவதை நிறுத்திவிடுங்கள் என்பது மற்றொரு விளக்கம். நூல்:- ஃபத்ஹுல் பாரீ, உம்தத்துல் காரீ, இர்ஷாதுஸ் ஸாரீ
முறைப்படி
மேலும் (நபியே!), குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! திருக்குர்ஆன்:- 73:4
அப்துல்லாஹ் பின் முஙஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அல்ஃபதஹ் எனும் (48ஆவது) அத்தியாயத்தை மெல்லிய குரலில் 'தர்ஜீஉ' எனும் ஓசை நயத்துடன் ஓதிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன். நூல்:- புகாரீ-5047, முஸ்லிம்-1456
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ فَإِنَّ الصَّوْتَ الْحَسَنَ يَزِيدُ الْقُرْآنَ حُسْناً ) இனிமையான குரலைக் கொண்டு குர்ஆன் ஓதுவதை அழகுபடுத்துங்கள். ஏனெனில் இனிய குரல் குர்ஆன் ஓதுவதின் அழகை அதிகரிக்கச் செய்கிறது. அறிவிப்பாளர்:- பராஉ (ரலி) அவர்கள் நூல்:-ஹாகிம்
மனிதனை ஈர்க்கும் சக்தி படைத்ததாக இசை மற்றும் பாடல் திகழ்கின்றன. அரபியர் உட்பட அனைத்து நிலப்பகுதி மக்களும் பொழுதைக் கழிக்கவும், பணிச்சோர்வைப் போக்கவும் இசை இசைப்பது மற்றும் பாடல்கள் பாடுவதை பழக்கமாகக் கொண்டிருந்தனர். இஸ்லாம் இசையை முற்றிலுமாக தடைசெய்தது. மேலும் தவறான பாடல்கள் மூலம் சிந்தனை சீர்குலைந்து போகக்கூடும். எனவே அதற்குப் பதிலாக அவ்விடத்தில் குர்ஆன் ஓதுதலை வைத்து மக்களை இறையச்சமுடையவர்களாக மாற்றுவதே நோக்கம். அதனால் தான் குர்ஆனை ஓதும்போது செவிக்கினிய குரலில் மனதை ஈர்க்கும் தொனியில் ஓதுங்கள் என இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது.
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) ( يَا أَبَا مُوسَى لَقَدْ أُوتِيتَ مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ ) "அபூமூசா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது" என என்னிடம் கூறினார்கள். நூல்:-புகாரீ-5048
பிறரை ஓதச்சொல்லி அதைக் கேட்பது சுன்னத் எனும் நபிவழியாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீதியில் சென்று கொண்டிருக்கும்போது, இனிமையான குரலில் குர்ஆன் ஓதப்படுவதைக் கேட்டால், அதனைக் கேட்டுக் கொண்டே அந்த இடத்திலேயே நின்று விடுவார்கள். அப்படி ஓதியவரை அழைத்துப் பாராட்டுவார்கள். சில சமயங்களில் தன் தோழர்களில் இனிய குரலில் குர்ஆன் ஓதுபவர்களை அழைத்து ஓதிக் காட்டும்படி வேண்டுவார்கள்.
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் அனஸ் (ரலி) அவர்களிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஓதுதல் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் "(நீட்டி ஓத வேண்டிய இடங்களில்) நன்றாக நீட்டி ஓதுவது அண்ணலாரின் வழக்கமாக இருந்தது" என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-5045
முடிந்தளவு அழகிய குரலில் ஓதவேண்டும். அப்படி இயலாவிட்டால் அரபு எழுத்துக்களை தெளிவாகவும், துல்லியமாகவும் உச்சரிக்க வேண்டும். கேட்போருக்கு என்ன எழுத்தை உச்சரிக்கிறார் என்பது தெளிவாக புரியும் விதமாக, அழகிய ஓதுகையாக அமையவேண்டும்.
குர்ஆன் ஓதத் தெரிந்த பலருக்கும் அதை ஒழுங்கான உச்சரிப்போடு தங்குதடையின்றி ஓதத் தெரிவதில்லை. பொதுவாக குர்ஆன் ஓதத் தொடங்கியவுடன் பலரும் மௌனமாகிவிடுகிறார்கள். சப்தம் போட்டு ஓதினால் பக்கத்தில் உள்ளவர்களுக்கு நம்முடைய தப்புதவறுகள் தெரிந்துவிடுமோ என்னும் அச்சம் தான் காரணம். இங்ஙனம் மௌனமாக மனதிற்குள்ளாகவே ஓதிக்கொள்ள அனுமதியில்லை என்பதை நாம் அறிய வேண்டும். உச்சரிப்பு சுத்தமாய் சப்தமாய் ஓதிப் பழக வேண்டும்.
இமாம் அல்பஙவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். குர்ஆனின் கருத்துக்களைப் புரிந்து அதன்படி வாழ்வது இந்த சமுதாயத்தின் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. மேலும் குர்ஆனின் வார்த்தைகளை சரியாக ஓதவும், அண்ணல் நபி (ஸல்) அவர்களிடமிருந்து எவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதோ அவ்வாறே உச்சரிப்புப் பேதமின்றி ஓதுவதும் கடமையாக்கப்படடுள்ளது. குர்ஆனை முறையாக ஓதி நன்மை பெறுவோரும் உண்டு. அதை தவறாக ஓதி தீமை பெறுவோரும் உண்டு. எனவே முடிந்தவரை திருத்தமாக ஓத முயற்சிக்க வேண்டும். சிலருக்கு திருத்தமாக ஓத இயற்கையாக நாவு வளைந்து கொடுப்பதில்லை. இவ்வாறானவர்கள் தீமைக்கு ஆளாக மாட்டார்கள். என்றாலும் முயற்சிக்க வேண்டும். நூல்:- முஆலிமுத் தன்ஸீல்
அபூமஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். குர்ஆன் ஓதும் ஒவ்வொருவரும் தஜ்வீதை முறையாக கற்றுக்கொள்வது "பர்ளு அய்ன்" எனும் கட்டாயக் கடமையாகும்.
“குர்ஆனை தர்த்தீலாக ஓதுக!” என்று அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு குர்ஆனில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் அல்லவா? அதன் கருத்து என்னவென்று அலீ (ரலி) அவர்களிடம் ஒருவர் வினவினார். அதற்கு அன்னார் எழுத்துக்களின் உச்சரிப்பு பேதகமின்றி, நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி ஓதுதல் என்று பதிலளித்தார்கள்.
தஜ்வீத் கலையைக் கற்க முதலாவதாக அரபி எழுத்துக்களையும், அதன் உச்சரிப்பையும், குர்ஆன் ஓதும்போது எந்தெந்த இடங்களில் எவ்வாறு எவ்வளவு வினாடி நிறுத்தி ஓத வேண்டும் என்பதையும், அவற்றிற்கான அவசியத்தையும் அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். குர்ஆனை தடையின்றி சரளமாக ஓத இவற்றையெல்லாம் அறிந்திருப்பது அவசியமாகும்.
நமது பகுதியில் (தமிழகத்தில்) தஜ்வீத் கலைக்கு போதிய ஊக்கமளித்து பயிற்சி அளிக்கப்படாததால் நம்மில் பலரும் குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதத் தெரியாதவர்களாக உள்ளனர். குர்ஆன் விஷயத்தில் இது மிகப்பெரிய குறையேயாகும். தங்களின் இக்குறையைப்பற்றி கவலை கொண்டு அதை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும்.
சிந்தனையோடு
அறிவுடையோர் இதன் வசனங்களை கவனித்து ஆராய்ந்து நல்லுணர்வு பெறுவார்கள். திருக்குர்ஆன்:- 38:29
சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக இந்த குர்ஆன் கவலையோடு இறங்கியுள்ளது. அதனை ஓதும்போது அழுதுகொண்டே ஓதுங்கள். அழுகை வரவில்லையெனில் அழுகை வருவதுபோல் ஆக்கிக்கொள்ளுங்கள். நூல்:- இப்னுமாஜா
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் அந்நிசா எனும் (4ஆவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். அப்போது ( فَرَأَيْتُ عَيْنَيْهِ تَذْرِفَانِ ) அண்ணலாரின் கண்கள் கண்ணீர்ச் சொரிவதைக் கண்டேன். நூல்:- புகாரீ-5055
குர்ஆனை ஓதும்போது உள்ளச்சத்தோடும், கவலையோடும், அழுகையோடும் இருப்பது நபிவழியாகும். குர்ஆன் ஓதுவதோடு அதன் மொழியாக்கத்தையும் வாசித்து பழக வேண்டும். அதன் மூலம் குர்ஆன் கூறும் நல்லுபதேசங்கள், விஞ்ஞான கருத்துக்கள் போன்றவை விளங்கிக்கொள்ளலாம். நல்லடியார்கள் குர்ஆனைக் கற்றுத் தேர்ந்து அதன் கருப்பொருளை விளங்கிக் கொண்டு தம் இறைநம்பிக்கையை திடமுள்ளதாகவும், உறுதிவாய்ந்ததாகவும் ஆக்கிக்கொள்கின்றனர்.
இக்ரிமா பின் அபூஜஹ்லு (ரலி) அவர்கள் குர்ஆனைத் திறக்கும் போது ( هَذَا كَلَامُ رَبِّي ) "இது என் இறைவனின் வார்த்தை" என்று கூறியவர்களாகவே திறப்பார்கள். ஏனெனில் வார்த்தைகளுக்கு அளிக்கும் மதிப்பு அதனைக் கூறியவருக்கு அளிக்கும் மதிப்பாக அமைகிறது.
ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது ஒருவர் குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பதை செவியுற்றார்கள். ஓதிக்கொண்டிருந்தவர் ஒவ்வொரு வசனத்தையும் நிதானமாக ஓதுவதும், ஒவ்வொரு வசனத்தின் இறுதியிலும் நிறுத்தி விட்டு அழுவதுமாக இருந்தார். அண்ணலார் தம் தோழர்களிடம் "குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! எனும் இறை ஆணையை நீங்கள் அறிவீர்களா? இதோ அதற்கு இவரே எடுத்து காட்டு" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- ஹசன் (ரலி) அவர்கள் நூல்:- அஹ்காமுல் குர்ஆன் அல்லாமா இப்னு அரபி
குர்ஆனை ஓதிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி அதன் கூற்றை சிந்திக்க வேண்டும். இதனடிப்படையில் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் சில வசனங்களை திரும்பத் திரும்ப ஓதுபவர்களாக இருந்துள்ளார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அழகிய முறையில் ஓதுவது என்றால் என்ன? என்று வினவப்பட்டது. அதற்கு அண்ணலார் "அவர் ஓதுவதை செவியுற்றால் அல்லாஹ்வுக்கு அஞ்சி ஓதுகிறார் என்பதை உணர முடியும்" என்று பதிலளித்தார்கள். நூல்:- தாரமீ
உள்ளச்சத்தோடு உச்சரிப்பு அழகும் சேரும்போது தான் குர்ஆன் ஓதுவது 'திலாவத்' அல்லது 'கிராஅத்' என்னும் நிலையை அடைகிறது. உச்சரிப்பு அழகு என்பது உதடுகளில் இருந்தல்ல, உள்ளத்தில் இருந்து தான் பிறக்கிறது. வெறுமனே உதடுகளையும், குரல்வளத்தையும் பயன்படுத்தி குர்ஆனை ஓதுபவர்கள் செவிக்கு இனிமை சேர்க்கிறார்கள் அவ்வளவு தான். ஆனால் இது இறைவனின் சத்திய வார்த்தை. இது கூறும் முறைப்படி நாம் வாழ்வதுதான் வெற்றியாகும் என உணர்ந்து உள்ளச்சத்தோடு ஓதும்போது தான் உண்மையாகவே அது மிக அழகான ஓதுதலாக அமைந்துவிடுகிறது.
குர்ஆன் ஓத ஆரம்பிக்கும்போது இதயப்பூர்வமான உணர்வுடன் ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடியவாறு, அல்லாஹ்வின் திருப்பெயரை மொழிந்தவாறு ஆரம்பிக்க வேண்டும். குர்ஆனின் மகத்துவத்தை உணர்ந்து, சிந்தனையை ஒருமுகப்படுத்தி, அடக்கத்துடன், இறையச்சம் மேலோங்கிய நிலையில், குர்ஆன் கூறும் போதனைகளை ஏற்று செயல்படும் தீர்மானத்துடன் ஓத வேண்டும். இதுவே குர்ஆன் ஓதுவதின் ஒழுங்கு முறையாகும்.
வெகுமதிகள்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ قَرَأَ حَرْفاً مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لاَ أَقُولُ الم حَرْفٌ وَلكِنْ اَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ ) குர்ஆன் ஓதுபவருக்கு அதிலுள்ள ஒரு எழுத்துக்கு பகரமாக ஒரு நன்மை கிடைக்கும். அந்த ஒரு நன்மை பத்து நன்மைகளுக்குச் சமமாகும். அலிஃப், லாம், மீம் அனைத்தும் சேர்ந்து ஓர் எழுத்து என நான் சொல்லவில்லை. ஆயினும் அலிஃப் என்பது ஒர் எழுத்து, லாம் என்பது ஓர் எழுத்து, மீம் என்பது ஓர் எழுத்து ஆகும். (ஆக குர்ஆனிலுள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து பத்து நன்மைகள் கிடைக்கும்.) அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2910
அலீ (ரலி), அனஸ் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
( مَنْ قَرَأَ الْقُرآنَ فِي صَلَاةٍ قَائِمًا كَانَ لَهُ بِكُلِّ حَرْفٍ مِائَةُ حَسَنَةٍ، وَمَنْ قَرَأَهُ قَاعِدًا كَانَ لَهُ بِكُلِّ حَرْفٍ خَمْسُونَ حَسَنَةً، وَمَنْ قَرَأَ عَلَى وُضُوءٍ كَانَ لَهُ بِكُلِّ حَرْفٍ خَمْسٌ وَ عِشْرُونَ حَسَنَةً، وَمَنْ قَرَأَهُ عَلَي غَيْرِ وُضُوءٍ كَانَ لَهُ بِكُلِّ حَرْفٍ عَشْرُ حَسَنَاتٍ، وَمَن اسْتَمَعَ إِلى كِتَابِ اللهِ كَانَ لَهُ بِكُلِّ حَرْفٍ حَسَنَةٌ )
தொழுகையில் நின்றவாறு குர்ஆன் ஓதுபவருக்கு ஒவ்வொரு எழுத்துக்கும் நூறு நன்மைகள் கிடைக்கும். தொழுகையில் உட்கார்ந்தவாறு குர்ஆன் ஓதுபவருக்கு ஒவ்வொரு எழுத்துக்கும் ஐம்பது நன்மைகள் கிடைக்கும். தொழுகைக்கு வெளியே உளூவுடன் குர்ஆன் ஓதுபவருக்கு ஒவ்வொரு எழுத்துக்கும் இருபத்தி ஐந்து நன்மைகள் கிடைக்கும். உளூ இல்லாமல் குர்ஆன் ஓதுபவருக்கு ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் கிடைக்கும். குர்ஆன் ஓதப்படும்போது அதைக் கேட்போருக்கு அதன் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு நன்மை கிடைக்கும். நூல்:- கன்ஸுல் உம்மால், தைலமீ, இஹ்யா
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( قِرَاءَةُ القرآنِ فِي الصلاةِ أفضَلُ مِن قِراءَةِ القرآنِ فِي غَيرِ الصَّلاةِ، وقِرَاءَةُ القرآنِ في غَيرِ الصلاةِ أفضلُ مِنَ التَّسبِيحِ وَالتَّكبيرِ ) தொழுகையில் குர்ஆன் ஓதுவது தொழுகை அல்லாத பிற நேரங்களில் குர்ஆன் ஓதுவதைவிட சிறந்தது. பிற நேரங்களில் குர்ஆன் ஓதுவது திக்ரு, தஸ்பீஹ் செய்வதைவிட சிறந்தது. அறிவிப்பாளர்:-ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, தாரகுத்னீ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَثَلُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَهْوَ حَافِظٌ لَهُ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ، وَمَثَلُ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَهْوَ يَتَعَاهَدُهُ وَهْوَ عَلَيْهِ شَدِيدٌ، فَلَهُ أَجْرَانِ ) குர்ஆனை நன்கு மனனமிட்டுத் தங்குதடையின்றி ஓதுகின்றவர் கடமை தவறாத கண்ணியமிக்கத் தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதைச்) சிரமத்துடன் திக்கித் திணறி ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு. அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-4937, முஸ்லிம்-1462
சிரமத்துடன் குர்ஆனை ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு. ஒன்று குர்ஆனை ஓதுவதற்காகவும், மற்றொன்று சிரமப்படுவதற்காகவும் என இரு நன்மைகள் அவருக்குக் கிடைக்கும். நன்கு மனனமிட்டுத் தங்குதடையின்றி குர்ஆனை ஒதுகின்றவரின் தகுதி அதைவிடவும் உயர்வானது. அவர் வானவர்களைப் போன்று மதிக்கப்படுவார் என்பது நபிமொழியின் கருத்து.
உலகத்தில்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن قَرَأ القُرآنَ كَانَت لَهُ عِندَ اللهِ دَعوَةٌ مُستَجَابَةٌ إنْ شَاءَ عَجَّلَها لَه فِي الدُّنيا وَإنْ شَاءَ أخَّرَهَا لَهُ فِي الآخرةِ ) யார் குர்ஆனை (அதிகமாக) ஓதுகிறாரோ, அவருக்கு அல்லாஹ் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு பிரார்த்தனையை வழங்கியுள்ளான். அவர் விரும்பினால் அந்த பிரார்த்தனையை இந்த உலகத்திலேயே பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது மறுமையின் நலனுக்காக தாமதப்படுத்திக் கொள்ளலாம். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- முஃஜமுல் அஸ்வத் தப்ரானீ, ஹில்யா இமாம் அபூநயீம்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எந்த வீட்டில் குர்ஆன் ஓதப்படுகிறதோ அந்த வீட்டில் வானவர்கள் வந்து போகிறார்கள்; அதனால் அங்கு அருள்வளம் உண்டாகிறது; அங்கிருந்து ஷைத்தான்கள் வெளியேறி விடுகின்றனர்; அதனால் அங்கு நெருக்கடி நீங்குகிறது.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ் கூறியதாக (ஹதீஸ் குத்சியை) கூறினார்கள். ( مَنْ شَغَلَهُ الْقُرْآنُ عَنْ ذِكْرِي وَمَسْاَلَتِي أَعْطَيْتُهُ أَفْضَلَ مَا أُعْطِيَ السَّائِلِينَ ) எவர் குர்ஆனில் அதிகமாக ஈடுபடுவதின் காரணமாக என்னைத் திக்ரு செய்வதற்கும், என்னிடம் பிரார்த்திப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையோ அவருக்கு, பிரார்த்திப்பவருக்குக் கொடுப்பதைவிட அதிகமாகக் கொடுப்பேன். அறிவிப்பாளர்:- அபூசயீத் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2926
குர்ஆனை ஓதுவதிலோ, ஆராய்வதிலோ அல்லது கற்றுக் கொடுப்பதிலோ ஒருவர் தன்னுடைய காலத்தைக் கழிக்கிறார். அவருக்கு அல்லாஹ்வை திக்ரு செய்யவோ, உபரியான வணக்கங்களில் ஈடுபடவோ, தமக்கு வேண்டியது குறித்து பிரார்த்திக்கவோ நேரமில்லாவிட்டால் இறைவனிடம் பிரார்த்தித்து நற்பலனை அடைவோருக்கு கிடைக்கும் பலனைவிட சிறந்ததை அல்லாஹ் அவருக்கு அளிப்பான் என்பது இந்த நபிமொழியின் கருத்தாகும்.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், இக்ரிமா (ரஹ்) அவர்கள் போன்றோர் கூறுகிறார்கள். ( مَن قَرَأ القُرْآنَ لَمْ يُرَدَّ إلى أرْذَلِ العُمُرِ ) அதிகம் குர்ஆன் ஓதும் பழக்கமுடையவர் (நீண்ட காலம் வாழ்ந்தாலும் "அர்தலுல் உமூர்" எனும்) தன் சுயத் தேவைகளை தன்னால் செய்துகொள்ள முடியாத தள்ளாத நிலைக்கு ஆளாகமாட்டார். நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர், தஃப்சீர் ரூஹுல் மஆனீ, தஃப்சீர் ஜலாலைன் நஹ்ல் வசனம்-70
முஹம்மத் பின் சீரின் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, “என்னிடம் உள்ள ஒரு வெள்ளித்தட்டில் தேன் இருக்கிறது. அதை நான் எனது நாவினால் சப்பிக் கொண்டு இருக்கிறேன்” இவ்வாறு ஒரு கனவு கண்டேன் இதற்கு என்ன விளக்கம்?" என்று கேட்டார். இப்னு சீரின் (ரஹ்) அவர்கள், “நீ எதை படித்தாலும் மறந்து விடுவாய். எனவே, அல்லாஹ்விற்கு பயந்து, திருக்குர்ஆனை அதிகமாக ஓதி வருவீராக" அவர் தமது நிலை இப்படித்தான் இருக்கிறது. அதாவது, எதைப் படித்தாலும் உடனே மறந்து விடுகிறது என்று ஒப்புக்கொண்டார்.
இந்த நிகழ்வின் மூலம் இப்னு சீரின் (ரஹ்) அவர்கள் கூறுகின்ற விஷயம் என்னவென்றால், திருக்குர்ஆனை அதிகமதிகமாக ஓதி வந்தால் மறதி நிலை மாறும் என்பது கவனிக்கத்தக்கது.
இன்றைய காலத்தில் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் படித்ததை மறக்காமல் இருக்க என்ன ஓதவேண்டும் என்று கேட்கிறார்கள். அதற்கு திருக்குர்ஆனை அதிகம் ஓதி வந்தாலே போதுமானது என்று இந்த நிகழ்வின் மூலம் பதில் சொல்லப்பட்டிருக்கிறது.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர்களுள் ஒருவரான மௌலானா A.K.ஃபஸ்லுல் ஹக் அவர்கள் ஒருமுறை தில்லியிலிருந்து வங்க மெயில் என்ற இரயிலில் பயணிக்க தயாரானார். சில மணிநேரத்தில் அவர் பயணிக்கயிருந்த இரயில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுவிட்டது. மறுநாள் காலைப் பத்திரிகையில் வங்கப் பிரதமர் K.A.ஃபஸ்லுல் ஹக் இரயில் குண்டுவெடிப்பில் அகால மரணமடைந்தார் என்று செய்தி வெளியானது. இச்செய்தி வங்க தேச மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது. அன்று மதியம் 12-15 மணியளவில் வங்க வானொலியில் நம் பிரதமர் ஃபஸ்லுல் ஹக் அவர்கள் இன்று மாலை 3 மணியளவில் அசெம்பிளித் திடலில் நடக்கும் அவசர பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார் என்று மிகமிக ஆச்சரியமான ஒரு செய்தி ஒலிபரப்பப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
K.A.ஃபஸ்லுல் ஹக் பேசினார். இன்றைக்கு நடந்த இரயில் விபத்தில் நான் இறந்து விட்டதாக செய்தி வந்தது கண்டு நீங்கள் மட்டுமல்ல எனது மனைவியும் கூட துயரத்தில் மூழ்கிவிட்டார். உண்மை என்னவெனில் வங்க மெயில் என்ற இரயிலில் எனக்காக இறுக்கை முன் பதிவு செய்யப்பட்டது உண்மை தான். அதில் நான் ஏறி அமர்ந்து விட்டதும் உண்மை தான்.
ஆனால், இரயிலில் ஏறி உட்கார்ந்த நான், வழக்கப்படி நான் எடுத்து வருகிற குர்ஆனை எடுத்து வராததை கடைசி நேரத்தில் கவனித்தேன். பயணத்தில் குர்ஆன் ஓதும் பழக்கம் கொண்ட எனக்கு குர்ஆன் இல்லாமல் பயணம் செய்ய மனம் வரவில்லை. ஆகவே நான் கடைசி நேரத்தில் அந்த பயணத்தை ரத்து செய்து விட்டேன். இதனை அறியாத விஷமிகள் என்னைக் கொல்லும் வெறியில் பல அப்பாவி மக்களின் உயிர்களை பலி கொண்டு விட்டனர். அந்த அப்பாவி மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நேரத்தில் எனது எதிரிகளுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். அல்லாஹ் நாடினால் தவிர எந்த உயிரையும் யாரும் பறித்துவிட முடியாது. மேலும் முஸ்லிம்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். குர்ஆனை கெட்டியாகப் பற்றிக்கொள்ளுங்கள் காப்பாற்றப்படுவீர்கள். குர்ஆனுக்காக எனது பயணத்தை ரத்து செய்த காரணத்தால் வெடிகுண்டு விபத்திலிருந்து நான் காப்பாற்றப்பட்டேன் என்று கூறினார்.
பரிந்துரை
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لأَصْحَابِهِ ) குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதியவருக்கு அது மறுமை நாளில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். அறிவிப்பாளர்:- அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1470
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن شَفَّعَ لَهُ القرانُ يومَ القِيَامَةِفَقَد نَجَا ) "யாருக்கு மறுமை நாளில் திருக்குர்ஆன் பரிந்துரை செய்கிறதோ அவர் (மறுமையின் வேதனைகளிலிருந்து) வெற்றி பெற்றவராவார். நூல்:- ஷாத்திபிய்யி
உதவி ஒத்தாசைக்கு ஆளில்லாத மறுமை நாளின் விசாரணை மன்றத்தில் குர்ஆன் மனிதனுக்கு பரிந்துரை செய்ய முன் வருவது முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாகும்.
பாடசாலைகள்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ أَفْضَلَكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ ) குர்ஆனைத் தாமும் கற்றுப் பிறருக்கும் அதை கற்றுக் கொடுத்தவரே உங்களில் சிறந்தவர். அறிவிப்பாளர்:- உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5028, இப்னுமாஜா-212
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يا أبا هريرة تَعَلَّمَ القرآنَ وَعَلِّمْهُ الناسَ ولا تَزالُ كذلك حَتَّي يَاْتِيكَ الموتُ فإنه إن اَتَاكَ المَوتُ وَاَنت كذلك حَجَّةُ الملاءمةُ كما تَحَجَّ المؤمنونَ اِلَي بَيتِ اللهِ الحَرامِ ) அபூஹுரைரா (ரலி) அவர்களே! நீர் குர்ஆனை கற்றுக்கொண்டு பிறருக்கும் கற்றுக்கொடுப்பீராக! மரணம் உம்மை வந்தடையும் வரை இச்செயலை தொடருவீராக! அவ்விதமாக நீர் திகழும்போது உம்மை மரணம் வந்தடைந்தால், இறைநம்பிக்கையாளர்கள் இறை இல்லமான கஅபாவை நோக்கி வருவதுபோல் வானவர்கள் உமது மண்ணறையை நோக்கி வருவார்கள். நூல்:- ஷாத்திபிய்யி
சுஃப்யானுஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் அறப்போருக்கு செல்வதைவிட பயனுள்ள செயலாக குர்ஆன் கற்பிப்பதைக் கூறினார்கள். நூல்:- ஷாத்திபிய்யி
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ஆட்சி காலத்தில் மதீனாவில் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு குர்ஆனைப் போதிப்பதற்காக உருவாக்கப்பட்ட மக்தப் பாடசாலைகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு 15 திர்ஹம்கள் ஊதியமாக வழங்கப்பட்டது. நூல்:- அல்ஃபாரூக்
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ஆட்சி காலத்தில் கிராமத்தில் உள்ளவர்களுக்கு வலுக்கட்டாயமாக குர்ஆன் கற்றுக் கொடுக்கப்பட்டது. அபூ சுஃப்யான் என்பவர் தலைமையில் ஒருசிலர் பணிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களின் வேலையே கிராமங்கள் தோறும் வலம் வர வேண்டும். கண்ணில் பட்டவர்களை எல்லாம் கூப்பிட்டு குர்ஆனை ஓதுமாறு சொல்ல வேண்டும். யாரேனும் சரியான ஓதவில்லை என்றால், அவர்களுக்குத் தண்டனை அளிக்க வேண்டும். நூல்:- அல்இசாபா ஃபீ அஹ்வாலிஸ் ஸஹாபா, அல்ஃபாரூக்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ تَعَلَّمَ آيَةً مِن كِتَابِ اللهِ اِسْتَقبَلَتْهُ يَومَ القِيَامَةِ تَضْحَكُ فِي وَجهِهِ ) இறைவேதத்திலிருந்து ஒரு வசனத்தை கற்றுக்கொள்பவரை அவ்வசனம் புன்னகை பூத்த முகத்துடன் மறுமை நாளில் வரவேற்கும். அறிவிப்பாளர்:- உமாமா (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, மஜ்மஉஸ் ஸவாயித்
மக்தப் எனும் குர்ஆன் பாடசாலையிலேயே தஜ்வீத் முறைப்படி ஓதுவதற்கான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். தஜ்வீத் முறையில் குர்ஆன் ஓதுவதே ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும்.
குர்ஆன் பாடசாலையில் குறைவான சம்பளத்தில் யாரையாவது நியமிப்பதைவிட நிறைவான சம்பளத்தில் தஜ்வீத் முறைப்படி குர்ஆன் ஓதுவதில் தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதே நிர்வாகிகள் பொறுப்பாகும்.
பெற்றோரின் கவனத்திற்கு
அப்துல்லாஹ் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ( يَا رَسُولَ اللَّهِ، مَا أَجْرُ مَنْ عَلَّمَ وَلَدَهُ كِتَابَ اللَّهِ؟ ) “நாயகமே! தன் பிள்ளைகளுக்கு குர்ஆனைக் கற்றுத் தந்தவருக்கு என்ன கூலி? என்று வினவினார். அதற்கு அண்ணலார், ( الْقُرْآنُ كَلامُ اللَّهِ لا غَايَةَ لَهُ ) “குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் அதற்கு முடிவில்லை” என்றார்கள். பிறகு அண்ணலார் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் இது பற்றி வினவினார்கள்.
அதற்கு அல்லாஹ், ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் சொல்லியனுப்பினான். ( مَنْ عَلَّمَ وَلَدَهُ الْقُرْآنَ، فَكَأَنَّهُ حَجَّ الْبَيْتَ عَشَرَةَ آلافِ حَجَّةٍ، وَكَأَنَّمَا اعْتَمَرَ عَشَرَةَ آلافِ عُمْرَةٍ، وَكَأَنَّمَا غَزَا عَشَرَةَ آلافِ غَزْوَةٍ، وَكَأَنَّمَا أَطْعَمَ عَشَرَةَ آلافِ مُسْلِمٍ جَائِعٍ، وَكَأَنَّمَا كَسَا عَشَرَةَ آلافِ مُسْلِمٍ عَارٍ، وَيُكْتَبُ لَهُ بِكُلِّ حَرْفٍ وَيُثْقِلَ مِيْزَانَهُ ) தன் பிள்ளைகளுக்கு குர்ஆனை கற்றுக்கொடுத்தவர் 10,000 முறை ஹஜ் செய்தவரைப் போன்றும், 10,000 முறை உம்ரா செய்தவரைப் போன்றும், 10,000 முறை அறப்போரில் கலந்து கொண்டவரைப் போன்றும், பசித்த முஸ்லிம்களில் 10,000 பேருக்கு உணவளித்தவரைப் போன்றும், ஆடையில்லாத முஸ்லிம்களில் 10,000 பேருக்கு ஆடை அணிவித்தவரைப் போன்றும் ஆவார். மேலும் மறுமை நாளில் அவருடைய (நன்மை தீமைகள் நிறுக்கப்படும்) தராசில் நன்மையின் தட்டு கனமானதாக இருக்கும். நூல்:- ஃபளாயிலுல் குர்ஆன் வதிலாவதுஹு லிர்ராஸீ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். குர்ஆனையும், நல்லொழுக்கத்தையும், மார்க்கக் கல்வியையும், கடமைகளையும் கற்றுக்கொடுக்காத தந்தையர்களுக்கு நரக ஓடை தான்.
பெற்றோர் தம் பிள்ளைகள் உலகக் கல்வி பயில பல்லாயிரக்கணக்கில் செலவளிப்பதைப் போன்று அல்லது அதில் சிறிதளவாவது குர்ஆன் பயில மற்றும் அதன் விளக்கங்களை அறிந்து கொள்ள செலவளிக்க வேண்டும்.
மனனமிட வேண்டும்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الَّذِي لَيْسَ فِي جَوْفِهِ شَيْءٌ مِنَ الْقُرْآنِ كَالْبَيْتِ الْخَرِبِ ) எவரது உள்ளத்தில் குர்ஆனின் எந்தப் பகுதியும் மனனமாக இல்லையோ, அந்த உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றதாகும். (குடியிருக்கும் மனிதர்களைக் கொண்டு வீடு அழகும் செழிப்பும் பெறுவதுப்போல் குர்ஆனை மனனம் செய்வதில் உள்ளத்தின் அழகும் செழிப்பும் உள்ளது.) அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2913
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَاسْتَذْكِرُوا الْقُرْآنَ فَإِنَّهُ أَشَدُّ تَفَصِّيًا مِنْ صُدُورِ الرِّجَالِ مِنَ النَّعَمِ ) குர்ஆனைத் தொடர்ந்து (ஓதி) நினைவுப்படுத்தி வாருங்கள். ஏனெனில் ஒட்டகங்களைவிடவும் வேகமாக மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து குர்ஆன் தப்பக்கூடியதாகும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5032
மௌலானா கலீல் அஹ்மது கீரனூரீ (ரஹ்) அவர்கள் கூறுவார்கள். குர்ஆனிலுள்ள கடைசி பத்து அத்தியாயங்கள் மட்டும் அருளப்பட்டிருக்காவிட்டால் நம்மில் பலரும் தொழுகையாளியாக இருந்திருக்க மாட்டார்கள். காரணம் குர்ஆனில் மிகச் சிறிய அத்தியாயங்களான இவைகளை மட்டுமே மனனமிட்டு வைத்துள்ளனர். குர்ஆனிலிருந்து இவை மட்டும் தனக்கு போதுமென்று எண்ணுகின்றனர். இது தவறான எண்ணமாகும்.
குர்ஆனை அதிகமதிகம் மனனமிட்டு மனதில் பதிய வைக்க முயற்சிக்க வேண்டும். நமது நினைவாற்றலை எத்தனையோ உலகலாவிய காரியங்களுக்கும், தேவையற்றவைகளுக்கும் பயன்படுத்துகின்றோம். அந்த அபாரமான நினைவாற்றலை குர்ஆனுக்காக பயன்படுத்துவதின் மூலம் இறையன்பைப் பெறக்கூடுமல்லவா?
ரமளான் மாதத்தில்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒவ்வொரு வருடமும் ஒருமுறை (வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அதுவரை அருளப்பட்ட) குர்ஆன் வசனங்களை அண்ணல் நபி (அலை) அவர்களுக்கு (மொத்தமாக) ஓதிக்காட்டுவது வழக்கம். அண்ணலார் இறந்தபோன வருடத்தில் இரண்டு முறை அண்ணலாருக்கு (ஜிப்ரீல்) ஓதிக்காட்டினார்கள். அண்ணலார் ஒவ்வொரு வருடமும் (ரமளான் மாதத்தின் இறுதிப்) பத்து நாட்கள் இஃதிகாஃப் மேற்கொள்வது வழக்கம். அண்ணலார் இறந்த வருடம், (ரமளானில்) இருபது நாட்கள் இஃதிகாஃப் மேற்கொண்டார்கள். நூல்:- புகாரீ-4998
ஒவ்வொரு வருட ரமளான் மாதத்திலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, அந்த வருடம் ரமளான் வரை அருளப்பட்ட வசனங்களையும், அத்தியாயத்தையும் வரிசைப்படி அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு ஓதிக்காட்டுவார்கள். பின்னர் அண்ணலாரையும் வரிசைப்படி ஓதச் செய்து செவியுற்று விட்டுச் செல்வார்கள்.
இவ்வாறு வருடம் தோறும் நிகழ்ந்தது. இறுதி வருடம் ரமளான் மாதத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் குர்ஆனை இரண்டு முறை அண்ணலாருக்கு ஓதிக்காட்டியவுடன் அண்ணலாரையும் இரண்டு முறை ஓதச் செய்து செவியுற்றுவிட்டுச் சென்றார்கள். இவ்வாறு குர்ஆன் பாடம் சொல்லி, பாடம் கேட்கும்போது அண்ணலார் பத்து நாட்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பார்கள். கடைசி வருடம் இருமுறை பாடம் சொல்லி இருமுறை பாடம் கேட்டதால் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.
இதன் அடிப்படையில் தான் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ரமளான் மாத தராவீஹ் தொழுகையில் முழு குர்ஆனையும் ஓதி தொழ வைப்பதற்கு ஒரு இமாமை நியமித்தார்கள். அப்போதாவது முழு குர்ஆனையும் ஓதி தொழும் பாக்கியம் மக்களுக்கு கிடைக்கட்டும்! என்பதே ஜனாதிபதி அவர்களின் தொலைநோக்கு சிந்தனை.
ரமளான் மாதம் என்பது குர்ஆனுடைய மாதமாகும். எனவேதான் வருடந்தோறும் ரமளான் மாதத்தில் குர்ஆனை ஓதுவதையும், கேட்பதையும் முஸ்லிம் சமுதாயத்தின் மீது ஜனாதிபதி உமர் (ரலி) அவசியமாக்கினார்கள்.
இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு ஆண்டில் இரண்டு முறை குர்ஆன் ஓதி முடிப்பது அதற்குரிய கடமையாகும்.
குர்ஆனின் பொருள் அறியாமல் வெறுமனே அதிகம் ஓதுவதைவிட, குறைவாக ஓதினாலும் பொருள் அறிந்து ஓதுவதே மிகவும் சிறந்தது. தினசரி சில பக்கங்களாவது பொருளுடன் வாசித்து பழக வேண்டும். ஆண்டிற்கு ஒருமுறையாவது முழு குர்ஆனையும் பொருளுடன் வாசிக்க முயற்சிக்க வேண்டும். அதை ரமளானில் பயன்படுத்திக் கொண்டால் மிக நன்று.
முன்னோர்கள்
நபித்தோழர்களில் அதிகமானவர்கள் பார்த்து குர்ஆன் ஓதுவதையே விரும்புவார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் குர்ஆன் அதிகம் ஓதும் பழக்கமுடையவராக இருந்ததால் அன்னாருக்கு இரண்டு குர்ஆன் பிரதிகள் முழுமையாக கிழிந்து போயின.
உஸ்மான் (ரலி) அவர்கள் ரமளானின் இரவில் முற்பகுதியில் மட்டும் சிறிது நேரம் உறங்குவார்கள். மீதமுள்ள நேரத்தில் நபில் தொழுகையில் ஈடுபட்டு திருக்குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்துவிடுவார்கள்.
இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் ரமளான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் இரவில் ஒரு குர்ஆனும், பகலில் ஒரு குர்ஆனும் ஓதி முடிப்பார்கள்.
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் ரமளான் மாதத்தில் நபிமொழிகளை படிப்பதையும், கல்வி சபைக்கு சென்று வருவதையும் விட்டு விட்டு குர்ஆன் ஓதுவதிலேயே மூழ்கிப்போவார்கள்.
இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் சில சமயங்களில் இஷாவுக்குப் பிறகு குர்ஆனை விரித்து வைத்து ஓத ஆரம்பித்தால் சுபுஹுத் தொழுகையின்போது தான் மூடுவார்கள்.
சுஃப்யானுஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் அனைத்து வழிபாடுகளையும்விட குர்ஆனை அதிகமாக ஓதுவதில் ஈடுபடுவார்கள்.
குர்ஆன் ஓதத் தெரியாது என்பதால் குர்ஆனின் தொடர்பின்றி வாழ அனுமதியில்லை. நமக்கு தெரியாத எத்தனையோ விஷயங்களை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். அதுபோல் குர்ஆனையும் கற்றுக்கொள்ள முடிந்தவரை முயற்சிக்க வேண்டும். முடியாதபட்சத்தில் பிறர் ஓதக் கேட்பதையோ அல்லது நவீன சாதனங்கள் மூலமாக ஓதக் கேட்பதையோ அவசியமாக்கிக் கொள்ள வேண்டும்.
விண்ணிலிருக்கும் அல்லாஹ்வுக்கும் மண்ணிலிருந்த அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தியது இந்த குர்ஆன் தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். விண்ணுக்கும் மண்ணுக்கும் தொடர்பு ஏற்படுத்தகூடிய இந்த குர்ஆனை நாம் மிகுந்த மரியாதையுடன் ஓத வேண்டும்.
குர்ஆனை முறையாக கற்றுக்கொள்வதற்குரிய ஆற்றலை இறைவன் நமக்குத் தந்தருள்வானாக! மேலும் அனுதினமும் குர்ஆனை சீரான முறையில் ஓதி இறையன்பைப் பெற அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்!
மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை, செல்-9840535951