Search This Blog

Saturday, 27 August 2022

மூடநம்பிக்கைகளுக்கு ஒரு முடிவுரை

 

மூடநம்பிக்கைகளுக்கு ஒரு முடிவுரை

 

قال الله تعالي : وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ

قال رسول الله صلي الله عليه وسلم : لاَ عَدْوَى وَلاَ صَفَرَ وَلاَ هَامَةَ

 

(நான், ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இஸ்லாமிய மாத இதழுக்கு எழுதிய கட்டுரை இது.)

 

உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் எல்லா மதங்களிலும் சமயங்களிலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல காரியங்கள் நடந்து வருகின்றன. அறியாமையின் காரணமாக அவர்களின் சில காரியங்கள் நகைப்புக்கு இடம் தருகிறது. இத்தகைய பகுத்தறிவுக்கு ஒவ்வாத அறியாமையால் செய்யும் காரியங்களை உலகில் முதன் முதலில் ஆழக் குழி தோண்டி புதைத்தது இஸ்லாம் தான். அறிவுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் ஒன்றுதான் என்று உலக அறிஞர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டு விட்டனர்.

 

இன்றைய நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிகர வழிகளில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் மனித சமுதாயம் மூடநம்பிக்கைகளை சுமந்து கொண்டு திரிகின்றார்களே அதனால் மனித சமுதாயத்திற்கு கிஞ்சிற்றும் பயன் விளையுமா? என்றால் நிச்சயமாக இல்லை.

 

وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ

அல்லாஹ் உங்களுக்கு யாதொரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதனை நீக்க அவனைத் தவிர மற்றொருவராலும் முடியாது. அவன் உங்களுக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனுடைய அக்கருணையைத் தடை செய்ய எவராலும் முடியாது.     திருக்குர்ஆன்:-  10:107


எந்த இலக்கையும் அடைவதற்கு நமக்கு வேண்டியது தன்னம்பிக்கை கலந்த இறைநம்பிக்கையும், கடின உழைப்பும் தான். ஏனெனில், மூடநம்பிக்கை ஒருபோதும் நமக்கு துணையாக இருக்கமுடியாது. இஸ்லாம் அரபு நாட்டில் வேறொன்றுவதற்கு முன்னர் மூடநம்பிக்கைகளின் புகலிடமாக அந்நாடு திகழ்ந்தது. அவர்களின் மூடநம்பிக்கைகளின் சிலவற்றைப் பார்ப்போம் பாருங்கள்.

 

அந்தக் காலத்தில்

 

அரபு இணைவைப்பாளர்கள் வெளியூர் பிரயாணத்தை மேற்கொண்டால் பாலைவனத்தில் கற்கள் தென்படுவது அரிது என்பதால், போகும்போது நான்கு கற்களை எடுத்துச் செல்வார்கள். அவற்றில் மூன்றை அடுப்புக்காக பயன்படுத்திவிட்டு, மற்றொன்றை வைத்து வணங்குவார்கள். சில சமயம் நான்கு கற்கள் எடுத்துச் செல்லாவிட்டால் அடுப்புக்காக பயன்படுத்தப்பட்ட கற்களில் ஒன்றையே தெய்வமாக நினைத்து வழிபடுவார்கள். 


அரபகத்தில் மழைப் பஞ்சம் ஏற்படும்போது கிராமத்து அரபியர் மாட்டு வாலில் நெருப்பைப் பற்றவைத்துவிட்டு அதை ஓட விடுவார்கள். மாட்டின் கதறல் சத்தம் மழையைத் தருவிக்கும் என நம்பினார்கள்.

 

ஒருவன் இறந்துவிட்டால் அவன் அடக்கப்பட்ட இடத்தில் ஒரு கொழுத்த ஒட்டகத்தைக் கட்டி வைப்பார்கள். அவ்வொட்டகம் அவனுக்கே மறு உலகத்தில் வாகனமாக பயன்படும் என்று நம்பி வந்தார்கள். பாவம் அவ்வொட்டகம் உணவு, தண்ணீர் இல்லாமல் பசியால் துடித்தே இறந்துபோகும்.

 

மூடநம்பிக்கை எந்த உருவில் தலையெடுத்தாலும் அதை முளையிலேயே கிள்ளி எறிவதற்கு பெரும் முயற்சி எடுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதிப் பேருரையின்போது ( أَلَا كُلُّ شَيْءٍ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ تَحْتَ قَدَمَيَّ مَوْضُوعٌ ) "அறிக! அறியாமைக் காலத்து அனைத்து செயல்களையும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டவை ஆகும்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-2334

 

ஆகாத மாதங்களா?

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( لاَ عَدْوَى وَلاَ صَفَرَ وَلاَ هَامَةَ ) "தொற்று நோய் கிடையாது. ஸஃபர் (பீடை) என்பது கிடையாது. ஆந்தையால் சகுனம் பார்ப்பது கிடையாது" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5717, முஸ்லிம்- 4464

 

ஸஃபர் மாதம் வந்துவிட்டால் சோதனைகளும் குழப்பங்களும் அதிகமாகிவிடும் என நம்பி அதை பீடை பிடித்த மாதமாகவும், ஒரு வீட்டில் ஆந்தை வந்து உட்கார்ந்தால் அந்த வீட்டில் உள்ள ஒருவர் இறந்து விடுவார் என்றும் இறந்துபோனவரின் எலும்புகள் ஆந்தையாக மாறி பறந்து கொண்டிருக்கும் என்றும் அன்றைய மக்கள் கருதி வந்தனர் இவை அனைத்தும் மூடநம்பிக்கையின் வகையாகும் என்பதையே இந்த நபிமொழி கூறுகிறது.


குறிப்பிட்ட இந்த நோய் வந்துவிட்டால் எந்த மருந்துகளும் பலன் தராது. நிச்சயமாக இறந்து விடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கை அறியாமைக் காலத்தில் இருந்தது. அதற்கு ஸஃபர் என்று சொல்லப்படும். எனவே, அதைத்தான் நபியவர்கள் கூடாது என இங்கே கண்டிக்கிறார்கள் என்று இந்த நபிமொழிக்கு சில விரிவுரையாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

 

அரபு நாட்டின் பத்தாவது மாதமான ஷவ்வால் மாதத்தில் மணமுடிப்பதை அறியாமைக் கால மக்கள் வெறுத்து வந்தனர். முற்காலத்தில் ஒரு தடவை ஷவ்வால் மாதத்தில் அவர்களுக்கிடையே கொள்ளை நோய் பரவியதாம். இதனால் அந்த மாதத்தில் மணமுடிப்பதை துர்குறியாக அவர்கள் கருதினர். அதுமட்டுமின்றி "ஷவ்வால்" எனும் சொல்லுக்கு நீங்குதல் என்றொரு பொருள் உண்டு. அந்த மாதத்தில் செய்யப்படும் திருமணம் நீங்கிவிடும் என்றும் அவர்கள் அஞ்சினர்.

 

ஆயிஷா (ரலி) அவர்கள், "எனக்கு ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் நடைபெற்றது. அம்மாதத்திலேயே கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் என்னுடன் தாம்பத்திய உறவை தொடங்கினார்கள். நபியவர்களுடன் நான் நன்றாகவே வாழ்ந்தேன்" என்று சுட்டிக்காட்டினார்கள். நூல்:- முஸ்லிம்-2782, ஃபத்ஹுல் முல்ஹிம்


இன்றைக்கு பல திருமணங்கள் ஷவ்வால் மாதத்தில் தான் நடைபெறுகிறது. ஷவ்வால் மாதம் என்றாலே திருமண சீசனாக ஆகிவிட்டது என்பது கவனிக்கத்தக்கது.

 

இறை சான்றுகள்

 

ஒருவரின் மரணமும், சூரிய சந்திர கிரகணங்களும் ஒன்று சேர்ந்தால் அது எந்த முக்கியத்துவத்தையும் காட்ட மாட்டாது. ஒரு பெரிய மனிதரின் இறப்புக்கு தான் கிரகணம் ஏற்பட்டிருக்கிறது என்று எண்ணுவது அறியாமைக்கால நம்பிக்கையாகும். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இனிய மகன் இப்ராஹீம் (ரலி) அவர்கள் மரணமடைந்த நாளில் சூரிய கிரகணமும் ஏற்பட்டது. அப்போது இப்ராஹீமின் இறப்புக்காகவே கிரகணம் ஏற்பட்டது என்று மக்கள் பேசிக்கொண்டனர். இதைச் செவியுற்ற நபியவர்கள் அதை கண்டித்து உரையாற்றினார்கள்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَيْسَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ مِنَ النَّاسِ وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ فَإِذَا رَأَيْتُمُوهُ فَقُومُوا فَصَلُّوا ) மனிதர்களில் எவரது இறப்புக்காகவும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. மாறாக அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றாகும். ஆகவே, கிரகணத்தை நீங்கள் கண்டால் தொழுங்கள். அறிவிப்பாளர்:- அபூ மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:-முஸ்லிம்-1664

 

வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணுபவரும், இறைவனை வாழ்த்தி போற்றும் மனம் உள்ளவரும் ஒருபோதும் மூடநம்பிக்கையை ஏற்றுக்கொள்ளமாட்டார். சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று எண்ணுபவருக்கும், பிறருக்கு தேவைப்படுகின்ற உதவிகளை செய்யவேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் கொண்டவருக்கும் காலம் பார்த்து காரியம் செய்யும் எண்ணம் வரலாமா?

 

ஆதாரம் தேட வேண்டும்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் முதல் தொடங்கி, நபித்தோழர்கள், இமாம்கள், நல்லோர்கள் ஆகிய அனைவரும் மூடநம்பிக்கையை முற்றாகக் கலைந்திட தங்களால் முடிந்த வரையிலும் குரல் கொடுத்து செயல்படுத்திவிட்டு போயிருக்கிறார்கள். ஆனால், மூடநம்பிக்கைகள் இன்றும் நம்மை விட்டு ஒழிந்தபாடாக தெரியவில்லை. அதற்கு ஒரு முடிவுரை எழுதவும் முடியவில்லை. தகர்க்கப்பட வேண்டிய மூடநம்பிக்கைகளையும், சடங்குகளையும் பின்னணியாக கொண்டு எண்ணற்ற துர்ச்சகுன நம்பிக்கைகள் இன்றைய முஸ்லிம்களிடையே மலிந்து காணப்படுகின்றன.

 

ஏனைய சமூகத்தினர்களோடு நாம் இணைந்து வாழ்வதால் இவ்வித நம்பிக்கைகள் நம்மிடையே வேரூன்றி இருக்கலாம். ஷைத்தான் மூடநம்பிக்கைகளில் சிலவற்றை மக்களில் சிலரிடம் மார்க்கமாக காண்பிக்கிறான். மார்க்கம் சம்பந்தமான எந்த ஒரு செயலுக்கும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் ஏதேனும் ஆதாரம் உண்டா? அல்லது நபித்தோழர்கள், இமாம்கள், மார்க்க மேதைகள் ஆகியோரின் கூற்றுகளில் ஏதேனும் ஆதாரம் உண்டா? என்று ஆராய வேண்டும். இவற்றில் எதிலும் ஆதாரம் இல்லையெனில் இது ஷைத்தானுடைய தூண்டுதல் என்று முடிவுக்கு வந்து அச்செயலை விட்டும் ஒதுங்கிவிட வேண்டும்.

 

குறை கூறலாமா?

 

ஆடி மாதத்தில் சகோதர சமயத்தவர்கள் ஆகாது என்று எண்ணுவது போல் மார்க்கம் ஞானம் இல்லாத முஸ்லிம்களில் சிலர், ஸஃபர் மாதத்தை ஆகாது என்று குறை கூறி அறியாமைக் கால மக்களை பின்பற்றுகின்றனர்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸஃபர் மாதத்தில் தான் மரண நோய் வந்ததாம். இம்மாதம் அவர்களிடம் வந்த நோய் அவர்களின் உயிரை எடுத்துக்கொண்டு சென்றதாம். ஆகவே, இம்மாதத்தில் திருமணம் செய்தல், புதிய தொழில் தொடங்குதல், புதுமனை புகுதல் போன்ற நற்காரியங்கள் செய்வதை பெரும் தீங்காகவே நினைக்கின்றனர். நபியவர்கள் மரணம் அடைந்தது "ரபிஉல் அவ்வல்" மாதம் தான். இதனால் இந்த மாதமும் பீடை மாதம் என்று கூறி ஒதுக்கிவிட முடியுமா?

 

ஸஃபர் மாதத்தில் தான் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் கதீஜா (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது. நபியவர்கள் கதீஜா (ரலி) அவர்கள் மூலம் ஆறு பிள்ளைகளுக்கு தந்தையாகத் திகழ்ந்து, பெருவாழ்வு வாழ்ந்தார்கள்.


ஸஃபர் மாதத்தில் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தனது அன்பு மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை திருமணம் முடித்துக் கொடுத்தார்கள் என்ற வரலாற்றை அறிய வேண்டாமா?


ஸஃபர் மாதத்தை துர்ச்சகுனமாகக் கருதி நம்மில் பலரும் திருமணம் வைப்பதில்லை. முஸ்லிம்களின் பல திருமண மண்டபங்கள் காலியாக கிடக்கிறது. எந்தளவுக்கென்றால் இந்த மாதத்தில் எங்கள் மண்டபத்தின் வாடகையை பாதியாகக் குறைத்துக்கொள்கிறோம்; வாருங்கள் என்று அழைக்கின்றனர். இந்த மூடநம்பிக்கை சென்னை போன்ற பெருநகரங்களில் நடக்கிறது. 

 

மேலும் இம்மாதத்தில் வரும் கடைசி புதன்கிழமைக்கு "ஒடுக்கத்துப் புதன்" என்ற பெயரிட்டு அந்நாளில் எண்ணெய் தேய்த்து குளித்து, மா இலைகளில் ஏதோ எழுதிக் குடித்துவிட்டு, மாலை நேரத்தில் குடும்பத்தோடு வெளியில் சென்று பச்சைகளை மிதித்தால் தான் பீடை நீங்கும் என்ற மூடநம்பிக்கையை மார்க்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

 

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்பார்களே! ஆனால், இந்த புதனுக்கு மட்டும் இந்த பாக்கியம் இல்லையோ!

 

ஆகவே, நபியே! அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய இறைவன் என்று நீங்கள் கூறுங்கள். இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும். திருக்குர்ஆன்:- 9:51

 

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் (ஆஷூரா) அன்று ஹுசைன் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்காக அந்நாளை துக்க தினமாக அனுஷ்டிப்பதோ, தம்முடைய உடலில் இரத்தக்களறி ஏற்படுத்துவதோ, நெருப்பு மிதிப்பதோ, பஞ்ச தூக்குவதோ, வீண் விளையாட்டுகளில் ஈடுபடுவதோ இவை அனைத்தும் மார்க்கத்திற்கு முரணான செயலாகும்.

 

பெண்கள் பலிகடாய்

 

ஹிஜ்ரி இருபதாம் ஆண்டு எகிப்து தேசத்தின் கவர்னர் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் கிறிஸ்தவ தலைவர்கள் ஒரு பிரச்சனையை முறையிட்டனர். எகிப்தின் பொருளாதாரம் பெருமளவு நைல் நதியையே சார்ந்துள்ளது. நதியை திருப்திப்படுத்துவதற்காகவும், அதன் நீர் வற்றாமல் இருக்கவும் அங்கு மதச் சம்பிராதயப்படி ஆண்டுதோறும் நைல் நதிக்கு ஒரு மனிதப்பலி கொடுக்கப்படும். அதனால் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் 12ஆம் நாள் இரவு ஒரு கன்னிப் பெண்ணை தேர்ந்தெடுப்பார்கள். மணப்பெண் போல் அவளை அலங்கரித்து அதன்பின் அவளை அந்த நதியில் வீசி எறிந்து விடுவார்கள். இப்படி செய்யவில்லையெனில் அந்த நதி வற்றி காய்ந்துவிடும் என்று கவர்னரிடம் அந்த கிறிஸ்துவ குழுவினர் கூறினர். கவர்னர் அவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி "இந்த மூடநம்பிக்கையை நிச்சயமாக நீங்கள் விட்டுவிட வேண்டும். நான் ஒருபோதும் அதற்கு அனுமதிக்க மாட்டேன்" என்று கூறினார்கள் நூல்:- கராமத்தே சஹாபா

 

இந்த ஆண்டு பழிக்கு, எவரை தேர்ந்தெடுக்கப் போகிறார்களோ?... ஒருவேளை அது நாமாக இருக்குமோ?... என்று மரண பயத்தில் அணு அணுவாக தவித்துக் கொண்டிருந்த எகிப்தியை கன்னிப்பெண்கள் அன்றுதான் விடுதலை பெருமூச்சு விட்டனர்.

 

இஸ்லாம் அறியாமையால் செய்யப்படும் சடங்குகளை அழிக்கவே இவ்வுலகத்தில் தோன்றியது. அறியாமைக்கால வணக்க வழிபாடுகளை கொண்ட கலாச்சாரத்திலும் மனிதப் பலிகள் சர்வ சாதாரணம்.

 

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் இது போன்ற மனிதப் பலிகளில் பெரும்பாலான இலக்கு சிறுமிகளும், பெண்களும் தான். அவர்கள் ஆழமான நதிகளில் உயிரோடு வீசி எறியப்பட்டார்கள். கட்டிடங்கள் உறுதியாக நிற்பதற்காக அவைகளின் அடியில் உயிரோடு புதைக்கப்படுகிறார்கள்.

 

மந்திர வாத்தியங்கள் முழங்கப்பட்டு, தெரு முச்சந்தியில் மக்கள் புடைசூழ இரண்டு கழுதைகளுக்கு திருமணம் முடித்து வைத்தால் மழை வருமாம். நம் நாட்டின் பட்டிதொட்டிகள் மாத்திரமல்ல; படித்தோர் வாழும் பட்டிணங்களிலும் இதுபோன்ற திருமணம் பிரபல்யம். நம் நாட்டின் சில பகுதிகளில் பெண்கள் ஆடையின்றி வழிபடுவதாலும் வேப்பிலை கொத்துக்களை அணிந்து வலம் வந்தாலும் மழை வரும் என்பது மனித அறிவை புறம்தள்ளும் ஐதீகமாகும்.

 

மழை பெய்வதற்காக பெண்கள் நிர்வாண நிலையில் வயல் உழும் நூதன பிரார்த்தனை உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜலான், ஜான்சி, லலித்பூர், பாண்டா சித்ர கூட்மஹோபா, ஹமீர்பூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக இந்த பிரார்த்தனை நடந்துவருகிறது.   நன்றி: தினத்தந்தி 6.7.2004

 

மலிந்துவிட்ட சடங்குகள்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( لَيْسَ مِنَّا مَنْ تَطَيَّرَ وَلَا مَنْ تُطُيِّرَ لَهُ ) "சகுனம் பார்ப்பவனும் யாருக்காக சகுனம் பார்க்கப்படுகிறதோ அவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் நூல்:- பஸ்ஸார், தப்ரானீ

 

திருக்குர்ஆன் விரிவுரையாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நாங்கள் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது பறவை ஒன்று கத்திக்கொண்டு சென்றது. இதை செவியுற்ற எங்களில் ஒருவர், ( خَيرُ خَيرُ ) "(பறவையை கத்துவது) நல்லது நல்லது" என்றார். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கோபமாக சற்றும் தாமதிக்காது, எவரது உள்ளத்தில் இக்கருத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில், ( لَا خَيرَ وَلَا شَرَّ ) "(பறவை கத்துவதால்) எந்த நன்மையுமில்லை என்ற தீமையுமில்லை" என்று கூறினார்கள்.

 

சகுனம் பார்ப்பது, மாதங்களில் நாட்கள் நேரங்களில் நல்லது கெட்டது எனப் பிரிப்பது, இராகு காலம் எமகண்டம் மரணயோகம் இவைகளை நம்புவது, அம்மை நோய்க்கும் மாரியாத்தாளுக்கும் சம்பந்தம் உண்டு என்று நம்புவது, சூரிய சந்திர கிரகணங்களின் போதும் இறந்தவருடைய சடலம் வீட்டில் இருக்கும் போதும் எவரும் சாப்பிடக்கூடாது என்று எண்ணுவதும், இடது கண் துடித்தால் அபசகுணம், உள்ளங்கை சொறிவு ஏற்பட்டால் பணம் வரும், பல்லி "கிட்கிட்" என்று கத்தினாலும் அது தவறி மேலே விழுந்தாலும் பயம். அது நல்லதா கெட்டதா பார்த்தாக வேண்டும் என்ற பரிதவிப்பும், புது வீடு புகும்போது மாடு வீட்டில் வந்து மிதித்தால் புண்ணியம், விளக்கு வைத்த பிறகு சில பொருட்களை கொடுத்து உதவுவது ஆகாது என்று எண்ணுவதும், விளக்கு வைத்த பிறகு கடையிலும் கடன் கொடுக்கக்கூடாது. அப்படி கொடுத்தால் தரித்திரம் வந்துவிடும் என்று எண்ணுவதும் மூடநம்பிக்கையின் வகைகளாகும். அதன் பட்டியல் இன்னும் மிக நீளமானது.

 

படித்து பட்டங்கள் பெற்றவர்கள்கூட நற்காரியங்கள் செய்வதற்கு நாள் நட்சத்திரம் பார்ப்பதில் சளைத்தவர்களல்லர். இவை அனைத்தும் இறைநம்பிக்கை எனும் கோட்டையை சிதலமடையச் செய்யும் காரியங்களாகும்.

 

"மர்ஹூம்" என்ற சொல் இறந்தவர்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டிய சொல் என்று எண்ணுகிறோம்; இது தவறாகும். உயிரோடு இருப்பவர்களுக்கும் இச்சொல்லை பயன்படுத்தலாம்; தவறில்லை; அபசகுனமில்லை. ஏனெனில் "மர்ஹூம்" என்ற சொல்லின் பொருள் "கிருபை செய்யப்பட்டவர்" என்பது ஆகும்.

 

நியூமராலஜி என்று சொல்லிக்கொண்டு பெற்றோர்கள் சூட்டிய அழகியப் பெயரை ஒதுக்கிவிட்டு தற்போது ஏதாவது ஒரு புதிய பெயரை தனக்குத் தானே சூட்டிக் கொள்வது. அதனால் அதிர்ஷ்டம் ஓடிவரும் என்று நம்பிக்கை கொள்வது இவை அனைத்தும் இறைநம்பிக்கைக்கு எதிரானது.

 

பயணம் புறப்படும்போது வாசலிலோ கல்லிலோ கால் அடிபடுவதும், கதவு அடைபடுவதும், பூனை குறுக்கே வருவதும், எவரும் காலி குடத்துடன் செல்வதும், விதவைகள் எதிரில் வந்து விடுவதும், இவை அனைத்தும் துர்ச்சகுனமாக கருதி காரியம் கெட்டுவிடும் என்று நம்புவதும் அறியாமையின் வெளிப்பாடே ஆகும்.

 

ஒரு காரியத்திற்கு புறப்படுபவரிடம் எங்கே போகிறீர்கள்? என்று கேள்வி கேட்கக்கூடாது. செவ்வாய்க்கிழமை பயணிக்கக்கூடாது. விழித்தெழுந்து வெளியே பார்க்கும்போது ஊனமுற்றவர்கள் கண்ணுக்குத் தெரியக்கூடாது. மைய்யத் வீட்டிற்கு சென்று விட்டு வந்தால் தீட்டு ஆகும். அதனால் குளிக்காமல் வீட்டிற்குள் நுழையக்கூடாது. வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால் அந்த வீட்டினர் அந்த வருடத்தின் பெருநாள்களை கொண்டாடக்கூடாது என்ற மூடநம்பிக்கைகளை இஸ்லாம் தடுத்துள்ளது.

 

ஒரு காரியத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் போது கழுதை மற்றும் நரியைக் கண்டால் அதிர்ஷ்டம் என்று நம்புவது, வாகனத்தின் முன்புறத்தில் எலுமிச்சம் பழம் காய்ந்த மிளகாய் கருப்புக் கயிறு போன்றவைகளை கட்டி தொங்கவிட்டால் வாகனம் நன்றாக ஓடும் என்று நம்புவது, ஆந்தை கத்தினால் மரணம் ஏற்படும் என்று நம்புவது, காகம் கரைந்தால் விருந்தாளிகள் வருவார்கள் என்று நம்புவது, இரவு நேரத்தில் கோடாங்கி என்பவன் ஏதேனும் விஷயம் குறித்து சொன்னால் அவன் சொன்னது போல் நிகழும் என்று நம்புவது இந்த கற்பனையான எண்ணங்களை இஸ்லாம் முற்றிலுமாக வெறுக்கிறது.

 

செவ்வாய்க்கிழமை பயணம் சென்றவர்கள் எவரும் வெற்றியுடன் திரும்பி வரவில்லையா? செவ்வாய்க்கிழமை எந்த வாகனமும் ஓடாது என்று அறிவித்தால் ஏற்றுக்கொள்வார்களா? நிறைகுடம் கொண்டு சென்றவர்களை எதிரில் பார்த்தவர்களில் எவருக்கும் நஷ்டம் ஏற்படவில்லையா? பஸ்ஸில் பயணிக்கும்போது பூனை குறுக்கே வந்தால் பஸ் புரண்டு விடுமா? அல்லது பூனை மரணிக்குமா? காகம் விருந்தாளிகளின் தூதுவரா? ஆந்தை இஸ்ராயீல் (அலை) அவர்களின் பங்காளியா? என்ன விசித்திரம்.

 

கணவனை இழந்த சோகம் ஒருபுறமும், அடுத்து தன் வாழ்க்கைப் பயணம் எப்படி அமையுமோ என்ற பயம் ஒருபுறமாய் ஏங்கித் தவிக்கும் விதவைப் பெண்ணுக்கு ஆறுதல் அளிக்காவிட்டாலும் பரவாயில்லை. "இந்த மூதேவியை பார்த்துவிட்டு போனால் எந்த காரியம் உருப்படும்?" என்று ஒரு பெண்ணை எதிர்வினையாய் பேசும் இழிகுணம் ஒழிக்கப்பட வேண்டும்.

 

எண் 13. இது எல்லோரும் அறிந்த ஒரு எண். ஆனால், அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இந்த எண்ணின் மேல் ஒரு "அபாய பயம்". அமெரிக்காவில் உயர்ந்த கட்டிடங்கள் வானைக் கிழித்துக்கொண்டு நிற்கும். ஆனால், இந்த உயர்ந்த கட்டிடங்களில் 13-வது தளம் மட்டும் தொலைந்து போயிருக்கும். அங்குள்ள அறைகளை வரிசைப்படுத்தினால் 10, 11, 12, 14, 15 என்று செல்லும். ஆனால்,13 மட்டும் காணாமல் போயிருக்கும்.

 

1990 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடந்தது. அந்த ஆய்வின் முடிவு சொல்வது என்னவெனில், 13 ஆம் தேதி (ஒவ்வொரு மாதமும்) அலுவலகத்திற்கு வராமல் இருத்தல், பயணத்தை ரத்து செய்தல், வியாபாரம் இல்லாமல் போன்ற காரணங்களால் 100 கோடி டாலருக்கு மேல் இழப்பு ஏற்படுகிறதாம்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( مَنْ رَدَّتْهُ الطِّيَرَةُ مِنْ حَاجَةٍ فَقَدْ أَشْرَكَ ) "துர்சகுணம் (என்றெண்ணி) ஒருவனை அவனது காரியத்தை விட்டு தடுத்துவிட்டால், அவன் இணைவைத்துவிட்டான்" என்று கூறினார்கள். இதை செவியுற்ற நபித்தோழர்கள், ( يَا رَسُولَ اللَّهِ مَا كَفَّارَةُ ذَلِكَ؟ )  "நாயகமே! அதற்கு பரிகாரம் என்ன?" என்று வினவினர். அப்போது நபியவர்கள், ( اَنْ يَقُولَ أَحَدُهُمْ اللَّهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرُكَ وَلَا طَيْرَ إِلَّا طَيْرُكَ وَلَا إِلَهَ غَيْرُكَ ) "இறைவா! உனது நன்மையைத் தவிர வேறு எந்த நன்மையும் இல்லை. உனது சகுனமின்றி வேறந்த சகுனமும் இல்லை. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று சொல்லி விடட்டும்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், தப்ரானீ, தஃப்சீர் இப்னு கஸீர் யூசுஃப் வசனம்-106 

 

அறிவியல் வேகமாக வளர்ந்து வரும் இக்காலத்திலேயே இப்படி என்றால், அறியாமைக் காலத்தில் மக்களிடையே எப்படிப்பட்ட மூடநம்பிக்கைகள் மண்டியிருந்திருக்கும் என்பதை நாம் யூகிக்கலாம்.

 

லாபம் - நஷ்டம், செழுமை - வறுமை, ஆவது - அழிவது, நன்மை - தீமை போன்ற அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன; ஒன்றும் மனிதன் நினைப்பதைப் போல் நடப்பதில்லை என்பதை மறந்து விடக்கூடாது என்ற இக்கருத்தையே தலைப்பில் காணும் திருவசனம் தெளிவுபடுத்துகிறது.

 

அல்லாஹ்வின்மீது முழுமையாக நம்பிக்கை வைப்பது மட்டுமே சகுனம் பார்க்கும் தீயச் செயலை விட்டும் நம்மை பாதுகாப்பதற்கான கேடயமாகும் என்பதை எண்ணி செயல்பட வேண்டும். இஸ்லாமிய வழிகாட்டலின் பிரகாரம் அழகிய வாழ்க்கை வாழ அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...