மத்ஹபுகள் மாண்பு அறிவோம்!
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا
الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ
இறைநம்பிக்கையாளர்களே அல்லாஹ்வுக்கும் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும், உங்களில் விஷயம் உடையவர்களுக்கும் கீழ்படியுங்கள் திருக்குர்ஆன்:- 4:59
இஸ்லாத்தில் இறைவன் ஒருவன், திருக்குர்ஆன் ஒன்று, இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் ஒருவர். இந்நிலையில் எங்கிருந்து வந்தன இந்த மத்ஹபுகள்? என்று சர்ச்சை செய்து கொண்டு இருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு காரியத்திலும் இது ஃபர்ளு, இது வாஜிப், இது சுன்னத், இது முஸ்தஹப் என்று வரையறுத்துக் கூறவில்லை. நபியவர்கள் ஒன்றைச் சொல்வார்கள். அல்லது செய்வார்கள். அதைப் பார்த்த நபித்தோழர்கள் அதை அப்படியே பின்பற்றி விட்டு சென்று விடுவார்கள். நபித்தோழர்கள், தமக்கு எழும் சந்தேகங்களை அவ்வபோது நபியவர்களிடம் கேட்டு தெளிவுபெற்றுக் கொள்வார்கள். எனவே, நபித்தோழர்கள் நபியவர்களின் காலத்தில் கொள்கை மற்றும் மார்க்கச் சட்டங்களில் தெளிவாக இருந்தனர்.
ஒரு நூற்றாண்டு கழிந்தபோது அனைத்தையும் பின்பற்றுவதில் தளர்வு ஏற்பட்டது. சிலவற்றை செய்து, சிலவற்றை விட்டு விட்டனர். அப்போது எதை அவசியமாக செய்ய வேண்டும், எதை விட அனுமதியுண்டு என்பதை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் நேரிட்டது.
அதற்காக குர்ஆன் மற்றும் நபிமொழிகளை ஆய்வு செய்தபோது கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டன. எனவே, மத்ஹபுகள் தோன்றின. மத்ஹபுகள் என்பது குர்ஆன் நபிமொழிகளைத் தவிர்த்து மூன்றாவதான ஒன்றல்ல. எனவே, அது குர்ஆன் மற்றும் நபிமொழிகளுக்கான விளக்கங்கள் தான். ஆகவே, நாம் இமாம்களைப் பின்பற்றவில்லை. குர்ஆன் மற்றும் நபிமொழிகளுக்கு அவர் கூறிய விளக்கத்தை தான் பின்பற்றுகிறோம்.
மத்ஹபுகள் என்பது தனி ஒரு மனிதனுடைய அறிவிலிருந்து பிறந்த முடிவல்ல. எந்த மனிதனுடைய மனோ இச்சையை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்டதுமல்ல. எந்த ஒரு மனிதனுடைய அறிவின் முடிவின் பக்கமோ அல்லது மனோ இச்சையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த கருத்தின் பக்கமோ அல்லாஹுத்தஆலா முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்திருக்கும்படி வைக்கவில்லை.
இறைமறை, நபிமொழிகள், மற்றும் நபித்தோழர்களின் ஏகோபித்த கருத்து ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவற்றில் நம்முடைய இமாம்கள் அபூஹனீஃபா (ரஹ் ஹிஜ்ரி 80 - 150), மாலிக் (ரஹ் ஹிஜ்ரி 94 - 179), ஷாஃபிஈ (ரஹ் ஹிஜ்ரி 150 - 204), அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ் ஹிஜிரி 194 - 241) ஆகியோர் அழகாகவும், ஆழமாகவும் ஆராய்ந்து அவற்றில் மறைந்து கிடக்கின்ற அழகான சட்டங்களை விளக்கி தந்தார்கள்.
தலைப்பில் காணும் திருவசனத்தில் விஷயம் உடையவர்கள் ( وَأُولِي الأمْرِ مِنْكُمْ يَعْنِي: أَهَّلَ الْفِقْهِ وَالدِّينِ ) (உலில் அம்ர்) என்ற சொற்றொடர் மார்க்கச் சட்ட நிபுணர்களைக் குறிக்கும் என திருக்குர்ஆனின் மிகப்பெரிய விரிவுரையாளர்களாக திகழ்ந்த இப்னு அப்பாஸ் (ரலி), முஜாஹித் (ரஹ்), அதாஉ (ரஹ்) ஹசன் அல்பஸ்ரி (ரஹ்), அபூஆலியா (ரஹ்) ஆகியோர் கூறியுள்ளார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு செயலை செய்வார்கள். அதனை சில நபித்தோழர்கள் பார்த்திருப்பார்கள். சில நபித்தோழர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். முடிந்தால் அதனை பிறருக்கு அறிவித்து விடுவார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரே செயலை பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு முறைகளில் நிறைவேற்றி இருப்பார்கள். இதிலிருந்து தெரிவது பல முறைகளுக்கும் அது இடமுண்டு என்பதுதான்.
அடிப்படைகள் மாறாதவை. மற்றவை மாறக்கூடியவை. அடிப்படை விஷயங்களை உறுதியாக வைத்துவிட்டு, மற்றவற்றை மாறுதலுக்கு உள்ளாகும் வகையில் இறைவன் அமைத்துள்ளான். இறைவன் இந்த ஏற்பாடே இஸ்லாம் எக்காலத்திற்கும் ஏற்புடையதாக அமைய வழி வகுத்தது. இறைவன் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருக்காவிடில் மற்ற சமயங்களை போலவே இஸ்லாமும் வழிபாடுகளோடும், சடங்குகளோடும் முடக்கப்பட்டிருக்கும்.
சில ஆதாரங்கள்
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( كَانَ أَذَانُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَفْعًا شَفْعًا فِي الأَذَانِ وَالإِقَامَةِ ) பாங்கின் வாசகங்களையும் இகாமத்தின் வாசகங்களையும் இரண்டிரண்டு முறை கூறுவதே அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தொழுகை அறிவிப்பு முறையாக இருந்தது. நூல்:- திர்மிதீ-179
பாங்கு மற்றும் இகாமத்தின் வாசகங்களை இரண்டிரண்டு தடவை சொல்ல வேண்டும் என்பதே ஹனஃபி மத்ஹபின் சட்டம் ஆகும். அதற்கு இது போன்ற நபிமொழிகளே ஆதாரமாகும்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ ) பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு தடவையும், இகாமத்தின் வாசகங்களை ஒவ்வொரு தடவையும் கூறும்படி பிலால் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள். நூல்:- புகாரீ-603, முஸ்லிம்-619, திர்மிதீ-178
பாங்கின் வாசகங்கள் இரண்டிரண்டு தடவையும், இகாமத்தின் வாசகங்கள் ஒரு தடவையும் சொல்ல வேண்டும் என்பதே ஷாஃபிஈ மத்ஹபின் சட்டம் ஆகும். அதற்கு இதுபோன்ற நபிமொழிகளே ஆதாரமாகும்.
மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا كَبَّرَ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا أُذُنَيْهِ ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (தொழுகையில் ஆரம்ப) தக்பீர் கூறினால் தமது இரு கைகளையும் இரு காதுக்கு நேராக உயர்த்துவார்கள். மற்றொரு அறிவிப்பில், ( حَتَّى يُحَاذِيَ بِهِمَا فُرُوعَ أُذُنَيْهِ ) தமது இரு கைகளையும் காதின் சோனைக்கு நேராக கொண்டு வருவார்கள். நூல்:- முஸ்லிம்-642, 643
தக்பீர் தஹ்ரீமாவின் போது இரு காதுகள் வரை கைகளை உயர்த்துவது ஹனஃபி மத்ஹபின் சட்டம் ஆகும். அதற்கு இது போன்ற நபிமொழிகளே ஆதாரமாகும்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا افْتَتَحَ الصَّلاَةَ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ ) கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போது தன் தோள்களுக்கு நேராக தன் இரு கைகளையும் உயர்த்துவார்கள். நூல்:- முஸ்லிம்-638
தக்பீர் தஹ்ரீமாவின்போது தோள்களுக்கு நேராக கையை உயர்த்துவது ஷாஃபிஈ மத்ஹபின் சட்டம் ஆகும். அதற்கு இது போன்ற நபிமொழிகளே ஆதாரமாகும்.
பராஉ பின் ஆசிஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் (மீண்டும்) உளூ செய்ய வேண்டுமா? என்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள், ( تَوَضَّئُوا مِنْهَا ) "(ஆம்) அதற்காக உளூச் செய்ய வேண்டும்" என்று விடையளித்தார்கள். நூல்:- திர்மிதீ-76
ஒட்டக இறைச்சி சாப்பிட்டால் உளூ முறிந்து விடும் என்பது ஹன்பலி மத்ஹபின் சட்டம் ஆகும். அதற்கு இது போன்ற நபிமொழிகளே ஆதாரமாகும்.
(கஅபாவின் இன்றைய இமாம்கள் மற்றும் மக்காவாசிகளில் பெரும்பாலானோர் ஹன்பலி மத்ஹபை பின்பற்றுவோர் ஆவர்.
இன்று, சில வளைகுடா நாடுகளில் அரசியலமைப்பு, "ஹன்பலி"ச் சட்டத் தீர்ப்புகளின் அடிப்படையில் அமைந்திருப்பதைக் காணலாம்.)
தல்க் பின் அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. (இன உறுப்பை ஒருவர் தொட்டால் உளு முறிந்து விடுமா? என அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது) நபியவர்கள், ( وَهَلْ هُوَ إِلاَّ مُضْغَةٌ مِنْهُ أَوْ بَضْعَةٌ مِنْهُ ) "அதுவும் அவருடைய உறுப்புக்களில் ஒன்று தான்" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-78, இப்னுமாஜா -483
தமது இன உறுப்பை தொட்டால் உளூ முறியாது என்பது ஹனஃபி மத்ஹபின் சட்டம் ஆகும். அதற்கு இதுபோன்ற நபிமொழிகளே ஆதாரமாகும்.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ مَسَّ ذَكَرَهُ فَلاَ يُصَلِّ حَتَّى يَتَوَضَّأَ ) தமது இன உறுப்பை தொட்டவர் (மறுபடியும்) உளூ செய்யாதவரை தொழ வேண்டாம். நூல்:- திர்மிதீ-77, இப்னுமாஜா-480
தமது இன உறுப்பை தொட்டால் உளூ முறிந்து விடும் என்பது ஷாஃபிஈ மத்ஹபின் சட்டம் ஆகும். அதற்கு இது போன்ற நபிமொழிகளே ஆதாரமாகும்.
இமாம் இப்னு ருஷ்துடைய "பிதாயத்துல் முஜ்தஹித் வநிஹாயத்துல் முஃக்தஸித்", இமாம் இப்னு ஹுபைராவுடைய "அல்இஃப்சாஹு அன் மஆனிஸ் ஸிஹாஹ்" இது போன்ற நூல்களை கவனமாக ஒருமுறை படித்தால் போதும். மார்க்கச் சட்டங்களை வகுத்துத் தந்த ஒவ்வொரு இமாமிடமும் அதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருந்தன என்று தெளிவாகிவிடும். ஆதாரம் இல்லாமல் எந்த இமாமும் எந்தப் பிரச்சனையிலும் சுயக் கருத்து கூறியது கிடையாது.
எல்லோருடைய காலத்திலும்...
இமாம்களுக்கு இடையே சில சட்டங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் இது ஒன்றும் புதிதல்ல. திருக்குர்ஆன் கூறும் இறைத்தூதர்களுக்கு மத்தியிலும், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்திலும், அதற்குப் பின்னர் நபித்தோழர்களுக்கு மத்தியிலும் சில சட்டங்களில் கருத்துவேறுபாடுகள் இருந்தன.
இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் மற்றும் அவரது மகனார் சுலைமான் (அலை) அவர்களுக்கு மத்தியில் வழக்குகளுக்கு தீர்ப்பு கூறும் விஷயத்தில் கருத்து வேறுபாடு இருந்தது. அதில் தவறு ஒன்றொமில்லை என்று திருக்குர்ஆன் (21:78) கூறுகிறது.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அகழ் போர் (முடிந்து வந்த) தினம் அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( لاَ يُصَلِّيَنَّ أَحَدٌ الْعَصْرَ إِلاَّ فِي بَنِي قُرَيْظَةَ ) "பனூ குறைளா குலத்தினர் வசிக்கும் இடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸர் தொழுகை தொழ வேண்டாம்" என்று கூறினார்கள்.
வழியிலேயே அஸர் தொழுகையின் நேரம் நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர் பனூ குறைழா குலத்தினரை அடையும் வரை நாம் அசர் தொழ வேண்டாம் என்று கூறினர். வேறு சிலர் (தொழுகை நேரம் தவறிப் போனாலும் தொழ வேண்டாம் என்ற) கருத்தில் நபியவர்கள் கூறவில்லை; (வேகமாக அங்கு போய்ச் சேருங்கள் என்ற கருத்தில்தான் இந்த வார்த்தையை கூறினார்கள்) எனவே, நாம் தொழுவோம் என்று கூறினார்கள். நபியவர்களிடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்ட போது அவர்களில் எவரையும் நபியவர்கள் குறை கூறவில்லை. நூல்:- புகாரீ-4119
முரண்பட்ட இரு செயல்களையும் நபியவர்கள் சரி என்றது ஏன்? என்று சிந்திக்கும்போது இரு குழுவும் நபியவர்களின் கருத்தையே செயல்படுத்திள்ளார்கள். குறிப்பிட்ட இடம் வந்ததும் தொழுமாறு சொன்னதும் நபியவர்கள் தான். நேரம் வந்ததும் தொழ வேண்டும் என கற்பித்தும் நபியவர்கள் தான். அது மட்டுமல்ல இரு குழுக்களும் கருத்து வேறுபாட்டால் முரண்பட்டாலும் இரு குழுக்கும் ஏவப்பட்ட பணியைச் செய்து முடிக்க வேண்டிய இலக்கிலிருந்து பிளவுபட்டு பிரிந்து போய் விடவில்லை.
அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. இரண்டு நபித்தோழர்கள் பயணம் செய்துகொண்டிருந்தாரகள். தொழுகை நேரம் வந்தது. ஆனால், அவர்களிடம் தண்ணீர் இல்லை. அதனால் இருவரும் தயம்மும் செய்து தொழுதார்கள். சற்று நேரத்தில் தண்ணீர் கிடைத்து விட்டது. இருவரில் ஒருவர் உளூச் செய்து அந்தத் தொழுகையை மீண்டும் தொழுதார். மற்றவர் அவ்வாறு தொழவில்லை.
இருவரும் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததை கூறினார்கள். இரண்டாவது முறை தொழாதவரிடம், ( أَصَبْتَ السُّنَّةَ وَأَجْزَأَتْكَ صَلاَتُكَ ) "நீர் சுன்னத்தை சரியாகக் கடைபிடித்து விட்டீர். (நீ முதலில் தொழுத) உமது தொழுகையே உமக்கு போதும்" என்று கூறிய நபியவர்கள், இரண்டாவது முறையும் தொழுதவரிடம், ( لَكَ الأَجْرُ مَرَّتَيْنِ ) "உமக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-286, தாரமீ-737
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒருவரை பார்த்து சுன்னத்தை கடைபிடித்துவிட்டாய் என்று கூறியதன் பொருள்: மார்க்கச் சட்டம் இதுவேயாகும். மற்றவரைப் பார்த்து "உமக்கு இரண்டு நற்கூலி உண்டு" என்று சொன்னதற்கு காரணம், ஒரு முறை (ஃபர்ளு) கடமை நிறைவேற்றி விட்டது. இரண்டாவதாகத் தொழுதது (நஃபில்) உபரியாகும். அதனால் இரண்டு நற்கூலிகள் என்று உண்டு. என்று கூறினார்கள். நூல்:- அல்மின்ஹாஜ்
கடல் நீரால் சுத்தம் செய்யலாம் என்று அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறியுள்ளனர். கடல் நீரால் சுத்தம் செய்வது விரும்பத்தக்கதல்ல என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் கூறியுள்ளனர். நூல்:- திர்மிதீ-64
உமர் (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆகியோர் ( إِنَّ الْمَيِّتَ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ ) “இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதால் அவர் வேதனை செய்யப்படுகிறார்” என்று கூறினார்கள். ஆனால், ஆயிஷா (ரலி) அவர்கள் இக்கருத்தை எதிர்த்தார்கள். நூல்:- முஸ்லிம்-1693
சுருங்கக்கூறின், நபித்தோழர்களுக்கு மத்தியில் ஏராளமான விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன என்பதை திர்மிதீ போன்ற நூல்களை படித்தவர்கள் நன்கறிவார்கள். எனவே, நபித்தோழர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருந்ததால் அவர்கள் கூறிய மார்க்கச் சட்டங்களையும் ஒதுக்கி விட முடியுமா?
எதையும் கைவிடத் தயாரில்லை
அதாஉ பின் யஸார் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் இமாமைப் பின்பற்றித் தொழுபவர் (மஃமூம்) கிராஅத் ஓதுவதைப் பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள், ( لاَ قِرَاءَةَ مَعَ الإِمَامِ فِي شَىْءٍ ) "இமாமை பின்பற்றி தொழுபவர் (கிராஆத்) ஓதுதல் கிடையாது" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-1008
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் சப்தமிட்டு கிராஅத் ஓதினார்கள். நபியவர்களுக்கு பின்னால் தொழுத நபித்தோழர்களும் சப்தமின்றி கிராஅத் ஓதிக் கொண்டிருந்தனர். இதன் காரணமாக நபியவர்களின் ஓதுதலில் தடுமாற்றம் ஏற்பட்டது. அப்போது தான் கீழ்க்காணும் வசனம் (7:204) அருளப்பட்டது.
(மனிதர்களே!) குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவிதாழ்த்திக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனிடம்) அருளை அடைவீர்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர், தஃப்சீர் ராஸீ, தஃப்சீர் ரூஹுல் மஆனீ
இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இமாமை பின் தொடர்ந்து தொழும்போது ஃபாத்திஹா அத்தியாயம் ஓதக்கூடாது. ஏனென்றால், திருமறை திருவசனம் ஓதப்பட்டால் வாய்மூடி கேளுங்கள் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இமாமவர்கள் கூறுகிறார்கள். சப்தமிட்டு ஓதும் (ஜஹ்ரீ) தொழுகையிலும் சரி, மெதுவாக ஓதும் (சிர்ரீ) தொழுகையிலும் சரி ஆக எல்லாத் தொழுகையிலும் ஏதேனும் சில வசனங்களை இமாம் ஓதினால் பின்னால் தொழுபவருக்கு (முக்ததீக்கு) அது போதுமாகிவிடுவதைப் போல் இமாம் ஃபாத்திஹா அத்தியாயம் ஓதும்போது பின்னால் தொழுபவருக்கு அதுவே போதுமானதாக அமைந்துவிடுகிறது. எனவே, இமாமுக்குப் பின்னால் தொழுபவர் ஃபாத்திஹா அத்தியாயம் ஓதக்கூடாது. நூல்:- பைளுல் பாரீ பாகம்-2 பக்கம்-274
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். திருமறையின் கட்டளைக்கேற்ப சப்தமிட்டு ஓதும் (ஜஹ்ரீ) தொழுகையில் இமாம் போதும் ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுவதே அவரை பின்பற்றித் தொழுபவருக்கு போதுமானதாகும். பின் தொடர்ந்து தொழுபவர் ஃபாத்திஹா அத்தியாயம் ஓதக்கூடாது. அவர் மௌனமாக இருந்து இமாமின் போது ஓதுதலை கேட்பது அவசியமாகும். அப்படி எவரேனும் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதினால் அது வெறுக்கத்தக்க செயலாகும். (மக்ரூஹ்)
சப்தமிட்டு ஓதாத (சிர்ரீ) தொழுகைகளில் இமாமைப் பின்பற்றித் தொழுபவர் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதுவது விரும்பத்தக்கதாகும். (முஸ்தஹப்பு) நூல்:- பிதாயத்துல் முஜ்தஹித் பாகம்-1 பக்கம்-121
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ ) குர்ஆனின் தோற்றுவாய் (எனப்படும் ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்கு தொழுகையே இல்லை. அறிவிப்பாளர்:- உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-756, முஸ்லிம்-651, திர்மிதீ-230
சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( سَكْتَتَانِ حَفِظْتُهُمَا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ) நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) இரண்டு சந்தர்ப்பத்தில் மௌனமாக இருந்ததை நினைவில் வைத்துள்ளேன். (முதல் சந்தர்ப்பம் ஆரம்ப தக்பீர் கூறி தொழுகையை துவங்கியதும், இரண்டாவது சந்தர்ப்பம் வலள்ளால்லீன் என்று ஃபாத்திஹா அத்தியாயம் ஓதி முடித்ததும் ஆகும்) நூல்:- திர்மிதீ-233
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் மரணிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மிஸ்ரு தேசத்தில் தங்கியிருக்கும்போது கூறினார்கள். சப்தமிட்டு ஓதும் (ஜஹ்ரீ) தொழுகையிலும் சரி, சப்தமில்லாமல் ஓதும் (சிர்ரீ) தொழுகையிலும் சரி இமாமைப் பின் தொடர்ந்து தொழுபவர் ஃபாத்தியா அத்தியாயம் ஓதுவது கட்டாயமாகும். (வாஜிபு) இது அவர்களின் கடைசிக் கால வார்த்தையாகும். நூல்:- அல்மீஸானுல் குப்ரா பாகம்-1 பக்கம்-137
மேலும் இமாம் அவர்கள் கூறுகிறார்கள். ஃபாத்திஹா அத்தியாயம் ஓதாமல் தொழுகை நிறைவேறாது என்ற நபிமொழி தக்க ஆதாரத்தோடு கிடைத்துள்ளது. மேலும் ஏதேனும் ஒரு விஷயத்தில் பலமான நபிமொழிகள் கிடைத்து விடுமானால் அதற்கு மாற்றமாக நடப்பது சரியல்ல.
ஒருவேளை திருக்குர்ஆன் வசனம் அதற்கு மாற்றமாக இருக்குமேயானால் திருக்குர்ஆன், நபிமொழி இரண்டின் படியும் செயல்படும் விதத்தில் கருத்து விளக்கம் கூறிக் கொள்ளலாம். அதாவது, இமாம் ஃபாத்திஹா அத்தியாயம் ஓதிய பின் சிறிது நேரம் மௌனமாக இருக்கவேண்டும். அந்த நேரத்தில் இமாமை பின்பற்றுபவர் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதி கொள்வார். (இதற்கு திர்மதீ-230 நூலில் பதிவாகியுள்ள நபிமொழி ஆதாரமாகும்.)
இதில் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் எந்த இமாமும் திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் கைவிடத் தயாரில்லை. அவற்றைப் புரிந்து கொள்வதில்தான் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. நபித்தோழர்களுக்கு மத்தியிலும், இமாம்களுக்கு மத்தியிலும் மார்க்கச் சட்டங்களில் கருத்துவேறுபாடுகள் இருந்தன. ஆனால், அவர்களுக்கு மத்தியில் ஒரு போதும் மன வேறுபாடுகள் இருந்ததில்லை. இந்த கருத்து வேறுபாடுகள் வேண்டுமென்றே நீ இப்படிச் சொன்னால் நான் அப்படிச் சொல்வேன் என்ற வகையில் அமைந்ததுமல்ல.
எங்கேயாவது கருத்து வேறுபாடு தோன்றினால், அங்கு ஒரு பிரிவினர் சத்தியத்தின் மீதும் மற்றொரு பிரிவினர் அசத்தியத்தின் மீதும் இருப்பதாகக் கூறிட இயலாது. எனவே, எவருக்கு எந்த மத்ஹபு நல்லதாகவும், வலுவுள்ளதாகவும் தெரிகிறதோ அவருக்கு அந்த மத்ஹபை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையுண்டு.
ஒப்பிட்டுப் பார்த்தல்
அல்லாஹுத்தஆலா திருக்குர்ஆனின் (2:267) வசனத்தில், "கெட்டுப்போனதை நீங்கள் விரும்பாததைப் போன்று அதை பிறருக்கு தர்மமாக கொடுக்கவும் விரும்பாதீர்கள்" என்று கூறியுள்ளான். இவ்வாறு ஒப்பிட்டுக் கூறுவதற்கு பெயர்தான் "கியாஸ்" என்று சொல்லப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தாதுஸ்ஸலாஸில்" என்ற இடத்தில் நடந்த போருக்கு நபித்தோழர்களை அனுப்பிவைத்தார்கள். அது கடுங்குளிர்காலம் அந்த இரவில் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுக்கு குளிப்பு கடமையாகிவிட்டது. குளிரின் கொடுமைக்கு அஞ்சி குளிக்காமல் தயம்மும் செய்துவிட்டு, தன் தோழர்களுக்கு பஜ்ரு தொழுகையை தொழ வைத்தார். மதீனா வந்ததும் நபித்தோழர்கள் இந்த விஷயத்தை நபியவர்களிடம் தெரிவித்தனர்.
நபியவர்கள், ( يَا عَمْرُو صَلَّيْتَ بِأَصْحَابِكَ وَأَنْتَ جُنُبٌ ) "அம்ரே! நீர் அசுத்தமான நிலையில் உம்முடைய தோழர்களுக்குத் தொழவைத்தீரோ" என்று வினவினார்கள். அதற்கவர், "உங்களுடைய ஆன்மாக்களை கொன்றுவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் இரக்கமுள்ளவனாக இருக்கிறான் என்ற திருக்குர்ஆனின் (4;29) வசனத்தை நினைத்துப் பார்த்தேன். அதனால் தயம்மும் செய்து தொழவைத்தேன்" என்று கூறியவுடன், நபியவர்கள் சிரித்துவிட்டு எதுவும் கூறாமல் இருந்து விட்டார்கள். நூல்:- அபூதாவூத்-334, தாரகுத்னீ
ஒருவர் கடுங்குளிர் நேரத்தில் தண்ணீரில் குளித்து தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது தன்னை கொல்வதற்கு ஒப்பாகும் என்று விளங்கிய அம்ர் (ரலி) அவர்கள் குளிப்பதை விட்டுவிட்டார்கள். அதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இதுவும் கியாஸ் தான்.
அபூவஹப் உபைதுல்லாஹ் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை (பிரபல ஹதீஸ் அறிவிப்பாளர்) அஃமஷ் (ரஹ்) அவர்களின் சபையில் இருந்தேன். அப்போது ஒருவர் வந்து அஃமஷ் (ரஹ்) அவர்களிடம், “மாதவிலக்கு ஏற்பட்டுள்ள ஒருபெண் சடலத்தை (ஜனாஸாவை) குளிப்பாட்டலாமா?” என்று வினவினார். அதற்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை. பிறகு வந்தவர் இமாம் அபூஹனீஃபா அவர்களை நோக்கி, "இது குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்? என்று வினவினார்.
அதற்கு இமாமவர்கள் "ஆம்! குளிப்பாட்டலாம்" என்று பதிலளித்தார்கள் உடனே அஃமஷ் (ரஹ்) அவர்கள், ( مِن أَينَ قُلتَ؟ ) “(இந்த சட்டத்தை) எங்கிருந்து (அறிந்து) கூறுகிறாய்? என்று கேட்க, இமாம் அபூஹனீஃபா அவர்கள், (مِن حَدِيثِ كَذَا أنتَ حَدَّثتَنَاهُ ) “நீங்கள் எங்களுக்கு அறிவித்த இந்த நபிமொழிகளில் இருந்து தான் (அறிந்து கொண்டேன்)" என்று கூறிவிட்டு கீழ்காணும் நபிமொழிகளை எடுத்துரைத்தார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( كُنْتُ أَغْسِلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا حَائِضٌ ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும் போது) பள்ளிவாசலில் இருந்து தமது தலையை என் பக்கம் நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களது தலைமுடி வாரிவிடுவேன். (நூல்:- முஸ்லிம்-500)
மற்றொரு அறிவிப்பில், அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்து கொண்டிருந்தபோது, ( يَا عَائِشَةُ نَاوِلِينِي الثَّوْبَ ) "ஆயிஷா! தொழுகை விரிப்பை எடுத்து வா!" என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே" என்றார். அதற்கு நபியவர்கள், ( إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ ) “(பரவாயில்லை. எடுத்து வா!) மாதவிடாய் உனது கையில் இல்லை" என்று கூறினார்கள். (நூல்:- முஸ்லிம்-504)
அப்போது அஃமஷ் (ரஹ்) அவர்கள், ( يَا مَعْشَرَ الفُقَهَاء أَنْتُم الأَطِبَّاء وَنَحْنُ الصَّيَادِلَة ) "சட்ட மேதைகளே! நீங்கள் தான் மருந்தின் குணமறிந்த மருத்துவர்கள். நாங்களோ மருந்துகளை கெடாமல் அழியாமல் பாதுகாப்பவர்கள் மட்டுமே." என்று புகழ்ந்துக் கூறினார்கள். நூல்:- தாரீக் பக்தாதீ இமாம் கத்தீப், தாரீகுல் இஸ்லாம் இமாம் தஹபீ, அல்காமில் இமாம் இப்னு அதிய்யி
இந்த நபிமொழிகளிலிருந்து, மாதவிடாய் என்ற அசுத்தம் ஒருவரை தொட்டால் ஒட்டிக் கொள்ளும் என்ற நிலையில் உள்ளதல்ல என்று விளங்கலாம். அதனால் தான் மாதவிடாய் ஏற்பட்டுள்ள ஒரு பெண் இறந்தவரை குளிப்பாட்டினால், அவளுடைய அசுத்தம் இறந்தவரை ஒட்டிக் கொள்ளாது. எனவே, அவள் குளிப்பாட்டுவது கூடும் எனக் கூறினேன் என்று இமாமவர்கள் தெளிவுபடுத்தினார்கள். இதுவும் கியாஸ் தான்.
இது போன்றுதான் மத்ஹபுடைய எல்லா இமாம்களும் கியாஸ் (ஒப்பிட்டுப் பார்த்தல்) செய்து குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் மறைந்துள்ள சட்டங்களை தெளிவுபடுத்தி வகுத்துள்ளார்கள்.
அதுபோல் இதுவும்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நானும் காலீத் பின் அல்வலீத் ரலி அவர்களும் அருமை நாயகம் (ஸல்) அவர்களுடன் (அவர்களின் துணைவியார்) மைமூனா (ரலி) அவரது இல்லத்திற்குச் சென்றோம். அப்போது பொரித்த உடும்பு இறைச்சி கொண்டுவரப்பட்டது. நபியவர்கள் அதன் பக்கம் கரத்தை நீட்டும் போது அது உடும்பு இறைச்சி என்று தெரிவிக்கப்பட்டது. உடனே நபியவர்கள் தமது கரத்தை (உடும்பிலிருந்து) எடுத்துவிட்டார்கள்.
அப்போது நான், "நாயகமே! உடும்பு இறைச்சி தடை செய்யப்பட்டதா? (ஹராமா)" என்று வினவினேன். நபியவர்கள், ( لاَ وَلَكِنَّهُ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي فَأَجِدُنِي أَعَافُهُ ) "இல்லை. (தடை செய்யப்பட்டதன்று.) ஆயினும் அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. அதனால் அதை உண்ண என் மனம் விரும்பவில்லை" என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்லிம்-3941
சில அறிஞர்கள் உடும்பு இறைச்சி உண்பது அனுமதிக்கப்பட்டதே என்று கூறுகிறார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உடும்பு இறைச்சி உண்ண அனுமதித்தாலும் தாம் அதை உண்ணப் போவதில்லை என்று தெரிவித்திருப்பதால் உடும்பு இறைச்சி உண்பது விரும்பத்தக்கதன்று என சில அறிஞர்கள் கருதுகிறார்கள். நூல்:- அல்மின்ஹாஜ், தக்மிலா
இது போன்றுதான் ஹனஃபி மத்ஹப் நண்டு, இறால் போன்ற சிலதை உண்ணுவது வெறுக்கத்தக்கது என்று கூறுகிறது. ஷாஃபிஈ மத்ஹப் இவற்றை உண்ணுவது வெறுக்கத்தக்கதுல்ல. அது அனுமதிக்கப்பட்டது தான் என்று கூறுகிறது.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் தமது இறுதி காலத்தில் கூஃபாவில் வாழ்ந்தார்கள். இவர்கள் அறிவாற்றலும், அறிய கருத்துக்களும் தான் பெருமளவில் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் வகுத்துத் தந்த சட்டத்திற்கு (ஹனஃபி மத்ஹபிற்கு) அச்சாணியாக திகழ்ந்தது.
அண்ணல் (நபி ஸல்) அவர்களின் மாணவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள். இவரின் மாணவர் தான் அல்கமா (ரஹ்) அவர்கள். இவரின் மாணவர் தான் இப்ராஹிம் நகயீ (ரஹ்) அவர்கள். இவரின் மாணவர் தான் ஹம்மாத் (ரஹ்) அவர்கள். இவரின் மாணவர் தான் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள். அண்ணல் (நபி ஸல்) அவர்களுக்கும் இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களுக்கும் இடையில் நான்கு அடுக்குகள் மட்டும்தான் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் ஒரு தாபிஈ ஆகும். இமாம் அவர்கள் மக்காவில் ஆமிர் பின் வாஇலா (ரலி) அவர்கள், மதீனாவில் சஹ்ல் பின் சஅதின் சாஇதீ (ரலி) அவர்கள், கூஃபாவில் அப்துல்லாஹ் பின் அபீஅவ்பா (ரலி) அவர்கள், பசராவில் அனஸ் (ரலி) அவர்கள் ஆகிய நபித்தோழர்களை சந்தித்திருக்கிறார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மாணவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள். அவரின் மாணவர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள். அவரின் மாணவர் மாலிக் (ரஹ்) அவர்கள் அண்ணல் (நபி ஸல்) அவர்களுக்கும் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுக்கும் இடையில் இரண்டு அடுக்குகள் மட்டும்தான் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்து செவியுற்றதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களும், அவரிடமிருந்து செவியுற்றதாக நாஃபிஉ (ரஹ்) அவர்களும் அவரிடமிருந்து செவியுற்றதாக இமாம் மாலிக் அவர்கள் அறிவிக்கும் நபிமொழிகள் தான், மிகச்சிறந்த அறிவிப்பு தொடராகும் என்று பல மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் மாணவர் தான் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள். இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் மாணவர் தான் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள்.
இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்கள் விளக்கித் தந்த சட்டங்கள் அனைத்தும் இமாமவர்களின் மாணவர்களாகவும், மாமேதைகளாகவும் திகழ்ந்த அபூயூசுஃப் (ரஹ்), முஹம்மத் பின் ஹசன் (ரஹ்), சுபர் பின் ஹுதைல் (ரஹ்), ஹசன் பின் ஸியாத் (ரஹ்) ஆகியோர் ஆராய்ந்துள்ளார்கள். அதில் எதுவும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளுக்கு மாறுபடவில்லை என உறுதி செய்தனர்.
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் விளக்கிக் தந்த சட்டங்கள் அனைத்தையும் இமாமவர்களின் மாணவர்களாகவும், மேதைகளாகவும் திகழ்ந்த முஸ்னி (ரஹ்), ஸெளரி (ரஹ்), புவைத்தி (ரஹ்) போன்றவர்கள் ஆராய்ந்தார்கள். அதில் எதுவும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளுக்கு கொஞ்சம்கூட மாறுபடவில்லை என உறுதி செய்தனர்.
குறிப்பிட்ட ஒருவரை
பின்பற்றுதல்
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. மதீனாவாசிகள் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு பெண் ஹஜ்ஜில் தவாஃப், மற்றும் ஸியாரத் போன்றவற்றை முடித்த பிறகு அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது? என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ( تَنْفِرُ ) "அவள் (தவாஃபுல் வதா செய்யாமல்) ஊருக்கு திரும்பி விடவேண்டியதுதான்" என்றார்கள்.
அப்போது மதீனாவாசிகள், ( لاَ نَأْخُذُ بِقَوْلِكَ وَنَدَعَ قَوْلَ زَيْدٍ ) "உமது சொல்லை எடுத்துக் கொண்டு ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களுடைய கூற்றை விட்டுவிட நாங்கள் தயார் இல்லை" என்றனர். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ( إِذَا قَدِمْتُمُ الْمَدِينَةَ فَسَلُوا ) “அப்படியாயின் நீங்கள் மதீனா சென்றால் அங்கு(ள்ளோரிடம்) கேட்டுப் பாருங்கள்" என்றார்கள். நூல்:- புகாரீ-1758
மதீனாவாசிகள் குறிப்பிட்ட நபரான ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் கருத்துக்களைக் கேட்டு செயல்பட்டு வந்தனர். ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் கருத்துக்கு மாற்றமாக எவருடைய கருத்தின்படி அவர்கள் செயல்பட்டதில்லை.
குறிப்பிட்ட தனி நபரான ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களை மதீனாவாசிகள் பின்பற்றுவதை (ஹராம்) தடுக்கப்பட்டது என்றோ, வழி தவறிய செயல் என்றோ மாமேதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறவில்லை. இதிலிருந்து தனிநபர் தக்லீது (பிறர் கூறும் சட்டத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல்) நபித்தோழர்களின் காலத்திலும், அதன் பிறகு இமாம்கள் காலத்திலும் இருந்திருக்கிறது. அது தவறானதுமல்ல என்றும், அதன் தேவை அப்போதே உணரப்பட்டது என்றும் அறிய முடிகிறது.
கூஃபாவாசிகள், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களையும் யமன்வாசிகள், முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் பின்பற்றிக் கொண்டிருந்தனர் என்பது வரலாற்றுச் செய்தியாகும்.
மக்கா வரலாறு
ஹிஜ்ரி 640 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஹனபி மத்ஹபினர் தொழுகும் இடம், மாலிக் மத்ஹபினர் தொழும் இடம், ஷாஃபியீ மத்ஹபினர் தொழும் இடம், ஹன்பலீ மத்ஹபினர் தொழும் இடம் என தனித்தனியாக தொழும் இடம் உருவானது.
ஒவ்வொரு தொழுகையின் ஆரம்ப நேரத்தில் ஒரு முறை பாங்கு சொல்லப்பட்டுவிடும். பின்னர் மேற்கூறிய வரிசை முறைப்படி அவரவர்களிடத்தில் அந்தந்த மத்ஹபைச் சேர்ந்த இமாம்கள் தொழுகவைப்பார்கள். அந்தந்த மத்ஹபையைச் சேர்ந்தவர்கள் வந்து தொழுதுவிட்டு செல்வார்கள். மங்ரிப் மட்டும் ஒரே நேரத்தில் அனைவரும் சேர்ந்து தொழுகவைப்பார்கள். இவ்வழிமுறையே உஸ்மானிய பேரரசு உண்டாக்கியது. அல்மலிக் அப்துல் அஜீஸ் அவர்கள் பொறுப்பேற்றப் பிறகு இவ்வழிமுறையை அகற்றிவிட்டு ஒரே முஸல்லா ஒரே வழிபாட்டு முறையை உருவாக்கினார் என்கிறது மக்கா வரலாறு.
தேர்ச்சி பெற்றவர்களை
அணுகுவது
திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகள் சட்டங்களை பட்டியலிட்டு பேசுகின்ற வெறும் சட்ட நூல்கள் அல்ல. அவை சில சட்டங்களை தெளிவுபடுத்திய போதும், பல சட்டங்களை கோடிட்டுக் காட்டி மனிதர்களது சிந்தனைத் திறனுக்கு வழிகொடுத்து சென்றுள்ளன.
திருக்குர்ஆன், நபிமொழிகள், மற்றும் நபித்தோழர்களின் ஏகோபித்த கருத்துக்கள் ஆகியவற்றிலிருந்து சட்டங்களை பகுத்து ஆய்வு செய்வது என்பது அவ்வளவு சாதாரணமல்ல. சட்டங்களை பகுத்து ஆய்வு செய்பவருக்கு அரபி மொழியிலும், அதன் இலக்கண இலக்கியங்களிலும் தனித் திறமை பெற்றிருக்க வேண்டும். திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் வெளிப்படையான கருத்துக்களை முழுமையாக அறிந்திருக்க வேண்டும். எவருக்கும் இதில் போதிய ஆற்றலும், கல்வியும் இல்லையோ அவர் இதில் திறமையுள்ள ஒருவரை பின்பற்றுவதே சிறந்ததாகும்.
உலகில் எந்தத் துறையாக இருப்பினும் அத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களை பின்பற்றாமல் எதையும் சாதித்துவிட முடியாது. ஒரு பத்திரம் எழுத வேண்டுமானால் எழுத்தரை அணுகுகிறோம். நீதிமன்றத்தில் வாதாட வக்கீலை அணுகுகிறோம். நோய்க்கான மருந்தை முடிவு செய்ய மருத்துவரை அணுகுகிறோம். அதுபோலவே, மார்க்கச் சட்டங்களை அறிந்து கொள்வதற்கு அதில் தேர்ச்சி பெற்ற இமாம்களை அணுக வேண்டியதிருக்கிறது.
தனக்கு வேண்டிய உணவு வகைகள் அனைத்தையும் தானே உழுது, தானே விதைத்து, தானே அறுத்து, தானே சமைத்து, தானே சாப்பிட வேண்டுமென்று எண்ணுவதும் மார்க்க சட்டங்கள் அனைத்தையும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளிலிருந்து நானே நேரடியாக ஆய்வு செய்து அதன் பிறகு அதை செயல்படுத்துவேன் என்று அதில் போதிய ஆற்றலும் அறிவும் இல்லாதவன் எண்ணுவதும் ஒன்றுதான்.
நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள். திருக்குர்ஆன்:- 16:43
நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து அறியாத ஒரு கூட்டத்தினர் எப்போதும் உலகில் இருப்பார்கள் என்பது தெளிவாகிறது. எல்லோருமே எல்லாவற்றையும் அறிந்தவர்களாக இருக்கமுடியாது என்ற காரணத்தால் தான் அறிந்தவர்களிடம் கேட்கும்படி அல்லாஹ் கூறுகிறான்.
திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஒளியில் சட்டம் இயற்றித் தந்த இமாம்களின் மத்ஹபுகளை பின்பற்றும் விஷயத்தில் நமது வாழ்நாளில் ஒரே மத்ஹபை பின்பற்றுவது சிறந்ததாகும்.
ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மத்ஹபுகளை பரிகாசம் செய்யும் முறையில் அடிக்கடி மத்ஹபு மாறுவது குற்றமாகும். அவ்வாறின்றி, தனக்கு லேசாக இருக்கிறது என்பதற்காக அடுத்த மத்ஹபின் சட்டங்களை சில நேரங்களில் பின்பற்றினால் அது குற்றமாகாது.
இமாம்கள் கூறும் மத்ஹபுச் சட்டங்களை பின்பற்றுவது குர்ஆன் மற்றும் நபிமொழிகளை பின்பற்றுவதாகவே கருதப்படும். ஆகவே, மத்ஹபுகளின் மாண்பை விளங்கிக் கொள்ளும் அறிவை அல்லாஹ் நமக்கு தருவானாக! ஆமீன்
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951