பெண்ணுரிமைப் பேணுவோம்!
وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ
அவர்களிடம் (பெண்களிடம்) நல்ல விதமாக நடந்து கொள்ளுங்கள். திருக்குர்ஆன்:- 4:19
மார்ச் - 8 உலக மகளிர் தினமாக
அனுசரிக்கப்படுகிறது.
இஸ்லாம், சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பேச்சுரிமை, எழுத்துரிமை, கல்வியுரிமை, கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, கணவனிடமிருந்து மணவிலக்கு பெறும் உரிமை, வாரிசுரிமை, சொத்துரிமை, சுயமாக சம்பாதிக்கும் உரிமை, கற்பைக் காத்து கண்ணியமாக வாழும் உரிமை இப்படி வாழ்வின் அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு எவ்வித போராட்டமும் இன்றி வழங்கியுள்ளது.
அறியாமைக் காலத்தில் கொத்தடிமைகளாக, பாலியல் பண்டங்களாக வாழ்ந்த பெண் சமூகத்தினரை தகுதிமிக்கவர்களாக தலை நிமிர்ந்து வாழச் செய்தது இஸ்லாம்.
பெண்ணாக பிறப்பது பாவம் என்றெண்ணிய அறியாமைக் காலத்தில்தான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்ணுரிமைப் பேணுவோம் என்றுரைத்து அதற்காக பல திட்டங்களை தீட்டி, அதை செயல்படுத்தியும் காட்டினார்கள்.
மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். “பெண்களிடம் நல்ல விதமாக நடந்து கொள்ளுங்கள்” என்று அல்லாஹ் சொல்கிறான். அதன் பொருள்: நீ துன்புறுத்தக்கூடாது என்பது மட்டுமல்ல, அவளால் ஏற்படுகிற சில துன்பங்களை நீ சகித்துக் கொள்ள வேண்டும் என்பதுமாகும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا أكرَمَ النِّسَاءَ إلَّا كَرِيمٌ ، وَلَا أَهَانَهُنَّ إِلَّا لَئِيمٌ ) கண்ணியத்திற்குரியவனே, பெண்களை கண்ணியமாக நடத்துவான். இழிவானவன் பெண்களை இழிவாக நடத்துவான். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னு அசாகிர், தாரிக் திமிஷ்க்-13/312
பெண்களை கண்ணியப்படுத்துபவன். கண்ணியத்திற்குரியவன். அவர்களை இழிவுப்படுத்துபவன். இழிவுக்குரியவன் என்பதே இதன் பொருள்.
திருமணம்
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் இறப்பு தருவாயில் தன் சகோதரர் குதாமா பின் மழ்ஊன் (ரலி) அவர்களிடம், நல்ல ஆடவர் ஒருவருக்குத் தம் மகளை மணமுடித்துக் கொடுக்குமாறு இறுதி விருப்பம் தெரிவித்துத் தன் மகளை ஒப்படைத்தார். உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி), குதாமா பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் ஆகிய இருவரும் என் தாய் மாமன்மார்கள் ஆவர். நான் குதாமா பின் மழ்ஊன் (ரலி) அவர்களிடம் சென்று, உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்களின் மகளைப் பெண் கேட்டேன்.
அவர் எனக்கு அப்பெண்ணை அவளிடம் அனுமதி கோராமலேயே மண ஒப்பந்தம் செய்து வைத்தார். ஆனால் அவள், தன்னை (ஏற்கனவே, மணக்கொடை அதிகம் தருவதாகக் கூறியிருந்த) முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் மணமுடித்துக் கொள்ள வேண்டுமென விரும்பினாள். எனவே, குதாமா (ரலி) அவர்கள் செய்து வைத்த மண ஒப்பந்தத்தை அப்பெண் ஏற்க மறுத்தாள். இந்த வழக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றது. அப்போது அண்ணலார், "அவள் ஓர் அனாதைப் பெண், அவளுடைய அனுமதியின்றி அவளை மணமுடித்து வைக்கப்படமாட்டாது" என்று கூறினார்கள். எனவே, மண ஒப்பந்தம் மூலம் நான் உரிமையாக்கிய அப்பெண் என்னிடமிருந்து விடுவிக்கப்பட்டாள். முஃகீரா (ரலி) அவர்களுக்கே அப்பெண்ணை மணமுடித்து வைத்தனர். நூல்:- இப்னுமாஜா-1868, முஸ்னது அஹ்மத்-5862
குடும்ப வாரிசு
ஆண் பிள்ளைகள் தான், குடும்ப வாரிசாகும் என்று கருதப்படுகிறது. அதனால்தான் பெயர் சொல்ல ஆண்பிள்ளை வேண்டுமென்று தாய் தந்தையர் விரும்புகின்றனர். ஆனால், ஆண் மட்டுமல்ல. பெண்ணும் குடும்ப வாரிசுதான் என்று இஸ்லாம் இயம்புகிறது.
அருமை நாயகம் (ஸல்) அவர்களின் அன்பு மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் பிள்ளைகளான ஹஸன் (ரலி), ஹுசைன் (ரலி) அவர்களின் வழி தோன்றல்களைத்தான் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் வாரிசுகளாக உலகமெங்கும் முஸ்லிம்களால் கண்ணியமாகக் கருதப்படுகிறது.
கற்புநெறி
(நபியே) இறைநம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ் நோக்கிய வைக்கவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்து கூறுகிறான். (நபியே) இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள்: அவர்களும் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கி வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். திருக்குர்ஆன்:- 24:30,31
கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சம மதிப்புள்ள ஒரு சொத்தாகும். அது பெண்ணுக்கு மட்டும் சொந்தமானது என்று நாம் நினைத்தால் அது அறியாமை. திருமணத்திற்கு முன் ஒரு பெண் தவறான உறவு வைத்தால் அவள் கற்பு பறிபோனவள் என்று சொல்வதுதான் வழக்கத்தில் உள்ளது. அவ்வாறே ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபட்டால் அதை சமூகம் கண்டுகொள்வதில்லை. திருமணத்திற்கும் முன்பும் பின்பும் ஒரு ஆண் வழி தவறிய உறவுகளில் ஈடுபட்டால் அவனும் கற்பு பறிபோனவன் தான் என்று இஸ்லாம் இயம்புகிறது. கற்பு விஷயத்தில் ஆணும் பெண்ணும் சமமானவர்களே!
மாயிஸ் (ரலி) அவர்கள் போன்று சில நபித்தோழர்கள் கற்பு நெறியில் இருந்து தடம்புரண்டபோது அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்பதே வரலாறு.
சொத்துரிமை
(இறந்துபோன) தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்குப் பங்கு உண்டு. (அவ்வாறே) தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு. அந்த சொத்து குறைவாகவோ, அல்லது அதிகமாகவோ இருந்தாலும் சரியே. இது (அல்லாஹ்வால்) ஏற்படுத்தப்பட்ட பாகமாகும். திருக்குர்ஆன்:- 4:7
உங்கள் சந்ததியில் (ஆணும் பெண்ணும் இருந்தால்) ஒரு ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (உங்கள் சந்ததிகளாகிய) அவர்கள் (ஆணின்றிப்) பெண்களாகவே இருந்து அவர்கள் (இருவராகவும் அல்லது) இருவருக்கு அதிகமாகவும் இருந்தால் (எத்தனை பேர்கள் இருந்தபோதிலும்) அவர் (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டையே (சமமாக) அடைவார்கள். ஒரே பெண்ணாக இருந்தால் அவளுக்கு (இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில்) பாதி உண்டு. திருக்குர்ஆன்:- 4:11
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களின் துணைவியார் சஅத் அவர்களுக்கு பிறந்த தம்மிரு மகள்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து பின்வருமாறு கூறினார்:
"நாயகமே! இதோ இவ்விருவரும் (என் கணவர்) சஅத் (ரலி) அவர்களின் புதல்வியர் ஆவர். இவ்விருவரின் தந்தை (சஅத்) உங்களுடன் போரில் (பங்கேற்ற போது) கொல்லப்பட்டு உயிர்நீத்தார். இவ்விருவரின் தந்தையின் சகோதரர் இவர்களுக்குச் சேர வேண்டிய சொத்துக்கள் முழுவதையும் எடுத்துக்கொண்டார்; இவர்களுக்காக அவர் எதையும் விட்டு வைக்கவில்லை. எந்தப் பொருளும் இல்லாத நிலையில் இவ்விருவருக்கும் மணமுடித்துவைக்க முடியாது.
அப்போது அண்ணலார், இது தொடர்பாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான்" என்று கூறினார்கள். அப்போதுதான் சொத்துரிமை தொடர்பான வசனம் (4:11) அருளப்பெற்றது. உடனே அண்ணலார் அவரின் தந்தையின் சகோதரருக்கு ஆளனுப்பி (வரவழைத்து) ( أَعْطِ ابْنَتَىْ سَعْدٍ الثُّلُثَيْنِ وَأَعْطِ أُمَّهُمَا الثُّمُنَ وَمَا بَقِيَ فَهُوَ لَكَ ) “சஅத் அவர்களின் புதல்வியருக்கு (அவர் விட்டுச்சென்ற சொத்தில்) மூன்றில் இரு பங்குகளைக் கொடுங்கள்; அவ்விருவரின் தாயாருக்கு (சஅத்தின் மனைவிக்கு) எட்டில் ஒரு பங்கைக் கொடுத்துவிடுங்கள். எஞ்சியுள்ளதே உமக்கு உரியதாகும்" எனக் கூறினார்கள். நூல்:- திர்மிதீ-2018
இஸ்லாம் கூறும் சொத்துரிமைச் சட்டம் வருவதற்கு முன், பெண்களுக்கு சொத்துரிமை என்பது அறவே கிடையாது. அதனால் தான், சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கு மனைவியும் இரு புதல்வியரும் இருந்தும்கூட அவருடைய சகோதரரே சஅத் (ரலி) அவர்களின் முழுச்சொத்தையும் எடுத்துக் கொண்டுவிட்டார். அவர் பெற்ற குழந்தைகளும் மனைவியும் நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை வந்தது. திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பெற்றன. பெண்களின் சொத்துரிமை நிலைநாட்டப்பட்டது; அவர்களின் கௌரவம் காக்கப்பட்டது.
தந்தையின் சொத்தில் மகளுக்கும், கணவனின் சொத்தில் மனைவிக்கும், மகனின் சொத்தில் தாய்க்கும் பாகம் உண்டு என அறியமுடிகிறது.
இன்றளவும் சில சமூகங்களில் பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது. வேறு சில சமூகங்களில் கடந்த நூற்றாண்டில்தான் மிகவும் தாமதமாகப் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்பட்டது. அதுவும் பெண்கள் கடுமையாகப் போராடிய பிறகே அந்த உரிமை அவர்களுக்குச் சட்டமாக்கப்பட்டது. ஆனால் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே, மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாத காலத்திலேயே குர்ஆன் பெண்களுக்குச் சொத்துரிமையை வழங்கிவிட்டது. அதற்காகப் பெண்கள் போராட்டம் நடத்தாத காலம் அது.
தாய், தந்தை, கணவன், நெருங்கிய உறவினர்கள் ஆகியோரின் சொத்துக்களில் பெண்களுக்கு உரிய பங்கை முறையாக அளித்துவிட்டால், வரதட்சனை, ஆதரவற்ற பெண்கள் சந்திக்கும் துயரம் ஆகிய அவலங்கள் அகன்றுவிடும். பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பிற்குக் குர்ஆன் அன்றே வழிகண்டது போற்றுதலுக்குரிய அம்சமாகும்.
காசு பணம்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நாயகமே! (என் கணவர்) அபூசுப்யான் கருமியான மனிதர். எனக்கும், என் குழந்தைக்கும் செலவுக்கு போதிய பணத்தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்கு தெரியாமல் (திருட்டுத்தனமாக) எடுத்துக் கொண்டதைத்தவிர (போதுமான தொகையை அவர் தர மாட்டார்) என்று கூறினார். அதற்கு அண்ணலார் ( خُذِي مَا يَكْفِيكِ وَوَلَدَكِ بِالْمَعْرُوفِ ) "உனக்கும், உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்!" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5364
அப்பாடா தீர்ந்தது ஒரு பிரச்சனை. கணவனின் சட்டைப் பையிலிருந்து பயந்து பயந்து பணம் எடுத்தவர்கள் இனி தைரியமாக எடுக்கலாம். கணவனுக்கு தெரியாமல் அவன் சட்டைப் பையிலிருந்து பணம் எடுக்காத மனைவியும் உண்டா?
குடும்பச் செலவுக்கு போதுமான தொகை வைத்திருந்தும் அதை தர மறுக்கும் கருமியான தன் கணவனிடமிருந்து அவனுக்கே தெரியாமல் வீட்டு செலவுக்கு போதுமான தொகையை மனைவி எடுத்துக் கொண்டால் அது திருட்டு குற்றமாகாது. அதற்காக அவளை தண்டிக்கவும் கூடாது என்பதே இஸ்லாமிய நிலைப்பாடு.
கணவனின் பாக்கெட்டிலிருந்து காசு பணங்களை மனைவி தாராளமாக எடுத்து கொள்ளலாம். அனுமதி உண்டு. ஆனால் கணவன், மனைவியின் சேமிப்பு காசு பணங்களை அவளின் அனுமதியின்றி எடுக்க இயலாது.
திருமணத்தின்போது அவளுக்கு கிடைக்கும் மணக்கொடையை பெற்றோருக்கோ, சகோதரர்களுக்கோ, கணவனுக்கோ அவளாக மனமுவந்து கொடுத்தால் பரவாயில்லை. அதை அவளிடம் வற்புறுத்தி வாங்க இயலாது. காரணம், அவளுடைய சொத்து சுகங்களை அவள் விரும்பியவாறு செய்யும் உரிமை அவளுக்கு உண்டு. அதில் எவரும் குறுக்கிட அனுமதியில்லை.
அவள், தன்னுடைய காசு பணங்களில் இருந்து பெற்றோர், சகோதரர்கள், கணவன், பிள்ளைகள் என யாருக்காவும் செலவு செய்யவேண்டிய கட்டாயம் இல்லை.
சம்பாதிக்கலாம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்றொரு மனைவியான ஜைனப் (ரலி) அவர்கள் தோல் பதனிடும் கைத்தொழில் மூலம் சம்பாதிப்பவராக இருந்தார்கள்.
ஹிஜ்ரி 23 ம் ஆண்டு ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் வந்து, தான் வியாபாரம் செய்ய போவதாகக் கூறி கடன் கேட்டார். ஜனாதிபதி அவர்கள் அப்பெண்ணுக்கு பைத்துல்மால் எனும் பொது நிதியிலிருந்து 4000 தீனார்கள் (தங்கக்காசுகள்) கடன் கொடுத்தார்கள். அப்பெண் அதைப் பெற்றுக் கொண்டு சிரியா நாட்டுக்கு சென்று வணிகம் செய்து பொருளீட்டி வந்தார். நூல்:- முஅத்தா மாலிக், தாரீகுத் தபரீ
இதிலிருந்து பெண்கள் வீட்டில் முடங்கி கிடக்கக்கூடியவர்கள் அல்லர் மாறாக, அவர்கள் சொந்தமாகத் தொழில் செய்யலாம், வியாபாரம் செய்யலாம் ஆனால் இவைகள் அனைத்தும் இஸ்லாமிய ஒழுக்க நெறிகளுக்குள் இருக்க வேண்டும் என்று தெரிகிறது.
பெண்கள் தன் வீட்டில் இருந்தவாறு அல்லது வெளியூர் வெளிநாடு என்று எங்கு வேண்டுமானாலும் போய் சம்பாதிக்கலாம். அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. ஆனால், அவர்கள் வெளியே செல்லும்போது பர்தாவை முறையாக கடைபிடிக்க வேண்டும். மேலும், அதற்காக வெளியூர் பயணம் கிளம்பினால் தந்தை, தாய்மாமன், உடன்பிறந்த சகோதரன், கணவன், பெற்றப்பிள்ளை, பேரப்பிள்ளை போன்ற மஹ்ரமான (மணமுடிக்க அனுமதியில்லாத) ஆண் துணை அவசியம் வேண்டும்.
கல்வியுரிமை
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( طَلَبُ اَلْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ وَ مُسْلِمَةٍ ) (பயனுள்ள) கல்வியைத் தேடுவது முஸ்லிமான ஒவ்வொரு ஆண், பெண் மீதும் கடமையாகும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா- 220, ஸஹீஹ் ஜாமிஉ
உலகிலேயே முதன்முதலில் கி.பி. 859 ஆம் ஆண்டு (அதாவது 9 ஆம் நூற்றாண்டில்) மொரோக்கோவின் ஃபெஸ் (Fez) என்ற நகரில் அல்கரவிய்யின் பல்கலைக்கழகம் (Al Qarawiyyin University) நிறுவப்பட்டது. அதை நிறுவியவர் ஃபாத்திமா பின்த் முஹம்மத் அல்ஃபிஹ்ரிய்யா அல்குறைஷியா என்றொரு முஸ்லிம் பெண்.
உலகிலேயே மிகப் பழமையானதும் இன்று வரை இயங்கிக்கொண்டிருப்பதும் இந்தப் பல்கலைக்கழகம்தான். இதில் இன்னொரு புதுமை என்னவென்றால் உலகிலேயே முதன்முதலாக படிப்பு முடிந்ததும் பட்டங்கள் அளிக்கப்படுவதை அறிமுகப்படுத்தியதும் இந்தப் பல்கலைக்கழம்தான்! இதன் பிறகு தான் இதர பல்கலைக்கழகங்களில் பட்டங்கள் அளிக்கும் பழக்கம் வந்தது.
ஃபாத்திமாவும் அவருடைய சகோதரி மரியமும் நன்றாகப் படித்தனர். இஸ்லாமியப் பாடங்களையும் ஃபிக்ஹ் கலையையும் ஹதீஸ் கலையையும் கற்றுத் தேர்ந்தனர். நூல்:- சீரத் அஃலாமுந் நுபலா
9 - ஆம் நூற்றாண்டில் ஒரு முஸ்லிம் பெண் தானும் உயர்தரக் கல்வி கற்று, உலகுக்கே முன்மாதிரியாக முதல் பல்கலைக்கழகத்தை நிறுவி, பட்டம் அளிக்கும் பழக்கத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
ஆனால் 19-ஆம் நூற்றாண்டில் “எங்களுக்குக் கல்வி கற்கும் உரிமை வேண்டும்” என்று மேலைநாடுகளில் பெண்கள் வீதிக்கு வந்து போராடும் நிலைதான் இருந்தது. அப்படி வீதிக்கு வந்து போராடிய ஒரு பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தப் போராட்டங்களின் விளைவாக 1821 ஆம் ஆண்டில்தான் அமெரிக்காவில் முதல் பெண் பல்கலைக்கழகம் உருவானது. 1841 ஆம் ஆண்டில்தான் பெண்கள் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகக் கற்றுக் கொடுக்க அனுமதிக்கப்பட்டனர்.
1400 வருடங்களுக்கு முன்பாக நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் பெண்கள் கல்வி கற்பதற்குரிய அவசியத்தைப் போதித்து அதற்குரிய அனைத்து உரிமைகளையும் வழங்கினார்கள்.
கற்பைக் காத்துக்கொள்வது
ஜாபிர் ரலி அவர்கள் கூறியதாவது. அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலுக்கு முசைகா என்ற அடிமைப்பெண் இருந்தாள். அவளை (விபச்சாரம் என்ற) பாவச்செயலில் (ஈடுபடுமாறு) அப்துல்லாஹ் பின் உபை நிர்பந்தித்து வந்தான். அவள் ஓரளவு நல்லவளாக இருந்தாள். எனவே அதற்கு மறுத்து வந்தாள்.
அப்போதுதான் அல்லாஹுத்தஆலா கற்பைப் பேண விரும்பும் உங்கள் அடிமைப்பெண்களை இவ்வுலக வாழ்க்கையின் (அற்பப்) பொருளை நீங்கள் பெறுவதற்காக விபச்சாரத்திற்கு நிர்ப்பந்திக்காதீர்கள். (24:33) என்ற இந்த வசனத்தை அருளினான். நூல்:- தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர்
எது பெண்ணே ஆடை சுதந்திரம்...?
இஸ்லாம் கூறும் ஆடை முறையை விமர்ச்சித்துதான், இஸ்லாம் பெண் சுதந்திரத்திற்கு எதிரானது என்று சில விஷமிகள் கோஷமிடுகிறார்கள். ஆனால், நடுநிலை சிந்தனையாளர் இஸ்லாம் கூறும் ஆடை முறை தான் பெண்களுக்கு பாதுகாப்பானது என்று புகழாரம் சூட்டுகிறார்கள்.
பெண்ணுரிமையை பற்றி பேசித் திரிவோர் பெண்கள் தன் மேனியழகு தெரியாத விதமாக உடல் முழுவதுமாகப் போர்த்திக்கொள்வதை பெண்ணுரிமைக்கு, பெண் சுதந்திரத்திற்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள்.
அலங்கோலமாக ஆடையணிந்து அந்நியர்களின் உணர்வுகளை தூண்டிவிடுவதும், இரவு ஆடையை (நைட்டி, பேண்டிஸ்) உடுத்திக்கொண்டு மார்பு தெரிய, அடுத்த தெரு வரை சென்று வருவதும் தான் முழுமையான பெண்ணுரிமையா?
கொண்டவன் காணவேண்டியதை! கண்டவனும் காண்பது நியாயம் தானா? இளமை அளவை எடுத்துக்காட்டும் உடலை ஒட்டிய கணித... ஆடையா? சுதந்திரம்?
பண்பான ஆடை உடுத்தி வெளியே செல்லும் பெண்களை பத்தாம்பசலி என்கின்றனர். இன்று பெண்களில் பலருக்கும் துப்பட்டாவின் பயனே தெரிவதில்லை. கேட்டால், பெண் சுதந்திரம், ஃபேஷன் என்கிறார்கள்.
ஆபாசத்தைத் தூண்டும் ஆடையை, பெண் சுதந்திரம் என்றால்? என்னவென்பது? அந்நியர்களின் பார்வையால் கற்புக்கு களங்கம் வந்து விடுமா? என்று வேதாந்தம் பேசுவது முறையாகுமா?
நண்பர்கள் என்று பழகிக்கொண்டு நடுரோட்டில் நாய்களைப் போன்று ஒட்டி உறவாடிக்கொள்வது பெண்ணுரிமை அல்ல. அது நம் கலாச்சாரத்திற்கு எதிரானவையே!
சேலை கட்டிய பொம்மையையும் தடவிப்பார்க்கும் காட்டுமிராண்டி ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை பெண்கள் கவனிக்க வேண்டும். பெண்ணுரிமை என்ற பெயரில் பெண்கள் தம் உடல் தெரிய உலாவுவது உயர் பண்பல்ல.
தவறு செய்பவரை விட தூண்டுபவருக்குத்தான் அதிக தண்டனை விதிக்கவேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது. சட்டத்தைப் பற்றி நமக்கென்ன கவலை என எண்ணுவதுதான், நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு ஒரு காரணம்.
எனவே, நாம் இஸ்லாம் கூறிய முறையில் பெண்ணுரிமைப் பேணி, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951