Search This Blog

Thursday, 20 January 2022

இயற்கை மரபுகள்

 

இயற்கை மரபுகள்

 

 فِيْهِ رِجَالٌ يُّحِبُّوْنَ اَنْ يَّتَطَهَّرُوْا ‌ وَاللّٰهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ

 

அங்குள்ள (குபா நகரத்திலுள்ள) மனிதர்கள் தூய்மையாக இருக்கவே விரும்புகின்றனர். அல்லாஹ்வும் (இத்தகைய) தூய்மையானவர்களையே நேசிக்கின்றான்.   திருக்குர்ஆன்:- 9:108

 

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுத்தம் மிக அவசியமாகும். தனி மனித தூய்மை சுற்றுச்சூழலை பாதுகாக்க பெரிதும் உதவும். சுத்தம் பேண தவறும் போது நச்சுக் கிருமிகள் மூலம் பலவிதமான நோய்கள் மனிதனையும், பிற உயிரினங்களையும் தொற்றிக் கொள்கிறது. தூய்மையைக் கெடுப்போர் மக்களின் சாபத்திற்குள்ளாவார்கள் என்று இஸ்லாம் எச்சரிக்கிறது.

 

உடல் தூய்மைக்காக ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய இயற்கை மரபுகள் சில உள்ளன. இவை இறைத்தூதர்கள் பின்பற்றி வந்த ஒழுக்க நெறியாகும்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( عَشْرٌ مِنَ الْفِطْرَةِ قَصُّ الشَّارِبِ وَإِعْفَاءُ اللِّحْيَةِ وَالسِّوَاكُ وَاسْتِنْشَاقُ الْمَاءِ وَقَصُّ الأَظْفَارِ وَغَسْلُ الْبَرَاجِمِ وَنَتْفُ الإِبْطِ وَحَلْقُ الْعَانَةِ وَانْتِقَاصُ الْمَاءِ ) பத்து விஷயங்கள் இயற்கை மரபுகளில் அடங்கும். (அவையாவன) மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்கள் வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்புகளின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் சுத்தம் செய்வது. அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-436

 

கைகளைக் கழுவுதல்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلاَ يَغْمِسْ يَدَهُ فِي الإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلاَثًا فَإِنَّهُ لاَ يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ ) உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தமது கையை மூன்று முறை கழுவாமல் பாத்திரத்திற்குள் இட வேண்டாம். ஏனெனில் இரவில் அவரது கை எங்கே இருந்தது என்பதை அவர் அறிய மாட்டார்.        அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்  நூல்:- முஸ்லிம்-467

 

மனிதன் அசந்து உறங்கும் உறக்கத்தின் போது அக்குள் பகுதி, முன் பின் துவாரங்கள், காது, மூக்கு போன்ற உறுப்புகளில் கைகள் படுவதற்கு வாய்ப்பு அதிகம். மேலும் நம்மையும் அறியாமல் புண்ணை சொரிதல், கொசு போன்றவைகளால் கைகளில் கெட்ட கிருமிகள் படிந்திருக்கும். இதனாலேயே உறங்கி எழுந்தவுடன் வேர்வையும், அழுக்கும் உள்ள இரு கைகளையும் சுத்தமாக கழுவாமல் இதர வேலைகளில் ஈடுபடக்கூடாது என்பது இந்த நபிமொழியின் கருத்தாகும்.

 

பல் துலக்குதல்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ ) பல் துலக்குவது வாயைத் தூய்மையாக்கும்; இறைவனின் பொருத்தத்தையும் பெற்றுத்தரும். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- நசாயீ-5, முஸ்னது அஹ்மது, தாரமீ-681

 

அபூ மூசா அல்அஷ்அரி (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது அண்ணலார் தமது கையிலிருந்த ஒரு குச்சியில் பல் துலக்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.    நூல்:- புகாரீ-244

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ( أَكْثَرْتُ عَلَيْكُمْ فِي السِّوَاكِ ) "பல் துலக்குதல் பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்ப) பலமுறை வலியுறுத்துகிறேன்" என்றார்கள்.   அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள்  நூல்:- புகாரீ-888

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கும்போதுகூட மிஸ்வாக் குச்சியினால் பல் துலக்கியுள்ளார்கள் என்கிறது ஒரு நபிமொழி  நூல்:- புகாரீ-890

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூங்குவதற்கு முன்பும், நடு இரவில் விழிக்கும் போதும், தூங்கி எழுந்ததும், தொழுகைக்கு முன்பும், சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும், வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் நுழையும்போதும், பயணத்தின் போதும் ஆகிய நேரங்களில் மிஸ்வாக் என்ற அராக் (Araak)  குச்சியின் மூலம் பல் துலக்குவதை கடைபிடித்து வந்துள்ளார்கள் என பல நபிமொழி நூல்கள் கூறுகிறது.

 

மனிதன் உட்கொள்ளும் உணவுகள் குடலுக்குள் சென்று செரிக்கப்பட்டு சத்தாகவும், கழிவாகவும் மாறும். குடலிலுள்ள கழிவுகள் உரிய காலத்திற்குள் வெளியேற்றப்படாவிட்டால், அதன் நாற்றம் வயிற்றிலிருந்து வாய் வழியாக வெளியேறும். தூங்கி எழும்போதும், உணவு உண்ட பிறகும், நீண்ட நேரம் பேசாமல் மௌனமாக இருக்கும் போதும், நீண்ட நேரம் தொடர்ந்து பேசும் போதும் வாயிலிருந்து துர்நாற்றம் வெளிப்படுவது உண்டு. அப்போதெல்லாம் பல்லை துலக்கி நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.

 

நாம் பகலில் உண்ணுவதும், பருகுவதும், பேசுவதும் மூலமாக பகலில் வாய் அசைந்து கொண்டே இருப்பதால் பற்களை பாதிப்புக்குள்ளாக்கும் Plazma  என்ற சுரப்பி வேலை செய்ய முடியாது. ஆனால் இரவு நேரத்தில் நாம் தூங்குவதன் மூலமாக எந்த செயலும் செய்யாமல் வாய் மூடிக்கொள்வதால் Plazma  நன்றாக வேலை செய்யும். எனவே இரவு நேரத்தில் தான் பற்கள் பெரும்பாலும் பாதிப்படைகிறது.

 

எனவே, இரவு தூக்கத்திற்கு முன் பல் துலக்கிக் கொள்வது மூலம் Plazma  வாயிலிருந்து அகற்றப்படுகிறது. பற்கள் பாதுகாப்பு பெறுகிறது.

 

பற்கள் மற்றும் ஈறுகளில் தங்கிவிடும் உணவுப் பொருட்கள் மற்றும் அழுக்குகளால் ஏற்படும் அசுத்தம் ஆகியவற்றை அகற்றி பற்களைத் தூய்மையாக வைத்திருப்பதற்கும் பல் துலக்குதல் மிகவும் துணை புரியும்.

 

பற்களைப் பேணி பாதுகாப்பதற்கு ஆரம்பத்திலேயே முயற்சிக்காவிடில் அதன் மூலம் பற்பல நோய்கள் உண்டாகி பின்னர் பற்களையே அகற்ற வேண்டிய ஓர் இக்கட்டான நிலை உருவாகலாம்.

 

"ஆலும், வேலும் பல்லுக்குறுதி" என்பது தமிழ் பழமொழி

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய அறாக் (Araak) என்ற மரத்துடைய தோல் நீக்கப்பட்ட குச்சி நமது ஊர்களில் கிடைக்கும் ஆலம் விழுது, வேப்பங்குச்சி போன்றவையே. இவைகளை பல் துலக்க பயன்படுத்துவது சிறந்தது. இதில் கிருமிகளை அழிக்கும் சக்தி அடங்கியுள்ளன.

 

டூத் பிரஷ்-பேஸ்ட் இவற்றை உபயோகிப்பதால் தான் பல்லை முழுமையாக சுத்தப்படுத்தமுடியும் என பலரின் எண்ணம் முற்றிலும் தவறாகும். தண்ணீரையும் வெறும் பிரஷ்யையும் உபயோகித்து பற்களை முழுமையாக நன்கு தேய்த்தாலே போதும் பற்கள் சுத்தமாகிவிடும் என்கின்றனர் பல் மருத்துவர்கள்.

 

பல் துலக்கும்போது சளியும் வெளிவந்து விடுகிறது. பற்களை பேணுவதின் மூலம் உடல் நலம் பேணப்படுகிறது. இதனால் பல் துலக்குவது நபிவழி (சுன்னத்) ஆகும். குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தெளிவாக பல் துலக்குவது சிறந்ததாகும்.

 

குறிப்பாக தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் பல் துலக்க வேண்டும். பெட் காபி என்ற பெயரில் தூக்கத்திலிருந்து விழித்ததும் படுக்கை விரிப்பை விட்டு கூட எழாமல், பல் துலக்காமல் டீ, காபி பருகுவது ஆக மோசமான சோம்பேறித்தனமாகும். பல் துலக்காமல் பருகுவதனால் உடல் உபாதை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

 

மீசையைக் கத்தரித்தல்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَحْفُوا الشَّوَارِبَ وَأَعْفُوا اللِّحَى ) மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளர விடுங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்   நூல்:- புகாரீ-5892, முஸ்லிம்-432

 

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தனது தாடியை அதன் அகல வாக்கிலிருந்தும் நீளவாக்கிலிருந்தும் கத்தரித்து எடுப்பவர்களாக இருந்தார்கள்.            நூல்:- திர்மிதீ-2683

 

தாடி ஒரு பிடிக்கு மேல் வளர்ந்துவிட்டால் அதிகமுள்ளதைக் குறைக்கலாம். பக்கதாடிலுள்ள பிசிறுகளை வெட்டலாம்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ لَمْ يَأْخُذْ مِنْ شَارِبِهِ فَلَيْسَ مِنَّا ) மீசையைக் கத்தரித்து எடுக்காதவர் நம்மைச் சேர்ந்தவர் அல்லர். அறிவிப்பாளர்:- ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2682

 

நபிமொழிகளில் மீசையைக் கத்தரித்தல் என்பதை குறிக்க "கஸ்" எனும் சொல்லும், "இஹ்ஃபாஉ" எனும் சொல்லும் ஆளப்பட்டுள்ளது. "கஸ்" என்றால் மீசை முடி மேல் உதட்டில் விழாதவாறு கத்தரித்தல் என்று பொருளாகும். "இஹ்ஃபாஉ" என்றால் சருமம் வெளியே தெரிகின்ற அளவுக்கு மீசையை ஒட்ட நறுக்குதல் என்று பொருளாகும். இதிலிருந்து மீசை முடியை கத்தரித்து குறைக்கவும் செய்யலாம், ஒட்ட நறுக்கவும் செய்யலாம் என அறிய முடிகிறது. இருந்தாலும் முதலாவது முறையே சிறந்தது என சில அறிஞர்கள் கூறுகிறார்கள். (நூல்:- அல்மின்ஹாஜ்) மீசையை முழுமையாக சிரைப்பது நபிமொழிக்கு மாற்றமேயாகும்.

 

நமது முகத்தில் கண்களுக்கு கீழிலிருந்து மேல் உதடு முழுவதும் வரையில் உள்ள பகுதி முக்கியமான பகுதியாகும். இந்த பகுதியிலிருந்து தான் நேரடியாக மூளையுடன் இரத்தக் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்பகுதியில் தொற்று நோய் (Infection)  ஏற்பட்டால் அது ஆழமாக சென்று மூளைக்குள் ஊடுருவி ஆபத்தான பல நோய்களை உருவாக்கி விடும். எனவே மேல் உதட்டை பாதுகாப்பது மிக முக்கியமாகும்.

 

மேலும் உதடுகளில் வேகமாக உணர்வுகளை தூண்டும் சக்திமிக்க சுரப்பிகள் உள்ளன.

 

மேல் உதட்டின் சுரப்பிகளில் ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன. மேல் உதட்டிற்கு நீரும், காற்றும் தேவைப்படுகிறது மீசை அடர்த்தியாகவோ அல்லது நீளமாகவோ இருந்தால் மேல் உதட்டிற்கு நீரும், காற்றும் படுவது தடுக்கப்பட்டுவிடும். அப்பொழுது நாள்பட்ட சளி, ஈறுகளின் வீக்கம், நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

 

மேலும் மீசை அடர்த்தியாகவோ அல்லது நீளமாகவோ வாயை மூடிக்கொள்ளும் விதத்தில் இருந்தால் அந்த மீசை முடிகளில் அழுக்கும், தூசிகளும், கிருமிகளும் தங்கி கொள்ளும் வாய்ப்புண்டு. உணவு, பானம் உட்கொள்ளும் போது அவை வயிற்றுக்குள் சென்று தீங்கு விளைவிக்க நேரிடும்.

 

கீழ் உதட்டின் தன்மையும், அமைப்பும் மேல் உதட்டிற்கு முற்றிலும் மாறுபாடானது. எனவே கீழ் உதட்டுக்கு இந்த அளவு கவனிப்பு  தேவையில்லை.

 

நகங்களை வெட்டுதல்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றில்  நாற்பது நாட்களுக்கு மேல் விட்டு வைக்கக்கூடாதென எங்களுக்கு கால வரம்பு விதிக்கப்பட்டிருந்தது.                நூல்:- முஸ்லிம்-431

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை நகம் வெட்டுபவர்களாக இருந்தார்கள்.  நூல்:- தப்ரானீ, பைஹகீ

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (வெட்டிய) நகங்களையும், முடிகளையும் புதைப்பதே சிறந்தது. ஏனெனில் மக்கள் இப்பொருள்களை வைத்து செய்வினை (சிஹ்ர்)களில் ஈடுபட்டு விடக்கூடாது. அறிவிப்பாளர்:- வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மேலும் பல நபித்தோழர்கள் வெட்டிய நகங்களையும், முடிகளையும் புதைக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்துள்ளார்கள்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) ஜும்ஆ தொழுகைக்கு செல்வதற்கு முன்பாக தமது மீசையைக் குறைத்து, நகங்களை வெட்டிக் கொள்வார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ

 

நகங்களை வெட்டுவதற்கு நேரம் குறிப்பிடப்படவில்லை என்றாலும் வெட்டும் அளவுக்கு எப்போது அது வளர்ந்து விடுமோ உடனே அது வெட்டப்பட வேண்டும். வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு செல்வதற்கு முன்பாக வெட்டிக் கொள்வது சிறந்ததாகும்.

 

வலது கையின் ஆட்காட்டி விரலிலிருந்து துவங்கி சுண்டு விரல் வரை, பிறகு இடது கையின் சுண்டு விரலிலிருந்து இடது கையின் பெருவிரல் வரை, இறுதியாக வலது கையின் பெருவிரல் நகத்தை வெட்ட வேண்டும்.

 

வலது காலின் சுண்டு விரலில் துவங்கி இடது காலின் சுண்டு விரலில் முடிப்பது. இதுவே அருமை நாயகம் (ஸல்) அவர்களின் நகம் வெட்டுதல் முறையாகும்.  நூல்:- ஷாமி 5/288

 

நகம் என்பது என்ன?  உடம்பில் இருக்கும் தோலில் கழிக்கப்பட்ட செல்கள் தான்! உயிரற்ற செல்கள் என்று கூட அதை அர்த்தம் கொள்ளலாம். அதனால் தான் நகத்தை என்ன செய்தாலும் வலிப்பதில்லை.

 

நகத்தை அடிக்கடி கடித்துக் கொண்டிருப்பது ஒரு வித நோயாகும். அதன் பெயர் "ஒனிச்சோ டில்லோ மேனியா" (onycho tillo mania) எனப்படும். நகத்தை அடிக்கடி கடிப்பதால் அதிலிருக்கும் அழுக்குகள் வயிற்றுக்குள் சென்று பல நோய்களுக்கு வழி வகுக்கும்.

 

நீண்ட நகம் எதிர்பாராவிதமாக யார் மீதாவது பட்டு காயப்படுத்தி விடலாம். உணவு உண்ணும் போது உணவு துகள்கள் அதிலேயே தங்கிவிடும். அதன்மூலம் கிருமிகள் தோன்றும். மேலும் மலம் கழித்து விட்டு சுத்தம் செய்யும் போது அசுத்தங்கள் நகங்களுக்கு மத்தியில் தேங்கிவிட வாய்ப்புண்டு. எனவே நகங்களுக்கிடையே அடைந்து கிடக்கும் அழுக்குகள், கிருமிகள் உணவு உண்ணும்போது உணவுடன் சேர்ந்து வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அதனால் குடல் நோய்கள் ஏற்படும் என்கிறது மருத்துவ உலகம். சுருங்கக்கூறின் நகம் வளர்ப்பது சுத்தத்திற்கு எதிரானதேயாகும்.

 

நகம் வெட்டியவுடன் விரல்களை கழுவாமல் உடலை சொறிந்தால் சரும நோய் உண்டாகும் என்று ஒரு மருத்துவ நூல் கூறுகிறது.                     நூல்:- தஸ்ஹீலுல் மனாஃபிஉ

 

எனவே நகங்களை வெட்டியவுடன் விரல்களை நன்கு கழுவி சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். நகம் வெட்டிய பின்னர் அதனை அங்குமிங்கும் எறிந்து விடுவதால் சுற்றுச்சூழல் கெட்டுபோகும். அதனை முறையாக புதைத்து விடுவது அல்லது குப்பைத் தொட்டியில் போட்டு விடுவதுதான் சாலச்சிறந்தது.

 

இரவிலும் பகலைப் போன்றே தலைமுடி, நகம் போன்றவற்றை வெட்டுவது ஆகுமானதே! இரவில் இது கூடாது என்று கருதுவது மார்க்க ஆதாரமற்ற கற்பனையேயாகும்.   நூல்:- ஆப்கே மசாயில் 3/363

 

குளிப்பு கடமையான நிலையில் முடி, நகம் வெட்டுவது (மக்ரூஹ்)  வெறுக்கத்தக்கதாகும். நூல்:- அஹ்சனுல் ஃபதாவா 2/38, ஃபதாவா ஆலம்கீரி 5/358

 

மர்ம உறுப்பின் முடிகளை மழித்தல்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மர்ம உறுப்பின் முடிகளை களைந்திட சவரக்கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடியை அகற்றுவது இயற்கை மரபுகளில் அடங்கும்.  அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்     நூல்:- புகாரீ-5889

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ لَّمْ یَحْلِقْ عَانَتَهُ وَیُقَلِّمْ اَظْفَارَهُ وَیَجُزَّ شَارِبَهُ فَلَیْسَ مِنَّا ) மர்ம உறுப்பின் முடிகளை மழிக்காதவனும், நகங்களை (முறையாக) வெட்டாதவனும், மீசையை (முறையாக) கத்தரிக்காதவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.         நூல்:- முஸ்னது அஹ்மத்

 

மர்ம உறுப்பின் முடிகளை அடிக்கடி மழிப்பதால் போக சக்தி அதிகரிக்கும் என்கிறனர் அறிஞர்கள்.

 

உடலிலிருந்து வெளியேறும் வியர்வையானது முடிகள் அடர்த்தியாக உள்ள இடங்களில் தேங்கி நின்று துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. அக்குள் முடிகளை அகற்றாமல் இருந்தால் அதிலிருந்து வீசும் துர்நாற்றத்தை நம்மால் கூட சகித்துக் கொள்ள முடியாது. எனவே பார்ப்பவர்கள் பரிகாசிக்கும்படி நமது அக்குள் முடியை வளரவிடாமல், அடிக்கடி அதனை அகற்றி தூய்மை செய்தல் அவசியமாகும்.

 

மர்ம உறுப்பின் முடிகளை மழிக்காமல் இருந்தால் அங்கு கிருமிகளும், அழுக்குகளும் படிந்து ஆரோக்கியக் கேடு உருவாகும். மேலும் அவ்விடத்தில் ஒருவகையான துர்நீர் கசிவதால் நாம் அணியும் ஆடைகளையும் அசுத்தமாக்கிவிடும். அருவருப்பை உண்டாக்கும் அந்த முடிகளை அடிக்கடி மழிப்பதே ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும்.

 

மீசை, நகம், மர்ம உறுப்பின் முடி, அக்குள் முடி ஆகியவற்றை 40 நாட்களுக்கு பின்னர் தான் அகற்ற வேண்டும் என்பதல்ல. 40 நாட்களுக்கு மேல் அதிகமாகாமல் அதற்குள் அகற்றிவிட வேண்டும் அதற்கு மேல் வளரவிடக் கூடாது என்பது தான் நபிமொழியின் கருத்து. நீளமாக வளரவிடாமல் வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது மாதத்திற்கு இருமுறையோ அவ்வப்போது அவற்றை அகற்றி விடுவதை சிறந்த முறையாகும்.

 

தண்ணீரால் சுத்தம் செய்தல்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا ذَهَبَ أَحَدُكُمْ إِلَى الْغَائِطِ فَلْيَذْهَبْ مَعَهُ بِثَلاَثَةِ أَحْجَارٍ يَسْتَطِيبُ بِهِنَّ فَإِنَّهَا تُجْزِئُ عَنْهُ ) ‏ உங்களில் ஒருவர் மலம் ஜலம் கழிக்கச் சென்றால் அவர் தன்னுடன் கற்களை எடுத்துச் செல்லட்டும். அவற்றைக் கொண்டு சுத்தம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அந்த (மூன்று) கற்கள் அதற்கு போதுமானதாகும்.  அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-36

 

மதீனாவுக்கு அருகில் உள்ள குபாவாசிகளைப் பற்றியே தலைப்பில் காணும் திருவசனம் (9:108) அருளப்பட்டது. இவ்வசனம் அருளப்பட்ட பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குபாவாசிகளை சந்தித்து "அல்லாஹ் உங்களது (குபா) பள்ளிவாசல் தொடர்பாக குறிப்பிடுகையில், தூய்மை விஷயத்தில் உங்களைப் பாராட்டியுள்ளான். அப்படி நீங்கள் கடைபிடிக்கின்ற அந்த தூய்மை என்ன?" என்று வினவினார்கள்.

 

அதற்கு குபாவாசிகள் நாயகமே! அல்லாஹ் மீது ஆணையாக எங்களுக்கு எதுவும் தெரியாது. இருப்பினும் நாங்கள் மலம் கழித்த பின்னர் ஆசனவாயை கல்லால் சுத்தம் செய்த பிறகு தண்ணீராலும் கழுவித் தூய்மைப்படுத்திக் கொள்கிறோம் என்று பதிலளித்தனர்.

 

அப்போது அண்ணலார் "இது தான் சரியானது. இதை நீங்கள் தொடர்ந்து கடைபிடியுங்கள்" என்று கூறினார்கள்.  நூல்:- அல்பஸ்ஸார், முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கசீர் அத்தவ்பா-108

 

இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் தண்ணீர் மிகவும் பற்றாக்குறையாக இருந்த சமயத்தில் கல், மண்க்கட்டி போன்ற பொருட்களால் சுத்தம் செய்து வந்தனர். பின்னர் தண்ணீர் தாராளமாக கிடைக்க துவங்கியதும் தண்ணீரை பயன்படுத்தினர். கல், தண்ணீர் ஆகிய இரண்டையும் பயன்படுத்தினர்.

 

தற்போது நாம் மலம் கழித்த பின்னர் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்கிறோம். எனினும் கற்களைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்யலாம். இவ்வாறு கற்களைக் கொண்டு மட்டும் சுத்தம் செய்யும் போது குறைந்த பட்சம் மூன்று கற்களை எடுத்து கொள்ள வேண்டும். மூன்று கற்களைக் கொண்டு சுத்தமாகாவிட்டால் சுத்தமாகும் வரை கற்களை ஒற்றைப் படையாக அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

கற்கள் அல்லது காகிதம் போன்ற பொருட்களால் சுத்தம் செய்ய பின்னர் தண்ணீராலும் சுத்தம் செய்வோரை அல்லாஹ்வே புகழ்ந்து கூறியுள்ளான். மேலும் இவ்வாறு சுத்தம் செய்யும் போது அசுத்தத்தில் கை படுவதில்லை. கல் அல்லது காகிதத்தோடு நிறுத்தி கொள்வதால் முழு தூய்மை ஏற்படாமல் போவதையும் தடுக்கலாம். கையும் பாதுகாக்கப்பட்டு முழுமையான தூய்மையும் கிடைத்து விடும். சுத்தத்தில் பேணுதலான இந்த நடைமுறை இன்றளவும் சில முஸ்லிம்களிடம் இருந்து வருகிறது.

 

தண்ணீரை மட்டும் பயன்படுத்துவோர் கூட சுத்தம் செய்த பிறகு மண் அல்லது நறுமண சோப்பு போன்ற பொருட்களால் அசுத்தமும், நாற்றமும் நீங்கும் அளவுக்கு கையை சுத்தமாக கழுவி கொள்ள வேண்டும். இல்லையேல் மலத்தில் இருக்கும் கொடிய கிருமிகள் கையில் தொற்றிக் கொள்ளவும், அவை நோயை பரப்பவும் காரணமாகிவிடும் என இஸ்லாம் அறிவுறுத்துக்கிறது. 

 

மேலைநாட்டினர் பலரும் மலம் கழித்துவிட்டு காகிதத்தால் மட்டும் சுத்தம் செய்கின்றனர். அதற்கு தண்ணீரை பயன்படுத்துவதில்லை. இதனால் முழு சுத்தம் ஏற்படுமா? என்பது ஒரு புறமிருக்க, கழிப்பறைகளில் பயன்படுத்தும் இத்தகைய காகிதங்களால் நோய்க் கிருமிகள் பரவி நோய்கள் அதிகமாகின்றன.

 

ஹைரன் ஆண்ட்சன் எனும் ஜெர்மனிய பத்திரிகை தனது 2:03:1917 தேதி இதழில் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது. உணவு விடுதிகளிலும், கழிப்பறைகளிலும் பயன்படுத்தப்படும் உறிஞ்சும் காகிதங்களால் வைரஸ் கிருமிகள் அதிகம் பரவுகின்றன.

 

இந்த காகிதங்களை வைத்து நடத்தப்பட்ட சுகாதார ஆய்விலிருந்து 16 ஆயிரம் வகையான கிருமிகள் இருப்பது தெரிய வந்தது. இவை குடல் நோய் தொடர்பான வைரஸ்கள் ஆகும். இவற்றால் குடல் ஒவ்வாமை, ஜலதோஷம், டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறுகிறது இந்த அறிக்கை.

 

மலம் ஜலம் கழித்து சுத்தம் செய்த பின்னர் இரு கால்களையும் கழுவிக் கொள்ள வேண்டும். இல்லையேல் நினைவாற்றல் குறைந்து போகும் என்பது மருத்துவச் செய்தி.

 

குளித்தல்

 

நிச்சயமாக அல்லாஹ் பாவமன்னிப்புக் கோருவோரையும், சுத்தமானவர்களையும் விரும்புகிறான்.     திருக்குர்ஆன்:-  2:222

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒருமுறை ஒருதோழர் (உஸ்மான்-ரலி) குளிக்காமல் உளூ மட்டும் செய்து விட்டு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு வந்தார். இதனை அறிந்த உமர் (ரலி) அவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ( إِذَا رَاحَ أَحَدُكُمْ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ ) "உங்களில் ஒருவர் ஜும்ஆ தொழுகைக்கு செல்லும் போது குளித்துக் கொள்ளட்டும்" என்று கூறியதை நீங்கள் செவியுறவில்லையா?  என்று (உஸ்மான்-ரலி)  அவர்களிடம் வினவினார்கள். நூல்:- புகாரீ-882, முஸ்லிம்-1534, அபூதாவூத்-287,  திர்மிதீ-455

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபித்தோழர்கள் உழைப்பாளர் (கடின வேலை செய்பவர்)களாக இருந்தனர். அதே நிலையில் (குளிக்காமல்) ஜும்ஆவுக்கு வருவார்கள். அப்போது அவர்களிடம் "குளித்துவிட்டு வந்தால் நன்றாக இருக்குமே" என்று சொல்லப்பட்டது.  நூல்:- புகாரீ-902, அபூதாவூத்-298, முஸ்னது அஹ்மத் 


குளிப்பதன் சட்டம் மூன்று வகை

                                                                                                                                                                        1)  விந்து வெளியாகி விட்டால் குளிப்பது கட்டாயக் கடமை அதாவது பர்ளு.                                                                                                     

2)  ஜும்ஆ தொழுகைக்கு குளிப்பது நபிவழி அதாவது சுன்னத்.                                                                                                                               

3)  தினந்தோறும் அல்லது அவ்வப்போது குளிப்பது விரும்பத்தக்கது அதாவது முஸ்தஹப்பு.

 

"கூழானாலும் குளித்த பின் குடி" என்பது தமிழ் பழமொழி.

 

சாப்பிட்டுக்கு முன் குளிப்பதை வழமையாக்கிக் கொள்ள வேண்டும். சாப்பிடவுடன் குளித்தால் நாளடைவில் செரிமானக் கோளாறு உண்டாகும். சாப்பிட்டு விட்டால் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு தான் குளிக்க வேண்டும். இதுவே ஆரோக்கியத்திற்கு உகந்தது.

 

எனவே, தினமும் குளிப்பது உடலின் சூட்டையும், குளிர்ச்சியையும் சமநிலையில் வைத்துக் கொள்வதற்கு உதவும். உடலின் சூடோ அல்லது குளிர்ச்சியோ ஏதேனும் ஒன்று அதிகரித்துவிடும் போது தான், ஜலதோஷம், காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

 

குறிப்பாக, மக்கள் ஒன்று கூடும் இடங்களுக்கு செல்லும்போது வேர்வை நாற்றம் இல்லாதவாறு நன்கு குளித்துவிட்டு செல்வதே நல்லது. குளிக்காமல் வாசனைத் திரவியங்களை மட்டும் உடையில் பூசிக்கொண்டு செல்வது சரியல்ல.

 

தூய்மையான ஆடைகள் அணிதல்  


(நபியே!) உம்முடைய ஆடையைத் தூய்மையாக வைத்துக் கொள்வீராக! திருக்குர்ஆன்:- 74:4

 

ஒருமுறை கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ( إِنَّكُمْ قَادِمُونَ عَلَى إِخْوَانِكُمْ فَأَصْلِحُوا رِحَالَكُمْ وَأَصْلِحُوا لِبَاسَكُمْ حَتَّى تَكُونُوا كَأَنَّكُمْ شَامَةٌ فِي النَّاسِ فَإِنَّ اللَّهَ لاَ يُحِبُّ الْفُحْشَ وَلاَ التَّفَحُّشَ ) "நீங்கள் உங்கள் சகோதரர்களிடம் செல்கிறீர்கள். ஆகவே உங்களின் வாகனங்களை சீராக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் (உடலில் உள்ள) மச்சத்தைப் போல் மனிதர்களில் நீங்கள் (தெளிவாக) தெரியும் அளவுக்கு உங்கள் ஆடைகளை அழகாக்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ் கெட்டதையும், கெட்ட எண்ணங்களையும் விரும்ப மாட்டான்." என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- கைஸ் பின் பிஷ்ரு அத்தஹ்லபீ (ரஹ்) அவர்கள்  நூல்:- அபூதாவூத்-4089

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْبَسُوا مِنْ ثِيَابِكُمُ الْبَيَاضَ فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ ) உங்கள் ஆடைகளில் வெண்ணிற ஆடைகளை அணியுங்கள். உங்கள் ஆடைகளில் அது தான் சிறந்தது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்  நூல்:- அபூதாவூத்-3878, திர்மிதீ

 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தலைமுடி சீர்கெட்ட நிலையில் ஒரு தோழரைப் பார்த்தபோது ( أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ ) "இவருக்கு தலைமுடியை சீராக்க எதுவும் கிடைக்கவில்லையா?" என்றும் மற்றொரு முறை அண்ணலார் ஆடை அழுக்கான நிலையில் ஒரு தோழரைப் பார்த்தபோது ( أَمَا كَانَ هَذَا يَجِدُ مَاءً يَغْسِلُ بِهِ ثَوْبَهُ"இவருக்கு ஆடையை சுத்தம் செய்ய எதுவும் கிடைக்கவில்லையா?" என்றும் கடிந்து கொண்டார்கள். நூல்:- அபூதாவூத்-4062

 

"கந்தையானாலும் கசக்கிக் கட்டு" என்பது தமிழ் பழமொழி

 

எனவே சுத்தமான ஆடை உடுத்துவது சுகாதாரத்திற்கு ஏற்றமானது. வண்ண ஆடைகளில் அழுக்கு படிந்தால் தெளிவாக தெரிவதில்லை. ஆனால் வெண்ணிற ஆடைகளில் சிறிதளவு அழுக்கு படிந்தாலும் அது தெளிவாகத் தெரிந்து விடும். உடனே அந்த அழுக்குகளை சுத்தப்படுத்தி விடலாம்.

 

ஆடையில் உள்ள அழுக்குகள் பளிச்சென்று வெளியே தெரிகின்றதே என்று எண்ணும்போது தான் சுத்தமான வேறு ஆடை மாற்றிக் கொள்ளுவோமே, என்று தோன்றுகிறது. ஆடையில் உள்ள அழுக்குகள் பளிச்சென்று வெளியே தெரியாத போது, வேறு ஆடைகள் மாற்ற வேண்டும் என்பதில் நம் கவனம் செல்வதில்லை. அழுக்கான ஆடைகள் விஷயத்தில் மெத்தனமாக இருந்து விடுகிறோம். இது சுத்தத்திற்கு எதிரானது. எனவே எப்போதும் அழுக்குகள் இல்லாத ஆடைகளையே உடுத்த வேண்டும் என்பதற்காக தான் வெண்ணிற ஆடைகளை உடுத்துவதை சிறந்தது என்கிறது நபிமொழி.

 

வெண்ணிற ஆடை (canser)  புற்றுநோய் வராமல் தடுக்கும். தோல் சம்பந்தப்பட்ட நோயாளிகள், இரத்த கொதிப்பு போன்ற நோயாளிகள் வெண்ணிற ஆடை அணியும்படி ஆலோசனை கூறுகின்றனர் மருத்துவர்கள்.

 

ஏதேனும் வைபவங்களுக்கு அல்லது யாரையாவது சந்திக்கவோ செல்லும் போது தம்மிடமுள்ள ஆடைகளில் சிறந்த ஆடையை உடுத்திக் கொண்டு போவது சிறந்தது. பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு அழுக்கு படிந்த ஆடைகளுடன் இருப்பதை இஸ்லாம் விரும்புவதில்லை.

 

நாப்கின்கள் கவனம் 

 

உம்முசல்மா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு கருப்புப் போர்வைக்குள் படுத்திருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. உடனே (அதிலிருந்து) நழுவி(ச் சென்று) மாதவிடாய் காலத்தில் அணியும் துணியை எடுத்தேன் அப்போது அண்ணலார் ( أَنُفِسْتِ ) "உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?" என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன்.      நூல்:- புகாரீ-323, நசாயீ-281

 

மாதவிடாய் பெண்கள், கை குழந்தைகள், தேவைகளை சுயமாக நிறைவேற்ற முடியாத படுத்த படுக்கையாக இருக்கும் முதியோர்கள் ஆகியோருக்கு நாப்கின் பயன்படுத்துவதை நாகரீகமாக கருதுகின்றனர். அடிக்கடி நாப்கின் பயன்படுத்துவதால் காற்றோட்டம் தடைப்பட்டு, நச்சுக் கிருமிகள் உடலில் வந்து தங்கிவிடக் கூடும். மேலும் தோல் அரிப்பு சம்பந்தப்பட்ட நோய் உண்டாகக்கூடும். ஆண் குழந்தைகளுக்கு அடிக்கடி நாப்கின் பயன்படுத்துவதால் விதறு பகுதி அதிகமாக சூடாகி, எதிர்காலத்தில் ஆண்மைக் குறைவு ஏற்படலாம் என்பது மருத்துவர்களின் கூற்று.

 

நேப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி பெண்களின் கர்ப்பப்பையில் கடுமையான பாதிப்புகளையும், அதில் புற்றுநோயை உண்டாக்குவதாகவும் பல்துறை வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.


வைபவங்களுக்கு செல்லுதல், பயணம் மேற்கொள்ளுதல் போன்ற அவசியமான நேரங்களில் மட்டும் குழந்தைகளுக்கு நாப்கின் பயன்படுத்தலாம். இருந்தாலும் அச்சமயத்திலும் அடிக்கடி நாப்கினை மாற்றிக்கொள்வது தான் சுகாதாரமாகும்.

 

முன்பெல்லாம் பெண்கள் மாதவிடாய்க்கு என்று தனியாக துண்டு துணிகளை பயன்படுத்துவார்கள். குறிப்பிட்ட அந்நாட்களில் அத்துணிகளைப் பயன்படுத்திய பிறகு அதை நல்ல முறையில் சுத்தப்படுத்தி பிறர் பார்வைக்கு தெரியாதவாறு மறைத்து வைத்து விடுவார்கள். மேலும் கை குழந்தைகளுக்கும் துண்டு துணிகளை தான் பயன்படுத்துவார்கள். அந்த துணிகள் அசுத்தமாகிவிட்டால் அதை நல்ல முறையில் சுத்தப்படுத்தி அதையே மீண்டும் மீண்டும் பயன்படுத்துவார்கள். அசுத்தத்தை தண்ணீரால் நல்ல முறையில் சுத்தப்படுத்துவதை தான் இஸ்லாமும் விரும்புகிறது.

 

மாதவிடாய்க்கும், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் மலம் ஜலம் தேவைக்கும் நாப்கினை பயன்படுத்தி விட்டு அப்படியே அதை குப்பையில் எறிந்துவிடுவதால் சுற்றுச்சூழல் கெட்டுப்போகிறது. மாதவிடாயின் போது துண்டு துணிகளை பயன்படுத்தத் தெரியாது என்று இருந்தால் அந்த நிர்ப்பந்த நிலையில் நாப்கினை பயன்படுத்திய பின்னர் அதில் படிந்துள்ள அசுத்தங்களை தண்ணீரால் கசக்கிவிட்டு பிறகு எறிந்து விடுவது நல்லது.

 

நமது நாட்டில் ஆண்டுக்கு 9,000 டன் (90 இலட்சம்)  நாப்கின்கள் பயன்படுத்தப்பட்டு, மண்ணில் குப்பையாக வீசப்படுகிறது. இது மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று சுகாதாரத் துறை அச்சம் தெரிவிக்கிறது.

 

சுருங்கக்கூறின், நமது உடல் மற்றும் உடையில் அசுத்தம், நாற்றம் இல்லாமல் பேணிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் சுத்தமானவர்களையே விரும்புகிறான் என்று இஸ்லாம் இயம்புகிறது. எனவே நாம் சுத்தத்தை முறையாக கடைப்பிடித்து இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

 

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...