Search This Blog

Wednesday, 22 September 2021

மண்ணறைவாசிகளுக்காக...

 

மண்ணறைவாசிகளுக்காக...


وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ


எவர்கள் இவர்களுக்குப் பின் வந்தார்களோ அவர்கள், "எங்கள் இறைவனே! எங்களையும் நீ மன்னிப்பாயாக! எங்களுக்கு முன் இறைநம்பிக்கைக் கொண்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னிப்பாயாக! இறைநம்பிக்கையாளர்களைப் பற்றி எங்களுடைய உள்ளங்களில் எந்த குரோதங்களை ஏற்படுத்தாதே! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிகக் கிருபையுடையவனும், இரக்கமுடையவனுமாக இருக்கின்றாய்!" என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கின்றனர்.   திருக்குர்ஆன்:- 59:10


வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் இறந்தோருக்காக தர்மம் செய்தல், தொழுதல், நோன்பு நோற்றல், ஹஜ்-உம்ரா செய்தல், குர்பானி கொடுத்தல்ஏழை எளியோருக்கு உணவளித்தல், குர்ஆன் ஓதுதல், பிழைப்பொறுக்கப் பிரார்த்தித்தல், (திக்ரு தஸ்பீஹ் எனும்) இறைதியானம் செய்தல், கடன் அடைத்தல் போன்ற நற்காரியங்கள் செய்வது மூலம் இறந்தோர் பயனடைவர் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். இதைத்தான் இஸ்லாமிய வழக்கில் “ஈஸால் ஸவாப்” எனப்படுகிறது.


இறந்தவர்களால் அணுவளவு நற்செயலைக்கூட செய்ய இயலாது. ஏனெனில், மண்ணறை என்பது செயலாற்றும் இடம் அல்ல. இதுவரை செய்தவைக்கு கூலி வழங்கப்படும் ஆரம்ப இடமாகும். எனவே, வாழ்பவர்கள் ஏதேனும் நன்மைகள் செய்து அதை நமக்கு அன்பளிப்பு செய்யமாட்டார்களா? என்று எதிர்பார்ப்பார்கள்.


மூன்று நல்லறங்கள்


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ) மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன. 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்லபிள்ளை. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3358, அபூதாவூத்-2494, திர்மிதீ-1297, நஸாயீ-3591, முஸ்னது அஹ்மத்-8489


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ مِمَّا يَلْحَقُ الْمُؤْمِنَ مِنْ عَمَلِهِ وَحَسَنَاتِهِ بَعْدَ مَوْتِهِ عِلْمًا عَلَّمَهُ وَنَشَرَهُ وَوَلَدًا صَالِحًا تَرَكَهُ وَمُصْحَفًا وَرَّثَهُ أَوْ مَسْجِدًا بَنَاهُ أَوْ بَيْتًا لاِبْنِ السَّبِيلِ بَنَاهُ أَوْ نَهْرًا أَجْرَاهُ أَوْ صَدَقَةً أَخْرَجَهَا مِنْ مَالِهِ فِي صِحَّتِهِ وَحَيَاتِهِ يَلْحَقُهُ مِنْ بَعْدِ مَوْتِهِ ) இறைநம்பிக்கையாளர் இறந்த பின்பும் அவரைச் சென்றடையும் நல்லறங்களுள் பின்வருபவையும் அடங்கும்: 1. அவர் (பிறருக்குக்) கற்பித்துப் பரப்பிய கல்வி, 2. அவர் விட்டுச்சென்ற நல்லபிள்ளை, 3. அவர் விட்டுச் சென்ற (நல்ல) நூல் (அல்லது குர்ஆன்) 4. அவர் கட்டிய பள்ளிவாசல், அல்லது அவர் எழுப்பிய பயணியர் விடுதி, அல்லது அவர் வெட்டிய ஆறு, அல்லது அவர் ஆரோக்கியத்தோடு வாழ்ந்த காலத்தில் தம் பொருளிலிருந்து செய்த தர்மம் ஆகியவையே அவை. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-238, இப்னு குஸைமா-2490, ஷுஅபுல் ஈமான் லில்பைஹக்கி


ஒரு மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய நல்லறங்கள் அதாவது அவற்றுக்குக் கிடைக்கும் நன்மைகள் அதோடு நின்று விடும். இனி அவற்றுக்குப் புதிதாக நன்மைகள் கிடைக்காது. ஆனால், அவன் உயிர் வாழும் போது செய்த மூன்று நல்லறங்களுக்கான நன்மைகள் மட்டும் அவன் இறந்த பின்னரும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும்.


1. தொடர்ந்து நடக்கும் நல்லறம் என்பது நீண்ட காலம் நிலைத்து நின்று பயனளிக்கும் அறத்தைக் குறிக்கும். அதாவது (வக்ஃப் எனும்) அறக்கொடை. உதாரணமாக: பள்ளிவாசல், கல்வி நிலையம், மருத்துவமனை, மக்கள் தங்கும் விடுதி, தண்ணீர் தொட்டி போன்றவை கட்டுதல், மேலும், ஆறு வெட்டுதல், கிணறு வெட்டுதல், சாலையின் இரு மருங்கிலும் மரம் நடுதல், மார்க்கக் கல்வி கூடத்திற்கு பள்ளிவாசலுக்கு குர்ஆன் மற்றும் பயன்பெறும் வகையிலான நூல்களை வாங்கி அன்பளிப்புச் செய்தல். இது போன்ற அறக்கொடைகள் செயல்பட்டுவரும்வரை, அதற்கான நன்மை உருவாக்கியவருக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். அவரது மறைவுக்குப் பின்னும் நன்மை தொடரும். அவற்றை உருவாக்கியவர் அவர்தாம் என்பதே காரணம்.

2. மக்களுக்குப் பயனளிக்கும் கல்வி. அதாவது, ஒரு கல்வியாளர் அவர் உயிர் வாழும் போது, பல மாணவர்களுக்குக் கல்வி போதித்துள்ளார். அவர்களால் அந்தக் கல்விச் சேவை தொடர்கிறது. அல்லது அவர் நூல்கள் எழுதினார். அவற்றை மக்கள் வாசித்துப் பயனடைந்துவருகின்றனர். இதன் நன்மையும் அந்த கல்வியாளருக்கு தொடர்ந்து கிடைக்கும்.

3. அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கும் நல்லபிள்ளை. அவனைப் பெற்றெடுத்து ஆளாக்கியவர் அவர்தாம் என்பதால், அந்தப் பிள்ளையின் பிரார்த்தனையின் பலன் அவருக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். நூல்:- அல்மின்ஹாஜ், தக்மிலா


மனித வாழ்க்கை மிகவும் குறுகிய காலமே. குறிப்பிட்ட காலம் மட்டும் வாழ்ந்திடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள மனிதனுக்கு நீண்ட காலம் வாழ்ந்தால் எவ்வளவு நன்மை கிடைக்குமோ அவ்வளவு நன்மைகளை பெற்றிட அல்லாஹ் நல்வாய்ப்பை வழங்கியுள்ளான்.


ஒருவர் உயிருடன் வாழ்ந்த காலங்களில் அவர் செய்த நன்மைகளின் பலாபலன்கள் அவர் மரணித்த பின்னரும் தொடர்வதால் அவர் இறந்தும் வாழ்கிறார். அவருடைய உடலின் எந்தப் பகுதியும் மிஞ்சாது போதிலும் அவரின் அறங்களால் அவர் அழியாமல் இருக்கிறார்.


தொழுகலாம்


அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "நாயகமே! என்னுடைய பெற்றோர் உயிரோடு இருந்தபோது அவர்களுக்கு நான் நல்ல முறையில் பணிவிடை செய்து வந்தேன். இப்போது அவர்கள் இறந்து விட்டனர். இனியும் அவர்களுக்கான நற்சேவை செய்ய நான் ஆசைப்படுகிறேன். அதற்கான வழி என்ன? என்று வினவினார்.


அண்ணலார், "நீர் உமக்காகத் தொழுவதுடன் அவர்களுக்காகவும் (உபரியாக) தொழுவீராக! நீர் உமக்காக உமது நோன்பு நோற்பதுடன் அவர்களுக்காகவும் (உபரியாக) நோன்பு நோற்பீராக! நீர் உமக்காக  தர்மம் செய்வதுடன், அவர்களுக்காகவும் (உபரியாக) நீர் தர்மம் செய்வீராக! இது, பணிவிடைக்குப் பின்னர் செய்யப்படக்கூடிய நற்காரியங்களில் மிகச் சிறந்ததாகும்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- ஹஜ்ஜாஜ் பின் தீனார் (ரலி) அவர்கள் நூல்:- இப்னு அபீஷைபா, தாரகுத்னீ


(பர்ளு எனும்) கட்டாயக் கடமைகளைத் தவிர்த்து (நபில் எனும்) உபரியான நற்காரியங்கள் யாவற்றையும் இறந்தவருக்காக செய்யலாம். அதன் பலன் அவர்களுக்கு உண்டு.


நோன்பு நோற்கலாம்


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு பெண் கடலில் பயணித்தார். அப்போது அவர், "வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ், பாதுகாப்பாகத் தம்மைக் கரை சேர்த்தால், ஒரு மாதம் நோன்பு நோற்பேன்" என்று நேர்ச்சை செய்தார். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அவரை பாதுகாப்பாகக் கரை சேர்த்தான். ஆனால் அப்பெண் நோன்பு நோற்காமல் இறந்துவிட்டார்.


அப்போது அவருடைய உறவுக்காரப் பெண் ஒருவர் (அவருடைய மகள், அல்லது சகோதரி) அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததை எடுத்துரைத்தார். அண்ணலார், ( صُومِي ) "அவர் சார்பாக நீ நோன்பு வை" என்று கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்-1764


இறந்து போனவர் தவறவிட்ட நேர்ச்சை அல்லது கடமையான நோன்பை அவருக்காக அவருடைய உறவினர் யாரும் நோன்பு நோற்றால் ஹஜ் போலவே நோன்பும் செல்லும் (இறந்தவருக்கு பலன் தரும்) என தெரிகிறது. நூல்:-  ஹாஷியத்துஸ் ஸிந்தீ


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு பெண்மணி கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! ஒரு மாத நோன்பு கடமையாக இருந்த நிலையில் என் தாயார் இறந்துவிட்டார். அதை அவர் சார்பாக நான் நிறைவேற்றலாமா? (அதன் நற்பலன் அவருக்கு கிடைக்குமா?) என்று வினவினார். அதற்கு அண்ணலார், ( لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَتَهُ ) "உன் தாயார் மீது கடனேதும் இருந்தால், (அவர் சார்பாக) அதை நீ நிறைவேற்றுவாய் தானே?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "ஆம்" என்றார். அண்ணலார், ( فَدَيْنُ اللَّهِ أَحَقُّ أَنْ يُقْضَى ) "அவ்வாறாயின், நிறைவேற்றப்படுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் கடனே" என்று கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்-1901


தானதர்மம் செய்யலாம்


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், "என் தந்தை சொத்துக்களை விட்டுவிட்டு இறந்து போனார். அவர் இறுதி விருப்பம் எதுவும் தெரிவிக்கவுமில்லை. இந்நிலையில் அவருக்காக நான் தர்மம் செய்தால், அவருக்கு அது பரிகாரம் ஆகுமா? என்று கேட்டார். அதற்கு அண்ணலார், "ஆம்" என்றார்கள். நூல்:- முஸ்லிம்-3355, நஸாயீ-3592


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தானதர்மங்கள் செய்து அதன் நன்மைகள் தங்களுடைய பெற்றோருக்கு  கிடைக்க வேண்டும் என்று எண்ணினால், அந்த நன்மைகள் அவர்களுக்கும் கிடைத்துவிடும். (அல்லாஹ்வின் கிருபையால்) அவருடைய நன்மையிலும் குறைவு ஏற்படாது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல் :- தப்ரானீ


இறந்துவிட்ட பெற்றோரின் சொத்தை அனுபவிக்கும் பிள்ளைகள் அதிலிருந்து தானும் அனுபவித்து கொண்டு, மண்ணறையில் வாழும் தம்முடைய பெற்றோருக்கும் நன்மைகள் கிடைக்கும் வகையில் தானதர்மங்கள் செய்யவேண்டும். இதுவே, நன்றியுள்ளவர்களின் பண்பாகும்.


குர்பானி கொடுக்கலாம்


ஹனஷ் பின் அல்முஅதமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அலீ (ரலி) அவர்கள் இரு செம்மறியாட்டுக் கடாக்களை குர்பானி கொடுத்துவந்தார்கள். அவற்றில் ஒன்றை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சார்பாகவும் மற்றொன்றைத் தம் சார்பாகவும் குர்பானி கொடுத்தார்கள். இது குறித்து அவர்களிடம் (விளக்கம்) கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ( أَمَرَنِي بِهِ يَعْنِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- فَلاَ أَدَعُهُ أَبَدًا ) "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தான் இவ்வாறு எனக்கு உத்தரவிட்டார்கள். இதை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்" என்று பதிலளித்தார்கள். நூல்:- அபூதாவூத்-2792, திர்மிதீ-1415


அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (இறந்துவிட்ட) தங்களது சகோதரர் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களுக்காக இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். மேலும் அன்னையவர்கள் தங்களது சகோதரருக்காக அடிமையை உரிமையும் விட்டிருக்கிறார்கள். அறிவிப்பாளர்:- யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் நூல்:-  அல்முவத்தா மாலிக், தஃப்சீர் குர்துபீ அந்நஜ்மு வசனம்-39


அல்ஆஸ் என்பவர் அறியாமைக் காலத்தில் நூறு ஒட்டகங்களை அறுத்து குர்பானி கொடுப்பேன் என்று நேர்ச்சை செய்திருந்தார். அவருடைய மகனார் ஹிஷாம் என்பவர் அவருடைய பங்கில் ஐம்பது ஒட்டகங்களை அறுத்து குர்பானி கொடுத்தார். இதுபற்றி அவருடைய மற்றொரு மகனான அம்ரு (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினார். அண்ணலார், "உமது தந்தை இறைநம்பிக்கையாளராக இறந்திருப்பாராயின், அவருக்காக நீர் நோன்பு நோற்றாலும், தர்மம் செய்தாலும் அது அவருக்கு பலன் தரும்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத் 


திருக்குர்ஆன் ஓதலாம்


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إذا مات أحدُكم فلا تَحْبِسُوهُ، وأَسْرِعُوا به إلى قبرِهِ، وَلْيَقْرَأْ عند رأسِه فاتحةَ البقرةِ، وعندَ رِجْلَيْهِ بخاتمةِ البقرةِ ) உங்களில் ஒருவர் மரணம் அடைந்து விட்டால் அவரை நல்லடக்கம் செய்வதில் காலதாமதம் செய்யாதீர்கள். நல்லடக்கம் செய்வதை விரைவுபடுத்தி கொள்ளுங்கள். (நல்லடக்கம் செய்த பின்) அவருடைய தலைமாட்டில் அல்பகரா அத்தியாயத்தின் ஆரம்பத்தில் வசனங்களை ஓதிக் கொள்ளுங்கள். கால்மாட்டில் அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களை ஓதிக் கொள்ளுங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, ஷுஅபுல் ஈமான் லில்பைஹகீ, மிஷ்காத் பக்கம்-149


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் இறந்தோருக்காக யாஸீன் அத்தியாயத்தை ஓதிக் கொள்ளுங்கள். அறிவிப்பாளர்:- மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3121


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن دخلَ المقابرَ فقرأَ سورةَ ( يس ) خفَّفَ عنهُم يومَئذٍ ، وكان لهُ بِعَددِ مَن فيها حَسناتٌ ) ஒருவர் மையவாடியில் நுழைந்து யாசீன் அத்தியாயத்தை ஓதி அதன் நன்மைகளை அங்குள்ள மண்ணறைவாசிகளுக்கு அன்பளிப்பு செய்தால், அதன்மூலம் அந்த மண்ணறைவாசிகளுக்கு வேதனைகள் இலேசாக்கப்படுகிறது. மேலும், இதை ஓதியவருக்கு அந்த மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டிருபவர்களின் எண்ணிக்கை அளவு நன்மைகள் வழங்கப்படுகிறது. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் குர்துபீ, அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ இமாம் ஷவ்கானீ, மிர்காத்


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ مَرَّ عَلَى الْمَقَابِرِ وَقَرَأَ (قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ) إِحْدَى عَشْرَةَ مَرَّةً، ثُمَّ وَهْبَ أَجْرَهُ لِلْأَمْوَاتِ ، أُعْطِيَ مِنَ الْأَجْرِ بِعَدَدِ الْأَمْوَاتِ ) மண்ணறைகளை கடந்து செல்பவர் அங்கு பதினோரு தடவை குல்ஹுவல்லாஹு அஹத் (112வது) அத்தியாயத்தை ஓதி இறந்தவர்களுக்காக அதன் நன்மையை அன்பளிப்புச் செய்வாரானால், (அன்பளிப்பு செய்த) அவருக்கு அந்த மண்ணறையில் அடக்கம்  செய்யப்பட்டிருபவர்களின் எண்ணிக்கை அளவு நன்மைகள் வழங்கப்படும். நூல்:- கன்ஸுல் உம்மால், ஷரஹுஸ் ஸுதூர்  


இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நபித்தோழர்களில் பலரும், "நான் மரணித்து என்னை  நல்லடக்கம் செய்த பின்னர் எனது மண்ணறைக்கு அருகில்  நின்று கொண்டு குர்ஆனின் அல்பகரா அத்தியாயத்தை ஓதிக் கொள்ளுங்கள்" என்று (வசிய்யத் எனும்) இறுதிவிருப்பம் தெரிவித்துள்ளார்கள். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ஆவர்.


இமாம் ஷஅபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மதீனத்து அன்சாரிகளில் யாராவது இறந்துவிட்டால் அவர்கள் இறந்தவரின் மண்ணறைக்கு வரப் போக இருப்பார்கள். இறந்தவருக்கு நன்மைகள் கிடைக்கவேண்டும் என்றெண்ணி குர்ஆன் ஓதுவார்கள். நூல்:- கிதாபுர் ரூஹ் பக்கம்-14, ஷரஹுஸ் ஸுதூர் பாபுன் பீ கிராஅத்தில் குர்ஆனிலில் மய்யித்தி


நேர்த்திக்கடன்


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம், "என் தாயார்மீது ஒரு நேர்த்திக்கடன் கடமையாயிருக்க (அதை நிறைவேற்றும் முன்பே) அவர் இறந்து போய்விட்டார். (என்ன செய்வது?)" என்று விளக்கம் கேட்டார். அப்போது அண்ணலார், ( اقْضِهِ عَنْهَا ) "அவர் சார்பாக நீங்கள் அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுங்கள்" என்றார்கள். நூல்:- புகாரீ-2761, முஸ்லிம்-3367, அபூதாவூத்-2876, திர்மிதீ-1466, இப்னுமாஜா-2123, முஸ்னது அஹ்மத்-1795 முவத்தா மாலிக்-895


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (உக்பா பின் ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "நாயகமே! என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்து கொண்டு (அதை நிறைவேற்றாமல்) இறந்து விட்டார்" என்றார். அதற்கு அண்ணலார், ( لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ ) "உன் சகோதரிக்கு கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்?" என்று கேட்டார்கள். அவர், "ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)" என்றார். அண்ணலார், ( فَاقْضِ اللَّهَ، فَهْوَ أَحَقُّ بِالْقَضَاءِ ) "அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று. கடன் நிறைவேற்றப்பட அவனே அதிகம் உரிமை படைத்தவன்" என்றார்கள். நூல்:- புகாரீ-6699


இறுதி விருப்பம்


ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, என் தாய் தன் சார்பாக ஓர் அடிமை விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இறுதி விருப்பம் தெரிவித்தார்.


என்னிடம் 'நூபியா' நாட்டுஅடிமைப் பெண் ஒருத்தி இருக்கிறாள். அவர் சார்பாக நான் அவளை விடுதலை செய்தால் அதுவே போதுமாகுமா?" என வினவினேன். அண்ணலார், ( ائْتِنِي بِهَا ) "அவளை என்னிடம் அழைத்து வா" என்று கூறினார்கள். ஆகவே நான் அவளை அண்ணலாரிடம் அழைத்துச் சென்றேன். அப்போது அவளிடம் அண்ணலார், ( مَنْ رَبُّكِ ) "உன்னுடைய இறைவன் யார்?" என்று கேட்டார்கள். "அல்லாஹ்" என்று பதிலளித்தாள். (பிறகு தம்மைக் குறித்து) ( مَنْ أَنَا ) "நான் யார்?" என்று கேட்டார்கள். "நீங்கள் அல்லாஹ்வின் தூதர்" என்று பதிலளித்தாள். அண்ணலார், ( فَأَعْتِقْهَا فَإِنَّهَا مُؤْمِنَةٌ ) "இவளை விடுதலை செய்து விடு. (அதுவே போதும்) ஏனென்றால், இவள் இறைநம்பிக்கை கொண்டவள்" என்று கூறினார்கள். நூல்:- நஸாயீ-3593


பொருளாதாரம் சார்ந்த நேர்த்திக்கடன் ஒன்றை நேர்ந்து கொண்ட நிலையில் அதை நிறைவேற்றுவதற்கு முன்பே ஒருவர் இறந்து விட்டால், அதற்கான செல்வத்தை விட்டுவிட்டு அவர் போயிருந்தால் அவரது சொத்திலிருந்து அந்த நேர்த்திக்கடனை அவருடைய வாரிசுகள் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். பொருள் சாராத நேர்த்திக்கடன் என்றால் (எ.கா. நோன்பு, ஸகாத், ஹஜ், உம்ரா போன்றவை) அதை நிறைவேற்றுவது வாரிசுகள் மீது கடமையன்று.


அவ்வாறே பொருள் சார்ந்த நேர்த்திக்கடனாக இருந்து அதற்குத் தேவையான சொத்தை அவர் விட்டு விட்டுச் செல்லவில்லையெனில், அப்போதும் அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது அவருடைய வாரிசுகள் மீது அவசியம் இல்லை. ஆயினும், அவ்வாறான நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவது விரும்பத்தக்கதாகும். பெரும்பான்மை அறிஞர்களின் கூற்று இதுவேயாகும். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீஅல்முஃக்னீ


பிரார்த்திக்கலாம்


எங்கள் இறைவா! எனக்கும், என் தாய் தந்தைக்கும், மற்ற நம்பிக்கையாளர்களுக்கும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக!" (என்று இறைத்தூதர் இப்ராஹீம் – அலை பிரார்த்தித்தார்.) திருக்குர்ஆன்:-14:41


என் இறைவா! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!" என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்! திருக்குர்ஆன்:- 17:24


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் இறந்தவருக்காக தொழுத பின்னர் மனத்தூய்மையுடன் அவருக்காக பிரார்த்தியுங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3199, இப்னுமாஜா, இப்னுஹிப்பான்


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உஹுத் போர் முடிந்து திரும்பியபோது, பாதையில் கொல்லப்பட்டுக் கிடந்த முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களுக்கருகில் நடந்து சென்றார்கள். (அவர்களைக் கண்டதும்) அவர்களிடம் நின்று அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். நூல்:- தலாயிலுந் நுபுவ்வா இமாம் பைஹகீ, அல்பிதாயா வந்நிஹாயா


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வொரு இரவின் பிற்பகுதியிலும் (மதீனாவிலுள்ள) 'பகீஉல் ஃகர்கத்' பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு சென்று, ( اللَّهُمَّ اغْفِرْ لأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ ) “இறைவா! பகீஉல் ஃகர்கதில் உள்ளோருக்கு நீ மன்னிப்பாயாக!” என்று பிரார்த்திப்பார்கள் நூல்:- முஸ்லிம்-1773


உம்மு சல்மா (ரலி), அபூசயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் கூறியதாவது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் உஹுத் போரில் கொல்லப்பட்டோரின் அடக்கத்தலத்திற்குச் சென்று அவர்களுக்காக அழுது பிரார்த்தனை செய்வார்கள். நூல்:- மஃகாஸீ, அல்பிதாயா வந்நிஹாயா


அருமை நாயகம் (ஸல்) அவர்கள், மரணமடைந்த ஒரு நபித்தோழரை நல்லடக்கம் செய்த பின்னர் அவருடைய மண்ணறைக்கு அருகில் போய் நின்றுகொண்டு, ( اسْتَغْفِرُوا لأَخِيكُمْ وَسَلُوا لَهُ التَّثْبِيتَ فَإِنَّهُ الآنَ يُسْأَلُ ) "உங்களுடைய சகோதரரின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள். மேலும், (நன்மைகள், கலிமா தய்யிபாவின் மீது) உறுதி நிலைப்பாட்டுக்காகவும் பிரார்த்தியுங்கள். இதோ இப்போது அவர் கேள்வி கேட்கப்படுகின்றார்" என்று கூறினார்கள். உஸ்மான் பின் அப்பான் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3221, ஹாகிம்


நல்லடக்கத்தில் கலந்து கொண்டவர்கள் அந்த மரணித்தவருக்காக, "இறைவா! இவருக்கு மண்ணறை விசாரணையின் போது தூய திருக்கலிமாவை தடையின்றி தயக்கமின்றி கூறுகின்ற சக்தியையும், உறுதியையும் கொடுப்பாயாக! மேலும், இவரின் பாவங்களை மன்னித்து இவருக்கு நல்வாழ்க்கை நல்குவாயாக!" என்று (நமக்கு தெரிந்த மொழியில்) பிரார்த்திக்க வேண்டும் என்பதே இந்த நபிமொழியின் கருத்து.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا الْمَيّتُ في القَبْرِ إِلاّ كَالْغَرِيْق الْمُتَغَوِّثِ يَنتَظِرُ دَعْوَةً تَلحَقُه مِن أبٍ أوْ أُمٍّ أوْ أخٍ أوْ صَدِيقٍ فإذا لَحِقَتْهُ كَانَتْ أحَبَّ إِلَيهِ مِن الدُّنيَا ومَا فِيهَا وَإنَّ اللهَ عزّ وجلّ لَيُدخِلُ عَلَى أهْلِ القُبُورِ مِن دُعاءِ أهْلِ الأَرْضِ أمْثَالَ الجِبالِ وإنَّ هَديَّةَ الأَحْيَاءِ إلى الأَمْوَاتِ الاِسْتِغفارُ لَهُم ) மரணித்து மண்ணறையில் இருப்பவர் (கடலில்) தத்தளித்து கொண்டு (யாரேனும் வந்து காப்பாற்ற மாட்டார்களா? என்ற எண்ணத்தில்) அபயம் தேடுபவரைப் போன்றவராவார். தந்தை அல்லது தாய் அல்லது சகோதரன் அல்லது நண்பன் ஆகியோரிடமிருந்து பிரார்த்தனையை எதிர்பார்க்கிறார். அவருக்காக அவர்கள் பிரார்த்தனை செய்துவிட்டால், அது அவருக்கு உலகமும் அதில் இருப்பவைகளை விடவும் மிக உவப்பானதாக இருக்கும். நிச்சயமாக அல்லாஹ் மண்ணறைவாசிகள் மீது பூமியில் உள்ளவர்களின் பிரார்த்தனையால் மலைகள் போன்றவைக(ளான அருள் வளங்க)ளை வழங்குகிறான். மரணித்தவர்களுக்கு உயிர் வாழ்பவர்கள் கொடுக்கும் காணிக்கை என்பது அவர்களுக்காக பிழைபொறுக்க தேடுவதாகும் அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் லில்பைஹக்கி, மிஷ்காத் பக்கம்-206


ஸஈது இப்னு முஸய்யப் (ரஹ்) அவர்கள், ''ஒரு மனிதர் அவருக்குப் பின் அவரது மகனின் பிரார்த்தனை காரணமாகவே உயர்த்தப்படுவார்” என தன் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்திக் காட்டியவராக  கூறுவார்கள். அறிவிப்பாளர்:- யஹ்யா இப்னு ஸஈத் (ரஹ்) அவர்கள் நூல்:-  முவத்தா மாலிக்-506


அபூ உசைத் (ரலி)  அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் நாங்கள் இருந்தபோது, பனூ சலமா கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வந்து, ( يَا رَسُولَ اللَّهِ هَلْ بَقِيَ مِنْ بِرِّ أَبَوَيَّ شَيْءٌ أَبَرُّهُمَا بِهِ بَعْدَ مَوْتِهِمَا )  "நாயகமே! என் பெற்றோர் இறந்த பின் அவ்விருவருக்கும் நான் நன்மை செய்வதற்கு வேறு ஏதேனும் கடமைகள் உண்டா?" என்று வினவினார். அண்ணலார், ( نَعَمِ الصَّلاَةُ عَلَيْهِمَا وَالاِسْتِغْفَارُ لَهُمَا ) "ஆம்! அவ்விருவருக்காகவும் நீ பிரார்த்தனை செய்வது, அவ்விருவருக்காகவும் நீர் மன்னிப்புக் கோருவது" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-5142, இப்னுமாஜா, முஸ்னத் அஹ்மத், ரியாளுஸ்ஸாலிஹீன்-343


சயீத் பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஓர் இறை நம்பிக்கையாளர் சொர்க்கத்தில் நுழைந்ததும் தன்னுடைய தந்தை, மகன், சகோதரன் ஆகியோர் எங்கே? என்று விசாரிப்பார். அதற்கு, "நல்லறங்கள் புரிவதில் உனது படித்தரத்தை அவர்கள் எட்டவில்லை" என்று பதில் கூறப்படும். அப்போது அந்த இறைநம்பிக்கையாளர், ( إِنِّي إِنَّمَا عَمِلْتُ لِي وَلَهُمْ ) "நான் செய்த நல்லறங்கள் எனக்கும் அவர்களுக்கும் சேர்த்துத்தான்" என்பார். பின்னர் அந்த உறவினர்கள் தகுதியில் அவருடன் சேர்க்கப்படுவர். பிறகு அன்னார் இந்த (40:8) வசனத்தை ஓதிக்காட்டினார்கள். நூல்:-  தப்ஃசீர் இப்னு கஸீர்


இறந்தவரின் குடும்பத்தினர் அதிலும் குறிப்பாக அவருடைய பிள்ளைகள் இறைவனிடம் பிரார்த்திப்பதே சாலச்சிறந்தது. அவ்வாறு பிள்ளைகளை நாம் இஸ்லாமிய ஒழுக்கப் பயிற்சி கொடுத்து வளர்க்க வேண்டும். அப்போதுதான், நாம் மரணித்தால் நமது பிள்ளைகள் நமக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுவார்கள்.


நமது பெற்றோர் மற்றும் முன்னோருக்காக நற்காரியங்கள் செய்வதை நமது பிள்ளைகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அல்லது அந்த நற்காரியங்களை அவர்கள் பார்க்கும் விதமாக செய்ய வேண்டும். இது ஒருவகையான பயிற்சியே!


தினந்தோறும் நாம் காலையில் தஹஜ்ஜுத் தொழுகை அல்லது ஃபஜ்ரு தொழுகை முடித்துவிட்டு பிரார்த்திக்கும் போது, “இறைவா! இன்றைய நாள் முழுவதும் நான் செய்யும் நல்லறங்களின் நன்மைகளை என்னுடைய பெற்றோருக்கும் மரணித்துவிட்ட இன்னார் இன்னாருக்கும் கொடுப்பாயாக!” என்று பிரார்த்திக்கலாம்.


பிறர் செய்கின்ற பிரார்த்தனை மற்றவருக்கு பயனளிக்கும் என்று கூறுவதன் கருத்தாவது, பிறருடைய நற்செயல்களும் பயனளிக்கும் என்பதன் சுருக்கமாகும்.


அறக்கொடை


சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறியதாவது. என்னுடைய தாய் இறந்துவிட்டார். (எனவே நான் அண்ணல் நபி - ஸல் அவர்களிடம் சென்றேன்) "நாயகமே! என் தாயார் இறந்து விட்டார். அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா?" என்று கேட்டேன். அதற்கு அண்ணலார், "ஆம் (தர்மம் செய்யலாம்)" என்று பதிலளித்தார்கள். ( فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ ) "எந்தத் தர்மம் மிகச் சிறந்தது?" என்று கேட்டேன். அதற்கு அண்ணலார், ( سَقْيُ الْمَاءِ ) "குடிநீர் வழங்குதல்" என்று கூறினார்கள். எனவேதான் மதீனாவில் காணப்படுகின்ற 'சஅத் நீர்த்தடாகம்' உண்டானது. நூல்:- நஸாயீ-3606


குடிநீர் வழங்குவதற்காக சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் மதீனாவில் ஒரு கிணறு தோண்டினார்கள். அப்போது மதீனாவில் தண்ணீர் இல்லாத பஞ்ச காலமாக இருந்தது. அந்தக் கிணற்றைத் தோண்டி, இது சஅதியின் தாயாருக்காக (வக்ஃப் செய்யப்பட்டது) என்று கூறினார்கள்.


மரணமடைந்தவரின் சார்பாக வக்ஃப் செய்வதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெரிதும் விரும்பியுள்ளார்கள். ஏனெனில், அதற்கான நன்மை தொடர்ந்து அவருக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். அண்ணலாரின் காலத்திலேயே அது செயல்படுத்தப்பட்டது.


அங்கத்தூய்மை செய்ய தண்ணீர் வசதி செய்து கொடுத்தல், கிணறு பம்ப் செட், தண்ணீர் தொட்டி, தண்ணீர் குழாய் அமைத்தல், மற்றும் மதரசா, பள்ளிவாசல், கல்வி நிலையம் மருத்துவமனை என நிலையான தர்மங்களை அமைத்து இறந்தவர்களின் சார்பில் வக்ஃப் செய்யலாம்.


உலகம் முழுக்க இருக்கும் பல வக்ஃப் சொத்துகள் இவ்வாறுதான் உருவானது.


கடன் அடைத்தல்


சஅத் பின் அல்அத்வல் (ரலி) அவர்கள் கூறியதாவது. முன்னூறு வெள்ளிக் காசுகளை விட்டுவிட்டு என்னுடைய சகோதரர் இறந்துவிட்டார். அவருக்கு ஒரு குடும்பம் இருந்தது. எனவே, நான் அவற்றை அவருடைய குடும்பத்தாருக்கு செலவழிக்க நாடினேன்.


அப்போது அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( إِنَّ أَخَاكَ مُحْتَبَسٌ بِدَيْنِهِ فَاقْضِ عَنْهُ ) "உம்முடைய சகோதரர் கடனால் (சொர்க்கத்திற்குள் நுழைய முடியாமல்) தடுக்கப்பட்டுள்ளார். எனவே, அவருடைய கடனை நிறைவேற்றுவாயாக!" என்று கூறினார்கள்.


அப்போது நான், "நாயகமே! ஒரு பெண் கேட்ட இரண்டு தங்கக் காசுகளைத் தவிர அவருடைய எல்லாக் கடனையும் நான் நிறைவேற்றிவிட்டேன். அப்பெண்ணிடம் அதற்கான ஆதாரம் இல்லை" என்று கூறினேன். அதற்கு நபியவர்கள், ( فَأَعْطِهَا فَإِنَّهَا مُحِقَّةٌ ) "அப்பெண்ணுக்கு (அவருடையக் கடனைக்) கொடுத்து விடு! அவள் உண்மையே கூறுகிறாள்" என்றார்கள். நூல்:- இப்னுமாஜா-2424, முஸ்னது அஹ்மத்-16593, பைஹகீ


ஒருவர் கடனாளியாக இறந்துவிட்டார். அவர்மீது இரக்கம் கொண்ட மற்றொருவர் அந்த கடனை அடைக்கும்போது, அதன்மூலம் இறந்தவருக்கு நிம்மதி கிடைக்கிறது என்கிறது இந்த நபிமொழி. உயிர் வாழ்பவர்கள் செய்யும் நற்காரியங்களால், இறந்தவர்கள் நிம்மதி பெறுகிறார்கள்.


பூமிக்கு மேல் இருப்பவர்களுக்கும்...


ஒருவர் நற்காரியங்கள் செய்து அதன் நன்மைகளை இறந்தவர்களுக்கு மட்டுமல்ல, இருப்பவர்களுக்கும் (அதாவது தற்போது வாழ்பவர்களுக்கும்) அன்பளிப்பு செய்யலாம். உதாரணமாக: எளியோருக்கு உணவளித்து விட்டு, "இறைவா! இதன் நன்மைகளை உலகத்தில் வாழும் என் பெற்றோருக்கும், உடன்பிறப்புகளுக்கும், மனைவி மக்களுக்கும் வழங்குவாயாக!" என்றும் பிரார்த்திக்கலாம். அதன் நன்மைகள் இவர்களுக்கும் கிடைக்கும். தர்மம் செய்தவருக்கும் கிடைக்கும்.


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு பெண்மணி தன் குழந்தையை உயர்த்திக் காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! இவனுக்கு ஹஜ் உண்டா? என்று கேட்டார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( نَعَمْ وَلَكِ أَجْرٌ ) "ஆம்; (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு" என்று விடையளித்தார்கள். நூல்:- முஸ்லிம்-2597


ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. கஸ்அம் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அருமை நாயகம்- ஸல் அவர்களிடம்), "என் தந்தை முதியவராக உள்ளார். இந்நிலையில், அவருக்கு அல்லாஹ் விதியாக்கிய ஹஜ் கடமை ஏற்பட்டுள்ளது. அவரால் தமது ஒட்டகத்தின் முதுகில் அமர இயலாது" என்றார். அதற்கு அண்ணலார், ( فَحُجِّي عَنْهُ ) "அவர் சார்பாக நீ ஹஜ் செய்யலாம்" என்றார்கள். நூல்:- புகாரீ-1853, முஸ்லிம்-2595


இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். (நோன்பு நோற்க இயலாத) முதிய வயோதிகர்களுக்கு ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு சஹர் மற்றும் இஃப்தார் உணவு உண்ணக் கொடுக்க வேண்டும். அவர்கள் அந்த நோன்புகளை நோற்க வேண்டியது இல்லை என்று (அண்ணல் நபி - ஸல் அவர்களால்) சலுகை அளிக்கப்பட்டது.   நூல்:- தாரகுத்னீ, ஹாக்கிம், புலூகுல் மராம்-695


ஒருவருக்கு ஹஜ்ஜுக்கு செல்ல முடியாத அளவுக்கு உடல் ரீதியான இயலாமை இருக்குமேயானால் அவருக்காக மற்றவர் செய்யும் ஹஜ் "பத்லி ஹஜ்" எனப்படும். நான் இன்னாருக்காக "பத்லி ஹஜ்" செய்கிறேன் என்று மனதில் நினைத்து செய்துகொண்டால் போதும். (ஹஜ் இயலாதவருக்கு ஹஜ் செய்த நற்கூலி வழங்க அல்லாஹ் போதுமானவன்.) ஆனால், பத்லி ஹஜ் செய்யக்கூடியவர் அதற்கு முன் தன்மீது கடமையாக உள்ள ஃபர்ளான ஹஜ்ஜை நிறைவேற்றியவராக இருப்பது சிறந்தது என்கிறார்கள் மார்க்க அறிஞர்கள்.


பருவ வயதை அடையாத சிறுவ சிறுமியர்கள் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற நற்காரியங்கள் எதைச் செய்தாலும், அது செல்லும். அதற்கான நன்மைகள் அந்த சிறு பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் கிடைக்கும் என்கின்றனர் மார்க்க அறிஞர்கள்.


கடும் வியாதிக்காரர். அவர் இனி நோன்பு நோற்றால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் இருப்பவர், இனி எப்போதும் நோன்பு நோற்க சக்தி பெறாத வயோதிகர் ஆகியோர் நோன்பு நோற்க தேவையில்லை. ஆனால், ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஃபித்யா எனும் நஷ்டஈடு கொடுப்பது அவசியம்.


இந்நிலையில் உள்ள பெற்றோருக்கு அவர்களுடைய பிள்ளைகள் நோன்பிற்குரிய நஷ்டஈட்டை அவர்கள் சார்பாக வழங்கிவிட்டால், அந்த பெற்றோருக்கு நோன்பு நோற்ற நன்மைகளை அல்லாஹ் தர போதுமானவன்.


வீண் வாதம்


மனிதனுக்கு அவன் செய்த செயலைத் தவிர வேறொன்றும் இல்லை. திருக்குர்ஆன்:- 53:39


மேற்காணும் திருவசனத்தைக் காட்டி இறந்தோருக்காக மற்றவர்கள் செய்யும் நற்காரியங்களின் பலன் அவரைச் சென்றடையாது என சிலர் வாதிடுகின்றனர்.


பேரறிஞர் இமாம் இப்னு கய்யிம் (ரஹ்) அவர்கள் மேற்காணும் திருவசனத்திற்கு  விளக்கமளிக்கிறார்கள். ஒருவருடைய முயற்சியால் உருவாக்கப்பட்ட அனைத்தும் அவருக்கு சொந்தமானவையாகும். அதன் உரிமையை மற்றவர் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்ற உண்மையை இத்திருவசனம் மூடி மறைக்கவில்லை. இதை யாராலும் மறுக்கவும் முடியாது. ஆனால் தனக்குச் சொந்தமான எப்பொருளையும் மனிதன் பிறருக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது அதன் பயனை அடைந்துக்கொள்ள அனுமதிக்கலாம். அல்லது அனுமதிக்காமலும் இருக்கலாம். இது பொருளுடையவனின் உரிமையாகும். இவ்வுரிமையில் இத்திருவசனம் தலையிட்டு மறுத்துக் கூறவில்லை. ஆகையால் பிறருக்கு நன்மைகளை அன்பளிப்பாக வழங்குவதும் கூடாது என்பதற்கு  இத்திருவசனத்தை எவ்வாறு ஆதாரம் காட்ட முடியும்?  நூல்:- அர்ரூஹ்


மேலும் இமாம் அவர்கள் விளக்குகிறார்கள். தன்னுடைய தந்தை பெரிய மார்க்க அறிஞராக இருக்கின்றார். தம் சகோதரர் சமுதாயத் தலைவராக இருக்கின்றார். (ஷைக் எனும்) குரு கரம் பிடித்து இரட்சிப்பார். இவர்களெல்லாம் மறுமை நாளில் நம்மை காப்பாற்றுவார்கள் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு எவ்வித நற்செயல்களையும் செய்யாமல் நம்மிலே சிலர் தங்களது பொன்னான வாய்ப்புகளை தவற விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் போன்றோரின் வீணான செயல்களை இத்திருவசனம் இடித்துரைத்து கூறுகிறது. (இத்திருவசனம் ஈஸால் ஸவாப்க்கு எதிரானது அல்ல.) நூல்:- தவ்ளீஹ் அல்அஹ்காம்


பேரறிஞர் இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் மேற்காணும் திருவசனத்திற்கு  விளக்கமளிக்கிறார்கள். ஒருவருக்காக மற்றவர் நற்காரியம் செய்கிறார் என்றால், அவர் உயிரோடு இருக்கும்போது செய்த முயற்சித்தான் அதற்குத் தூண்டுகோலாக இருக்கும். எனவே, இந்த வசனத்திற்குள் இதுவும் அடங்கியதுதான் என்றும் விளக்கம் அளிக்கலாம். அல்லது மற்றவர் இவருக்கு வழங்கும் சன்மானமாக இதை எடுத்துக்கொள்ளலாம். நூல்:- அல்மின்ஹாஜ், தக்மிலா


பேரறிஞர் இமாம் தஹாவீ (ரஹ்) அவர்கள், தலைப்பில் காணும் திருவசனத்தையும் முஸ்லிம் நூலில் (3358) வரும் நபிமொழியையும் சுட்டிக்காட்டி, “உயிருள்ளவர்கள் கேட்கின்ற பிரார்த்தனைகளிலும் வழங்குகின்ற தர்மங்களிலும் இறந்தவர்களுக்கும் பயன் உண்டு” கூறுகிறார்கள். நூல்:- அல்அகீதத்துத் தஹாவிய்யா


விரும்பத்தக்க காரியமே!


இறந்தவருக்கு  (ஈஸால் ஸவாப் செய்தல் எனும்) பாத்திஹா ஓதுவது  (ஃபர்ளு எனும்) நிர்பந்தமான காரியமன்று. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட (முஸ்தஹப் எனும்) விரும்பத்தக்க காரியமாகும். ஆனால்இக்காரியங்கள் முகஸ்துதிக்காகவும், பெருமைக்காகவும் செய்யலாகாது. இதில் தேவையில்லாத ஆடம்பரம் கூடாது. கடன்பட்டோ அல்லது வட்டிக்கு வாங்கியோ செய்தே தீரவேண்டும் என்று எண்ணலாகாது. வருவாய்க்குத் தக்க செலவிற்குள் செய்து முடிப்பதே சாலச்சிறந்தது.


ஒரு நற்காரியம் செய்து அதன் நன்மையை இறந்தவருக்கு அர்ப்பணிப்பதற்கு மார்க்கம் ஒரு குறிப்பிட்ட வழிமுறை குறிப்பிடவில்லை. ஒரு நற்காரியத்தை செய்த பிறகு, “இறைவா! இதன் நன்மையை இன்னாருக்கு கொடுத்து விடு!” மனதளவில் அல்லது நாவில் சொல்லி கொண்டாலே போதுமானது.


இறந்தவர்களுக்கு ஒரு நன்மையை அர்ப்பணிப்பதற்கு அதில் வேறொரு நற்செயலை சேர்க்க வேண்டியது அவசியமில்லை. உதாரணமாக: உணவு தானத்தின் நன்மை, ஃபாத்திஹா ஓதினால்தான் போய் சேரும் என்று எண்ணுவது அறியாமை.


இறந்தவர்களுக்காக எப்போது வேண்டுமானாலும் உணவு தானம் வழங்கலாம். ஃபாத்திஹா ஓதிதான் உணவு தானம் வழங்க வேண்டும் என்பது நிபந்தனையல்ல. ஃபாத்திஹா ஓதுதல் என்பது ஒரு நற்காரியம். உணவு தானம் என்பது வேறொரு நற்காரியம். இவை இரண்டையும் ஒன்றிணைத்துதான் செய்ய வேண்டும் என்பதல்ல. தனித்தனியாகவும் செய்யலாம்.


இறந்தவர்களுக்கு நன்மைகளை அர்ப்பணம் (ஈஸால் ஸவாப்) செய்வதற்கு நேரம் காலம் நிபந்தனையல்ல. மூன்றாம் நாள் அல்லது ஏழாம் நாள் அல்லது நாற்பதாவது நாள் ஆகிய நாட்களில் தான் ஃபாத்திஹா ஓதவேண்டும். மற்ற நாட்களில் ஓதுவது அவ்வளவு சிறப்பல்ல என்று எண்ணுவதும் அறியாமையே! எப்போது வேண்டுமானாலும் ஓதலாம். அதன் நன்மை  இறந்தவர்களுக்கு நிச்சயமாக போய்சேரும்.


நாம் நமது செல்வத்தை ஒருவருக்கு கொடுத்து விட்டால், அவர் செல்வந்தராக ஆகிவிடுகிறார். இதுபோன்றுதான் ஈஸால் ஸவாப் எனும் இறந்தோருக்கு செய்யும் நற்காரியங்கள். ஆனால், ஒரு வித்தியாசம் என்னவெனில், செல்வத்தை மற்றவருக்கு தந்தவர் ஒன்றும் இல்லாதவராக ஆகிவிடுகிறார். இதை பலருக்கு பங்கு வைத்தால் தலைக்கு கொஞ்சம் என்று கிடைக்கும். ஆனால் ஈஸால் ஸவாப் அப்படியல்ல. எத்தனைப் பேருக்கு தந்தாலும் முன்னவர்க்கு கிடைத்த அளவே கிடைக்கும். இதில் ஈஸால் ஸவாப் செய்தவருக்கும் முழுமையாய் கிடைக்கும்.


எப்படியெனில், ஒருவர் சிலருக்கு குர்ஆனை கற்றுத் தந்தார் எனில், அவர் யார் யாருக்கு குர்ஆனை கற்பித்தாரோ, அவர்கள் அனைவரும் குர்ஆன் கற்றவர்களாகிவிட்டார்கள். இதனால் கற்பித்தவர் குர்ஆனை இழந்தா போய்விட்டார்? இல்லையே. மாறாக அவரும், அதனை கற்கவேண்டியவரும் கற்றுத் தெளிந்தவராகிவிடுகின்றனர்.


பொருள் சம்பந்தப்பட்ட வணக்கமாக இருந்தால் உதாரணமாக, ஏழைகளுக்கு பணம் மற்றும் உணவு கொடுத்து உதவுதல் போன்றவற்றை கொடுத்த பிறகே அதற்கான நன்மை கிடைக்கும். அதை கொடுப்பதற்கு முன்பே நன்மையை சாட்டுவது பொருத்தமானதல்ல. உடல் சம்பந்தப்பட்ட வணக்கமாக இருந்தால் உதாரணமாக, தொழுகை, நோன்பு, குர்ஆன் மற்றும் திக்ரு ஸலவாத் ஓதுதல், போன்றவற்றை செய்வதற்கு முன்பு நிய்யத்து செய்ய வேண்டும். பின்பு தான் நன்மையைச் சாட்ட வேண்டும். நூல்:- பிஹிஷ்தி ஜேவர்


(நபில் எனும்) உபரியாக தொழுகுதல், நோன்பு நோற்றல், தர்மம் செய்தல், ஹஜ்-உம்ரா செய்தல், குர்பானி கொடுத்தல்ஏழை எளியோருக்கு உணவளித்தல், குர்ஆன் ஓதுதல், பிழைப்பொறுக்கப் பிரார்த்தித்தல், (திக்ரு தஸ்பீஹ் எனும்) இறைதியானம் செய்தல், கடன் அடைத்தல் ஆகிய நற்காரியங்களை செய்தவருக்கும் யாருக்காக செய்யப்பட்டதோ அவர்களுக்கும் அதன் நற்கூலி கொஞ்சமும் குறைக்கப்படாமல் விசாலமாக அல்லாஹுத்தஆலா வாரி வழங்கப் போதுமானவன். 


எனவே, நாம் ஈஸால் ஸவாப் எனும் நற்காரியங்களை நிரப்பமாகச் செய்து, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 


சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...