விவரமான ஆளு
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا خُذُوا حِذْرَكُمْ فَانْفِرُوا
ثُبَاتٍ أَوِ انْفِرُوا جَمِيعًا
இறைநம்பிக்கையாளர்களே! (எதிரிகளிடம் எப்பொழுதும்) எச்சரிக்கையாகவே இருங்கள். உங்களின் தற்காப்பு சாதனங்களை உங்களுடன் எடுத்துச் கொள்ளுங்கள். சிறுசிறு கூட்டங்களாகவோ அல்லது அனைவரும் ஒன்று சேர்ந்தோ போருக்கு புறப்படுங்கள். திருக்குர்ஆன்:- 4:71
விழிப்புணர்வுடன் செயல்படுபவனே முழுமையான இஸ்லாமியன் என்று இஸ்லாம் இயம்புகிறது. எதிர்கால இந்தியாவில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே நிம்மதியாக வாழலாம்.
எந்தவொரு விவகாரத்திலும் விவேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படுவது அவசியமாகும். அறிவார்ந்த முறையில் திட்டமிட்டுச் செயல்படவோ, பாடுபடவோ செய்யாமல் வேதனைகளும், தோல்விகளும் தலைமீது இடியாய் வந்து இறங்குகிறபோது தமக்குத்தாமே ஆறுதல் சொல்லிக் கொள்வதும் சரியல்ல.
எவர் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் செயல்படுகிறாரோ அவர், முன்னெச்சரிக்கை, பாதுகாப்புணர்வு, எதையும் சமாளிக்கும் திறன் ஆகியவற்றுக்கு உரியவராவார்.
கனவின் விளக்கம்
ஒருநாள் எகிப்து மன்னர் கொளுத்துப் பருத்த ஏழு பசுக்களை இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் கனவில் காண்கின்றார். மன்னர் இதுபற்றிய விளக்கத்தை அங்கிருந்த அறிஞர்களிடம் வினவினார். ஆனால் அவருக்கு போதிய விளக்கம் கிடைக்கவில்லை. இறுதியாக சிறையில் கனவுகளுக்கு விளக்கமளிக்கக்கூடிய ஒருவர் இருக்கிறார் என்ற செய்தியை மன்னர் அறிகிறார். தனது கனவு பற்றி விளக்கம் கேட்டு அறிந்து வர சிறைச்சாலைக்கு ஆளனுப்பினார் மன்னர்.
சிறைச்சாலையில் கனவுக்கு விளக்கமளிக்கக்கூடியவராக இருந்த நபி யூசுஃப் (அலை) அவர்கள் மன்னரின் கனவுக்கு இவ்வாறு விளக்கமளித்தார்கள். அதாவது தொடர்ந்து வழக்கம்போல் நல்லவிதமாக ஏழு ஆண்டுகள் விளைச்சல் இருக்கும். அதில் கிடைக்கும் தானியங்களை அதன் கதிர்களுடன் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கடுத்த ஏழு ஆண்டுகள் எவ்வித விளைச்சலுமின்றி கடுமையான பஞ்சம் வந்து விடும். அப்போது சேகரித்து வைத்திருந்த தானியங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். என வரும்முன் காப்போம் திட்டத்தைக் கூறினார்கள்.
நபி யூசுஃப் (அலை) அவர்களின் ஞானத்தை அறிந்த மன்னர் அவரை அழைத்து உமது தொலைநோக்கு சிந்தனையை நான் கண்டுகொண்டதால் நீர் எனது மதிப்புக்கும், நம்பிக்கைக்கும் உரியவராக ஆகிவிட்டீர். அதனால் எனக்கு நெருங்கியவராக உம்மை ஆக்கிக்கொள்கிறேன் என்றார்.
அதற்கு நபி யூசுஃப் (அலை) அவர்கள் நாட்டின் வேளாண்மைத்துறை அமைச்சராக என்னை நியமித்து விடுங்கள். நிச்சயமாக நான் அவற்றை பாதுகாத்து பஞ்ச காலத்தில் எவ்வாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் நன்கறிவேன் என்று கூறினார்கள். இந்த வரலாற்றைப் பற்றி திருக்குர்ஆனின் யூசுஃப் அத்தியாயம் (12: 43-55) விவரிக்கிறது.
எச்சரிக்கை
இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிக்கட்டைகள் மனிதர்களும், கற்களுமாகும். திருக்குர்ஆன்:-66:6
(நபியே! நீர் கூறும்) நான் (மறுமை நாளின் பயங்கரங்களைப்பற்றி) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் தான். திருக்குர்ஆன்:-67:26
நாம் குடும்பத்துடன் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். வழியில் போக்குவரத்து அதிகாரி ஒருவர் நம்மை நிறுத்தி "இங்கிருந்து 5 கி.மீ தொலைவில் ஒரு பெரும் பள்ளம் இருக்கிறது காரை வேகமாக ஓட்டாதீர்கள்" என்று எச்சரிக்கிறார்.
நாம் என்ன செய்வோம்? அந்த எச்சரிக்கையை மனதில் இருத்தி காரை கவனமாக ஓட்டுவோமா? அல்லது அவர் என்ன எச்சரிப்பது! நாம் என்ன கேட்பது! என சகட்டுமேனிக்கு காரை ஓட்டி பள்ளத்தில் விழுவோமா? இல்லை நாம் நிச்சயம் கவனமாக தான் ஓட்டுவோம். வர இருக்கும் பெரும் ஆபத்திலிருந்து நம்மையும், நமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வோம் இல்லையா?
இறைவேதமான திருக்குர்ஆனும், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் ஒருவகையில் வர இருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டிய அந்த நல்ல அதிகாரியைப் போன்றவர்கள் தான்.
ஆனால், நம்மில் எத்தனை பேர் திருக்குர்ஆன் மற்றும் இறைத்தூதரின் எச்சரிக்கையை மதித்து தீமைகளை விட்டும் விலகி நல்லறம் பேணி விழிப்புணர்வுடன் வாழ்கிறோம்?
மண்ணறையாவது, மறுமையாவது, நரகமாவது, சொர்க்கமாவது, என்று எல்லாவற்றையும் அலட்சியப்படுத்திவிட்டு மனம் போன போக்கில் மமதையோடு வாழ்பவர்களின் மறுமை நிலையை திருக்குர்ஆன் இப்படி விவரிக்கிறது.
அன்றி "(அத்தூதர்களின் வார்த்தைகளுக்கு) நாங்கள் செவிசாய்த்து அவைகளை நாங்கள் சிந்தித்திருந்தால் நாங்கள் நரகவாசிகளாகி இருக்கவே மாட்டோம்" என்று கூறி தங்கள் பாவத்தை ஒப்புக்கொள்வார்கள். ஆகவே இந்நரகவாசிகளுக்குக் கேடுதான். திருக்குர்ஆன்:- 67:10,11
பிற உயிரினங்களின் அறிவு
(நபி சுலைமான்-அலை அவர்களும், அவர்களது இராணுவமும்) எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்துபோது அதிலொரு எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் வீட்டுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். சுலைமானும்,அவரது இராணுவமும் நீங்கள் இருப்பதை அறியாமல் உங்களை த் தங்கள் கால்களால் மிதித்துவிட வேண்டாம்" என்று கூறியது. திருக்குர்ஆன்:-27:18
மனிதப் பார்வைக்கு மிக அற்பமாக தெரிகின்ற எறும்புகூட தன் இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட்டதை திருக்குர்ஆன் எடுத்துரைப்பதின் நோக்கம் மனித இனமாகிய நாமும் அவ்விதமாக ஒவ்வொரு செயல்பாட்டிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதாகும்.
எதுவும் திடுதிப்பென்று நடந்து விடுவதில்லை. மெல்ல சில அறிகுறிகளைத் தோற்றுவித்துவிட்டுத்தான் நிகழ்கிறது. விதை செடியாகி கிளை விரித்து மரமாகிப் பூத்து காயாகிப் பின்னரே கனியாகிறது. திடுப்பென்று காய் கனியாகி விடுவதில்லை. அதுபோல தான் நமக்கு ஏற்படும் எதுவும் படிப்படியாகவே நிகழ்கிறது. நம்முடைய அறிவாற்றல், கூரிய சிந்தனை, உள்ளத்தின் உதிப்பு, இல்ஹாம் எனும் தீர்க்கதரிசனம் ஆகியவற்றின் மூலம் பெரும்பாலான விஷயங்களை நம்மால் முன் கூட்டியே தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
எறும்புகள் சாரை சாரையாக எதையாவது எடுத்துக் கொண்டு சென்றால் மழை வரப்போகிறது என்று அர்த்தம். அவை தனித்தனியாக பிரிந்து இருந்தால் மழை வராது என்று புரிந்து கொள்ளலாம். சில எறும்புகள் மழை வருவதற்கு முன் வேகமாக சென்று மற்ற எறும்புகளை உஷார் படுத்தும்.
மழை மற்றும் புயல் வருவதற்கு முன் கிளிகள் மரத்தில் கூடுகட்டும். அதற்கு தேவையான குச்சிகளை பொறுக்கி செல்வதைப் பார்த்தே மழை வரப் போவதை அறியலாம்.
புயல் வருவதற்கு முன் காற்றழுத்தம் குறையும். இதை புரிந்து கொள்ளும் பசுக்கள் தரையில் படுத்துக் கொள்ளும். சில சமயம் பசுவும், ஆடும் ஒன்றாக ஓரே இடத்தில் பக்கத்தில் நின்று கொள்ளும். புயல் வரப்போகிறது.... நம்மை யாராவது வேறு இடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு போக மாட்டார்களா? என்று செய்கை மூலம் தெரியப்படுத்தும்.
மழை, புயல் வரப்போவதற்கு முன் பாம்புகள் அதனுடைய வளையிலிருந்து வெளியே வந்து விடும்.
ஆசியாவில் சுனாமி வருவதற்கு முன் கடற்பறவைகள் பறந்து சென்று உயரமான இடங்களில் தஞ்சம் புகுந்தன. அந்த நேரம் மிருகங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று அடைக்கலம் புகுந்தன. சங்கிலியால் கட்டப்பட்டிருந்த யானைகள் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடின. விலங்குகளின் இந்த வித்தியாசமான நடவடிக்கைக்கு பிறகு தான் பயங்கரமான சுனாமி வந்தது.
பறவை, மிருகம் போன்ற பிற உயிரினங்களிடம் இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, விழிப்புணர்வை மனித சமூகம் படிக்க வேண்டிய ஒன்றாகும்.
மழை வருவது, புவியியல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுவது நம்மை சுற்றி இருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் தெரியும். வானிலை ஆராய்ச்சி கணிப்புகள் இல்லாத காலத்தில் சுற்றி இருக்கும் இயற்கை மாறுதலை வைத்துத்தான் மழை, புயல் வருவதை நம் முன்னோர்கள் யூகித்தனர். ஆனால் இன்றைய நவீன யுகத்தில் நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையை ரசிக்கவோ, கவனிக்கவோ பலரும் விரும்புவதில்லை.
விழிப்புணர்வு என்றால் கண்கள் விழித்திருப்பதல்ல. மூளை விழித்திருப்பது. அதாவது எந்த பிரச்சனையையும் எதிர்கொண்டு வரவேற்று அதற்கு தீர்வு காணும் வகையில் மூளையை தயாராக வைத்திருப்பதாகும்.
எந்த ஒரு ஆபத்து வரும் முன்னரே அதற்கான சிறுசிறு சலசலப்புகள் அறிகுறிகளாக தோன்றிவிடும். அல்லது ஆபத்து நம்மைச் சூழ்வதற்கான சூழ்நிலை நிலவிவரும். அப்போதே விழித்துக்கொண்டால் எதுவும் நமக்கு எளிதாகிவிடும். அதற்கு பின்னரும் மிதப்பு நிலையில் இருந்துவிட்டால் நல்வாழ்வு வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைந்து துன்பச் சுமைகள் தலைமீது அமர்ந்து அழுத்த ஆரம்பித்து விடும். இதற்கு நாம் ஒருபோதும் இடங்கொடுக்கக் கூடாது.
பிள்ளைகள் எதிர்காலம்
சஅது பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் விடைபெறும் இறுதி ஹஜ்ஜின் போது, நோயுற்றிருந்த என்னை, அண்ணலார் நலம் விசாரிக்க வந்தார்கள். அந்த நோயால் நான் இறப்பின் விளிம்புக்கே சென்றிருந்தேன். அப்போது நான் நாயகமே! நான் ஒரு செல்வந்தர். என் ஒரேயொரு மகளைத் தவிர வேறெவரும் எனது சொத்துக்கு வாரிசாக வர மாட்டார்கள். ஆகவே நான் எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்யட்டுமா? என்று வினவினேன். அண்ணலார் அந்த அளவு வேண்டாம் என்றார்கள்.
அப்படியென்றால் அதில் பாதியை தர்மம் செய்யட்டுமா? என்று வினவினேன். அண்ணலார் அந்த அளவு வேண்டாம் என்றார்கள். மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய்யட்டுமா? என்று வினவினேன். அண்ணலார் மூன்றில் ஒரு பங்குகூட அதிகம் தான். ( إِنَّكَ إِنْ تَرَكْتَ وَلَدَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَتْرُكَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ ) "நீங்கள் உங்கள் பிள்ளைகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிடத் தன்னிறைவு உடையவர்களாக விட்டுச் செல்வதே சாலச்சிறந்ததாகும்." என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-6733, முஸ்லிம்- 3352
தர்மம் செய்வதை சிறந்த வழிபாடாக கருதுகின்ற இஸ்லாம், அதற்கும் ஒரு வரையறையை நிர்ணயித்துள்ளது. தானும் தனது குடும்பத்தினரும் உண்ண உணவோ, உடுத்த உடையோ இல்லாமல் தவிக்கும்போது கிடைப்பதை அப்படியே அடுத்தவருக்கு வழங்குவது தர்மம் ஆகாது.
தம் வாரிசுகளை ஏழைகளாக விட்டுச் செல்லும் அளவுக்கு தர்மம் வழங்குவது முறையல்ல. அந்த தர்மம் வழங்குதலையும் நம் குடும்பத்திலிருந்தே துவங்குவது தான் சரியான செயலாகும். "ஆட்டை அறுத்து ஊருக்கு விருந்து வைத்துவிட்டு பிள்ளை கையில் கழிவு இறைச்சியை சுட்டுக் கொடுத்தான்" என்று கிராமப்புறங்களில் பெருமைக்கு தர்மம் வழங்கியோரைக் கூறுவர்.
எனவே தனது குடும்பத்தினர் தேவைக்குப் போக மீதம் இருப்பதை தர்மம் வழங்குவதே புத்திசாலித்தனமாகும். நமது பிள்ளைகள் எதிர்காலத்தில் பிறரிடம் தேவையாக அளவுக்கு, அவர்களுக்காக குறிப்பிட்ட செல்வத்தையோ, ஒரு தொழில்துறையோ விட்டு செல்வது அல்லது அவர்கள் சுயமாக சம்பாதிக்கும் அளவுக்கு சில கைத்தொழில்களை பழக்கிக் கொடுப்பது அல்லது சம்பாதிக்கும் அளவுக்குண்டான படிப்பை கொடுப்பது தந்தையின் கடமையாக இஸ்லாம் கருதுகிறது.
பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து அவர்கள் ஏதேனும் பெரும் சிரமத்தில் சிக்கி விழுந்து விடாமல் இருக்க, அதற்குண்டான ஒரு பாதையை காட்டித் தருபவரே சிறந்த தந்தை ஆவார்.
நல்லுறவு பேண...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா நகர் வந்த ஆரம்பித்திலேயே அங்குள்ள முஸ்லிம் அல்லாதவர்களுடன் தங்களது சமூகத் தொடர்புகளை முறைப்படுத்த துவங்கினார்கள். அதற்கு காரணம் முழு மனித சமுதாயமும் நிம்மதி, பாதுகாப்பு, நற்பயன்கள், நல்லுறவு ஆகியவை கிடைக்கப்பெற வேண்டும். ஒரே ஒரு நாட்டுக்குக் கீழ் நாட்டு மக்களை கொண்டு வரவேண்டும் என்பது தான்.
மதீனாவில் யூதர்கள் தான் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தனர். இவர்கள் முஸ்லிம்கள் மீது உள்ளத்தில் பகைமையை மறைத்து வைத்திருந்திருந்தாலும் வெளிப்படையாக முஸ்லிம்களை எதிர்க்கவுமில்லை. அவர்களிடத்தில் சண்டை சச்சரவு செய்யவுமில்லை. எனவே அண்ணலார் வரும்முன் காப்போம் என்ற சிந்தனையுடன் அந்த யூதர்களுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
1) யூதர்களுக்கு அவர்களது மார்க்கத்தில் முழு சுதந்திரம் உண்டு.
2) யாராவது மதீனாவின் மீது போர் தொடுத்தால் அவர்களுக்கு
எதிராக முஸ்லிம்களும் யூதர்களும் ஒரே அணியாக இருந்து போர் புரிய வேண்டும். தங்களக்குள்
உதவி செய்து கொள்ள வேண்டும்.
3) பிறருக்கு எதிரானப் போரில்
முஸ்லிம்களுடன் யூதர்கள் கலந்து கொள்ளும் போது யூதர்களும் போர் செலவுகளில் பங்கெடுக்க
வேண்டும்.
4) மதீனாவில் குழப்பம் விளைவிப்பதோ, விஷமத்தனம் செய்வதோ, இரத்தம் ஓட்டுவதோ முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதாகும்.
5) மக்கா இணைவைப்போர்களான குறைஷிகளுக்கும்,
குறைஷிகளுக்கு உதவி செய்பவர்களுக்கும்
பாதுகாப்பு கொடுக்கக் கூடாது.
6) முஸ்லிம்கள், யூதர்கள் மத்தியில் சண்டை சச்சரவு அல்லது ஏதும் பிரச்சனை நிகழ்ந்தால் அதற்குரிய முடிவை அல்லாஹ்வும், அவனது திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே கூறுவார்கள். நூல்:- அர்ரஹீகுல் மக்தூம்
ஒரு கட்டிடத்தை வாடகைக்கோ அல்லது லீசுக்கோ எடுக்கும் போது இவ்வளவு ரூபாய் முன்பணம் செலுத்தப்பட்டு இவ்வளவு ரூபாய் வாடகைக்கு இத்தனை ஆண்டுகளுக்கு இந்த கட்டிடத்தை அனுபவிக்கலாம் என்று ஒப்பந்த பத்திரம் போடுவதும், சில நிறுவனங்கள் வேலைக்கு ஆள் சேர்ப்பதற்கு முன், எங்கள் நிறுவனத்தில் இத்தனை ஆண்டுகள் அவசியமாக வேலை பார்த்தாக வேண்டும் என்று நிபந்தனையிட்டு ஒப்பந்த பத்திரம் போடுவதும் வரும்முன் காப்போம் என்ற சிந்தனை தான்.
வன்முறை நிகழ்வுகள்
புகழ் மிக்க மஸ்ஜிதுல் அக்சா அமைந்துள்ள ஜெருசலம் நகரம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. ஜனாதிபதி அவர்கள் அந்நகரத்திற்கு ஒருமுறை விஜயம் செய்து அங்குள்ள பலவற்றையும் பார்வையிட்டார்கள். அப்போது சில முக்கிய கிருஸ்தவ பாதிரிமார்கள் ஜனாதிபதி அவர்களுக்கு வரவேற்பு அளித்து அவர்களது புகழ்மிக்க "சர்ச் ஆப் ரிசரக்ஷன்" என்ற கிருஸ்தவ தேவாலயத்தைச் சுற்றிக் காட்டினர். அப்போது அசர் எனும் மாலை நேர தொழுகைக்கான நேரம் வந்து விட்டது.
தொழுகைக்கு தயாரான ஜனாதிபதி அவர்களை "தாங்கள் விரும்பினால் இந்த தேவாலயத்துக்குள்ளேயே தொழலாமே?" என அந்த பாதிரிமார்கள் அன்போடு வேண்டினர்.
அப்போது ஜனாதிபதி அவர்கள் இந்த பகுதி இஸ்லாமியர்களின் ஆட்சிக்கு உட்பட்டது. பிற்காலத்தில் இஸ்லாமியர்கள் யாராவது ( لَوْ صَلِّيَتُ دَاخِلَ الْكَنِيسَةِ أَخَذَهَا الْمُسْلِمُونَ بَعْدِي وَقَالُوا هُنَا صَلَّى عُمَرُ ) "நான் தேவாலயத்திற்குள் தொழுதால் எனக்கு பின்னால் வரும் முஸ்லிம் சமுதாயம் இந்த இடம் (எங்கள் ஜனாதிபதி) உமர் தொழுத இடம் என்று கூறி (இந்த இடம் எங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி) கைப்பற்றக்கூடும். எனவே, இது குறித்து பிற்காலத்தில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக இதனுள் நான் தொழ விரும்பவில்லை" என்று அன்போடு கூறினார்கள். (இஸ்லாமியர்கள் இறைவனை எங்குவேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம் என்பதால்) ஜனாதிபதி அவர்கள் அந்த தேவாலயத்திற்கு வெளியே தமது தொழுகை நிறைவேற்றினார்கள். நூல்:- தாரீக் இப்னு ஹல்தூன்-2/225
வன்முறை நிகழ்வுகள் தங்களால் எப்போதும் உருவாகிவிடக் கூடாது என்பதில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார்கள்.
பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் ராமர் பிறந்தாரா? என்பது ஆய்வு ரீதியாக உறுதிசெய்யப்படாத நிலை ஒருபுறம் இருக்கட்டும். ராமர் பிறந்த பூமி ராமரின் பக்தர்களுக்கே சொந்தம் என்று கூறி பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டியே தீர்வோம் என்று ஒரு கூட்டம் கொக்கரிக்கிறது. நான் இந்த மருத்துவமனையில் தான் பிறந்தேன். அதனால் இந்த மருத்துவமனை எனக்கே சொந்தம் என்று ஒருவன் உரிமை கொண்டாடினால் எவ்வளவு நகைப்புக்குரியதாக இருக்குமோ அவ்வாறு இவர்களின் செயல்பாடு இருக்கிறது.
இந்த குதர்க்கமான சிந்தனை எந்த ஒரு இஸ்லாமியருக்கும் வந்துவிடக்கூடாது என்பதே ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் எண்ணமாகும்.
ஊனக் கண்ணுக்கு எதிரில் நடப்பது எப்படிப் புலப்படாதோ அதே போன்று அறிவில் ஊனம் உடையவர்களுக்கும் நடக்கப்போவதைப் பற்றி முன்கூட்டியே ஒன்றும் தெரிய வாய்ப்பில்லை.
நம்முடைய கவனக்குறைவு, மெத்தனப்போக்கு, அலட்சியம் ஆகியவையே நமக்கும், நம்மைச் சுற்றிலும் நடக்கும் விரும்பத்தகாத சம்பவங்களுக்கும் காரணம். இவை குறைந்தால் எதிர்பாராத வகையில் நேரும் இடையூறுகள் நிச்சயம் இருக்காது.
முறையான பாதுகாப்பு
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ( أَطْفِئُوا الْمَصَابِيحَ إِذَا رَقَدْتُمْ، وَغَلِّقُوا الأَبْوَابَ، وَأَوْكُوا الأَسْقِيَةَ، وَخَمِّرُوا الطَّعَامَ وَالشَّرَابَ ) "நீங்கள் உறங்கப் போகும் போது விளக்குகளை அணைத்து விடுங்கள். கதவுகளைத் தாழிலிட்டு விடுங்கள். தண்ணீர் பைகளை சுருக்கிவிட்டு மூடி விடுங்கள். உணவையும் பானத்தையும் மூடி வையுங்கள். நூல்:- புகாரீ- 5624, முஸ்லிம்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சிமிழ் விளக்கு, குத்து விளக்கு போன்ற அமைப்புள்ள விளக்குகள் தான் இருந்திருக்கும். இதுபோன்ற விளக்குகளை அணைக்காமல் விட்டு தூங்கும் போது அந்த விளக்குகளின் திரியை வீட்டில் உலாவும் எலிகள் இழுத்து சென்று எளிதில் தீ பிடிக்கும் இடங்களில் போடக்கூடும். அல்லது தூக்கக் கலகத்தில் நம் கை கால்களால் நாமே விளக்கை தட்டிவிட்டு அது நம் ஆடையில் படக்கூடும். இதனால் பொருள் இழப்பும்,உயிர் இழப்பும் என பேரிழப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்கிறது இந்த நபிமொழி.
துன்பம் ஏதாவது உங்களுக்கு ஏற்படுமானால் அது உங்கள் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாகவே தான். திருக்குர்ஆன்:- 42:30
மனிதனுக்கு பயன்படும் பொருள்களில் ஒன்றாக நெருப்பு இருந்தாலும் அதன் மூலம் ஆபத்துகள் அதிகம் என்பதில் மிக எச்சரிக்கை தேவை. கேஸ் சிலிண்டர்களை சரியாக மூடாமல் விட்டுவிடுவது, தலையணை அருகில் கொசுபத்தி வைப்பது, பழுதடைந்த மின் வயர்களை இணைப்புகளில் பயன்படுத்துவது, இவைபோன்ற கவனக்குறைவான செயல்களால் தீ விபத்து அதிகம் நேர்கின்றன.
வீடுகளையும், கடைகளையும் முறையாக தாழிட்டுவிட்டு, பிறகு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பது தான் இறைநம்பிக்கையாகும். மாறாக அரைகுறையாக தாழிடுவது. அல்லது வெறுமனே கதவை மட்டும் அடைப்பது. இதில் அலட்சியத்தோடு இருக்கும் போது தான் வீட்டுக்குள் திருடர்கள், விஷ ஜந்துக்கள் நுழைவதின் மூலம் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
காற்றில், மண்ணில் வைரஸ் எனும் நுண்கிருமிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தான் உணவுகளையும், பானங்களையும் எப்பொழுதும் மூடியே வைக்க வேண்டும் என்கிறது இந்த நபிமொழி.
உணவுப்பொருட்களில் கவனம்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا وَقَعَ الذُّباب فِي إِنَاءِ أَحَدِكُمْ، فَلْيَغْمِسْهُ كُلَّهُ، ثُمَّ لْيَطْرَحْهُ، فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ شِفَاءً وَفِي الآخَرِ دَاءً ) உங்கள் பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் அதை முழுவதுமாக அமிழ்த்து எடுங்கள். பிறகு அதை எடுத்தெறிந்து விடுங்கள். ஏனெனில் அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கிறது. நூல்:- புகாரீ-5782
ஈயின் ஒரு இறக்கையில் விஷமும் மற்றொன்றில் விஷ முறிவும் உண்டு. அது உணவுப்பொருட்களில் வந்து அமரும் போது விஷமுள்ள இறக்கையை அமிழ்த்துவதால் விஷமுறிவுள்ள இறக்கையையும் நாம் அமிழ்த்து விட்டால் நிவாரணம் கிடைத்து விடும். விஷமுள்ள இறக்கை ஈயின் இடப்பக்கத்திலும், விஷமுறிவுள்ள இறக்கை வலப்பக்கத்திலும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வித மூடியுமின்றி வெட்டவெளியில் விற்கப்படும் உணவு பானங்களை அது எவ்வளவு சுவையாக இருந்தாலும் அதனை வாங்கி உண்ணக்கூடாது. அந்த உணவுகளில் காற்றில் மிதக்கும் நுண்கிருமிகள் நோயை பரப்பும் கொசு, ஈ போன்றவைகளின் எச்சங்கள் போன்றவை கலந்திருக்கக்கூடும்.
நாம் வாங்கும் உணவுப்பொருட்கள், மருந்துகள், இன்னபிற பொருட்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டதா? முறையாக பாதுகாக்கப்பட்டதா? அது காலாவதியாக்கூடிய தேதி என்ன? இதிலே இருக்கும் உட்பொருட்கள் என்னென்ன? இது நமது உடலுக்கு ஒத்துக்கொள்ளுமா? என்றெல்லாம் மிக கவனத்துடன் பார்த்து தான் வாங்க வேண்டும்.
சிந்தனைக்கு சில...
கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தீ விபத்து
ஏற்பட்டு அதில் பயின்ற 94 சிறு பிள்ளைகள் கருகி
இறந்த பிறகு தான் பள்ளிக்கூடங்களின் தரத்தை அரசு ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். சென்னை
தாம்பரத்தில் 5 வயது பள்ளிக்கூட
சிறுமி பள்ளி வேனில் பயணிக்கும் போது அந்த வேனில் இருந்த ஓட்டையின் வழியாக கீழே விழுந்து
அந்த வேனின் சக்கரத்திலேயே நசுங்கி இறந்து போனாள். அதன் பிறகு தான் நாட்டில் ஓடும்
அனைத்து பேருந்து, வேன்கள் தரத்தை அரசு
ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
அரசாங்கத்தில் சம்பளம் வாங்கும் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது போன்ற கோர சம்பவங்கள் நடக்கும் வரை என்ன வேலை செய்தனர். வரும்முன் காப்போம் என்ற சிந்தனையற்ற அலட்சியப்போக்கு தான் பல இழப்புகளுக்கும், துன்பங்களுக்கும் காரணம் என்பதை விளங்க வேண்டும்.
இரு சக்கர வாகனத்தில் "ரிசர்வ்" என்று ஒன்று இருப்பதே நம்மை உஷார் படுத்துவதற்கு தான். இதனை அலட்சியப்படுத்தும்போது தான் ரிசர்வில் உள்ள பெட்ரோலையும் தீர்த்துவிட்டு பெட்ரோல் பங்க் வரை அதைத் தள்ளி கொண்டு போகும் சிரமத்திற்கு ஆளாகிறோம்.
நிறைய வரவு செலவுகள் நடைபெறும் இடத்தில் சம்பந்தப்பட்டவர்கள் விழிப்பாய் இல்லாவிட்டால் கையாடல் நடந்தே தீரும். அப்படி நடந்தால் முதல் குற்றவாளிகள் மெத்தனப்போக்காக இருந்தவர்களே தவிர கையாடிய பேர்வழிகள் அல்ல.
பெண்கள் விழிப்பாகப் பேசவும், நடந்து கொள்ளவும் செய்யாவிட்டால் தவறாக கணக்குப் போட்டு கையைப் பிடித்து இழுக்கும் ஆண்கள் இருக்கிறார்கள். முதல் குற்றவாளிகள் இவர்கள் அல்ல. அப்படி எண்ண இடமளித்த பெண்கள் தான் முதல் குற்றவாளிகள்.
ஒருவன் தன் பணத்தைப் பிப்பாக்கெட் மூலம் பறிக்கொடுத்தால் அதற்கு அவன் தான் காரணம். பணத்தை எடுத்து செல்ல பாதுகாப்பான வழிகளை நாடாததும், பிப்பாக்கெட் அடிக்கும் வரை கவனக்குறைவாக இருந்ததும் இவனது தவறேயாகும்.
நாம் முழுக் கவனத்தோடும், அக்கறையோடும் செயல்படுகிறோம் என்ற உணர்வு நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஏற்பட வேண்டும். அவர்களுடைய ஒவ்வொரு அசைவையும் நாம் கவனிக்கிறோம் என்ற நினைப்பும், பயமும் அவர்களுக்கு வர வேண்டும்.
பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டிய வயதில் கண்காணிக்கத் தவறிவிட்டுத் தோளை மிஞ்சி வளர்ந்த பிறகு "இனித் திருத்த முடியாது" என்று நொந்து கொள்வதில் பயனேதும் இல்லை. விழிப்பற்ற பெற்றோர்களே ஊதாரிப் பிள்ளைகளும், உருப்படாத பிறவிகளும் தயாராக மறைமுக காரணமாகி விடுகிறார்கள். நமது பிள்ளைகளின் நட்பு வட்டம், கைப்பேசி, கணினி போன்றவைகளை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.
நமது பிள்ளைகளுக்கு சிறுசிறு சோதனைகள் மூலம் அவ்வபோது இலேசான அதிர்ச்சி வைத்தியம் தர வேண்டும். அதே நேரத்தில் நாம் அவர்கள் மீது நம்பிக்கையற்றுத்தான் அப்படிச் செய்தோம் என்று எண்ண இடந்தரலாகாது.
அழகிய அறிவுரை
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கூறினார். அப்போது அண்ணலார், ( خُذِ الأَمرَ بِالتَّدبِيرِ فَإِن رَأَيتَ فِي عَاقِبَتِهِ خَيرًا فَأَمضِهِ وَإِن خِفتَ غيًّا فَأَمسِكْ ) "பின் விளைவுகளைப் பற்றி முன்கூட்டியே யோசித்து முடிவு எடுப்பீராக! ஒரு காரியத்தை செய்வதால் நன்மை விளையும் என்றால் அக்காரியத்தைச் செய்வீராக! சிக்கல் வரும் என்றால் அக்காரியத்தைச் செய்யாமல் விட்டு விடுவீராக!"என்று உபதேசித்தார்கள். நூல்:- மிஷ்காத் பக்-430, ஷரஹுஸ் ஸுன்னா
திருமணத்துக்கு தயாராக இருப்பவர்களுக்கு, புதுமணத் தம்பதிகளுக்கு தலாக் எனும் மணவிலக்கு பற்றிய சட்டங்களை கண்டிப்பாக விவரிக்கப்பட வேண்டும். காரணம் தலாக் என்பது சாதாரணமானதல்ல. அது மிகப்பெரிய பாரதூரமானது. சிறுசிறு பிரச்சனைகளுக்கெல்லாம் தலாக்கின் பக்கம் போனால் வாழ்க்கையில் மனநிம்மதி நிரந்தரமாக துலைந்துபோகும் என்று எச்சரிக்க வேண்டும். அவர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் தலாக் தான் அதற்கு சரியான தீர்வு என்று எண்ணினாலும் அதற்கு முன் பலமுறை அதன் விளைவுகளை யோசிக்க வேண்டும்.
வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் ஆபத்துகள், பாதிப்புகள் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையாகவும், கவனத்துடனும் செயல்பட வேண்டுமென நமது மார்க்கம் வழிக்காட்டுகிறது.
நமது கவனக்குறைவால் நமக்கு நாமே தீங்கிழைத்து கொண்டு இறைவனுக்கு இறக்கமில்லை என்று வசைபாடுவது ஒரு முஸ்லிமுக்குரிய நல்ல பண்பல்ல என்பதை உணர்ந்து முன்னெச்சரிக்கையுடன், வரும்முன் காப்போம் என்ற சிந்தனையுடன், நாம் விவரமான ஆளாக வாழ வேண்டும் அதற்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக! ஆமீன்!
மௌலவி மு. முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951